உடனடிச்செய்திகள்

Thursday, August 31, 2017

ஆளுநருக்கு அரசமைப்புச் சட்டம் வழி காட்டுகிறதா? ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா? தோழர் பெ. மணியரசன் கேள்வி!

ஆளுநருக்கு அரசமைப்புச் சட்டம் வழி காட்டுகிறதா? ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா? தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி! 
தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர ராவ் “தினகரன் குழுவினர் உட்பட அனைத்து அ.இ.அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்களும், அ.இ.அ.தி.மு.க.வை விட்டு விலகவில்லை, அதிலேயே இருக்கிறார்கள்; எனவே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு கோர வேண்டிய தேவை இல்லை” என்று கூறி இருப்பது, ஆளுநர் நடுநிலையோடு செயல்படவில்லை என்பதைக் காட்டுகிறது.
அ.இ.அ.தி.மு.க.வின் தன்னலக் குழுக்கள் நடத்திக் கொண்டிருக்கும் பதவிச் சண்டையைப் பயன்படுத்தி, பா.ச.க.வின் தில்லித் தலைமை தமிழ்நாட்டில் தனது நாட்டாண்மை அரசியலை வலுப்படுத்திக் கொள்ளும் வேலைகளைத் தொடர்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் அரசியல் அறத்தையும் பலியிட்டு, தமிழ்நாட்டில் பா.ச.க.வை ஊதிப் பெருக்கச் செய்ய நடுவண் அரசு முயல்கிறது.
தினகரன் குழுவினர் ஆளுநர் வித்தியாசாகர ராவைக் கடந்த 22.08.2017 அன்று சந்தித்து, தங்கள் அணியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் 19 பேரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டு விட்டார்கள் என்று கூறும் மனுவைத் தனித்தனியே அளித்தனர். அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்ற வேண்டும் என்றும் ஆளுநரைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
அதையொட்டி தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் ஆணையிட வேண்டும் என்று கோருகின்றனர். இக்கோரிக்கை மனுவை நேற்று (30.08.2017) எதிர்க்கட்சிகள் அளித்த போது மேற்கண்டவாறு ஆளுநர் கூறியுள்ளார்.
அ.இ.அ.தி.மு.க.வின் தன்னலக் குழுக்களின் பதவிச் சண்டையினால் கடந்த எட்டு மாதங்களாகத் தமிழ்நாட்டில் மாநில அரசின் செயல்பாடுகள் குழம்பிக் கிடக்கின்றன; பல துறைகளில் வேலைகள் தேங்கிக் கிடக்கின்றன. இன்னொரு பக்கம் சட்டப்பேரவை உறுப்பினர்களை அவ்வப்போது அதிக விலையில் குத்தகைக்கு எடுத்து கூடாரங்களில் அடைத்து வைத்துக் கொள்ளும் அ.தி.மு.க. தன்னலக் குழுக்களின் “சந்தைச் சனநாயகம்” அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அ.இ.அ.தி.மு.க. அணிகளின் இந்தச் செயல்கள் தமிழ்நாட்டிற்குத் தலைகுனிவை ஏற்படுத்துகின்றன.
தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ள இந்தத் தலைகுனிவையும், ஆட்சி மற்றும் அரசியல் குழப்பங்களையும் பா.ச.க.வின் நடுவண் அரசு கொண்டாடுகிறது. கொல்லைப்புற வழியில் தமிழ்நாட்டு ஆட்சியைப் பிடிக்க சூழ்ச்சி செய்கிறது.
தமிழ்நாட்டு ஆட்சிக்கு இன்று ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்குத் தீர்வு காண அரசமைப்புச் சட்டத்திலும், ஏற்கெனவே எஸ்.ஆர். பொம்மை உள்ளிட்ட பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புகளிலும் வழி சொல்லப்பட்டிருக்கிறது. சட்டமன்றத்தில் பெரும்பான்மையை ஐயத்திற்கு இடமின்றி அறிய வேண்டுமே தவிர ஆளுநரின் விருப்பு வெறுப்புக்கேற்ப முடிவு செய்ய முடியாது. இவ்வாறான சட்டவழியைப் பின்பற்றாமல், கொல்லைப்புற வழிகளைப் பின்பற்றுவது, பா.ச.க. ஆட்சியாளர்களே அரசமைப்புச் சட்டத்தை முறிக்கும் செயலாகும்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்குத் தந்துவந்த ஆதரவை விலக்கிக் கொண்டதாக ஆளுநரிடம் மனுக் கொடுத்த தினகரன் அணியைச் சேர்ந்த 19 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் பதவி நீக்கம் செய்வதற்கு பேரவைத் தலைவர் தனபால் மூலம் காரணம் கேட்கும் கடிதம் கொடுத்திருக்கும் எடப்பாடி அணியின் செயல், கட்சித்தாவல் தடைச் சட்டத்திற்குப் பொருந்தாது என்பது மட்டுமல்ல, அருவருக்கத்தக்க தன்னல வெறியாட்டம் ஆகும்!
அதேபோல் சட்டப் பேரவையில் தடை செய்யப்படட குட்காவைக் காட்டி, இந்த சட்ட விரோத வணிகத்திற்கு அமைச்சர்களே காரணம் என்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் தி.மு.க. உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுத்து இடைநீக்கம் செய்ய எடப்பாடி அரசு முயல்வது, செயலலிதா ஆட்சியில் சசிகலா அதிகாரத்தைத் தன்னல நோக்கங்களுக்குத் தவறாகப் பயன்படுத்தி ஆடிய ஆட்டத்தை ஒத்தது ஆகும்!
இந்நிலையில் ஆளுநருக்கு அரசமைப்புச் சட்டம் வழிகாட்டுகிறதா அல்லது ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுகிறதா என்ற வினா எழுந்துள்ளது.
எனவே தமிழ்நாடு ஆளுநர், உடனடியாக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு கோர வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு காலக்கெடு விதித்து ஆணை இட வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhdesiyam.com 

Tuesday, August 15, 2017

"தமிழர் மீட்சி - இன முழக்கம்" தமிழ்நாடடெங்கும் பரப்புரை இயக்கம்!

"தமிழர் மீட்சி - இன முழக்கம்" தமிழ்நாடடெங்கும் பரப்புரை இயக்கம்!



 

பேரன்புடையீர், உங்களைத் தேடி வந்திருக்கிறோம்! “ஆதாயமில்லாமல் வருவீர்களா” என்று நீங்கள் நினைக்கலாம்! அரசியல் வாதிகள் உங்களுக்குத் தந்த அனுபவம் அவ்வாறு உள்ளது!
 
நாங்கள் எந்தப் பதவிக்கும் தேர்தலில் போட்டியிடு வதில்லை. எந்தத் தேர்தல் கூட்டணியிலும் சேர்வ தில்லை. வேறு வகையான எந்தப் பதவிக்கும் முயல்வ தில்லை. தன்னலப் பயன் கருதா தமிழர் பணி மற்றும் தமிழ்ப்பணி என்று செயல்படுகிறோம்!
 
தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தங்களுக்குள் போட்டுக் கொள்ளும் தன்னலப் பதவிச்சண்டையே தமிழ்நாட்டு அரசியல் என்று ஆகிவிட்டது. ஆனால், இந்திய அரசோ இந்தச் சண்டையைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டு உரிமைகளையும், தமிழர்களின் வாழ்வுரி மைகளையும் ஒவ்வொன்றாகப் பறித்துக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுக்கு அவ்வுரிமைகளைக் காப்பாற்றும் அக்கறையும் இல்லை; ஆற்றலும் இல்லை!
 
இந்தியாவை ஆளும் பாரதிய சனதாக் கட்சியோ, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வயிற்றில் அடித்து பெருங்குழும (கார்ப்பரேட்) முதலாளிகளைக் கொழுக்க வைக்கிறது. இட்லி, தோசைக்கு சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி.) போட்டு வசூலிக்கிறது! போர்டு, ஹூண்டாய், பாரத் பென்சு, மகேந்திரா, அசோக் லேலண்ட் போன்ற பெரும் பெரும் கார்ப்பரேட் முதலாளிகள் உற்பத்தி செய்யும் ஊர்திகளுக்கு இதுவரை வசூலிக்கப் பட்ட உற்பத்தி வரியை (எக்சைஸ்) நீக்கிவிட்டது. அவற்றிற்கான வரியை அவற்றை வாங்குபவர்கள் கட்டிக் கொள்ளட்டும் என்று கூறிவிட்டது!
 
ஏழை, நடுத்தர மக்கள் மானிய விலையில் பயன்படுத்தி வரும் சமையல் எரிவளி (கேஸ்) உருளைக்கு அளித்து வந்த மானியத்தை பா.ச.க. ஆட்சி முற்றாக நீக்கிவிட்டது. அதன்விலை கிடுகிடுவென்று உயரப் போகிறது! அத்துடன் ஞாயவிலைக் கடைகளை இழுத்து மூடும் திட்டத்தையும் இப்போது அறிவித்துள்ளது!
 
தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தின்படி படித்த தமிழ்நாட்டு மாணவர்கள், தமிழ்நாடு அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாதபடி, தில்லிப் பாடத்திட்டத்தில் (சி.பி.எஸ்.இ.) படித்த மாணவர்களுக்கு இடம்கொடுக்கும் வகையில் பா.ச.க. ஆட்சி “நீட்” தேர்வைப் புகுத்தியுள்ளது. தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் தமிழைப் புறக்கணித்து, ஆங்கில ஆதிக்கத்தை வளர்த்து வருகிறார்கள். இந்திய அரசோ இந்தியையும் சமற்கிருதத்தையும் தீவிரமாகத் திணிக்கிறது.
 
காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, தென்பெண்ணை போன்ற தமிழ்நாட்டு ஆறுகளின் உரிமைகளை அண்டை மாநிலங்கள் பறித்துக் கொள்ள இந்திய அரசு துணை செய்கிறது. கச்சத்தீவை இந்திய அரசு இலங்கைக்குக் கொடுத்ததால், ஏராளமான தமிழக மீனவர்களை சிங்களப்படை சுட்டுக் கொன்றது. இப்போதும் தமிழ் மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் சிங்களப்படை இலங்கைக்கு அன்றாடம் கடத்திக் கொண்டு போகிறது.
 
நெல், வாழை, கரும்பு, தென்னை, மஞ்சள் போன்றவை விளையும் வளமான நிலங்களில் பெட்ரோலியம், எரிவளி, மீத்தேன் உள்ளிட்ட ஐட்ரோ கார்பன் மற்றும் நிலக்கரி ஆகியவற்றை எடுக்க ஓ.என்.ஜி.சி.யையும், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களையும் களத்தில் இறக்கி விட்டுள்ளது இந்திய அரசு! தமிழ்நாடு அரசோ, தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளைக் காக்க முன்வராமல், வாழ்விற்காகப் போராடும் மக்கள் மீது காவல்துறை முற்றுகையையும், அடக்குமுறையையும் ஏவி விடுகிறது. அறப்போராட்டம் நடத்துவோரை சிறையிலடைக்கிறது!
 
பெண்களும், ஆண்களும் தங்கள் வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை நிரந்தரமாக மூடப் போராடுகிறார்கள். தமிழ்நாடு அரசோ அவர்கள் மீது காவல்துறையை ஏவித் தாக்குகிறது! புதிது புதிதாக டாஸ்மாக் கடைகளைத் திறக்கிறது! தமிழ்நாட்டின் பெரிய அரசியல் கட்சிகள் மேற்கண்ட போராட்டங்களைத் தாங்கள் முன்னெடுக்காமல், அப்போராட்டங்களை ஆதரிப்பதாக கூறிக்கொள்கின்றன.
 
இந்நிலையில்தான், தமிழ்நாட்டுத் தாயக உரிமைகளையும் தமிழர்களின் வாழ்வுரிமைகளையும் பாதுகாத்திட தமிழ்த்தேசியம் என்ற தத்துவச் சுடர் ஏந்தி, தமிழ்த்தேசியப் பேரியக்கம் மக்கள் போராட்டங்களுடன் தன்னை இணைத்துக் கொள்கிறது! அப்போராட்டங்களிடையே ஒருங்கிணைப்பை உருவாக்கவும், ஒட்டு மொத்தத் தமிழ்நாட்டின் எழுச்சியாக அவற்றைக் கொண்டு செல்லவும் திசைகாட்டுகிறது.
 
இது குறித்து உங்களுடன் உரையாட விரும்புகிறோம்!
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Friday, August 11, 2017

கமலகாசன் கணிப்பின்படி தமிழ்நாட்டில் ஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா? தோழர் பெ. மணியரசன்!

கமலகாசன் கணிப்பின்படி தமிழ்நாட்டில் ஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா? தோழர் பெ. மணியரசன், தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
தி.மு.க.வின் “முரசொலி” நாளிதழின் பவள விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் 10.08.2017 அன்று நடந்த போது அதில் பேசிய நடிகர் கமலகாசன், “ஜனகணமன பாடல் இருக்கும்வரை “திராவிடம்” இருக்கும் என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டில் ஜனகணமன பாடல் பாடப்படும் வரை தான் திராவிடம் இருக்குமோ” என்ற கவலையோடு இவ்வாறு பேசியிருப்பாரோ?

அடுத்து, “திராவிடம் என்பது தமிழகத்தோடு தென்னகத்தோடு முடிந்து விடுவதில்லை; அது நாடு தழுவியது. திராவிடம் என்பது பரந்த இந்தியன் (Pan Indian). இது தொல்லியல், மாந்தவியல் அறிந்தவர்களுக்குத் தெரியும். திராவிடம், சிந்துச் சமவெளியில் தொடங்கி, மெதுவாகத் தள்ளிக் கொள்ளப்பட்டு வந்து, தேநீரில் தேயிலைச் சாறு போல் தமிழ்நாட்டில் இருக்கிறது” என்றார் கமலகாசன்.

அப்படி அவர் பேசிய போது மேடையில் வீற்றிருந்த, மு.க. ஸ்டாலின் பூரித்துப் புன்னகைத்தார். ஒரு காலத்தில் தி.மு.க. தலைவர்கள் முழங்கிய ஆரிய - திராவிட இனப் போராட்டங்களின் வரலாறு, இக்காலத்தில் கழகத்திற்குப் பழங்கால சுமையாகி விட்டது. அந்த “வரலாற்றுக் கழிவு மூட்டைகள்” கமலகாசன் கையால் இறக்கி வீசப்படுவது, இந்திய தேசிய நீரோட்டத்தில் புனித நீராடிக் கொண்டிருக்கும் தி.மு.க.விற்கு ஓர் அங்கீகாரம்தான்!

“திராவிடம் அனைத்திந்தியத் தன்மை வாய்ந்தது” என்று கமலகாசன் கூறுவது சரிதான்! திராவிடப் பெயரை வடநாட்டில் உருவாக்கியவர்கள் ஆரியர்கள். தென்னாட்டுப் பிராமணர்களைப் பஞ்ச திராவிடர்கள் என்றார்கள் அவர்கள்! தமிழர்களைத் “திராவிடர்கள்” என்று குறிப்பதைத்தான் நாம் தவறு என்று கூறுகிறோம். மற்றவர்கள் தங்களைத் திராவிடர்கள் என்றுக் கூறிக் கொண்டால், அதில் நாம் தலையிடவில்லை.

தமிழ்நாட்டில் தமிழர்கள் தங்கள் தற்காப்பு அடிப்படையில் இன உணர்ச்சி கொள்ளும் போதெல்லாம் அதை மடைமாற்றிப் பேசுவது கமலகாசனுக்கு வாடிக்கை!

இயக்குநர் பாரதிராசா தலைமையில், காவிரி உரிமைக்காகத் தமிழ்த்திரை உலகினர் நெய்வேலி அனல் மின் நிலைய முற்றுகைப் போராட்டம் நடத்திய போது, “போராட்டத்தினால் காவிரியில் தண்ணீர் வர வேண்டும். இரத்தம் வரக்கூடாது” என்றார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரைத் தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று மாற்ற வேண்டும் என்று தமிழ் நடிகர்கள் கோரிக்கை வைத்த போது, “அனைத்திந்திய நடிகர் சங்கம்” என்று மாற்றலாம் என்று கருத்து மாற்றம் கூறினார் கமலகாசன்.

இந்திய அடையாளமும் திராவிட அடையாளமும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன! சபாஷ் கமலகாசன், பூணூல் அணியாமலும் பிராமணியம் பேசலாம்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: tamizhthesiyam.com

Sunday, August 6, 2017

தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் அவர்களுக்கு வீரவணக்கம்!

தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் அவர்களுக்கு வீரவணக்கம்! 
 
தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் கா. பரந்தாமன் அவர்கள், உடல் நலக்குறைவு காரணமாக 29.06.2017 அன்று பிற்பகல் மதுரையில் காலமானார். 
 
திரு. பழ. நெடுமாறன் அவர்களின் வழிகாட்டுதலில் பொதுவாழ்வில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட திரு. பரந்தாமன், தமிழ்த்தேசியக் களத்தில் தொடர்ந்து செயலாற்றி வந்தவர். 
 
கடந்த 2002ஆம் ஆண்டு செயல்லிதா ஆட்சியில் திரு. பழ. நெடுமாறன், மருத்துவர் தாயப்பன், சுப. வீரபாண்டியன், சாகுல் அமீது, பாவாணன் ஆகியோரோடு பரந்தாமன் அவர்க‍ளும் பொடாவில் கைது செய்யப்பட்டார்.  அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில் "ஈழத்தமிழருக்கு ஆதரவாகப் பேசியதைத் தமிழக அரசு தவறு என்று க‍ருதினால், அதைத் தொடர்ந்து செய்வேன்" என்று கூறினார். பொடா சிறையில் அடைக்கப்பட்டு, 525 நாட்களுக்குப் பிறகே பிணையில் விடுதலையானார்.

கடைசியாக, கடந்த சூன் 26ஆம் நாள் (2017), மதுரையில் "மக்கள் கண்கானிப்பகம்" ஒருங்கிணைத்து நடத்திய, சித்திரவதைக்கு எதிரான கண்டனக் கூட்டத்தில், அவர் உரையாற்றினார்.

30.06.2017 அன்று அவர் சொந்த ஊரான மானாமதுரையில் எவ்வித சடங்குகளுமின்றி, தமிழர் தேசிய முன்னணித் தலைவர் திரு. பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெற்ற இறுதி வணக்க நிகழ்வில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயர்க்குழு உறுப்பினர் தோழர் இரெ. இராசு, பொதுக்குழு உறுப்பினர் தோழர் கதிர்நிலவன், தோழர்கள் கரிகாலன், புருசோத்தமன், வழக்கறிஞர் அருணாச்சலம் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்க‍ள் நேரில் சென்று வீரவணக்கம் செலுத்தினர்.

தன் வாழ்வின் இறுதிவரை தமிழ்த்தேசிய இலட்சியத்தை உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்து மறைந்த "தமிழ்த்தேசியப் போராளி" கா. பரந்தாமன் அவர்களுக்கு வீரவணக்கம்!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: WWW.tamizhthesiyam.com

Tuesday, August 1, 2017

“ஆரியப் பேரினவாதம் தமிழை ஏற்காது!” மதுரை வழக்கறிஞர்களின் காலவரம்பற்ற உண்ணாப் போராட்டத்தில் . . .தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் உரை !

“ஆரியப் பேரினவாதம் தமிழை ஏற்காது!” மதுரை வழக்கறிஞர்களின் காலவரம்பற்ற உண்ணாப் போராட்டத்தில் . . .தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் உரை !
சென்னை உயர் நீதிமன்றத்திலும், அதன் மதுரைக் கிளையிலும் தமிழை வழக்காடும் மொழியாக ஆணையிட வலியுறுத்தி, வழக்கறிஞர்களும் இன உணர்வாளர்களும் 9 பேர், சூலை 27 - 2017 முதல் மதுரை மாநகர் காளவாசல் பகுதியில், காலவரம்பற்ற உண்ணாப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த உண்ணாப் போராட்டத்தில், வழக்கறிஞர் கு. பகத்சிங், வழக்கறிஞர் வே. முருகன், வழக்கறிஞர் ச. எழிலரசு, வழக்கறிஞர் மு. வேல்முருகன், வழக்கறிஞர் மு. செல்வக்குமார், வழக்கறிஞர் வே. திசையிந்திரன், மே பதினேழு இயக்கத் தோழர் மெய்யப்பன், மருது மக்கள் இயக்கம் தோழர் செ. முத்துப்பாண்டியன், இசுலாமிய சனநாயக முன்னணி தோழர் மதுக்கூர் அ. மைதீன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், பொருளாளர் தோழர் அ. விடியல், மாநகரச் செயலாளர் தோழர் இரெ. இராசு, பொதுக்குழு உறுப்பினர் தோழர் கதிர்நிலவன், மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் மேரி, தோழர்கள் சிவா, இளமதி, தங்கப்பழனி ஆகியோர் நான்காம் நாள் (30.07.2017) உண்ணாப் போராட்டப் பந்தலில் சந்தித்து, அவர்களின் போராட்ட இலட்சியத்துக்கு ஆதரவு தெரிவித்து, அவர்களின் ஈகத்திற்கு வாழ்த்துக் கூறினர்.

போராட்டத்தை வாழ்த்தியும், போராளிகளைப் பாராட்டியும் தோழர் பெ. மணியரசன் பேசியதன் எழுத்து வடிவம் :
“தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் இந்தப் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தமிழை உயர் நீதிமன்ற வழக்குமொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை அனைவரும் ஒருசேர வலியுறுத்தி இந்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.

அ.தி.மு.க. ஆட்சியிலும், தி.மு.க. ஆட்சியிலும் இதற்காக சட்டப்பேரவைத் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டு, அவை இந்திய அரசுக்கு முறைப்படி ஆளுநர் வழியாக அனுப்பப்பட்டன. எனவே, இங்கு தமிழை உயர் நீதிமன்ற மொழியாக்குவதில் எந்தக் கட்சிக்கும் மாற்று கருத்துகள் இல்லை. எனவே, நாம் ஒன்றுபட்டு இக்கோரிக்கையை எடுத்துச் சென்று போராடுவதற்கான தருணம் இது!

இந்திய அரசமைப்புச் சட்டம், தமிழர்களை அடிமைப்படுத்தும் அடிமை சாசனம் என்பதே எங்கள் கருத்து! இருந்தாலும், அதில் வழங்கப்பட்டுள்ள குறைந்தபட்ச உரிமைகளைக்கூட இந்திய அரசு வழங்குவதில்லை. அதிலும், தமிழர்களுக்கு அந்த உரிமைகள் அறவே இல்லை என்றாகிவிட்டது!

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 348 (2)இன்படி, மாநில அரசு ஆளுநர் வழியாக - அம்மாநில மொழியை உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்கப் பரிந்துரைத்தால் இந்திய அரசு அதை ஏற்றுச் செயல்படுத்த வேண்டும். இந்தி மாநிலங்களில் உறுப்பு 348 (2)-ஐப் பயன்படுத்தி இந்தியை அவர்கள் உயர் நீதிமன்ற வழக்கு மொழியாக அறிவித்து, செயல்படுத்தி வருகின்றனர். ஆனால், இது ஏன் தமிழுக்குப் பொருந்தாது என்கிறார்கள்? இதைத்தான் நாங்கள் இனப்பாகுபாடு என்கிறோம்!

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 153(ஏ)வின்படி, இந்த “இனப்பாகுபாடு” தண்டனைக்குரிய குற்றமாகும்! ஆனால், இந்தக் குற்றத்தைச் செய்வது இந்திய ஆட்சியாளர்களும், உச்ச நீதிமன்றமும் என்பதுதான் வேதனை; வேடிக்கை!
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் விருப்பு வெறுப்புக்கு ஏற்றபடி நீதி வழங்க முடியுமா? அவ்வாறு வழங்க முடியுமெனில் இந்திய அரசமைப்புச் சட்டம் எதற்கு? அதன் பெயரால் உறுதி எடுப்பதெல்லாம் மோசடி அல்லவா?

தமிழை வழக்கு மொழியாக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு கோரிக்கை அனுப்பினால், அதை இந்திய ஆட்சியாளர்கள் உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு அனுப்புகிறார்கள். எதற்காக அதை உச்ச நீதிமன்ற பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்? உச்ச நீதிமன்றத்தில் சட்டங்களில் சரி தவறுகளை பார்க்கலாமே தவிர, உச்ச நீதிமன்றமே சட்டமியற்றிக் கொண்டிருக்க அதிகாரமுண்டா? அப்படியென்றால், நாடாளுமன்றம் -_- சட்டமன்றம் எதற்காக?

இந்திய அரசு, உச்ச நீதிமன்றத்திடம் தன் சட்ட நடைமுறைகளில் சில விளக்கங்களை (Clarifications) கேட்கலாமே தவிர, அதன் பரிந்துரைக்கு அனுப்புவது எதற்காக? இதில் என்ன சட்டக் குழப்பம் இருக்கிறது? அரசமைப்புச் சட்ட 348(2) படி, இச்சிக்கலுக்குத் தீர்வு காண வேண்டியதுதான் நடுவண் அரசின் வேலை!

எனவே, தமிழை உயர் நீதிமன்ற வழக்கு மொழியாக்கக் கூடாது என்பதற்காக சூழ்ச்சியாக உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு அத்தீர்மானத்தை இந்திய அரசு அனுப்பியது. இது பச்சை அயோக்கியத்தனம் அல்லவா?

காங்கிரசும், பா.ச.க.வும் அண்ணன் தம்பிகள் போல, இருவருக்கும் பெரிய அளவில் கொள்கை வேறுபாடுகள் கிடையாது. எனவேதான், இவ்விருவரும் இந்திய அரசை ஆளும்போது, தமிழை வழக்கு மொழியாக்க மறுத்தார்கள்.

இங்கே கூட்டாட்சி நடப்பதாகக் கூறப்படுகின்றது. ஆனால், தமிழை வழக்கு மொழியாக்கினால் “தேசிய ஒருமைப்பாடு”க்கு ஆபத்து வந்துவிடும் எனக் கூப்பாடு போடுகிறார்கள். உண்மையில், “தேசிய ஒருமைப்பாட்டு”க்கு அல்ல - வடக்கத்தியரின் ஆரிய மேலாதிக்கத்திற்குத்தான் இது ஆபத்து என்று அவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆரிய மொழியான சமற்கிருதம் போட்ட கலப்பினக் குட்டிதான் இந்தி! எனவே அதை வழக்கு மொழியாக்க அவர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை. சமற்கிருதத்தையே வழக்கு மொழியாக அறிவித்தால்கூட, அங்கு எதிர்ப்புகள் எழாது!
அண்மையில் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், பா.ச.க.வின் ‘ஆரியத்துவாப் பொறுக்கி’ சுப்பிரமணிய சாமி, “ஒரு நாட்டில் ஒரு மொழிதான் இருக்க வேண்டும். அதுபோல் இந்தியாவுக்கு இருக்க வேண்டிய ஒரு மொழி சமற்கிருதம்தான். இடைக்காலத்திற்காகத் தான் இந்தி இருக்கிறது, ஏனெனில், இந்தியை சமற்கிருத வரி வடிவத்தில்தான் இப்பொழுது எழுதுகிறோம். எனவே கொஞ்ச நாளைக்கு இந்தி! அதன்பிறகு சமற்கிருதம்தான் இந்தியாவின் ஒற்றை மொழியாக இருக்க வேண்டும். இப்போது தமிழில் 40 விழுக்காடு சமற்கிருதச் சொற்கள் கலந்துள்ளன. மலையாளத்தில் 70 விழுக்காடு சமற்கிருதச் சொற்கள் இருக்கின்றன. இதேபோல் இந்தியாவிலுள்ள எல்லா மொழிகளிலும் சமற்கிருதச் சொற்கள் நிறைய இருப்பதால், எல்லோராலும் சமற்கிருதத்தை எளிதில் புரிந்து கொள்ள முடியும். எனவே, தமிழை சமற்கிருத வரி வடிவத்தில் எழுதிப் பழக வேண்டும்” என்று கூறினார்.

அவர் வெளிப்படையாகக் கூறி வருவதைத்தான் காங்கிரசும், பா.ச.க.வும் ஒளித்து, மறைத்து செய்து வருகின்றன. பா.ச.க.வைப் போலவே, காங்கிரசும் சமற்கிருதத் திணிப்புக் கொள்கை உடையதுதான்! ஏன் காங்கிரசின் அனைத்திந்தியத் தலைமை, பா.ச.க.வின் சமற்கிருதத் திணிப்புக்கு எதிராக முழங்குவதில்லை?

ஒரே வரி - ஒரே மொழி - ஒரே மையம் என்று இந்திய அரசு செயல்படுகின்றது. நமக்கு மாநில உரிமைகள் பறிக்கப்படுவதைப் போல், அனைத்து மாநிலங்களுக்கும்தான் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. ஆனால், நீட் - ஜி.எஸ்.டி. என மாநில உரிமைப் பறிப்புகளுக்கு எதிராக, பீகார், உ.பி., ம.பி., ராசஸ்தான் போன்ற இந்தி மாநிலங்கள் ஏன் கொதித்தெழுவதில்லை?

நடுவண் அரசு வலுப்படுவது என்பது, இந்தி பேசுவோரின் அரசு வலுப்படுகிறது என்று பொருள்! அவர்களுக்கு மாநில அரசு, ஒரு வட்டார அரசு போல! இந்திய அரசு - தங்களது சொந்தப் பேரரசு என்று கருதுகிறார்கள்!

தற்போது அவர்களது ஆரிய இனத்திற்கு ஒரு பேரரசர் போல, நரேந்திர மோடி கிடைத்திருக்கிறார். மற்ற மாநிலங்களின் உரிமைகளெல்லாம் பறிக்கப்பட்டு, தங்களின் இந்திப் பேரரசு மோடியின் ஆட்சியின் கீழ் வலுப்படுத்தப்பட்டு வருகிறது என்ற பூரிப்பு அவர்களுக்கு இருக்கிறது. எனவேதான் அவர்கள் மாநில அரசுகளின் உரிமைப் பறிப்புகளுக்கு எதிராகக் கொந்தளிப்பதில்லை!

இந்தியாவிலேயே வரி வசூலில் அதிகத் திறனுடைய மாநிலம் தமிழ்நாடு! நம்முடைய மாநிலத்தில் வரி வசூலித்து, அதை இந்தி மாநிலங்களுக்குக் கொடுக்கிறார்கள். ஆனால், வறட்சி - புயல் பாதிப்பை சந்திக்கும் நாம் 100 ரூபாய் கேட்டால், வெறும் 3 ரூபாய்தான் கொடுக்கிறார்கள். இது இனப்பாகுபாடு இல்லையா?
விந்திய மலைக்கு வடக்கே மற்றும் கிழக்கிலும் மேற்கிலும் இரு கடல்கள் வரை உள்ள மண்டலம் ஆரிய வர்த்தம் என்றார் மனு. அந்த ஆரிய வர்த்தத்தின் ஆட்சிதான் இப்போது நடக்கிறது. அதற்கு சரியான அடியாளாக நரேந்திர மோடி கிடைத்திருக்கிறார்.

மோடி குசராத்தியாக இருந்தாலும் ஆரிய வைசியர். அதுமட்டுமல்ல, இந்திக்காரரை விஞ்சிய இந்தி வெறியர்!

இரசியர்கள் தங்களை மகா இரசியர் என்றுகூறி தற்பெருமை கொள்வார்களாம். இரசியர் அல்லாத ஜார்ஜியராகப் பிறந்த ஸ்டாலின், இரசியர்களைவிடத் தீவிரமாக இரசிய மொழித் திணிப்பிலும், இரசியப் பெருமிதவாதத் திணிப்பிலும் ஈடுபட்டார். அப்போது நோய்வாய்ப்பட்டிருந்த லெனின், ஸ்டாலினின் இரசியத் திணிப்பை அறிந்து, இரசியராய்ப் பிறந்தவரைவிட மகா இரசியராக ஸ்டாலின் இருக்கிறார் என்று கண்டித்தார். இது லெனின் தொகுப்பு நூல்களில் உள்ளது.

எனவே, மாநில உரிமைகளைப் பறிக்கும் மோடியின் ஆரிய ஆதிக்கவாதத்துக்கு வடக்கத்தியரிடம் எதிர்ப்புகள் வருவதில்லை!

வங்காளம், மராட்டியம் போன்ற மொழிகளில் இலக்கியச் செழுமை இருந்தாலும், அவை சமற்கிருத மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. அதுபோல், தெற்கில் தமிழ்மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகள் ஆரிய சமற்கிருதக் கலப்பிலேயே உயிர் வாழ்பவை. “மொழி ஞாயிறு” பாவாணர் அவர்கள் கூறுவார். “தமிழ் தவிர்த்த இதரத் தென்னிந்திய மொழிகளில் வடசொல் சேரச் சேர அம்மொழிகள் சிறப்புப் பெறும்! தமிழோ வடசொல் தீரத் தீர சிறப்புப் பெறும்!”.

நீட் தேர்வில் தமிழ்நாடுதான் கடுமையாக பாதிக்கப் படுகின்றது. இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில்தான் இருக்கின்றன. எனவே, இங்கு வெளி மாநிலத்தவரை மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கத் துடிக்கிறார்கள். ஏற்கெனவே, வெளி மாநிலத்தவரை தொடர்வண்டித் துறை முதற்கொண்டு இந்திய அரசின் அனைத்துத் துறைகளிலும் தேர்வு என்ற பெயரில் மோசடிகளையும் முறைகேடுகளையும் அரங்கேற்றி, தமிழ்நாட்டில் திணித்துக் கொண்டுள்ளார்கள். நீட் தேர்வு நிலைமையை இன்னும் மோசமாக்கப் போகிறது.

தொடக்கத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.எஸ்.இ. மாணவர்களை அதிகமாகச் சேர்ப்பார்கள். சில ஆண்டுகள் கழிந்ததும், அனைத்திந்திய அளவில் மதிப்பெண் வரிசைப்படி வடநாட்டு மாணவர்களையும் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களையும் தமிழ்நாட்டில் அதிகமாகச் சேர்ப்பார்கள். மண்ணின் மக்கள் பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு, தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காது!

எனவேதான், நம் மீது இனப்பாகுபாடு காட்டப்படுகிறது எனத் திரும்பத் திரும்ப சொல்கிறோம். நாம் சட்ட நுட்பங்களை மட்டும் பேசிக் கொண்டிருந்தால் போதாது. இந்திய அரசின் இனப்பாகுபாட்டை அம்பலப்படுத்த வேண்டும்! நமக்கான இன உரிமையைப் பேச வேண்டும்!

நம் தமிழ்ப்பேராசான் வள்ளுவப் பெருந்தகை, “நோய்நாடி நோய் முதல் நாடி” என்றார். நாம் சிக்கலின் தன்மையைப் புரிந்து அதன் வேரை அறிந்து கொள்ள வேண்டும். இந்திய அரசின் ஆரியப் பேரினவாத அரசியலை அடையாளம் காண வேண்டும்.

இங்கே காலவரையற்ற உண்ணாப் போராட்டம் நடத்தி வரும் தோழர்களில் வழக்கறிஞர்கள் கு. பகத்சிங், வே. முருகன், ச. எழிலரசு, மு. வேல்முருகன், மு. செல்வக்குமார், வே. திசையிந்திரன் ஆகியோர் கடந்த முறையும் இதே காலத்தில் இதே இலட்சியத்திற்காக காலவரம்பற்ற உண்ணாப் போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்கள் நடத்தியுள்ளார்கள். இதே கோரிக்கை அட்டையை ஏந்தி சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அரங்கில் அமைதியாக அமர்ந்து அறப்போராட்டம் நடத்தினார்கள். அதனால் இவர்களின் வழக்கறிஞர் தொழில் செய்யும் உரிமைப் பறிக்கப்பட்டது.

ஒருமுறை பாதிப்புகளை எதிர்கொள்வோர் மீண்டும் போராட்டக்களத்திற்கு வருவதில்லை என்ற கூற்றை உடைத்து சுக்குநூறாக்கி, அந்த பாதிப்புகளையெல்லாம் எதிர்கொண்டு, இப்போது மீண்டும் போராட்டக் களத்திற்கு வந்துள்ளனர். இந்த ஈகத்தை - போர்க்குணத்தை நாம் பாராட்ட வேண்டும்!

புறநானூற்றில் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்ற பாண்டிய மன்னன் பாடிய ஒரு பாடல் உள்ளது. “இந்த உலகம் ஏன் இயங்குகிறதென்றால், இந்திரன் அருந்தும் அமிழ்தமே கிடைத்தாலும் _ தான் மட்டும் உண்ணாமல் பிறருக்கும் அளித்து உண்ணும் மனிதர்கள் இருக்கிறார்கள். ஒரு தவறு செய்தால், உலகமே கிடைக்கும் என்றாலும், அத்தவறை செய்ய மாட்டார்கள். உயிரே போகுமென்றாலும் பிறருக்கு நலம் பெயர்க்கும் செயலை செய்வார்கள். தனக்கென வாழாது, பிறர்க்கென வாழும் இப்படிப்பட்ட மாந்தர்கள் இருப்பதால்தான் இந்த உலகம் இயங்குகிறது” என்று “உண்டாலம்ம” என்று தொடங்கும் பாடலில், 2500 ஆண்டுகளுக்கு முன்பு கூறினார்.

அந்த ஈக உணர்ச்சியின் தொடர்ச்சி தமிழினத்தில் இன்றைக்கும் இருக்கிறது என்பதற்கான சான்றுகளில் ஒன்றே இந்த ஒன்பது பேரின் காலவரம்பற்ற உண்ணாப்போராட்டம்! இக்கோரிக்கை வெல்ல வேண்டும்! இந்தப் போராட்டத்தைத் தமிழ் மக்கள் கையெலடுக்க வேண்டும்! இப்பணியில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் தன்னையும் ஈடுபடுத்திக் கொள்கிறது! உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! நன்றி! வணக்கம்!”.

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் பேசினார்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT