உடனடிச்செய்திகள்

Tuesday, July 31, 2018

அசாமில் வெளியார் கணக்கெடுப்பு தமிழ்நாட்டிலும் வேண்டும்! தோழர் கி. வெங்கட்ராமன்.

அசாமில் வெளியார் கணக்கெடுப்பு தமிழ்நாட்டிலும் வேண்டும்! தோழர் கி. வெங்கட்ராமன்  பொதுச்செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
அசாமில் வெளியாரை அடையாளம் கண்டு வெளியேற்றும் நடவடிக்கைக்காக அணியப்படுத்தப்பட்ட “தேசிய குடிமக்கள் பதிவேடு” (National Rigister of Citizens) இறுதி வரைவு நேற்று (30.07.2018) வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த வரைவின்படி, ஏறத்தாழ 40 இலட்சம் பேர் “வெளியார்” என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் தவறு இருப்பதாகவோ, தவறாக விடுபட்டுள்ளதாகவோ கருதுபவர்கள் உரிய ஆவணங்களுடன் 2018 செப்டம்பர் 28-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா “சுதந்திரம்” அடைந்தபோது, 1948 சூலை 19 அன்றும், அதற்கு முன்பும் இந்தியாவில் இருந்தவர்கள் “இந்தியக் குடிமக்கள்” (Citizens of India) என வரையறுக்கப்பட்டு, 1951ஆம் ஆண்டு முதல் “தேசிய குடிமக்கள் பதிவேடு” வெளியிடப்பட்டது. 

ஆயினும், அசாமில் மண்ணின் மக்களான அசாமியர்களைவிட வெளி மாநிலத்தவர் மற்றும் வங்காளதேச மக்கள் குறிப்பாக வங்காளிகள் மிகை எண்ணிக்கையினராக மாறிவிடும் ஆபத்து நேர்ந்தபோது, அசாம் மாணவர்களின் வெளியார் எதிர்ப்புப் போராட்டம் எழுந்தது. 

அனைத்து அசாம் மாணவர்கள் சங்கம் முன்முயற்சியில், 1979ஆம் ஆண்டு தொடங்கிய இந்தப் போராட்டம் மிகப்பெரும் மக்கள் கிளர்ச்சியாக வளர்ந்தது. இந்திய அரசு படை கொண்டு தாக்கியும், இடைவிடாத அடக்குமுறைகளை ஏவியும்கூட அப்போராட்டத்தை ஒடுக்க முடியவில்லை. 

வேறு வழியின்றி, அன்றைய இராசீவ்காந்தி அரசாங்கம் போராடிய மாணவர் அமைப்பினருடன் 1985 ஆகத்து 15 அன்று உடன்பாடு கண்டது. இந்த “அசாம் உடன்பாடு” 1971 மார்ச் 24 – நள்ளிரவுக்குப் பிறகு அசாமுக்குள் குடியேறியோர் “வெளியார்” என வரையறுத்தது. 

இந்த “வெளியாரை” அடையாளம் காண அசாம் முழுவதும் 100 “வெளியார் தீர்ப்பாயங்கள்” (Foreigners Tribunal) நிறுவப்பட்டு, பணி தொடங்கப்பட்டது. ஆனால், விரைவிலேயே இந்திய அரசு அப்பணிகளை கிடப்பில் போட்டது. காரணம் – வங்காளிகள் காங்கிரசுக் கட்சிக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வாக்கு வங்கிகளாக இருந்தனர். 

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் ஆணையிட்டதன்பேரில் மார்ச் 2015இல் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இப்பணிகள் தொடர்ந்தன. பல்வேறு கால நீட்டிப்புகளுக்குப் பிறகு 2018 சூலை 30 – என்பதை இறுதிக் கெடுவாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இந்த இறுதிக் கெடு நாளான சூலை 30இல்தான், இந்த இறுதி வரைவு அளிக்கப்பட்டுள்ளது. 

“வெளியார்” என்று அடையாளம் காணப்பட்டவர்களில் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களை மட்டும் மோடி அரசும், அசாம் மாநில பா.ச.க. அரசும் “வெளியார்” என்ற பட்டியலிலிருந்து நீக்கிவிட்டு, அவர்களை “அசாமியர்களாக” சட்ட விரோதமாக அடையாளப்படுத்த முயல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இவ்வாறு நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உச்ச நீதிமன்றத்தின் கடமை! 

அதேநேரம், “வெளியார்” என அடையாளம் காணப்பட்டுள்ள 40 இலட்சம் பேரை அவர்களது சொந்தப் பகுதியான வங்காளதேசத்திற்கோ, மேற்கு வங்காளத்திற்கோ உரிய முறையில் அனுப்பி வைப்பது இந்திய அரசின் கடமையாகும்!

அசாம் ஒப்பந்தம் நடந்து, அதனை உடனே நிறைவேற்றாமல் 43 ஆண்டுகள் கடத்தியது இந்திய அரசின் குற்றம்! 40 ஆண்டுகளாக இருந்துவிட்டார்கள், இப்போது அவர்களை வெளியேற்றச் சொல்வது ஞாயமா என்று கேட்பது ஒட்டுமொத்த அசாமியருக்கு எதிரானது; அயலாருக்குத் துணை போவது! 

தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதி வரைவு 2018 இறுதியில் அணியப்படும்போது, அதில் அடையாளம் காணப்படும் “வெளியாரை” அசாமிலிருந்து வெளியேற்றி அவரவர் பகுதியில் குடியேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்வதில் எந்த காலத்தாமதமும் இன்றி இந்திய அரசு செயல்பட வேண்டும்! 

இதே வெளியார் சிக்கல், தமிழ்நாட்டையும் கடுமையாக பாதித்து வருவதை தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறோம். கடந்த 2011ஆம் ஆண்டு, மக்கள் தொகைக் கணக்கெடுப்பும், அதன் பிறகான நடப்புகளும் தமிழ்நாடு – அசாமைவிட மிகப்பெரும் வெளியார் ஆபத்தில் சிக்கியிருப்பதை எடுத்துக்காட்டுகிறது. (காண்க : தமிழர் கண்ணோட்டம் 2018 சூலை 1-15 ஆசிரியவுரை).

தமிழ்நாட்டில் வெளியார் குடியேற்றம் தொழில் வளர்ச்சியில் முன்னேறி வரும் திருவள்ளூர், காஞ்சி, கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் மிகையாக அதிகரித்து வருவதை பல்வேறு ஆவணங்களின் வழியாகத் தொடர்ந்து எடுத்துக்காட்டி வருகிறோம். 

எடுத்துக்காட்டாக, 2001ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி சென்னையில் 86,500 பேர் இந்தி மாநிலத்தவர் இருந்திருக்கிறார்கள். 2011 கணக்கில், இவர்களது மக்கள் தொகை 3,93,380 ஆக உயர்ந்திருக்கிறது. கோவையில், இந்திக்காரர்களின் எண்ணிக்கை 7,308லிருந்து 28,049 ஆகியிருக்கிறது. மதுரையில், 1766லிருந்து 9,443 ஆக உயர்ந்திருக்கிறது. வங்காளிகள் எண்ணிக்கையும் இவர்களைவிட உயர்ந்திருக்கிறது. 

இவ்வாறு தமிழ்நாட்டில், 2001-க்கும் 2011-க்கும் இடையில் வங்காளிகளின் எண்ணிக்கை 160 விழுக்காடும், இந்தி பேசுவோரின் எண்ணிக்கை 107 விழுக்காடும் உயர்ந்திருக்கிறது. 

இது தமிழர் தாயகத்தை கலப்பின மக்கள் வாழிடமாக மாற்றிவிடும்! தமிழர்களின் வேலை வாய்ப்பை – தொழில் வாய்ப்பை – மொழி வாய்ப்பைப் பறித்துவிடும்! தமிழ்நாட்டு அரசியலில் பா.ச.க.வும் அதற்கு அடுத்தநிலையில், பிற அனைத்திந்தியக் கட்சிகளும் கோலோச்சி தமிழையும், தமிழர்களையும் அவர்களுக்கான அரசியலையும் கீழ்ப்படுத்திவிடும்! 

எனவேதான், வெளி மாநிலத்தவர் தமிழ்நாட்டிற்குள் வருவதை வரம்பு கட்டும் வகையில், “உள் அனுமதிச் சீட்டு முறை” (Inner Line Permit System) கொண்டு வர வேண்டும் என்றும், மொழிவழி மாநிலமாக தமிழ்நாடு உருவான 1956 நவம்பர் 1–க்குப் பிறகு தமிழ்நாட்டிற்குள் வந்தோரை “வெளியார்” என வரையறுத்து, அவர்களது மக்கள் தொகைக் கணக்கெடுப்பை மேற்கொண்டு, அவ்வாறு “வெளியார்” என்று அடையாளப்படுத்துவோரை படிப்படியாக வெளியேற்ற சட்டம் இயற்ற வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம். 

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Monday, July 16, 2018

1991இல் பேசியதற்காக தோழர் பெ. மணியரசன் மீது இப்பொழுது பிடி வாரண்ட்! சென்னை உயர் நீதிமன்றம் முன் பிணை!

1991இல் பேசியதற்காக தோழர் பெ. மணியரசன் மீது இப்பொழுது பிடி வாரண்ட்! சென்னை உயர் நீதிமன்றம் முன் பிணை!
1991ஆம் ஆண்டு சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசியதற்காக பிரிவினைத் தடைச் சட்டத்தின் கீழ் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்கள் மீது வழக்கும், அதையொட்டி இப்போது பிடிவாரண்ட்டும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போடப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அவ்வழக்கில் முன்பிணை பெற்று, இன்று சைதாப்பேட்டை பதினோராவது நீதிமன்றத்தில் தோழர் பெ.ம. நேர் நின்றார்.

தமிழீழ விடுதலைக்காக சொட்டு நீரும் அருந்தாமல் உண்ணாப் போராட்டம் நடத்தி உயிரீகம் செய்த விடுதலைப்புலிப் போராளி திலீபனின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி, 29.10.1991 அன்று, சென்னை தியாகராயர் நகர் வெங்கடேசுவரா திருமண அரங்கில், தோழர் தியாகு தலைமையிலான “திலீபன் மன்றம்” சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில், தோழர் பெ. மணியரசன் அவர்கள் “தேசிய இனப் போராட்டங்களும், ஈழ விடுதலையும்” என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார்.

அக்கூட்டத்தில் பேசிய தோழர் பெ. மணியரசன் அவர்கள், தமிழீழ விடுதலையை வலியுறுத்தியும், தமிழர்க்குத் தனி நாடு வேண்டுமென்றும் பேசி பிரிவினையைத் தூண்டியதாக, அக்கூட்டம் நடைபெற்ற நான்காண்டுகள் கழித்து 1994இல் 28.04.1994 அன்று, சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் 1967-இன் பிரிவு 13இன்கீழ் சென்னை நடுவண் குற்றப்பிரிவுக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

பல்லாண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கூட்டத்திற்கு, மிகத் தாமதமாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவ்வழக்கு குறித்த தகவலையும் தோழர் பெ. மணியரசன் அவர்களுக்கு முறைப்படி தெரிவிக்காமல் காலம் கடத்தி வந்தனர்.

தொடர்ந்து பல போராட்டங்கள், பொது நிகழ்வுகள் மட்டுமின்றி, அவ்வப்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையிலும் கூட, தோழர் பெ. மணியரசன் அவர்களிடம், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள இவ்வழக்கில் நேர் நிற்க வேண்டுமென்ற அழைப்பாணை எதையும் தோழர் பெ.ம. அவர்களிடம் காவல்துறையினர் வழங்கவில்லை. இந்நிலையில், திடீரென இவ்வழக்கில் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து, கடந்த 22.06.2018 அன்று சென்னை உயர் நீதிமன்றம் தோழர் பெ. மணியரசன் அவர்களுக்கு இவ்வழக்கில் முன் பிணை வழங்கியது. தொடர்ந்து ஏழு நாளைக்கு, சைதை நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டுமென்றும் நிபந்தனை விதித்து ஆணையிட்டுள்ளது. இதனையடுத்து, இன்று (16.07.2018) காலை தோழர் பெ. மணியரசன் இவ்வழக்கில் நேர் நின்று பிணை பெற்றார்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Thursday, July 12, 2018

காவிரி ஆணையமும் ஒழுங்காற்றுக் குழுவும் செயலற்றுப் போனது ஏன்? காவிரி உரிமை மீட்புக் குழு கேள்வி!

காவிரி ஆணையமும் ஒழுங்காற்றுக் குழுவும் செயலற்றுப் போனது ஏன்? காவிரி உரிமை மீட்புக் குழு கேள்வி!
காவிரி உரிமை மீட்புக் குழுக் கூட்டம் இன்று (12.07.2018) காலை தஞ்சையில் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தலைமையில் நடந்தது. தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. அய்யனாபுரம் சி. முருகேசன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் திரு. த. மணிமொழியன், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், இந்திய சனநாயகக் கட்சி மாவட்டத் தலைவர் திரு. ச. சிமியோன் சேவியர்ராசு, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி உழவர் அமைப்புத் தலைவர் திரு. தங்கராசு, மீத்தேன் எதிர்ப்பு முன்னனித் தலைவர் பொறியாளர் கோ. திருநாவுக்கரசு, சமவெளி விவசாயிகள் சங்கத் தலைவர் பொறியாளர் சு. பழனிராசன், தமிழ்த் தேசியப் பாதுகாப்புக் கழகத் தலைவர் வழக்கறிஞர் த.சு. கார்த்திகேயன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், தமிழ்த்தேச மக்கள் முன்னணி மாவட்டச் செயலாளர் தோழர் அருண்சோரி, தமிழர் தேசிய முன்னணி திருவாரூர் மாவட்டச் செயலாளர் திரு. கலைச்செல்வம், மனிதநேய சனநாயகக் கட்சி மாவட்டச் செயலாளர் திரு. அகமது கபீர், காவிரி உரிமை மீட்புக் குழு தோழர் தனசேகர், தமிழக விவசாய சங்க மாவட்டச் செயலாளர் திரு. செகதீசன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கலந்தாய்வுக்குப் பிறகு பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த 02.07.2018 அன்று கூடிய காவிரி மேலாண்மை ஆணையமும், 05.07.2018 அன்று கூடிய காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் இதுவரை செயலற்ற அமைப்புகளாக உள்ளன. உச்ச நீதிமன்றம் இறுதி செய்து அளித்த தீர்ப்பின்படி கர்நாடகத்தின் 4 அணைகள், தமிழ்நாட்டின் 3 அணைகள், கேரளாவின் ஓர் அணை ஆகியவற்றில் தண்ணீரைத் திறந்து மூட ஆணையிடும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவுக்கும்தான் இருக்கிறது. ஆனால் கடந்த சூன் 1ஆம் நாள் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் இதுவரை அந்தப் பணியைச் செய்யவில்லை!

சாகுபடிக்குத் தண்ணீர் திறந்து விட வேண்டிய சூன், சூலை மாதங்களில் இந்த எட்டு அணைகளையும் ஆணையமும் ஒழுங்காற்றுக் குழுவும் எட்டிக்கூட பார்க்கவில்லை. பெங்களூரில் தலைமையகம் வைத்து அங்கேயே தங்கிப் பணியாற்ற வேண்டிய காவிரி ஒழுங்காற்றுக் குழுத் தலைவரும், அதன் முழுநேர உறுப்பினர்களும் பெங்களூரில் தங்கவில்லை.

இவ்வாண்டு கர்நாடக அணைகளில் சூன் மாதம் முதல் தண்ணீர் அதிகமாக இருக்கிறது. சூன், சூலை மாதங்களுக்குரிய தண்ணீரை உரிய கால வரையறைப்படி ஆணையமும் ஒழுங்காற்றுக் குழுவும் திறந்து விட்டிருந்தால் தமிழ்நாட்டில் குறுவை சாகுபடி தொடங்கியிருக்க முடியும். 

கடந்த 05.07.2018 அன்று ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் நவீன்குமாரிடம், சூலை மாதத்திற்குத் திறந்துவிட வேண்டிய 31.25 ஆ.மி.க. தண்ணீரை கர்நாடகம் திறந்து விடுமா என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, “பருவமழை நன்கு பெய்கிறது” என்று மட்டும் கூறிவிட்டு எழுந்து சென்று விட்டார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி அமர்த்த வேண்டிய முழு நேரப்பணி அதிகாரிகளை நியமிக்காமல் வேறொரு வேலையில் முழுநேரமாக உள்ளவர்களை கூடுதல் பணி செய்வோராக ஆணையத்திற்கும் ஒழுங்காற்றுக் குழுவிற்கும் இந்திய அரசு அமர்த்தியுள்ளது. நரேந்திர மோடி அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பதற்காக இவ்விரு அமைப்புகளையும் முடக்கி வைத்திருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. 

மோடி அரசின் இந்த இனப்பாகுபாட்டு அணுகுமுறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்துமாறு வலியுறுத்த வேண்டிய எடப்பாடி அரசு, காவிரி உரிமையை மீட்டு விட்டதாகப் போலி வெற்றி விழாக்களை நடத்தித் தமிழர்களை ஏமாற்றுகிறது; இனத்துரோகம் செய்கிறது. 

வழக்கத்தைவிட அதிகமாகப் பருவமழை பெய்து, கர்நாடக அணைகள் உடைந்து விடும் அபாயம் ஏற்பட்டதால் அந்த மிகை வெள்ள நீரைத் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட்டுள்ளது கர்நாடக அரசு. வெள்ள அபாய காலத்தில் அணைகளை நேரடியாகப் பார்வையிட்டு மிகை நீரைத் திறந்துவிட ஆணை இட வேண்டிய ஆணையமும் ஒழுங்காற்றுக் குழுவும் கர்நாடகம் வராதது ஏன்? ஆணையமும் ஒழுங்காற்றுக் குழுவும் கர்நாடக அரசிடம் தனது அதிகாரத்தைத் தாரை வார்த்து விட்டனவா?

கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் ஆவியாகப் போகும் நீரின் அளவு, நீர் இருப்பு, வருத்து, வெளியேற்றம் உள்ளிட்ட எல்லா புள்ளி விவரங்களையும் திரட்டித் தருமாறு, இந்த மாநிலங்களைக் கேட்டுக் கொண்டு 05.07.2018 அன்று கூட்டத்தில் படிவம் கொடுத்துள்ளது ஒழுங்காற்றுக் குழு. நிரப்பப்பட்ட படிவங்களை 16.07.2018க்குள் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. 

உண்மையில் இந்த விவரங்களை காவிரி ஒழுங்காற்றுக் குழுதான் தனது நேரடி ஆய்வில் திரட்ட வேண்டும். அதைச் செய்யாமல், ஒன்றுக்கொன்று முரண்பாடுள்ள மாநிலங்களை இந்த விவரங்களைத் தரச் சொன்னது சரியா? நீதியா? இதில் உண்மை விவரங்கள் வரும் என்பதற்கு என்ன உறுதி இருக்கிறது? 

அரசிதழில் வெளியிடப்பட்ட 1991 இடைக்காலத் தீர்ப்பு, 2007 இறுதித் தீர்ப்பு, அவ்வப்போது வந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் எதையும் இந்திய அரசு செயல்படுத்தியதில்லை. கர்நாடக அரசின் சட்டவிரோதச் செயல்களுக்கே தொடர்ந்து இந்திய ஆட்சியாளர்கள் துணை நின்றார்கள். 

இப்போது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் மூன்று நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற ஆயம், 18.05.2018 அன்று வழங்கிய காவிரி இறுதித் தீர்ப்பையும் இந்திய அரசும், கர்நாடக அரசும் செயல்படுத்தப் போவதில்லை என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. 

மிகை வெள்ளம் வரும் இந்தப் பருவத்தில் செயல்படாத மேலாண்மை ஆணையமும், ஒழுங்காற்றுக் குழுவும் பருவமழை குறையும் காலத்தில் செயல்படுமா என்ற வினா எழுகிறது. தமிழ்நாடு அரசு இப்போதுகூட செயல்படவில்லை என்றால் எப்போது செயல்படும்?

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery

Friday, July 6, 2018

காவிரி ஒழுங்காற்றுக் குழு சூலை மாதத் தண்ணீரைத் திறக்காதது ஏன்? தோழர் பெ. மணியரசன் கேள்வி!

காவிரி ஒழுங்காற்றுக் குழு சூலை மாதத் தண்ணீரைத் திறக்காதது ஏன்? காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் கேள்வி!
புதுதில்லியில் நேற்று (05.07.2018) கூடிய காவிரி ஒழுங்காற்றுக் குழு, சூலை மாதத்திற்குக் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டிய 31.25 ஆ.மி.க. (டி.எம்.சி.) தண்ணீரைத் திறந்து விட ஏற்பாடு எதுவும் செய்யாமல், புள்ளி விவரங்கள் தொடர்பாக நான்கு மாநிலங்களும் படிவம் நிரப்பச் சொல்லிவிட்டுக் கலைந்துள்ளது. இது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது!

கடந்த 02.07.2018 அன்று புதுதில்லியில் கூடிய காவிரி மேலாண்மை ஆணையம் சூலை மாதத்திற்குரிய 31.25 ஆ.மி.க. தண்ணீரைக் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டும் என்று அறிவித்ததே, அது என்னாயிற்று? வழக்கம்போல் இதுவும் ஏட்டுச் சுரைக்காய் தானா?

கர்நாடகத்தில் வழக்கத்தைவிட அதிகமாகப் பருவமழை பெய்து, அம்மாநில அணைகளில் சராசரியாக 90 விழுக்காட்டிற்கு மேல் தண்ணீர் நிரம்பியுள்ள நிலையில்கூட, சூலை மாதத்திற்குரிய தண்ணீரைத் தமிழ்நாட்டிற்குத் திறக்காவிட்டால், காவிரி ஆணையம் – ஒழுங்காற்றுக் குழு என்பவையெல்லாம் பொம்மை அமைப்புகளா என்ற கேள்வி எழுகிறது.

நேற்று நடந்த ஒழுங்காற்றுக் குழுவில் நீர்த் தேக்கங்களில் தண்ணீர் ஆவியாகப் போவது பற்றியும், நீர் இருப்பு, வருகின்ற தண்ணீர், மழைப்பொழிவு போன்றவை பற்றியும் புள்ளி விவரங்களை நான்கு மாநிலங்களும் நிரப்பித் தருவதற்கான படிவங்களை கொடுத்ததுதான் அக்கூட்டத்தின் ஒரே பணியாகத் தெரிகிறது.

இப்படிவங்களை சூலை 16க்குள் நான்கு மாநிலங்களும் ஒழுங்காற்றுக் குழுவுக்குத் தர வேண்டும் என்றும், அதன் அடுத்த கூட்டம் சூலை 19இல் நடக்கும் என்றும் அதன் தலைவர் நவீன் குமார் தெரிவித்துள்ளார். அவரிடம் செய்தியாளர் ஒருவர் சூலை மாதத்திற்குரிய தண்ணீர் திறந்து விடுவது பற்றி என்ன ஆணை பிறப்பித்துள்ளீர்கள் எனக் கேட்டதற்கு, “பருவமழை நன்கு பெய்து கொண்டிருக்கிறது” என்று மட்டும் விடையாகக் கூறினார்.

சூலை மாதத்திற்குரிய தண்ணீரைக் கர்நாடகம் திறந்துவிட்டால் இவ்வாண்டு குறுவை சாகுபடி செய்ய முடியும்!

காவிரியை மீட்டு விட்டதாக “வெற்றி” விழா கொண்டாடி வரும் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த ஆணைப்படி கூடக் கர்நாடகத்திலிருந்து தண்ணீர் பெற அக்கறை காட்டவில்லை என்பது வேதனை அளிக்கிறது.

காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு மற்றும் அவ்வப்போது வெளியிட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் ஆகியவற்றைச் செயல்படுத்த மறுத்ததுபோல்தான் மூன்று நீதிபதிகள் ஆயம் வழங்கிய காவிரி இறுதித் தீர்ப்பையும், அதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் 02.07.2018 அன்று வெளியிட்ட ஆணையையும் செயல்படுத்த இந்திய அரசு மறுக்கிறதா என்ற ஐயம் வலுவாக எழுகிறது.

நேற்று (06.07.2018) கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, கர்நாடக சட்டப்பேரவையில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் காவிரியின் குறுக்கே மேக்கேத்தாட்டில் அணை கட்டுவோம் என்று உறுதியளித்துள்ளார். அத்துடன், கன்னட அமைப்புகள் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட்டால், முழு அடைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துவோம் என அறிவித்துள்ளன. இவை அனைத்தும் கர்நாடகத்திற்கு இந்திய அரசு கொடுக்கும் துணிச்சலில்தான் உருவாகின்றன.

தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆணைப்படி உடனடியாக சூலை மாதத்திற்குரிய தண்ணீரைக் கர்நாடகத்திடமிருந்து பெற்றுத் தர வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery

தோழர் முகிலனைத் தனிமைச் சிறையில் அடைக்காதீர்! அடிப்படை வசதிகள் செய்து தருக! தமிழக சிறைத்துறை அமைச்சருக்கு... தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!

தோழர் முகிலனைத் தனிமைச் சிறையில் அடைக்காதீர்! அடிப்படை வசதிகள் செய்து தருக! தமிழக சிறைத்துறை அமைச்சருக்கு... தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!
சட்டவிரோத மணல் வணிகம் மற்றும் மணல் கொள்ளை ஆகியவற்றைத் தடுப்பதில் மக்கள் திரள் போராட்டங்கள் நடத்தி வருபவர் தோழர் முகிலன். அதற்கு முன் கூடங்குளம் அணு உலை அபாயத்தைத் தடுக்க மக்கள் போராட்டங்களில் தொடர்ந்து பங்கேற்றவர்.

கூடங்குளம் போராட்டம் தொடர்பாக தோழர் சுப. உதயகுமார், தோழர் முகிலன் மற்றும் அப்பகுதி மக்கள் மீது ஏராளமான வழக்குகளைக் காவல்துறை போட்டுள்ளது. கூடங்குளம் வழக்கில் வாய்தாவுக்கு நீதிமன்றம் போகவில்லை என்பதற்காகத் தோழர் முகிலன் மீது வள்ளியூர் நீதிமன்றம் பிடி ஆணை (வாரண்ட்) பிறப்பித்திருந்தது. ஆனால் தோழர் முகிலன் தலைமறைவாக இல்லை. வெளிப்படையாக இயங்கி வந்தார். போராட்டங்களில் கலந்து வந்தார்.

அந்த பிடி ஆணைக்காகக் காவல்துறையினர் தோழர் முகிலனைத் தளைப்படுத்தி வள்ளியூர் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தினர். நீதிமன்றம் அவரை சிறையில் அடைத்தது. ஆனால் தோழர் முகிலன் பிணையில் வெளிவர மறுத்து, சற்றொப்ப 300 நாட்களாக சிறையில் உள்ளார். வழக்கை விரைந்து நடத்த நீதிமன்றத்துக்குத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார்.
அவரை அண்மையில் பாளையங்கோட்டை சிறையிலிருந்து மதுரை சிறைக்கு மாற்றி இருக்கிறார்கள். மதுரை சிறையில் தூய்மை அற்ற பாழடைந்த தனி அறையில் சாக்கடைக் கழிவுகளுக்கு அருகில் தோழர் முகிலனைத் தனியே அடைத்து வைத்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன.
தோழர் முகிலனுடன் வழக்குத் தொடர்பாக கலந்து பேச வரும் வழக்குரைஞர்களுக்கு நேரம் குறைக்கப்படுவதாகவும் அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார். இதுவும் அவருக்கான நீதியை மறுப்பதாகும்!

குற்றஞ்சாட்டப்பட்டவரை சிறையில் தூய்மையான அறையில், உரிய வசதிகளுடன் வைத்திருப்பது சிறைச் சட்டமாகும். குற்றஞ்சாட்டப்பட்டவருக்குரிய குற்றவியல் நீதிச் சட்டங்கள் (Criminal Justice Rules) இருக்கின்றன. அவற்றிற்குப் புறம்பாக யாரையும் சிறையில் நடத்தக் கூடாது!

தமிழ்நாடு சிறைத்துறை அமைச்சர் அவர்களும், சிறைத்துறை மேலதிகாரிகளும் உடனடியாகத் தலையிட்டு, மதுரை நடுவண் சிறையில் தோழர் முகிலனுக்குரிய அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து தருமாறும் தனிமைப்படுத்தி சிறை வைப்பதைக் கைவிடுமாறும், தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Thursday, July 5, 2018

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு : தமிழ்நாடு ஆளுநரும் புதுவை ஆளுநரும் திருந்துவார்களா? தமிழ்நாடு முதல்வர் முதுகு நிமிருமா? தோழர் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு : தமிழ்நாடு ஆளுநரும் புதுவை ஆளுநரும் திருந்துவார்களா? தமிழ்நாடு முதல்வர் முதுகு நிமிருமா? தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!
தலைநகர் தில்லியில் முதல்வர் அரவிந்த் கெச்ரிவால் அமைச்சரவையை செயலற்றதாக்கி, நிர்வாகத்தை முடக்கி வைத்த துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் நடவடிக்கைகள் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானவை என்று உச்ச நீதிமன்றம் நேற்று (04.07.2018) தீர்ப்பளித்திருப்பது தில்லிக்கு மட்டுமின்றி, இந்தியா முழுமைக்கும் அத்துமீறல் செய்யும் ஆளுநர்களுக்குக் கடிவாளம் போட்டது போல் உள்ளது. 

“அமைச்சரவையின் உதவி மற்றும் அறிவுரைப்படிதான் துணை நிலை ஆளுநர் செயல்பட வேண்டும்” என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு ஆயம் தீர்ப்பளித்துள்ளது. ஐந்து நீதிபதிகளும் தனித்தனித் தீர்ப்பெழுதினாலும், ஒத்த கருத்தோடு எழுதியுள்ளார்கள். 

அரசுக்கு அலுவலர்கள், பள்ளிகளுக்கு ஆசிரியர்கள், மருத்துவமனைகளுக்கு மருத்துவர்கள் – செவிலியர்கள் என யாரை கெச்ரிவால் அரசு அமர்த்தினாலும், அத்தனை நியமனங்களையும் தடுத்து வந்தார் துணை நிலை ஆளுநர் அனில் பைஜால். அவர் தானாகச் செயல்படவில்லை. அவ்வாறு தடைகள் போட வேண்டும் என்பதுதான் நரேந்திர மோடி – அமித்சா தலைமையின் விருப்பம்! 

மோடி – அமித்சா நிர்வாகத்தின் அதே வேலைத் திட்டத்தைத் தான் புதுச்சேயில் துணை நிலை ஆளுநர் கிரேன் பேடி செயல்படுத்தி புதுவை நிர்வாகத்தை சீர்குலைத்து வருகிறார். 

அதேவேலைத் திட்டத்தைத் தமிழ்நாட்டில் செயல்படுத்த அனுப்பப்பட்டவர்தான் ஆளுநர் பன்வாரிலால் புரோகித். இதில் தில்லி முதலமைச்சர் கெச்ரிவால், புதுவை முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் தங்கள் மாநில ஆளுநரின் அதிகார ஆக்கிரமிப்பை எதிர்த்து சட்டப்போராட்டமும் சனநாயகப் போராட்டமும் நடத்தி வருகிறார்கள். இப்போது கெச்ரிவால் ஓரளவு வெற்றி பெற்றுள்ளார். ஆனால் தமிழ்நாட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என்ன செய்கிறார்? ஆளுநர் பன்வாரிலாலின் அதிகார அத்துமீறலுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறார்! 

தமிழ்நாடு அமைச்சரவையின் அறிவுரையைக் கேட்காமலே பல்கலைக்கழகத் துணை வேந்தர்களை அமர்த்துகிறார் பன்வாரிலால். தமிழ்நாட்டிற்கு ஆந்திராவைச் சேர்ந்தவரை துணை வேந்தராக அமர்த்துகிறார். எல்லா மாவட்டங்களுக்கும் சென்று அதிகாரிகளைக் கூட்டி அரசின் வேலைகளையும், திட்டப்பணிகளையும் ஆய்வு செய்கிறார். 

ஆளுநர் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணாக செயல்படும்போது, சனநாயக வழியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினால் – கருப்புக்கொடி காட்டினால் ஏழாண்டு சிறைத் தண்டனை பெற்றுத் தருவேன் என்று ஆளுநர் பன்வாரிலால் அறிவிக்கிறார். இதற்கானத் துணிச்சலை ஆளுநருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொடுக்கிறார். 

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தமது தீர்ப்புரையில் கையாண்டிருக்கும் சில சொற்கள் மிகவும் கவனத்திற்குரியவை. 

“நன்கு விவாதித்து சட்டப்படி அமைச்சரவை எடுத்த முடிவுகளை முடக்க ஆளுநர் குழி பறிக்கக் கூடாது”. 

“கூட்டுப் பொறுப்புடன் அமைச்சரவை எடுத்த முடிவை செயல்படுத்துவதற்கு உரிய முக்கியத்துவம் தராமல் (ஆளுநர்) தடையாய் இருந்தால் பிரதிநிதித்துவ ஆட்சி என்பது செல்லரித்துப் போகும்!”.

“முதலமைச்சரும் அமைச்சர்களும் நன்கு விவாதித்து எடுத்த முடிவை செயல்பட விடாமல் துணை நிலை ஆளுநர் தடுத்தால் அமைச்சரவையின் கூட்டு முடிவு என்பது அம்மணமாக்கப்பட்டது போல் வெறுமை ஆகிவிடும்!”. 

உச்ச நீதிமன்றத்தின் மேற்கண்ட நெறிகாட்டும் நெருப்புச் சொற்கள் அனைத்து ஆளுநர்களுக்கும் பொருந்தும். பன்வாரிலால் புரோகித்தும் கிரேன் பேடியும், திருந்துவார்களா? மோடி அரசு திருத்திக் கொள்ளுமா? எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் முதுகு நிமிருமா? இவர்கள் எல்லாம் தங்களைத் திருத்திக் கொள்வதே சனநாயகம்! 

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhthesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT