உடனடிச்செய்திகள்
Showing posts with label தமிழீழ விடுதலை. Show all posts
Showing posts with label தமிழீழ விடுதலை. Show all posts

Friday, October 23, 2020

"புலிகளின் மீதான தடையை நீக்க ஸ்டாலின் பேச வேண்டும்!" ஆதன் தமிழ் ஊடகத்துக்கு - ஐயா பெ. மணியரசன் அவர்கள் நேர்காணல்!

"புலிகளின் மீதான தடையை நீக்க 

ஸ்டாலின் பேச வேண்டும்!"


ஆதன் தமிழ் ஊடகத்துக்கு

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்

 ஐயா பெ. மணியரசன் அவர்கள் நேர்காணல்!




கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Monday, January 28, 2019

தமிழீழ விடுதலைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி முத்துக்குமாருக்கு வீரவணக்கம்!

தமிழீழ விடுதலைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி முத்துக்குமாருக்கு வீரவணக்கம்!
கடந்த 2008 - 2009ஆம் ஆண்டுகளில் தமிழீழ மக்களுக்கெதிரான, சிங்கள – இந்தியக் கூட்டரசுகள் நடத்திய இனவழிப்புப் போரை நிறுத்தக் கோரி, சனவரி 29 – 2009 அன்று காலை, சென்னை நுங்கம்பாக்கம் இந்திய அரசு வருமானவரி அலுவலகம் முன்பு தன்னையே எரித்துத் தீக்கிரையாக்கிய தழல் ஈகி முத்துக்குமார் தொடங்கி, தமிழீழ விடுதலைக்காக உயிர் ஈந்த ஈகியருக்கு ஆண்டுதோறும் சனவரி 29 அன்று வீரவணக்கம் செலுத்தப்படுகின்றது. ஈகியரின் பத்தாம் ஆண்டு (2009 – 2019) வீரவணக்க நிகழ்வுகள் தமிழகமெங்கும் இவ்வாண்டு எழுச்சியுடன் நடைபெறவுள்ளன.

தஞ்சை

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் எழுப்பியுள்ள தழல் ஈகி முத்துக்குமார் சிலைக்கு, நாளை (29.01.2019) காலை 10.30 மணிக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் மலர் மாலை அணிவிக்கிறார். தொடர்ந்து, பல்வேறு அமைப்புத் தலைவர்களும், தமிழின உணர்வாளர்களும் ஈகி முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்துகின்றனர். ஈகி முத்துக்குமார் சிலை அமைக்க தனது நிலத்தைக் கொடையாக வழங்கிய புலவர் இரத்தினவேலவர் அவர்களது ஏற்பாட்டில், நாளை பிற்பகல் முத்துக்குமார் சிலைக்கு வீரவணக்கம் செலுத்த வருவோர்க்கு, அங்கு மதிய உணவு அளிக்கப்படுகின்றது.

சென்னை

சென்னையில், தழல் ஈகி முத்துக்குமார் உடல் வைக்கப்பட்டிருந்தே அதே இடத்தில் “வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுக்குழு” சார்பில், முத்துக்குமார் உள்ளிட்ட ஈகியர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நினைவுத் தூண் எழுப்பப்பட்டு வருகின்றது. அத்தூணுக்கு பல்வேறு அமைப்பினரும் மலர் தூவி வீரவணக்கம் செலுத்துகின்றனர். நாளை காலை 10 மணிக்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் தலைமையிலான பேரியக்கத் தோழர்கள் அங்கு வீரவணக்கம் செலுத்துகின்றனர்.

முருகன்குடி

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம் - முருகன்குடியில் மாலை 5 மணிக்கு, பேருந்து நிலையம் அருகில் தழல் ஈகி முத்துக்குமார் உள்ளிட்ட ஈகியரின் திருவுருவப் படங்களுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெறுகின்றது.

அரியலூர் 

அரியலூர் மாவட்டம், மேலமைக்கேல்பட்டி மாரியம்மன் கோவில் அருகில், காலை 8 மணிக்கு, தழல் ஈகி முத்துக்குமார் உள்ளிட்ட ஈகியரின் திருவுருவப் படங்களுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெறுகின்றது.

இந்நிகழ்வுகளில் தமிழின உணர்வாளர்களும், தமிழ் மக்களும் திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Saturday, November 1, 2014

அப்பாவி தமிழக மீனவர்களை தூக்கிலிடத் துடிக்கும் சிங்கள இனவெறி அரசைக் கண்டித்து சிங்களத் தூதரகம் முற்றுகை!




அப்பாவி தமிழக மீனவர்களை தூக்கிலிடத் துடிக்கும் சிங்கள இனவெறி அரசைக் கண்டித்து சிங்களத் தூதரகம் முற்றுகை!
 
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கைது.
 
தமிழகத்திற்குரிய கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தங்கச்சி மடம் மீனவர்களான எமர்சன், வில்சன், அகஸ்டன், லாங்லெட், பிரசாந்த் ஆகிய ஐந்து பேரையும் 2011ஆம் ஆண்டு சிங்களக் கடற்படையினர் சட்டவிரோதமாக கடத்திக் கொண்டு போய் அந்த ஐந்து தமிழர் மீது போதைப் பொருள் கடத்தியதாக பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்து வைத்திருந்தனர். இப்பொழுது அவர்களது உயர் நீதிமன்றம் இந்த ஐந்து பேருக்கும் தூக்கு தண்டனை விதித்திருக்கிறது.


இந்த அநீதியைக் கண்டித்து, இன்று (31.10.2014) வெள்ளிக்கிழமை - காலை 10 மணிக்கு, பல்வேறு கட்சி - இயக்கங்கள் உறுப்பு வகிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் சிங்களத் தூரகத்தை அகற்றக் கோரி முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தை தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பண்ரூட்டி திரு. தி. வேல்முருகன் அவர்கள் ஒங்கிணைத்தார்.

புரட்சி பாரதம் கட்சி தலைவர் திரு. ஜெகன்மூர்த்தி, தமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ.மணியரசன், திராவிடர் விடுதலைக் கழக பொதுச் செயலாளர் தோழர் விடுதலை ராசேந்திரன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தோழர் தியாகு, தமிழர் முன்னேற்றப்படைத் தலைவர் தமிழினி கி.வீரலட்சுமி, தந்தைப் பெரியார் திராவிடர் கழக மண்டல அமைப்பாளர் தோழர் கரு.அண்ணாமலை, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட பல்வேறு கட்சி, இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள், தோழர்கள் 300க்கும் மேற்பட்டவர்கள் கைதாயினர்.

கொடுங்கோலன் இராசபட்சேயின் உருவபொம்மை தீயிட்டு கொளுத்தப்பட்டது.

”விடுதலை செய், விடுதலை செய் அப்பாவி மீனவர்களை உடனடியாக விடுதலை செய்”, ”மோடி அரசே, இலங்கையுடன் கூடிக் குலவாதே” என்பன உள்ளிட்ட பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தமிழ்த் தேசிய பேரியக்கம் சார்பில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி, தாம்பரம் செயலாளர் தோழர் இளங்குமரன் உள்ளிட்ட திரளான தமிழ்த் தேசியப் பேரியக்க தோழர்கள் கலந்து கொண்டு கைதாகியுள்ளனர்.

கைதாகியுள்ள தோழர்கள் தற்போது நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.





Friday, October 31, 2014

அப்பாவித் தமிழக மீனவர்களைத் தூக்கிலிடத் துடிக்கும் சிங்கள இனவெறி அரசின் சென்னைத் தூதரகத்தை மூடவேண்டும் - தோழர் பெ.மணியரசன் கோரிக்கை!



அப்பாவித் தமிழக மீனவர்களைத் தூக்கிலிடத் துடிக்கும்
சிங்கள இனவெறி அரசின் சென்னைத் தூதரகத்தை மூடவேண்டும்!

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர்

தோழர் பெ.மணியரசன் கோரிக்கை!

“அப்பாவித் தமிழக மீனவர்களைத் தூக்கிலிடத் துடிக்கும் சிங்கள இனவெறி அரசின் சென்னைத் தூதரகத்தை மூடவேண்டும்” என தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 


தமிழகத்திற்குரிய கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தங்கச்சி மடம் மீனவர்களான எமர்சன், வில்சன், அகஸ்டன், லாங்லெட், பிரசாந்த் ஆகிய ஐந்து பேரையும் 2011ஆம் ஆண்டு சிங்களக் கடற்படையினர் சட்டவிரோதமாக கடத்திக் கொண்டு போய் அந்த ஐந்து தமிழர் மீது போதைப் பொருள் கடத்தியதாக பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்து வைத்திருந்தனர். இப்பொழுது அவர்களது உயர் நீதிமன்றம் இந்த ஐந்து பேருக்கும் தூக்கு தண்டனை விதித்திருக்கிறது.

சிங்கள இனவெறி அரசு ஈழத்தமிழர்களை மட்டுமின்றி தமிழகத் தமிழர்களையும் இனப்பகையோடுதான் பார்க்கிறது. சிங்கள அரசின் தமிழின அழிப்பு என்பது ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் பொதுவானது என்பதையே தமிழக மீனவர்களை இதுவரை சுட்டும் அடித்தும் கொன்ற நிகழ்வுகளும் இப்போது தூக்கிலிட்டுக் கொல்ல முயலும் நடவடிக்கையும் உறுதி செய்கின்றன.

தமிழினத்தை அழித்ததற்காக இராஜபட்சேயை இந்திய அரசு வரவழைத்து பாராட்டியது. அண்மையில் சிங்கள கப்பற்படைத் தளபதியை தில்லிக்கு வரவழைத்து படை அணிவகுப்பு மரியாதை செய்து பாராட்டியது தொடர்ந்து சிங்கள படையினருக்கு இந்தியா பயிற்சி தந்து வருகிறது. இராஜபட்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென்று பா.ச.க.வின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி கோரிக்கை வைத்துள்ளார். இந்திய அரசின் இப்படிப்பட்ட தமிழினப்பகை நடவடிக்கைகளால் ஊக்கம் பெற்ற சிங்கள இனவெறி அரசு இன வெறிக்கு பலியாகியுள்ள இலங்கை நீதித்துறை மூலம் ஐந்து தமிழகத் தமிழர்களை தூக்கிலிடத் துடிக்கிறது.

இந்திய அரசு ஏழரைக் கோடி தமிழர்கள் இந்தியாவின் குடிமக்கள் என்று கருதினால் இலங்கையோடு உள்ள தூதரக உறவை முறிக்க வேண்டும். இந்திய அரசு அவ்வாறு செய்யவில்லையெனில் தமிழ் மக்கள் அறச்சீற்றம் கொண்டு எழுச்சிப் பெற்று சென்னையில் உள்ள சிங்களத் தூதரகத்தை மூடவேண்டும்.

இவ்வாறு தோழர் பெ.மணியரசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Monday, February 10, 2014

மார்ச்சு – 1 – காவிரி எழுச்சி மாநாடு: "தமிழினமே தஞ்சையில் திரள்க!" தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுக்குழுவில் தீர்மானம்!


மார்ச்சு – 1 – காவிரி எழுச்சி மாநாடு:
"தமிழினமே தஞ்சையில் திரள்க!"
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப்
பொதுக்குழுவில் தீர்மானம்!



தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம், சென்னை கட்சித் தலைமையகத்தில் 09.02.2014 ஞாயிறு முழுநாள் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையேற்றார். பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். தோழர் உதயன், க.அருணபாரதி (சென்னை), குழ.பால்ராசு, பழ.இராசேந்திரன், நா.வைகறை (தஞ்சை), அ.ஆனந்தன் (மதுரை), கோ.மாரிமுத்து (ஓசூர்), க.முருகன் (பெண்ணாடம்), மு.தமிழ்மணி (தூத்துக்குடி), க.பாண்டியன் (நெல்லை), விளவை இராசேந்திரன் (கோவை), கு.சிவப்பிரகாசம் (சிதம்பரம்), த.கவித்துவன் (திருச்சி) உள்ளிட்ட கட்சியின் தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இயற்கை வேளாண் அறிஞர் திரு. கோ.நம்மாழ்வார், பெரியார் பெருந்தொண்டர் தோழர் திருவாரூர் தங்கராசு, கல்பாக்கம் தமிழின உணர்வாளர் திரு. சு.முத்து ஆகியோர் மறைவுக்கு அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.

கூட்டத்தின் முடிவில், கீழ்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  1. தஞ்சையில் மார்ச்சு 1 அன்று, நடைபெறும் 'காவிரி எழுச்சி மாநாட்'டை வெற்றிபெறச் செய்ய வேண்டும்

தமிழ்நாட்டின் முக்கிய நீராதாரமாகவும், காவிரி டெல்டா மாவட்டப் பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமுமான காவிரி ஆற்று நீர் உரிமையை முடக்க கர்நாடகம், எல்லா சட்டங்களையும் மீறி இயங்கிக் கொண்டுள்ளது. கட்சிகள் கடந்து கன்னடர்கள் ஓரணியில் நிற்கின்றனர். இந்திய அரசு தனக்குப் பக்கமலமாக இருக்கிறது என்ற துணிச்சலில், புதிதாக 3 அணைகள் கட்டி  தமிழகத்திற்கு மழைக்காலத்தில் வடிந்து வரும் உபரித் தண்ணீரைக் கூட தடுப்பதற்கு அவர்கள் திட்டமிடுகிறார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டின் காவிரி உரிமையை மீட்க தமிழினம் ஒன்று திரள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, வரும் 2014 மார்ச்சு 1 அன்று, தஞ்சையில், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், 'காவிரி எழுச்சி மாநாடு' நடைபெறுகின்றது. இம்மாநாட்டில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பங்கேற்பதுடன், இம்மாநாட்டிற்குத் தமிழ் மக்களை பெருந்திரளாகத் திரட்டவும் முடிவெடுத்துள்ளது.

  1. காவிரி உற்பத்தியாகும் குடகு வனப்பகுதியில், மின்பாதை அமைப்பதற்காக 1 இலட்சம் மரங்களை வெட்டும் திட்டத்தை இந்திய அரசே கைவிடுக!
      காவிரி ஆறு உற்பத்தியாகும் கூடகு மலைப்பகுதியில், இந்திய அரசு மின்பகிர்மான நிறுவனம் (Power Grid corporation of India), கர்நாடகாவின் மைசூரிலிருந்து கேரளாவின் கோழிக்கோடு வரையில் 400 கிலோ வாட் மின்சாரம் எடுத்துச் செல்லும் மின்பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் வழியே, சற்றொப்ப 55 கிலோ மீட்டர் வரை அமைக்கப்படும் இப்பாதை காரணமாக சற்றொப்ப 1 இலட்சம் மரங்கள் வெட்டப்படும் பேரபாயம் உள்ளது. தற்போது, 5 கிலோ மீட்டர் அளவில் மின் பாதை அமைக்கப்பட்டு சற்றொப்ப 2000 மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன. மரங்கள் வெட்டப்படுவதால் செயற்கையாக ஏற்படுத்தப்படும் சூழலியல் வெற்றிடமும், சூழலியல் சமன்பாட்டுச் சீர்குலைவும், ஏற்பட்டு காவிரி ஊற்று நீரைப் பெருமளவில் பாதிக்கும். குடகு, தமிழகம், கர்நாடகம் என காவிரி ஆற்றை முக்கிய நீராதாரமாகக் கொண்டு வாழும் 8 கோடி மக்களின் வாழ்வுரிமையையே இது மறைமுகமாகப் பறித்தெடுக்கும். மேலும், இவ்வனப்பகுதியையே நம்பி வாழும் யானை உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும். வனவிலங்குகளின் வாழ்வாதாரங்களை இழப்பது, ஏற்கெனவே நிகழ்ந்து கொண்டுள்ள வனவிலங்கு – மனிதர் மோதலைத் தீவிரப்படுத்தும். மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து, குடகு வாழ் மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைத்து வருகின்றனர். இப்போராட்டங்களுக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. இத்திட்டத்தை இந்திய அரசு மின்பகிர்மான நிறுவனம் வேறு பாதையில் செயல்படுத்த வேண்டும். என வலியுறுத்துகிறது

  1. கூடங்குளம் அணுமின் நிலையத்தினுள் புதிதாக அணுஉலைகளைத் தொடங்காதே!

ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் ஒரே சவக்குழியாக இந்திய அரசால் தமிழகத்தின் மீது திணிக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தினுள், புதிதாக 2 அணுஉலைகளை இயக்க இந்திய அரசு அணுசக்தித்துறை முனைப்புடன் செயலாற்றி வருகின்றது. கடந்த 3 ஆண்டுகளாக  கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து சனநாயக வழியில் போராடி வரும் இடிந்தகரை மக்களின் கருத்துகளைப் புறக்கணித்துவிட்டு, கூடங்குளம் அணுமின் நிலையத்தை இந்திய அரசு இயக்கி வருகின்றது. இந்நிலையில், புதிய அணுஉலைகளை அங்கு வேண்டுமென்றே திணிப்பது, மக்கள் போராட்டத்தை இழிவுபடுத்தும் எதேச்சாதிகாரப் போக்காகும். எனவே, மேலும் மேலும் இங்கு அணுஉலைகளைத் திணிக்கும் இந்திய அரசின் தமிழின விரோதப் போக்கை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வன்மையாகக் கண்டிப்பதுடன், இப்புதிய அணு உலைகளை நிறுவும் முயற்சிகளைக் கைவிட வேண்டுமெனவும் இந்திய அரசை வலியுறுத்துகிறது.  

  1. தமிழினப்  படுகொலையாளிகளான இராசபக்சே கும்பல் மீது தற்சார்பான பன்னாட்டு விசாரணை கோரி, மார்ச்சு 3 - ஐ.நா. மனித உரிமை அவைக் கூட்டத்தில் இந்திய அரசு தனித்தீர்மானத்தை முன்மொழிய வேண்டும்!

ஈழத்தமிழர் இனச்சிக்கல் பன்னாட்டு அரங்கில் ஒரு முக்கியக் கட்டத்தை இப்போது அடைந்துள்ளது. நடந்து முடிந்த கொழும்பு காமன்வெல்த் மாநாட்டின் போது பிரித்தானியப் பிரதமர் கேமரோன் யாழ்ப்பாணத்திற்கும், ஈழத்தமிழர் வாழ்விடயங்களுக்கும் சென்று பார்த்தபோது அவருடன் சென்ற முதன்மை உலக ஊடகங்கள் வழியாக அங்கு தொடரும் இன அழிப்பு அவலம் உலகின் பார்வைக்கு வந்துள்ளது. இப்பின்னணியில் வரும் மார்ச்சு 3 அன்று நடைபெறவுள்ள ஐ.நா. மன்ற மனித உரிமைகள் அவைக் கூட்டம் கூடுதல் முகாமை பெறுகிறது. ஈழத்தமிழர் இனஅழிப்பை வெறும் போர்க்குற்றம் எனச் சுருக்கியும், இலங்கை  அரசக் கட்டமைப்பை பாதுகாக்கும் நோக்கிலும் 2012 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் வட அமெரிக்கா முன்வைத்த சூழ்ச்சிகரமானத் தீர்மானங்களை, இந்திய அரசு ஆதரித்தது இப்போக்கு இனியும் தொடரக் கூடாது இராசபக்சே கும்பல் மீது இனப்படுகொலை குறித்த பன்னாட்டு விசாரணை – ஈழத்தமிழ் மக்களிடையே தமிழீழம் குறித்து பொது வாக்கெடுப்பு ஆகிய இரட்டை முழக்கங்கள் ஒட்டுமொத்தத் தமிழர்களின் கோரிக்கையாக எழுந்துள்ளது. எனவே, வரும் மார்ச்சு கூட்டத்தில் அமெரிக்கத் தீர்மானத்தைப் புறக்கணித்து, இனக்கொலையாளி இராசபக்சே கும்பல் மீது தற்சார்புள்ள பன்னாட்டு விசாரணை வேண்டுமெனக் கோரி இந்திய அரசே தனித் தீர்மானத்தை முன்மொழிய வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோருகிறது. வரும் பிப்ரவரி 20 அன்று சென்னையிலும், தமிழகத்தின் இதர மாவட்டத் தலைநகரங்களிலும் இக்கோரிக்கையை முன்வைத்து நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில், தமிழ் மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுமென த.தே.பொ.க. அழைக்கிறது. 

  1. பி.ட்டி கத்தரிக்கு அனுமதி, நியூட்ரினோ திட்டத்துக்கு நிதி – இரண்டையும் கைவிட வேண்டும்

ஜம்முவில் கடந்த 3.02.2014 திங்கள் அன்று நடைபெற்ற தேசிய அறிவியல் மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், பி.ட்டி கத்தரி உள்ளிட்ட மரபீனி மாற்றப் பயிர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அறுவித்துள்ளார், இவை பற்றி தெரிவிக்கப்படும் எதிர்ப்புகள் அறிவியல் அடிப்படையற்ற அச்சமூட்டும் முயற்சிகள் என்று பேசியுள்ளார். அவரது பேச்சு, மனிதர்களுக்குக் கேடு விளைவிக்கும் மரபீனி விதைகளை உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவான அவதூறு அறிக்கையாக உள்ளதுமரபீனீ விதைகளை ஆய்வு செய்ய, காங்கிரசு உறுப்பினர்களையும் உள்ளடக்கி இந்திய அரசின் வேளாண் அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட நாடாளுமன்றக்குழுவின் ஆய்வு அறிக்கை இவற்றுக்கு அனுமதி அளிக்கக் கூடாது எனப் பரிந்துரைத்தது இந்த அறிக்கையை துச்சமாகாத் தூக்கி எறிந்துவிட்டு, அதில் எழுப்பப்பட்டுள்ள சிக்கல்களுக்கு விடைக்கூற முயலாமல் பி.ட்டி கத்தரிக்கும், பிற மரபீனி மாற்றப் பயிர்களுக்கும் தமது அரசு அனுமதி அளிக்கும் என்று பிரதமர் மன் மோகன் சிங் அறிவித்திருப்பது மக்கள் நலனிலும் சன நாயகத்திலும் அக்கறையுள்ள அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கிறது

அதே போல் தேனி மாவட்டத்தில் பொட்டிபுரம் மலைப் பகுதியைத் தோண்டி அங்கு நிறுவப்பட உள்ள நியூட்ரினோ ஆய்வகத்தற்கு 1450 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பதாக மன்மோகன் சிங் அறிவித்திருப்பதும் இன்னொரு மக்கள் பகை அறிவிப்பாகும். அப்பகுதி மக்களும், தமிழகத்திலும் கேரளத்திலும் சூழலியல் ஆய்வாளர்களும், ஆர்வலர்களும் இந்நிலையம் குறித்து எழுப்பியுள்ள எதிர்ப்புகளை ஒரு சிறிதும் மதிக்காமல் செய்யப்பட்டுள்ள இந்த முடிவு ஒரு தலைப் பட்சமான திணிப்பாகும்

பிரதமர் மன்மோகன் சிங்கின் இவ்விரண்டு அறிவிப்புகளையும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வன்மையாகக் கண்டிப்பதுடன், இத்திட்டங்களை கைவிட வேண்டுமென வற்புறுத்துகிறது.

இடம் : சென்னை-78.
நாள்  : 09.02.2014

தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.

Saturday, August 17, 2013

“13ஆம் சட்டத்திருத்தத்தையும் மாகாணத் தேர்தலையும் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்” - தோழர் கி.வெங்கட்ராமன் பேச்சு!


“13ஆம் சட்டத்திருத்தத்தையும் மாகாணத் தேர்தலையும்
தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்
மே பதினேழு இயக்க ஆர்ப்பாட்டத்தில்
த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் பேச்சு!



“ஒன்றுபட்ட இலங்கையை வலியுறுத்தும் 13ஆவது சட்டத் திருத்தத்தையும், வடகிழக்கு மாகாண சபைத் தேர்தலையும் தமிழீழத் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்” என, சென்னையில் இன்று(17.08.2013), மே பதினேழு இயக்கம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் பேசினார்.

இலங்கை அரசமைப்பின் 13ஆவது சட்டத்திருத்தம்மாகாணசபைத் தேர்தல் எனும் போலிகளைப் புறக்கணிக்கக் கோரியும், காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாதென வலியுறுத்தியும், இலங்கையில் தொடர்ச்சியாக மசூதிகள் தாக்கப்படுவதை கண்டித்தும், தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு ஒன்றே தமிழர் சிக்கலுக்கான இறுதித் தீர்வு என வலியுறுத்தியும், இன்று (17.08.2013) மாலை, மே பதினேழு இயக்கம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.

இனப்படுகொலைக்கு எதிரான இசுலாமியர் இளைஞர் இயக்க ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் உமர்கயான் கண்டன முழக்கங்களை எழுப்பி, ஆர்ப்பாட்டத்தைத் தொகுத்து வழங்கினார்.

.தி.மு.. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, மனித நேய மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் திரு. தமிமுன் அன்சாரி, விடுதலைத் தமிழ்ப்புலிகள் தலைவர் திரு. குடந்தை அரசன், தமிழக மக்கள் சனநாயகக் கட்சித் தலைவர் திரு. கே.எம்.சேரீப், எஸ்.டி.பி.ஐ(SDPI) மாநிலப் பொதுச் செயலாளர் திரு. நெல்லை முபாரக், திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் அன்பு தனசேகரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தொழிலாளர் பாசறைச் செயலாளர் திரு. சைதை கு.சிவராமன், தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தோழர் சிபி, தொழிலாளர் சீரமைப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் மா.சேகர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

அவரது பேச்சு:

தமிழீழ விடுதலைக் கோரிக்கைக்கு ஒவ்வொரு கட்டத்திலும் முட்டுக் கட்டைகள் போடும் வேலையை இந்தியாத் தொடர்ந்து செய்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாகத்தான் இராசீவ் – செயவர்த்தனா ஒப்பந்தம் 1987-இல் ஏற்படுத்தப்பட்டது. நம்மில் பலர், அந்த இராசீவ் – செயவர்த்தனா ஒப்பந்தத்தில், வடக்கு – கிழக்குப் பகுதிகள் தமிழர்களின் ஒட்டுமொத்த தாயகமாக ஏற்கப்பட்டிருக்கிறது என நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மை அதுவல்ல.

இலங்கைத் தீவின் வடகிழக்கு மாகாணப் பகுதிகளில் தமிழர்களும், அவர்களோடு வேறுபல சமூகத்தினரும் இருக்கின்றனர். அவர்களது தாயகமே அது என்றே குறிப்பிட்டுள்ளனர். அதாவது, அப்பகுதியில் நிலவும் இனச்சமநிலை என்பது இலங்கை முழுவதுமுள்ள இனச்சமநிலையை ஒத்திருப்பதைப் போல் குறிப்பிடப்பட்டுள்ளது. கொழும்பில், 90 விழுக்காடு சிங்களர்கள் இருக்கின்றனர் எனில், இதே இனவிகிதத்தில் வடகிழக்குப் பகுதிகளில் இனச்சமநிலையை ஏற்படுத்த வேண்டுமென அது குறிப்பிடுகிறது. இன்றைக்கு வடகிழக்குப் பகுதிகளில் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற சிங்களமயமாக்கல் அதனடிப்படையில் செய்யப்படுவது தான்.

இவ்வாறான இராசீவ் – செயவர்த்தனா ஒப்பந்தத்தின்படி இலங்கை அரசமைப்பில் ஏற்படுத்தப்பட்ட 13ஆவது சட்டத்திருத்தம் தமிழர்களுக்கு எவ்வித அதிகாரத்தையும் வழங்கப் போவதில்லை. இதை நாம் மட்டும் சொல்லவில்லை. இராசீவ் – செயவர்த்தனா ஒப்பந்தத்தையொட்டி, இந்திய அமைதிப்படையின் இராணுவ உதவியோடு 1987இல் வடகிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் வெறும் 20 ஓட்டுகளே பதியப்பட்டன, அதில் 2 ஓட்டுகள் செல்லாதவை. அதில், 10 ஓட்டு பெற்று ‘வெற்றி’ பெற்றவர், இந்தியாவின் கையாளாக நிறுத்தப்பட்ட வரதராஜபெருமாள் இதைச் சொன்னார்.

“நான் முதலமைச்சராக இருந்தாலும்கூட, என்னுடைய அலுவலகத்திற்காக ஒரு கதிரை (நாற்காலி) வாங்குவதற்காகக்கூட, நான் இலங்கையின் ஜனாதிபதியிடம் கோரிக்கை மனு போட வேண்டியிருக்கிறது. இந்தப் பதவிக்கு எவ்வித அதிகாரமும் இல்லை” என இந்தியாவால் நியமிக்கப்பட்ட கையாளான வரதராஜபெருமாளே சொன்னார். சொல்லிவிட்டு, இந்திய இராணுவத்தின் உதவியுடன் தப்பி பெங்களுரில் தஞ்சம் புகுந்தார்.

இதைத்தாண்டி, இந்த சட்டத்திருத்தம் மோசடியானது என்பதற்கு என்ன சான்று வேண்டும்?

இங்குள்ள காங்கிரசுக் கட்சியினரும், ‘இந்து’ ராம் போன்றவர்களும், இராசீவ் – செயவர்த்தனா ஒப்பந்தத்தை பிரபாகரன் நிராகரித்தது தவறு என்றும், அதை ஏற்றுக் கொண்டிருந்தால் இவ்வளவு பெரிய இழப்பை சந்திருக்கத் தேவையில்லை என்றும் பேசுகிறார்கள். காசுமீரின் சிங்கமெனப் போற்றப்பட்ட சேக் அப்துல்லா, மிசோரம் விடுதலைப் போராளி லால் டெங்கா ஆகியோரைப் போல், பிரபாகரன் தவறு செய்யவில்லை. பெங்களுரில் எம்.ஜி.ஆரை வைத்துக் கொண்டு பிரபாகரனிடம் பேசிப் பார்த்தார்கள். பிரபாகரன் முதலமைச்சர் பதவி எனது இலக்கில்லை என்றார். லால் டெங்கா இலண்டனில், “என்னை விட வயதில் இளையவராக இருந்தாலும் பிரபாகரன் அறிவுக்கூர்மையுடன் இருக்கிறார்” எனப் பாராட்டிப் பேசினார். ஏனெனில், சேக் அப்துல்லா, லால் டெங்கா போன்ற மிகப்பெரும் போராளிகள் இடறி விழுந்த இடம் அது.

அண்மையில், ஐ.நா. மனித உரிமை அவையில் முன்வைக்கப்பட்ட அமெரிக்கத் தீர்மானத்தை நிராகரித்து இங்கு போராட்டங்கள் வெடித்த நிலையில், இங்கு சிலர் பேசினார்கள். அமெரிக்கத் தீாமானத்தை நிராகரித்துவிட்டால் நமக்கு வேறு என்ன இருக்கிறது என்று கேட்டார்கள். நிராகரிப்பு தான் வெற்றிடத்தை ஏற்படுத்தும். அந்த வெற்றிடம்தான் சரியான கோரிக்கையை வைப்பதற்கான இடமாகும். எனவே, இலங்கை அரசமைப்பின் 13ஆவது சட்டத் திருத்தத்தைத் தமிழர்கள் நிராகரித்து, தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்புக் கோரிக்கையையே நாம் உயர்த்திப் பிடிக்க வேண்டும்.

இலங்கை அரசின் இந்தச் சதிகளின் பின்னணியில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முதன்மையான செய்தி, இந்தியா தமிழினப் பகை நாடு. இந்தியாவிடம் வாதாடிப் புரிய வைக்க முடியாது. இந்தியாவைப் போராடிப் பணிய வைக்கத்தான் முடியும். ஏனென்றால், உலகத் தமிழர்களின் முதன்மைப்பகை இந்திய அரசுதான்.

ஒரு நாட்டின் உள்நாட்டுக் கொள்கை என்னவோ, அதன் நீட்சிதான் அதன் வெளியுறவுக் கொள்கை. உலகமயமாக்கலை, உள்நாட்டுக் கொள்கையாக ஏற்றுக் கொண்டதால்தான், தனது வெளிநாட்டுக் கொள்கையை அமெரிக்காவுக்கு ஆதரவாக இந்தியா வடிவமைக்கிறது. அதே போல, உள்நாட்டில் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு எதிராக, பல்வேறு சிக்கல்களில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டுள்ள இந்தியா தான், தனது வெளியுறவுக் கொள்கை மட்டுமோ, அல்லது சோனியாகாந்தி மட்டுமோ தான் தமிழர் சிக்கலுக்குக் காரணம் என்பதல்ல. ஒட்டுமொத்த இந்தியக் கட்டமைப்பே, தமிழர்களுக்கு எதிரானப் பகைக் கட்டமைப்புதான் என்ற உண்மையை நாம் இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டும்”.

இவ்வாறு தோழர் கி.வெங்கட்ராமன் பேசினார்.

பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களும், உணர்வாளர்களும் பெருந்திரளாகப் பங்கேற்ற இவ்வார்ப்பாட்டத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழக இளைஞர் முன்னணிப் பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி, சென்னை த.தே.பொ.க. செயலாளர் தோழர் தமிழ்ச்சமரன், தமிழக இளைஞர் முன்னணி சென்னை தலைவர் தோழர் கோவேந்தன், செயலாளர் தோழர் வினோத், தாம்பரம் செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், பல்லாவரம் செயலாளர் தோழர் கோ.நல்லன் உள்ளிட்ட த.தே.பொ.க. தோழர்கள் பங்கேற்றனர்.







Thursday, April 11, 2013

இலங்கை அரசு ஓர் அரம்பர் அரசு (rowdies state) என்று உலக நாடுகள் அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தோழர் பெ.மணியரசன் வேண்டுகோள்




“இலங்கை அரசு ஓர் அரம்பர் அரசு (rowdies state) என்று
உலக நாடுகள் அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்”
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் வேண்டுகோள்

ஈழத் தமிழர்களுக்கெதிராக 2008-2009 ஆம் ஆண்டுகளில் சிங்கள இராணுவம் நடத்திய போரில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதும் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் நடந்ததும் உலகின் கவனத்திற்கு வந்து, ஐ.நா. மனித உரிமை மன்றமும் அவை பற்றி புலனாய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தீர்மானம் நிறை வேற்றியுள்ளது.

இந்நிலையில் சிங்கள இராணுவ தலைமைத் தளபதி ஜெகத் செயசூரியா இராணுவ நீதிமன்றம் அமைத்து அதன் மூலம் போர்க்குற்றம் நடந்ததா என்று கண்டறிய ஆணையிட்டாராம். அந்த இராணுவ நீதி மன்றம், நடந்து முடிந்த போரில் குடி மக்களில் ஒருவர் கூட இராணுவத்தால் கொல்லப்படவில்லை என்று தீர்ப்பளித்து இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த இராணுவ நீதிமன்றத் தீர்ப்பின் முதல் பாகத்தை இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய இராசபட் சேயிடம் செய சூரியா கொடுத்துள்ளார்.

சிங்கள அரசின் அதிகாரத்திலுள்ள ஆட்சியாளர்கள், இராணுவ நீதிமன்றத் துறையினர், இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் எந்த அளவு சொந்த மனச்சான்றை கொலை செய்யக்கூடியவர் என்பதும், இலங்கையில் எழுதப்பட்டுள்ள சட்டத் திட்டங் களுக்கும், பன்னாட்டு மனித உரிமை சட்டத் திட்டங்களுக்கும், ஐ.நா. மன்றத்திற்கும் கட்டுப்படாத அரம்பர்கள் (rowdies) என்பது இந்த இராணுவ நீதி மன்றத்தின் தீர்ப்பின் மூலம் மீண்டும் மெய்பிக்கப்பட்டுள்ளது.

பான்கீ மூன் அமைத்த மூவர் குழு போரின் கடைசி நாட்களில் 40 ஆயிரம் தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்றும் சிங்கள இராணுவம் செய்த போர்க் குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என்றும் கூறியுள்ளது.  இராசபட்சே அமர்த்திய கற்றுக்கொண்ட பாடங் களுக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணையம் கூட கீழ் நிலை இராணுவ அதிகாரிகள் போர்க் குற்றம் புரிந்துள்ளார்கள் என்று அறிக்கை வெளியிட்டது.

மனிதர்கள் உள்ளிட்ட மற்ற விலங்குகளை முழுமையாக விழுங்கும் முதலையைப் போல  சிங்கள இராணுவ நீதிமன்றம் குடிமக்களில் ஒருவர் கூட கொல்லப் படவில்லை. (zero civilian casualty) என்று தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் இலங்கை அரசு ஓர் அரம்பர் அரசு (rowdies state) என்பது உண்மையாகுகிறது. இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இலங்கை அரசுடன் தூரதரக உறவை துண்டித்துக் கொண்டு அதன் மீது இனப்படுகொலை குற்ற விசாரணை நடத்த பன்னாட்டு புலனாய்வு அமைப்பை ஏற்படுத்த வேண்டும். இலங்கை அரசு தனது குற்றச்செயல்களை நேர்மையாக விசாரித்து நடவடிக்கை எடுத்துக் கொள்ளும் என்று நம்புவதற்கு எள்ளளவும் இனி இடமில்லை என்பதை உலக நாடுகள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இங்ஙனம்,
 பெ.மணியரசன்,
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

Monday, April 1, 2013

தமிழர் தவிர்த்த இந்தியரும், சிங்களரும் ஒரே இனம் என்று இலங்கைத்தூதர் கூறியது உண்மையே! - தோழர் பெ.மணியரசன் அறிக்கை




தமிழர் தவிர்த்த இந்தியரும், சிங்களரும் ஒரே இனம் என்று
இலங்கைத்தூதர் கூறியது உண்மையே!
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை

இலங்கைத் தூதர் பிரசாத் காரியவசம் சிங்களர்கள் இந்தியாவின் ஒரிசா, வங்காளம் ஆகிய பகுதிகளிலிருந்து இலங்கையில் குடியேறியவர்கள், தமிழர்களைத் தவிர்த்த இந்தியர்களும் சிங்களர்களும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்,சமற்கிருதம், வங்காளி, இந்தி ஆகிய மொழிகள் வழியாக உருவானது தான் சிங்களமொழி, எனவே இந்தியர்கள் சிங்களர்களை எதிர்க்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

இவ்வாறு கரியவாசம் கூறியது தவறான கருத்து என்றும், இந்தியர்களை பிளவுபடுத்தும் உள்நோக்கம் கொண்டது  என்றும்  தமிழகத் தலைவர்கள் மறுப்புக் கூறிவருகிறார்கள்.

ஆனால், கரியசம் கருத்து பற்றி இந்திய அரசு சார்பில் யாரும் மறுப்புக் கூறவில்லை; வட இந்தியத் தலைவர்களும், தென்மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களும் மறுப்புக் கூறவில்லை.

தமிழர்களைத் தனிமைப்படுத்தி, சிங்களத் தூதர் கருத்து கூறும் போது, அதை மறுக்க வேண்டும் என்ற முனைப்பு இந்திய ஆட்சியாளர்களுக்கும், வடஇந்தியத்தலைவர்களுக்கும் ஏற்படாதது ஏன்?

கரியசம் ஒரு வரலாற்று உண்மையைத் தான் கூறியுள்ளார் என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கருதுகிறது.

சிங்களர்கள் ஆரிய மரபினத்தைச் சேர்ந்தவர்கள்; தங்களை ஆரியர்கள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்பவர்கள். இலங்கைக் குடியரசுத் தலைவராகஇருந்த ஜெயவர்த்தனே, 1980களில் தமிழின அழிப்புப் போரைத் தொடங்கிய காலத்தில், "இந்தியர்களும் ஆரியர்கள், சிங்களர்களும் ஆரியர்கள். யாருக்கேனும் இதில் சந்தேகம் ஏற்பட்டால் என் மூக்கையும், இந்திரா காந்தி மூக்கையும் ஒப்பிட்டுப் பாருங்கள்" என்றார்.

இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று ஒரு தீர்மானம் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என தி.மு.. கோரிய போது, அதற்காக மக்களவைத் தலைவர் மீராக்குமார், 20.03.2013 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டினார். அக்கூட்டத்தில் கலந்து கொண்ட, பா..., சி.பி.எம்., சி.பி.., சமாஜ்வாதிக் கட்சி, பகுசன் சமாஜ் கட்சி, திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய சனதாதளம், காங்கிரசு என அனைத்துக் கட்சிகளும் இலங்கையில் நடந்ததுஇனப்படுகொலைப் போர் என்று தீர்மானம் நிறைவேற்ற முடியாது, இலங்கை நமது நட்பு நாடு என்று கூறி மறுப்புத் தெரிவித்துவிட்டன.

அனைத்துக் கட்சிகளின் இம்மறுப்பு எதைக் காட்டுகிறது? மிகவும் பிரபலமாக உள்ள வடநாட்டு மனித உரிமை அமைப்புத் தலைவர்கள் இந்த இனப்படுகொலை மீது, இராசபக்சே கும்பலுக்கு எதிராக பன்னாட்டு புலனாய்வு கோரி இயக்கம் எதுவும் நடத்தாததும், வலுவானக் கோரிக்கை வைக்காததும் எதைக் காட்டுகிறது?

சேனல் – 4 தெலைக்காட்சியும், மனித உரிமைக் கண்காணிப்பாகமும்(Human Rights Watch -US) ஈழத்தில் அப்பாவித தமிழ் மக்க்களும், போர் முடிந்த பிறகு தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டதையும் வெளியிட்டு உலக மனச்சான்றை தப்பி எழுப்பியுள்ளனர். தமிழக ஊடகங்கள் பலவும் அவற்றை வெளிப்படுத்தி, இலங்கையில் நடந்த இனப்படுகொலையை அம்பலப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், வடநாட்டு ஊடகங்கள் இந்த இனப்படுகொலை சாட்சிகளையும், செய்திகளையும் உரியவாறு வெளியிடாத்து ஏன்?

இந்தியர்களும், சிங்களர்களும் ஒரே இனம் என்று கரிய வாசம் கூறியதைத் தானே மெய்ப்பிக்கிறது.

2008-2009இல் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்பட்ட ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்களுக்காக எங்களிடம் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் மட்டுமல்ல, ஒருகண்டனத்தைக் கூட எதிர்பார்க்காதீர்கள் என்று தமிழர்களை நோக்கி கூறியதாகத்தானே இம்மறுப்பு அமைகிறது?

இந்திக்காரர்களோ, மலையாளிகளோ, வேறு வடநாட்டவர்களோ எங்காவது ஒரு நாட்டில் ஒரு நூறு பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தால், இந்த வடநாட்டுஅரசியல் கட்சிகளும், தமிழகம் தவிர்த்த தென்னாட்டு அரசியல் தலைமைகளும், இப்படி நடந்து கொண்டிருப்பார்களா?

இலங்கைத் தூதர் கரியசம், தமிழரைத் தவிர்த்த அனைத்து இந்தியர்களும், சிங்களர்களும் ஒரே இனம் என்பது தானே நடைமுறை உண்மையாக இருக்கிறது.

சிங்கள வீரர்களையும் உள்ளடக்கிய .பி.எல். கிரிக்கெட் அணி சென்னையில் விளையாட அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக முதலமைச்சர் செயலலிதாஅறிவித்தார். உடனடியாக கேரள முதல்வர் உம்மன் சாண்டி, சிங்களர் அடங்கிய விளையாட்டுக் குழுவை கேரளத்தில் அனுமதிக்கத் தயார், அந்த அணி இங்குவந்து விளையாடினால் அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்போம் என்று அறிவித்தார்.

தமிழர்களும், மலையாளிகளும் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்தோ, அல்லது இந்தியர் என்ற ஒரு இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்தோ உம்மன்சாண்டிக்கு இருந்தால், அவர் இப்படிச் சொல்வாரா?

எந்த ஒரு நாட்டு அரசுக்கும், ஓர் இனச்சார்பு இருக்கும். அந்த இனத்தின் பண்பாட்டுச் சார்பு இருக்கும். இந்தியா, ஆரிய இனச்சார்பும், ஆரிய பண்பாட்டுச் சார்பும்கொண்டது. இலங்கையும் அப்படிப்பட்டதே.

தமிழர்களைத் தவிர்த்த, காசுமீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைத் தவிர்த்த, இதர வடநாட்டு தேசிய இனங்கள் அனைத்தும் தங்களின் முன்னோர்களாக ஆரியர்களை பெருமையுடன் கருதிக் கொள்கிறார்கள். தமிழகத்தைத் தவிர்த்த இதர தென்னாட்டு தேசிய இனங்கள், ஆரியக் கலப்பினால் உருவானவை.ஆரியச்சார்பிலும், சமற்கிருத மொழி கலப்பிலும் பெருமிதம் கொள்பவை தான் இந்த வடநாட்டு - தென்னாட்டு தேசிய இனங்கள்.

வரலாறெங்கும் ஆரியம் தமிழினத்திற்கு பகை சக்தியாகவே செயல்பட்டிருக்கிறது. இனம், பண்பாடு, மொழி ஆகிய துறைகளில் இன்றும் ஆரியர் - தமிழர் மோதல்நடந்து கொண்டுள்ளது. இந்த மோதலின் வெளிப்பாடு தான் இந்திய - சிங்கள அரசியலில் ஒரு பக்கமாகவும், தமிழர் அரசியல் எதிர் பக்கமாகவும் மோதிக்கொள்ளும் போக்கு. தமிழர்களைப் பொறுத்தவரை சம உரிமை என்பதைத் தான் நாடுகிறோமே தவிர, யாரையும் ஆதிக்கம் செலுத்த விரும்பவில்லை;முனையவில்லை.

ஆனால், ஆரியம் என்பது தமிழர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி, தமிழர்களின் இன, மொழி, அடையாளங்களை அழிப்பதிலும் தமிழர்கள் மீது அரசியல் ஆதிக்கம்செலுத்துவதிலுமே ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பல வடிவங்களில்  போர் நடத்துகிறது. இந்த உண்மை இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து ஈழத்தமிழர்களைஅழிப்பதில் பளிச்சென தெரியவந்துள்ளது. 600 தமிழக மீனவர்களை சிங்களர்கள் சுட்டுக் கொல்வதற்கு இந்தியா பக்கபலமாக இருப்பது, மேலும் இந்தஇனமோதலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

காவிரி, முல்லைப் பெரியாறு அணை போன்ற தமிழர்களின் மரபு உரிமைகளைப் பறிக்கும் கன்னடர்களுக்கும், மலையாளிகளுக்கும் இந்தியா துணை நிற்கிறது.இவற்றில் சட்ட ஆட்சியை செயல்படுத்த, இந்தியா விரும்பவில்லை. இவையெல்லாம் ஆரிய இந்தியாவின் தமிழின பகைப் போக்கின் அடையாளங்கள்.

இனியும் தமிழர்களை இந்தியர் என்ற அடிமை வளையத்திற்குள் சிக்க வைக்க தமிழகத் தலைவர்கள் முயலக்கூடாது. ஏதோ சிறப்பாக செயல்படுகின்றஇந்தியர்ஒற்றுமையை சீர்குலைக்க, சிங்களக் கரியசம் புதிதாக முனைந்து விட்டதைப் போல் கண்டனம் எழுப்புவதில் பொருளில்லை.

இந்தியரும் சிங்களரும் ஒரே இனம் தான். இவ்விருவரின் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து தமிழ்நாட்டிலும், ஈழத்திலும் தமிழர்கள் ஒரு சேரப் போராடும் போது தான் தமிழர்களுக்கு விடிவு கிடைக்கும்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT