‘யாருக்கும் வாக்களிக்காதீர்கள்’ என பரப்புரை செய்து வருகிறது தமிழ் தேசப் பொதுவுடமைக் கட்சி.

‘இந்திய ஜனநாயகத்தின் மீது அப்படி என்ன வெறுப்பு?’ தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சி தலைவர் பெ.மணியரசனிடம் கேட்டபோது, “நாடாளுமன்றத் துக்கு 543 எம்.பி-க்கள் தேர்வாகப் போகிறார்கள். இதில் தமிழகத்தின் பங்கு 39 மட்டுமே. 7.21 கோடி மக்களைக் கொண்ட தமிழ கத்துக்கு நாடாளுமன்றத்தில் உரிய பிரதிநிதித்துவம் இல்லை. இந்த 39 பேருமே ஓரணியில் நின்று குரல் கொடுத்தாலும் தமிழக கோரிக்கைகள் எதையும் வென்றெடுக்க முடியாது.


தமிழகத்தைவிட குறைவான மக்கள் தொகை கொண்ட நாடுகள் கூட ஐ.நா. மன்றத்தில் வாக்களிக்க முடியும். ஆனால் தமிழகத்தின் குரல் இந்திய நாடாளுமன்றத்திலேயே எடுபடுவதில்லை. நமக்கு தொடர்பில்லாத மாநிலங்களை, சமூகத்தை இந்தியக் கூட்டாட்சியில் ஒருங்கிணைத்தது ஆங்கிலேயர்கள் செய்த தவறு இது.

நாடாளுமன்றத் தேர்தல் என்பது இந்திய அரசுக்கு நாங்கள் அடிமையாக இருக்கிறோம் என்பதற்கு ஒப்புதல் அளிப்பது. எனவேதான் இந்தத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்கிறோம். நமக்கான தேவைகளை நாமே முடிவு செய்துகொள்ளும் வகையில் சுயநிர்ணயம் வழங்கப்பட வேண் டும். இது தேவையா இல்லையா? என்பது குறித்து மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை’’

நீங்கள் இப்படிச் சொல்வது பிரிவினைவாதம் இல்லையா? தமிழகம் தனி, கேரளம் தனி என தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கும் சூழல் அமைந்தால், முல்லைப் பெரியாறிலும் காவிரியி லும் நமக்கான உரிமைகளை கேட்க முடியுமா?

‘‘முல்லைப் பெரியாறு, காவிரி விவகாரங்களில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பை மத்திய அரசால் அமல்படுத்த முடியவில்லை. கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்கும்போது தமிழகத்திடம் சம்மதம் கேட்கவில்லை. இந்தியா விலிருந்து மூன்று ஆறுகள் பாகிஸ்தானை நோக்கிப் பாய்கின் றன. இந்தியாவில் உற்பத்தியாகும் கங்கை வங்கதேசம் நோக்கிப் பாய்கிறது.

நாடுகளுக்குள்ளே ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் பாகிஸ்தானுக்கும் வங்கதேசத் துக்கும் தண்ணீர் போய்க்கொண்டு இருக்கிறதே. அதேபோல், அந்தந்த மாநிலங்களே முடிவெடுத்துக் கொள்ளும் சூழல் ஏற்பட்டால், ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்தைச் சார்ந்து இருக்க வேண்டிய சூழல் இயல்பாகவே அமைந்துவிடும்.

முல்லைப் பெரியாறிலும் காவிரியிலும் தமிழகத்துக்கு தண்ணீர்விட மறுத்தால் கேரளாவுக் கும் கர்நாடகாவுக்கும் நெய்வேலி யிலிருந்து மின்சாரம் கொடுக்க மாட்டார்கள் என்ற பயம் வரும். இப்படி ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்தை நம்பி இருக்கும் சூழல் அமைந்துவிட்டால் பல முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்துவிடும். நாங்கள் எதிர்பார்ப்பதும் இதைத்தான்” என்றார்.