உடனடிச்செய்திகள்

Saturday, July 31, 2021

தமிழ்நாடு வெளிமுதலாளிகளின் முதல் வேட்டைக்காடா? - ஐயா பெ. மணியரசன் உரை!

தமிழ்நாடு வெளிமுதலாளிகளின் முதல் வேட்டைக்காடா?


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் உரை!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Friday, July 30, 2021

அசாம் - மிசோரம் எல்லைப் போர்! தமிழ்நாடு எல்லை? - ஐயா பெ. மணியரசன் உரை!

அசாம் - மிசோரம் எல்லைப் போர்!

 தமிழ்நாடு எல்லை?



தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் உரை!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Wednesday, July 28, 2021

மேக்கேதாட்டு அணைகட்ட மோடி அரசின் முன்னெடுப்புகள்! ஒன்றிய அமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலம்! பெ. மணியரசன் அறிக்கை!



மேக்கேதாட்டு அணைகட்ட மோடி அரசின் முன்னெடுப்புகள்! ஒன்றிய அமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலம்!

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்
பெ. மணியரசன் அறிக்கை!


கர்நாடகம் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணைகட்டுவதற்குரிய முன் ஒப்புதல்களை இந்திய அரசு கொடுத்து விட்டது என்ற உண்மை 26.07.2021 அன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒன்றிய அரசின் நீராற்றல் துறை அமைச்சர் கசேந்திர சிங் செகாவாத் கூறியதிலிருந்து தெரிய வருகிறது. பா.ம.க.வின் இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் மேக்கேத்தாட்டு அணை குறித்து கேட்ட வினாவுக்கு விடை அளித்த ஒன்றிய அமைச்சர் செகாவாத் கூறிய செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

இதோ அமைச்சரின் கூற்று:

“மேக்கேத்தாட்டில் அணைகட்டுவதற்கு கர்நாடக அரசு அனுமதி கோரியதை அடுத்து இந்திய அரசின் நீராற்றல் ஆணையத்தின் (CWC) ஆய்வுக்குழு (Screening Committee) 24.10.2018 அன்று அணைக்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரித்து அனுப்புமாறு அனுமதி அளித்தது. அதற்கான சில நிபந்தனைகளையும் ஆய்வுக்குழு விதித்தது. கர்நாடக அரசு 20.01.2019 அன்று விரிவான திட்ட அறிக்கையை (DPR) நடுவண் நீராற்றல் ஆணையத்திடம் அளித்தது. அந்த விரிவான திட்ட அறிக்கையை உடனடியாக நடுவண் நீராற்றல் துறை காவிரி ஆற்று நீர் மேலாண்மை ஆணையத்திற்கு (CWMA) அனுப்பி தொடர்புடைய மாநிலங்களின் ஒப்புதலைப் பெறுமாறு கோரியது”. தமிழ்நாட்டின் தொடர் எதிர்ப்பைச் சட்டை செய்யாமல் மேக்கேத்தாட்டிற்கு அனுமதி அளிக்கும் வேலைகளை இந்திய அரசு பார்த்து வந்துள்ளது என்பதற்கு இது சான்று!

மேக்கேதாட்டில் கர்நாடகம் அணை கட்டினால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்குக் கர்நாடகத்திலிருந்து திறக்க வேண்டிய தண்ணீரை மட்டுமின்றி அம்மாநில அணைகளிலிருந்து மிகையாக வெளியேறும் காவிரி வெள்ள நீரையும் தேக்கிக் கொள்வார்கள் என்று கூறி தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டுக் கட்சிகளும் அத்திட்டத்தைத் தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளன.

மேக்கேத்தாட்டு அணைத்திட்டத்தைத் தடுக்குமாறு இந்திய அரசை வலியுறுத்தி 05.12.2014, 27.03.2015 ஆகிய நாட்களில் தமிழ்நாடு சட்டப் பேரவை ஒரு மனதாகத் தீர்மானங்கள் நிறைவேற்றி இந்தியத் தலைமை அமைச்சருக்கு அனுப்பியுள்ளது. உழவர் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் மேக்கேத்தாட்டு அணையை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்தியுள்ளன.

2018 செப்டம்பர் 4 ஆம் நாள் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமை அமைச்சர் மோடிக்கு கடிதம் எழுதி மேக்கேதாட்டு அணைத்திட்டம் உச்ச நீதிமன்றம் 16.02.2018 அன்று வழங்கிய காவிரித் தீர்ப்புக்கு எதிரானது என்று சுட்டிக் காட்டியுள்ளார். அந்த மடலில், கர்நாடக அரசு தயாரித்துள்ள மேக்கேதாட்டு அணைக்கான சாத்தியக் கூறு அறிக்கையை (Feasibility Report) நடுவண் நீராற்றல் துறை ஏற்கக் கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி கோரியுள்ளார்.

தமிழ்நாட்டின் இத்தனை எதிர்ப்புகளையும் இடது கையால் புறந்தள்ளி விட்டு, முதல் கட்ட சாத்தியக்கூறு அறிக்கையை ஏற்றுக் கொண்டு, அடுத்த கட்டமாக விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரித்து அனுப்புமாறு கோரிப் பெற்றுள்ளது ஒன்றிய அரசின் நீர் ஆற்றல் துறை!

அதுமட்டுமின்றி, அந்த விரிவான திட்ட அறிக்கையைச் செயல்படுத்தும் வழிமுறையாக உடனடியாக, அதனை 20.01.2019 அன்று காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பி தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்களின் ஒப்புதலைப் பெறக் கோரியுள்ளது.

இவை அனைத்திற்குமான ஒப்புதல் வாக்குமூலத்தை மாநிலங்களவையில் அளித்துள்ளார் மோடி அரசின் நீராற்றல் துறை அமைச்சர் கசேந்திர சிங் செகாவாத்! மோடி – அமித்சா ஒப்புதல் இல்லாமல் இவை அனைத்தும் நடந்திருக்காது. 

இதே கசேந்திர சிங் செகாவாத்தை அண்மையில் புதுதில்லியில் 06.07.2021 அன்று தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் சந்தித்து மேக்கேதாட்டு அணையை அனுமதிக்கக் கூடாது என்று மனுக் கொடுத்தார். வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசியத் துரைமுருகன் “நீராற்றல் துறை அமைச்சர் கொடுத்த உறுதிமொழி திருப்தி அளிக்கிறது வெற்றி” என்று கூறினார். அதே இடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ அவர்கள் “பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்பது போல் ஒன்றிய அமைச்சர் பேச்சு இருக்கிறது” என்றார்.

துரைமுருகன் தலைமையிலான் குழு புதுதில்லியில் மனுக் கொடுப்பதற்கு முன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 18.06.2021 அன்று புதுதில்லியில் தலைமை அமைச்சர் மோடியைச் சந்தித்து மேக்கேதாட்டுக்கு அனுமதிக் கொடுக்கக் கூடாது என்று மனு கொடுத்தார்.

இத்தனைக்கும் பின் எல்லாவற்றையும் ஒன்றுமில்லை என்று போட்டு உடைத்து விட்டார் கசேந்திர சிங் செகாவாத். கர்நாடகத்திற்கு மேக்கேதாட்டு அணைகட்ட அனுமதி கொடுக்கும் வழிமுறைகளைக் கையாண்டு வருகிறோம் என்று கூறிவிட்டார்.

கடந்த காலங்களில் காங்கிரசு ஒன்றிய அரசு, கர்நாடகம் சட்ட விரோதமாக ஏமாவதி, ஏரங்கி, கபினி, சுவர்ணவதி அணைகள் கட்ட அனுமதித்தது. அதே ஓரவஞ்சனையில் இப்போது மேக்கேத்தாட்டு அணையைக் கட்டி முடிக்கக் கர்நாடகத்திற்கு பா.ச.க. அரசு துணை செய்கிறது.

கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் ஏமாவதி, ஏரங்கி, கபினி, சுவர்ணவதி சட்டவிரோத அணைகள் கட்டப்பட்டன. அதே பாணியில் இப்போதும் தமிழ்நாட்டை தி.மு.க. அரசு ஏமாற்றக் கூடாது. தமிழ்நாட்டு மக்களும் ஏமாறக் கூடாது. 

மேற்கண்டவாறு மோடி அரசு மேக்கேதாட்டு அணைகட்ட ஒவ்வொரு கட்டத்திலும் முன்னெடுப்புச் செய்த போதெல்லாம் எடப்பாடி அரசு அதை எதிர்க்கவில்லை என்பதையும் தமிழ்நாட்டு மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், மேக்கேதாட்டு அணைகட்ட அனுமதி கொடுக்காத நிலையில் அதே அரசின் இன்னொரு பிரிவான நீராற்றல் துறை இவ்வளவு வேகமாக அந்த அணைக்கு அனுமதி கொடுத்து செயல்படுவது எப்படி?

காவிரி நீர் வரவில்லை என்றால் 22 மாவட்டங்களுக்கு தமிழ்நாட்டில் குடிநீர் இல்லை; 15 மாவட்டங்களில் பாசனம் இல்லை என வெகுண்டெழுந்து வெகுமக்கள் போராடி மேக்கேத்தாட்டு அணையைத் தடுக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு, அனைத்துக் கட்சிகள் மற்றும் உழவர் அமைப்புகளின் கூட்டத்தைக் கூட்டி காவிரிக் காப்பு போராட்ட நாள் என ஒரு நாளை வரையறுத்து ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் பேரணிகள் - ஆர்ப்பாட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். உடனடித் தடை ஆணை பெற உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.       


செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
பேச: 98419 49462, 94432 74002

Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com

Tuesday, July 27, 2021

தமிழ்ப் பேரறிஞர் இளங்குமரனார் காலமான பின்னும் “வாழ்ந்த காலமானார்”! பெ. மணியரசன் இரங்கல்!




தமிழ்ப் பேரறிஞர் இளங்குமரனார்
காலமான பின்னும் “வாழ்ந்த காலமானார்”!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
பெ. மணியரசன் இரங்கல்!


தமிழின் தனித்தன்மை மீட்பு, தமிழின உரிமை மீட்பு முதலியவற்றில் மறைமலை அடிகளார் வழியில் செயல்பட்ட தமிழ்ப்பேரறிஞர் ஐயா இளங்குமரனார் 25.07.2021 முன்னிரவு நேரத்தில் மதுரைத் திருநகரில் தமது இல்லத்தில் காலமானார் என்ற செய்தி பேரதிர்ச்சியைத் தருகிறது.

ஆழ்ந்த தமிழ்ப் புலமை, வியக்கத்தக்க சொல்லாய்வு, தணியாத தமிழ்த்தேசிய உணர்வு, நேர்மை, எளிமை இவற்றின் சின்னமாகவும் மொழிஞாயிறு பாவாணரின் தொடர்ச்சியாகவும் வாழ்ந்தவர் இளங்குமரனார்.

ஐநூறுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியவர் ஐயா இளங்குமரனார். தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்ட பாவாணரின் மொத்த படைப்புகளுக்கான “தேவநேயம்” என்ற பத்துத் தொகுதிகளின் பதிப்பாசிரியராக அரும்பணி ஆற்றினார். செந்தமிழ்ச் சொற் பொருட்களஞ்சியம் 14 தொகுதிகள் ஐயாவின் படைப்புகளாகும்.

ஐயா திருச்சி அருகே அல்லூரில் நிறுவிய திருவள்ளுவர் தவச்சாலையும், அதில் அமைக்கப்பட்டிருந்த பாவாணர் நூலகமும் புதுத்தடம் புதித்தவை.

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மாத இதழான தமிழர் கண்ணோட்டம் இதழை ஐயா அவர்களுக்குத் தொடர்ந்து அனுப்பி வந்தோம். ஐயா அவர்கள் ஒவ்வொரு மாத இதழையும் விரும்பிப் படிப்பார். அவ்வப்போது பாராட்டி மடல் எழுதுவார். தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் இலட்சியத்தை, செயல் நெறிகளை, போராட்ட முறைகளைப் பல முறை பாராட்டியுள்ளார்.

தமிழ்த்தேசியப் பேரியக்கம் இளங்குமனார் ஐயா அவர்களை ஆற்றல் மிகு ஆசானாக ஏற்று அவரிடம் அறிவுரைகளைப் பெறுவதில் ஆர்வம் காட்டி வந்தது.

மிகை எண்ணிக்கையில் வெளியார் தமிழ்நாட்டில் குவிவதைத் தடுக்கப் பேரியக்கம் எடுக்கும் முயற்சிகளைப் பாராட்டுவார். ஒரு முறை செங்கிப்பட்டியில் நடந்த கூட்டமொன்றில் பேசிய ஐயா “யாதும் ஊரே யாவரும் கேளிர்” (எல்லா ஊரும் நம் ஊரே, எல்லோரும் நம் உறவினரே) என்ற கணியன் பூங்குன்றனார் பாடலைக் கொஞ்ச காலத்திற்கு நினைவு கூராமல் நிறுத்தி வைப்போம் என்று பேசினார்.

ஐயா காலமான செய்தி பெருந்துயரம் தருகிறது. அதேவேளை தாம் வாழ்ந்த காலத்தின் அடையாளமாக அக்காலமாக ஆகியுள்ளார் என்று ஆறுதல் பெறுவோம். பாவேந்தர் கூறியது போல், “தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை” என்று ஐயா இளங்குமரனார் குடும்பத்தினரும், அன்பர்களும் ஆறுதல் பெறுவோம்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Wednesday, July 21, 2021

குடும்பக் கட்டுப்பாடு செய்யாதீர்கள்! - ஐயா பெ. மணியரசன் உரை!

குடும்பக் கட்டுப்பாடு செய்யாதீர்கள்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் உரை!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Monday, July 19, 2021

"கர்நாடகத்துக்கு மின்சாரத்தை தடை பண்ணுங்க!" 'ஆதன் தமிழ்' ஊடகத்துக்கு.. ஐயா கி. வெங்கட்ராமன் நேர்காணல்!

"கர்நாடகத்துக்கு மின்சாரத்தை

 தடை பண்ணுங்க!"


'ஆதன் தமிழ்' ஊடகத்துக்கு..

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் 
தோழர் கி. வெங்கட்ராமன் நேர்காணல்!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

புதிய நாடாளுமன்றக் கட்டடம் தீவிரப்படும் தமிழின ஒடுக்குமுறை! ஐயா கி. வெங்கட்ராமன்!


புதிய நாடாளுமன்றக் கட்டடம் தீவிரப்படும் 
தமிழின ஒடுக்குமுறை!

தோழர் கி. வெங்கட்ராமன்,பொதுச்செயலாளர், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

தமிழின ஒதுக்கலின் முதன்மைக் களமாக இந்திய நாடாளுமன்றமே விளங்குகிறது. தமிழ்நாட்டை இந்தியப் பேரரசின் காலனியாக அரசமைப்புச் சட்டம் ஒடுக்கி வைத்திருக்கிறது.

கூட்டாட்சியை விரிவாக்க அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறது என்றாலும், தமிழின ஒதுக்கலை – காலனிய ஒடுக்குமுறையை நீக்கும் வகையில் திருத்தம் செய்ய முடியாதவாறு நாடாளுமன்றக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. 

இப்போது, புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். மக்களவையிலும் மாநிலங்களவையிலும் உறுப்பினர்கள் எண்ணிக்கையை பெருமளவு உயர்த்துவதற்கு திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது செயலுக்கு வந்துவிட்டால், இப்போதிருப்பதை விட இன்னும் மோசமான நிலைக்குத் தமிழினப் புறக்கணிப்பு – ஒடுக்குமுறை தீவிரப்படும் ஆபத்திருக்கிறது! 

இதுகுறித்து, கவனம் கொள்ளாமலேயே கொரோனா புதிதாக பெரிய செலவில் நாடாளுமன்றக் கட்டடம், தலைமையமைச்சர் இல்லம் கட்டப்பட வேண்டுமா என்பதை மட்டுமே எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றன. ஊடகங்களோ, அக்கட்டட அமைப்புகளின் சிறப்புத் தன்மையைப் பற்றி விரிவாக விளக்கி வருகின்றன. ஆனால், தமிழின ஒடுக்குமுறை இதன் மூலம் தீவிரப்படப் போகின்றது என்ற உண்மை கவனத்திற்கு வராமலேயே போகிறது! 

இப்போது, நாடாளுமன்ற மக்களவையில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் 543. இதனை கிட்டத்தட்ட இரண்டு மடங்காக்க வேண்டுமென்று 2019லேயே முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேசினார். நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சியினரின் ஒருமித்தக் கருத்தோடு நாடாளுமன்ற புதிய கட்டடம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

அதனடிப்படையில், 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் 970 கோடி ரூபாய் செலவில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா 2020 திசம்பரில் நடைபெற்றது. 2022 ஆகத்து 15 அன்று இந்திய சுதந்திரத்திற்கு 75ஆவது ஆண்டு வருகிறது. அன்றைய நாளில் புதிய நாடாளுமன்றத்தைத் திறந்துவிட வேண்டும் என்ற முனைப்போடு இக்கட்டடப் பணிகள் நடந்து வருகின்றன. இதை எதிர்த்து, தொடுக்கப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

கொரோனா காலத்திற்காவது இப்பணிகளை நிறுத்த வேண்டும் என்று கோரி வழக்குத் தொடுத்தவருக்கு 1 இலட்சம் ரூபாய் தண்டத் தொகை விதித்து, தில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் மக்களவையில் 888 உறுப்பினர் இருக்கைகளும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர் இருக்கைகளும் அமையும் வகையில் கட்டமைப்புகள் உருவாகின்றன. 

மறுபுறம், 2026இல் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 848 என உயர்த்துவதற்கு முன்மொழிவுகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்திய அரசின் பெட்ரோலியத் துறை மற்றும் நகர்ப்புற வீட்டுவசதி வளர்ச்சித்துறை அமைச்சர் அர்திப் சிங் புரி மீண்டும் மீண்டும் இதனை வலியுறுத்திப் பேசி வருகிறார். 

இந்த 848 இடங்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படப் போகின்றன என்பதில்தான் தமிழின ஒதுக்கலின் தீவிர சதித்திட்டம் இருக்கிறது. 

இப்போதுள்ள நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டுக்கான மக்களவை உறுப்பினர்கள் 39. புதுச்சேரிக்கு 1. ஆக மொத்தம் 40. மக்கள் தொகைக்கேற்ற பேராளர்கள் என்ற பெயரால், செயற்கையான முறையில் தமிழர்கள் நாடாளுமன்றத்தில் நிரந்தர சிறுபான்மையாக ஆக்கப்பட்டிருக்கிறோம். அதனால், மக்களவையில் தி.மு.க. – அண்ணா தி.மு.க. கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரிதான வாய்ப்புகளில் ஒரே கருத்தில் பேசும்போது கூட நாடாளுமன்றம் அதைக் காதில்கூட போட்டுக் கொள்ளாத கொடுமையான புறக்கணிப்பைத்தான் நாம் பார்த்திருக்கிறோம்.

எடுத்துக்காட்டாக, காவிரிச் சிக்கலிலும், சிறுவன் பாலச்சந்திரன் கொலைச் செய்தி வந்ததையொட்டி ஈழத்தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை குறித்த விவாதம் நடந்தபோதும் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரே குரலில் கண்டித்துப் பேசியபோதும்கூட மக்களவையில் ஒரு சிறு அசைவைக்கூட ஏற்படுத்த முடியவில்லை. 

ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்கள் இனக்கொலையான கொடிய செய்தியைக்கூட காதுகொடுத்துக் கேட்பதற்கு முன்வராத காலி நாற்காலிகளைக் கொண்ட அவையாகத்தான் மக்களவை இருந்ததைப் பார்த்தோம். ஏனென்றால், மொத்தமுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் 543இல் தமிழ்நாட்டின் 39 என்பது மிகமிகச் சிறுபான்மை! 

தமிழ்மொழி, தமிழர் தாயகம், தமிழ்நாட்டு உரிமை ஆகியவை குறித்து நாடாளுமன்ற மக்களவையில் அரசமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டு வருவதென்பது கனவிலும் நடக்க முடியாத செயல்! காரணம் – அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தேவை. 

இருக்கிற 543 உறுப்பினர்களில் இந்தி மாநிலங்களான உத்திரப்பிரதேசம் (80), பீகார் (40), இராசஸ்தான் (25), மத்தியப்பிரதேசம் (29), ஜார்கண்ட் (14), அரியானா (10), தில்லி (7), உத்தரகண்ட் (5), சத்தீசுகர் (11), இமாச்சலப்பிரதேசம் (4) என மொத்தம் 225 உறுப்பினர்கள் இந்தி மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் எந்த சட்டத்தையும் இயற்றிக் கொள்ளக்கூடிய இயல்பான பெரும்பான்மையில் இருக்கிறார்கள். இவர்கள் முயன்றால் அரசமைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கான மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு பெறுவது எளிது! இவ்வாறான வாய்ப்பு எந்தக் காலத்திலும் தமிழர்களுக்குக் கிடைக்கவே கிடைக்காது. 

மொழிவழி தேசிய இன மாநிலங்களாக 1956இல் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் உருவாக்கப்பட்ட காலத்திலேயே ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் சமமான எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்ட கூட்டாட்சியாக இந்தியக் குடியரசு மாற்றப்பட்டிருந்தால், ஓரளவிற்காவது தமிழ்நாட்டின் உரிமைக் குரலை எழுப்புவதற்கு சிறு வாய்ப்பாவது கிடைத்திருக்கும். 

அப்போதும் ஒட்டுமொத்தத்தில் நாடாளுமன்றத்தில் சிறுபான்மையாகத்தான் தமிழினம் இருக்கும் என்றாலும், சம எண்ணிக்கை என்று வரும்போது இந்திக்காரர்களுக்கும், தமிழர்களுக்குமான எண்ணிக்கை சமநிலையாவது உறுதி செய்யப்பட்டிருக்கும். தேசிய இனத் தாயகமே மாநிலம் என்பதை கோட்பாட்டளவில் ஏற்றுக் கொண்ட மாநிலச் சீரமைப்புச் சட்டம், மாநிலங்களை உருவாக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டது. 

பல்வேறுபட்ட தேசிய இனத் தாயகங்களுக்கு சம எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருப்பது, நாடாளுமன்ற சமநிலையை ஓரளவுக்காவது பாதுகாத்துத் தரும் என்ற கொள்கை நிலை, இந்திய ஒன்றியத்துக்கு இருக்கவில்லை. 

இன்றைக்கும் நாடாளுமன்ற மக்களவையை மாநிலங்களுக்கு இணக்கமாக சீரமைக்க விரும்பும் சிந்தனையாளர்கள் அனைத்து தேசிய இனங்களுக்கும் சம எண்ணிக்கை என்பதற்குப் பதிலாக, அனைத்து மாநிலங்களுக்கும் சம எண்ணிக்கை என்பதாக வலியுறுத்துகிறார்கள். இந்தி மாநிலங்கள் அப்போதும் 10 இருக்கும்போது, ஒவ்வொரு மாநிலத்திற்கும் சம எண்ணிக்கை என்றாலும் தமிழ்நாட்டைவிட அவர்கள் மட்டும் 10 மடங்கு இடம் பெற்று விடுவார்கள் என்ற எளிய அடிப்படையையே அவர்கள் கருத மறுக்கிறார்கள். 

உண்மையில், இனச் சமநிலையுள்ள கூட்டாட்சியாக இந்தியா இருக்க வேண்டுமென்றால், இறையாண்மையுள்ள தேசிய இனக் குடியரசுகளின் ஒன்றியமாக மாற்றியமைக்கப்பட வேண்டும். அப்போதுதான், எந்தவொரு சிறிய தேசிய இனமும் புறக்கணிக்கப்படாமல் எந்த அடிப்படை முடிவும் ஒருமித்தக் கருத்தின் அடிப்படையில் (Consensus) நிறைவேற்றுவதற்கான ஏற்பாடு உறுதி செய்யப்படும்.

ஆனால், இந்தியா இதற்கு நேர் எதிர்த்திசையில் – மேலும் மேலும் இந்திய அரசி்டம் அதிகாரத்தைக் குவித்துக் கொள்ளும் போக்கில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறது. பா.ச.க.வின் நரேந்திர மோடி ஆட்சியில் அது கண்மண் தெரியாத வேகத்தில் அன்றாடம் நடந்து வருகிறது. 

அவ்வாறு மாநில அதிகாரம் குறுக்கப்பட்ட அரசமைப்பில் கூட, மற்ற தேசிய இன மாநிலங்களைவிட தமிழ்நாடு சட்ட வாய்ப்புகள் கூட மறுக்கப்பட்ட இன ஒதுக்கலுக்கு உள்ளான தாயகமாக இருக்கிறது. 

காவிரி, மீனவர் சிக்கல் போன்ற அனைத்திலும் இருக்கிற சட்டத்தில் பிற தேசிய இனங்களுக்கு இருக்கிற உரிமை கூட தமிழினத்திற்கு மறுக்கப்பட்டு, சட்டத்தின் ஆட்சியே மறுதலிக்கப்படும் நிகழ்வுகளைப் பார்த்து வருகிறோம். 

இந்த நிலையில், புதிய பெரிய நாடாளுமன்றக் கட்டடமும் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு என்பதும் முற்றிலும் தமிழினத்தை புறந்தள்ளி வைக்கக்கூடிய சதித்திட்டமாக உருவாகி வருகிறது. 

இந்திய ஆரியத்துவ ஆட்சியாளர்களின் கருத்தை பிரதிபலிக்கும் வகையில் மிலன் வைஷ்ணவ், ஜே. ஹிண்ட்ஸ்டன் ஆகிய ஆய்வாளர்கள் வைக்கும் முன்மொழிவு (Hindustan Times, 03.03.2019 மற்றும் பிற ஏடுகள்) அர்திப் சிங் பூரியின் கருத்திற்கு ஒத்திசைவதாக இருக்கிறது. இவர்கள் இரண்டுவிதமான முன்மொழிவுகளை விவாதத்திற்கு வைக்கிறார்கள். 

இப்போது 1971ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி பல்வேறு மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உள்ளது. இதனை 2026ஆம் ஆண்டு மக்கள் தொகைக்கு ஏற்ப சீரமைப்பது என்று இவர்களது முதல் முன்மொழிவு கூறுகிறது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பைக் கருத்தில் கொண்டு, அதில் கூறப்படும் மக்கள் தொகை பெருக்க விகிதத்திற்கேற்ப 2026இல் மக்கள் தொகை எவ்வாறு இருக்கும் எனக் கணக்கிடுகிறார்கள் (Projection). அதற்கேற்ப மக்களவை மற்றும் மாநிலங்களவையின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை முன்வைக்கப்படுகிறது. 

இதன்படி, தமிழ்நாடு இப்போதுள்ள 39 மக்களவை உறுப்பினர்களிலிருந்து 31 ஆகக் குறைத்துப் பெறும். ஆனால், உத்திரப்பிரதேசத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 80லிருந்து 91 ஆக உயரும். பீகாரின் உறுப்பினர் எண்ணிக்கை 40லிருந்து 50 ஆக உயரும். (காண்க : படம் – 1). இவ்வாறு, தமிழ்நாடு – கேரளா எண்ணிக்கை குறைந்தும், இந்தி மாநிலங்களின் எண்ணிக்கை உயர்ந்தும் இருக்கும். இப்போதுள்ளதைவிட கொடிய இனச் சமநிலை சீர்குலைவு ஏற்படும். 

 

ஆயினும், தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் தற்போதுள்ள உறுப்பினர் எண்ணிக்கை குறைவதை ஏற்க மாட்டார்கள் என்பதால், எல்லா மாநிலங்களின் மக்களவை உறுப்பினர் எண்ணிக்கையையும் உயர்த்தி இன்னொரு முன்மொழிவை இந்த ஆய்வாளர்கள் முன்வைக்கிறார்கள். 

அதன்படி, மொத்த மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543லிருந் 848 ஆக உயர்த்துகிறார்கள். (காண்க : படம் – 2). அதன்படி தமிழ்நாட்டின் மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை 39லிருந்து 49ஆக உயரும். அதேநேரம், உத்திரப்பிரதேசத்தின் 80 என்ற எண்ணிக்கை 143 ஆக உயரும். பீகாருக்கு 40லிருந்து 79 ஆக உயரும். மொத்தத்தில் 848 உறுப்பினர்களில் இந்தி மாநிலங்களுக்கு 408 உறுப்பினர்கள் கிடைப்பார்கள். கேரளாவுக்கு 20 என்பது அப்படியே நீடிக்கும். அவ்வளவுதான்!
 
அதாவது, தமிழ்நாடு, புதுவை மட்டுமின்றி தென் மாநிலங்கள் அனைத்தையும் புறக்கணித்துவிட்டுக் கூட நாடாளுமன்றத்தில் எந்தவகை சட்டத்தையும் இந்திய ஆட்சியாளர்களால் கொண்டு வர முடியும். அரசமைப்புச் சட்டத்தை எப்படி வேண்டுமானாலும் மாற்றியமைத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படும். ஏனெனில், இதே வகையான விகிதநிலை புதிதாக உருவாக்கப்படும் மாநிலங்களவையிலும் ஏற்படும். 

ஒவ்வொரு தேசிய இனத்தின் சமத்தகுநிலைக்கு மாற்றாக, மக்கள் தொகை எண்ணிக்கை என்பது புதிய நாடாளுமன்றத்திலும் தொடரும் சூழலில், மக்கள் தொகை வளர்ச்சி நிலை இன்னொரு பெரிய சிக்கலை தமிழ்நாட்டுக்கு ஏற்படுத்துகிறது. 

இந்தியாவின் மக்கள் தொகை பெருக்கம் உலகம் முழுவதும் நடந்து வருவதைப் போல, வேகம் குறைந்து காணப்பட்டாலும் தமிழ்நாடு, கேரளாவை ஒப்பிட இந்தி மாநிலங்களின் மக்கள் பிறப்பு விகிதம் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது, இதுகுறித்து, இந்திய அரசின் பொருளியல் ஆய்வறிக்கை 2018 – 2019 கூறுவது மிகப் பெரிய அபாய அறிவிப்பாக இருக்கிறது, (விரிவிற்குக் காண்க : Economic Survey 2018 – 2019, Volume 1 - Chapter 7). 

இதில் கூறப்படும் மக்கள் தொகைப் பெருக்கக் கணக்கீடு, இன்னும் 20 ஆண்டுகளில் தமிழ்நாடு மக்கள் தொகை சுருக்கத்தை (Decline in Population) சந்திக்கும் என்று கூறுகிறது. ஒரு பெண் தன் வாழ்நாளில் எவ்வளவு குழந்தைகளை பெற்றெடுத்துக் கொள்வார் (15லிருந்து 45 வயதிற்குள்) என்ற கணக்கீட்டின் அடிப்படையில் இது முன்வைக்கப்படுகிறது. இதற்கு மொத்தக் கருத்தரிக்கும் திறன் என்று (Total Fertility Rate – TFR) கூறுகிறார்கள். அதன்படி, இந்தியாவின் சராசரி கருத்தரிப்பு விகிதம் 2016இல் 2.3 என இருந்தது. 2021இல் 1.8 ஆகக் குறையும் என்று கூறுகிறார்கள். 

இன்னொருபுறம், பிறப்பு விகிதத்திற்கும் இறப்பு விகிதத்திற்கும் சமநிலை ஏற்பட்டு, மக்கள் தொகை அதேநிலையில் தொடர வேண்டுமானால், ஒரு பெண்ணின் கருத்தரிப்பு விகிதம் 2 குழந்தைகள் என்பதாக இருக்க வேண்டும் எனக் கணக்கிட்டிருக்கிறார்கள். இது பல்வேறு மாநிலங்களுக்கு மாறுபட்ட நிலையில் இருக்கிறது. 

உத்திரப்பிரதேசம், பீகார் போன்ற இந்தி மாநிலங்களை ஒப்பிட தமிழ்நாட்டில் குடும்பக் கட்டுப்பாடு, மிக நீண்டகாலமாக மக்களிடையே செயலில் உள்ளதால் தமிழ்நாட்டின் மக்கள் தொகைப் பெருக்கத்தைவிட பீகாரின் மக்கள் தொகை்ப பெருக்கம் 2 மடங்காக இருக்கிறது, உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் ஆகியவற்றின் நிலையும் இதுதான்! 

 

இந்த அட்டவணையைக் (படம் – 3) கவனித்தால், 2031க்குப் பிறகு தமிழ்நாட்டில் மக்கள் தொகை சுருக்கம் (De-growth) ஏற்படவுள்ளது என்ற புதிய சிக்கலைப் புரிந்து கொள்ளலாம். மக்கள் தொகை சுருக்கம் இந்தியாவின் இனச் சமநிலையை மிகக் கொடுமையாக பாதிக்கும். குறிப்பாக, தமிழினப் புறக்கணிப்புக்கு இன்னும் கூடுதலான வாய்ப்புகளைத் திறந்துவிடும். அதுமட்டுமின்றி, வெளி மாநிலத்தவர் மிகை எண்ணிக்கையில் குவிவதை விரைவுபடுத்தும். 

இதேபோன்ற சிக்கலை சந்தித்து வருவதால்தான், மிகக் கடுமையான குடும்பக் கட்டுப்பாடு செய்துவந்த சீனா மட்டுமின்றி, ஜப்பான், செர்மனி போன்ற வளர்ந்த நாடுகளும் கூடுதல் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு பல்வேறு ஊக்குவிப்பு நடவடிக்கைகளை செய்யத் தொடங்கிவிட்டன. இதேபோன்ற தேவை தமிழ்நாட்டுக்கும் ஏற்படலாம். 

அப்போதும் பொருளியல் வளர்ச்சி மையங்களாக தமிழ்நாடும் பிற தென் மாநிலங்களும் இருக்கும். அரசியல் ஆதிக்க மையமாக வடஇந்தியாவின் இந்தி மண்டலம் இருக்கும். நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை மறுசீரமைப்பு இந்த அரசியல் ஆதிக்கத்தை இன்னும் வலுப்படுத்தத் துணை செய்யும்! 

தமிழ்த்தேசிய அரசியலின் தேவை அதிகரித்து வருகிறது! 


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

 


இலட்சியமா? எதிர்வினையா? - ஐயா பெ. மணியரசன் உரை!

இலட்சியமா? எதிர்வினையா?



தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் உரை!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Saturday, July 17, 2021

"உப்பு - மின்சாரம் கர்நாடகாவுக்குப் போகக் கூடாது!" 'ழகரம்' ஊடகத்துக்கு.. ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் நேர்காணல்!

"உப்பு - மின்சாரம் கர்நாடகாவுக்குப் 

போகக் கூடாது!"


'ழகரம்' ஊடகத்துக்கு..

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்களின்  நேர்காணல்!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Friday, July 16, 2021

தமிழ்நாட்டைப் பிரிப்போர்! இந்தியாவைப் பிரிப்பார்களா? - ஐயா பெ. மணியரசன் உரை!

தமிழ்நாட்டைப் பிரிப்போர்! 

இந்தியாவைப் பிரிப்பார்களா?



தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் உரை!



கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Sunday, July 11, 2021

"கொங்கு நாடு பா.ச.க.வின் சதித்திட்டம்! கையாளாக செயல்படும் இராமதாசு!" "ரெட்பிக்ஸ்" ஊடகத்துக்கு - ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

"கொங்கு நாடு பா.ச.க.வின் சதித்திட்டம்! கையாளாக செயல்படும் இராமதாசு!"


"ரெட்பிக்ஸ்" ஊடகத்துக்கு

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன்  நேர்காணல்!



கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Saturday, July 3, 2021

பனை மரப் பாதுகாப்புச் சட்டம் தேவை! - பெ. மணியரசன் அறிக்கை!



பனை மரப் பாதுகாப்புச் சட்டம் தேவை!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
பெ. மணியரசன் அறிக்கை! 


கஜா புயலால் கூட சாய்க்க முடியாத பனை மரங்களைத் தமிழ்நாட்டில் பண வேட்டைக்காரர்கள் வெட்டிச் சாய்க்கிறார்கள். தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களிலும் வட மாவட்டங்களிலும் பனை அழிப்பு வணிகம் வேகமாக நடந்து கொண்டுள்ளது. திருவாரூர், நாகை மாவட்டங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உணர்வுள்ள அமைப்புகள் பண வேட்டைக் காரர்களின் பனை வேட்டையை அங்கங்கே தடுத்துப் பேராடி வருகின்றனர். 

திருத்துறைப்பூண்டி மற்றும் அதை ஒட்டிய சேகல், கீழ்வேளூர், தீவம்பாள்பட்டினம், கொருக்கை, மீனம்பநல்லூர், மாங்குடி மற்றும் வேதாரணியம் பகுதி கிராமங்கள் போன்ற பகுதிகளில் உள்ள பனை மரங்களை செங்கல் சூளைகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் எரிபொருளாகப் பயன்படுத்த சரக்குந்துகளில் தொடர்ந்து ஏற்றிச் செல்கிறார்கள். 

ஒரு பனை மரத்தை 200 ரூபாய்க்கு எரிபொருளாக விற்கும் அவலம் நெஞ்சை பதைக்க வைக்கிறது. பசுமைச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பருத்திச்சேரி ராஜாவும், அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களும், மற்றும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களும் அப்பகுதிகளில் வெட்டப்பட்ட பனை மரங்களை ஏற்றிச் சென்ற சரக்குந்துகளை மறித்துக் காவல்துறையினரிடம் ஒப்படைத்து வரும் செய்திகள் நாளேடுகளிலும், செய்தி ஊடகங்களிலும் வந்து கொண்டுள்ளன. ஆனாலும் பனைவேட்டை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. 

தமிழர்களை இனப்படுகொலை செய்து அழித்த இலங்கை அரசு கூடப் பனை மரங்களை வெட்டத் தடை விதித்துக் கடும் சட்டம் இயற்றியுள்ளதாகக் கூறுகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் அப்படிப்பட்ட சிறை அடைப்பு எதுவுமின்றி பனைவேட்டையர்கள் தப்பி விடுகிறார்கள். 

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் 2018இல் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இந்தியாவில் 9 கோடிப் பனை மரங்கள் இருப்பதாகவும், அதில் 5½ கோடி மரங்கள் தமிழ்நாட்டில் இருப்பதாகவும் கூறுகிறது. ஆனால், அதில் இன்று 2½ கோடி பனை மரங்கள்தாம் இருக்கும் என்று சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளோர் கூறுகிறார்கள். 

தமிழ்நாட்டின் அடையாளச் சின்னம் பனை மரம்! வேர் தொடங்கி பனை மட்டை இலை நுனி வரை பயன்படும் மரம் அது! நம்முடைய பழைய இலக்கியங்களைப் பதிய வைத்துப் பாதுகாத்தது பனை ஓலைகள்! ஆழத்தில் கிடக்கும் நிலத்தடி நீரை மேலே இழுத்து, மேல் மண்ணில் ஈரப்பதம் காப்பது பனை வேர்களே! 

கிளைகள் இல்லாத பனைமரம் நுங்கு, பதனீர், பனங்கற்கண்டு, பனைவெல்லம், பனம்பழம், பனங்கிழங்கு என்று எத்தனை கிளை வகை உணவுப் பொருட்களைத் தன்னுள் பொதிய வைத்துள்ளது. வீடுகட்ட மிக வலுவான மரம் பனை! 

தென்னந்தோப்பு வளர்க்கிறோம். ஆனால், பனந்தோப்பு வளர்ப்பதில்லை. பழைய மரங்கள், தானே முளைத்த மரங்கள், ஆர்வலர்கள் அங்கங்கே விதைத்த மரங்கள் என்று பனை மரங்கள் வளர்கின்றன.

அவற்றைத் தொழிற்சாலைக் கொள்ளை நோய் அழித்துவிடாமல் பாதுகாக்கும் பொறுப்பு பசுமை ஆர்வலர்களுக்கு மட்டுமல்ல, அனைத்துத் தமிழ் மக்களுக்கும் உண்டு. கூடுதலான பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது, 

பனைப் பாதுகாப்புக்கென்று புதிய சட்டம் இயற்ற வேண்டும்; அதில் சிறைத் தண்டனைப் பிரிவு சேர்க்க வேண்டும். அத்துடன், பனைப் பாதுகாப்பு, பனை வளர்ப்பு விழிப்புணர்வை அரசும் பரவலாக மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்று தமிழ்நாடு அரசைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT