உடனடிச்செய்திகள்

Sunday, August 9, 2015

தமிழ்நாடு அரசே, மதுஒழிப்புப் போராளி சசிபெருமாள் மரணம் குறித்து உண்மை அறிய நீதி விசாரணைக்கு ஆணையிடு!


தமிழ்நாடு அரசே, மதுஒழிப்புப் போராளி சசிபெருமாள் மரணம் குறித்து உண்மை அறிய
நீதி விசாரணைக்கு ஆணையிடு! 

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்!

“தமிழ்நாடு அரசே! உடனடியாக மதுவிலக்கை செயல்படுத்து! மதுஒழிப்புப் போராளிகள் மீதான அடக்குமுறையைக் கைவிடு!” எனத் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், சென்னை இயக்கத் தலைமையகத்தில், இன்று (09.08.2015) காலை முதல் மாலை வரை நடைபெற்றது. கூட்டத்திற்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையேற்றார். பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் குழ. பால்ராசு, பழ. இராசேந்திரன், நா. வைகறை, அ. ஆனந்தன், கோ. மாரிமுத்து, க. முருகன், ரெ. இராசு, கா. விடுதலைச்சுடர், க. அருணபாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், அண்மையில் மறைவுற்ற தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரா. தமிழ்ச்செல்வன், ‘சுகன்’ ஆசிரியர் திரு. சவுந்தர சுகன், இசையமைப்பாளர் திரு. எம்.எஸ். விசுவநாதன், தமிழறிஞர் மா.செ. தமிழ்மணி, முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் அப்துல் கலாம், மதுஒழிப்புப் போராளி ஈகி சசிபெருமாள் ஆகியோர்க்கு ஒருநிமிடம் அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. தமிழ்நாடு அரசே! முழு மதுவில்கை செயல்படுத்து! மது ஒழிப்புப் போராளிகள் மீதான அடக்குமுறையைக் கைவிடு!

தமிழ்நாட்டு மக்களைச் சீரழிக்கும் மதுவை எதிர்த்து, தமிழ்நாடெங்கும் மக்கள் போராட்டங்கள் கிளர்ந்தெழுந்துள்ளன. மதுஒழிப்புப் போராட்டக் களத்திலேயே உயிரீகம் செய்த, ஈகி சசிபெருமாள் அவர்களின் வீரமரணம், இப்போராட்டங்களை மேலும் வீரியப்படுத்தி, மாணவர்களை மது ஒழிப்புப் போராட்டக் களத்திற்கு அழைத்து வந்துள்ளது.

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, இந்த சூழலிலாவது, தமிழ்நாடு அரசு உடனடியாக முழுமையான மதுவிலக்கை செயல்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கம் கோருகிறது.

மது விற்பனையால் ஏற்படும் வருமான இழப்பை, தமிழ்நாட்டிலிருந்து இந்திய அரசு கொண்டு செல்லும் ஏறத்தாழ 1 இலட்சம் கோடி வரித்தொகையிலிருந்து ஒரு பகுதியைக் கேட்டுப் பெற்று ஈடுசெய்ய தமிழ்நாடு அரசு முன் வர வேண்டுமென்றும், தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்துகிறது.

2. தமிழ்நாடு அரசே - மது ஒழிப்புப் போராளிகள் மீதான அடக்குமுறையைக் கைவிடு!
மது ஒழிப்புப் போராட்டங்களை ஒடுக்க வேண்டுமென, மாணவர்களையும் பொது மக்களையும் தாக்கி வெறியாட்டம் போட்ட, தமிழ்நாடு அரசுக் காவல்துறையின் அடக்குமுறைகயை தமிழ்த் தேசியப் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
குமரி மாவட்டம் – உண்ணாமலைக் கடையில் நடைபெற்ற மதுக்கடை எதிர்ப்புப் போராட்டத்தில், காவல்துறையின் திட்டமிட்ட அலட்சியப் போக்கால் உயிரிழந்த ஈகி சசிபெருமாள் அவர்களின் மரணம் குறித்து, உடனடியாக நீதி விசாரணை நடத்த வேண்டும்.

மதுக்கடை முற்றுகைப் போராட்டத்தில் காவல்துறையினரின் கொடுமையான தடியடிக்கு இலக்காகி, சிறையிலும் அடைக்கப்பட்டுள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், ஆகத்து 4 – முழு அடைப்பை முன்னிட்டு ‘முன்னெச்சரிக்கை’ நடவடிக்கை எனக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் வெ. இளங்கோவன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இவர்கள் மீதும், பிணையில் வெளிவந்துள்ள போராளிகள் மீதும் உள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.

மதுவிலக்கு கோரி, சென்னைப் பல்கலைக்கழகத்தில் காலவரையற்ற உண்ணாப் போராட்டம் நடத்திய 3 மாணவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையையும், போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய “குற்ற”த்திற்காக அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பேராசிரியர் இராமு. மணிவண்ணன் மீதான நடவடிக்கையையும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. மாணவர்கள் மற்றும் பேராசிரியர் இராமு. மணிவண்ணன் மீதான நடவடிக்கைகளை, பல்கலைக் கழக நிர்வாகம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

3. தமிழ்வழிக் கல்வியை அழிக்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து ஆகத்து 17, 18, 19 நாட்களில் நடைபெறும் சென்னை தலைமைச் செயலக மறியல் போராட்டத்தில் திரளானோர் பங்கேற்று வெற்றி பெறச் செய்ய வேண்டும்

தொடக்கப் பள்ளியிலிருந்து மேல்நிலைப் பள்ளி வரை, அரசு பள்ளிகளில் அறிவியல், கணிதம், வரலாறு, வணிகம் முதலிய பாடங்களை ஆங்கில மொழியில் கற்பிக்கும் பிரிவுகளை (இங்கிலீசு மீடியம்) மிகத் தீவிரமாகத் தமிழ்நாடு அரசு உருவாக்கி வருகிறது. அயல்மொழியான ஆங்கிலத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் மனப்பாடம் செய்து மதிப்பெண் வாங்கும் நிலை மாணவர்களுக்கு உள்ளது. இதனால் சொந்தச் சிந்தனை ஆற்றலும் ஆளுமையும் வளராமல் போகின்றன.

எனவே தமிழ்நாடு அரசு, அரசு பள்ளிகளில் இதுவரை தொடங்கப்பட்ட ஆங்கிலவழிப் பிரிவுகள் அனைத்தையும் நீக்கி - தமிழ்வழிப் பிரிவுகள் மட்டுமே இருக்குமாறு செய்ய வேண்டுமென வலியுறுத்தியும், தமிழ்வழியில் படித்தோர்க்கு வேலை வாய்ப்பிலும் உயர்கல்விச் சேர்க்கையிலும் 80 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிச் சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் சார்பில் 2015 ஆகத்து 17, 18, 19 ஆகிய நாட்களில் சென்னை தலைமைச் செயலகம் முன் தொடர் மறியல் போராட்டம் நடைபெறுகின்றது.

இப்போராட்டத்தில், தமிழ்த் தேசியப் பேரியக்கம் பங்கேற்பதோடு, தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தில் உறுப்பு வகிக்கும் பல்வேறு அரசியல் கட்சியினரும் மக்கள் இயக்கத்தினரும், தமிழ் மக்களும், திரளாகப் பங்கேற்று, போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறது.

4. செப்டம்பர் 28 அன்று, நாகை மாவட்டம் – நரிமணம் - பனங்குடியில், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் நடைபெறும் இந்திய அரசு எரிபொருள் மற்றும் எரிவளி நிறுவன முற்றுகைப் போராட்டத்தில் பெருந்திரளானோர் பங்கேற்க வேண்டும்!

காவிரியில் தமிழ்நாட்டிற்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரை, சட்ட விரோதமாக மறுத்து வரும் கர்நாடக அரசு, வெள்ளமாக வரும் மிகை நீரையும் தடுக்கும் வகையில் மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது. மேலும், காவிரியிலும், தென்பெண்ணை ஆற்றிலும் கழிவு நீரைக் கொட்டும் அடாவடித்தனத்திலும் இறங்கியுள்ளது. இவை அனைத்தும் தெரிந்தும், இந்திய அரசு, கர்நாடகத்தின் சட்ட விரோதச் செயலுக்குத் துணையாக நின்று வேடிக்கை பார்க்கிறது.

“காவிரி உரிமையைப் பெற்றுத் தராத இந்திய அரசே, தமிழ்நாட்டு நரிமணம் பெட்ரோலை எடுக்காதே!” என்ற முழக்கத்தை முன்வைத்து, வரும் செப்டம்பர் 28 அன்று, நாகை மாவட்டம் நரிமணம் - பனங்குடி ஆகிய பகுதிகளில் இயங்கும் இந்திய அரசு எரிபொருள் - எரிவளி நிறுவனங்களுக்குள் ஆட்கள் - வாகனங்கள் எதுவும் உள்ளே சென்று வரமுடியாத அளவிற்கு, அப்பகுதியை சுற்றி பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை ஒன்று திரட்டி மிக பெரிய அளவில் முழுநாள் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் எனக் காவிரி உரிமை மீட்புக் குழு அறிவித்துள்ளது.





இப்போராட்டத்தில், தமிழ்த் தேசியப் பேரியக்கம், உறுதியுடன் பங்கேற்கிறது. போராட்டத்தை விளக்கி காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களில் பரப்புரைக் கூட்டங்கள் நடைபெறும். காவிரி உரிமை மீட்புக் குழுவில் உறுப்பு வகிக்கும் உழவர் அமைப்புகளும், அரசியல் இயக்கங்களும் இப்போராட்டத்தில் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுமெனத் தமிழ்த் தேசியப் பேரியக்கம் வேண்டுகோள் விடுக்கிறது.

“உலக வர்த்தகக் கழக அமைப்பே எங்கள் கல்வியை விட்டு வெளியேறு!” சென்னையில் கல்வி உரிமைப் பேரணி


“உலவக வர்த்தகக் கழக அமைப்பே எங்கள் கல்வியை விட்டு வெளியேறு!” சென்னையில் கல்வி உரிமைப் பேரணி




கல்வியை வணிகப் பொருளாக மட்டுமின்றி, உலகச் சந்தையில் பன்னாட்டு நிதி மூலதனத்தின் கட்டுப்பாட்டில் கல்வியை ஒரு விற்பனைப் பொருளாகவும் மாற்ற, இந்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகின்றது.

உலக வணிகக் கழகம் (WTO) அமைப்பின் சேவை வணிகத்திற்கான பொது ஒப்பந்தத்தில்(GATS) கல்வியையும் வணிகப் பொருளாக்கி, அதை இறுதி செய்யும் வகையில், இவ் ஆண்டின்(2015) இறுதியில் திசம்பர் மாதம் கென்யா தலைநகர் நைரோபில், உலக வணிகக் கழகத்தின் 10ஆவது மாநாடு நடைபெறவுள்ளது.

அதில் கலந்து கொண்டு, கல்வியை வணிகப் பொருளாக அறிவிக்கும் உள்நோக்கத்தோடு செயல்பட்டு வரும் இந்திய அரசைக் கண்டித்தும், கல்வியை வணிகப்பொருளாக்க விருப்பம் தெரிவித்த இந்திய அரசு அறிக்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், இன்று(09.08.2015), சென்னையில் “கல்வி உரிமை காக்க மக்கள் பேரணி” நடைபெற்றது.

பொதுப்பள்ளிக்கான மாநில மேடை சார்பில், சென்னை எழும்பூர் இராசரத்தினம் விளையாட்டுத் திடலிலிருந்து தொடங்கி நடைபெற்ற இந்த பேரணியை, அமைப்பின் பொதுச் செயலாளர் தோழர் பு.பா. பிரின்ஸ் கசேந்திரபாபு ஒருங்கிணைத்தார்.

மேனாள் துணைவேந்தர்கள் முனைவர் ச. முத்துக்குமரன், முனைவர் வே. வசந்திதேவி, மேனாள் இந்திய ஆட்சிப் பணி திரு. எம்.ஜி. தேவசகாயம், கல்வியாளர் முனைவர் ச.சீ. இராசகோபாலன், தமிழகத் தமிழாசிரியக் கழக மேனாள் தலைவர் புலவர் கி.த. பச்சையப்பனார், பொதுப்பள்ளிக்கான மாநில மேடைத் தலைவர் முனைவர் பி. இரத்தினசபாபதி, தமிழ்நாடு மாணவர் - பெற்றோர் நலச்சங்கத் தலைவர் திரு. செ. அருமைநாதன், கல்வி உரிமைக்கான அகில இந்தியக் கூட்டமைப்பு தேசிய செயற்குழு உறுப்பினர் திரு. ஐ.பி.கனகசுந்தரம், உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும், தோழர்களும் இதில் கலந்து கொண்டனர்.

தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், பொதுக்குழு உறுப்பினர் தோழர் வி. கோவேந்தன் பேரணியில கலந்து கொண்டு உரையாற்றினார். பொதுக்குழு உறுப்பினர் பழ.நல். ஆறுமுகம் தலைமையில், தென்சென்னை செயலாளர் தோழர் இரா. இளங்குமரன், வடசென்னை செயலாளர் தோழர் இரா. செந்தில், தென்சென்னை தமிழக இளைஞர் முன்னணி செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், தோழர்கள் நல்லசிவம், சுரேசு, ஜீவா உள்ளிட்ட த.தே.பே. தோழர்கள் பேரணியில் பங்கேற்றனர். நிறைவில், தோழர் உதயம் நன்றி கூறினார்.

இசுலாமிய மாணவர் அமைப்பு, முற்போக்கு மாணவர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.

“உலக வர்த்தகக் கழக அமைப்பே
எங்கள் கல்வியை விட்டு வெளியேறு!”

Friday, August 7, 2015

“தமிழினத்தின் புகழ்மிக்கப் பிரிதிநிதி ஈகி சசிபெருமாள் அவர்களுக்கு வீரவணக்கம்!” - தோழர் பெ.மணியரசன் இரங்கலுரை!

“தமிழினத்தின் புகழ்மிக்கப் பிரிதிநிதி ஈகி சசிபெருமாள் அவர்களுக்கு வீரவணக்கம்!”

மதுஒழிப்புப் போராளி சசிபெருமாள் அவர்களின் உடலடக்கத்தின் போது, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் இரங்கலுரை!
மதுஒழிப்புப் போராட்டக் களத்தில் உயிரீகம் செய்த ஐயா. சசிபெருமாள் அவர்களின், உடல் இன்று (07.08.2015) மாலை, சேலம் இளம்பிள்ளை அருகிலுள்ள அவரது சொந்த ஊரான இ.மேட்டுக்காட்டில், அவரது இல்லத்தின் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக, அவரது உடல் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையிலிருந்து இன்று மதியம் சேலம் கொண்டு வரப்பட்டது. சேலம் மாநகரில் அவரது உடல் பேரணியாகக் கொண்டு செல்ல, தமிழகக் காவல்துறையினர் கடும் கெடுபிடிகள் செய்தனர். உடல் நல்லடக்க நிகழ்வின் போது, பெருமளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

அங்கு நடைபெற்ற இறுதி வணக்கக் கூட்டத்தை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ ஒருங்கிணைத்தார். தி.மு.க. பொருளாளர் திரு. மு.க.ஸ்டாலின், காங்கிரசுத் தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல்.திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் திரு. தமிமுன் அன்சாரி, சி.பி.எம். செயலாளர் தோழர் ஜி.இராமகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் முத்தரசன், ம.தி.மு.க. பொருளாளர் டாக்டர் திரு. மாசிலாமணி, எஸ்.டி.பி.ஐ. பொதுச் செயலாளர் திரு. தெகலான் பாகவி, காந்தி பேரவைத் தலைவர் திரு. குமரி. ஆனந்தன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி – இயக்கங்களின் தலைவர்கள் இரங்கலுரையாற்றினர்.

தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், தலைவர் தோழர் பெ. மணியரசன், ஈகி சசிபெருமாள் அவர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர். இறுதி வணக்கக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

“மது ஒழிப்புப் போராளி ஐயா சசிபெருமாள் அவர்கள் நடத்திய மது ஒழிப்புப் போராட்டங்களின் போது, சென்னையில் அவரை நேரில் சந்தித்து, போராட்டத்திற்கு ஆதரவும் வாழ்த்தும் தெரிவித்திருக்கிறேன். ஆனால், இன்று அவருடைய மண்ணில் இந்த மேடைக்கு அருகில், வெறும் உடலாக அவரைப் பார்க்கும் போது, நெஞ்சம் பதைக்கிறது.

மது ஒழிப்புப் போராட்டத்தில், தன்னுயிரை ஈந்திருக்கிறார். தன்னுயிரை ஈந்திருக்கிறார் என்பதைவிட, அவர் தமிழக அரசால் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதே உண்மை!
மது ஒழிப்புப் போராட்டத்தில் வீரமரணம் அடைந்த ஐயா சசிபெருமாள் அவர்களுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழினத்தின் புகழ்மிக்கப் பிரதிநிதியாக சசிபெருமாள் வாழ்ந்திருக்கிறார்.

அவர் உயிரோடு ஓடியாடி மதுவிலக்கு போராட்டம் நடத்தியபோது, இலட்சக்கணக்கான நெஞ்சங்களில் மது எதிர்ப்புணர்வை ஊட்டினார். ஆனால், இந்த மரணத்தின் மூலம் கோடிக்கணக்கான உள்ளங்களில் மது எதிர்ப்பு உணர்ச்சியை - முழு மதுவிலக்கு தமிழ்நாட்டில் வேண்டும் என்ற ஆவேசத்தை ஏற்படுத்தியிருக்கிறார். மரணத்திற்குப் பிறகு மகத்தான புது வாழ்வை ஐயா சசிபெருமாள் பெற்றிருக்கிறார்.

தமிழ்நாடு அரசு, முழு மதுவிலக்கை உடனடியாக அறிவிக்க வலியுறுத்தி, முன்னிலும் கூடுதல் வேகத்தோடு நாம் போராடுவோம் என்று ஈகி சசிபெருமாள் மீது ஆணையிட்டு உறுதியேற்போம்!

அரசாங்கத்தின் மதுக்கொள்கையை எதிர்த்துப் போராடும் அதேவேளை, ஐயா சசிபெருமாள் மீது ஆணையிட்டு குடிப்பழக்கம் உள்ளவர்கள் தங்களுடைய குடிப்பழக்கத்தை விட்டுவிடுகிறோம் என்று உறுதியேற்க வேண்டும்.

சசிபெருமாள் அவர்கள் மீது ஆணையிட்டு தனிநபர் ஒழுக்கம் - மது மறுப்பு போன்ற உயர் பண்புகளை நம்முடைய தமிழ் மக்கள் ஏற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மீண்டும், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஈகி சசிபெருமாள் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்திக் கொள்கிறேன்”.

இவ்வாறு தோழர் பெ.மணியரசன் பேசினார்.

ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் செலுத்த, அப்பகுதியில் நூற்றுக்கணக்கான பொது மக்களும், பல்வேறு அமைப்புத் தோழர்களும் திரண்டிருந்தனர்.

மது ஒழிப்புப் போராளி ஈகி சசிபெருமாள் அவர்களுக்கு வீரவணக்கம்!

Thursday, August 6, 2015

மதுவிலக்கு கோரி மாற்றுத் திறனாளிகளின் காலவரையற்ற உண்ணாப்போர் நான்காம் நாள்! தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்கள் ஆதரவு..!




மதுவிலக்கு கோரி மாற்றுத் திறனாளிகளின் காலவரையற்ற உண்ணாப்போர் நான்காம் நாள்!

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்கள் ஆதரவு..! 




தமிழ்நாட்டு மக்களை சீரழித்து வரும் மதுக்கடைகளை மூடக்கோரி தமிழகமெங்கும் நடைபெற்று வரும் மக்கள் போராட்டங்களின் ஒரு பகுதியாக, சென்னையில் கடந்த ஆகத்து 4 அன்று, தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உண்ணாப்போராட்டம் நடந்தது.

சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகில் காலை முதல் மாலை வரை, தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் திரு. தீபக் தலைமையில் தடைபெற்று வந்த அந்தப் போராட்டத்தை, காவல்துறையினர் சீர்குலைத்தனர்.

போராட்டம் நடக்குமிடத்திற்கு வந்த காவல்துறை உதவி ஆணையாளர் பீர்முகமது என்பவர் தலைமையிலான காவல்துறையினர், மாற்றுதிறனாளிகளை அடித்து உதைத்து இழுத்துச் சென்று அனைவரையும் கைது செய்தனர். இராயப்பேட்டையில் உள்ள சமூக நலக்கூடம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு, கழிப்பிட வசதி கூட செய்து தரப்படவில்லை.

இந்நிலையில் அவர்களுக்கு மாற்று மண்டபம் ஏற்படுத்தித் தருவதாக கூறி வாகனங்களில் ஏற்றி வந்த காவல்துறையினர், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகிலுள்ள பறக்கும் தொடர்வண்டிப் பாலத்தின் கீழ் இறக்கிவிட்டுச் சென்றுவிட்டனர்.

மாற்றுத் திறனாளிகளின் போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொண்ட காவல்துறையினரைக் கண்டித்தும், மதுவிலக்கு கோரியும், மாற்றுத் திறனாளிகள் அவ்விடத்திலேயே தங்கள் உண்ணாப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தின் மூன்றாம் நாளான நேற்று, 2 பெண் மாற்றுத் திறனாளிகள் மயக்கமடைந்ததைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, வெயில் - மழையைப் பொருட்படுத்தாது கொள்கை உறுதியுடன் களத்தில் நிற்கும் மாற்றுத் திறனாளிகளை, பல்வேறு அரசியல் கட்சியினரும் இயக்கங்களும் நேரில் சந்தித்து ஆதரவு நல்கி வருகின்றனர்.

போராட்டத்தின் நான்காம் நாளான இன்று (06.08.2015) காலை, தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரா. இளங்குமரன், தோழர்கள் பாலசுப்பிரமணியம், இரமேசு உள்ளிட்டோர் போராட்டம் நடத்தி வரும் மாற்றுத் திறனாளிகளை நேரில் சந்தித்து ஆதரவு நல்கினர்.

தமிழ்நாடு அரசு, மாற்றுத் திறனாளிகளைத் தாக்கியக் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் கோரிக்கையாக மட்டுமின்றி, தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையாகவும் உள்ள மதுவிலக்கை உடனடியாக செயல்படுத்த வேண்டும்!

Tuesday, August 4, 2015

சென்னையில் மதுவிலக்கு கோரி நடைபெற்ற போராட்டத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் கைது செய்தது தமிழக அரசு !

சென்னையில் மதுவிலக்கு கோரி நடைபெற்ற போராட்டத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் கைது செய்தது தமிழக அரசு !
மதுக்கடைகளை இழுத்து மூடக்கோரி தமிழகம் முழுவதும் இன்று 04.08.2015 முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

மது ஒழிப்பு போராளி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையிலும், முழு மதுவிலக்கை செயல்படுத்த வலியுறுத்தியும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வணிகர்கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் வணிக நிறுவனங்களை அடைத்து இன்று கடையடைப்பில் ஈடுபட்டுளனர்.
இந்நிலையில் சென்னை சூளைமேட்டில் மதுக்கடைகளை மூடக் கோரி அனைத்துக் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.

சென்னை நெல்சன் மாணிக்கம் சாலை வழியே பேரணியாக சென்ற தோழர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இதனால் காவல்துறையினருக்கும் , போராட்டத் தோழர்களுக்குமிடையே கடும் வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்தியா, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் உள்ளிட்டவர்களை காவல்துறைனர் கைது செய்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு மதுக்கடைகளை மூடக் கோரி முழக்கங்களை எழுப்பிய தோழர்களில் இருஇளைஞர்களை காவல்துறையினர் தாக்கிக் கைது செய்தனர். அப்பகுதி மதுபானக்கடை உடனே மூடப்பட்டது.

போராட்டத்தில் தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் அவர்கள் தலைமையில் தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் பழ.நல் ஆறுமுகம், தோழர் கோவேந்தன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக அரசே! தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை உடனடியாக செயல்படுத்து!

Sunday, August 2, 2015

கலிங்கப்பட்டியில் காவல்துறையினர் வன்முறை அ.இ.அ.தி.மு.க.ஆட்சி மக்களுடன் மோதும் மூர்க்கத்தனம். - பெ. மணியரசன் கண்டணம்


கலிங்கப்பட்டியில் காவல்துறையினர்  வன்முறை அ.இ.அ.தி.மு.க.ஆட்சி  மக்களுடன் மோதும் மூர்க்கத்தனம் தமிழ்த் தேசியப் பேரியக்கத்  தலைவர் பெ. மணியரசன் கண்டணம்

கலிங்கப்பட்டியில் மதுக்கடையை மூட வலியுறுத்திப் போராடிய மக்கள் மீது தடியடி நடத்தி, கண்ணீர்ப் புகைக்குண்டுகள் வெடித்த காவல்துறையின் வன்முறைச் செயலை, தமிழ்த் தேசியப்பேரியக்கத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.


மறுமலர்ச்சி தி.மு.கவின் பொதுச்செயலாளர் திரு வைகோ அவர்களின் அன்னையார் 90 அகவையைக் கடந்த நிலையில் நேற்று (01.08.2015) கலிங்கப்பட்டி மதுக்கடையை மூட வலியுறுத்தியும், தமிழ்நாடு முழுவதும் மதுவிலக்கைக் கொண்டுவரக் கோரிக்கை வைத்தும், அறவழியில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

மது ஒழிப்புப்போராளி சசிபெருமாள் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பொழுதே இன்னுயிர் ஈந்து (31.07.2015) ஈகியானபின் தமிழ்நாடெங்கும் மதுக்கடைகளை மூட வலியுறுத்தித் தன்னெழுச்சியாக மக்கள் போராடிக் கொண்டுள்ளனர். சேலத்தில் ஈகி சசிபெருமாள் மனைவி, மகன், மகள் உட்பட மதுவிலக்கு கோரி அறவழியில் முழக்கமிட்டவர்களை இன்று காலை தமிழ்நாடு அரசு கைது செய்தது.

இந்தச் சூழ்நிலையில், மக்கள் உணர்வுகளை மதித்து, அறவழியில் போராட்டம் நடத்தும் மக்களிடம் இணக்கமான அணுகுமுறையைக் கையாள்வதற்கு மாறாக செயலலிதா அரசு, தனது வலிமையை மக்களிடம் காட்டும் மூர்க்கத்தனமான அணுகுமுறையைக் கையாள்கிறது. அடுத்தடுத்து அ.இ.அ.தி.மு.க ஆட்சி என்னென்ன வன்முறையை ஏவிவிடுமோ என்ற பீதி மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

மக்கள் உணர்வை மதிக்கும் ஆட்சியாக செயலிலிதா ஆட்சி இருந்திருக்குமேயானால் இன்று கலிங்கப்பட்டி மதுக்கடையை வீம்புக்காக திறந்திருக்காது. சில நாட்கள் அந்தக் கடை மூடப்பட்டிருந்தால் அதனால் செயலலிதா அரசுக்கு எந்த அவமானமும் ஏற்பட்டிருக்காது. மதிப்புதான் ஏற்பட்டிருக்கும். மாறாக, இன்று அங்கு மதுகடையை மூட வலியுறுத்திப் போராடிய மக்கள் மீது காவல்துறையை ஏவிவிட்ட செயல், “கேடுவரும் பின்னே மதி கெட்டுவரும் முன்னே” என்ற பழமொழியைத்தான் நினைவூட்டுகிறது.

இப்பொழுது கலிங்கப்பட்டியில் வைகோ ,திருமாவளவன் போன்ற தலைவர்களையும், மக்களையும் கைது செய்ய முனைவது சிக்கலை மேலும் தீவிரமாக்கும்.

தமிழ்நாடு முதலமைச்சர் செயலலிதா அவர்கள் தம்முடைய அடுத்த கட்ட நடவடிக்களை நிதானமாகத் திட்டமிட்டு செயல்படுத்துவது நல்லது. தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைக் கணக்கில் கொண்டும் ஒழுக்கம், அறம், வாழ்க்கைப் பாதுகாப்பு ஆகியவற்றைச் சீர்குலைக்கும் மதுக்கடைகளைத் திறந்து வணிகம் செய்து ஆட்சி நடத்துவது சமூகத் தீங்கு என்பதை உணர்ந்தும் உடனடியாகத் தமிழ்நாடு அரசு முழு மதுவிலக்கை செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

முழு அடைப்பில் பங்கேற்பு

வருகின்ற 04.08.2015 அன்று மது ஒழிப்புப்போராளி சசிபெருமாள் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் முறையிலும், தமிழ்நாடு அரசு முழு மதுவிலக்கை செயல்படுத்தக் கோரியும் நடைபெறுகின்ற தமிழகம் தழுவிய முழு அடைப்பில் தமிழ்த் தேசியப் பேரியக்கமும் பங்கேற்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மதுவிலக்கு கோருகின்ற கட்சிகளும், அமைப்புகளும், இந்த முழு அடைப்பை வெற்றிபெறச் செய்வது கட்டாயக் கடமை என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னணம்,
பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT