உடனடிச்செய்திகள்
Showing posts with label ஆர்ப்பாட்டம். Show all posts
Showing posts with label ஆர்ப்பாட்டம். Show all posts

Wednesday, September 25, 2019

தமிழ் தெரியாத வங்கி மேலாளரை மாற்றுக! செங்கிப்பட்டியில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் போராட்டம்!

தமிழ் தெரியாத வங்கி மேலாளரை மாற்றுக! செங்கிப்பட்டியில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் போராட்டம்!
தஞ்சை மாவட்டம் - செங்கிப்பட்டியில் செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மேலாளராகப் பணியமர்த்தப்பட்டுள்ள தமிழ் தெரியாத வடநாட்டுக்காரரை உடனே மாற்ற வேண்டுமெனக் கோரி, இன்று (25.09.2019) செங்கிப்பட்டியில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலட்சக்கணக்கான தமிழ் இளைஞர்கள் தமிழ்நாட்டில் வேலையின்றி தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், வங்கி - அஞ்சலகம் உள்ளிட்ட அனைத்து இந்திய அரசுப் பணிகளிலும் தமிழே தெரியாத இந்திக்காரர்களை பணியமர்த்தி வரும் இந்திய அரசின் தமிழின விரோதப் போக்கிற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
போராட்டத்திற்கு, தமிழ்த்தேசியப் பேரியக்க பூதலூர் ஒன்றியச் செயலாயர் தோழர் பி. தென்னவன் தலைமை தாங்கினார். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை, தலைமைச் செயற்குழு தோழர் பழ. இராசேந்திரன், மாவட்டச் செயற்குழு தோழர் ரெ. கருணாநிதி, திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் இலெட்சுமணன், நாம் தமிழர் கட்சி பூதலூர் ஒன்றியச் செயலாளர் திரு. அற்புதராஜ் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினார். நிறைவில், தோழர் ச. செந்தமிழன் நன்றி கூறினார். நிகழ்வில், திரளான தமிழின உணர்வாளர்களும் பேரியக்கத் தோழர்களும் பங்கேற்றனர்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்


பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Monday, June 17, 2019

மதுரையில் வேத பிராமணிய முறைப்படி தமிழன்னை சிலை அமைப்பதை எதிர்த்து போராட்டம்! ஐயா பெ. மணியரசன் உள்ளிட்ட 200 பேர் கைது! போராட்டத்திற்கு முதல் கட்ட வெற்றி!

மதுரையில் வேத பிராமணிய முறைப்படி தமிழன்னை சிலை அமைப்பதை எதிர்த்து போராட்டம்! ஐயா பெ. மணியரசன் உள்ளிட்ட 200 பேர் கைது! போராட்டத்திற்கு முதல் கட்ட வெற்றி!
மதுரையில் தமிழ்ச் சங்க வளாகத்தில் வேதகால பிராமணிய முறைப்படி தமிழன்னை சிலை அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்ததை எதிர்த்து இன்று(17.06.2019) காலை நடைபெற்ற போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் தலைமையில் 'தமிழர் மரபுக்கு எதிரான தமிழன்னை சிலை எதிர்ப்புக் கூட்டமைப்பு' சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி இன்று காலை பேரணியாக இப்போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் "தமிழக அரசே தமிழக அரசே, இரத்து செய் இரத்து செய் வேதகால பிராமண முறைப்படி தமிழன்னை சிலை அமைப்பது இரத்து செய்!", "தமிழன்னை சிலையா சமற்கிருத மாதா சிலையா?" என்பன உள்ளிட்ட ஆவேச முழக்கங்களை எழுப்பிய தோழர்கள், அண்ணா பேருந்து நிலையம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலையில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர்.

நாம் தமிழர் கட்சி தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு. வெற்றிக்குமரன், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், மருது மக்கள் இயக்க பொதுச் செயலாளர் திரு இராஜ்குமார், தமிழ் புலிகள் கட்சி பொதுச் செயலாளர் திரு. சி. பேரறிவாளன், தமிழ் உரிமை கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் புலவர் இரத்தினவேலன், தமிழில் வழக்காட உரிமை கோரும் இயக்க ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பகத்சிங், ஏழு தமிழர் விடுதலை கட்சி ஒருங்கிணைப்பாளர் திரு. காந்தி, வீரகுல அமரன் இயக்கம் நிறுவனர் திரு. இரா. முருகன், மக்கள் சட்ட உரிமை இயக்க மாநிலத் தலைவர் திரு. அண்ணாதுரை, புரட்சிகர இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் குமரன், மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. ஆசிர்வாதம், மதுரை ஸ்டார் லேபர் யூனியன் பொதுச்செயலாளர் பழ. இராஜேந்திரன், மகளிர் ஆயம் தலைவர் தோழர் ம. இலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் மகளிர் அணி தோழர்கள் பாண்டியம்மாள், ரேவதி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் தோழர்களும் என 200 பேர் கைது செய்யப்பட்டனர். பெண்களும் ஆண்களும் தங்கள் கைக்குழந்தையோடு போராட்டத்தில் பங்கெடுத்து கைதாகினர்.

கைது செய்யப்பட்ட தோழர்கள் தற்போது மதுரை காவல் படை மைதானத்தில் ஒரு மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இச்சூழலில் தமிழ்நாடு அரசின் பூம்புகார் நிறுவனம் சிலை அமைக்கக் கோரும் ஏல ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது என்றும், இது போராட்டத்திற்கு கிடைத்த முதல் கட்ட வெற்றி என்றும் ஐயா பெ. மணியரசன் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். ஒப்பந்தத்தை ரத்து செய்ததோடு நிற்காமல் தமிழ்நாடு அரசு தமிழறிஞர்களையும், தமிழ்நாட்டு வல்லுனர்களையும் கொண்ட புதிய குழு அமைத்து கல்லிலோ அல்லது வெங்கலத்திலோ, தமிழர் மரபுப்படி தமிழன்னை சிலை அமைக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும் என்றும் ஐயா பெ. மணியரசன் அவர்கள் வலியுறுத்தினார்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Saturday, December 29, 2018

“புயல் துயர் துடைப்புக்கு நிதி வழங்காத நரேந்திர மோடிக்கு முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரும் ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை?” தோழர் பெ. மணியரசன் கேள்வி!

“புயல் துயர் துடைப்புக்கு நிதி வழங்காத நரேந்திர மோடிக்கு முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரும் ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை?” நாகை தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி!
“கசா” புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான துயர் துடைப்புப் பணியில் உடனடியாக ஈடுபடாத இந்திய – தமிழ்நாடு அரசுகளைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி – தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில், இன்று (29.12.2018) காலை முதல் மாலை வரை, நாகையில் தொடர் முழுக்கக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகை அவுரித் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் தலைமை தாங்கினார். நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. செந்தமிழன் சீமான் சிறப்புரையாற்றினார். நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திரு. “தமிழ் முழக்கம்” சாகுல் அமீது, திரு. அன்புத் தென்னரசன் உள்ளிட்ட நா.த.க. பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.

தமிழக மக்கள் சனநாயகக் கட்சித் தலைவர் திரு. கே.எம். செரீப், தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு. களஞ்சியம், ஆதித்தமிழர் விடுதலை இயக்கத் தலைவர் திரு. வினோத், தமிழர் தேசிய விடுதலைக் கழகத் தலைவர் திரு. ஆ.கி. ஜோசப் கென்னடி, காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் திரு. காவிரி தனபாலன், வேதாரண்யம் வட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. டி..வி. இராசன், செயலாளர் திரு. தா. ஒளிச்சந்திரன், நடிகர் மன்சூர் அலிகான், மருது மக்கள் இயக்கத் தலைவர் தோழர் முத்துப்பாண்டியன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும், நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்களும் பங்கேற்று உரையாற்றினர்.

தலைமையுரை ஆற்றிய ஐயா பெ. மணியரசன் அவர்கள் பேசியதன் எழுத்து வடிவம்:

“கசா புயல் துயர் துடைப்பில் உடனடியாக ஈடுபடாத இந்திய - தமிழ்நாடு அரசுகளைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் முன்னெடுப்பில் நடைபெற்று வரும் இந்தத் தொடர் முழக்கக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்திருக்கும் அன்பிற்குரிய தமிழ்ச் சொந்தங்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கம்!

மிக எழுச்சியோடு - ஒரு மாநாடு போல் நடந்து கொண்டிருக்கும் இந்தப் போராட்டம், “கசா” புயல் ஏற்படுத்திய பேரழிவின் போது சரிவரி துயர் துடைப்புப் பணிகளில் ஈடுபடாத இந்திய அரசையும், தமிழ்நாடு அரசையும் கண்டித்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இனியாவது அவர்கள் துயர் துடைப்புப் பணிகளில் சரியாக செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நடக்கிறது.

புயல் வருவதற்கு முன்பாக தமிழ்நாடு அரசு, முன்கூட்டியே மின் இணைப்பைத் துண்டித்து சரியாகவே செயல்பட்டார்கள். ஆனால், அதன்பிறகு, நடந்த புயல் துயர் துடைப்புப் பணிகள் – செப்பனிடும் பணிகள் மிக மிக மோசமாக உள்ளன.

சில இடங்களில் இன்னும்கூட மரங்கள் வீழ்ந்து கிடக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்துவதற்கு, வீடுகளின் மீதுள்ள கூரைகளில் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றுவதற்கு அரசு சார்பில் என்ன ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள்? தனியாக சில நண்பர்கள் தன்னார்வ முயற்சியில் அதற்குரிய கருவிகளைக் கொண்டு வந்து இறக்கினார்கள். ஒரு தோப்பே வீழ்ந்து கிடக்கும்போது, அந்த நில உரிமையாளர் தனியாக அவற்றை அகற்றிட முடியுமா? இவற்றையெல்லாம் கணக்கிலெடுக்காமல் தமிழ்நாடு அரசு என்ன துயர் துடைப்புப் பணிகள் மேற்கொள்கிறது?

புயல் நடந்த போது, நான் வட அமெரிக்காவில் இருந்தேன். தொலைக்காட்சி வழியாக அதன் பாதிப்புகளைப் பார்த்தேன். நாம் தமிழர் கட்சியினர் பல்வேறு இடங்களில் துயர் துடைப்புப் பணிகளில் இறங்கியதைப் பார்த்தேன். நான் சார்ந்துள்ள தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பிலும் பல பகுதிகளில் துயர் துடைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இந்திய – தமிழ்நாடு அரசுகள் என்ன செய்தன?

எந்த அரசியலுக்கும் அப்பாற்பட்டவர்கள் பெருமளவில் உதவிகளைச் செய்தார்கள். தமிழ்ச்சமூகம் இன்றைக்கு முன்பைவிட அதிகளவில் விழிப்புணர்ச்சி பெற்று வளர்ந்துள்ளது. எனவேதான், அரசை நம்பாமல் - அரசை சார்ந்திருக்காமல், தாங்களாகவே உதவ வேண்டும் என்ற எண்ணத்தோடு தமிழ்ச்சமூகத்தின் இளைஞர்கள் களத்தில் இறங்கி அக்கறையுடன் பணி செய்தார்கள்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலக நாடுகளில் வாழும் தமிழர்களெல்லாம் நம்மைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறாகள். வடஅமெரிக்காவில் நான் இருந்தபோது, அங்கிருந்த தமிழ் இளைஞர்கள், நாம் தமிழர் இயக்கத் தோழர்கள் துடிப்போடு செயல்பட்டு, துயர் துடைப்புப் பணிகளுக்காக நிதி சேகரித்து அனுப்பி வைத்தார்கள். நம் தமிழ்ச்சமூகம் சர்வதேசமயமாகி வருவதன் வெளிப்பாடு இது! நம் சமூகம் புதிய மாறுதலுக்கு உள்ளாகி இருப்பதன் அடையாளம் இது!

அயல் நாடுகளில் பணிபுரியச் சென்றுள்ள நம் தமிழ்ச் சொந்தங்கள், அந்தந்த நாடுகளில் அந்தந்த இனத்தின் பெருமைகளை – சாதனைகளைப் பேசுவதைக் கேட்கிறார்கள். அவற்றையெல்லாம் பார்க்கும் நம் சொந்தங்களுக்கு, தமிழ் இனத்தில் பெருமைகளும், சாதனைகளும், சிறப்புகளும் நெஞ்சில் தைக்கிறது! எனவே, அதிக ஆர்வத்தோடு தமிழ்நாட்டை உற்று நோக்குகிறார்கள்.

பழைய காலம் போல் இன்றைக்கு பெயர் பெற்ற தலைவர்கள் - பூதந்தாங்கி பட்டங்களைச் சுமந்த அரசியல் தலைவர்கள் சொன்னால்தான் - வழிகாட்டினால்தான் நடக்கும் என்ற நிலைமை இப்போது இல்லை! ஏதோ தேர்தலின்போது, அவர்களுக்கு வாக்குப் போடுவதோடு இருக்கிறார்கள். அந்த நிலையிலும் மாற்றம் வரும்; வர வேண்டும்!

துயர் துடைப்புப் பணிகளில் உதவியதோடு மட்டுமல்ல, தன்னெழுச்சி நம் மக்கள் போராட்டங்களிலும் ஈடுபடுகிறார்கள். நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டங்கள் அதைத்தான் காட்டுகிறது. இதோ, இப்போது வேளாண் விளை நிலங்கள் வழியாக மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதை எதிர்த்து, கொங்கு மண்டலத்தில் உழவர் பெருமக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். எட்டுவழிச் சாலைக்கு எதிராக தமிழ் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

பெயர் பெற்ற அரசியல் கட்சிகளுக்குக் காத்திராமல், தாங்களே களம் காணும் புதிய அத்தியாயத்தை தமிழ் மக்கள் திறந்துவிட்டுள்ளார்கள்!

இந்த நிலையிலும்கூட ஆடாமல் அசையாமல் சரியாகப் பணி செய்யாமல் இருக்கிறது ஆளும் அ.தி.மு.க. அரசு!

நரேந்திர மோடி அரசு, தமிழ் மக்களின் துயரத்தைப் பகிர்ந்து கொள்ள ஒரு அறிக்கைக் கூட விடவில்லை! ஏன்? தமிழர்கள் மீது – தமிழ் மக்கள் மீது அவர்களுக்குக் காழ்ப்புணர்ச்சி - பாகுபாட்டு உணர்ச்சி இருக்கிறது. அதுதான், அவ்வப்போது இவ்வாறு வெளிப்படுகிறது!

இந்த புயல் துயரத்தை நரேந்திர மோடி ஏன் வந்து நேரில் பார்க்கவில்லை? நமக்கும் சேர்த்துதான் அவர் தலைமை அமைச்சராக இருக்கிறார் என்று நாம் நம்புகிறோம். ஆனால் மோடியின் அடிமனம் தமிழர்களை அவர்களில் ஒருவராக ஏற்கவில்லை. எனவே, அலட்சியப்படுத்துகிறார்கள்!

நரேந்திர மோடியிடம் புயல் பாதிப்புகளுக்காக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் 15,000 கோடி ரூபாய் கேட்டார். ஆனால், இப்போது வரை வெறும் 353 கோடி ரூபாயைத்தான் கொடுத்திருக்கிறார்கள். நடுவண் வேளாண் அமைச்சகம் 173 கோடி ஒதுக்கியுள்ளது. “ஏன் எங்களை வஞ்சிக்கிறீர்கள்? ஏன் எங்களுக்கு நிதி வழங்க மறுக்கிறீர்கள்” என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி அவர்களே, நீங்கள் ஏன் கேட்கவில்லை?

மோடியைக் கேட்டால், அவரது முகம் உரிந்துவிடுமோ என்று அச்சப்படுகிறார் எடப்பாடி! எட்டுக் கோடி மக்களுக்கு முதல்வராக நீடிக்க உங்களுக்குத் தகுதி இருக்கிறதா?

கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டபோது, அதன் முதலமைச்சர் மோடியை விடாப்பிடியாக தொடர்பு கொண்டு, நிதி பெற்றாரே.. அவரை வெள்ளச் சேதங்களைப் பார்வையிட அழைத்து வந்தாரே.. எடப்பாடி அவர்கள், இதுபோல் முயற்சி எடுத்தாரா?

இப்போது, “கசா” புயலால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு சாதாரணமானது அல்ல! நாங்கள் புயல் பாதிப்புகளைப் பார்வையிடச் சென்றபோது, அங்கிருந்த பெரியவர்களிடம் கேட்டோம். 1957க்குப் பிறகு, இப்போது ஏற்பட்டுள்ள புயல்தான் மிக மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியதாக அவர்கள் சொன்னார்கள். இதைவிடப் பெரிய அழிவு வேறென்ன வேண்டும்? இது பேரிடர் அல்ல பேரழிவு என்கிறோம்!

இந்த புயல் பாதிப்பை, ஏன் “தேசியப் பேரிடராக” இந்திய அரசு அறிவிக்கவில்லை? உங்கள் இந்தியத்தேசியத்தில் தமிழ்நாடு வராதா?

நரேந்திர மோடியை இப்படி வஞ்சிக்கிறார். இன்னொருபுறத்தில், அடுத்த தலைமையமைச்சர் என காங்கிரசுத் தலைவர் இராகுலை அழைக்கின்றார்களே! அவர் தமிழ்நாட்டிற்கு வந்து புயல் பாதிப்புகளைப் பார்வையிட்டாரா? அகில இந்திய காங்கிரசுத் தலைவர்கள் யாராவது வந்தார்களா? ஏன் வரவில்லை?

இந்த இலட்சணத்தில், தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின், அவரது தந்தை கலைஞர் கருணாநிதி இந்திரா காந்தி அம்மையாரை “இந்தியாவின் திருமகளே வருக! நல்லாட்சி தருக!” என்றாரே, அதைப்போல் இப்போது “இராகுலே வருக! நல்லாட்சித் தருக!” என அழைக்கின்றார். தமிழ்நாட்டுக்குக் காங்கிரசும், அதன் தலைவர்களும் என்ன செய்தார்கள்? இவர்கள்தான் மாற்று என்பது ஏமாற்றில்லையா?

தி.மு.க. வேண்டுமானால் கசா புயல் பாதிப்புக்காக சில உதவிகளை – நிதியை அளித்திருக்கலாம். ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் 15,000 கோடி ரூபாய் கேட்டு மோடியிடம் கோரிக்கை வைத்தாரே! அந்தத் தொகையைத் தாருங்கள் என்று இந்திய அரசுக்கு – நரேந்திர மோடிக்கு தி.மு.க. செயல் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் என்ன அழுத்தம் கொடுத்தார்? என்ன போராட்டம் நடத்தினார்? என்ன குரல் கொடுத்தார்?

எனவே, நீங்கள் இருவரும் ஒன்றாகவே இருக்கின்றீர்கள்! செல்லா நாணயத்தின் இருபக்கங்களாக தி.மு.க.வும் – அ.தி.மு.க.வும் இருக்கின்றன! நீங்கள் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக் கொண்டு, தில்லியை தப்பிக்க விடுகின்றீர்கள்!

காங்கிரசும் பா.ச.க.வும் ஒன்றே! காங்கிரசுக்கு இன்னொரு பெயர்தான் - பா.ச.க.! இந்தியத்தேசியத்தின் இன்னொரு பெயர்தான் இந்துத்துவம்! அதுபோல், தில்லியின் கங்காணிதான் திராவிடம்!

இம்மூவரும் நம்மை – தமிழ் மக்களைக் கைவிட்டுவிட்டார்கள். எனவேதான், நாம் களத்தில் இறங்கிச் செயல்பட வேண்டியுள்ளது. நாங்கள் தமிழ் மக்களைக் கைவிட மாட்டோம்!

எனக்கு முன்னால் பேசிய அன்புத்தோழர் சீமான், புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் வீடுகள் கட்டிக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டபோது, சிலரது வீடுகளில் உதயசூரியன் சின்னம் வரையப்பட்டிருப்பதை அவர்களது தோழர்கள் சுட்டிக்காட்டியதைச் சென்னார். “அதனால் என்ன தம்பி? அவர்களும் நம் தமிழர்கள்தானே!” என்றார். இவ்வாறு நாம் தமிழர்களைக் கட்சி கடந்து நேசிக்கிறோம் அல்லவா? இதுதான் இங்கு தேவை!

இவ்வளவு பெரிய பேரிடர் தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் நிலையில், ஏன் இந்திய அரசு உடனடியாக மீட்புப் பணிகளுக்கு இந்திய இராணுவத்தை இறக்கவில்லை? இராணுவம் வந்திருந்தால், ஒரு வாரத்தில் மின் கம்பங்களை மீட்டு, மின் விநியோகத்தை சீரமைத்திருக்கலாம் அல்லவா? ஏன் செய்யவில்லை?

இன்னும்கூட, பல பகுதிகளில் பம்பு செட்டுகளுக்கு மின்சாரம் இல்லை! வயல் காடுகளில் பயிர்களுக்கு தண்ணீர்ப் பாய்ச்ச, ஆழ்குழாய் கிணறுகளுக்கு மின்சார இணைப்பு கொடுக்கப்படவில்லை.

ஒட்டு மொத்தத் தமிழ்நாட்டையும் இராணுவ மண்டலமாக்கி, தொழிற்சாலைகளை ஆங்காங்கு வைத்து, தமிழர்களைக் கண்காணிப்பில் வைக்கத் திட்டமிடுகின்ற இந்திய அரசு, மீட்புப் பணிகளுக்கு இந்திய இராணுவத்தை இறக்க சிந்திக்கவில்லையே ஏன்? தமிழ்நாடு முதலமைச்சர் ஏன் அவ்வாறு கோரிக்கை வைக்கவில்லை? மீட்புப் பணிகளுக்கு இராணுவத்தைக் கேட்டு கோரிக்கை வைத்தால், தன் வீட்டிற்கு ரெய்டு வரும், வழக்கு வரும், சிறைக்குச் செல்லவும் நேரிடலாம் என்று எடப்பாடியார் அச்சப்படுகிறாரா?

இவ்வளவு நடந்தபிறகும், இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் துயர் துடைப்புத் தொகையும் முழுமையானதாக இல்லை. நெற்பயிர் சேதத்துக்கு ஒரு ஏக்கருக்கு 25,000 ரூபாய் வழங்க வேண்டும். எட்டுவழிச் சாலையைக் கொண்டு வரும்போது, ஒரு தென்னை மரத்திற்கு 40,000 முதல் 50,000 ரூபாய் வரை விலை பேசினீர்களே! இப்போது, வெறும் 1,100 ரூபாயைக் கொடுத்தால் என்ன ஞாயம்? தென்னையை வெட்டி எடுக்கவே 1000 ரூபாய் வரைத் தேவைப்படுகிறது. எனவே, ஒரு தென்னை மரத்திற்கு குறைந்தபட்சம் 15,000 ரூபாயாவது வழங்க வேண்டும்.

உழவர்களின் பயிர்க்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். கடந்த ஆண்டு, கடன் தள்ளுபடியின் போது தமிழ்நாடு அரசு ஐந்து ஏக்கர் வரம்பு விதித்தது. அதை மதுரை உயர் நீதிமன்றத்தில் நீக்கியபோது, அதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று வாதாடி, ஐந்து ஏக்கர் வரம்பை உறுதிப்படுத்தியது தமிழ்நாடு அரசு! அவ்வாறெல்லாம் இல்லாமல், இப்போது அனைவருக்கும் வரம்பின்றி கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். பெரிய நிலம் வைத்திருப்பவர்களுக்கு அதற்கேற்ப பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பாரபட்சம் காட்டாமல் அனைவருக்கும் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

பன்னாட்டு நிறுவனங்களுக்கும், வடநாட்டு பெருமுதலாளிகளுக்கும் வாராக் கடன் என்ற பெயரில் பல இலட்சம் கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்கின்றீர்களே, ஏன் உழவர்களுக்கு இந்த துயரமான நேரத்தில் கடன் தள்ளுபடி செய்யக்கூடாது?

உழவர்களுக்கு அளிக்கப்படும் கடன் தள்ளுபடி என்பது சலுகையோ, பிச்சையோ அல்ல! தங்களது நெல்லுக்கும், பருத்திக்கும், சர்க்கரைக்கும் வழங்கப்பட வேண்டிய உண்மையான விலையைக் குறைத்து, அவர்களது அடிவயிற்றில் அடித்து குறைந்த விலைக்கு வாங்குகிறீர்களே! அதனுடன் கொடுக்கப்படாத விலையின் ஒருபகுதியைத்தான் (Deffered Price) அவர்கள் கடன் தள்ளுபடியாகக் கேட்கிறார்கள். எனவே, உழவர்களுக்குக் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.

உழவுத் தொழிலாளின் வீடுகள் பெரும் சேதமடைந்துள்ளன. அவர்களுக்கு இப்போது உழவு வேலையும் இல்லை. எனவே, அவர்களது குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் 15,000 ரூபாயாவது இழப்புத் தொகை அளிக்க வேண்டும்.

இதையெல்லாம் செய்யாமல் என்ன துயர் துடைப்புப் பணி இருக்கிறது? எனவே, தமிழ்நாடு அரசு இவற்றையெல்லாம் செய்ய வேண்டும்! இந்திய அரசிடம் அதற்குரிய நிதியைக் கேட்க வேண்டும்!”

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் பேசினார்.
தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை, தலைமைச் செயற்குழு தோழர்கள் க. விடுதலைச்சுடர், தை. செயபால், பழ. இராசேந்திரன், தஞ்சை மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி, திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் மூ.த. கவித்துவன், பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோர் பி. தென்னவன், மகளிர் ஆயம் தோழர் செம்மலர், தஞ்சை மாவட்டச் செயற்குழு” தோழர்கள் இரெ. கருணாநிதி, க. காமராசு, இரா.சு. முனியாண்டி உள்ளிட்ட திரளான பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர். திரளான தமிழின உணர்வாளர்களும், பொது மக்களும் பங்கேற்றனர்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Tuesday, April 17, 2018

காசுமீர் சிறுமி ஆசிபாவுக்கு நீதி கேட்டு - மதுரையில் மகளிர் ஆயம் ஆர்ப்பாட்டம்!

காசுமீர் சிறுமி ஆசிபாவுக்கு நீதி கேட்டு - மதுரையில் மகளிர் ஆயம் ஆர்ப்பாட்டம்!

அனைவரும் வருக.!

மகளிர் ஆயம்
தொடர்புக்கு 9486686845, 9486958282, 9486107087

Sunday, February 18, 2018

பறிபோன காவிரி உரிமையை மீட்க புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம்!

பறிபோன காவிரி உரிமையை மீட்க புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம்!
 காவிரி உரிமையைப் பறிக்கும் வகையில் வந்துள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, தமிழர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (16.02.2018) தீர்ப்பு வந்த சில மணி நேரத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுப்பில் தஞ்சை, குடந்தை, தருமபுரி, திருத்துறைப்பூண்டி, திருச்சி, ஓசூர் ஆகிய இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

இன்று (17.02.2018), காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான தோழர் பெ. மணியரசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதனையடுத்து, இன்று மாலை புதுச்சேரியில், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு, காவிரி உரிமை மீட்புக் குழு - புதுச்சேரி ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த்தேசியப் பேரியக்க புதுச்சேரி செயலாளருமான தோழர் இரா. வேல்சாமி தலைமையேற்றார்.

உலகத் தமிழ்க் கழகப் புதுச்சேரி அமைப்பாளர் ஐயா கோ. தமிழுலகன், நாம் தமிழர் கட்சி தொழிற்சங்கத் தலைவர் திரு. த. இரமேசு, தமிழர் தேசிய முன்னணி புதுச்சேரி தலைவர் ஐயா இளமுருகன், தமிழ் தமிழர் இயக்கப் புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் தோழர் மகேசு, யாவரும் கேளிர் அறக்கட்டளை திரு. ஏ. கேசவன், தை நிமிர்வு அன்புநிலவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்திய அரசுக்கு எதிராகவும், தமிழர் உரிமையை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhthesiyam.com

Saturday, February 17, 2018

பறிபோன காவிரி உரிமையை மீட்க பெண்ணாடத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!

பறிபோன காவிரி உரிமையை மீட்க பெண்ணாடத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!
காவிரி உரிமையைப் பறிக்கும் வகையில் வந்துள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, தமிழர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (16.02.2018) தீர்ப்பு வந்த சில மணி நேரத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுப்பில் தஞ்சை, குடந்தை, தருமபுரி, திருத்துறைப்பூண்டி, திருச்சி, ஓசூர் ஆகிய இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

இன்று (17.02.2018), காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான தோழர் பெ. மணியரசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதனையடுத்து, இன்று மாலை கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒருங்கிணைப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெண்ணாடம் பேருந்து நிலையம் அருகில், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பெண்ணாடம் கிளைச் செயலாளர் தோழர் கு. மாசிலாமணி தலைமையில் நடந்த போராட்டத்தில், மாந்த நேயப் பேரவை தோழர் பெ.ச. பஞ்சநாதன், அப்துல் கலாம் இலட்சிய பேரவை திரு. சிவத்திருநாதன், திரு. பாண்டியன், தமிழக உழவர் முன்னணி தோழர் மு. இராமகிருட்டிணன், தமிழக இளைஞர் முன்னணி தோழர் சி.பிரகாசு, தமிழக மாணவர் முன்னணி தோழர் தி.ஞானப்பிரகாசம், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் அ.ரா.கனகசபை, தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.முருகன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். நிறைவாக துறையூர் கிளை தோழர் தே.இளநிலா நன்றி கூறினார்.
இந்திய அரசுக்கு எதிராகவும், தமிழர் உரிமையை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com 

பறிபோன காவிரி உரிமை - சென்னையில் போராட்டம்!

பறிபோன காவிரி உரிமை - சென்னையில் போராட்டம்!

 காவிரி உரிமையைப் பறிக்கும் வகையில் வந்துள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, தமிழர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (16.02.2018) தீர்ப்பு வந்த சில மணி நேரத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுப்பில் தஞ்சை, குடந்தை, தருமபுரி, திருத்துறைப்பூண்டி, திருச்சி, ஓசூர் ஆகிய இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.



இன்று (17.02.2018), சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான தோழர் பெ. மணியரசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் திரு. தி. வேல்முருகன், பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு. களஞ்சியம், தமிழின உணர்வாளர் இயக்குநர் வ. கௌதமன், அகில உலக வள்ளலார் பாதுகாப்புப் பேரவைத் தலைவர் திரு. அண்ணாதுரை, மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் ம. இலட்சுமி, மாணவர்கள் இலயோலா மணி, பார்வைதாசன், செம்பியன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
இன்று மாலை கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒருங்கிணைப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com 

Wednesday, December 13, 2017

மீனவர் துயரை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்! - தஞ்சையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆர்ப்பாட்டம்!

மீனவர் துயரை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்! - தஞ்சையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தில் ஒக்கிப் புயல் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை கணக்கில் கொண்டு - அதனை இந்திய அரசு தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும், காணாமல் போன மீனவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும், காணாமல் போன மீனவர்கள் குறித்த முழுமையானக் கணக்கெடுப்பை வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒருங்கிணைப்பில் தமிழ்நாடெங்கும் ஆங்காங்கு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, நேற்று (12.12.2017) மாலை, தஞ்சையில் தொடர்வண்டி நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த்தேசியப் பேரியக்க மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி தலைமை தாங்கினார். தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. அயனாவரம் சி. முருகேசன், பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் தென்னவன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா. வைகறை நிறைவுரையாற்றினார். பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. விடுதலைச்சுடர், மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் ம. இலட்சுமி, பொதுக்குழு தோழர்கள் இரா.சு. முனியாண்டி, முருகையன் உள்ளிட்ட பேரியக்கச் செயல்பாட்டாளர்கள் பங்கேற்றனர்.
இன்று (13.12.2017) மாலை சென்னையிலும், மதுரையிலும், நாளை (14.12.2017) ஓசூரிலும், 16.12.2017 அன்று புதுச்சேரியிலும் ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன.

இந்திய அரசே! மீனவர் துயரை தேசியப் பேரிடராக அறிவி!
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Saturday, October 21, 2017

கர்நாடகத்தில் தமிழர்கள் மீது நடந்த தாக்குதலைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியோர் கைது!

கர்நாடகத்தில் தமிழர்கள் மீது நடந்த தாக்குதலைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியோர் கைது!
 
கர்நாடகத்தின் பெங்களூரு, மைசூரில் நகரங்களில் தமிழ்த் திரைப்பட நடிகர் விஜய் நடித்து வெளியான மெர்சல் தமிழ்த் திரைப்படத்தின் பதாகைகளைக் கிழித்தெறிந்து, தமிழர்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய கன்னட அமைப்புகள், கர்நாடகத்தில் தமிழ்த் திரைப்படங்கள் திரையிடக் கூடாது, தமிழர்கள் அடக்கத்துடன் நடக்காவிடில், 1991-இல் பெங்களூரில் நிகழ்ந்த காவிரி கலவரத்தை போல் மீண்டும் தமிழர்கள் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ள செய்தி, இன்று ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
 
தமிழர்களைத் தாக்கிய கன்னட இனவெறியர்களைக் கண்டித்தும், அவர்களைக் கைது செய்யக் கோரியும், தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒருங்கிணைப்பில், நேற்று (20.10.2017) மாலை சென்னை நுங்கமபாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய தலைவர்களும், தோழர்களும் தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
 
ஆர்ப்பாட்டத்தில், “கண்டிக்கின்றோம்! கண்டிக்கின்றோம்!, கன்னடவெறியர்களைக் கண்டிக்கின்றோம்”, “ஒருமைப்பாட்டு உபதேசம் புரியும் இந்திய அரசே! தமிழர்கள் தாக்கப்படுவதை வேடிக்கைப் பார்க்காதே!”, “கன்னடன் உனக்கு பங்காளி! தமிழன் உனக்குப் பகையாளியா?” என்பன உள்ளிட்ட ஆவேச முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதனையடுத்து, தோழர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து, தாங்கள் கொண்டு வந்திருந்த வாகனத்தில் ஏற்றினர்.
 

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் தியாகு, தமிழ்த் தேச மக்கள் கட்சித் தலைவர் வழக்கறிஞர் பா. புகழேந்தி, நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் தோழர் அன்புத் தென்னரசு, தமிழ்த் திரைப்பட இயக்குநர் வ. கவுதமன், தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் சோழன் மு. களஞ்சியம், காவிரி உரிமை மீட்புக் குழு திரு. பழனிராசன், தமிழர் விடுதலைக் கழக ஒருங்கிணைப்பாளர் தோழர் சௌ. சுந்தரமூர்த்தி, புலவர் இரத்தினவேலவன், இளந்தமிழகம் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் இராசன் காந்தி, மே பதினேழு இயக்கத் தோழர் பன்னீர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும், தோழர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
 
தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, தென்சென்னை செயலாளர் தோழர் மு. கவியரசன், வடசென்னை செயலாளர் தோழர் செந்தில், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை பாவலர் முழுநிலவன் உள்ளிட்ட திரளான பேரியக்கத் தோழர்கள் பங்கேற்று கைதாகினர்.
 
கர்நாடக அரசே! தமிழர்களைத் தாக்கியக் கன்னட இனவெறியர்களைக் கைது செய்து சிறையிலடை!
 
தமிழ்நாடு அரசே! தமிழர்கள் தாக்கப்படுவதை வேடிக்கைப் பார்க்காதே! உடனே கண்டனக் குரல் எழுப்பி, கர்நாடக அரசுக்கு நெருக்குதல் கொடு!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: WWW.tamizhthesiyam.com

Friday, October 20, 2017

கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் சென்னையில் இன்று (20.10.2017) மாலை கர்நாடகத் தமிழர் காப்பு ஆர்ப்பாட்டம்..!

கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் சென்னையில் இன்று (20.10.2017) மாலை கர்நாடகத் தமிழர் காப்பு ஆர்ப்பாட்டம்..!

கர்நாடகத்தின் பெங்களூரு, மைசூரில் நகரங்களில் தமிழ்த் திரைப்பட நடிகர் விஜய் நடித்து வெளியான மெர்சல் தமிழ்த் திரைப்படத்தின் பதாகைகளைக் கிழித்தெறிந்து, தமிழர்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய கன்னட அமைப்புகள், கர்நாடகத்தில் தமிழ்த் திரைப்படங்கள் திரையிடக் கூடாது, தமிழர்கள் அடக்கத்துடன் நடக்காவிடில், 1991-இல் பெங்களூரில் நிகழ்ந்த காவிரி கலவரத்தை போல் மீண்டும் தமிழர்கள் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ள செய்தி, இன்று ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
 
தமிழர்களைத் தாக்கிய கன்னட இனவெறியர்களைக் கண்டித்து, இன்று (20.10.2017) மாலை 5 மணிக்கு சென்னை நுங்கமபாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது. தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும், தோழர்களும் இதில் பங்கேற்கின்றனர். 
 
தமிழின உணர்வாளர்களும், ஆர்வலர்களும் இதில் பங்கேற்க வருமாறு அன்புரிமையுடன் அழைக்கின்றோம்! 
வாருங்கள் தமிழர்களே! 
 
தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhthesiyam.com 

Tuesday, October 10, 2017

செண்பகவல்லி தடுப்பணையை சீர்படுத்தக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்!

செண்பகவல்லி தடுப்பணையை சீர்படுத்தக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்!
செண்பகவல்லி தடுப்பணையை தமிழ்நாடு அரசு உடனடியாக சீர்செய்திட நடவடிக்கை எடுக்கக் கோரியும், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த மறுக்கும் கேரள அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கக் கோரியும் செண்பகவல்லி உரிமை மீட்புக் குழு சார்பில் நேற்று (9.10.2017) மாலை வாசுசுதேவநல்லூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வாசுசுதேவநல்லூர் தீயணைப்பு நிலையம் அருகில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்திற்கு, செண்பகவல்லி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்கழு உறுப்பினருமான தோழர் க. பாண்டியன் தலைமை தாங்கினார்.
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் இரெ. இராசு, தமிழக உழவர் முன்னணி துணைத்தலைவர் தோழர் மு. தமிழ்மணி, திரு. வ. செயக்குமார் (இடையன்குளம்) , திரு. த. ஞானராசு (வட்டார ஒருங்கிணைப்பாளர், கோமதிமுத்துபுரம்), திரு. குருசாமி (சிவகிரி) ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
நிறைவில், தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் தோழர் கி. வெங்கட்ராமன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட உழவர்கள், பெண்கள், மாணவர்கள் பங்கேற்றதோடு, செண்பகவல்லி உரிமைக்கு ஆதரவாக செயல்பட மறுக்கும் தமிழக அரசைக் கண்டித்தும், சென்னை உயர்நீதிமன்றம் செண்பகவல்லி அணையை செப்பனிடுமாறு உத்தரவிட்ட பிறகும் தீர்ப்பை மதிக்காமல் அலட்சியப்படுத்தும் கேரள அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Friday, September 15, 2017

அபுதாபியில் “நீட்” தேர்வுக்கு எதிராக அறவழி ஆர்ப்பாட்டம்!

அபுதாபியில் “நீட்” தேர்வுக்கு எதிராக அறவழி ஆர்ப்பாட்டம்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் அபுதாபி கிளை சார்பில், இன்று (15.09.2017) காலை, அபுதாபியில், தமிழர் கல்வி உரிமையைப் பறிக்கும் “நீட்” தேர்வுக்கு எதிராக அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
அபுதாபி - பனியாஸ், முஸ்த்தப்பா உழைப்பாளி கிராமத்தில், தமிழ்நாட்டிலிருந்து அபுதாபி சென்று பணிபுரியும் தமிழர்களை ஒருங்கிணைத்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கிளைச் செயலாளர் செயலாளர் தோழர் கார்த்திக் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் தோழர் ருபன் கினிஸ்ட்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
இந்திய அரசே! தமிழர் இன உரிமையைப் பறிக்கும் “நீட்” தேர்வைக் கைவிடு! தமிழினத்தை வஞ்சிக்காதே!
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: tamizhthesiyam.com

Wednesday, September 6, 2017

மாணவி அனிதாவுக்கு வீரவணக்கம்! “நீட்” தேர்வு – சமூகநீதி மறுப்பு மட்டுமல்ல! தமிழர் இன உரிமை – தாயக உரிமை மறுப்பும் ஆகும்! தஞ்சையில் 07.09.2017 மாலை 5.30 மணி - கண்டன ஆர்ப்பாட்டம்!

மாணவி அனிதாவுக்கு வீரவணக்கம்! “நீட்” தேர்வு – சமூகநீதி மறுப்பு மட்டுமல்ல! தமிழர் இன உரிமை – தாயக உரிமை மறுப்பும் ஆகும்! தஞ்சையில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்!
 இடம்                          :     சூப்பிட்டர் திரையரங்கம் எதிரில்
காலம்                        :     07.09.2017 வியாழன் மாலை 5.30 மணி
கண்டன உரை : தோழர் பெ. மணியரசன், தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
தமிழ்நாட்டு உரிமைகளை மட்டுமல்ல, தமிழர் உயிர்களையும் தில்லி பறித்து வருகிறது. அந்தத் தொடர்ச்சியில் அரியலூர் அனிதா உயிரையும் பறித்துள்ளது!

உச்ச நீதிமன்றத்தில் நடந்த “நீட்” வழக்கில், எடப்பாடி அரசை நம்பி அனிதா தமிழ்நாட்டுத் தரப்பில் சேர்ந்து வழக்கு நடத்தினார். நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நடப்பாண்டு மாணவர் சேர்க்கையில், “நீட்” தேர்வுக்கு தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்படும் என நம்பிக்கை ஊட்டினார்.

நம்ப வைத்துக் கழுத்தறுத்ததைப் போல் துரோகம் செய்த நடுவண் அரசும், தமிழ்நாடு அரசுமே தற்கொலை செய்து கொள்ள அனிதாவை தூண்டியவை!

“நீட்” என்பது மாணவரின் தகுதியைச் சோதிக்கும் தேர்வல்ல - மாநில உரிமையைப் பறிக்கும் தேர்வு! இதன் அடுத்த கட்டமாக “நீட்” தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், வடஇந்திய மற்றும் வெளி மாநில மாணவர்களைத் தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ப்பார்கள். தமிழ்நாட்டு மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை குறையும். சேர்க்கும் தமிழ்நாட்டு மாணவர்களையும் தொலைதூர மாநிலங்களுக்குத் தூக்கி வீசுவார்கள்!

இப்பொழுதுதான் “நீட்” என்பது தமிழர் தாயக உரிமையையும் - இன உரிமையையும் பறிக்கும் தேர்வு முறை என்று உணர்ந்து கொண்டுள்ளோம். ஆனால் “நீட்” போன்ற தேர்வுகள் ஏற்கெனவே இந்திய அரசு நிறுவனங்களில், வேலையில் சேர்வதற்கு நடத்தப்பட்டு வருகின்றன.

பி.எச்.இ.எல். போன்ற தொழில் நிறுவனங்கள், இரயில்வே, அஞ்சலகம், நடுவண் அரசின் வரி வசூல் அலுவலகங்கள், ஆவடி – திருச்சி படைத்துறைத் தொழிற்சாலைகள் மற்றும் வங்கிகள் ஆகியவற்றிற்கு ஏற்கெனவே அனைத்திந்தியத் தேர்வு வைத்து, தமிழ்நாட்டில் உள்ள அந்நிறுவனங்களில் தமிழ் மாணவர்கள் வெற்றி பெறாமல் தடுத்து வருகிறார்கள். இப்பொழுதெல்லாம் மேற்படி நடுவணரசு நிறுவனங்களில் 100க்கு 80 விழுக்காட்டு அளவில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களையே வேலைக்குச் சேர்க்கிறார்கள்.

அடுத்து, தமிழ்நாட்டின் மாவட்ட அளவிலான நீதிபதிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கான மருத்துவர்கள் ஆகியோரை பணியமர்த்துவதற்கு அனைத்திந்தியத் தேர்வு முறையை அறிவித்துள்ளார்கள். அதன்படி தமிழ்நாட்டில், நீதிமன்றங்களிலும் அரசு மருத்துவமனைகளிலும் தமிழ் தெரியாத – வடமாநிலங்கள் உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் நீதிபதிகளாகவும் மருத்துவர்களாகவும் இருப்பார்கள்.

எனவேதான், இந்த அனைத்திந்தியத் தேர்வுகள் அனைத்தும் தமிழர் தாயகத்தில் தமிழர்கள் படிக்கும் உரிமையைப் பறிப்பது, வேலை பார்க்கும் உரிமையைப் பறிப்பது என்ற உள்ளடக்கம் கொண்டவை! ஆரியத்துவாத் தத்துவத்தின்படி தமிழர்களை ஓரங்கட்டி, கீழ்நிலைக்குத் தள்ளும் இந்திய அரசின் ஏற்பாடுகள்தான் இந்தத் தேர்வுகள்!

எனவே, மொழிவழியாக அமைந்துள்ள தமிழ்த்தேசிய இன தாயக உரிமைகளைப் பாதுகாக்கத்திட வலுவாகப் போராட வேண்டும்!

நம் கோரிக்கைகள்
=================
1. முதல்வர் பொறுப்பிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி விலக வேண்டும், நடுவண் அமைச்சர் பொறுப்பிலிருந்து நிர்மலா சீத்தாராமன் விலக வேண்டும்.
2. தமிழ்நாட்டுக்கு “நீட்” தேர்விலிருந்து நிரந்தரமாக விலக்களிக்க வேண்டும்.
3. கல்வியை மீண்டும் மாநில அதிகாரப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும்.
தனக்காக மட்டுமின்றி, தமிழ்நாட்டின் உரிமைக்காகவும் - தன்னுயிர் ஈந்த மாணவி அனிதாவுக்கு வீரவணக்கம்!

தஞ்சை ஆர்ப்பாட்டத்தை வாருங்கள் தமிழர்களே!
 
தொடர்புக்கு: நா. வைகறை - 94436 17757
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com 

 
 



Thursday, March 9, 2017

மீனவர் பிரிட்சோ படுகொலை :திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்!

மீனவர் பிரிட்சோ படுகொலை :திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்!
தமிழர்களின் கச்சத்தீவை சிங்கள இனவெறி அரசுக்குத் தாரை வார்த்ததாலும், தமிழ்நாட்டு மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படாததாலும் இதுவரை சற்றொப்ப 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டின் கடல் எல்லைக்குள் மீன் பிடித்த இராமேசுவரத்தைச் சேர்ந்த பிரிட்சோ என்ற மீனவர், சிங்கள இனவெறிக் கடற்படையினரால் கடந்த 07.03.2017 அன்றிரவு நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இன்னொரு மீனவர் சரோன் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.
மீனவர் பிரிட்சோ படுகொலையைக் கண்டித்து, நேற்று (08.03.2017) மாலை, திருச்சி திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர் முகிலினியன் தலைமை தாங்கினார். மீனவர் துயரத்தை உருவகப்படுத்தும் வகையில் அருட்திரு. மனுவேல் அவர்கள் உணர்ச்சிமிகுப் பாடலைப் பாடி எழுச்சியூட்டினார். மீனவர் பிரட்சோ படுகொலையைக் கண்டித்தும், சிங்கள - இந்திய அரசுகளின் தமிழர் விரோதச் செயல்களைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதனையடுத்து, தமிழ்த்தேசியப் பேரியக்கத் திருச்சி மாநகர்ச் செயலாளர் தோழர் மூ.த. கவித்துவன் கண்டன உரையாற்றினார். மகளிர் ஆயம் தோழர் வெள்ளம்மாள், வேலுநாச்சியாரின் ஆட்சியின் போது பெண் போராளியாகச் செயல்பட்ட தற்கொடைப் போராளி குயிலியையும் இன்றைய மகளிர் நாளையும் ஒப்பிட்டு, இப்படிப்பட்ட தமிழ் இனத்திற்கு நேர்ந்துள்ள துயரங்களை வெளிப்படுத்தி உரையாற்றினார். தமிழ்க் கலை இலக்கியப் பேரவை திருச்சி அமைப்பாளர் பாவலர் நா. இராசாரகுநாதன், பைந்தமிழ் இயக்க இயக்குநர் புலவர் தமிழாளன், தமிழர் தேசிய முன்னணி துணைத் தலைவர் வழக்கறிஞர் த. பானுமதி, தமிழக விவசாயிகள் சங்கத் திருச்சி மாவட்டத் தலைவர் திரு. ம.ப. சின்னத்துரை, பொறியாளர் முத்துக்குமாரசாமி, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர் மு. தியாகராசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhdesiyam.com



Sunday, July 17, 2016

பாலாற்றில் ஆந்திரா கட்டியிருப்பது தடுப்பணையல்ல – நீர்த்தேக்கம்! தமிழ்நாடு அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் முறையிட வேண்டும்!” வாணியம்பாடியில் ஆர்ப்பாட்டத்தில் தோழர் பெ. மணியரசன் பேச்சு!




பாலாற்றில் ஆந்திரா கட்டியிருப்பது
தடுப்பணையல்ல – நீர்த்தேக்கம்!
தமிழ்நாடு அரசு உடனடியாக 
உச்ச நீதிமன்றத்தில் முறையிட வேண்டும்!”

வாணியம்பாடியில் ஆர்ப்பாட்டத்தில் 
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் 
தோழர் பெ. மணியரசன் பேச்சு!


“பாலாற்றில் ஆந்திரா கட்டியிருப்பது தடுப்பணையல்ல – அது ஒரு நீர்த்தேக்கம்! எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் முறையிட வேண்டும்” என்று, வாணியம்பாடியில் பாலாற்று உரிமைப் பாதுகாப்பு இயக்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தெரிவித்தார்.

வேலூர், காஞ்சி, சென்னை மாவட்டங்களின் வேளாண்மைக்கும் குடிநீருக்கும் வேட்டு வைக்கும் ஆந்திராவின் சட்ட விரோதத் பாலாற்றுப் புல்லூர் தடுப்பணையை அகற்று, தமிழர்களின் கனக நாச்சியம்மன் திருக்கோவிலை ஆந்திரா ஆக்கிரமிக்க அனுமதிக்காதே ஆகிய இரு கோரிக்கைகளை முன்வைத்து, வாணியம்பாடியில் “பாலாற்று உரிமைப் பாதுகாப்பு இயக்கம்” சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று (15.07.2016) காலை எழுச்சியோடு நடைபெற்றது.

வாணியம்பாடி கனரா வங்கி அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, பாலாற்று உரிமைப் பாதுகாப்பு இயக்க அமைப்பாளர் திரு. மு. சுரேசு தலைமை தாங்கினார். தெக்குப்பட்டு திரு. ம. பாபு, வடக்குப்பட்டு திரு. ப. பிரபு, புல்லூர் திரு. க. குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் கு. செம்பரிதி, கண்டன முழக்கங்களை எழுப்பினார்.

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் எழுச்சியுரையாற்றினார். அவர் பேசியதாவது:

"வெள்ளைக்காரனுக்கு நாம் அடிமையாக இருந்தபோதுகூட, தமிழ்நாட்டிற்கு ஆற்று நீர் உரிமைகள் இருந்தன. ஆனால், தில்லிக் கொள்ளையர்களின் கைகளுக்கு ஆட்சியதிகாரம் சென்றபிறகு, நம் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிபோய் கொண்டுள்ளது.

1892ஆம் ஆண்டு மைசூர் – சென்னை மாகாணம் ஒப்பந்தத்தின்படி, மாநிலங்களுக்கிடையே ஓடும் காவிரி, பாலாறு போன்ற ஆறுகளில் தமிழ்நாட்டின் அனுமதியைப் பெறாமல் நீர் தடுப்புக் கட்டுமானங்களை எழுப்பக் கூடாதெனத் தெரிவிக்கிறது. ஆனால், அதை ஆந்திரமும் கர்நாடகமும் தொடர்ந்து மீறி வருகின்றனர். தமிழன் அழியட்டும் எனக் கருதுகின்ற இந்திய அரசு, இதை கண்டு கொள்வதே இல்லை

நேற்று (14.07.2016) ஆந்திரா கட்டியுள்ள தடுப்பணையைப் பார்வையிட நாங்கள் குழுவாகச் சென்றோம். அங்கு சென்ற பிறகே, அது வெறும் தடுப்பணை அல்ல, அதுவோரு நீர்த்தேக்கம் என்பதைப் புரிந்து கொண்டோம்.

எல்லோரும் அந்த தடுப்பணை 5 அடியிலிருந்து 12 அடி வரை உயர்த்தப்பட்டதாகச் சொன்னார்கள். ஆனால், உண்மை அதுவல்ல! அங்கு, மிகப் பலமாக அஸ்திவாரம் போட்டு, 25 அடி உயரமும் 12 அடி நீளமும் 300 அடி அகலமும் கொண்ட நீர்த்தேக்கத்தையே உருவாக்கியுள்ளனர்.

ஆந்திரப் பொதுப்பணித்துறையினர் அவ்வாறு செய்து கொண்டிருந்த போது, தமிழ்நாடு அரசு என்ன செய்து கொண்டிருந்தது? தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை என்ன செய்து கொண்டிருந்தது? உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது?

இப்போதுகூட, துப்பாக்கி ஏந்திய ஆந்திரக் காவல்துறையினர் – அதிரடிப்படையினர் நமது கனகநாச்சியம்மன் கோவிலில் இருந்த தமிழரான அர்ச்சகரை விரட்டிவிட்டு, அங்கு கடும் பாதுகாப்பைப் போட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கின்றனர். ஆனால், தமிழ்நாடு காவல்துறையினர் இதுவரை அங்கு வரவில்லை.

வெறும் கடிதம் எழுதுவதோடு கடமை முடிந்துவிட்டதாக முதல்வர் செயலலிதா கருதுகின்றார். அந்தக் கடிதம் எழுதுதல் என்பது வெறும் கண்துடைப்பு நாடகமே!

எனவே, உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் சென்று இந்தியத் தலைமை அமைச்சரிடம் சந்தித்து, இந்த அணை சட்ட விரோதமான அணை என்று உண்மைகளைக் கூறி முறையிட வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டும். நம் பொதுப்பணித்துறையினரையும் தமிழ்நாடு காவல்துறையினரையும் இங்கு கொண்டு வந்து நிறுத்த வேண்டும். கனகநாச்சியம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில் அறங்காவலர் குழுவினரை இருக்கும்படிச் செய்ய உத்தரவு பெற வேண்டும்”

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் பேசினார்.

பாலாற்று உரிமைப் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, வேலூர் மாவட்ட பாலாறு பாதுகாப்பு இயக்கத் தலைவர் திரு. ஜமுனா தியாகராஜன், பாலாறு பாதுகாப்பு இயக்கம் திரு. ஆ.த. ஜமீன் சவுந்தர்ராஜன், மக்கள் சட்ட உரிமைகள் கழகச் செயலாளர் திரு. திருநாவுக்கரசு, தமிழ்த் தேச மக்கள் கட்சி அமைப்புச் செயலாளர் தோழர் செந்தமிழ்க்குமரன், தமிழக உழவர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் தூ. தூருவாசன், எக்லாஸ்புரம் ஊராட்சித் தலைவர் திரு. தேவ. சோழன், சமூக ஆர்வலர் திரு. அகஸ்டின் ஆகியோர் கண்டன உரையாற்றினர். புல்லூர் திரு. அ. ஆஞ்சி நன்றி கூறினார்.

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் தருமபுரி விசயன், தோழர் பழ.நல். ஆறுமுகம், ஒசூர் செயலாளர் தோழர் முருகேசன், சென்னை செயலாளர் தோழர் வி. கோவேந்தன், காஞ்சிபுரம் பொறுப்பாளர் தோழர் சி. நடராசன் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.
நிறைவில், காஞ்சிபுரம் தோழர் உலக ஒளி பாடல் ஒன்றைப் பாடி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தார். ஆர்ப்பாட்டத்தில் திரளான பொது மக்களும், தமிழின உணர்வாளர்களும் பங்கேற்றனர்.
முன்னதாக, 14.07.2016 அன்று தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், புல்லூரில் கட்டப்பட்டிருந்த தடுப்பணையை நேரில் சென்று பார்வையிட்டார்.

Monday, May 9, 2016

“நுழைவுத் தேர்வல்ல.. தமிழர்களை நுழையவிடாதத் தேர்வு!” மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு எதிரான புதுச்சேரி ஆர்ப்பாட்டத்தில்தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு!


நுழைவுத் தேர்வல்ல.. தமிழர்களை 

நுழையவிடாதத் தேர்வு!”


மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு எதிரான 
புதுச்சேரி ஆர்ப்பாட்டத்தில்



தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் 
தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு!



மருத்துவக் கல்விக்கான அனைத்திந்திய நுழைவுத் தேர்வு, நுழைவுத் தேர்வு அல்ல! தமிழர்களை மருத்துவக் கல்விக்குள் நுழையவிடாதத் தேர்வு!” என, மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு எதிராக புதுச்சேரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேசினார்.


சமூகநீதியை சிதைக்கும் வகையிலும் - மாநில உரிமையைப் பறிக்கும் வகையிலும் மருத்துவக் கல்வி சேர்க்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ள அனைத்திந்தியப் பொது நுழைவுத் தேர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, புதுச்சேரியில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஒருங்கிணைப்பில், 06.05.2016 மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி அண்ணா சிலை அருகில், நடைபெற்றம் இவ் ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கப் புதுச்சேரி செயலாளர் தோழர் இரா. வேல்சாமி தலைமை தாங்கினார். தோழர் வெ. கார்த்திகேயன் ஒருங்கிணைத்தார்.

புதுச்சேரி  செயலாளர் தோழர் கோ. அழகர், உலகத் தமிழ்க் கழகம் திரு. கோ. தமிழுலகன், நாம் தமிழர் கட்சி புதுச்சேரி ஒருங்கிணப்பாளர் தோழர் தமிழன் மீரான், இலக்கியப் பொழில் இயக்கிய மன்றத் தலைவர் திரு. பெ. பராங்குசம், தமிழ் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. .. பிரதாபசந்திரன், செந்தமிழர் இயக்கம் திரு. .மு. தமிழ்மணி, பெரியார் சிந்தனையாளர் இயக்கம் திரு. தீனா, புதுச்சேரி உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் கூட்டமைப்புத் தலைவர் திரு. கோ.. செகன்நாதன், பெரியார் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் பூ.. இளையரசன், மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் திரு. இரா. முருகானந்தம் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.



ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் பேசிய, தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், பின்வருமாறு பேசினார்:


மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்காக அனைத்திந்தியப் பொது நுழைவுத் தேர்வு நடத்த கூடாது என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் இங்கு நடைபெற்றுக் கொண்டுள்ளது.

அனைத்திந்தியப் பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டுமென உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருந்தாலும், உண்மையில் இவ்வாறு நடத்த வேண்டுமென்ற கோரிக்கையை எழுப்பியதே இந்திய அரசுதான்!

இந்திய அரசின் அனைத்திந்திய பொது நுழைவுத் தேர்வுத் திட்டம், வெறும் சமூக நீதிக்கு எதிரான செயல் மட்டுமல்ல! அது ஆரிய சூழ்ச்சி! பல்வேறு தேசிய இனங்கள்மொழிகள் கொண்ட இந்தியத் துணைக் கண்டத்திற்குள், மாநிலங்களின் அதிகாரங்களை ஒடுக்கி, தன்னுடைய மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தை நிறுவிக் கொள்ளும் முயற்சி இது!

இந்திய அரசின் கோரிக்கையை ஏற்றுதான், உச்ச நீதிமன்றம் இதுபோன்றதொரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. ஆனால், இந்திய அரசு சில சாக்குபோக்குகளைக் கூறியது. இந்த ஆண்டு வேண்டுமானால் விட்டுவிடுங்கள், ஆனால் அடுத்த ஆண்டிலிருந்து அனைத்திந்திய நுழைவுத் தேர்வை நடத்தலாம் என இந்திய அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது.

இவற்றையெல்லாம் யாரிடம் கலந்து பேசி, உச்ச நீதிமன்றம் அறிவிக்கிறது?
தனியார் மருத்துவக் கல்லூரிகளிடமும் மருத்துவப் பல்கலைக்கழகங்களிடமும் பணம் பெற்றுக் கொண்டு அனுமதி வழங்கியதன் காரணமாகவும், பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடுகளின் காரணமாகவும் ஏற்கெனவே கலைக்கப்பட்ட இந்திய மருத்துவக் கழகம் (எம்.சி.). என்ற அமைப்பிடம்தான், இவற்றையெல்லாம் உச்ச நீதிமன்றம் கலந்து பேசி அறிவிக்கிறது.

ஏற்கெனவே ஊழல் காரணமாக கலைக்கப்பட்ட ஓர் அமைப்பில், தற்காலிகமாகஇடைக்காலமாக சிலரை வைத்துக் கொண்டு, அதே ஊழல் முறைகேடுகளைக் காரணமாகச் சொல்லி, மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துகிறோம்முறைகேடுகளை ஒழிக்கிறோம் என்றெல்லாம் கூறி, பொது நுழைவுத் தேர்வைக் கொண்டு வருவது அப்பட்டமான மோசடிச் செயலாகும்!

இந்தியாவிலுள்ள பல்வேறு தேசிய இனங்கள்மொழிகளை ஒடுக்குவது, சமற்கிருதமயமாக்கப்பட்ட இந்தியைத் திணிப்பது, சமூகநீதியை அழித்து ஆரியப் பார்ப்பன மேலாதிக்கத்தை நிறுவுவது, ஊழல் மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தின் கீழ் மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறிப்பது ஆகியவையே இந்திய அரசின் உண்மையான நோக்கமாக உள்ளது. மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டுமெனச் சொல்வதெல்லாம் உண்மையான நோக்கமல்ல!

இங்கே தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும், பன்னிரெண்டாம் வகுப்பில் மொத்தமுள்ள 200 மதிப்பெண்ணில், 190க்கு மேல் பெறுபவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பைப் பற்றி சிந்திக்க முடியும். 200க்கும் 190க்கும் இடையிலான 10 மதிப்பெண்களுக்கிடையேதான் இங்கு போட்டியே நடைபெறுகிறது.

இந்த மதிப்பெண் போட்டியை வைத்துதான், தமிழ்நாட்டில் நாமக்கல் போன்ற இடங்களில் பிராய்லர் கோழிப் பண்ணைகளைப் போல, மதிப்பெண் பட்டறைகள் உருவாக்கப்படுகின்றன.

பன்னிரெண்டாம் வகுப்புப் பாடத்திட்டத்தில் 190க்கு மேல் பெறுவதை விட, வேறு என்ன தகுதி மருத்துவக் கல்விக்குத் தேவைப்படுகிறது? இந்திய அரசு நடத்தும் எந்த பொது நுழைவுத் தேர்வு மோசடியில்லாமல் நடக்கிறது?

வடநாட்டிலே நடத்தப்படும் தேர்வுகளில் எந்தளவிற்கு முறைகேடுகள் நடைபெறுகின்றன என நமக்குத் தெரியும். மும்பை போன்ற இடங்களில் தேர்வில் பார்த்து எழுதுவது, பிட் அடிப்பது போன்றவற்றிற்கு தனியார் நிறுவனங்களே உள்ளன.

இங்கே நாம் பேருந்துக்குள் இடம் பிடிக்க, துண்டு போட்டு வைப்போம். சிறிது நேரம் வெளியே சென்றுவிட்டும் வருவோம். ஒருவர் துண்டு போட்டிருந்தால், இன்னொருவர் அதில் அமர மாட்டார்கள். ஆனால் வடநாட்டிலே, தொடர்வண்டிகளிலே முன் பதிவு செய்யப்பட்ட பெட்டிகளுக்குள் திபுதிபுவென ஏறுவார்கள். பயணச்சீட்டு எடுப்பதில் கூட, வடநாட்டவர்களிடம் ஒழுங்கு இருக்காது.

இப்படிப்பட்ட இவர்கள், நமது மருத்துவக் கல்வியை ஒழுங்கமைக்கிறோம் எனச் சொல்லி, தமிழ்நாட்டின் மீது இந்த நுழைவுத் தேர்வை வேண்டுமென்றே வீம்புக்காகத் திணிக்கிறார்கள்.

இந்த நுழைவுத் தேர்வு வெறும் சமூக அநீதி மட்டுமல்ல, மருத்துவக் கல்வியை தரம் உயர்த்தலுக்கும்கூட இது எவ்வகையிலும் பயன்படாது என்பதை உண்மை!
இந்திய அரசின் நடுவண் பாடத்திட்டத்தின் (சி.பி.எஸ்..) அடிப்படையில், இப்பொது நுழைவுத் தேர்வை நடத்தவுள்ளதாகச் சொல்கிறார்கள்.

ஆனால், தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்தைவிட அந்தப் பாடத்திட்டம் உண்மையில் அவ்வளவு தரமானதல்ல. தரமானதென்றால், வடநாட்டவர்கள் ஏன் தமிழ்நாட்டில் மருத்துவம் பெற படையெடுத்து வருகிறார்கள்?

இந்த நுழைவுத் தேர்வை இந்திஆங்கில மொழிகளில் நடத்துவார்களாம். வடநாட்டவர்கள் தங்கள் தாய் மொழியான இந்தியில் தேர்வெழுதி தேறிவிடுவார்கள். ஆனால், தமிழர்களைப் பொறுத்தவரை இந்திஆங்கிலம் இரண்டுமே அயல் மொழிகள்தான்! ஆக, தமிழர்களை ஒட்டுமொத்தப் புறக்கணிக்கவே இந்தத் தேர்வுமுறை நம் மீது வலிந்துத் திணிக்கப்படுகிறது.

இத்தேர்வு முறை வந்தால், தமிழ்வழியில் படித்த தமிழ்நாட்டு மாணவர்கள், கிராமப்புறங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டபிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்கள், இத்தேர்வுகளினால் பின்தங்கி, மருத்துவக் கல்வியில் சேர முடியாத அபாயகரமான நிலை ஏற்படும்.

எனவே இது நுழைவுத் தேர்வல்ல, தமிழர்களை மருத்துவக் கல்விக்குள் நுழைய விடாதத் தேர்வு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏற்கெனவே, மாநில நுழைவுத் தேர்வை தமிழ்நாடு அரசு நடத்திப் பார்த்துவிட்டுதான், அது வேண்டாம் என பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தற்போது கலந்தாய்வு முறையில் மருத்துவக்கல்விக்கான சேர்க்கை இங்கு நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, மருத்துவக் கல்வியின் தரம் சிறிதும் குறையவில்லை என்பதை நாம் நேரடியாகவே காண்கிறோம்.

இப்போது புதிதாக இந்திய அரசு நுழைவுத் தேர்வு கொண்டு வருவதால், மருத்துவக் கல்வியின் தரம் உயரப் போவதில்லை. மாறாக, இந்த நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி அளிக்கிறோம் என்று சொல்லி புதிது புதிதாக கோச்சிங் சென்டர்கள் உருவாகி, பெற்றோரிடமிருந்து பணம் கறக்கவே இது பயன்படும்.

எனவே, இந்திய அரசு மருத்துவக் கல்விக்கான பொது நுழைவுத் தேர்வை நடத்தக் கூடாது. நயவஞ்சகமானசமூக நீதியை - தேசிய நீதியை - மொழி நீதியை மறுக்கின்ற அனைத்திந்தியப் பொது நுழைவுத் தேர்வுக்கு எதிராக நாம் உறுதியுடன் நின்று போராட வேண்டும். இந்திய அரசு தேர்வு நடத்த முன்வந்தாலும், தமிழ்நாடுபுதுச்சேரி அரசுகள் அத்தேர்வை நடத்தவிடக் கூடாது”.

இவ்வாறு தோழர் கி. வெங்கட்ராமன் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் தோழர் இரா. அழகிரி, தமிழர் களம் புதுச்சேரி செயலாளர் தோழர் கோ. அழகர், உலகத் தமிழ்க் கழகம் திரு. கோ. தமிழுலகன், நாம் தமிழர் கட்சி புதுச்சேரி ஒருங்கிணப்பாளர் தோழர் தமிழன் மீரான், இலக்கியப் பொழில் இயக்கிய மன்றத் தலைவர் திரு. பெ. பராங்குசம், தமிழ் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. .. பிரதாபசந்திரன், செந்தமிழர் இயக்கம் திரு. .மு. தமிழ்மணி, பெரியார் சிந்தனையாளர் இயக்கம் திரு. தீனா, புதுச்சேரி உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் கூட்டமைப்புத் தலைவர் திரு. கோ.. செகன்நாதன், பெரியார் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் பூ.. இளையரசன், மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் திரு. இரா. முருகானந்தம் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றுகின்றனர்.
தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் . குபேரன், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் சுப்பிரமணிய சிவா, தோழர்கள் . ஆனந்தன், மதியழகன், பெருமாள் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்களும் உணர்வாளர்களும் பங்கேற்றனர்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT