உடனடிச்செய்திகள்

Thursday, December 26, 2019

“மொழித் திணிப்பை முறியடிக்க..” ஆனந்த விகடன்” வார ஏட்டில் பெ. மணியரசன் கட்டுரை!



“மொழித் திணிப்பை முறியடிக்க..”


“ஆனந்த விகடன்” வார ஏட்டில்
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் கட்டுரை!

“மொழித் திணிப்பை முறியடிக்க..” என்ற தலைப்பில், 1.1.2020 நாளிட்ட “ஆனந்த விகடன்” வார ஏட்டில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்களின் கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் அவர் கூறியுள்ளதாவது :

“தனித்தனியாக அரசு நடத்திக் கொண்டிருந்த பல்வேறு மொழி – இன மன்னர்களைப் பீரங்கியால் வென்று உருவாக்கப்பட்டதே பிரித்தானிய இந்தியா. இந்த உண்மையை உணர்ந்த காந்தியடிகள் ஆங்கிலேயர் வைத்திருந்த மொழி – இன கலப்பு மாகாணங்களை மொழிவழி மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என்று 1920 காங்கிரசு மாநாட்டில் தீர்மானம் போடச் செய்தார்.

எனவேதான், இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியாவை ஒரு தேசம் (Nation) என்று கூறாமல், “அரசுகளின் ஒன்றியம்” (Union of States) என்கிறது. “இந்தியன்” என்றொரு தேசிய இனம் (Nationality) இருப்பதாகக் கூறாமல், “இந்தியாவின் குடிமக்கள்” (Citizen of India) என்றே கூறுகிறது. இந்தியை “தேசிய மொழி” (National Language) என அறிவிக்காமல், ஒன்றிய அரசின் “அலுவல் மொழி” என்று குறிப்பிடுகிறது.

1956இல் இயற்றப்பட்ட மாநில மறுசீரமைப்புச் சட்டப்படி மொழி இன மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அந்தந்த மாநில மொழி, பண்பாடு பொருளாதார வளர்ச்சிக்காக மாநிலங்கள் மறுவரையறை செய்யப்படுகின்றன என்று அச்சட்டத்தின் நோக்கவுரை கூறுகிறது. ஆனால், முதல் நோக்கமான “மொழிப் பாதுகாப்பு” என்பதை சிதைக்கும் வகையிலேயே 1965ஆம் ஆண்டு இந்தி மட்டுமே ஆட்சிமொழி என இந்திய அரசு அறிவித்தது. அதை முறியடிக்கவே, தமிழ்நாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தி எதிர்ப்பு மாணவர் போராட்டம் எழுந்தது! அப்போராட்டம் நடைபெற்ற அதே தமிழ்நாட்டில்தான், இன்றைக்கு வங்கி, அஞ்சலகம், தொடர்வண்டி நிலையம் உள்ளிட்ட எல்லா நடுவணரசு நிறுவனங்களிலும் இந்தியும் ஆங்கிலமும் கோலோச்சிக் கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசு கடைபிடித்து வரும் “இந்தி – சமற்கிருத மொழி பரப்பும் வாரங்கள்”, தமிழினம் உள்ளிட்ட மற்ற இனத்தார் மீது இனப்பாகுபாடு காட்டும் செயலாகும். எல்லா மக்களின் சமத்துவ உரிமையோடு இந்தியாவை நடத்துவதென்றால், அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையிலுள்ள 22 மொழிகளையும் பரப்புதற்கான “இந்திய மொழிகள் வாரம்”தான் கடைப்பிடிக்க வேண்டும்.

இந்தி மொழியில் அறிவிக்கப்படும் நடுவண் அரசுத் திட்டங்களின் பெயர்களைத் தமிழாக்கம் செய்யாமல் அப்படியே இந்திப் பெயரை தமிழில் எழுத வேண்டும் என்கிறது இந்திய அரசு. ஒரே கட்சியின் ஆட்சியில் உலக வல்லரசாகத் திகழ்ந்த சோவியத் ஒன்றியம், பதினைந்து நாடுகளாகப் பிரிந்து போனதற்கு முதன்மையான காரணம் – மற்ற 14 மொழி பேசும் மக்களிடம் இரசிய மொழியைத் திணித்ததும், இரசிய இன மேலாதிக்கத்தைச் செயல்படுத்தியதும்தான்!

இந்திய ஆட்சியாளர்கள் இவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்து, இந்தி – சமற்கிருத திணிப்புகளைக் கைவிட வேண்டும். தமிழர்கள் தங்கள் இனத்திற்கும் மொழிக்கும் பேராபத்து சூழ்ந்து வருவதைப் புரிந்து கொண்டு, வரலாற்றில் தமிழினம் இல்லாமல் – தமிழ் மொழி இல்லாமல் துடைக்கப்படும் வரை காத்திருக்காமல், இந்தித் திணிப்பு எதிர்ப்பையும், தமிழ் மொழி வளர்ச்சியையும் ஒருங்கிணைத்து மக்கள் திரள் போராட்டம் நடத்த முன்வர வேண்டும்!”.

இவ்வாறு ஐயா பெ. மணியரசன் எழுதியுள்ளார்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Tuesday, December 3, 2019

மேட்டுப்பாளையம் தீண்டாமைச் சுவரை அனுமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! பெ. மணியரசன் கோரிக்கை!



மேட்டுப்பாளையம் தீண்டாமைச் சுவரை
அனுமதித்தவர்கள் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும்!


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!


கோவை மாவட்டம் – மேட்டுப்பாளையம் நடூரில் நேற்று (02.12.2019) கொட்டிய பெருமழையில் ஒரு மதில் சுவர் இடிந்து விழுந்ததில், ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் நான்கு வீடுகள் தகர்ந்து அதில் உறங்கிக் கொண்டிருந்த 17 பேர் – பெரியவர்களும், சிறுவர்களும், பெண்களும் கொடூரமாக உயிரிழந்துள்ளார்கள். அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மதில் சுவர் 80 அடி நீளமும், 20 அடி உயரமும் கொண்டது என்கிறார்கள். இதைக் கட்டியவர் “சக்கரவர்த்தி துகில் மாளிகை” என்ற மிகப்பெரிய துணிக்கடையின் உரிமையாளர் சிவசுப்பிரமணியன். இவருடைய வீட்டுக்கு அருகில் உழைக்கும் மக்களான அருந்ததியர் குடும்பங்கள் பல இருக்கின்றன. அவர்கள் தன் குடும்பத்தார் பார்வையில் படக் கூடாது என்பதற்காக சிறைச்சாலை சுவரைப் போல், உயரமாக நீளமாக மதில் சுவரை எழுப்பியிருக்கிறார் சிவசுப்பிரமணியன்.
ஆனால், மாளிகை கட்டி வாழும் அந்தப் பெரும் பணக்காரர், மதில் சுவருக்கு மட்டும் அத்திவாரத்தை ஆழமாகப் போடாமல் உயரமாகக் கட்டியிருக்கிறார். பெருமழை தாங்காமல் மட்டுமின்றி, மழை நீர் வெளியேறும் நீரோட்டப் போக்கினை தடுத்து அந்த மதில் சுவர் கட்டப்பட்டதால், தேங்கிய நீரினாலும் பெருமழையைத் தாங்காததாலும் அந்த மதில் சுவர் சரிந்து நொறுங்கி பக்கத்தில் உள்ள உழைப்பாளி மக்களின் ஓட்டு வீடுகளில் விழுந்து 17 உயிர்களைப் பலி வாங்கியிருக்கிறது.
இந்த மதில் சுவர் நடைமுறையில் ஒரு தீண்டாமைச் சுவர்! வீட்டைச் சுற்றி இவ்வளவு உயரத்திற்கு யாரும் மதில் சுவர் எழுப்புவதில்லை. இந்தத் தீண்டாமைச் சுவர் என்பது, தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஏற்கெனவே தகர்த்தெறியப்பட்டிருக்க வேண்டும். தீண்டாமைச் சுவர் என்று குற்றம்சாட்டியும், மழை நீரின் ஓட்டத்தைத் தடுப்பதால் தங்கள் குடியிருப்புகள் மழை காலத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதியாக மாறி விடுகிறது என்றும் அதிகாரிகளுக்கு முறையிட்டு அந்த சுவரை அப்புறப்படுத்த அம்மக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களை அதிகாரிகள் சட்டை செய்யவில்லை.
பெரும் பணக்காரர் – சமூகத்தில் மேல் நிலையில் உள்ளவர், எனவே அவரது ஆதிக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது சரியல்ல என்று அதிகாரிகள் கருதினார்களா? அரசியல்வாதிகள் அழுத்தம் கொடுத்தார்களா என்ற வினாக்கள் இயல்பானவை.
தமிழ்நாட்டில் அரசியல் சார்பு, சமூக ஆதிக்கவாதிகள் சார்பு அதிகாரம்தான் நடந்து கொண்டிருக்கிறது. சட்டத்தில் கூறப்படும் நடுநிலை அரசு இல்லை என்பதற்கு நடூர் உயிர்ப்பலியும் ஒரு சான்றாகும்!
பல தடவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் அகற்றப்படாத மதில் சுவரால் தங்களுடைய உறவினர்கள் 17 பேர் பலியாகிவிட்ட ஆத்திரத்தில், “மதில் சுவர் மாமன்னர் சிவசுப்பிரமணியனை” கைது செய் என்று வலியுறுத்தி சாலை மறியல் செய்த மக்களிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து சமரசம் பேசி, கலையச் செய்திருக்கலாம். அதைவிடுத்து, காவல்துறையினர் தடியடி நடத்திக் கலைக்கும் உத்தியை ஆட்சியாளர்கள் கடைபிடித்தது வன்மையான கண்டனத்திற்குரியது.
இந்த உயிரிழப்புகளை அறிந்து அங்கு சென்று அம்மக்களுக்கு ஆறுதல் கூறி, சனநாயக வழியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன் அவர்களைத் தாக்கி, அவரைக் கைது செய்து பல்வேறு பிரிவுகளில் வழக்குப் போட்டு சிறையில் அடைத்த கொடுங்கோன்மை வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.
மேற்கண்ட தீண்டாமைச் சுவரைக் கட்டிய சிவசுப்பிரமணியனை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் உடனடியாகக் கைது செய்ய வேண்டும். அச்சுவரை அகற்றிட மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் அகற்றாமல் போனதற்கு யார் யார் காரணம் என்று அறிந்து, அவர்கள் எவ்வளவு பெரிய இடத்தில் இருந்தாலும் உடனடியாக சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக சிறைபிடிக்கப்பட்ட நாகை திருவள்ளுவன் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.
மாவட்ட வருவாய்த் துறையினர் தலையிட்டு, சமரசம் பேசினார்களா, அப்படி பேசவில்லையென்றால் கடமை தவறிய அல்லது அவர்களை கடமை தவறச் செய்த பிரமுகர்களை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பலியான ஒவ்வொருவருக்கும் 25 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

ஈழத்தமிழரை ஏமாற்றியதே 13ஆவது திருத்தம்! குமுதம் ரிப்போர்ட்டர்” ஏட்டில் பெ. மணியரசன் செவ்வி!



ஈழத்தமிழரை ஏமாற்றியதே

13ஆவது திருத்தம்!


“குமுதம் ரிப்போர்ட்டர்” ஏட்டில்
ஐயா பெ. மணியரசன் செவ்வி!



“ஈழத்தமிழரை ஏமாற்றியதே 13ஆவது திருத்தம்!” என “குமுதம் ரிப்போர்ட்டர்” வார ஏட்டுக்கு அளித்த செவ்வியில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் தெரிவித்துள்ளார்.

“மோடியின் அரவணைப்பில் கோத்தபய!” என்ற தலைப்பில் 06.12.2019 நாளிட்ட “குமுதம் ரிப்போர்ட்டர்” வார ஏட்டில் வந்துள்ள செவ்வியில் ஐயா பெ. மணியரசன் தெரிவித்துள்ளதாவது :

"கடந்த 27.7.1987 அன்று இந்தியத் தலைமையமைச்சர் இராசீவ்காந்தியும், இலங்கை அதிபர் செயவர்த்தனாவும் செய்து கொண்ட இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி, அரசியலமைப்புச் சட்டம் 13ஆவது திருத்தத்தை அமலாக்க வேண்டும் என்று சொன்னது இந்தியா. ஆனால், சுதுமலையில் நடைபெற்ற கூட்டத்தில் புலிகள் தலைவர் பிரபாகரன், “இது (இந்திய இலங்கை ஒப்பந்தம்) தமிழர் பிரச்சினைக்குத் தீர்வல்ல, சிங்கள இனவாத பூதம் இதை விழுங்கிவிடும். தமிழீழ தனி அரசே தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு” என்றார். அந்தப் பதின்மூன்றாவது திருத்தத்தில் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பு இல்லை. மாகாண அரசுக்குக் காவல்துறை அதிகாரம் கிடையாது. காவலர்கள் அனைவரும் சிங்களக் காவல்துறையின் கட்டுப்பாட்டில்தான் இயங்குவார்கள். நிலம் வாங்குவதும், விற்பதும் மாகாண அரசின் கட்டுப்பாட்டில் வராது.

இலங்கையில் ஒற்றையாட்சிதான், கூட்டாட்சி கிடையாது. திரையரங்கு வரி, வீட்டு வரி வசூலிக்கலாம். அதைச் செலவு செய்ய சிங்கள ஆளுநர் ஒப்புதல் அவசியம். மத்திய அரசு எப்போதாவது மாகாண அரசுகளுக்கு நிதி ஒதுக்கும். அது ஒன்றுதான் நிதி ஆதாரம். எனவே, 13ஆவது சட்டத் திருத்தம் என்பது ஏமாற்று வேலை. ஆனால், அதைக்கூட ஆதரிப்பதாக வெளிப்படையாக கோத்தபய சொல்லவில்லை என்பது வேதனையான விஷயம். அவர் தமிழர்களுக்கு நல்லது செய்வார் என்று எப்படி எதிர்பார்க்க முடியம்?”.

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் தெரிவித்துள்ளார்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Monday, December 2, 2019

வெளி மாநிலத்தவரே திரும்பிப் போங்கள்! திசம்பர் 20 அன்று சென்னை நடுவண் தொடர்வண்டி நிலையம் முன் மனிதச் சுவர் போராட்டம்! பெ. மணியரசன் அறிவிப்பு!



வெளி மாநிலத்தவரே திரும்பிப் போங்கள்!

திசம்பர் 20 அன்று சென்னை

நடுவண் தொடர்வண்டி நிலையம் முன்
மனிதச் சுவர் போராட்டம்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் அறிவிப்பு!



தமிழ்நாட்டில் அன்றாடம் பல்லாயிரக்கணக்கானோர் வெளி மாநிலங்களிலிருந்து வந்து குவிகிறார்கள். உயர் தொழில்நுட்ப வேலையிலிருந்து, உடலுழைப்பு வரை எல்லா வேலைகளையும் அவர்கள் பறித்துக் கொள்கிறார்கள். அவர்கள் தமிழ்நாட்டிலே தங்கிக் குடும்பம் நடத்துகிறார்கள்.

இந்திய அரசு நிறுவனங்களான தொடர்வண்டித் துறை, எண்ணெய் எரிவளித் துறை, பி.எச்.இ.எல், நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம், அனல் மின் நிலையங்கள், படைக்கலத் தொழிற்சாலைகள், வருமான வரி – சரக்கு சேவை (ஜி.எஸ்.டி.) வரி, சுங்க வரி அலுவலகங்கள், வங்கிகள், அஞ்சல் துறை, கணக்குத் தணிக்கை அலுவலகங்கள், துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் 90 விழுக்காடு வேலை வெளி மாநிலத்தவர்களுக்கே வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு வேலைகளுக்கும் (TNPSC) இந்தியா முழுவதுமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியுள்ளது. தமிழ்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் மிகக் கொடிய நிலையில் உள்ளது. கல்வித் தகுதிக்குரிய வேலை கிடைக்காமல் மிகமிகக் குறைந்த கூலிக்கு வேலை பார்ப்போர் மிக அதிகம்! கல்வித்தகுதி பெற்று, வேலை தேடி, வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்போர் 90 இலட்சம் பேர்!

அண்மையில் கோவை மாநகராட்சித் துப்புரவுப் பணியாளர் வேலைக்கு பி.டெக்., பி.ஆர்க்., எம்.பி.ஏ., போன்ற பட்டம் பெற்றோர் பல்லாயிரக்கணக்கானோர் விண்ணப்பம் போட்டார்கள் என்ற செய்தி ஏடுகளில் வந்தது.

தமிழ்நாட்டு வேலைகளை வட இந்தியர்களும், பிற மாநிலத்தவரும் பறித்துக் கொண்டால், தமிழர்களின் கதி என்ன? வெளி மாநிலத்தவர் மக்கள் தொகை தமிழ்நாட்டில் வெள்ளம் போல் உயர்ந்து கொண்டே போனால், தமிழர் தாயகமாகத் தமிழ்நாடு மிஞ்சுமா என்ற கேள்விகள் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் கொழுந்து விட்டெரிகின்றன.

தமிழ்த்தேசியப் பேரியக்கம், பல ஆண்டுகளுக்கு முன் இந்த சிக்கலை முன்னுணர்ந்து 2005இல் ஈரோட்டில் “வெளியாரை வெளியேற்று” என்ற தலைப்பில் மாநாடு போட்டது. வெளியார் ஆக்கிரமிப்பால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளையும் அவர்களை வெளியேற்றுவதற்குரிய கோட்பாடுகளையும் வழிமுறைகளையும் கூறி, அம்மாநாட்டில் புத்தகமும் வெளியிட்டது.

தொடர்ந்து, சென்னை, திருச்சி, தஞ்சை, கோவை, குடந்தை, ஓசூர் எனப் பல இடங்களில் வெளியாரை வெளியேற்றக் கோரியும், மண்ணின் மக்களுக்கு மாநில அரசில் 100 விழுக்காடும், நடுவண் அரசுத் துறைகளில் 90 விழுக்காடும், தனியார் துறையில் 90 விழுக்காடும் வேலை ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைத்துப் போராடி வருகிறது.

இவ்வாண்டின் (2019) தொடக்கத்தில் தொடர்வண்டித்துறையில் சென்னை பெரம்பூர், திருச்சி பொன்மலை, கோவை போன்ற இடங்களில் பழகுநர் பணிக்கும், நிரந்தரப் பணிக்கும் வேலைக்கு ஆள் சேர்த்தபோது 90 விழுக்காடு இடங்கள் வடவர்க்கும், வெளி மாநிலத்தவர்க்கும் தரப்பட்டது. அந்த அநீதியைக் கண்டித்தும், 10 விழுக்காட்டுக்கு மேல் உள்ள வெளியாரை வெளியேற்ற வலியுறுத்தியும் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கு வழங்கக் கோரியும் கடந்த 03.05.2019 அன்று திருச்சி பொன்மலை தொடர்வண்டித்துறை தொழிற்சாலை வாயில் முன் தமிழ்த்தேசியப் பேரியக்கம் மறியல் போராட்டம் நடத்தியது. ஏராளமான இளைஞர்கள், அம்மறியலில் கலந்து கொண்டு கைதானார்கள்.

நமது போராட்டம் வீண்போகவில்லை! போராட்டம் நடைபெற்ற சில வாரங்கள் கழித்து 2019 மே 20 அன்று புதிதாக 510 பேரை வேலைக்கு எடுப்பதற்கான அறிவிப்பை சென்னை ஐ.பி.எப். தொழிற்சாலை வெளியிட்டபோது, அதில் தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்திருப்போருக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்படும் என்று அறிவித்தது.

இதன் அடுத்தகட்டமாக, இப்போது சென்னை, திருச்சி, கோவை தொடர்வண்டித்துறை தொழிற்சாலைகளில் பழகுநர் வேலைக்கு (Act Apprentice) தென்னகத் தொடர்வண்டித்துறை உள்ள தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலிருந்து மட்டுமே விண்ணப் பிக்கலாம் என்று 26.11.2019 நாளிட்ட புதிய அறிவிப்பை தென்னகத் தொடர் வண்டித்துறை வெளியிடடுள்ளது. நமது பேராட்டத்திற்குப் பலன் உண்டு என்பதற்கு இந்த மாற்றம் ஒரு அளவுகோல்!

தென்னகத் தொடர்வண்டித்துறையிலும் தமிழ்நாட்டில் உள்ள தொடர்வண்டிக் கோட்டங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தோர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தொடர்வண்டித்துறையை வலியுறுத்துகிறோம்! ஒருபடி முன்னேற்றம் என்ற வகையில் இந்த மாற்றத்தை வரவேற்கிறோம்!

வெளி மாநிலத்தவர்களே
திரும்பிப் போங்கள் – மனிதச் சுவர் போராட்டம்
---------------------------------------------------------------------------
தமிழ்நாட்டு வேலைகளுக்காக வெளி மாநிலங்களிலிருந்து வருவோரை, வந்த வழியே திரும்பிப் போங்கள் என்று வேண்டுகோள் வைக்கும் மனிதச்சுவர் போராட்டத்தை 20.12.2019 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை நடுவண் (சென்ட்ரல்) தொடர்வண்டி நிலையம் முன் தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்துகிறது. இப்போராட்டத்திற்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் தலைமை தாங்குகிறார்!

பெருந்திரளாகத் தமிழர்கள் இந்த மனிதச் சுவர் போராட்டத்தில் பங்கேற்று, தமிழர்களின் வாழ்வுரிமைகளையும் தாயக உரிமையையும் பாதுகாக்க முன்வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.



தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT