உடனடிச்செய்திகள்
Showing posts with label தொழிற்சங்க போராட்டம். Show all posts
Showing posts with label தொழிற்சங்க போராட்டம். Show all posts

Sunday, August 25, 2013

“உழைப்பு சக்தியின் தேய்மான நிதியே ஓய்வூதியம் என்ற கோட்பாட்டை ஆட்சியாளர்களுக்கு உணர்த்த வேண்டும்”

“உழைப்பு சக்தியின் தேய்மான நிதியே ஓய்வூதியம் என்ற
கோட்பாட்டை ஆட்சியாளர்களுக்கு உணர்த்த வேண்டும்”
புதிய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து நடைபெற்ற தொழிலாளர்
உண்ணாப் போராட்டத்தில் தோழர் கி.வெங்கட்ராமன் பேச்சு!










ஆவடியில் இயங்கும் இந்திய அரசுப் பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான திண்ணூர்தி தொழிற்சாலை (Heavy Vehicles Factory - HVF)யிலும், பல்வேறு அரசுத் தொழில் நிறுவனங்களிலும் 2004ஆம் ஆண்டு தொடங்கி நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து, 25.08.2013 ஞாயிறு அன்று ஒருநாள் அடையாளப்பட்டினிப் போராட்டம் நடைபெற்றது.

புதிய ஓய்வூதியத் திட்ட மறுசீரமைப்பு நலச்சங்கம் (NPSERA) சார்பில், ஆவடி பேருந்து நிலையம் அருகில்காலை 8 மணிக்கு தொடங்கி மாலை வரை நடைபெற்ற இப்போராட்டத்திற்குசங்கத்தின் தலைவர் திருமு.கண்ணன்செயலாளர் திருஇரட்சகராஜா ஆகியோர் தலைமையேற்றனர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் மு.வீரபாண்டியன், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பிரடெரிக் ஏங்கல்ஸ், தமிழ்நாடு ஆசிரியர் ஊழியர் சங்க மாநிலத் தலைவர் திருமதி. தமிழ்ச்செல்வி, பத்திரிகையாளர் திரு. டி.எஸ்.எஸ்.மணி, தமிழின மான மீட்பு இயக்கத் தலைவர் திரு. சேக்காடு ஐ.மனோகரன் உள்ளிட்ட பல்வேறு கட்சி, அமைப்புத் தலைவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

நிறைவாக, மாலையில்தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் உண்ணாப் போராட்டத்தை பழரசம் வழங்கி முடித்து வைத்து, நிறைவுரையாற்றினார். அவர் பேசியதாவது:

“காலை முதல் மாலை வரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ள தொழிலாளத் தோழர்கள் அனைவருக்கும் முதலில் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்துப் போராடுகின்ற நாம், ஓய்வூதியத்தின் கோட்பாட்டை புரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியமெனக் கருதுகிறேன்.

வெறும் 33 ரூபாய்க்கு மேலே ஒருவர் சம்பாதித்தால், அவர்கள் வறுமைக் கோட்டுக்கு மேலானவர் என வரையறுத்துள்ள இந்தியத் திட்டக்குழுத் துணைத் தலைவராக உள்ள மாண்டேக் சிங் அலுவாலியா, தன்னுடைய அலுவலக கழிப்பறையை சீரமைப்பதற்கு மட்டும் 66 இலட்சம் ரூபாயை செலவழித்துள்ளார்.

அவர் கேட்கிறார், தொழிலாளர்களுக்கு வெறும் சம்பளம் மட்டும் போதுமே, வேலை முடிந்து வீட்டுக்குச் சென்ற பிறகும் உங்களுக்கு எதற்காக சம்பளம் கொடுக்க வேண்டும்? எதற்காக உங்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டுமெனக் கேட்கிறார். உங்களால் நாட்டுக்கு என்ன செல்வமதிப்பு சேர்க்கப்படுகிறது எனக் கேட்கிறார். இது கோட்பாட்டுப் பிரச்சினை.

ஓய்வூதியம் குறித்த கோட்பாட்டை நாம் ஆழமாகப் புரிந்து கொண்டால் தான் அவருக்கு நாம் பதிலளிக்க முடியும். நாம் வாங்குகின்ற சம்பளத்தின் ஒரு பகுதி தான் ஓய்வூதியமாக நமக்கு வழங்கப்படுகின்றது என்ற உண்மையை அவருக்கு புரிய வைக்க வேண்டும்.

1976ஆம் ஆண்டு இந்திரா காந்தி பிரமராக இருந்த போது, இந்தியாவில் அவசரநிலைச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. அப்போது போனஸ் வழங்குவது நிறுத்தப்பட்டது. நிறுவனத்திற்கு இலாபம் இருந்தால் மட்டும் தான், அதன் ஒரு பகுதி தொழிலாளர்களுக்கு போனசாகப் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் இலாபமில்லையெனில் போனஸ் கேட்க முடியாது என்றும் சொல்லப்பட்டது.

இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிட்ட போது, நீதிபதி வீ.ஆர்.கிருஷ்ணய்யர் ஒரு சிறப்பானத் தீர்ப்பை வழங்கினார். போனஸ் என்பது நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளம் (Deffered Wage) என அவர் தீர்ப்பு வழங்கினார். போனஸ் என்பது சம்பளத்தின் ஒரு பகுதிதான் என்பதை அத்தீர்ப்பின் மூலம் அவர் உறுதி செய்தார்.

அதே போல ஓய்வூதியம்(Pension) என்பது உழைப்புச் சக்திக்கான தேய்மானம் (Labour Power depreciation). ஒரு எந்திரம் இருக்கிறதென்றால் அதற்கென்று உள்ள வாராண்டி(Warranty) தனியாக வழங்கப்பட்டும் கூட, இருப்பு நிலைக்குறிப்பில்(Balance Sheet) அதன் தேய்மானமும் குறிப்பிடப்படுகின்றது. கட்டிடத்திற்கு தேய்மான நிதி வழங்கப்படுகிறது. அதே போல, உழைப்புச் சக்தியை வெளியிடும் தொழிலாளர்களுக்கான தேய்மானம் தான் ஓய்வூதியம். இதற்குரிய நிதி ஒதுக்கப்பட்டு பணி ஓய்வுக்குப் பிறகு வழங்கப்பட வேண்டும். இதை எல்லா நிலைகளிலும் தொழிற்சங்கத் தோழர்கள் வலியுறுத்த வேண்டும். இதில் உணருவதில், உணர்த்துவதில் எவ்வித சமரசமும் கூடாது.

ஒரு இயந்திரமயமாக்கப்பட்ட தொழிற்சாலையில்(Automated Industry) பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, உடல் உழைப்பாக இருக்கட்டும் அல்லது மூளை உழைப்பாக இருக்கட்டும், நாளொன்றுக்கு சராசரியாக 3200 கலோரிகள் சக்தி தேவைப்படுகின்றது. வயது முதிரும் போது இது நாளொன்றுக்கு 2100 ஆக தேய்கிறது.

ஒரு இயந்திரத்திற்கு பதில் இன்னொரு இயந்திரத்தை அவர்கள் மாற்றிக் கொள்ளலாம். ஆனால், தொழிலாளர்களை அப்படி தூக்கிப்போட்டுவிட முடியாது. எனவே தான், தொழிலாளர் சக்தியின் (Labour power) இந்தத் தேய்மானத்தையே நாம் ஓய்வூதியமாகக் கேட்கிறோம். இந்தக் கோட்பாட்டை நாம் அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டும்.

தொழிற்சங்கங்கள் சமூக உணர்வுடன் வளர்த்தெடுக்கப்பட வேண்டியவை. பொதுப் பிரச்சினைகளில், பொது உரிமைச் சிக்கல்களில் தொழிற்சங்கங்கள் பங்களிப்பு செய்தல் வேண்டும். ஆனால் நடப்பதென்ன? தொழிற்சங்கங்கள் நடைமுறையில் கூட்டு சுயநலமாக (Collective Selfishness) மாறிவிட்டன. தொழிலாளர்களின் இது போன்ற பலவீனங்களை வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கின்ற ஆட்சியாளர்கள், அதற்கென அவர்கள் காலம் எடுத்துக் கொண்டாலும் நம்மை பிளவுபடுத்தி காரியம் சாதிக்கின்றனர்.

அதனால் தான், தொழிற்சங்கங்கள், இரசிகர்களுக்கு ஏற்ப கச்சேரி வாசிக்கும் மன்றங்களாகச் சுருங்கி விட்டன. எனவே, தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் கோரிக்கைகளை மட்டுமின்றி, பொதுப் பிரச்சினைகளிலும் ஆர்வம் செலுத்த வேண்டும். அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்க்கின்ற நாம், அதற்கு அடிப்படையான புதிய பொருளாதாரக் கொள்கையையும் எதிர்த்தாக வேண்டும். அதை எதிர்க்காமல் இதை மட்டும் எதிர்க்க முடியாது. நம்முடைய ஞாயங்களை வலிமையாக உணர்த்த வேண்டும். நாம் போராடுவது வீணல்ல. நம் போராட்டங்களுக்கு வலிமையுண்டு. நம்முடைய ஞாயங்களுக்கும் வலிமையுண்டு. நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடு போராடுவோம்!”

இவ்வாறு தோழர் கி.வெங்கட்ராமன் பேசினார்.

இப்போராட்டத்தில், எச்.வி.எப். தொழிலாளர்களும், தமிழுணர்வாளர்களும் திரளாகப் பங்கேற்றனர். 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT