உடனடிச்செய்திகள்

Friday, December 23, 2011

மக்கள் மீது காவல்துறை தாக்குதலை நிறுத்து - கி.வெங்கட்ராமன்

மக்கள் மீது காவல்துறை தாக்குதலை நிறுத்து

கேரளத்திற்கு பொருள் போக்குவரத்தைத் தடை செய்

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வலியுறுத்தல்

 

முல்லைப் பெரியாறு அணை உரிமை காக்க 21.12.2011 அன்று கூடலூர் பகுதியில் கட்சி சார்பற்றுப் பேரணியாகச் சென்ற உழவர்களையும், பொதுமக்களையும் தமிழகக் காவல்துறை கண்மூடித்தனமாக தடியடி நடத்தி காயப்படுத்தியுள்ளது. கண்ணீர் புகை வீசியுள்ளது. காவல்துறையின் இத்தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். ஐ.ஜி இராஜேஷ் தாஸ் ஆணைப்படி தமிழகக் காவல்துறை தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்துவது அப்பகுதியில் தொடர்ந்து நடந்து வருகிறது. இதன் உச்சமாக டிசம்பர் 21 அன்று  மக்கள் மீது கொடுந்தாக்குதல் நடந்துள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கதக்கது

 

மலையாள இனவெறியோடு நடந்து கொள்ளும் கேரள அரசின் தமிழின பகைக்கு எதிராக தேனி மாவட்டத்து தமிழ் மக்கள் கொந்தளித்து போய் கடந்து இரண்டு வாரங்களாக தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மக்களிடையே பதட்டம் நீடித்து வருகிறது. இச்சூழலை பொறுப்போடு கையாள வேண்டிய காவல்துறை அதிகாரிகள் இதையே காரணமாக வைத்து அப்பாவி தமிழ் மக்கள் மீது போர் தொடுப்பது போல் கொடுந்தாக்குதல் நடத்துவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது.கேரளத்தின் அடாவடிக்கு ஊக்கம் கொடுப்பதாக அமைகிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை துச்சமாக மதித்து கேரள அரசு திட்டமிட்ட முறையில் அணையின் வலுகுறித்து பீதியைக் கிளப்பி மலையாள இனவெறியை தீவிரப்படுத்தியது. தமிழினத்திற்கு எதிரான பகையுணர்ச்சியை கிளப்பியது. கேரளத்தில் உள்ள தமிழர்களும் அவர்களது நிறுவனங்களும் மலையாள வெறியர்களால் தொடர்ந்து தாக்கப்பட்டன. கேரளத்திற்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்ட தமிழர்கள் தாக்கப்பட்டனர்; இழிவுப்படுத்தப்பட்டனர். தமிழகத்தில் இருந்து பணியாற்றச் சென்ற உழைக்கும் தமிழ்ப் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர். இந்த அட்டூழியங்கள் அனைத்திலும் மலையாள இனவெறியர்களோடு கேரளக் காவல் துறையும் சேர்ந்து கொண்டது. கேரளத்திலிருந்து தமிழர்கள் பலர் குடும்பம் குடும்பமாக உள்நாட்டு அகதிகளாக தமிழ்நாட்டுக்கு புலம் பெயர்ந்தார்கள்.

கேரள அரசும் அனைத்து கட்சியினரும் முல்லைப் பெரியாறு அணையை எப்படியும் இடித்துவிடுவது என்பதில் முனைப்பாக உள்ளனர்.அதற்கு இசைய அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என சூழ்ச்சி திட்டம் வகுத்து செயல்படுகிறார்கள். அவ்வாறு 120 அடியாக நீர்மட்டம் குறைக்கப்படுமானால் கிட்டத்தட்ட முல்லைப் பெரியாறு அணை இல்லாதது போன்ற நிலைதான் ஏற்படும். அணையை ஒட்டியுள்ள தேனி மாவட்டப் பகுதிகளில் கூட ஒருபோக சாகுபடிக்கே திண்டாட்டமாகிவிடும், கொடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்படும்.

அரசமைப்பு சட்டபடி உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்துமாறு கேரள அரசை வலியுறுத்தும் கடமை இந்திய அரசுக்கு இருக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்புபடி முல்லைபெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்க ஒத்துழைக்க வேண்டும் என அரசமைப்பு விதி 355ன் கீழ் இந்திய அரசு கேரளாவிற்கு தாக்கீது அனுப்பிருக்க வேண்டும். அவ்வாறான தனது சட்டக் கடமையை செய்யாதது மட்டுமின்றி கேரளாவின் சட்டமீறல் அனைத்திற்கும் இந்திய அரசு துணை போகிறது.

இந்தியப் பிரதமரின் நேரடி பொறுப்பில் உள்ள தேசிய பேரிடர் மேலான்மை ஆணையம் தற்போது ஒரு வல்லுநர் குழுவை நியமித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை மற்றும் அதன் கீழே உள்ள இடங்களில் நிலநடுக்கத்தாலோ, வெள்ள பெருக்காலோ அல்லது இவை இரண்டாலோ ஆபத்து நேர வாய்ப்புண்டா எனக் கண்டறிந்து அதற்கான பாதுகாப்பு செயல் திட்டத்தை உருவாக்குவதுதான் இவ்வல்லுநர் குழுவின் பணி என்று இந்திய அரசின் அறிவிக்கை தெரிவிக்கிறது. இவ்வல்லுநர் குழுவில் ரூர்க்கி ஐ.ஐ.டியின் நிலநடுக்க பொறியியல் துறை பேராசிரியர் டி.கே.பால் என்பவரும் இடம் பெற்றுள்ளார். இவர் முல்லைப் பெரியாறு பிரச்சினைத் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசின் சார்பில் சாட்சியம் கூற அவ்வரசால் முன்மொழியப்பட்டு நிதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டவர். இப்போது இந்திய அரசு நியமித்துள்ள வல்லுநர் குழுவில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அரசின் இந்நடவடிக்கை அதன் தமிழினப் பகை உள்நோக்கத்தை கேரளாவிற்குச் சாதகமான அதன் ஒருதலைச் சார்பை மேலும் தெளிவாக்குகிறது. உச்சநீதிமன்றம் முல்லைப் பெரியாறு சிக்கல் தொடர்பாக ஐவர் குழுவை நியமித்து விசாரித்து வரும் நிலையில் அதற்கு புறம்பாக இன்னொரு வல்லுநர் குழுவை இந்திய அரசு நியமித்தது அப்பட்டமான சட்டமீறலாகும்.

கேரள அரசின் அடாவடியைக் கண்டித்தும் இந்திய அரசின் ஒருதலைச் சார்பை எதிர்த்தும் அவ்வப்போது கண்டனக்கடிதங்களை தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வெளியிட்டு வருகிறார். தற்போது தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சார்ப்பில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டதிற்கும் இந்தியப் பிரதமருக்கு கண்டனக் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் இதற்கு மேல் கேராளாவின் அடாவடியை முறியடிப்பதற்கும் இந்திய அரசின் கேரளச் சார்ப்பை எதிர்ப்பதற்கும் உருப்படியான பதில் நடவடிக்கை எதையும் ஜெயலலிதா செய்யவில்லை. மலையாள வெறியர்களால் தமிழர்கள் தாக்கப்படுவதை எதிர்த்தும் தமிழக அரசு உருப்படியான நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில் தங்கள் வாழ்வாதாரத்தையும் மானத்தையும் காத்துக்கொள்ள தமிழ்மக்கள் தற்காப்புப் போராட்டத்தில் வேறு வழியின்றி இறங்கியுள்ளனர். அரசுகள் தங்கள் உரிமையை பாதுகாத்து தரா என்ற நிலையில் மக்களுக்கு வேறு எந்த வழியும் இல்லை.கேரளத்திற்கு எதிராக பொருளியல் தடை விதிக்கக் கோரி இலட்சக்கணக்கில் கட்சி சார்பற்று வீதியில் திரளும் தமிழர்களின் கோரிக்கைகளை செவிமடுப்பதற்கு மாறாக அவர்களைத் தமிழக காவல்துறை மூலமாக தடிகொண்டு தாக்குவது கொடுமையிலும் கொடுமையாகும்.

கூடலூரில் தமிழர்களுக்கு எதிராக தமிழகக் காவல்துறையினர் நடத்திய காட்டுமிராண்டி தாக்குதலை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்ப்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். இத்தாக்குதலுக்கு உத்தரவிட்ட இராஜேஷ் தாஸ் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மக்கள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்தவேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

கேரளத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கருத்தில் கொண்டும், கேரள எல்லையில் உள்ள தமிழக மாவட்டங்களில் நிலவும் கொந்தளிப்பைக் கணக்கில் கொண்டும், முல்லைப் பெரியாறு  அணை உரிமைப் பாதுகாப்பைக் கருதியும் குறைந்தது ஒரு மாதத்திற்கு கேரளத்திற்குச் செல்லும் தமிழகப் பாதைகள் அனைத்தையும் மூடி, பொருள் போக்குவரத்தைத் தடை செய்து தமிழக அரசு ஆணையிட வேண்டும் எனக் கோருகிறேன். இதனால் தமிழ்நாட்டு உழவர்களும் உற்பத்தியாளர்களும், வணிகர்களும் பாதிக்கப்படாத வகையில் அவர்களது அரிசி, காய்கறி, பழங்கள், முட்டை, இறைச்சி உள்ளிட்ட உற்பத்திப் பொருள்களுக்கு இந்தியாவின் பிற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் சந்தை வாய்ப்பை ஏற்படுத்தித்தர தமிழக அரசு பொறுப்பேற்று போர்கால நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

கி.வெங்கட்ராமன்

பொதுச் செயலாளர்

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி


Friday, December 16, 2011

உரிமையைப் பறிகொடுக்கும் தீர்மானம் - பெ.மணியரசன் கண்டனம்!

 முல்லைப் பெரியாறு அணை:

தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றியது உப்புச்சப்பில்லாத தீர்மானம் மட்டுமல்ல

உரிமையைப் பறிகொடுக்கும் தீர்மானம்

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன்  கண்டனம்

 

முல்லைப்பெரியாறு அணை உரிமை தொடர்பாக நேற்று (16.12.2011) நடந்த தமிழக சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் வெறும் வெற்று வேட்டாக நடந்து முடிந்துள்ளது. இன்றைய சூழ்நிலைக்குரிய தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.

 

முதலமைச்சர் செயலலிதா முன்மொழிந்து சட்டப்பேரவையில் நிறை வேற்றப் பட்ட தீர்மானம் ஏற்கெனவே அவர் அறிக்கைகளில் குறிப்பிட்ட 142 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கும் உரிமை தமிழ்நாட்டிற்கு உண்டு என்பதைத்தான் மறுபடியும் கூறுகிறது. நடுவண் காவல் படையை அணைபாதுகாப்பிற்கு அமர்த்த வேண்டும் என்கிறது.

 

முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி தமிழகம் தண்ணீர் தேக்கிக்கொள்ள உரிமை வழங்கும் வகையில் கேரள அரசு அம்மாநில சட்டப்பேரவையில் சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று முதல்வர் செயலலிதா தீர்மானத்தில் கூறியிருப்பது தமிழக உரிமையை விட்டுக் கொடுப்பதாக உள்ளது. 2006 ஆம் ஆண்டு  உச்சநீதி மன்றம் அளித்தத் தீர்ப்பில் தமிழகம் முதல் கட்டமாக 142 அடி தண்ணீர்த் தேக்கிக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. அத்தீர்ப்பு செல்லாது என்ற வகையில் 2006 ஆம் ஆண்டு கேரள சட்டசபை ஒரு சட்டத்திருத்தம் நிறைவேற்றியது.

 

உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக அவ்வாறு சட்டத்திருத்தம் இயற்றும் அதிகாரம் கேரள அரசுக்கு இல்லையென்று தமிழக அரசு 2006 ஆம் ஆண்டே உச்சநீதி மன்றத்தில் வழக்குத்தொடுத்தது. அவ்வழக்கு இப்போது விசாரணையில் உள்ளது. அதில் விரைவாகத் தீர்ப்பு வரக்கூடிய சூழலும் உள்ளது. இந்நிலையில் கேரள அரசு புதிதாக ஒரு சட்டத்திருத்தம் கொண்டு வந்தால்தான் 142 அடி தண்ணீர் தேக்கும் உரிமை தமிழகத்திற்குக் கிடைக்கும் என்ற வகையில் தமிழக சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்றியிருப்பது, உச்சநீதிமன்றத்தில் தான் போட்ட வழக்கைத் தானே தோற்கடித்துக்கொள்ளும் செயலாகும்.

 

தமிழக முதலமைச்சரும், தமிழகக் கட்சிகளும் இந்த அபாயத்தை உணர்ந்து இந்தத் தீர்மானத்தைக் கைவிட்டு, புதிய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

 

தண்ணீருக்குத் தமிழகம் கேரளத்தைச் சார்ந்திருக்கிறது என்று மலையாளிகள் கருதுகிறார்கள். உணவுப்பொருள்களுக்கும், கட்டுமானப் பொருள்களுக்கும், மின்சாரத்திற்கும் கேரளம் தமிழ்நாட்டை முழுக்க முழுக்க சார்ந்துள்ளது என்ற உண்மையை உணர்த்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்க வேண்டும்.

 

1.           தமிழகத்தை ஒட்டியுள்ள கேரள எல்லைப் பகுதிகளில் தமிழ்மக்கள் அன்றாடம் இலட்சக்கணக்கில் குவிந்து கேரளத்திற்கெதிராகப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள். அந்த மக்களைத் தமிழகக் காவல் துறை தாக்கி விரட்டி அடிக்கிறது. அன்றாடம் சட்டம் ஒழுங்குச் சிக்கலை தமிழக அரசு சந்திக்க வேண்டியுள்ளது. தமிழக காவல் துறைக்கும் தமிழக மக்களுக்கும் இடையே பெரும் மோதல் வெடிக்கக் கூடிய அபாயம் உள்ளது. இந்நிலையில் ஒரு மாதத்திற்குத் தமிழகத்திலிருந்து கேரளத்திற்குச் செல்லும் 13 பாதைகளை மூடி எந்தப்பொருள் போக்குவரத்தும் நடைபெறாமல் தமிழக அரசு தடை விதிக்கக் கூடிய தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றியிருக்க வேண்டும்.அத்துடன் இரயில் வழியாகவும் பொருள் போகத் தடை விதிக்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான் எல்லைப்புறத்தில் மட்டுமல்ல தமிழகமெங்கும் இப்பொழுதுள்ள பதற்ற நிலையைத் தணிக்க முடியும்.

 

2.           தமிழகம் மின் பற்றாக்குறையில் தவிக்கிறது. அதே வேளை தமிழகத்தின் நெய்வேலியிலிருந்து ஒரு நாளைக்கு 9 கோடி யூனிட் மின்சாரம் கேரளாவிற்குப் போகிறது. இந்த 9 கோடி யூனிட் மின்சாரத்தைக் கேரளத்திற்கு அனுப்பாமல் தமிழ்நாட்டுப் பயன் பாட்டுக்குத் திருப்பி விடுமாறு இந்தியஅரசை வலியுறுத்தி சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்க வேண்டும்.

 

3.           தமிழக மக்களின் ஒட்டு மொத்தக் கோரிக்கையாக உள்ள இடிக்கி மாவட்டத்தைத் தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்குரிய தீர்மானத்தையும் நிறைவேற்றியிருக்க வேண்டும்.

 

4.           கேரளத்தில் தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதைக் கண்டிக்க வேண்டும்.தமிழர்களைத் தமிழ்நாட்டுக்கு ஓடிப்போகும்படி விரட்டியும் அடிக்கிறார்கள். கேரளஅரசு இந்த வன்முறைகளைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தது, எத்தனை வழக்குகள் பதிவு செய்தது, எத்தனை பேர் சிறையில் இருக்கிறார்கள் என்ற விவரங்களை அளிக்க வேண்டும்

என்று  தீர்மானத்தில் வலியுறுத்தியிருக்க வேண்டும்.

 

வெற்று வேட்டு சொற்களைக் கொண்டதாக மட்டுமின்றி தமிழக உரிமைக்குப் பாதகம் உண்டாக்கும் கூறுகளைக் கொண்டதாகவும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் உள்ளது. எனவே இங்கு முன் வைக்கப்பட்டுள்ள புதிய கூறுகளைக் கொண்ட புதிய தீர்மானத்தைத் தமிழக சட்டப்பேரவை நிறைவேற்ற வேண்டும் அல்லது தமிழக முதலமைச்சர் அமைச்சரவையைக் கூட்டி இவ்வாறான புதிய தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டுமென்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்

 

                                                                   

                                                                      (பெ.மணியரசன்)

தலைவர்,

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

இடம் : சென்னை

நாள்  : 16.12.2011

 

Thursday, December 15, 2011

சென்னையில் மலையாள ஆலுகாஸ் நகையகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி சிறை சென்ற த.தே.பொ.க. தோழர்கள் நிபந்தனையில் விடுதலை


          
முல்லைப்பெரியாறு அணை உரிமை மீட்பில், மலையாளிகளை வெளியேறக்கோரி சென்னையில் ஆலுக்காஸ் நகை மாளிகை முன் தோழர் க.அருணபாரதி, தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக சிறையிலடைக்கப்பட்ட  த.தே.பொ.க தோழர்கள் 6 பேர் மீது 9.12.2011 அன்று புதிதாக ஒரு வழக்குப் போட்டு சிறையிலிருந்து அவர்களை சைதாப்பேட்டை நீதி மன்றத்திற்குக் கொண்டு வந்து சிறைக்காவல் ஆணைப்பெற்றனர்.

 சைதாப்பேட்டையில் உள்ள ஒரு மலையாளிக் கடையை அதே 7.12.2011 அன்று மேற்கண்ட 6 பேரும் தாக்கிச் சூறையாடியதாகவும், அக்கடைச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்ததாகவும், அடித்துக்காயம் உண்டாக்கியதாகவும் கொலை மிரட்டல் விட்டதாகவும் முதல் தகவல் அறிக்கையில் குற்றம் சாட்டி, மீண்டும் சிறையில் அடைத்தனர். சைதாப்பேட்டைக் காவல் நிலையத்தில் போட்டுள்ள இவ்வழக்கு முழுக்கப் பொய்யானது. வேண்டுமென்றே காவல்துறையினரால் புனையப்பட்டது என்று வழக்கறிஞர் சேசுபாலன்ராஜா தலைமையினான வழக்கறிஞர் குழு , 14.12.2012 எழும்பூர் நீதிமன்றத்திலும், சைதை நீதி மன்றத்திலும் வாதிட்டது.

இதன் அடிப்படையில் த.தே.பொ.க. தோழர்கள் நிபந்தனையில் விடுதலை ஆனார்கள். புழல் நீதிமன்றத்தில் வெளியே த.தே.பொ.க. தோழர்களும், திரளான உணர்வாளர்களும் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

.

Wednesday, December 14, 2011

மேலும்..கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு
த.தே.பொ.க. நடத்திய எழுச்சி மிகு சிறப்பு மாநாடு

தமிழர் உயிருக்கு உலை வைக்கும் கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு என்ற முழக்கத்தை முன்வைத்து மதுரையில் 11.12.2011 ஞாயிறு மாலை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்திய சிறப்பு மாநாடு அனைவரும் பாராட்டும் எழுச்சி மிகு நிகழ்ச்சியாக அமைந்தது.

தஞ்சை காவிரித் தப்பாட்டக் குழுவின் கலைநயமிக்க தப்பாட்டத்தோடு மதுரை கே.கே நகர் சோகோ அறக்கட்டளையின் நீதிபதி வீ.ஆர்.கிருஷ்ணய்யர் மண்டபத்தில் மாநாடு தொடங்கியது. தொடக்கம் முதலே அரங்கம் நிறைந்து வெளியிலும் திரளானோர் அமர்ந்து கேட்ட நிகழ்வாக சிறப்புற்றது. இதற்கு வசதியாக வெளியில் தொலைக்காட்சியின் வழியாக அரங்க நிகழ்வுகள் காட்டப்பட்டன.

மாநாட்டிற்கு த.தே.பொ.க தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன் தலைமை தாங்கினார். கட்சியின் மதுரைச் செயலாளர் தோழர் ரெ.இராசு வரவேற்புரை ஆற்றினார்.
மாநாட்டை தொடக்கி வைத்து உரையாற்றிய அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு.ப.உதயகுமார் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டம் கடந்த 25 ஆண்டு காலமாக எவ்வாறு வளர்ந்தது என்பதை நிரல்பட விளக்கினார். பன்னாட்டு முதலாளிகளுக்கும் வல்லரசுகளின் நலன்களுக்கும் மட்டுமே இந்திய அரசு சேவை செய்கிறது எனக் குற்றம் சாட்டினார்.
தாமிரபரணி மக்கள் பன்பாட்டு இயக்கம் சார்பில் வழக்குரைஞர் மா.பிரிட்டோ அடுத்து உரையாற்றினார் “வால் ஸ்டிரீட் போராட்டத்திற்கு நிகரான போராட்டமாக இடிந்தகரை மக்கள் போராட்டம் விளங்குகிறது.” என மதிப்பிட்டார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு மருத்துவர் இரா.இரமேஷ் அடுக்கடுக்கான அறிவியல் ஆதாரங்களை முன்வைத்து கூடங்குளம் நில அமைப்பு அணு உலைக்கு ஏற்றதல்ல; விபத்துகள் நேர வாய்ப்புகள் அதிகம் என விளக்கினார்.
அவருக்கே உரிய நகைச்சுவை நடையில் தர்க்கங்களை அடுக்கி உரையாற்றிய முனைவர்.த.செயராமன் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியே என நிறுவினார்.
மகளிர் ஆய ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா இடிந்தகரை போராட்டத்தில் உழைக்கும் பெண்கள் வகிக்கும் முன்னணிப் பாத்திரத்தை எடுத்துரைத்தார்.
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் முல்லைப் பெரியாறு அணை உரிமைப் போராட்டம், மூன்று தமிழர் உயிர்காப்பு இயக்கம், மீனவர் பாதுகாப்பு போராட்டம் ஆகிய அனைத்தும் தமிழ்த் தேசியம் என்ற மைய கருத்தியல் தளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டால் தான் உறுதியான வெற்றி கிடைக்கும் என விளக்கவுரை ஆற்றினார் த.தே.போ.க பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன்.


கூடங்குளம் அணு உலையை இழுத்து மூட வேண்டும் என்ற தீர்மானத்தை தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்துவும், நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழக அரசு கேட்டுப் பெற வேண்டும் என்ற தீர்மானத்தை த.இ.மு பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறையும், முல்லைப் பெரியாறு அணை உரிமை மறுக்கும் கேரளத்திற்கு பொருளாதாரத் தடை விதிப்போம் என்ற தீர்மானத்தை கட்சியின் த.செ.கு.உறுப்பினர் பா.தமிழரசனும், முல்லைப் பெரியாறு உரிமைக்குப் போராடிய தமிழின உணர்வாளர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தும் தீர்மானத்தை மகளிர் ஆய மையக் குழு உறுப்பின தோழர் இளமதியும், தேவாரத்தில் நியூட்ரினோ நிறுவனத்தை இந்திய அரசு தொடங்கக்கூடாது எனக்கோரும் தீர்மானத்தை பொதுக் குழு உறுப்பினர் தோழர் மு.தமிழ்மணியும் முன்மொழிய வலுத்த கையொலியோடு மாநாடு தீர்மானங்களை நிறைவேற்றியது.
மாநாடு நிறைவுரையாற்றிய த.தே.பொ.க தலைவர் தோழர் பெ.மணியரசன் “கூடங்குளம் அணு உலையை வலுக்கட்டாயமாக இந்திய அரசு திறக்க முனைந்தால் இரத்தக் களரி ஏற்படும். அணு உலையை திறக்க நினைத்தால் தமிழகத்தின் அனைத்து நகரங்களும் போராட்ட களங்களாக மாற்றப்பட வேண்டும். அங்கங்கு இயங்கும் இந்திய அரசு நிறுவனங்கள் முடக்கப்பட வேண்டும்.” என போர் முழக்கம் செய்தார்.
நிறைவில் சித்திரை தானி ஓட்டுநர் சங்க செயலாளர் தோழர்.பா.இராசேந்திரன் நன்றி நவின்றார்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான ஆவேச முழக்கங்களோடு இரவு 11 மணி அளவில் மாநாடு நிறைவடைந்தது



தீர்மானங்கள்
தீர்மானம் 1
கூடங்குளம் அணுமின் நிலையத்தை இழுத்து மூடுக
இரஷ்ய நாட்டுக் கூட்டு முயற்சியில் கூடங்குளத்தில் நிறுவப்படும் அணுமின் நிலையம் எல்லா வகையிலும் ஆபத்தானது. தமிழ் மக்கள் உயிருக்கு உலை வைக்கக் கூடியது. எனவே இந்திய அரசு கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாக மூட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

அணு உலைகள் இயங்கும்போது இயல்பாக வெளிப்படும் கதிரியக்கத் தனிமங்கள் காற்றிலும் நீரிலும் தாவரங்களிலும் கலந்து தலைமுறை தலைமுறையாகக் கொடிய நோய்களை ஏற்படுத்தக் கூடியது. இரத்தப் புற்றுநோய், கருச்சிதைவு, பிறவி ஊனங்கள் உள்ளிட்ட கொடிய விளைவுகள் அணு உலை கதிரியக்கத்தால் விளையும் என்பதை மருத்துவ ஆய்வுகளும் செர்னோபில், ஹிரோசிமா, புகுசிமா அனுபவங்களும் எடுத்துக் காட்டுகின்றன.
கூடங்குளத்தில் நிறுவப்படும் வி.வி.இ.ஆர்.1000 என்ற வகை அணு உலையானது அது இயங்கத் தொடங்கி இரண்டு ஆண்டுகளிலேயே சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்றும் அவ்வுலைகளில் 32 வகையான குறைபாடுகள் உள்ளன என்றும் இரஷ்ய அரசு நியமித்த ஆய்வுக் குழுவே 2011 சூன் மாதத்தில் அறிக்கை அளித்துள்ளது.
கூடங்குளம் அணு உலை நிறுவப்பட்டுள்ள இடம் பல அகவை உள்ள பாறைப் படிவங்களின் சந்திப்பு இடம் என்றும், அப்பகுதியின் கீழ் எரிமலைப் பாறைகள் உள்ளன என்றும் நிலவியல் ஆய்வுகள் கூறுகின்றன. அடிக்கடி நெல்லை மாவட்டத்தில் குறிப்பாகக் கூடங்குளம் பகுதியில் தொடர்ந்து ஏற்படும் நில அதிர்வுகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. நில அதிர்வு ஏற்பட்டு அணு உலையில் சிறு கீறல் விழுந்தாலும் அதன் வழியாக வெளிப்படும் கதிரியக்கம் பேரழிவை உண்டாக்கும்.
பெருமளவில் கடல்நீர் வேகமாக உறிஞ்சப்படுவதாலும் மிகை வெப்பநீர் கடலுக்குள் மீண்டும் விடப்படுவதாலும் பெருமளவு கடல் உயிரிகள் வளம் குறிப்பாக மீன் வளம் பெருமளவு பாதிக்கப்படும் பல இலட்சம் மீனவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகி விடும்
புனல் மின்சாரம், அனல் மின்சாரம், கதிரவன் மின்சாரம் போன்றவற்றை விட அணு மின்சாரம் கூடுதல் செலவு பிடிக்கக் கூடியது.
எனவே எப்படிப் பார்த்தாலும் கூடங்குளம் அணு உலையை ஏற்கவே முடியாது.
கூடங்குளம் அணு உலையை அத்திட்டத்தின் தொடக்கக் காலத்திலிருந்தே தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி எதிர்த்துப் போராடுகிறது.
இன்று இடிந்த கரையில் மையம் கொண்டு மீனவர்களும் உழைப்பாளர்களும் பல்லாயிரக்கணக்கில் ஒன்று கூடி நடத்திவரும் தொடர் போராட்டம் உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்திய அரசின் நயவஞ்சக முயற்சிகள் அனைத்தையும் முறியடித்து மக்கள் நடத்தும் இத்தொடர் போராட்டத்தை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி உறுதியாக ஆதரிக்கிறது. போராடும் மக்களை வாழ்த்துகிறது.
இந்திய அரசு கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடும் வரை உயிர் ஈகம் செய்தாவது உறுதியாகப் போராடி அந்த அணு உலையை மூடச் செய்வோம் என இம்மாநாடு உறுதியேற்கிறது.
தீர்மானம் 2
தமிழக அரசே நெய்வேலி மின்சாரம் முழுவதையும்
தமிழகத்திற்கே கேட்டுப் பெறு

நெய்வேலி மின்சார நிலையத்திலிருந்து உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கு வழங்கப்படுவதில்லை. தமிழ் மண்ணின் நிலக்கரியைப் பயன்படுத்தி நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் கர்நாடகாவுக்கு நாள்தோறும் 11 கோடி யூனிட் அனுப்பப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணையை இடிக்கத் துடிக்கும் கேரளாவிற்கு இங்கிருந்து நாள்தோறும் 9 கோடி யூனிட் மின்சாரம் செல்கிறது. ஆந்திராவுக்கு 6 கோடி யூனிட் மின்சாரம் போகிறது.
இம்மின்சாரம் தமிழகத்திற்கே திருப்பப்பட்டால் தமிழ்நாட்டில் மின்சாரப் பற்றாக்குறையே வராது. தமிழகத்தின் மின் பற்றாக்குறை ஒரு நாளைக்கு 22 கோடி யூனிட்தான். ஆனால் அண்டை மாநிலங்களுக்கு அன்றாடம் அனுப்பப்படுவதோ 26 கோடி யூனிட் மின்சாரம்.
தமிழ் மண்ணின் மின்சாரத்தைப் பறித்து அண்டை மாநிலங்களுக்குக் கொடுத்துவிட்டு இந்திய அரசு தமிழ்நாட்டில் செயற்கையாக மின் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. அறிவிக்கப்பட்ட மின்வெட்டு 2 மணி நேரம் என்றாலும் நாள்தோறும் 5 மணி நேரம் வரை மின்சாரம் வெட்டப்படுகிறது. தமிழகத்தில் சிறு தொழில்கள், வேளாண்மை ஆகியவை முடக்கப்படுகின்றன.
மறுபுறம் இம்மின்பற்றாக்குறையையே காரணமாகக் காட்டி கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் தமிழகத்தில் திணிக்கிறது இந்திய அரசு.
இந்திய அரசின் இச்சதித் திட்டத்தை விழிப்புடன் இருந்து தமிழக அரசு எதிர்க்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது. தமிழகத்திற்கு உரிமையான நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கு வழங்குமாறு இந்திய அரசைத் தமிழக அரசு வற்புறுத்த வேண்டும். அம்மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே பெற வேண்டும் என தமிழக அரசை இம்மாநாடு கோருகிறது.
தீர்மானம் 3
முல்லைப் பெரியாறு அணை உரிமையை மீட்கும் வரை
கேரளத்திற்கு எதிரான பொருளாதாரத் தடை விதிப்போம்

முல்லைப்பெரியாறு அணை வலுவாக உள்ளது என்றும் முதல் கட்டமாக அதில் 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்றும் சிற்றணையில் செய்ய வெண்டிய சிறு சிறு செப்பனிடும் பணிகளைச் செய்து முடித்தபின் முழு கொள்ளளவான 152 அடி வரை தமிழகம் தண்ணீரைத் தேக்கிக் கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் 2006 பிப்27 அன்று தீர்ப்பளித்தது.
மண்ணியல் வல்லுநர்கள் நீரியல் வல்லுநர்கள் ஆகியோரைக் கொண்ட குழுக்கள் அமைத்து கள ஆய்வு செய்ய வைத்து அவற்றின் பரிந்துரை அடிப்படையிலேயே உச்சநீதி மன்றம் இத்தீர்ப்பை வழங்கியது. கேரள அரசு இத்தீர்ப்பு தன்னைக் கட்டுப்படுத்தாது என்று கூறி புதிய சட்டத்திருத்தம் கொண்டு வந்து மேற்படி தீர்ப்பை செயல்படுத்தவிடாமல் தமிழகத்தைத் தடுத்து வருகிறது. இதை எதிர்த்துத் தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் 27.03.2006 அன்று வழக்குத் தொடுத்தது.
உச்சநீதிமன்றம் நீதிபதி ஆனந்த் தலைமையில் வல்லுனர் குழு அமைத்து கள ஆய்வு செய்ய ஆணையிட்டது. அக்குழு தனது பரிந்துரையை 2012 சனவரியில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தையோ இந்திய அரசமைப்புச் சட்டத்தையோ சட்டை செய்யாமல் கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையை உடைக்க மலையாள மக்களுக்கு இனவெறியூட்டி தமிழர்களுக்கு எதிரான போராட்டத்தை நடத்தி வருகிறது. அங்குள்ள ஆளும் காங்கிரசு கட்சி, எதிர்க்கட்சியான மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, பாரதிய சனதாக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் முல்லைப்பெரியாறு அணைச் சிக்கலில் தமிழினத்திற்கு எதிரான மலையாள இனவெறிச் சிக்கலாக மாற்றியுள்ளனர். எதிரும் புதிருமான இக்கட்சிகள் அனைத்தும் தமிழகத்திற்கு எதிரான பகை உணர்ச்சி என்னும் ஒரு புள்ளியில் இணைந்து செயல்படுகின்றன.
கேரளத்தில் வாழும் அப்பாவித் தமிழர்களைத் தாக்குவது அவர்கள் நடத்தும் கடைகளைச் சூறையாடுவது ஐயப்பன் கோயிலுக்குப் போகும் தமிழ்நாட்டு பக்தர்களைத் தாக்குவது தேனி மாவட்டத்திலிருந்து கூலி வேலைக்குச் செல்லும் நூற்றுக்கணக்காக தமிழ்ப் பெண்களைச் சிறைப்பிடித்து மானபங்கப்படுத்துவது தமிழக ஊர்திகளைத் தாக்குவது போன்ற அட்டூழியங்களை மலையாள இனவெறியர்கள் செய்துவருகிறார்கள்.
இந்த இன இழிவுகளையும் பேரவலங்களையும் சொல்லி நாம் சோகத்தைப் பகிர்ந்து கொள்வது மட்டும் போதாது. இந்த அட்டூழியங்களைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால் மலையாளிகளுக்கு தமிழகத்தில் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணை உரிமையை ஏற்கும் வரை கேரளத்திற்கு எதிரான பொருளாதார தடையை எல்லாப் பாதைகளிலும் செயல்படுத்த வேண்டும். முற்றிலுமாக தமிழகத்திலிருந்து கேரளம் செல்லும் பொருள் போக்குவரத்தை நிறுத்த வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணையை உடைப்பதற்காக நயவஞ்சக நோக்கோடு புதிய அணை கட்டித் தருவதாக ஏமாற்று வாக்குறுதி தருகிறார்கள் மலையாள அரசியல்வாதிகள். அடுத்ததாக, முல்லைப் பெரியாறு அணை நீர் தேக்க உயரத்தை 120 அடியாகக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
நீதி மன்றத்திற்கு வெளியே முல்லைப் பெரியாறு அணைச் சிக்கலைப் பேசித் தீர்த்துக் கொள்வோம் என்று ஆசை வார்த்தை காட்டுகிறார்கள்.
தமிழ்நாட்டை ஏமாற்றுவதற்கு கேரள ஆட்சியாளர்கள் செய்யும் இந்த சாகசங்களுக்குப் பலியாகாமல் அவற்றை ஏற்க மறுத்துவரும் தமிழக அரசின் தற்போதைய நிலைப்பாடு வரவேற்கத்தக்கது.
தமிழக அரசு இந்நிலைப்பாட்டைத் தொடர்வதுடன் கேரள சூழ்ச்சிகளை முறியடிக்க தமிழக மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஊட்டி ஒருமித்த திசையில் தமிழக மக்களைத் திரட்டிக் கொள்ள உரிய முயற்சிகளைச் செய்ய வேண்டும்.
கேரளத்திற்கு எதிரான தொடர் “பொருளாதார தடையை அணை உரிமையை மீட்கும் வரை மக்கள் செயல்படுத்த தமிழக அரசு உறுதுணை புரிய வேண்டும் என்றும், மக்களின் முயற்சிகளுக்க தடை போடக் கூடாது என்றும் இம்மாநாடு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.
முல்லைப் பெரியாறு உரிமையை முழுமையாக மீட்கும் வரை தமிழக மக்கள் ஒருங்கிணைந்து உறுதியாகப் போராட வேண்டும் என்றும் ம லையாள இனவெறிக்கத் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் தமிழக மக்களை உரிமையோடு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 4
முல்லைப் பெரியாறு அணை உரிமைப் போராட்டத்தில் போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறு
கேரளத்தில் தமிழ் மக்கள் மலையாள இனவெறியர்களால் தாக்கப்படுவது கண்டும் தமிழர் நிறுவனங்கள் சூறையாடுவதைக் கண்டும் ஐயப்பன் கோயில் பக்தர்களைத் தாக்குவது கண்டும் தமிழ்ப் பெண்கள் சிறைப்பிடிக்கப்பட்ட மானபங்கப் படுத்தப்படுவதை அறிந்தும் உணர்ச்சிக் கொந்தளிப்பு ஏற்பட்டு அதற்கு பதிலடியாக தமிழத்தில் உள்ள மலையாளிகளை வெளியேற வலியுறுத்தியும் மலையாள நிறுவனங்களை மூடக் கோரியும் த.தே.பொ.க. தோழர்களும் இன உணர்வாளர்களும் போராட்டங்கள் நடத்தினார்கள். அதற்காக அவர்கள் மீது பிணையில் வரமுடியாத கடும் பிரிவுகளில் சென்னை போன்ற இடங்களில் பொய் வழக்குப் பதிவு செய்து அவர்களைச் சிறையில் அடைத்துள்ளது தமிழகக் காவல்துறை. சிறையில் உள்ள அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் இப்போராட்டம் தொடர்பாக போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டுமென்றும் இம்மாநாடு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
தீர்மானம்: 5

தேவாரத்தில் நியூட்ரினோ நிறுவனத்தைத் தொடங்காதே!
தேவராத்தில் நியூட்ரினோ நிலையம் நிறுவ இந்திய அரசு முயன்று வருகிறது. அணு உலையைப் போலவே நியூட்ரினோ நிறுவனமும் உயிருக்கு ஆபத்தானது. கதிரியக்கத்தையும், நில அதிர்வுகளையும் நியூட்ரினோ ஆலை வெளிப்படுத்தும் மலை வளத்தையும், நீர் ஆதாரங்களையும் நாசப்படுத்தும்.
எனவே இந்திய அரசு நியூட்ரினோ திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

செய்தி வெளியீட்டுப் பிரிவு :
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

Tuesday, December 13, 2011

Please visit my Blog:

Please visit my Blog:
http://meevelisilettu.blogspot.com/

வ்வாய், டிசம்பர், ௧௧

கேட்க நாதி இல்லையா


இன்றும்  நாம் பேசாதிருந்தால்


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT