உடனடிச்செய்திகள்

Tuesday, June 19, 2018

“நலமாகி வருகிறேன் – நன்றி!” தோழர் பெ. மணியரசன்.

“நலமாகி வருகிறேன் – நன்றி!” பெ. மணியரசன் - தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
பேரன்புடையீர்,

வணக்கம். கடந்த 10.06.2018 இரவு 9 மணியளவில் தஞ்சையில் நான் தாக்கப்பட்டு விநோதகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 16.06.2018 அன்று வீடு திரும்பினேன்.

காயங்கள் விரைவாக ஆறி வருகின்றன. நன்கு கவனித்த தஞ்சை விநோதகன் மருத்துவமனை மருத்துவர்களுக்கும் உதவியாளர்களுக்கும் நிருவாகத்தினர்க்கும் நெஞ்சு நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள், உழவர் அமைப்புகள், வணிகர் அமைப்புகள் ஆகியவற்றின் தலைவர்களும் பொறுப்பாளர்களும், கலை இலக்கியத் துறைச் சான்றோர்களும் நேரில் வந்து பார்த்தும் தொலைப்பேசி வழியிலும் நலம் விசாரித்தார்கள். அவர்கள் அனைவர்க்கும் மனங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழர் நலன், மக்கள் உரிமை ஆகியவற்றிற்காகக் களத்தில் நிற்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொறுப்பாளர் என்ற அடிப்படையில் என் மீது பாசம் பொழிந்து நேரில் வந்து பார்த்தும் தொலைப்பேசியில் விசாரித்தும் ஆறுதல் கூறிய பல்லாயிரக்கணக்கான நண்பர்களுக்கும், உடன் பிறப்புகளுக்கும் தோழர்களுக்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டவன்.

வெளிநாடுகளில் வாழும் தமிழ்நாட்டுத் தமிழர்கள், தமிழீழத் தமிழர்கள் ஆகியோர் என்னைத் தாக்கியோர்க்கு எதிராகக் கண்டன அறிக்கைகள் வெளியிட்டும் தொலைப்பேசியில் ஆறுதல் கூறியும், எதிர்வினையாற்றினார்கள். அந்த அன்பு உறவுகளுக்கு உள்ளம் நிறைந்த நன்றி!

தமிழ்நாட்டிலும் இந்தியாவின் இதர மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் வாழும் அன்பு உறவுகள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட கண்டனங்கள் என்றும் நினைவில் நிற்கும்! அவர்கள் அனைவர்க்கும் நன்றி!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 11.06.2018 அன்றே சிறப்பு வினா எழுப்பி, நான் தாக்கப்பட்டதைக் கண்டித்ததுடன் முதலமைச்சரிடம் விளக்கம் கேட்ட தி.மு.க.வின் ஒரத்தநாடு தொகுதி உறுப்பினர் அண்ணன் ம. இராமச்சந்திரன் (எம்.ஆர்.) அவர்களுக்கும், அவரை அவ்வாறு வினா எழுப்பிட வழிகாட்டிய தி.மு.க. செயல் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றி!

என்னைத் தாக்கியவர்களைக் கண்டித்தும், உண்மையான குற்றவாளிகளைத் தளைப்படுத்த வலியுறுத்தியும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்திய – அவற்றில் பங்கேற்ற தோழமை இயக்கங்களுக்கும், மனித உரிமை ஆற்றல்களுக்கும் மனமார்ந்த நன்றி!

நான் தாக்கப்பட்ட பின், அரை மணி நேரத்திற்குள் தொலைக்காட்சிகளில் செய்தி வெளியிட்ட ஊடக நிர்வாகிகளுக்கும், விரைந்து செய்தி அனுப்பிய தஞ்சை செய்தியாளர்களுக்கும் நன்றி! மறுநாள், காலையிலிருந்து தொடர்ந்து இது தொடர்பான செய்திகளை வெளியிட்ட ஏடுகளுக்கும், அவற்றின் தஞ்சை செய்தியாளர்களுக்கும் நன்றி!

மனித நேயத்துடனும், தமிழ் – தமிழர் நேயத்துடனும் கட்சி கடந்து – அமைப்புகள் கடந்து என் மீது அன்பு பொழிந்த அனைவருக்கும் நன்றிகள் பல!

துடித்தெழுந்த செயல்பட்ட தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்!

தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுத்து வரும் தமிழின உரிமைப் போராட்டங்கள் - தமிழர் வாழ்வுரிமைக் காப்புப் போராட்டங்கள் ஆகியவற்றை முடக்கிப் போடவும், அவ்வியக்கத்தின் தலைவராக உள்ள என் செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் திட்டமிட்டு - அரம்பர்களை ஏவி என்னைத் தாக்கியுள்ளார்கள்.

இந்தத் தாக்குதல் என்பது, என் தமிழ் மக்களுக்கு நான் ஆற்றிவரும் உண்மையான பணிகளுக்கு எதிரிகள் எதிர்வகையாகக் கொடுத்த நற்சான்றிதழ் என்றே எடுத்துக் கொள்கிறேன். இந்நிகழ்வால் பாதிக்கப்பட்ட என் மீது - என் தமிழ் மக்கள் பொழிந்த அன்பு – நேர்வகைச் சான்றிதழ்!

என் உயிருள்ளவரை நம் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்களில் தொடர்ந்து களத்தில் நிற்பேன் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி, வணக்கம்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Monday, June 18, 2018

காவிரி மீட்பு வெற்றி விழாவா? வெற்று விழாவா? தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

காவிரி மீட்பு வெற்றி விழாவா? வெற்று விழாவா? காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
“காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட விளக்கப் பொதுக்கூட்டம்” என்ற தலைப்பில், இன்று (18.06.2018) மாலை மயிலாடுதுறையில், ஆளும் அ.தி.மு.க. மாபெரும் கூட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. அதில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.

கடந்த 09.06.2018 அன்றுதான், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இவ்வாண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையைத் திறக்க முடியாது – எனவே, நிலத்தடி நீர் பாசனத்தை ஊக்கப்படுத்த மின்சாரம் வழங்கப்படும் என்றும், மாற்றுப் பயிர் சாகுபடி செய்ய ஊக்கம் தரப்படும் என்றும் அறிவித்தார். ஒன்பது நாட்களுக்குள் காவிரியில் எந்த உரிமையை மீட்டார்? என்ன வெற்றி கண்டார்? எதற்காக “வெற்றி விழா”?

உச்ச நீதிமன்றம் 31.06.2018க்குள், காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்திட காலவரம்பிட்டு இறுதித் தீர்ப்பு வழங்கி விட்டது. ஆனால், இந்திய அரசு இதுவரை மேலாண்மை ஆணையம் அமைக்கவில்லை. 

நடுவண் நீர் வளத்துறையின் வேறொரு பிரிவில் தலைவராக உள்ள மசூத் உசேன் என்பவரை காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் பொறுப்புத் தலைவராக அமர்த்திவிட்டு, ஒதுங்கிக் கொண்டது மோடி அரசு! நடுவண் அரசு அமர்த்த வெண்டிய இரண்டு முழு நேர உறுப்பினர்கள் – இரண்டு பகுதி நேர உறுப்பினர்கள், மற்றும் ஒரு செயலாளர் ஆகியோரை மோடி அரசு அமர்த்தாமல், தமிழ்நாட்டுக்கு எதிராக இனப்பாகுபாட்டு அரசியல் நடத்தி வருகிறது! 

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்கள் தங்களுக்குரிய தலா ஒரு பிரதிநிதியை ஆணையத்திற்கு நியமித்துவிட்டார்கள். கர்நாடகம் மட்டும் தனது பிரதிநிதியை நியமிக்கவில்லை! 

கர்நாடகம் தனது பிரதிநிதியை நியமிக்காததால், காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கு தடை ஒன்றுமில்லை! காவிரி ஆணையத்தின் சட்டதிட்டப்படி அதன் செயலாளருக்கு மட்டும் ஓட்டுரிமை இல்லை! எஞ்சிய ஒன்பது பேர் பெரும்பான்மை அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும். மேலாண்மை ஆணையத்தில் ஒன்று அல்லது இரண்டு மாநிலப் பிரதிநிதிகள் வராவிட்டாலும், தடை இல்லை!

குறைந்தபட்ச வருகையாக (கோரம்) மொத்தமுள்ள ஒன்பது பேரில் ஆறு பேர் வந்திருந்தால், கூட்டம் நடத்தலாம். எனவே, இப்பொழுது கர்நாடகப் பிரதிநிதி இல்லை என்பதால், மேலாண்மை ஆணையத்திற்கு நடுவண் அரசு அமர்த்த வேண்டிய உறுப்பினர்களை அமர்த்தாமல் இருப்பதும், ஆணையக் கூட்டத்தை நடத்தாமல் இருப்பதும் திட்டமிட்டு தமிழ்நாட்டைப் பழிவாங்குகிறது என்பதற்குரிய சான்றாகும்! 

நடுவண் அரசின் இந்தப் பழிவாங்கலுக்கு, துணை போகிறது எடப்பாடி அரசு! காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட நடுவண் அரசுக்கு எடப்பாடி அரசு அழுத்தம் கொடுத்து, இந்நேரம் அதில் வெற்றி பெற்று, சூன் மாதத்திற்குரிய 9 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகத்திலிருந்து திறந்து விடப்பட்டிருந்தால், ஆளுங்கட்சி “வெற்றி விழா” கொண்டாடலாம்! 

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, காவிரி உரிமை மீட்பில் தனது தோல்வியைத் தானே ஒத்துக் கொள்ளும் வகையில், குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என அறிவித்துவிட்டு, இப்பொழுது “காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட வெற்றி விழா” நடத்துவது முற்றிலும் முரண்பாடாக உள்ளது! 

அடுத்து, மேட்டூர் அணையில் 90 அடி தண்ணீர் தேங்கினால்தான் குறுவைக்குத் திறக்க முடியும் என்று பழைய நிலையில் இன்றும் பேசுவது சரியல்ல! மேலாண்மை ஆணையம் சூன் மாதத்திற்கு 9 டி.எம்.சி.யும், சூலை மாதத்திற்கு 30 டி.எம்.சி.யும், அதைப்போல் ஆகத்து மாதத்திற்கு உரிய தண்ணீரையும் திறந்துவிட வேண்டும்! அதுதான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு! எனவே, உடனடியாக மேலாண்மை ஆணையத்தை நடுவண் அரசு அமைக்கச் செய்து, மாதவாரியாக கர்நாடகத்திலிருந்து தண்ணீர் பெறும் உரிமையை செயல்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால், இன்னும் சில நாட்களில் குறுவைக்குத் தண்ணீர் திறக்க முடியும்! 

கர்நாடகத்தின் நான்கு அணைகளில் கபிணி, ஏமாவதி, ஏரங்கி அணைகள் நிரம்பிவிட்டன. கே.ஆர்.சாகரும் நிரம்பப் போகிறது. மாதவாரியாகத் திறந்துவிட, இதற்கு மேல் கர்நாடகத்திற்கு தண்ணீர் தேவை என்ன இருக்கிறது? தமிழ்நாடு முதலமைச்சர் இதைச் செயல்படுத்தி வைக்க, உருப்படியான நடவடிக்கை எடுத்தால், அவர் கேட்காமலே மக்கள் அவரைப் பாராட்டுவார்கள்! இதையெல்லாம் செய்யாமல், மேட்டூர் அணையைக் காயப்போட்டுவிட்டு, ஆற்று நீர்ப் பாசனக் குறுவையை கைவிடச் சொல்லிவிட்டு, போலி வெற்றி விழா கொண்டாடினால், அதை ஏற்றுக் கொள்ள இன்று மக்கள் தயாராக இல்லை என்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும். 

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery

Saturday, June 16, 2018

இலட்சியவாதிகளின் நம்பிக்கை ஒளி நபிகள் நாயகம்! தோழர் பெ. மணியரசன்.

இலட்சியவாதிகளின் நம்பிக்கை ஒளி நபிகள் நாயகம்! தோழர் பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். 
பெருக்கெடுத்து ஓடும் பேராறு, பல திசைகளில் சிதறி ஓடி, காலப்போக்கில் தனக்கான கரையைத் தானே உருவாக்கிக் கொள்கிறது. மண்ணை அறுத்து அறுத்து நிரந்தரமான பாதையை ஆறு அமைத்துக் கொள்கிறது. மனித சமுதாயத்தில் எவ்வளவோ சிதைவுகள், சீரழிவுகள், பண்புக் கேடுகள், பாதிப்புகள் உருவாகி, மனித வாழ்வு சிதறித் துன்புறும் போது அறிஞர்கள், அருளாளர்கள், புரட்சியாளர்கள் தலையிட்டு சமூகத்தைச் செம்மைப் படுத்துகிறார்கள்.

திருவள்ளுவப் பெருந்தகை, ஏசுபிரான், நபிகள் நாயகம், வள்ளலார் இராமலிங்க அடிகளார், காரல் மார்க்சு, காந்தியடிகள் முதலியவர்கள் சமூகத்தைச் சீர்த்திருத்த உருவாகிறார்கள்; சமூகம் உருவாக்கிக் கொள்கிறது.

இப்படிப்பட்ட சமூகச் சீர்திருத்தச் செம்மல்கள், புரட்சியாளர்கள் மற்றும் அவர்களைப் பின்பற்றும் மக்கள் இல்லையென்றால் இந்த மனித சமூகம் சீரழிந்து அழிந்துவிடும். இந்தப் பொருளில் தான் திருவள்ளுவப் பெருந்தகை “பண்புடையார் இருப்பதால் உலகம் இருக்கிறது; இல்லாவிடில் மண்ணாகிப் போயிருக்கும்” என்று கூறினார் (குறள் 996).

எல்லாப் புரட்சியாளர்களையும் போல் நபிகள் நாயகம் கடுந்துன்பங்களையும் எதிர்ப்புகளையும் சந்தித்தார். அவற்றிலிருந்தெல்லாம் வெற்றிகரமாக மீண்டு எழுந்தார்.

அன்னையின் வயிற்றில் ஆறுமாதக் கருவாக இருக்கும் போதே தந்தையை இழந்தார். ஆறு அகவையில் அன்னையை இழந்தார். எடுத்து வளர்த்த பாட்டனாரை எட்டு அகவையில் இழந்தார். பெரிய தந்தையால் வளர்க்கப்பட்டார்.

இடையறாத இறைச் சிந்தனையால் மனப் பக்குவம் பெற்றார். நாற்பதாம் அகவையில் நபிப் பட்டம் பெற்றார். “இறையுரைகள்” என்று போற்றப்படும் “திருக்குர் ஆன்” நபிகள் நாயகம் வாயிலாகவே வெளி வந்தது. நாயகத்தின் அருளுரைகள் மனித சமத்துவம் பேசின. மூடபப்பழக்க வழக்கங்களை எதிர்த்தன.

மன அழுக்கு கொண்டோரும் வஞ்சகர்களும், பிற்போக்காளர்களும் நாயகத்தின் சமூக மறுசீரமைப்புக் கருத்துகளை எதிர்த்தனர். எதிர்த்தனர் என்றால் – கருத்தை – கருத்தால் எதிர்க்கவில்லை. 

நபிகள் நாயகத்தின் சொந்த ஊரான மக்காவில் இருந்த பிற்போக்காளர்களும் தன்னலவெறியர்களும் நாயகத்தை “வஞ்சகன், பொய்யன், புரட்டன்” என்று சொல்லால் அடித்தனர். அதுமட்டுமா? கல்லால் அடித்தனர்; கழுத்தில் துணியைச் சுற்றி முறுக்கினர். ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தனர். குடும்பத்தோடு பல நாள் பட்டினி கிடந்தார் நாயகம்!

இன்றைக்கு மனித சமத்துவத்திற்காகவும் மக்கள் உரிமைக்காகவும் தேச விடுதலைக்காகவும் போராடுபவர்கள், நபிகள் நாயகம் ஏற்றுக்கொண்ட துன்பங்களிலிருந்து பாடம் கற்று ஊக்கம் பெற வேண்டும். அந்தத் துன்பங்களால் நபிகள் நாயகம் தமது கொள்கையை - இலட்சியத்தைக் கைவிடவில்லை. கொடியவர்களை எப்படி வெல்வது என்று சிந்தித்தார். மக்களைச் சந்தித்தார். மக்காவிலிருந்து மதீனாவுக்குத் தப்பிச் சென்று மக்களைத் திரட்டினார். மக்காவிலிருந்து மதீனாவுக்குப் புலம் பெயர்ந்து வந்த மக்களுக்கும் மதீனா மக்களுக்கும் இடையே உடன்பிறப்பு உறவை வலுப்படுத்தினார்.

மதீனாவில் இஸ்லாத்தைத் தீவிரமாகப் பரப்பும் முயற்சியில் இறங்கினார். பாதுகாப்புப் படைக் குழுக்களை உருவாக்கினார். மதீனாவிலும் சுற்றுப்புறங்களிலும் இருந்த பிற இனத்தாருடன் நல்லுறவு உடன்படிக்கை செய்து கொண்டார். எதிரிகளைக் குறைத்துக் கொண்டார். 

அதன்பிறகு, மக்காவின் பிற்போக்காளர்கள் மற்றும் தன்னலவெறியர்கள் மீது போர் தொடுத்தார் நாயகம். பதுரு, உகுது, அகழ் என முப்பெரும் போர்களை நடத்தி அவற்றில் வெற்றி கண்டார். இறுதியில் எதிர்ப்பு எதுவுமின்றி மக்காவைக் கைப்பற்றினார் நாயகம்!

அதன்பின் அறம் சார்ந்து மக்கள் நல்வாழ்வு வாழ்வதற்கான கருத்துகளை – கட்டளைகளை வழங்கினார். ஐம்பெரும் கடமைகளை மக்களிடம் எடுத்துக் கூறினார். 

கலிமா மொழிதல் (ஓர் இறைக் கொள்கை), 2. தொழுகை, 3. நோன்பு, 4. கட்டாயக் கொடை (வறியவர்களுக்கு நன்கொடையாக அளிக்கும் சக்காத்), 5. புனிதப்பயணம் (ஹஜ்).

இவையே ஐம்பெரும் கடமை! 

அண்டை அயல்நாடுகளிலும் இஸ்லாத்தைப் பரவச் செய்தார். 

மதுக் குடித்தும், விலை மகளிர் பெருக்கியும், வெறி கொண்டு சண்டையிட்டும், பல தெய்வங்களை வணங்கிப் பிணங்கியும், பிளவுண்டும் கிடந்த மக்களை ஓர் இறை வணக்கத்தின் கீழ் ஒருங்கிணைத்து அமைதி வாழ்வுக்குத் திருப்பினார் நபிகள் நாயகம். 

ஓர் இறை வணக்கம் வேண்டும் – பல தெய்வ வணக்கம் வேண்டாம் என்ற கருத்து தமிழ்நாட்டுச் சமயங்களில் முன் வைக்கப்பட்டிருந்தாலும், அக்கோட்பாடு நடைமுறைக்கு வரவில்லை. “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்றார் திருமூலர். உருவ வணக்கம் கூடாது, ஒளி வணக்கம் மட்டுமே செய்ய வேண்டும் என்றார் வள்ளலார். மனிதர்கள் அனைவரும் சமம் என்ற நோக்கில் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் நிறுவினார். ஆண் – பெண், சமய வேறுபாடின்றி அனைவரும் அதில் உறுப்பினர் ஆகலாம் என்றார். புலால் மறுத்தலை நிபந்தனையாக்கினார். 

மனித நேயத்தையும் மனித சமத்துவத்தையும் கொள்கையாகக் கொண்டவர்கள் வெவ்வேறு நாடுகளில் பிறந்தாலும் ஒன்றுபோல் சிந்திக்கிறார்கள் என்பதற்கு நபிகள் நாயகம் வழங்கிய அருளுரைக்கும் திருமூலர் மற்றும் வள்ளலார் வழங்கிய சிந்தனைகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமையே சான்று!

பிற்போக்காளர்கள் நபிகள் நாயகத்தின் இளமைப் பருவத்தில் மக்காவில் இருந்தது போலவே இன்றும் இருக்கிறார்கள் என்பதற்கான சான்றாகத்தான் இந்தியாவில் மத அடிப்படையில் கொலைகள் நடக்கின்றன. 

முற்போக்கான சமூகப்புரட்சியாளர்கள், சமூக விடுதலைப் போராளிகள் ஆகியோர் நபிகள் நாயகத்தின் போராட்டங்களிலிருந்தும், வாழ்விலிருந்தும் ஊக்கம் பெற வேண்டும். தங்கள் இலட்சியத்தை நிலைநாட்ட முன்னேற வேண்டும். 

(“தினமணி” நாளேட்டின் “ஈகைப் பெருநாள் மலர் – 2018”இல் வெளியாகியுள்ள கட்டுரை).

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Friday, June 15, 2018

அரசமைப்பு உறுப்பு 161இன்படி ஏழு தமிழர்களை விடுதலை செய்க! தோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை!

அரசமைப்பு உறுப்பு 161இன்படி ஏழு தமிழர்களை விடுதலை செய்க! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை!
உச்ச நீதிமன்ற கெடு முடியும் தருவாயில், இந்திய அரசு - குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் வழியாக பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலையை நிராகரித்துள்ளது.

2014இல், குற்றவியல் நடைமுறைச் சட்ட விதி 435 (1)இன்படி, தனது ஏழு தமிழர் விடுதலை முடிவு குறித்து இந்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கருத்துக் கேட்டது. 

இந்திய அரசின் வழக்கைத் தொடர்ந்து, அது அரசமைப்புச் சட்ட ஆயத்திற்குச் சென்று அதன் பிறகு இவர்கள் விடுதலை பற்றி விசாரித்து வந்த மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு முன்னால் நின்றது. நான்காண்டுகளாக இவ்வழக்கை விரைவுபடுத்த தமிழ்நாடு அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை! இந்திய அரசு கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை! 

இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இறுதிக் கெடு விதித்து ஒன்றிய அரசு தனது கருத்தைத் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்திய பிறகு, இப்போது இந்திய உள்துறை அமைச்சகம் “தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதுபோல், பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், இரவிச்சந்திரன், செயக்குமார் ஆகிய ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டாம்” என முடிவு செய்து, அதனை இந்தியக் குடியரசுத் தலைவர் வழியாக வெளியிட்டிருக்கிறது. 

குடியரசுத் தலைவர் வழியாக வெளியிடப்பட்டுள்ள இந்திய அரசின் இந்த முடிவு, அப்பட்டமான சட்டமீறலாகும்! 

ஏனெனில், இவ்வழக்கை புலனாய்வு செய்த சிறப்புப் புலனாய்வுக் குழுவின் உயர் அதிகாரி தியாகராசன் பேரறிவாளனின் ஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிவு செய்ததில், முக்கியமானப் பிழையைத் தான் செய்ததாக ஒத்துக் கொண்டு, இவ்வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற அமர்விலேயே தனது உறுதியுரையை (பிரமாண வாக்குமூலம்) அளித்துள்ளார். 

இவ்வழக்கில் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்ற அமர்வுக்குத் தலைமை தாங்கிய நீதிபதி கே.டி. தாமஸ், தங்களது தீர்ப்பில் சட்ட அறியாமை என்ற பிழை நிகழ்ந்துள்ளதை ஏற்றுக் கொண்டு, ஏழு தமிழர்களையும் விடுதலை செய்து விடலாம் என்று வெளிப்படையாகப் பலமுறை கருத்துத் தெரிவித்திருக்கிறார். 

கொலையுண்ட இராசீவ் காந்தியின் மகன் இராகுல் காந்தி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், இவர்களை விடுதலை செய்வதில் தமக்கு மறுப்பேதுமில்லை என்று தெரிவித்து விட்டனர்! 

இராசீவ் காந்தி கொலையில் பன்னாட்டு சதித் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை, தொடர முடியாமல் முட்டுச் சந்தில் நிற்கிறது! 

இந்த நிலையில், உச்ச நீதிமன்றமே ஏழு தமிழர் விடுதலையை அறிவித்திருக்க முடியும். ஆனால், இந்திய அரசின் கருத்தை அது கேட்டது! இந்திய அரசோ, ஏழு தமிழர் விடுதலையை ஏற்க முடியாது என குடியரசுத் தலைவர் வழியாக அறிவித்துவிட்டது. 

இச்சூழலில், முன்னாள் முதலமைச்சர் செயலலிதா முன்மொழிந்து, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒருமனதான தீர்மானத்திற்கும், அதன் பிறகு நிறைவேற்றப்பட்ட சட்டமன்றத் தீர்மானங்களுக்கும், ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களின் கருத்துக்கும் மதிப்பளிப்பதாக இருந்தால், எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு முன்னால் ஒரே ஒரு வழிதான் இருக்கிறது! 

அது அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 ஆகும்! 

மன்னிப்பு மற்றும் தண்டனைக் குறைப்பு அதிகாரத்தைப் பொறுத்தளவில், குடியரசுத் தலைவர் அதிகாரமும், மாநில ஆளுநரின் அதிகாரமும் சம வலு கொண்டவை. அவை ஒரே நேரத்தில் செயல்படவும் முடியும்! அதுமட்டுமல்ல, எந்த நேரத்திலும் மாநில ஆளுநர் அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன்படி தண்டனைக் குறைப்பு வழங்க முடியும் - அந்த அதிகாரம் கட்டற்றது!

ஆளுநர் முடிவு என்பது, தண்டனைக் குறைப்பு அதிகாரத்தைப் பொறுத்தளவில் அரசமைப்புச் சட்டப்படி அது அமைச்சரவையின் முடிவே ஆகும்! 

குடியரசுத் தலைவர் முடிவைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நமது அனைவரின் நேசத்திற்கும் உரிய பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், தனது மகன் பேரறிவாளனை வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே வைத்திருப்பதைவிட கருணைக் கொலை செய்து விடுங்கள் என்று கண்ணீர் மல்கக் கேட்பது – மனச்சான்று உள்ள அனைவரையும் உலுக்கியெடுத்துள்ளது.

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், தனது அமைச்சரவையைக் கூட்டி ஏழு தமிழர்களையும் விடுதலை செய்வதாக தீர்மானம் நிறைவேற்றி, தமிழ்நாடு ஆளுநர் வழியாக அரசமைப்புச் சட்ட உறுப்பு 161இன்படி அறிவிக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Thursday, June 14, 2018

மக்கள் போராட்டமும் சனநாயகமும் கருத்தரங்கம்

மக்கள் போராட்டமும் சனநாயகமும் கருத்தரங்கம்
நாள் : 16.06.2018 – காரி (சனி) மாலை 6 மணி, இடம் : சிகரம் அரங்கம், வடபழனி, சென்னை 51, குமரன் காலனி முதன்மைச் சாலை, வடபழனி பேருந்து நிலையம் பின்புறம்.

மேனாள் தமிழ்த்துறைப் பேராசிரியர், சென்னை மாநிலக் கல்லூரிப் பேராசிரியர் பி .யோகீசுவரன் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது. சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி திரு. து. அரிபரந்தாமன், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் திரு. கி. வெங்கட்ராமன், ஊடகவியலாளர் திரு. பா. ஏகலைவன் ஆகியோர் சிறப்பரையாற்றுகிறார்கள்.

அனைவரையும் வரவேற்கிறோம்
தொடர்புக்கு : 95001 72406, 98408 48594.

Friday, June 8, 2018

கர்நாடகத்தின் ஊதுகுழலாக தமிழ்நாடு முதலமைச்சர் பேசுகிறார்! தோழர் பெ. மணியரசன் கண்டனம்!

கர்நாடகத்தின் ஊதுகுழலாக தமிழ்நாடு முதலமைச்சர் பேசுகிறார்! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் கண்டனம்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (08.06.2018) முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், சூன் 12 ஆம் நாள் மேட்டூர் அணையைத் திறக்க இயலாது என்று கூறியபோது, அதற்கான காரணம், பருவமழை பொய்த்துப் போனதுதான் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
கர்நாடகத்தில் பருவமழை எத்தனை விழுக்காடு பொய்த்துப் போயுள்ளது, இப்பொழுது கர்நாடகத்தின் வெளியே தெரிந்த அணைகளிலும் காவிரி நீரைப் பதுக்கிக் கொள்ள கட்டப்பட்ட புதிய நீர்த் தேக்கங்களிலும் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது என்ற உண்மை விவரத்தை முதல்வர் வெளியிட்டிருக்க வேண்டும். அந்த நீர் இருப்பில், விகிதாச்சாரப் பகிர்வு (Prorate) அடிப்படையில் இவ்வளவு நீர் தமிழ்நாட்டிற்கு வந்திருக்க வேண்டும், ஆனால் கர்நாடகம் திறந்துவிட மறுத்து விட்டது என்ற விவரங்களைக் கூறி இருக்க வேண்டும்.
 
அவ்வாறு, உண்மை விவரங்களைக் கூறாமல் கர்நாடக அரசு கூறுகின்ற “பருவமழை பொய்த்து விட்டது” என்ற பொய்யை தமிழ்நாடு முதல்வரும் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது. உண்மையில், கர்நாடகத்தின் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இயல்பான மழை அளவைவிட இந்த ஆண்டு (2018) சனவரி 1-லிருந்து மே 31 வரையிலான மழை அளவு கூடுதலாக இருப்பதை கர்நாடக அரசின் புள்ளி விவரங்களே கூறுகின்றன.
 
எடுத்துக்காட்டாக, மைசூரு மாவட்டத்தில் வழக்கமான மழை அளவு 230 மி.மீ. ஆகும். ஆனால், இப்போது பெய்துள்ள மழை அளவு 309 மி.மீ. மாண்டியாவில் வழக்கமான மழை அளவு 184 மி.மீ. ஆகும். ஆனால், இப்போது பெய்துள்ள மழை அளவு 295 மி.மீ. சாம்ராஜநகரில் வழக்கமான மழை அளவு 230 மி.மீ. ஆகும். ஆனால், இப்போது பெய்துள்ள மழை அளவு 309 மி.மீ. இந்த உண்மையை எடுத்துக்கூறி பங்கு நீரைக் கேட்பதற்கு மாறாக, கர்நாடகாவை முந்திக் கொண்டு “மழை பொய்த்துவிட்டது” என்று தமிழ்நாடு முதலமைச்சர் பொய்யான தகவலைத் தர வேண்டிய தேவை என்ன?
 
சட்டவிரோத நடவடிக்கைகள் – இனவெறி நடவடிக்கைகள் ஆகியவற்றின் உறைவிடமாக விளங்கும் கர்நாடக அரசின் ஊது குழலாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையிலேயே பேசியிருக்கிறார். பருவமழை பொய்த்துவிட்டதால், சூன் மாதம் தண்ணீர் திறக்க முடியாது என்று கூறுயிருக்கிறார்.

குறுவைத் தொகுப்புத் திட்டத்திற்கு ரூபாய் 115 கோடி ஒதுக்கியுள்ளதாக முதலமைச்சர் அறிவித்திருப்பது, குறுவையை இவ்வாண்டும் தமிழ்நாடு அரசு கைகழுவிவிட்டது என்பதற்கான முன்னோட்டமே!
 
டெல்டாவில் ஐந்து மாவட்டங்களில் 5 இலட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டு வந்தது. அதையும் 3 இலட்சத்து 15 ஆயிரம் ஏக்கர் என்று குறைத்துச் சொல்கிறார் முதல்வர்! அந்த 3 இலட்சத்து 15 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய காவிரித் தண்ணீர் வேண்டுமல்லவா? நிலத்தடி நீர் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உப்பாகிவிட்டது. தஞ்சை மாவட்டத்தில், ஏற்கெனவே பல பகுதிகள் பாறையாக இருப்பதால் நிலத்தடி நீர் இல்லை. டெல்டாவில் நிலத்தடி நீர் சாகுபடி என்பது மிகக் குறைந்த பரப்பளவில்தான் நடக்கிறது.
 
காவிரி நீர் வராவிட்டாலும் குறைவில்லாமல் குறுவை சாகுபடி செய்ய முடியும் என்பதுபோல் முதல்வர் பேசியிருப்பது கர்நாடகத்தின் மற்றும் இந்திய அரசின் குரலாக உள்ளது.
 
குறுவைக்குரிய தண்ணீரைப் பெற எடப்பாடி பழனிச்சாமி அரசு என்ன முயற்சி எடுத்தது? நடுவண் அரசின் தலையீட்டைக் கோரியதா? அனைத்துக் கட்சிக் குழுவடன் தில்லிக்குச் சென்று, அமைச்சர்கள் சந்திக்க மறுத்தாலும் ஒரு போராட்ட உத்தியாக அதிகாரிகளைச் சந்தித்து வலுவாகக் குரல் கொடுத்திருக்கலாம். அதைக்கூட செய்யவில்லை!
 
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி 2018 மே 31 ஆம் நாளுக்குள் காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்திருக்க வேண்டும். அதை அமைக்காமல் சாக்குப்போக்கு சொல்லி நரேந்திர மோடி அரசு வேண்டுமென்றே காலம் கடத்துகிறது.
 
மேலாண்மை ஆணையத்தின் மொத்த அதிகாரிகள், செயலாளர் உள்ளிட்டு 10 பேர். அதில் ஆறு பேரை இந்திய அரசு நியமனம் செய்ய வேண்டும். நீர் வளத்துறையில் வேறொரு பிரிவில் முழுநேரத் தலைமை அதிகாரியாக இருக்கும் மசூத் உசேனை மட்டும் இடைக்காலத் தலைவராக காவிரி ஆணையத்திற்கு நியமித்திருப்பது கண்துடைப்பு நடவடிக்கை! இதுபற்றி ஒரு கருத்தும் தமிழ்நாடு முதல்வர்க்கு இல்லையா? கருத்து இருந்தால் அதை சட்டப்பேரவையில் வெளியிட்டிருக்கலாம் அல்லவா?
 
தமிழ்நாடு முதலமைச்சர் தில்லி மற்றும் பெங்களூரு ஊதுகுழலாக இருக்கிறார். தமிழ்நாட்டு மக்களை வஞ்சிகிறார். கர்நாடக மற்றும் நடுவண் அரசுகளை எதிர்த்துப் போராடுவதுடன் காவிரி உரிமையை மீட்கக் கோரி தமிழ்நாடு அரசையும் எதிர்த்துப் போராட வேண்டிய தேவை உள்ளது.
 
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
 
பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery

Saturday, June 2, 2018

காவிரித் தீர்ப்பு மூன்றாவது முறையாக அரசிதழில்! இப்போதும் ஆணையம் அமைக்கவில்லை. தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

காவிரித் தீர்ப்பு மூன்றாவது முறையாக அரசிதழில்! இப்போதும் ஆணையம் அமைக்கவில்லை. காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
உச்ச நீதிமன்றம் 18.05.2018 அன்று அளித்த காவிரித் தீர்ப்பை நேற்று (01.06.2018), இந்திய அரசு அரசிதழில் வெளியிட்டுவிட்டு, காவிரி ஆணையம் அமைக்காமல் ஒதுங்கிக் கொண்டிருப்பது கடந்த காலங்களில், அது ஏமாற்றியதுபோல் இப்போதும் செய்கிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.
 
காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பை உச்ச நீதிமன்ற ஆணையின்படி 11.12.1991 அன்று இந்திய அரசு அரசிதழில் வெளியிட்டது. ஆனால், அதை செயல்படுத்தவில்லை!
 
அடுத்து, காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்றக் கட்டளையின்படி 19.02.2013 அன்று இந்திய அரசு அரசிதழில் வெளியிட்டது. ஆனால், அத்தீர்ப்பில் கண்டபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் ஒதுங்கிக் கொண்டது. அதனால் அத்தீர்ப்பும் செயலுக்கு வரவே இல்லை!
 
இப்பொழுது மூன்றாவது முறையாக, செயல்படுத்தக் கூடிய காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்காமல், அரசிதழில் வெளியிட்டுவிட்டு இந்திய அரசு ஒதுங்கிக் கொண்டுள்ளது. விரைவில் மேலாண்மை ஆணையம் அமைக்கப்படும் என்று சொல்கிறார்கள்.
 
உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பை 16.02.2018 அன்று அளித்தது. அதைச் செயல்படுத்தாமல், சாக்குப்போக்கு சொல்லி இதுவரை இழுத்தடித்து வருவது இந்திய அரசுதான்! இப்பொழுதும் செயல்படுத்தும் மேலாண்மை ஆணையம் அமைக்காமல், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை புறக்கணிக்கவில்லை என்று காட்டிக் கொள்வதற்காக ஒப்புக்கு அரசிதழில் வெளியிட்டு ஒதுங்கிக் கொண்டிருக்கிறது.
 
அத்துடன், நடுவண் நீர்வளத்துறைச் செயலாளர் யு.பி. சிங்கை காவிரி மேலாண்மை வாரியத் தற்காலிகத் தலைவராக அமர்த்தியிருப்பதாக செய்திகள் வருகின்றன. யு.பி. சிங்கை காவிரி மேலாண்மை ஆணையத்தின் தற்காலிகத் தலைவராக அமர்த்துவது என்பது, காவிரி மேலாண்மை ஆணையம் நடுவண் நீர்வளத்துறையின் ஒரு துணைக் குழுதான் (Sub Committee) என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
 
காவிரித் தீர்ப்பாய முடிவுகள் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஆகியவை தனித்துவமான காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டுமென்றும், அதன் தலைவர் முழுநேரப் பொறுப்பில் செயல்படுவார் என்றும் கூறியுள்ளன. நடுவண் நீர்வளத்துறைச் செயலாளரின் கூடுதல் பொறுப்பாக காவிரி ஆணையத் தலைவர் பொறுப்பை வழங்குவது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சீர்குலைக்கும் முயற்சியாகும்!
 
யு.பி. சிங் நடுநிலைத் தவறியவர் என்பதை, உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வந்ததிலிருந்து அவர் செயல்பட்ட விதம் வெளிப்படுத்தியது.
 
எனவே, அரசிதழில் வெளியிடப்பட்டது என்ற அளவில் “வெற்றி!”க் களிப்பு காட்டிக் கொள்வது, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாக அமையும்! இந்திய அரசு இன்னும் காவிரியில் தமிழ்நாட்டின் சட்டப்படியான உரிமைகளை செயல்படுத்த முன்வரவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நீதியை நிலைநாட்ட போராட வேண்டியத் தேவை உள்ளது என்பதை காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தெரித்துக் கொள்கிறேன்.
 
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery

Friday, June 1, 2018

காவிரி ஆணையத்திற்கு தற்காலிகத் தலைவர் யு.பி. சிங்: தமிழ்நாட்டிற்கு எதிரான மோடி அரசின் வஞ்சகம் தொடர்கிறது! தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

காவிரி ஆணையத்திற்கு தற்காலிகத் தலைவர் யு.பி. சிங்: தமிழ்நாட்டிற்கு எதிரான மோடி அரசின் வஞ்சகம் தொடர்கிறது! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நடுவண் நீர்வளத்துறையின் செயலாளர் யு.பி. சிங்கை தற்காலிகத் தலைவராக நடுவண் நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அமர்த்தியிருக்கிறார் என்று செய்தி வந்துள்ளது. யு.பி. சிங் நான்கு மாநிலங்களுக்கும் உரிய பிரதிநிதிகளுடையப் பெயரைத் தருமாறு அந்தந்த மாநில அரசுக்குக் கடிதம் அனுப்பப்போவதாகக் கூறப்படுகிறது. இந்த ஏற்பாடு என்பது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறிய செயலாகும்!
 
காவிரி மேலாண்மை ஆணையத்திற்குத் தற்காலிகத் தலைவர் நியமித்துக் கொள்வதற்கான அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் இந்திய அரசுக்கு வழங்கவில்லை. தனி அதிகாரத்துடன் கூடிய முழுநேரத் தலைவர் ஒருவரை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அமர்த்த வேண்டுமென்று கூறியதுடன், அவருக்குரிய தகுதிகளையும் உச்ச நீதிமன்றம் வரையறுத்துள்ளது.
 
இப்பொழுது யு.பி. சிங் நடுவண் நீர்வளத்துறையின் முழுநேர அதிகாரியாவார். ஒரு கூடுதல் பொறுப்பாக காவிரி மேலாண்மை வாரியத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணி நியமனம், காவிரி மேலாண்மை ஆணையத்தை தன்னதிகாரம் இல்லாத நடுவண் நீர்வளத் துறையின் ஒரு துணைக் குழுவாக (Sub committee) ஆக்குவதாகும்!
 
நடுவண் நீர்வளத்துறையின் கட்டளைகளை ஏற்கெனவே பல தடவை கர்நாடக அரசு செயல்படுத்த மறுத்துள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே செயல்படுத்த மறுக்கும் கர்நாடகம், நடுவண் நீர் வளத்துறைத் துணைக் குழுவின் ஆணையையா செயல்படுத்தும்?
 
அடுத்து, விரைவில் நிரந்தரத் தலைவர் அமர்த்தப்படுவார் என்று நீர்வளத்துறை சொல்கிறது. விரைவில் என்றால் எத்தனை நாளில்? சில நாட்களில் நிரந்தரத் தலைவர் அமர்த்தப்படுவார் எனில், அதற்குள் தற்காலிகத் தலைவர் ஏன் தேவைப்பட்டார்?
 
உச்ச நீதிமன்றம் 16.02.2018 அன்று வழங்கிய தீர்ப்பில், ஆறு வார காலத்திற்குள் காவிரி செயல் திட்டத்தை உருவாக்கி அறிவிக்குமாறு நடுவண் அரசுக்குக் கட்டளையிட்டிருந்தது. அதைச் செயல்படுத்தாமல், திட்டமிட்டு காலங்கடத்தி, கடைசி நேரத்தில் 29.03.2018 அன்று அந்த செயல் திட்டம் பற்றியும், மற்ற விவரங்கள் பற்றியும் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கேட்கப் போவதாகவும் அதற்குக் கால அவகாசம் 3 மாதங்கள் வேண்டுமென்றும் கோரியதுதான், நிதின் கட்கரி தலைமையிலுள்ள நடுவண் நீர்வளத்துறை! அதன்பிறகும், காலம் தள்ளித்தள்ளி மே 18 வரை இழுத்தடித்தவர் நீர்வளத்துறைச் செயலாளர் யு.பி. சிங்!
 
இவர் நடுநிலை தவறியவர் என்பது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை இவர் அணுகிய விதத்திலிருந்து தெரிய வந்தது. எனவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டிய கட்டாயம் இருந்தும், அதையும் அதிகாரமில்லாமல் அமைத்து தமிழ்நாட்டிற்கு எதிராக இனப்பாகுபாடு காட்டும் அநீதியை மோடி அரசு தொடர்கிறது என்பதற்கான அடையாளம்தான், நீர்வளத்துறைச் செயலாளர் யு.பி. சிங்கை காவிரி மேலாண்மை ஆணையத்திற்குத் தற்காலிகத் தலைவராக அமர்த்தியிருப்பது!
 
சட்டக்கடமையை நிறைவேற்ற மறுத்து தமிழ்நாட்டிற்கு எதிராக பாகுபாடு காட்டும் மோடி அரசின் வஞ்சகத்தைக் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
 
தமிழ்நாடு அரசு இந்தத் தற்காலிக பணி அமர்த்தத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது.
 
மோடி அரசு யு.பி. சிங் நியமனத்தை உடனடியாகத் திரும்பப் பெற்று, தகுதியும் தன்னதிகாரமும் உள்ள முழுநேரத் தலைவரை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அமர்த்த வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன். மீண்டும் தமிழர்களை வஞ்சிக்கும் தந்திரத்தில், மோடி அரசு இறங்கினால் நீதி கேட்டு ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும் வீதிக்கு வந்து போராட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.
 
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
 
பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
 
 

சிவகங்கை சாதிவெறிப் படுகொலை வன்கொடுமைத் தடுப்பில் கைது செய்ய வேண்டும்! தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!

சிவகங்கை சாதிவெறிப் படுகொலை வன்கொடுமைத் தடுப்பில் கைது செய்ய வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!
இந்திய – தமிழ்நாடு அரசுகளின் துணையோடு கொண்டு வரப்பட்ட ஆபத்தான திட்டங்களை எதிர்த்து சாதி – மதங்களைக் கடந்து தமிழ்நாட்டு மக்கள் ஒன்று சேர்ந்து போராடிவரும் நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்டுள்ள சாதி ஆதிக்கவாதிகளின் கொடுஞ்செயல்கள், நம்மை அதிர்ச்சி கொள்ள வைக்கின்றன.
 
சிவகங்கை மாவட்டம் – திருப்பாச்சேத்தி அருகிலுள்ள கச்சநத்தம் கிராமத்தில், கடந்த மே 25-ஆம் நாள், பட்டியல் வகுப்பு மக்கள் கருப்பணசாமி கோயில் திருவிழாவை நடத்தியுள்ளனர். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சந்திரகுமார் என்பவர் வந்தபோது, ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தோர் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்ததாகவும், தங்கள் முன் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் கால் மேல் கால் போட்டு அமர்வதா என சந்திரகுமாரின் மகன்கள் அதைத் தட்டிக் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
 
இதனையடுத்து, சந்திரகுமார் மீது திருப்பாச்சேத்தி காவல் நிலையத்தில் கச்சநத்தம் ஆறுமுகம், சண்முகநாதன் உள்ளிட்டோர் புகார் அளித்தனர். சந்திரகுமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஏற்கெனவே, சந்திரகுமார் மகன் சுமன் கஞ்சா விற்பதாக குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், இந்த புதிய வழக்கு அவர்களை மேலும் ஆத்திரப்படுத்தலாம் என உணர்ந்த கச்சநத்தம் ஒடுக்கப்பட்ட மக்கள் பழையனூர் காவல் நிலையத்தில் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், காவல் துறையோ மெத்தனமாக இருந்துள்ளது.
 
இந்நிலையில், கச்சநத்தம் மக்கள் அச்சப்பட்டதைப் போலவே சந்திரகுமாரின் மகன்கள் சுமன், அருண் ஆகியோர் ஆவரங்காட்டைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோரை ஒன்றுதிரட்டிக் கொண்டு, கடந்த 27.05.2018 அன்றிரவு, ஒடுக்கப்பட்ட மக்கள் குடியிருப்புக்குள் கத்தி – அரிவாள் உள்ளிட்ட கொடூரக் கருவிகளுடன் நுழைந்தனர்.
 
இக்கொடூர நிகழ்வில் அரிவாளால் வெட்டப்பட்டு எட்டு பேர் அங்கேயே படுகாயமடைந்தனர். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட வழியில் ஆறுமுகம் (அகவை 65), மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அறிவழகன் மகன் சண்முகநாதன் (அகவை 31), சந்திரசேகர் (அகவை 35) ஆகியோர் உயிரிழந்தனர். கண்ணில் பட்ட பொருட்களையெல்லாம் அடித்து நொறுக்கியுள்ளனர். தாக்குவதற்கு முன்பாக அவர்கள் அப்பகுதியின் மின் இணைப்பையும் துண்டித்துள்ளனர்.
 
சந்திரகுமார் மீது புகார் அளித்தோர் அவ்விடத்தில் இல்லாத நிலையில்கூட, கண்மூடித்தனமாக எல்லோர் மீதும் சாதி ஆதிக்க வெறியுடன் இத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ள செயல், தமிழ்ச்சமூகத்தின் இளையோரில் ஒரு பிரிவினரிடம் எந்தளவிற்கு சாதிய நச்சு விதைக்கப்பட்டுள்ளது என்பதையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
 
மறுநாள் (28.05.2018) மதுரை குற்றவியல் நீதிமன்றம் 4-இல், கச்சநத்தத்தைச் சேர்ந்த சுமன், அருண், ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த இராசேசுவரன், அக்னிராஜ், அஜய்தேவன் ஆகிய ஐந்து பேர் இவ்வழக்கில் சரணடைந்தபோது, இது திட்டமிடப்பட்ட தாக்குதல் என வெளிப்பட்டது.
 
இப்பகுதியில் இவ்விரு சமூகங்களிடையே கடந்த மூன்றாண்டுகளாகவே மோதல்கள் நடந்து வந்துள்ளன. இந்நிலையில், உரிய நேரத்தில் செயல்பட்டு – கொலைகளைத் தடுக்கத் தவறிய காவல்துறையினர் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். கச்சநத்தம் தாக்குதலில் ஈடுபட்டோர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சரணடைந்துள்ள சுமன் மீது ஏற்கெனவே பல கொலை வழக்குகள் உள்ள நிலையில், அவருக்கும் பிறருக்கும் பிணை வழங்காமல் இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றி விசாரிக்க வேண்டும். கொலையுண்டோர் குடும்பங்களுக்கு 25 இலட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.
 
மாவட்ட நிர்வாகம் குற்றவாளிகள் மீது பக்கச்சாய்வு இல்லாமல் நடவடிக்கை எடுப்பதோடு, இரு தரப்புக்குமிடையே பதட்டத்தைத் தணித்து, இணக்கச் சூழலை ஏற்படுத்த உடனடியாக செயல்பட வேண்டும்.
 
ஒட்டுமொத்தத் தமிழ்நாடே ஓரணியில் நின்று தற்காப்புப் போராட்டம் நடத்த வேண்டிய சூழலில், இந்தத் தமிழின ஓர்மையை வீழ்த்த ஆரிய ஆதிக்கவாதிகள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, அவர்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்பது ஒரு பக்கம். இன்னொருபக்கம், சாதிவெறி நஞ்சை நம் மனத்திலிருந்து அப்புறப்படுத்தி, மனத்தூய்மை பெற வேண்டும். தமிழர்கள் நாம் ஒரு தாய் மக்கள் என்ற உறவுக்கு இருதரப்பு இளையோரும் முன் முயற்சி மேற்கொள்ள வேண்டும். அதேவேளை சாதிவெறிக் கொலையில் ஈடுபட்டோர், அதற்குத் தூண்டியோர், துணை நின்றோர் அனைவரையும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்!
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

"முழுமையான தமிழ்த்தேசியர் தமிழறிஞர் ம.இலெ. தங்கப்பா" தோழர் பெ. மணியரசன் இரங்கல்!

"முழுமையான தமிழ்த்தேசியர் தமிழறிஞர் ம.இலெ. தங்கப்பா" தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் இரங்கல்!
மூத்த தமிழறிஞர், முழுமையான தமிழ்த்தேசியர் முனைவர் ம.இலெ. தங்கப்பா அவர்கள் 31.05.2018 விடியற்காலையில் புதுவையில் தம் இல்லத்தில் காலமானார் என்ற செய்தி பேரிடியாய் நெஞ்சில் இறங்கியது. நானும் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, புதுவை ஒருங்கிணைப்பாளர் தோழர் இரா. வேல்சாமி உள்ளிட்ட தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களும் ஐயாவுக்கு வீரவணக்கம் செலுத்தச் சென்றோம்.

மறைமலையடிகளார், பாவாணர், பெருஞ்சித்தனார் வரிசையில் அடுத்து நின்றவர் ம.இலெ. தங்கப்பா அவர்கள். தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆழ்ந்த புலமை! வெளியிலும் வீட்டியிலும் தனித்தமிழே பேச்சு மொழி! குடும்பமே தமிழியக்கக் குடும்பம்!

ஐயாவின் இல்லத்தரசியார் விசாலாட்சி அம்மையார் தூயத்தமிழில் சரளமாய் வீட்டில் பேசுவார்; அவர்கள் பிள்ளைகள் செங்கதிர், விண்மீன், பாண்டியன், இளம்பிறை, மின்னல் ஆகியோர் தூயத்தமிழிலே உரையாடுவர்! எழுதுவர்!

தங்கப்பா அவர்கள் கட்டுரை மற்றும் பாக்களை 1965 – 1966 ஆம் ஆண்டுகளில் “தென்மொழி” இதழில் படித்ததின் வழியாக ஐயா அவர்கள் மீது எனக்கு ஈர்ப்பு உண்டானது. திருச்சி தேவர் மன்றத்தில் 1968இல் நடந்த உலகத் தமிழ்க் கழக முதல் அமைப்பு மாநாட்டில் தங்கப்பா அவர்களின் அறிவார்ந்த உரையைக் கேட்டேன். பாவேந்தர் பாரதிதாசன் பாக்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து “தென்மொழி”யில் வெளியிட்டார் தங்கப்பா!

கழக (சங்க) இலக்கியங்கள், வள்ளலார், பாரதியார், பாவேந்தர் பாடல்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். சங்க இலக்கியங்களை (Love Stands Alone) என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் தந்தார். அந்நூலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கியது. ஐயாவின் “சோளக் கொள்ளை பொம்மை” என்னும் சிறுவர் இலக்கிய நூலுக்கும் சாகித்திய அகாதமி விருது வழங்கியது.

இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். தம்பட்டம் அறியா தமிழ்ச் சான்றோர்; ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைக் குன்றம் ம.இலெ. தங்கப்பா!

புதுவை அரசு ம.இலெ. தங்கப்பா அவர்களுக்கும், முனைவர் இரா. திருமுருகன் அவர்கட்கும் “கலைமாமணி” விருது அளித்தது. அரசு அலுவலர்கள் தமிழில்தான் கையொப்பமிட வேண்டும் என்று ஆணை இடுமாறு புதுவைத் தமிழறிஞர்கள் புதுவை அரசிடம் கோரிக்கை வைத்தார்கள். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றவுடன் இவ்விருவரும் புதுவை அரசு தங்களுக்கு வழங்கிய கலைமாமணிப் பட்டத்தைத் திருப்பி அனுப்பி விட்டனர்!

ம.இலெ. தங்கப்பா அவர்கள் ஆய்வறிஞர் மட்டுமல்ல; களப் போராளியும் ஆவார்! தமிழ் மொழி, தமிழீழம் சார்ந்த போராட்டங்களில் புதுவையிலும் கலந்து கொண்டு தளைப்படுவார். தமிழ்நாட்டிலும் கலந்து கொண்டு தளைப்படுவார்.

“தமிழர் கண்ணோட்டம்” இதழில் அவ்வபோது கட்டுரை எழுதி வந்தார். அவர் எழுதிய மடலே ஒரு கட்டுரையாக தமிழர் கண்ணோட்டத்தில் வெளிவந்தது. கடைசியாக அவரது அருமையான கட்டுரை தமிழர் கண்ணோட்டம் 2018 மே 16 – 31 இதழில் வெளிவந்தது. அதன் தலைப்பு: நிற வெறி – இன வெறி – சாதி வெறி வேர்கள் எங்கே? அகற்றுதல் எங்ஙனம்?

உடல்நலமின்றி ஐயா அவர்கள் இருக்கிறார்கள் என்பதறிந்து 03.05.2018 அன்று புதுவை சென்று ஐயாவையும் அம்மாவையும் பார்த்து நலம் விசாரித்து வந்தோம்! முடியாத நிலையிலும் இருவரும் கலகலப்பாகப் பேசினார்கள்!

நேற்று (31.05.2018) மாலை புதுவையில் ஐயாவின் இல்லத்திலிருந்து புதுவை சிப்மர் மருத்துவமனைவரை அவர் உடல் பின்னால் வந்தோம். அவர் விருப்பப்படி அவர் உடல் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆய்வுக்கு ஒப்படைக்கப்பட்டது.

அதற்கு முன் மருத்துவமனை வளாகத்தில் நடந்த இரங்கல் கூட்டத்தில் ஐயா நெடுமாறன் அவர்களும் நானும் மற்றவர்களும் பேசினோம்.

“தமிழ்த்தேசியத்தில் உங்கள் பாதை சரியாக இருக்கிறது; முன்னேறிச் செல்லுங்கள்!” என்று ஐயா அவர்கள் 03.05.2018 அன்று என்னிடம் கூறிய சொற்கள் இன்று அவர் உடல் அருகே நின்று இரங்கல் உரையாற்றிய போது என் மனதில் எதிரொலித்தது!

நாங்கள் மட்டுமல்ல, நாம் எல்லோரும் ஐயா ம.இலெ. தங்கப்பா அவர்கள் வாழ்ந்து காட்டிய – வகுத்துக்கொடுத்துள்ள தமிழ்த்தேசியப் பாதையில் முன்னேறிச் செல்வோம்! இதுவே ஐயாவுக்கு தமிழர்கள் செலுத்தக் வேண்டிய நன்றிக்கடன்!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT