உடனடிச்செய்திகள்
Showing posts with label “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா? பெ. மணியரசன். Show all posts
Showing posts with label “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா? பெ. மணியரசன். Show all posts

Monday, September 25, 2017

“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா? பகைவரா? பெ. மணியரசன்.

“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா? பகைவரா? பெ. மணியரசன், தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
“ஒரு தலித் குழந்தை மட்டும் அல்ல, ஒரு முஸ்லிம், ஒரு கிறித்தவக் குழந்தை தன்னை (தமிழ்நாடு) முதல்வராகக் கனவு காணும் சாத்தியம் இன்றைக்குத் தமிழ்நாட்டுச் சூழலில் இருக்கிறதா? அப்படியென்றால் நாம் பேசும் தமிழ் அடையாள அரசியல் எந்த மதத்தின் எந்தப் பெரும்பான்மைச் சாதிகளைப் பிரதிபலிக்கிறது? …. ஒரு தலித், ஒரு முஸ்லிம், ஒரு கிறித்தவர் இங்கு முதல்வராகும் சூழல், யதார்த்தத்தில் இல்லையென்றால் தமிழன் என்ற சொல்லுக்கான பெறுமதி என்ன? சமத்துவம் வேண்டாமா?”
 
இவ்வாறு எழுத்தாளர் சமஸ், தி இந்து – தமிழ் நாளிதழில் (25.09.2017) கேட்டுள்ளார். அக்கட்டுரைக்கு “சாதி, மதத்தைக் கடக்கும் வல்லமை தமிழ் அடையாள அரசியலுக்கு இருக்கிறதா” என்றும் தலைப்பிட்டுள்ளார்.
 
தமிழ்த்தேசிய அரசியல், தமிழின அரசியல் என்று சொன்னால் அதற்குரிய மரியாதையை அளித்ததாகிவிடும் என்று கருதி எச்சரிக்கையாக “தமிழ் அடையாள அரசியல்” என்று இந்தியத்தேசிய மேலாதிக்கப் பார்வையிலிருந்து சிதைவான பெயர் சூட்டுகிறார் சமஸ்!
 
இந்திய விடுதலைப் போராட்ட காலத்திலிருந்து தமிழர்களுக்கு “இந்தியன்” என்று “தேசிய இன” அடையாளம் (Nationality) சூட்டப்பட்டது. அவ்வாறு பெயர் சூட்டிய இந்தியத்தேசியவாதிகளின் ஆட்சியின் கீழ் 1947ஆம் ஆண்டிலிருந்து தமிழர்கள் இருந்து வருகிறார்கள்.
 
1940களிலிருந்து “திராவிடன்” என்று தமிழர்களுக்கு இன அடையாளம் சூட்டினார்கள். அவ்வாறு பெயர் சூட்டிய திராவிடவாதிகளின் ஆட்சியின் கீழ் 1967லிருந்து தமிழர்கள் இன்று வரை இருந்து வருகிறார்கள்.
 
இந்தியன், திராவிடன் என்ற அடையாளங்களால் “தமிழன்” தனது இயற்கையான சொந்த இனப்பெயரை இழந்து வர்ண சாதிகளாகப் பிளவுபட்டுக் கிடக்கிறான். இவ்வாறு பிளவுபட்டுக் கிடக்கும் தமிழர்களை ஒன்றிணைக்கும் இயற்கையான உளவியல் உறவுக் கோட்பாடு தமிழ் அடையாளமே!
 
வர்ணசாதி, மதம் ஆகியவற்றால் பிளவுபட்டுக் கிடக்கும் தமிழர்களைப் பார்த்து, “பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உங்கள் முன்னோர்கள் தமிழர்கள்; நீங்கள் தமிழர்கள். உங்களுக்குள் பிறப்பால் – மதத்தால் உயர்வு தாழ்வில்லை” என்று கூறி, ஓரின உணர்வைத் தட்டி எடிப்பி வருகிறது தமிழ்த்தேசியம்!
 
தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தலித், முஸ்லிம், கிறித்தவர் உட்பட எல்லோரும் வருவதற்கான சனநாயக வாய்ப்பு உருவாக வேண்டும் என்பது தமிழ்த்தேசிய அறங்களில் ஒன்று! 
 
இப்பொழுதுதான் எழுந்து வரும் தமிழ்த்தேசியத்தை விரும்பாத சமஸ் போன்றவர்கள் – தமிழர்களை ஏற்றத் தாழ்வுள்ள சாதிகளாகவும், மதங்களாகவும் பிரித்து வைத்துக் கோலோச்சிக் கொண்டுள்ள “இந்தியன்”, “திராவிடன்” என்ற இன அரசியல்வாதிகளைப் பார்த்து தலித், முசுலிம், கிறித்தவர் ஆகியோரை முதல்வராக்க முடியுமா என்று கேட்பதில்லை.
 
குறைந்தது, பொதுத் தொகுதிகளில் தலித் வேட்பாளர்களை நிறுத்துவீர்களா என்று பெரியார், அண்ணா ஆகியோரைத் தலைவராகக் கொண்ட திராவிடக் கட்சிகளையும் – காந்தியம் பேசும் இந்தியத்தேசியக் காங்கிரசையும் கேட்பாரா சமஸ்? தமிழின இயக்கத்தாரைப் பார்த்து இக்கேள்விகளைக் கேட்பதேன் நோக்கம் என்ன? 
 
சமஸ், “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு நண்பரா? பகைவரா?
 
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com
 


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT