உடனடிச்செய்திகள்
Showing posts with label தோழர் பெ. மணியரசன் இரங்கல்!. Show all posts
Showing posts with label தோழர் பெ. மணியரசன் இரங்கல்!. Show all posts

Friday, April 24, 2020

செயல் மறவர் ந. மதியழகனுக்கு வீரவணக்கம்! பெ. மணியரசன் இரங்கல்!


செயல் மறவர் ந. மதியழகனுக்கு வீரவணக்கம்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் இரங்கல்!


திருச்சி துவாகுடி ஜி.பி. இன்ஜினியரிங் தொழிற்சாலையின் தொழிற்சங்கச் செயலாளரும், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் முன்னணிச் செயல் வீரருமான தோழர் ந. மதியழகன் நேற்று (23.04.2020) இரவு ஈரோடு மருத்துவமனையில் காலமான செய்தி பேரதிர்ச்சியைத் தருகிறது.
அஞ்சா நெஞ்சன், அறிவார்ந்த செயல்வீரன், பழகுதற்கு இனிய பண்பாளன் என்று தோழர் மதியின் குணநலன்களை அடுக்கலாம்.
இளம் அகவைதான்! இரண்டு மாதங்களுக்கு முன்பே உடல் நலம் குன்றிட தஞ்சைத் தனியார் மருத்துவமனையில் அவர் அண்ணன் வழக்கறிஞர் ந. துரைராசு கவனிப்பில் சிகிச்சை பெற்று வந்தார்.
உடல் நலம் ஓரளவு குணமாகி திருச்சி பெல் நகரிலுள்ள தமது இல்லத்தில் ஓய்வு எடுத்து வந்தார். மறுபடியும் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஈரோட்டில் மாமனார் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தோழர் மதி, ஈரோடு அரசு மருத்துவமனையில் நேற்று இரவு காலமாகிவிட்டார்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத்திற்கு ஒரு செயல் வீரர் இழப்பு; சக தொழிலாளிகளுக்கு, வேலை இழந்த சோதனையான காலத்தில் வழிகாட்டிச் செயல்பட்ட தலைமைத் தோழர் இழப்பு; எல்லாவற்றிற்கும் மேலாகத் தோழர் ந. மதியழகனின் இளம் மனைவிக்கும் படித்துக் கொண்டிருக்கும் மகளுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு!
இரண்டாண்டுகளுக்கு மேலாக, நிர்வாகக் கோளாறால் ஜி.பி. ஆலை மூடப்பட்ட நிலையில் தொழிலாளர்களின் சம்பள பாக்கி, மாற்று வேலை மற்றும் சட்டப்போராட்டம் என எல்லாவற்றிலும் முன்னணிப் பொறுப்பேற்று செயல்பட்டதுடன், தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்திய தமிழர் இன உரிமைப் போராட்டங்களிலும், மது ஒழிப்புப் போராட்டங்களிலும் - தான் ஈடுபட்டதுடன் தன் குடும்பத்தினரையும் ஈடுபட செய்த தோழர் மதிக்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மதியின் குடும்பத்தினர் அனைவர்க்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Monday, August 15, 2016

.“திரைப்பாடல் இலக்கியத்தில் தமிழை உயர்த்திய கவிஞர் நா. முத்துக்குமார் தோழர் பெ. மணியரசன் இரங்கல்!

.

.“திரைப்பாடல் இலக்கியத்தில் 
தமிழை உயர்த்திய கவிஞர் நா. முத்துக்குமார்”

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் இரங்கல்!


கவிஞர் நா. முத்துக்குமார் அவர்களின் மறைவு, பேரதிர்ச்சியைத் தருகிறது. இளம் அகவையில் இலக்கிய நாட்டத்துடன் கவிஞராக அரங்குகளிலும், பின்னர் திரைப்படத் துறையில் இலக்கியத் தரமும் புதிய உத்திகளும் கொண்ட பல பாடல்களை எழுதி மக்கள் மனத்தில் நீங்கா இடம் பெற்றவர்.
இக்காலத்தில் கலை இலக்கிய வளர்ச்சியில் – திரைத்துறைக்கு முகாமையான பங்களிப்புச் செய்தவர். அந்த வகையில் திரைப்பாடலில் தமிழின் சமகால வளர்ச்சிக்கு பெரும் பங்களித்தவர் முத்துக்குமார். அவருடைய மாணவர் பருவத்தில், காஞ்சிபுரத்தில் நடந்த எமது “தமிழ்க் கலை இலக்கியப் பேரவை” கூட்டங்களில் வந்து ஆர்வத்தோடு கலந்து கொண்டவர் முத்துக்குமார்.
தமிழ் மொழி உணர்வு - தமிழ் இன உணர்வு ஆகியவற்றிலும் அக்கறை கொண்டவர். சிறந்தத் திரைப்பாடலுக்காக அனைத்திந்திய அரசு விருது உட்பட பல்வேறு விருதுகள் பெற்றவர். தமிழ் இலக்கிய மற்றும் சமூகவியல் துறையில், இன்னும் எவ்வளவோ சாதனைகள் படைக்க வேண்டிய நிலையில், அவர் காலமானது பேரிழப்பாகும். அதேவேளை, அவருடைய கவிதைகள் – திரைப்பாடல்கள் – கட்டுரைகள் வழியாக கவிஞர் நா. முத்துக்குமார் நிரந்தரமாகத் தமிழுலகில் வாழ்ந்து கொண்டிருப்பார்.
கவிஞர் நா. முத்துக்குமார் மறைவுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆறுதல் கூறிக் கொள்கிறேன்.

Saturday, August 13, 2016

தோழர் அ.கோ. கஸ்தூரி ரெங்கன் அவர்களுக்கு வீரவணக்கம்..! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் இரங்கல்!


தோழர் அ.கோ. கஸ்தூரி ரெங்கன்
அவர்களுக்கு வீரவணக்கம்..!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் இரங்கல்!


தமிழர் தன்மானப் பேரவை நிறுவனத் தலைவர் தோழர் அ.கோ. கஸ்தூரி ரெங்கன் அவர்கள் கடந்த 10.08.2016 அன்று உடல்நலக் குறைவால் காலமான செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது.
கடந்த மாதம் தஞ்சைத் தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்த போது, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்களுடன் அங்கு சென்று தோழர் அ.கோ.க. அவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தோம்.
சரியாகப் பேச முடியாத அளவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தாலும் என்னை அடையாளம் கண்டு ஒரு சில சொற்கள் பேசினார். ஓரளவு நலம் பெற்று ஊர் திரும்பிய அ.கோ.க. மறுபடியும் உடல்நலம் குன்றி நாகை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்குதான் அவர் காலமாகியுள்ளார்.
பெரியாரியவாதியாக, மார்க்சியவாதியாகக் கீழத்தஞ்சை மாவட்டத்தில் மக்களைத் திரட்டி உரிமைப் போராட்டங்கள் பல நடத்தியவர் அ.கோ.க.
மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சித் தலைமையில் அவர் செயல்பட்ட போது, உழவுத் தொழிலாளர்கள் உரிமைகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் சம உரிமைக்காகவும் களம் பல கண்ட வீரர் அவர்.
ஒரு வழக்கில் சிறைப்பட்ட போது அங்கேயும் சிறைவாசிகளுக்குக் கமுக்கமாக சங்கம் ஏற்படுத்தி, அவர்களின் போராட்டங்களை நடத்தியவர்களில் அ.கோ.க. தலைமையானவர்!
சிறந்த நுண்ணறிவு படைத்த அ.கோ.க. எந்தச் சிக்கலையும் உடனடியாகப் புரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவர். நான்கு அமைப்புகள் சேர்ந்து தமிழ்த் தேசிய முன்னணி என்ற கூட்டமைப்பு உருவாக்கியதில் தோழர் அ.கோ.க. அவர்களுக்குக் காத்திரமான பங்குண்டு. இளைஞர்களை ஈர்க்கும் ஆற்றல் பெற்றவர்.
தோழர் அ.கோ.க. அவர்களுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வீரவணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன். அ.கோ.க. அவர்களின் இயக்கத் தோழர்களுக்கும் குடும்பத்தாருக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT