உடனடிச்செய்திகள்

Monday, May 23, 2011

சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பது மாணவர்களுக்குக் கேடு பயக்கும் :: பெ.மணியரசன் அறிக்கை!

சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பது மாணவர்களுக்குக் கேடு பயக்கும்

கட்டணக்கொள்ளைக்கு வழி வகுக்கும்

தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சி பொதுச்செயலாளர்

பெ.மணியரசன் அறிக்கை

23.05.2011, சென்னை-17.

 

முன்னாள் துணை வேந்தர் முத்துக்குமரன் குழு பரிந்துரைத்த சமச்சீர் கல்வித் திட்டத்தில் 20 விழுக்காட்டளவிற்கு உள்ளவற்றை மட்டுமே கருணாநிதி செயல் படுத்தினார். அதையும் நிறுத்தி வைக்க தமிழக முதல்வர் செயலலிதா முடிவு செய்த்தது பெறும் பின்னடைவாகும்.

 

தமிழக அரசுப் பள்ளிகளுக்கும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கும் ஒரே பாடத்திட்டம் என்ற ஒன்றைத் தவிர மற்றவற்றை முன்னாள் முதல்வர் கருணாநிதி செயல் படுத்த வில்லை.

 

அரை குறையாகக் கட்டண ஒழுங்கமைப்பைக் கொண்டு வந்தார் கருணாநிதி. இவற்றை ஏற்க விரும்பாத மெட்ரிக் பள்ளி முதலாளிகள் சமச்சீர் கல்வியை எதிர்த்துப் பல வடிவங்களில் போராடினார்கள். உயர் நீதிமன்றம் சமச்சீர் கல்வியை ஆதரித்துத் தீர்ப்பளித்த பின் ஒருவாறு ஓய்ந்தனர் கல்வி முதலாளிகள்.

 

இப்போது என்ன மாயம் நடந்ததோ, வந்ததும் வராததுமாக செயலலிதா சமச்சீர் கல்வியை ஓராண்டிற்கு நிறுத்தி வைத்து விட்டார். அவர் அமைக்கும் வல்லுநர் குழுவின் பரிந்துரைபடி அடுத்த ஆண்டு செயல்படுவாராம்!

 

சமச்சீர் திட்டப்படி 216 கோடி ரூபாய் செலவில் 9 கோடி நூல்கள் அச்சடிக்கப்பட்டுவிட்டன. இவை அனைத்தும் வீண்! இனி பழைய பாடத்திட்டப்படி பாட நூல்கள் அச்சிட 110 கோடி செலவாகுமாம். மக்கள் வரிப்பணத்தை துச்சமாக விரையம் செய்வதில் முதல்வர் செயலலிதாவிற்குக் கொஞ்சம் கூட மன நெருடல் இல்லையா?.

 

சூன் 1-ஆம் நாள் திறக்க வேண்டிய பள்ளிகளை சூன் 15-ஆம் நாள் திறக்கும் படி தள்ளி வைத்துள்ளார் செயலலிதா. இந்த நாள்களைப் பின்னர் மே மாத வெயிலில் ஈடுகட்டுவார்களா? எல்லாத் தொல்லையும் மாணவ்ர்கள் தலையில் விடியப் போகிறது.

 

 பத்தாம் வகுப்புத் தமிழ்ப் பாட நூலில் செம்மொழி என்ற பாடத்தில் கடைசி ஒரு பத்தியில் மட்டுமே கருணாநிதி குறிப்பிடப்பட்டுள்ளார். சங்கத்தமிழ் குறித்து கருணாநிதி எழுதிய பாடம் ஒன்றும் உள்ளது. கருணாநிதி குறித்த பாடத்தை நீக்க வேண்டுமானால் அப்பக்கங்களை மட்டுமே நீக்கிவிட்டு நூல்களை வழங்கலாம்.

 

1996-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த தி.மு.க. அதற்கு முன் செயலலிதா பற்றி 12 பக்கம் இருந்த பாடத்தை மட்டும் நீக்கி விட்டு பழைய ஆட்சி அச்சிட்டிருந்த பாட நூல்களை மாணவர்களுக்கு வழங்கியது. சமச்சீர் பாட நூல்களில் குறையிருந்தால் அவற்றை மட்டும் சரி செய்யலாம். அவ்வாறின்றி ஒட்டு மொத்தத் திட்டத்தைக் கடைசி நேரத்தில் நிறுத்தி வைப்பது

 

 

மாணவர்களுக்குக் கேடு பயப்பதாகும். பாட நூல் மாற்றத்தோடு நில்லாமல் பழையபடி கட்டணக்கொள்ளைக்கு வழி வகுக்கும்.

 

ஏற்கெனவே, கல்வித்துறை, உயிரோடு இருக்கும் தலைவர்கள் குறித்து பாடங்களைப் பாட நூல்களில் வைப்பதில்லை என்ற நடைமுறை வைத்திருந்தது. அந்த நடை முறையை மாற்றியவர்கள் கழக ஆட்சியினர்தாம்.

 

சமச்சீர் கல்விப்பாட நூல்கள் தரமாக இல்லை என்று மெட்ரிக் பள்ளி முதலாளிகள் கூறிய அதே குற்றச்சாட்டைத்தான் செயலலிதாவும் தமது முடிவுக்குக் காரணமாகக் கூறியுள்ளார். இருக்கும் சில குறைகளை நீக்கி இப்போது அச்சடிக்கப்பட்டுள்ள சமச்சீர் பாட நூல்களை வழங்குவதே  கல்வி வளர்ச்சியின் மீது அக்கறை கொண்ட செயலாகும்.

 

எனவே தமிழக முதல்வர் செல்வி செயலலிதா தமது முடிவை மறு ஆய்வு செய்து சம்ச்சீர் கல்வித் திட்டத்தை வரும்  சூன் மாதம் செயல்படுத்துமாறு தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.


தோழமையுடன்,

பெ.மணியரசன்

பொதுச் செயலாளர்,

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.



Saturday, May 21, 2011

இதரத் தென் மாநிலங்களுக்கும் இலங்கைக்கும் மின்சாரம் தர நெய்வேலியில் புதிய மின் நிலையங்கள் கட்டக்கூடாது நடுவணரசுக்குத் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச்செயலாளர் பெ.மணியரசன் கண்டனம்



இதரத் தென் மாநிலங்களுக்கும் இலங்கைக்கும் மின்சாரம் தர

நெய்வேலியில் புதிய மின் நிலையங்கள் கட்டக்கூடாது

 நடுவணரசுக்குத்  தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி

பொதுச்செயலாளர் பெ.மணியரசன் கண்டனம்

 

      ந்திய அரசு சார்பில் நெய்வேலியில் 5,907 கோடி ரூபாய் செலவில் புதிதாக இரு அனல் மின் நிலையங்கள் நிறுவ 19.5.2011 அன்று நடுவண் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இவ்விரு அனல் மின் நிலையங்களும் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும். இவ்விரு அனல் மின் நிலையங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரம் தென் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்று இந்திய அரசு கூறுகிறது.

 

மின் பற்றாக்குறையில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது தமிழ்நாடு. இந்நிலையில் தமிழகத்தில் தமிழக உழவர்கள் கொடுத்த நிலங்களில் கிடைக்கும் பழுப்பு நிலக்கரியைப் பயன்படுத்தி நெய்வேலியில் உற்பத்தி செய்யும் மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டிற்கு மட்டுமே வழங்க வேண்டும்.இப்போது நெய்வேலி மின்சாரம் மற்ற தென் மாநிலங்களுக்கும் வழங்கப்படுகிறது. இனி புதிதாக உற்பத்தியாகும் மின்சாரத்தையும் மற்ற தென் மாநிலங்களுக்கு வழங்குவது அநீதி ஆகும். தமிழகத்தையும் அதில் வாழும் ஏழுகோடி மக்களையும் அவர்களின் மின் தேவையையும் துச்சமாகக் கருதி இந்திய அரசு செயல்படுவது மொழிவாரி மாநில உரிமைகளை சட்டை செய்யாத  காலனிய ஆட்சி முறையாகும்.

 

 கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் காவிரித் தீர்ப்பாயம் மற்றும் உச்சநீதி மன்றம் ஆகியவற்றின் தீர்ப்பின் படி தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரைத் தர மறுப்பவை. தமிழகத்தின் தண்ணீர் உரிமையை மேற்கண்ட தென் மாநிலங்களிடமிருந்து மீட்டுத்தர இந்திய அரசு சுட்டு விரலைக் கூட அசைத்ததில்லை. இப்போது மிகத் தாராளமாகத் தமிழகத்தின் கனிம வளத்தை எடுத்து மின் உற்பத்தி செய்து அதைக் கர்நாடகம், கேரளம் , ஆந்திரம் ஆகிய  மாநிலங்களுக்கு வழங்க இந்திய அரசு முனைவது  தமிழ்நாட்டுக்குச் செய்யும் மிகப்பெரும் துரோகமாகும்.

 

       அது மட்டு மின்றி, இந்திய அரசு இலங்கைக்கு மின்சாரம் தர ஒப்பந்தம் போட்டுள்ளது. புதிதாக உற்பத்தி செய்ய உள்ள நெய்வேலி மின்சாரத்தை, தமிழினத்தை அழித்த இலங்கைக்குத் தர இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்ய சிங்கள அரசுக்குத் துணை நின்றதைப் போலவே இப்போழுது தமிழக மின்சாரத்தை இலங்கைக்கு அனுப்பத் திட்ட மிட்டுள்ள செயல் தமிழினத்தின் மீது இந்திய அரசுக்குள்ள காழ்ப்புணர்ச்சியைக் காட்டுகிறது.

 

புதிதாக உற்பத்தி செய்யும் நெய்வேலி மின்சாரத்தை ஆந்திர, கர்நாடக, கேரள மாநிலங்களுக்கும், இலங்கைக்கும் இந்திய அரசு வழங்கத் திட்ட மிடுவதைத் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

 

தமிழக முதல்வர் இதில் தலையிட்டு, இந்திய அரசு நெய்வேலியில் புதிதாக அணுமின் நிலையங்கள் கட்டும் முயற்சியைத் தடுத்து நிறுத்தி, அங்கு புதிய அனல்மின் நிலையங்களைத் தமிழக அரசின் மின் வாரியப் பொறுப்பில்  கட்ட அனுமதி பெற்றுப் பணிகளைத் தொடங்குமாறு தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

Saturday, May 14, 2011

PRESS RELEASE[15.05.2011]: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2011: ஏமாற்றியவர் ஏமாந்தார்: பெ.மணியரசன் அறிக்கை

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2011: ஏமாற்றியவர் ஏமாந்தார்

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன் அறிக்கை

 

அ.இ.அ.தி.மு.க.வை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற விருப்பத்தை விட, தி.மு.க.வைத் தோற்கடிக்க வேண்டும் என்ற வெறி தமிழக மக்களிடம் பரவலாக இருந்திருக்கிறது. தி.மு.க.வின் தோல்வி எதிர்பார்க்கப்பட்டது என்றாலும் இந்த அளவு படுதோல்வி அடையுமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

 

வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முடியாமல் தேர்தல் ஆணையம் தடுத்துவிட்டதால் தி.மு.க.வுக்கு இந்தப் படுதோல்வி ஏற்பட்டது என்று கருதினால் அது பிழை. வாக்குப் பதிவுக்கு முந்திய இருநாள்களும், தேர்தல் ஆணையமும், காவல்துறையும் திட்டமிட்டு ஒதுங்கிக் கொண்டன. தி.மு.க. ஒரு வாக்காளர்க்கு ஓர் ஆயிரம் ரூபாயிலிருந்து இருநூறு ரூபாய் வரைத் தமிழகமெங்கும் கொடுத்தது. அ.இ.அ.தி.மு.க. நேர்மையின் நிலைக்களன் அன்று. ஆட்சி நடத்தி அடித்த கொள்ளைப்பணம் தி.மு.க. அளவிற்கு அ.இ.அ.தி.மு.க.விடம் இப்போது சேமிப்பில் இல்லை. ஆட்சியை இழந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன அல்லவா! எனவே, அ.இ.அ.தி.மு.க. வாக்காளர்களுக்குக் குறைவாகப் பணம் கொடுத்தது.

 

      தி.மு.க. திணித்த பணத்தை வாங்கிக் கொண்டு அ.இ.அ.தி.மு.க. அணிக்கு வாக்களித்தோர் விகிதம் அதிகம். இது புதியப் போக்கு!

 

      துடைத்தெறியப்பட்ட தோல்வியைத் தி.மு.க. சந்தித்ததற்கான காரணங்களை இரண்டு வகையாகக் காணலாம். ஒன்று அமைப்பு வழிப்பட்டவை. மற்றொன்று அரசியல் வழிபட்டவை.

 

      தி.மு.க., கலைஞர் கருணாநிதியின் ஒற்றைத் தலைமையின் கீழ் செயல்படவில்லை. ஒன்றையொன்று காலைவாரிவிடும் கருணாநிதியின் குடும்ப ஆதிக்கக் குழுக்களின் தலைமையின் கீழ் இயங்குகிறது. குடும்பக் குழுக்களின் ஆதிக்கச் சண்டையை அவ்வப்போது சமரசம் செய்து வைக்கும் வேலைதான் கருணாநிதியின் பொதுத் தலைமைக்கான அன்றாட வேலையாக இருக்கிறது. தலைமையில் இருக்கும் குடும்ப ஆதிக்கம் போலவே, மாவட்டங்களிலும், அதற்குக் கீழும் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் குடும்ப ஆதிக்கமும், அதனால் வீச்சுப்பெற்ற குழுச் சண்டைகளும் தி.மு.க.வை ஆட்டி அலைக்கழித்துவிட்டன.

 

      தலைமை அறிவித்த வேட்பாளர்களை எதிர்த்து, கலைஞரின் "உயிரினும் மேலான உடன்பிறப்புகள்" பல தொகுதிகளில் போட்டி வேட்பாளர்களாக நின்றனர். இந்த விரிசலைக் கருணாநிதியால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அவர் நடத்தும் குடும்பக் குழுக்களின் ஆதிக்க அரசியல், அவரின் வேண்டுகோள்களையும், கட்டளைகளையும் காலில் போட்டு மிதிக்கும் அளவிற்குக் கழகக் கண்மணிகளுக்குத் துணிச்சல் தந்தன.

 

கழகப் போட்டி வேட்பாளர் நிற்காத தொகுதிகளில், மாவட்ட மற்றும் அதற்குக் கீழே உள்ள தி.மு.க. பிரமுகர்கள் சிலர் தங்கள் கழகத்திற்கு அல்லது கூட்டணிக் கட்சிக்கு இரண்டகம் செய்து எதிரணியினர்க்கு ஆதரவாகக் கீழறுப்பு வேலை செய்தார்கள்.

 

தி.மு.க.கூட்டணியில், தி.மு.க.வுக்கும் பா.ம.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் இடையேயான உறவில், மோதல்களும் முறிவுகளும் ஏற்பட்டு தேர்தல் நேரத்தில் அக்கட்சிகள் ஒட்டிக் கொண்டன. இக்கட்சிகள் கசப்பைச் சப்புக் கொட்டிக் கொண்டே கைகோத்துச் சென்றனர் மக்களிடம்.

 

காங்கிரசுக் கென்று வாக்கு வங்கி இருந்த காலம் மூப்பனாரோடு முடிந்து விட்டது. கொசுவுக்கு ராஜபிளவை நோய் வந்தது போல, சிறுத்தப் போன காங்கிரசுக்குள் பற்பல குழுப்பிளவுகள். கோயில் மாடுகளைப் போல் திரியும் அக்குழுக்களின் பிரமுகர்கள் கூட்டணி தயவில் அவ்வப்போது தமிழகத் தேர்தலில் மஞ்சள் குளிப்பார்கள்; மணம் பெறுவார்கள். தில்லி அரசியலையும், தில்லி ஆட்சியையும் சார்ந்து தமிழ்நாட்டில் பேரம் பேசி பதவி பெறும் புல்லுருவிச் செடிகள் அப்பிரமுகர்கள்.

 

இந்தக் காங்கிரசுப் பிரமுகர்களின் கீழறுப்பு வேலை இந்தத் தேர்தலில் மிக அதிகம்.

 

மேற்கண்ட கோளாறுகள், தி.மு.க.வின் படுதோல்விக்கான அமைப்பு வழிக் காரணிகள். அதன் அரசியல்வழிக் காரணங்களில் முகாமையானவற்றைப் பின்வருமாறு கூறலாம். அரசியல் காரணங்கள் என்று இங்கு நாம் கூறுபவை, தி.மு.க. ஆட்சி நடத்திய வகையில் ஏற்பட்ட குறைபாடுகள்.

 

கருணாநிதி குடும்பங்களின் ஆதிக்க அரசியல் மற்றும் அவை அடித்த கொள்ளைகள்

கருணாநிதி உருவாக்கி நிலைப்படுத்தியுள்ள வாரிசு அரசியல், அவர் குடும்பத்திற்கு வெளியே உள்ள யாரும், எத்தனை தகுதிகள் பெற்றிருந்தாலும் கழகத் தலைமைக்கு வர முடியாது என்று வேலி கட்டி வைத்து விட்டது. அடுத்து கருணாநிதியின் குடும்ப உறுப்பினர் ஒருவரை அண்டிப் பிழைக்கும் அல்லக்கையாக இருந்தால் தான் கழகத்தில் இரண்டாம் நிலைத் தலைவராக வர மாவட்டச் செயலாளராக ஆக முடியும் என்ற கட்டாயம் உருவாகிவிட்டது.

 

இந்த நிலை கழக உறுப்பினர்களை மட்டுமின்றி, பொது மக்களையும் முகம் சுழிக்க வைத்துவிட்டது.

கருணாநிதி முரசொலிமாறன் குடும்ப உறுப்பினர்கள் அரசியல் அதிகாரத்தை வைத்து, பல்வேறு தொழில்களில் புகுந்து அரம்பத்தனம் (ரவுடித்தனம்) செய்து, அத்தொழில்களில் ஏற்கெனவே இருந்து வந்த பலரை அடித்து வீழ்த்தினார்கள்; அத்தொழில்களை விட்டே விரட்டினார்கள்.

 

திரைப்படத்துறை, தொலைக்காட்சித் துறை, கம்பிவிடத் தொலைக்காட்சி, செய்தி ஏடுகள், தாளிகைகள் போன்ற தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டன. திரைப்படத் துறையில் உள்ள தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் கூட அக்கட்சிக்கு வாக்களித்திருக்க மாவட்டார்கள். அக்கட்சி திரும்பவும் ஆட்சிக்கு வந்தால் தங்கள் பிழைப்பில் மண் விழுந்து விடும் என்று அஞ்சினார்கள். கருணாநிதியுடன் மிக நெருக்கமாக உறவு வைத்துள்ள ரஜினிகாந்தே, அ.இ.அ.தி.மு.க.வுக்கு வாக்களித்தது தொலைக்காட்சியில் காட்டப்பட்டது.

 

கருணாநிதி குடும்பத்தாரின் மலைக் கொள்ளை, மணற் கொள்ளை ஆகியவை தமிழகத்தின் இயற்கை வளத்தையே சூறையாடியது.

 

இரண்டாம் அலைக்கற்றை ஊழல், கருணாநிதி குடும்பத்தாரின் பல்லாயிரம் கோடி பகற்கொள்ளையை ஐயத்திற்கிடமில்லாமல் அம்பலப்படுத்தி விட்டது.

 

விலை உயர்வு

விலை உயர்வு நச்சுக்காய்ச்சல் வெப்பம் போல உயர்ந்து வருகிறது. நல்ல அரிசி வாங்கிச் சாப்பிட விரும்பும் நடுத்தர மக்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒரு கிலோ பொன்னி அரிசி ரூ. 18க்கு வாங்கினார்கள். தி.மு.க. ஆட்சியில் அது கிலோ 35 முதல் 40 ரூபாய் வரை விற்கிறது. ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்குத் தருவது, அந்த மக்களுக்கு என்ன நன்மையைச் செய்தது? மற்ற அனைத்துப் பொருள்களின் விலையும் அப்படியே கிடுகிடு என உயர்ந்தது. நடுவண் ஆட்சிக்கு இந்த விலை உயர்வில் முகாமையான பொறுப்பு உண்டு. அங்கேயும் தி.மு.க. ஆளுங்கட்சி தானே!

 

கொழுந்துவிட்டு எரிந்த விலைவாசி உயர்வு என்ற நெருப்பு கருணாநிதி கொடுத்த தொ.கா.பெட்டி,  எரிவளி அடுப்பு போன்ற இலவசங்களைப் பொசுக்கிவிட்டது.

வீட்டிற்குள் வாழ்க்கை நடத்த முடியாத அளவுக்கு மின்வெட்டால் இருட்டும் புழக்கமும், வெளியில் தொழில், வணிகம், செய்ய முடியாத அளவிற்கு மேலும் மேலும் மோசமடைந்து வந்த மின்வெட்டு!

 

இன இரண்டகம்

 

2009இல் முல்லைத்தீவில், முள்ளிவாய்க்காலில் ஒரு இலட்சம் தமிழர்களை குண்டுபோட்டுக் கொன்ற சிங்கள இந்தியக் கூட்டுக் கொலைகாரர்களை, மனிதகுலப் பவைவர்களை, தமிழின அழிப்பாளர்களை ஆதரித்துக் கொண்டே, எதிர்ப்பது போல் நாடகமாடிய கருணாநிதியின் நயவஞ்சகம், இன இரண்டகம் இன உணர்வுள்ள ஒவ்வொரு தமிழன்-தமிழச்சி நெஞ்சிலும், மனித நேயர் நெஞ்சிலும் நெருப்பாய்க கனன்று கொண்டிருக்கிறது.

 

தமிழக ஆட்சியைப் பயன்படுத்தியும், தில்லி ஆட்சிக்குத் தி.மு.க.வின் துணை தேவைப் பட்டதைப் பயன்படுத்தியும், மெய்யாகவே கருணாநிதி போராடியிருந்தால், போர் நிறுத்தம் கொண்டு வந்திருக்க முடியும். தமிழினத்தைக் காத்திருக்க முடியும். அவ்வாறு காக்க முடியாவிட்டால் தமிழ் மக்களோடு சேர்ந்து உண்மையாகப் போராடி ஈகி ஆகியிருக்கலாம். பசப்பு நாடகங்களை நடத்தித் தமிழினத்தை ஏமாற்றினார். ஏமாற்றியவர் இப்போது ஏமாந்தார்.

 

தமிழின அழிப்பில், காங்கிரசு, தி.மு.க. ஆகியவை வகித்த பங்கு தி.மு.க. அணியின் படுதோல்விக்கான காரணங்களுள் ஒன்று. அதுவே முதன்மைக் காரணி என்று நாம் பிழைபடக் கணிக்க வேண்டியதில்லை.

 

செயலலிதா, மாற்று அரசியல், பொருளியல், கொள்கைகள் கொண்டுள்ளார்  என்பதற்காகவோ அவர் தமிழின உரிமைகளை மீட்பார் என்ற நம்பிக்கையினாலோ, ஊழல் அற்ற நேர்மையாளர் என்பதற்காகவோ அவருக்கு மக்கள் பெருவாரியாக வாக்களித்து விடவில்லை. தி.மு.க. ஆட்சியின் கொடுமை தாங்க முடியாதவர்கள் உடனடித் துயர் நீக்கம் என்ற உளவியலில் செயலலிதாவுக்குப் பேராதரவு தந்துள்ளனர்.

 

செயலலிதாவின் சசிகலாக் குடும்பக் கொடுங்கோன்மை, ஊழல், கொள்ளை, உலகமயப் பொருளியல் கொள்கை, தமிழ்மொழி், தமிழினத்திற்கெதிரான காழ்ப்புணர்ச்சி, விடுதலைப்புலிகள் எதிர்ப்பு, இந்தியத் தேசிய வெறி, எடுத்தேன் கவிழ்த்தேன் எதேச்சாதிகாரம், ஒடுக்குமுறை, தொழிற் சங்க உரிமைகள் மீதான சீற்றம் போன்றவற்றில் மாற்றம் வரும் என்று நாம் நம்பவில்லை. மாற்றம் வந்தால் நல்லது.

தி.மு.க.வையும் அ.இ.அ.தி.மு.க.வையும் ஒப்பிட்டுச் சாரமாகச் சொல்வதென்றால் முன்னது வேட்டி கட்டிய செயலலிதா தலைமையில் இயங்குகிறது. பின்னது புடவை கட்டிய கருணாநிதி தலைமையில் இயங்குகிறது. இருவர்க்கும் நடைமுறை உத்திகளில் சிலவேறுபாடுகள் இருக்கின்றன.

 

சரியான மாற்று சக்தி இல்லாத போது ஒன்றின் தகிப்பைத் தாங்க முடியாத மக்கள், தகித்து ஓய்ந்துள்ள இன்னொன்றைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

 

ஆயிரம் குற்றங்குறை இருந்தாலும், அனைவர்க்குமான அரசியல் கட்சிகளைத்தான் பெரும்பாலான மக்கள் விரும்புகிறார்கள். சாதிக் கட்சிகளை ஓரங்கட்டி விடுகிறார்கள். இது தமிழ் மக்கள் மீது நம்பிக்கை கொள்ளச் செய்யும் நல்ல அறிகுறி.

 

2004 மக்களவைத் தேர்தலில் ஓர் இடம் கூட அ.இ.அ.தி.மு.க. அணி பெறவில்லை. நாற்பதையும் தி.மு.க. அணி பெற்றது. கிட்டத்தட்ட அந்த நிலை இப்பொழுது நடந்துள்ள தமிழகத் தேர்தலில் தி.மு.க. அணிக்கு ஏற்பட்டுள்ளது.

 

தேர்தல் வெற்றி தோல்விகளால் தேர்தல்ல கட்சியின் சகாப்தம் முடிந்துவிட்டது என்று கருத முடியாது.

 

மேற்குவங்கம், கேரளம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் அம்மாநிலங்களின் தனித்தனிச் சிறப்புகளுக்கேற்பவே வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். அனைத்திந்தியப் போக்கு என்பது இல்லை என்பதனை அது நிரூபித்துள்ளது.

 

புரட்சிரத் தமிழ்த் தேசியத்தைப் பொறுத்தவரை, அதன் செயற்களம் தேர்தல் அன்று! இனவிடுதலை, இனஉரிமைக்கான போராட்டக் களம்! தேர்தல் கட்சிகளின் வெற்றி தோல்விகளில் ஆரவாரம் கொண்டு, அதில் மிதந்து செல்லும் தக்கையன்று தமிழ்த் தேசியம்!

 

தோழமையுடன்,

பெ.மணியரசன்,

பொதுச் செயலாளர்,

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT