உடனடிச்செய்திகள்

Tuesday, September 25, 2012

கூடங்குளம் அணுஉலையை மூடு! சென்னையில் சாஸ்திரி பவனில் 40க்கும் மேற்பட்டோர் கைது!


கூடங்குளம் அணுஉலையை இழுத்து மூட வலியுறுத்தி, சென்னையில் இன்று (25.09.2012) காலை 10.30 மணியளவில் இந்திய அரசின் வருமானவரித் துறை அலுவலகமான நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன்முற்றுகையிடப்பட்டது.


சேவ் தமிழ்ஸ் இயக்கப் பொறுப்பாளர் செந்தில், திராவிடர் விடுதலைக் கழக தென் சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் தபசி குமரன், தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ. நல் ஆறுமுகம், எஸ்.பி.பி.ஐ. தென்சென்னை மாவட்டச் செயலாளர் திரு. உசைன், தோழர் தியாகு, உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும், தோழர்களும் இதில் பங்கேற்றனர்.


தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பாக, த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி, தாம்பரம் த.தே.பொ.க. செயலாளர் தோழர் தமிழ்க் கனல், த.தே.பொ.க. தலைமை அலுவலகச் செயலர் தோழர் கோபிநாத், தோழர் தமிழ்ச் சமரன் உள்ளிட்ட திரளான த.தே.பொ.க. தோழர்கள் இதில் கலந்து கொண்டனர்.


தோழர்கள் அனைவரும் தற்போது, நுங்கம்பாக்கம், வடக்குமாடவீதியிலுள்ள சமுதாய நலக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.



( செய்தி: த.தே.பொ.க.செய்திப் பிரிவு, படங்கள் : பாலா )

Tuesday, September 18, 2012

கொலைகாரன் இராசபட்சேவின் இந்திய வருகையை எதிர்த்து தழல்ஈகியான தோழர் விஜயராஜூக்கு வீரவணக்கம்! தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அறிக்கை!




கொலைகாரன் இராசபட்சேவின் இந்திய வருகையை எதிர்த்து
தழல்ஈகியான தோழர் விஜயராஜூக்கு வீரவணக்கம்!
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அறிக்கை!

தமிழினத்தின் குருதி குடித்துக் கும்மாளம் போடும் கொலைகாரன் இராசபட்சேயை சிறப்புவிருந்தினராக இந்தியாஅழைப்பதை எதிர்த்துத் தீக்குளித்த சேலம் இளைஞர் விஜயராஜ் இறந்துவிட்டார் என்ற செய்தி நெஞ்சத்தீயாகச் சுடுகிறது.

இன்று(18.09.2012) காலை சேலம் அரசு மருத்துவமனைக்கு, தோழர்களுடன் சென்று அவரை நேரில் பார்த்த போது நெஞ்சம் பதைத்தது. தன்நினைவு இழந்த நிலையில்தீக் காயங்களின்வலி பொறுக்கமுடியாமல், முனகிக் கொண்டிருந்தார்.
கட்டிளங்காளை என்பார்களே அப்படிப்பட்ட உடல் கட்டு. 26 அகவையுள்ள இளைஞர் விஜயராஜ். தமிழினம் காக்கத் தன்னையே எரித்துக் கொள்ளும் அளவிற்கு இனப் பற்று கொண்டவர்.

அப்படிப்பட்ட விஜயராஜ் உயிரோடிருந்து தான் பிறந்த இனத்திற்குப் பணியாற்ற வேண்டியவர். தன் பெற்றோர்க்கும் சகோதரர்களுக்கும் சகோதரிக்கும் கடமை ஆற்ற வேண்டியவர். அவர் இழப்பு தமிழினத்திற்கும் அவர் குடும்பத்திற்கும் பேரிழப்பு.

தமிழ் இளைஞர்கள், இன உணர்வாளர்கள் விஜயராஜ் மரணத்தில் உறுதியேற்க வேண்டும். இனப் பகைவர்களோடு போராடுவோம். அப்போராட்டத்தில் மடிந்தால் மடிவோம். தன்னைத் தானே மாய்த்துக் கொள்ள மாட்டோம். இந்த வகையில் எதிரிகள் நம்மைப் பார்த்து கெக்கலிக் கொட்ட வாய்ப்பளிக்க மாட்டோம்என்பதே அவ்வுறுதி மொழி.

வீரம் செறிந்த மரபில் வந்த நம் இன உணர்வாளகள், தங்களின் வீரத்தைத் தீக்கு இரையாக்கக்  கூடாது. வாழ்ந்து போராட வேண்டும்.

தமிழ் இனத்தின் உரிமை காக்க, தன்னை ஈந்து கொண்ட தழல் ஈகி விஜயராஜூக்குத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வீரவணக்கம் செலுத்துகிறது அவர் குடும்பத் தார்க்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.



பெ.மணியரசன்
தலைவர் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

Tuesday, September 11, 2012

கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி அமைதி வழி போராட்டம் நடத்திய மக்கள் மீது தமிழக காவல்துறை காட்டுமிராண்டி தாக்குதல் அனைத்துக் கட்சி கண்டன மறியல் தோழர் பெ.மணியரசன் மீது காவல்துறை தாக்குதல்


கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி அமைதி வழி
போராட்டம் நடத்திய மக்கள் மீது
தமிழக காவல்துறை காட்டுமிராண்டி தாக்குதல்
அனைத்துக் கட்சி கண்டன மறியல்
தோழர் பெ.மணியரசன் மீது காவல்துறை தாக்குதல்

தமிழினத்தை அழிக்கும் கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி கடந்த 1 ஆண்டுக்கு மேலாக கூடங்குளம், இடிந்தகரை பகுதி மக்கள் அமைதி போராட்டம் நடத்தி வருகிறார்கள். மக்களின் உணர்வுகளை புறந்தள்ளிவிட்டு அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்ப இந்திய அரசு நாள் குறித்தது.

இதனை எதிர்க்கும் வகையில் அப்பகுதி மக்கள் ஏறத்தாழ 10,000 பேர் அணு உலை முற்றுகை போராட்டம் என அறிவித்து பேரணியாக சென்று வைராவிக்கிணறு கடற்கரையில் கூடினர்.அமைதியாக போராடிய மக்கள் மீது 10/09/2012 அன்று தமிழக காவல்துறை தடியடி, கண்ணீர்ப்புகை வீச்சு, கல்லடி, தேவாலயங்கள், குடியிருப்புகளில் தேடுதல் வேட்டை என கண்மூடித் தாக்குதல் நாள்முழுவதும் கட்டவிழ்த்துவிட்டது.

உயிருக்கு பயந்து கடல் நீரில் குதித்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகத்தினரும் தாக்கப்பட்டனர்.

தமிழக அரசின் இந்த காட்டுமிராண்டித் தாக்குதலைக் கண்டித்து 11/09/2012 இன்று தமிழகமெங்கும் அனைத்துக் கட்சிகளின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

சென்னை:
சென்னையில் அண்ணாசாலை, அண்ணா சிலை அருகில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைவர் பெ.மணியரசன், ம.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் த.வேல்முருகன், காஞ்சி மக்கள் மன்றத் தலைவர் மகேசு, சேவ் தமிழ்ஸ் செந்தில், இளைஞர் எழுச்சி பாசறை அருண்சோரி, தமிழர் முன்னேற்ற கழக ஒருங்கிணைப்பாளர் அதியமான், உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஸ்டாலின், தந்தைப் பெரியார் திராவிடர் கழகம் கேசவன். சம்ர்ப்பா குமரன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் உள்ளிட்ட தமிழின உணர்வாளர்கள் ஏறத்தாழ 500 பேர் மறியல் போராட்டம் நடத்தினர்.

இப்போராட்டத்தில் எல்லீஸ் சாலை சந்திப்பில்  தரையில் படுத்து மறியல் செய்த த.தே.பொ.க தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்களை காவல்துறையினர் பிடித்து, தாக்கி, தரதர வென தரையில் இழுத்து சென்று காவல் வாகனத்தில் ஏற்றினர். த.தே.பொ.க தலைமை செயற்குழு உறுப்பினர் க.அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர்கள் ஆ.குபேரன், பழ.நல்.ஆறுமுகம், க.முருகன், தலைமை நிலைய செயலாளர் கோபிநாத், தமிழக இளைஞர் முன்னணி மையக்குழு உறுப்பினர் செந்திறல்,மகளிர் ஆயம் மையக்குழு உறுப்பினர் ம.லெட்சுமி, கட்சியின் தாம்பரம் செயலாளர் தமிழ்க்கனல், தோழர் தமிழ்ச்சமரன் ஆகியோர் காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டனர் அனைவரும் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர்.

போராட்டத்தின் போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், அமைச்சர் நாராயணசாமி, தமிழக முதலமைச்சர் செயலலிதா, கூடங்குள அணு உலை ஆகிய படங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

போராட்டத்தின் போது சென்னை மாநாகர பேருந்துக் கண்ணாடிகள் உடைந்ததாக கூறி தோழர் நாத்திகன் என்பவரை காவல்துறையினர் தனியே அழைத்துச் சென்றனர். இதனைக் கண்டித்தும் அத்தோழரை தங்களிடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்தியும் கைதான அனைவரும் இராயப்பேட்டை சமூக கூடத்திற்குள் செல்லமாட்டோம் எனக்கூறி வெளியில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அதன்பிறகு தலைவர்களுடன் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தோழர் நாத்திகனை அரங்கத்தில் ஒப்படைத்தனர்.


தஞ்சை:
 தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி த்லைமை செயற்குழு உறுப்பினர் நா.வைகறை, குழ.பால்ராசு, பழ.இராசேந்திரன், இராசு.முனியாண்டி,தமிழக உழவர் முன்னணி பொதுச் செயலாளர் காசிநாதன், ரெ.கருணாநிதி, நாம் தமிழர் கட்சியின் முத்துக்கிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பா.ம.கவினர் உடபட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

இப்போராட்டத்திற்கு தமிழர் தேசிய இயக்கப் பொதுசெயலாளர் அய்யனாபுரம் முருகேசன் தலைமை தாங்கினார்.

மதுரை:
 தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி த்லைமை செயற்குழு உறுப்பினர் அ.ஆனந்தன், மதுரைச் செயலாளர் ரெ.இராசு, மகளிர் ஆயம் செரபீனா, தானி தொழிலாளர் சங்கம் கணேசன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட், சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 50 பேர் சாலை மறியலில் ஈடுபட்டு கைதாயினர்.

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் நி.த.பாண்டியன் தலைமை தாங்கினார்.

ஈரோடு:
------
ஈரோடு பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை இழுத்து பூட்டும் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இரத்தினசாமி (திராவிடர் விடுதலைக் கழகம்), வெ.இளங்கோ (த.தே.பொ.க), க.மோகன் (தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்) , கண.குறிஞ்சி(பி.யு.சி.எல்), தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத் தோழர்கள் உள்ளிட்ட 50பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி:
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி த்லைமை செயற்குழு உறுப்பினர் தோழர் .கோ.மாரிமுத்து தலைமையில் கிருஷ்ணகிரியில் சாலைமறியலில் ஈடுபட்ட தோழர்கள், தமிழர் தேசிய இயக்கத் மாவட்டத் தலைவர் முருகேசன், திராவிடர் விடுதலைக்கழக குமார், தமிழக இளைஞர் முன்னணி கிருஷ்ணகிரி அமைப்பாளர் குணசேகரன் உள்ளிட்ட 30 பேர் கைது செய்யப்பட்டனர்.


                                                                      செய்திப்பிரிவு: த.தே.பொ.க. தலைமையகம், சென்னை
                                                                                                          படங்கள்: கவிபாஸ்கர்





Saturday, September 8, 2012

“முற்றுகைப் போரில் ஈடுபடும் கூடங்குளம் மக்களுக்கு துணை நிற்போம்!” சென்னையில் அணுஉலைக்கு எதிரான அரசியல் அமைப்புகள் உறுதி!



முற்றுகைப் போரில் ஈடுபடும்
 கூடங்குளம் மக்களுக்கு
 துணை நிற்போம்!
சென்னையில் அணுஉலைக்கு 
எதிரான அரசியல் அமைப்புகள் உறுதி!

சென்னை, 08.09.2012.

ஒட்டு மொத்தத் தமிழ் இனத்திற்கும் ஒரே சவக்குழியாக விளங்கும் கூடங்குளம் அணுஉலைத் திட்டத்தை எதிர்த்துஅணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் கீழ் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அறவழியில் போராடிவரும் இடிந்தகரை கிராம மக்களை அச்சுறுத்தும் வகையில்இடிந்தகரையில் காவல்துறை தனது படைகளைக் குவித்து வருகின்றது.

நாளை கூடங்குளம் மக்கள் முற்றுகைப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில்மக்கள் மீது வன்முறையை ஏவும் வகையில் படைகளைக் குவித்துவரும் அரசைக் கண்டித்துஇன்று(08.09.2012) மாலை மணியளவில்சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில்அனைத்து இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பங்கேற்கும் செய்தியாளர் சந்திப்பு மே பதினேழு இயக்கத்தினரால் ஒருங்கிணைக்கப்பட்டது. 

இச்செய்தியாளர் சந்திப்பில்கீழ்க்கண்ட கோரிக்கைகள் அனைத்து அரசியல் கட்சி - இயக்கத்தினரால் வெளியிடப்பட்டது.

·         சனநாயக ரீதியாக அமைதிவழியில் அணு உலையை மூடக்கோரி போராடி வரும் மக்களிடத்தில் தமிழக அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்துவதே அடிப்படை சனநாயக மரபு என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

·         மக்களாட்சியானது மக்களின் நியாயமான கோரிக்கைகளை புறக்கணித்து வன்முறை மூலம் ஒடுக்க நினைப்பது ஏற்கத்தக்கதல்ல. உலகெங்கும் உள்ள சனநாயக அரசுகள் மக்களை அவர்களது கோரிக்கைகளுக்காக ஒடுக்குவதில்லை, மாறாக அவர்களுடன் பேச்சுவார்த்தை மூலமே பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிறார்கள். அதே மரபுடன் தமிழக அரசு நடந்து கொண்டு காவல்துறையினரை உடனடியாக திரும்ப்ப் பெற்வேண்டும்.

·         போராடும் மக்களின் மீது அதிகப்படியான வழக்குகளை பதிவு செய்வதையும், அவர்களை கடுமையான சட்டரீதியான ஒடுக்குமுறைக்குள்ளாக்குவதையும் நாங்கள் கண்டிக்கிறோம். அவர்கள் மீதன பொய் வழக்குகளை உடனடியாக வாபஸ் வாங்குவது மட்டுமல்லாது, அவர்கள் மீது மேலும் வழக்குகளை பதிவு செய்வது தடுக்கப்பட வேண்டும் என்பதை பதிவு செய்கிறோம்.

·         கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி தொடர்ந்து 25 வருடங்களாக போராடிவரும் அப்பகுதி மக்களது போராட்ட்த்தினை தமிழக அரசு கணக்கில் கொண்டு உடனடியாக அந்த அணு உலையை மூடவேண்டும்.

·         பல்வேறு பொறியியல், சூழலியல், புவியியல், காரணிகள் அணு உலைக்கு ஏதுவாக இல்லாது இருப்பதை பல்வேறு ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தியபிறகும் மத்திய அரசு தமிழக மக்களின் கோரிக்கையை புறக்கணிப்பது சனநாயக விரோதம் மட்டுமல்ல, இந்திய ஒன்றியத்தின் அடிப்படை புரிதலுக்கும் எதிரானதாக அமைகிறது என்பதை நாங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம். ஆகவே தமிழகத்தின் கோரிக்கைக்கு செவிசாய்த்து கூடங்குளத்தினை மூட ஆவண செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

·         அணு உலையில் ஒட்டு இருக்க கூடாது என்கிற சர்வதேச விதிமுறைகளை மீறி ஒட்டு வைக்கப்பட்ட உலைகளை இறக்குமதி செய்து கூடங்குளத்தில் நிலை நிறுத்துகிற வேலைப்பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.

·         மக்களின் கேள்விகளுக்கான பதிலை அளிக்காமலும் , பேரிடர் பயிற்சி அளிக்காமலும் அணு உலையினுள் எரி பொரிளை நிரப்புவது என்பது நேர்மையற்றதாகவே பார்க்கப்டுகிறது. ஆகவே இதற்கு மேலும் அணு உலையில் ஏதும் வேலைகள் நடைப்பெறாமல் தடுத்து நிறுத்துவதை அரசு உடனடியாக செய்யவேண்டும்.

·         தனியார் மின் உற்பத்தியாளர்களைடமிருந்து வரும் வருடங்களில் அரசு 14,000 கோடி ரூபாய்க்கு பெறப்போகும் மிசாரமும், கூடங்குளத்தில் இருந்து பெறப்போகும் மின்சாரமானது 60 மெகாவாட் என்கிற அளவிலேயே சொற்பமானதாக இருப்பதும் என்கிற உண்மைகளை கருத்தில் கொண்டு அரசு மின் உற்பத்தி முறைக்கு சூற்றுச்சூழல் பாதுகாப்பு கொண்ட நவீன மின் தாயாரிப்பு திட்டங்களை உடனடியாக பரிசீலனை செய்வது அறிவுப் பூர்வமாகும். தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து தமிழக மக்களின் பொருளாதார, சூழலியல் சார்ந்த வாழ்வுரிமைகளை பாதுக்க வேண்டும்.

·         அனைத்துக்கும் மேலாக கூடங்குளம் , இடிந்தகரை , கூத்தங்குழி, உள்ளிட்ட போராடும் மக்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்வதும் அவர்களின் உரிமைகளை மதிப்பதும் அவசியன் என்பதை வலியுறுத்துகிறோம்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோவிடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தித் தொடர்பாளர் திரு. வன்னியரசுதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன்தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ரூட்டி திரு. வேல்முருகன்திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன்எஸ்.டி.பி.ஐ. தலைவர் திரு. டெகலான்  பாகவிம.திமு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யாகல்பாக்கம் மருத்துவர் வீ.புகழேந்திஇயக்குநர் புகழேந்தி தங்கராசுபேராசிரியர் சரசுவதி உள்ளிட்ட தலைவர்கள் இதில் பங்கேற்றனர். மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி நிகழ்வை ஒருங்கிணைத்தார். நாளை(09.09.2012) முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடும் கூடங்குளம் மக்களுக்கு துணை நிற்போம் என கலந்து கொண்ட அனைத்து அமைப்புகளும் கூட்டாகத் தெரிவித்தனர். 






(செய்தி : த.தே.பொ.க. செய்தி பிரிவு, படங்கள் : அருணபாரதி)


Tuesday, September 4, 2012

“தமிழகம் வரும் சிங்களர்களை வெளியேற்றுவது தமிழக மக்களின் சனநாயகக் கடமையாகும்!” - பெ.மணியரசன் அறிக்கை


“தமிழகம் வரும் சிங்களர்களை வெளியேற்றுவது
தமிழக மக்களின் சனநாயகக் கடமையாகும்!
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்
தோழர் பெ.மணியரசன் அறிக்கை


தமிழக அரசுக்குத் தெரிவிக்காமலும், உரிய அதிகாரியின் அனுமதி பெறாமலும் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில், சிங்களக் கால்பந்தாட்ட அணியினர் விளையாட வாய்ப்பளித்த அதிகாரியை, தமிழக முதல்வர் செயலலிதா அவர்கள் இடைநீக்கம் செய்து ஆணையிட வைத்தது வரவேற்கத்தக்கது; பாராட்டிற்குரியது.

தஞ்சை மாவட்டம் பூண்டி மாதா கோயிலுக்கு வந்த சிங்களர்கள் 184 பேரை திருப்பி அனுப்பும்படி போராடி அப்போராட்டத்தில் வெற்றி பெற்ற தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள், விடுதலைத் தமிழ்ப்புலிகள் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கும், இன உணர்வாளர்களுக்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பாராட்டுத் தெரிவிக்கிறது.

அதே போல், திருச்சி கலைக்காவிரி கல்வி நிறுவனத்திற்கு கலைப் பயிற்சி என்ற பெயரில் கலந்து கொண்ட, சிங்கள மாணவர்களை வெளியேற்ற போராடிய தமிழ்த் தேசிய அமைப்புகளுக்கு நம் பாராட்டுகள்!

முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள், சிங்களப் படைவீரர்களுக்கு பயிற்சி அளிப்பதை எதிர்க்கலாம், ஆனால் சிங்கள விளையாட்டு அணியினர் வருவதை எதிர்க்கக் கூடாது என்று கூறியுள்ளார். தினமணி ஏடு சிங்களப் படையாட்களுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிப்பதையே எதிர்க்கக் கூடாது என்றும், விளையாட்டு, கல்வி மற்றும் வழிபாடு தொடர்பாக தமிழகத்திற்கு வரும் சிங்களர்களை வெளியேற்றக் கோரக் கூடாது என்றும் ஆசிரியவுரை (04.09.2012) எழுதியுள்ளது.

தமிழீழத்தில், 2009ஆம் ஆண்டு ஒன்றரை இலட்சம் அப்பாவித் தமிழ் மக்களை குழந்தைகள், முதியவர், பெண்கள் என்று பாராமல் சகட்டுமேனிக்கு படுகொலை செய்தது இலங்கை அரசு. போரின் கடைசி நாட்களில் 40,000 பேர் கொல்லப்பட்டனர் என்றும் அது மனித குலத்திற்கு எதிராக இலங்கை இராணுவம் இழைத்தக் குற்றம் என்றும், அதற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் அமைத்த மூவர் குழு விசாரணை அறிக்கை வழங்கியது.

கடந்த மார்ச் மாதம் 22 அன்று, ஜெனீவாவில் நடந்த மனித உரிமை மன்றக் கூட்டத்தில், இலங்கையில் நடந்த மனிதப் படுகொலைத் தொடர்பாக விசாரணை நடத்தி குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டுமென அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை அரசுக்கு எதிராக இந்திய அரசு பொருளாதாரத் தடை விதித்து, அதே பொருளாதாரத் தடையை மற்ற நாடுகளும் விதிக்க இந்தியா முன்முயற்சி எடுக்க வேண்டும் என்று ஒருமனதாக தமிழக அரசு, 2011ஆம் ஆண்டு சூன் மாதம், தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. அப்பாவித் தமிழ் மக்களை கூட்டம் கூட்டமாகக் கொலை செய்த இராணுவத்தினர் மீதும் மற்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க அத்தீர்மானம் வலியுறுத்தியது.

இப்பின்னணிகளுடன் தான், தமிழ்நாட்டில் சிங்களர் வருகையைத் தடுக்கும் போராட்டமும் சிங்களப் படையாட்களுக்குப் பயிற்சித் தருவதை எதிர்க்கும் போராட்டமும் நடைபெறுவதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இன ஒதுக்கல் கொள்கையை அரசியல் கொள்கையாகக் கடைபிடித்து, கருப்பின மக்களை நசுக்கி வெள்ளை இனவெறி ஆட்சி நடந்த தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு எதிராக சோவியத் ஒன்றியம் உள்ளிட்ட சோசலிச நாடுகளும், இந்தியா உள்ளிட்ட அணிசாரா நாடுகளும் தூதரக உறவை நீக்கி அந்நாடுகளுக்கு எதிராக பொருளாதாரத் தடை, விளையாட்டு வீரர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், பக்தர்கள் உள்ளிட்ட யாரும் போகத் தடை, அதே போல் அங்கிருந்து மக்கள் தங்கள் நாடுகளுக்கு வரத்தடை என்ற தடைகளை விதித்து செயல்படுத்தி வந்தன.

தமிழீழத்தில் எண்ணற்ற இந்துக் கோயில்களையும், கிறித்துவ தேவாலயங்களையும் தகர்த்த இலங்கை அரசின் சிங்கள பௌத்த வெறியை, அந்நாட்டுச் சிங்கள மக்கள் தடுத்து நிறுத்தாமல் அவ்வெறியில் தீவிரம் காட்டிய இராசபக்சேயைத் தான் அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். பூண்டி மாதாகோவிலுக்கு வந்த சிங்கள பக்தர்களை திருப்பி அனுப்புவதைக் கண்டிக்கும் தினமணி இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இங்கு வரும் சிங்களர்களை ஈழத்தமிழர்களை இலங்கை அரசுத் தாக்கும் என்று தினமணி ஏடு கூறுகிறது. இதுவரை, இலட்சக்கணக்கில் ஈழத்தமிழர்களைக் கொன்றும் இப்பொழுது தமிழர்களின் சொந்த ஊர்களையும், வீடுகளையும் சிங்களப் படையினரும், சிங்களவர்களும் ஆக்கிரமித்துக் கைப்பற்றி வருவதும் தமிழகம் சிங்களர்களுக்கு பதிலடி கொடுக்காத காலங்களில் நடந்தவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள அரசியல் உறவு ஈழத்தமிழர்களை அழிக்கத்தான் பயன்படுகிறதே தவிர, பாதுகாக்கப் பயன்படவில்லை என்பதை இன்னுமா தினமணி புரிந்து கொள்ளவில்லை?

பாலஸ்தீனர்களின் தாயகத்தைப் பறித்துக் கொண்டு, யூத மேலாதிக்கம் செலுத்திய இஸ்ரேலுக்கு எதிராகவும், இதே போன்ற தடைகள் விதிக்கப்பட்டன. அதனுடனும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் தூதரக உறவு வைத்துக் கொள்ளவில்லை. தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, இஸ்ரேல் ஆகிய நாடுகளில் நடந்த கொடுமைகளை விட, பன்மடங்கு அதிகமாக இலங்கை அரசு ஈழத்தமிழர்களுக்கு எதிராக இனஒதுக்கல் கொள்கையை கடைபிடித்து வருகின்றது. அவர்களின் தாயகத்தை ஆக்கிரமிப்பதுடன் இலட்சக்கணக்கில் தமிழர்களை ஈழத்தில் இனப்படுகொலை செய்துள்ளது.

மனித உரிமையிலும், தேசிய இனங்களின் தன்னுரிமையிலும் உண்மையான அக்கறை கொண்டிருந்தால் இந்தியாவும், உலக நாடுகளும் இலங்கையுடன் உள்ள தூதரக உறவை நீக்கி, அதற்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிப்பதுடன் சிங்கள இராணுவ வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பது போன்ற கொடிய செயல்களையும் செய்யாமல் இருக்க வேண்டும். மேலே சுட்டிக்காட்டிய நாடுகளிடம் கடைபிடித்த, அதே தடைகளை விதித்து விளையாட்டு வீரர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், கலைத்துறையினர் ஆகியோரின் போக்குவரத்தையும் தடை செய்திருக்க வேண்டும்.

ஈழத்தமிழர்களை இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்த சிங்கள இராணுவத்திற்கு இந்திய அரசு, இராணுவ உதவிகளையும், அந்நாட்டுக்கு நிதி உதவி மற்றும் அரசியல் உதவிகளையும் செய்தது. சிங்கள இராணுவம் ஈழத்தமிழர்களைக் கொன்றது மட்டுமின்றி, தமிழகத்தின் மீனவத் தமிழர்களையும் சற்றொப்ப 600க்கும் மேற்பட்டோரைக் கொன்றுள்ளது. இந்த படையாட்களுக்கு, தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் மீண்டும் மீண்டும் பயிற்சி அளிப்பது, மீண்டும் ஈழத்தமிழர்களையும் தமிழக மீனவர்களையும் படுகொலை செய்வதற்கான பயிற்சித் தவிர வேறு என்ன? இலங்கை அரசு எந்த நாட்டோடு போர் புரிய வேண்டிய தேவை இருக்கிறது?

இந்திய அரசு, தமிழினப் பகை அரசாக தொடர்ந்து செயல்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டுத் தமிழர்கள் தங்கள் இனத்தைப் பாதுகாத்துக் கொள்ளப் போராட வேண்டியத் தேவை இருக்கிறது. தமிழக சட்டப்பேரவையில் இலங்கை அரசுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட ஒருமித்தத் தீர்மானம் தமிழக மக்களின் நிலைபாட்டை வெளிப்படுத்தும் தீர்மானமாகும். தமிழக அரசின் அத்தீர்மானத்தை இந்திய அரசு செயல்படுத்த முன்வந்திருக்க வேண்டும். இந்திய அரசு சிங்கள இன ஆதரவுக் கொள்கையும், தமிழின எதிர்ப்புக் கொள்கையும் கடைபிடிக்கும் போது, தமிழக அரசின் தீர்மானத்தையே இறையாண்மையுள்ள ஓர் அரசின் தீர்மானம் போல் செயல்படுத்த வேண்டியப் பொறுப்பு தமிழக மக்களுக்கு இருக்கிறது.

கருப்பின மக்களுக்கு சம உரிமை வழங்காத தென்னாப்பிரிக்காவுடன் இந்தியாவுக்கு தூதரக உறவு இல்லாத போது, தமிழக ஆன்மீகச் சொற்பொழிவாளர் பித்துக்குளி முருகதாஸ் அவர்கள், தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் அழைப்பின் பேரில் அங்கு ஆன்மீகச் சொற்பொழிவிற்குப் போனார். அவர் மீது இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. விசாரணையும் அவரிடம் நடத்தியது. அதே போல், இஸ்ரேல் நாட்டிலிருந்து எந்த விஞ்ஞானிகளும் இந்தியாவுக்கு வரக்கூடாது என தடை விதித்தது இந்திய அரசு. பாலஸ்தீன விடுதலை அமைப்புக்கும்(PLO), இஸ்ரேல் அரசுக்கும் இடையே அமெரிக்காவின் முன்முயற்சியில் ஓர் சமரச உடன்படிக்கை ஏற்பட்ட பிறகு தான், இஸ்ரேலுடன் இந்தியா தூதரக உறவு கொண்டது.

இவ்வாறான அரசியல் அணுகுமுறைகள்(இராசதந்திர நடவடிக்கைகள்), தமிழ் இனத்திற்கு எதிராகச் செயல்படும், தமிழர்களை இனப்படுகொலை செய்யும் சிங்களப் பேரினவாத அரசுக்கு எதிராகக் கடைபிடிக்க வேண்டியத் தேவை இருக்கிறது. அதைத்தான் தமிழ்நாட்டுத் தமிழர்கள் செய்கிறார்கள். சட்டப்படியான இராசதந்திரம் (De jure diplomacy) இல்லாத போது, செயல்முறைப்படியான இராசதந்திரம்(De facto diplomacy) இருந்து தானே ஆக வேண்டும்?

உயிரைப் பாதுகாக்க மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு வந்த தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் தாயான, 80 அகவை மூதாட்டி பார்வதியம்மாள் அவர்களை சென்னை விமான நிலையத்தில் கீழே இறங்க விடாமல் வந்த விமானத்தில் திருப்பி அனுப்பிய தமிழினப் பகை அரசான இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு, துணை நின்ற அன்றைய முதல்வர் கருணாநிதி இன்று சிங்கள விளையாட்டு வீரர்களை விளையாட தமிழ்நாட்டில் அனுமதிக்க வேண்டும் என்று கூறுவதில் காட்டிக் கொடுக்கும் கங்காணித் தனம் தான் இருக்கிறதே ஒழிய, அரசியல் நேர்மை கிஞ்சித்தும் இல்லை.

கடந்த கால உலக அனுபவங்களை கவனத்தில் கொண்டு, இந்தியாவின் நடவடிக்கைகளை கவனத்தில் கொண்டு, ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்யும் பேரினவாத சிங்கள நாட்டிலிருந்து வரும் சிங்களர்களை திருப்பி அனுப்பும் போராட்டத்தை தமிழகத் தமிழர்கள் முழு வேகத்துடனும் வருங்காலத்தில் நடத்த வேண்டுமென தமிழக மக்களை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,
பெ.மணியரசன்,
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

சென்னை, 04.09.2012.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT