உடனடிச்செய்திகள்

Wednesday, August 28, 2019

முற்றிவரும் பொருளியல் தேக்கம் மீள்வதற் குவழி என்ன? கி. வெங்கட்ராமன்



முற்றிவரும் பொருளியல் தேக்கம்
மீள்வதற்கு வழி என்ன?

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்

தோழர் கி. வெங்கட்ராமன் சிறப்புக் கட்டுரை!

அறிவிக்கப்படாத நிதித்துறை அவசர நிலையில் (Economic Emergency) இந்தியா சிக்கியுள்ளது! 

வேளாண்மை நெருக்கடி, தொழில் மந்தம், நிதி முடக்கம், வேலையின்மை என்று திரும்பிய பக்கமெல்லாம் இந்தியப் பொருளியல் மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. 

எல்லாம் சரியாக இருப்பதுபோல் தலைமையமைச்சர் நரேந்திர மோடி செங்கோட்டையில் கொடியேற்றிவிட்டு வாய்வீரம் பேசினாலும், இந்திய அரசின் நிதி ஆயோக் துணைத் தலைவர் இராசீவ்குமார் “கடந்த 70 ஆண்டில் சந்திக்காத பொருளியல் மந்தத்தில் நாடு சிக்கியிருக்கிறது. இதய நோய்க்கு பாராசிட்டமால் மாத்திரை பயன்படாது” என அபாய அறிவிப்பு கொடுத்து விட்டார். 

வங்கிக் கொள்ளை போல் இந்திய சேம (ரிசர்வ்) வங்கியின் நிதியிலிருந்து வரலாறு காணாத அளவில் 1 இலட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயை “எடுத்துக் கொண்டாலும்” கொள்கை மாறாமல் மீள முடியுமா என்ற பெரும் சிக்கலில் மோடி அரசு சிக்கியிருக்கிறது. 

சேம வங்கியின் உபரி நிதி என்பது அரசு வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத அரசு நிதி நிறுவனங்கள் நெருக்கடியில் சிக்கும்போது அவற்றை மீட்பதற்கான நிதி சேமிப்பாகும். 

கடந்த முறை மோடி ஆட்சியில் பெரும் நிறுவனங்களிடமிருந்து வாராக்கடனை வசூலிக்க வேண்டும் என்று கூறிய காரணத்திற்காக அன்றைய சேம வங்கி ஆளுநர் இரகுராம்ராஜன் வெளியேற நிர்பந்திக்கப்பட்டார். மோடிக்கு வேண்டிய கையடக்கமான உர்சித் பட்டேல் சேம வங்கி ஆளுநராக அமர்த்தப்பட்டார். 

ஆனால், மோடி விரும்பியபடி சேம வங்கியின் நிதியை அப்படியே அள்ளித்தர உர்சித் பட்டேலும் சம்மதிக்கவில்லை. மோடி ஆட்சியின் அழுத்தம் தாங்காமல் அவரும் வெளியேறினார். 

இந்தச் சிக்கலின் ஆழத்தை வெளிப்படையாக தெரிவித்துவிட்டு சேம வங்கியின் அன்றைய துணை ஆளுநர் விரால் ஆச்சார்யாவும் பதவி விலகினார். விரால் ஆச்சார்யா இடத்தில் தனக்கு வேண்டிய என்.எஸ். விசுவநாதனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கினார் மோடி.

சேம வங்கியின் உபரி நிதி குறித்து முடிவு செய்யும் அதிகாரம் சட்டப்படி, அவ்வங்கியின் நிர்வாக வாரியத்திற்கே உரியது என்றாலும், சட்டத்தை வளைக்கும் நோக்கில் உபரி நிதியைப் பற்றி முடிவு செய்வதற்கு சேம வங்கியின் முன்னாள் ஆளுநர் பிமல் ஜலான் தலைமையில் ஒரு குழுவை அமர்த்தினார் நரேந்திர மோடி. அக்குழுவில் தன் விருப்பத்தை நிறைவேற்றும் நபர்களான எஸ்.சி. கார்க், என்.எஸ். விசுவநாதன், பாரத் தோசி போன்றவர்களை உறுப்பினர்களாக போட்டார். 

மோடி ஆட்சி விரும்பிய முடிவை பிமல் ஜலான் குழு அறிவித்துவிட்டது. வாயிற்காவலரின் சம்மதத்தோடு வங்கிக் கொள்ளை நடந்து விட்டது! 

ஆயினும், வந்திருக்கிற பொருளியல் நெருக்கடியை இந்த நடவடிக்கை தீர்த்துவிடுமா என்பது மிகவும் ஐயத்திற்குரியது! 

ஏனெனில், பொருளியலின் அனைத்துத் துறை சார்ந்தும், வரலாறு காணாத மந்த நிலை ஏற்பட்டுள்ளது. 

இதற்கு முன்னர் அமெரிக்க நாட்டில் திடீரென்று பெரும் பெரும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஓட்டாண்டிகளாக மாறிய 2008 - 2009 நிதி நெருக்கடி மேற்குலக நாடுகளையும் அவற்றைச் சார்ந்த உலக நாடுகள் பலவற்றையும் பாதித்தன. இந்தியாவிலும் அதன் பாதிப்பு இருந்தபோதிலும், பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை! 

இதற்கு முதன்மைக் காரணம் இந்தியா பெரிதும் சிறு நடுத்தர தொழில்களையும் சிறு வணிகத்தையும் வேளாண்மையையும் சார்ந்து இயங்கியதே ஆகும்! 

மேற்குலக நாடுகளில் ஏற்பட்டதைப் போலவே அப்போது இந்தியாவில் பெரிய நிறுவனங்களிடமிருந்து திரும்ப வர வேண்டிய வங்கிக் கடன்கள், வாராக் கடன்களாக பெருமளவு மாறின. அரசு நிதியை வங்கிகளுக்கு மீட்பு நிதியாக மோடி ஆட்சி அப்போது வாரி வழங்கியது. 

அதற்குப் பிறகும் வாராக் கடன்கள் அதிகரித்தன. மல்லையாக்கள், நீரவ் மோடிகள் என்று அடுத்தடுத்து நரேந்திர மோடிக்கு வேண்டியவர்கள் நாட்டைவிட்டுப் பறந்தார்கள். 

இந்த நிலையில்தான், 2016 நவம்பரில் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அடாவடி அறிவிப்பை மோடி வெளியிட்டார். கருப்புப் பணத்தை வெளியில் கொணர்வது என்று ஊடகங்களில் அறிவித்தாலும், மோடியின் உண்மையான நோக்கம் நொடித்து வீழ இருந்த வங்கிகளுக்கு மக்களிடமிருந்து பணத்தைப் பறித்து வழங்குவதுதான்! 

இந்தியப் பொருளியல் வரலாறு காணாத கொடுஞ்செயலாக அது அமைந்தது! வேளாண்மையும், சிறு தொழில்களும், சிறு வணிகமும் அதல பாதாளத்தில் விழுந்தன. இது நிகழ்ந்து இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னும் பெரும்பாலான சிறு தொழில்கள் இன்னும் மீள முடியவில்லை. வேளாண்மை தலைதூக்க முடியவில்லை. 

மக்களிடமிருந்து பணத்தைப் பிடுங்கி கட்டாயமாக மக்களை வங்கிகளோடு பிணைத்து, அந்த நிதியை எடுத்து பெரும் நிறுவனங்களுக்கு கடனாக அளித்தபோது சிறிதளவு தொழில்துறை முன்னேற்றம் ஏற்பட்டாலும் மீண்டும் வாராக்கடன்கள் அதிகரித்தன. 

கடந்த 2018 - 19 -இல் ஏறத்தாழ 2 இலட்சம் கோடி ரூபாய் வாராக் கடன்களை மோடி அரசு தள்ளுபடி செய்த பின்னும், 2019 - 20 -நிதி ஆண்டில் இதுவரை 1 இலட்சத்து 23 ஆயிரம் கோடி ரூபாய் வாராக்கடன்கள் பெருத்துவிட்டன. மொத்தத்தில், இந்திய அரசு வங்கிகளின் வாராக் கடன்கள் எட்டு இலட்சம் கோடியாக உயர்ந்துவிட்டன. 

இச்சூழலில், நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் கொடுப்பது பெருமளவு நின்று போனது. 

இன்னொருபுறம், செல்லா நோட்டு அறிவிப்பால் சிறு தொழில்கள் வீழ்ந்து, வெளிப்படையான வேலையின்மை அதிகரித்ததோடு வேளாண்மையும் வரலாறு காணாத நெருக்கடியில் சிக்கிவிட்டதால் உள்நாட்டுச் சந்தை பெருமளவு சுருங்கி விட்டது. 

இவை பெரும் தொழில் நிறுவனங்களை பாதித்தது. “எல்லோரும் வாருங்கள், இந்தியாவில் தொழில் தொடங்குங்கள்! எங்கு வேண்டுமானாலும் விற்றுக் கொள்ளுங்கள்!” என்ற மோடியின் “மேக் இன் இந்தியா” அறிவிப்பு பலன் தரவில்லை. ஏனெனில், வெளிநாட்டுச் சந்தையும் விரிவடையவில்லை. அங்கேயும் ஆயிரம் சிக்கல்கள்! 

இதனால் ஏற்பட்ட கொலைக்களப் போட்டியில் அம்பானி, அதானி போன்ற மோடிக்கு நெருக்கமான புள்ளிகள் மட்டுமே வெற்றிகரமாக தொழில் செய்ய முடிந்தது. அதற்கான விலையாக மோடி பல்லாயிரம் கோடி ரூபாய் பெற்றுக் கொண்டு, பா.ச.க.வையும் தன்னையும் மக்களிடம் சந்தைப்படுத்திக் கொண்டார். 

இந்திய சேம வங்கி ஒரே ஆண்டில் நான்கு முறை வட்டி விகிதத்தை குறைத்து அறிவித்தாலும், அந்தக் குறைந்த வட்டியில் கடன் பெற்று தொழில் செய்வதற்கு பெரு நிறுவனங்கள் தயங்கின. ஏனெனில், மிகப்பெரும் தேக்கத்தில் உள்நாட்டுச் சந்தையும், வெளிநாட்டுச் சந்தையும் ஆழ்ந்துவிட்டதை இந்நிறுவனங்கள் உணர்ந்தன. 

வட்டி விகிதக் குறைப்பு தொழில் கடன்களை அதிகப்படுத்துவதற்கு மாறாக, வங்கிகளில் சேமிப்போரை தங்கத்தை நோக்கி விரட்டியது. வங்கிகள் நெருக்கடியில் சிக்கின. இதிலிருந்து மீள்வதற்கு அரசு வங்கிகள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டன. அதுவும், எதிர்பார்த்த பலன் அளிக்கவில்லை! 

இரு சக்கர ஊர்திகள், மகிழுந்துகள், சுமையுந்துகள், உழவு உந்துகள் தயாரிக்கும் தானியங்கி ஊர்தித் தொழில் மட்டுமின்றி, மனை வணிகம், கட்டட வணிகம் போன்றவையும் மக்களின் அன்றாட தேவையைத் தயாரிக்கும் நிறுவனங்களும் நெருக்கடியில் ஆழ்ந்தன. 

ஒரு ஐந்து ரூபாய் பிஸ்கட் பொட்டலத்தை வாங்குவதற்கு மக்கள் பலமுறை சிந்திக்கிறார்கள் என்று பிரித்தானியா நிறுவனம் அறிவித்திருப்பதும், ஜட்டி, பனியன் போன்ற உள்ளாடைகள் வாங்குவதை வாடிக்கையாளர்கள் தள்ளிப் போடுகிறார்கள் என்று திருப்பூர் உற்பத்தியாளர்கள் புலம்புவதும் தொழில் தேக்கத்தின் ஆழத்தை வெளிப்படுத்தும். 

இச்சூழலில், அரசு நிதியை வங்கிகளுக்கு வழங்கி கடன் நிதிப் புழக்கத்தை அதிகப்படுத்துவதற்கும் வழியில்லை. ஏனெனில், அன்றாடச் செலவுக்கே இந்திய அரசு கடன் வாங்கிக் கழித்துக் கொண்டிருக்கிறது. 

கடந்த மாதம் மோடி அரசு முன்வைத்த வரவு செலவுக் கணக்கில், மொத்த வரவு செலவு 24 இலட்சம் கோடி ரூபாய் என்றால், அதில் கடன் வரவு மட்டுமே 12 இலட்சம் கோடி ரூபாய்! ஏற்கெனவே வாங்கிய கடனுக்கு வட்டியே 6 இலட்சம் கோடி ரூபாய். 

இப்போது, சேம வங்கியிடமிருந்து பறித்த 1 இலட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் அரசின் அன்றாடச் செலவுக்கு மூச்சுவிட பயன்படுமே தவிர பொருளியல் மந்தத்திலிருந்து மீட்பதற்கு உதவாது. 

பெரு நிறுவனங்களையும் வெளிநாட்டுச் சந்தையையும் சார்ந்திருக்கும் இப்போதைய கொள்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, சிறு நடுத்தர தொழில்களையும், வேளாண்மையையும் உள்நாட்டுச் சந்தையையும் பெரிதும் சார்ந்திருக்கும் மாற்றுக் கொள்கைக்கு மாறினாலே தவிர நிரந்தரத் தீர்வு ஏதுமில்லை! 

உழவர்களுக்கும் சிறுதொழில் முனைவோருக்கும் கடன் தள்ளுபடி அளித்து, குறைந்த வட்டியில் புதிய கடன்களை வழங்கி இவற்றின் சந்தையை உறுதிப்படுத்தினால் மீள முடியும்! வேளாண்மையை இலாபகரமான தொழிலாக மாற்றும் வகையில் வேளாண் விளை பொருட்களுக்கு இலாப விலை தீர்மானித்து அந்தந்த மாநிலத்தையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக மாற்றுவது மிகப்பெருமளவுக்கு சந்தை மீட்சியைக் கொடுக்கும். 

பொருளியல் வகையில் இந்திய மற்றும் வெளிநாட்டு பெருமுதலாளிகளின் ஒற்றைச் சந்தையால் கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்தியத்தை வைத்துக் கொண்டு, இவற்றிற்கு நிரந்தரத் தீர்வு காண முடியாது. 

இந்தியத்தை வைத்துக் கொண்டே, இப்போது ஏற்பட்டுள்ள மிக ஆழமான தொழில் மந்தத்திலிருந்து மீள்வதற்குத்தான் மோடி ஆட்சி முயலும். அதற்காக மக்களையும், தேசிய இன மாநிலங்களையும் சுரண்டும் அதே பழைய பாதையிலேயே சிந்திக்கும். 

இதில் சிக்கியிருக்கும் தமிழ்நாட்டு மக்கள் இந்த இந்திய ஒற்றைச் சந்தைப் பார்வையிலிருந்து முதலில் விடுபட வேண்டும். தமிழ்த்தேசியச் சந்தையை பாதுகாத்துக் கொள்ளும், தற்காப்புப் பாதைக்குத் திரும்ப வேண்டும்!

(இக்கட்டுரை, தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - தமிழ்த்தேசிய மாத இதழின் 2019 செப்டம்பர் இதழின் தலையங்கம்).


தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095 
முகநூல் : www.fb.com/tamizhdesiyam 
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam 
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Monday, August 26, 2019

தமிழர்களை சூத்திரர்கள் - பஞ்சமர்கள் என்று இழிவுபடுத்தியவர்கள் சாதி வேண்டும் என்கிறார்கள்! பெ. மணியரசன்


தமிழர்களை சூத்திரர்கள் - பஞ்சமர்கள்
என்று இழிவுபடுத்தியவர்கள்
சாதி வேண்டும் என்கிறார்கள்!


தோழர் பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

கேரளத்தின் கொச்சியில் 2019 சூலை 19 - 21 வரை நடந்த “உலகத் தமிழ் பிராமணர்கள்” மாநாட்டில் கேரள உயர் நீதிமன்ற நீதிபதி சிதம்பரேஷ் என்பவர், “பிராமணர்கள் இரு பிறப்பாளர்கள்; அவர்கள் தலைமைப் பொறுப்பில்தான் இருக்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.

இதுதான் வர்ணாசிரம தர்ம நீதி!

பிராமணர்களில் மிகப்பெரும்பாலோர் சமூக சமத்துவத்தை ஏற்க மாட்டார்கள். அதை அவர்கள் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ள மாட்டார்கள். எது எதை எங்கெங்கு, எவ்வெப்போது செய்ய வேண்டுமோ - அவ்வாறு செய்து, தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வார்கள். அதற்காக கடவுள், கட்சி, இந்து மதம், இந்தியத்தேசியம் எல்லா வற்றையும் பயன் படுத்திக் கொள்வார்கள். இடதுசாரிக் கொள்கை, வலதுசாரிக் கொள்கை எல்லாவற்றையும் பயன்படுத்திக் கொள்வார்கள்.

நீதித்துறையை எந்த அளவு பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். அண்மையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், “கிறித்துவக் கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை” என நீதிமன்றத்திலேயே ஆர்.எஸ்.எஸ். குரலை வெளிப்படுத்தினார். இதற்குக் கடும் கண்டனங்கள் எழுந்த பின் அக்கருத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.

இந்தியத் தலைமையில் வர்ணாசிரமவாத பா.ச.க.வின் அதிரடி ஆட்சி! தமிழ்நாட்டில் தில்லிக்குக் கங்காணி வேலை பார்த்து பதவி - பண அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் தி.மு.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகள்! பம்மிக் கொண்டு, மறைமுகச் செயல்பாடுகள் மூலம் பிராமணிய வர்ணாசிரம வேலைகளை செய்து வந்த பலர் இப்போது துணிச்சல் பெற்று வெளிப்படையாக தங்களின் “சாதி ஆதிக்க உரிமையைப்” பேசுகிறார்கள்.

பதுங்கியவர்கள் பாய்கிறார்கள்
------------------------------------------------ 
அதே கொச்சி பிராமணர்கள் மாநாட்டில் பேசிய தமிழ்நாட்டு வல்லம் சாஸ்திரா பல்கலைக்கழகப் பேராசிரியர் எம்.ஏ. வெங்கடகிருட்டிணன் எல்லா உயிரினத்திலும் சாதி உண்டு, உயர்வு தாழ்வு உண்டு, மனிதர்களிலும் பிறப்பால் உயர்வு தாழ்வு உண்டு, பிராமணர்களுக்கு மட்டுமே தலைமை தாங்கும் தகுதி உண்டென்றார். மனிதர்கள் பிறப்பு அடிப் படையில் உயர்ந்த சாதி - தாழ்ந்த சாதி என்று பிரிக்கப்பட வேண்டும் என்றார்.

வெங்கடகிருட்டிணன் பேச்சை அப்படியே ஆதரித்து ஒய்.ஜி. மகேந்திரன் மகள் மதுவந்தி, “நக்கீரன்” இணையத் தொலைக்காட்சியில் பேசினார்.
முற்போக்காளர்கள் போல் காட்டிக் கொண்ட மாலன், பத்ரி போன்றோர் இப்போது தங்கள் உண்மை முகம் காட்டத் துணிந்து விட்டார்கள். காசுமீர் உரிமைப் பறிப்பை மாலன் ஆதரித்து தொலைக்காட்சி விவாதத்தில் பேசுகிறார். ஆரிய பிராமணிய தத்துவ சாரத்தை உள்ளடக்கிய கத்தூரிரங்கனின் புதிய கல்விக் கொள்கை வரைவை ஆதரித்து பத்ரி முழங்குகிறார்!

புதிய புதிய எச். இராசாக்கள் இப்போது தலைநீட்டுகிறார்கள்!

பிராமணரல்லாதார் தலைமையின் கீழ் பிராமணர்கள் 
----------------------------------------------------------------------------------- 
மனிதர்கள் அனைவரும் சமம்; தமிழர்கள் அனைவரும் சமம்; ஆணும் பெண்ணும் சமம் என்பதே தமிழர் அறம்! தமிழர் மரபு சமத்துவ மரபு!

பிராமணர்களால் மிலேச்சர்கள் என்று வசை பாடப்பட்ட ஐரோப்பியர்கள் இந்தியப் பிராமணர்களின் அறிவாற்றலை விட அதிக அறிவாற்றல் பெற்றிருப்பதால் புதிய புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கினார்கள்; சனநாயகக் கோட்பாடுகளையும் நிறுவனங்களையும் நிறுவினார்கள். அவர்களிடம் போய் இந்தியப் பிராமணர்கள் வேலை பார்த்துக் கொண்டுள்ளார்கள்.
தமிழ் இனத்தில் பிறந்த திருவள்ளுவப் பேராசான் யாத்துத்தந்த திருக்குறளுக்கு நிகரான நூல் ஆரிய சமற்கிருதத்தில் இல்லை!
அல்லாடி கிருஷ்ணசாமி ஐயரும், என். கோபாலசாமி ஐயங்காரும் உறுப்பு வகித்த இந்திய அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவிற்கு ஒடுக்கப்பட்ட வகுப்பில் பிறந்த அம்பேத்கர்தாம் தலைமை தாங்கினார்.
மனிதர்கள் – விலங்குகள் வேறுபாடு
--------------------------------------------------------- 
மனிதர்கள் உழைத்து உற்பத்தி செய்து உண்டு, உடுத்தி, உறைந்து வாழ்பவர்கள். மற்ற உயிரினங்கள் இருப்பவற்றை உண்டு வாழ்பவை! மனிதர்கள் சிந்திக்கும் ஆற்றல் பெற்றவர்கள். எனவே, சிந்திக்காத - சிந்தனை வளர்ச்சிக்கு வாய்ப்பில்லாத மற்ற உயிரினங்களைப் போல் மனிதர்கள் தலைமுறை தலைமுறையாக ஒரே மாதிரியில் இருப்பதில்லை.

மனிதர்களை அஃறிணையோடு ஒப்பிடும்போதே வெங்கடகிருட்டிணன் “அறிவாற்றலின் ஆழம்” வெட்ட வெளிச்சமாகி விட்டது! ஆரியத்துவாவின் “அறம்” புரிந்து விட்டது!

விலங்குகளின் பாலுறவுக்கு தாய், மகள், அக்காள், தங்கை - தந்தை, அண்ணன், தம்பி என்ற வேறுபாடுகள் கிடையாது. மனிதர்களும் இன்று அவ்வாறு இருக்க வேண்டுமென்று வெங்கடகிருட்டிணன் அறிவுரை வழங்குவாரா?

மற்ற மதங்களில் சாதி இருக்கிறதா?
---------------------------------------------------------
இந்து மதத்தைத் தவிர மற்ற மதங்களில் பிறப்பு அடிப்படையில் சாதி இருக்கிறதா? இல்லை! ஆரிய பிராமண சூழ்ச்சிக்காரர்கள்தாம் இந்தியத் துணைக் கண்டத்தில் மனிதர்களிடையே வர்ணாசிரம சாதிப் பிளவை பிறப்பு அடிப்படையில் உருவாக்கி, நிலைநாட்டி, ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். 
பிறப்பைக் காரணம் சொல்லி, சம்பூகனைக் கொன்றவர்கள் - ஏகலைவன் கட்டை விரலை வெட்டியவர்கள் - நந்தனை எரித்தவர்கள் ஆரிய - பிராமண வர்ணாசிரமவாதிகளே!

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் உருவாக்கிய வர்ணசாதி அநீதியை - இவர்களின் ஆதிக்கத்தை 21ஆம் நூற்றாண்டிலும் நிலைநாட்ட ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க. ஆட்சி பாதை போட்டிருக்கிறது என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒட்டுமொத்தத் தமிழர்களையும் சூத்திரர்கள் மற்றும் பஞ்சமர்கள் என்று அடையாளப்படுத்தியவர்கள்தாம் பிராமணர்கள் என்பதை இளம் தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும்!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : 
www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : 
www.kannottam.com
இணையம் : 
www.tamizhdesiyam.com
சுட்டுரை : 
www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : 
youtube.com/Tamizhdesiyam

Sunday, August 25, 2019

படமெடுக்கும் பிராமண மேலாதிக்கவாதம்! ஆரல்கதிர்மருகன்





படமெடுக்கும் பிராமண மேலாதிக்கவாதம்!


தோழர் ஆரல்கதிர்மருகன்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.


"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா 
செய்தொழில் வேற்றுமை யான்"

தமிழ்ப் பேராசான் வள்ளுவப் பெருந்தகையின் வாக்கு இது!

”பறைச்சியாவ தேதடா பனத்தியாவ தேதடா 
இறைச்சிதோ லெலும்பினுல் இலக்கமிட் டிருக்குதோ 
பறைச்சி போகம் வேறதோ பனத்தி போகம் வேறதோ 
பறைச்சியும் பனத்தியும் பகுத்துபாரும் உம்முளே”
(பனத்தி என்பது பார்ப்பனத்தி என்பதன் சுருக்கம்)

இது தமிழ்நாட்டில் பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவவாக்கியார் பாடிய பாடல்!

“நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே
மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ 
விழித்துப்பார் என்றெனக்கு விளம்பிய சற்குருவே”

இந்த வரிகளை உதிர்த்தவர் தமிழர் மறுமலர்ச்சியின் தொடக்கமாகப் போற்றப்படும் வள்ளலார் அவர்கள். இதுதான் தமிழரின் அறக்கோட்பாடு! 

பிறப்பால் உயர்வு தாழ்வு பார்க்கக் கூடாது. செய்யும் தொழில் கொண்டு உயர்வு தாழ்வு கற்பிக்கக் கூடாது. நால்வருணம், தோல்வருணம் எதுவும் நமக்கில்லை என்பது தமிழரின் செம்மாந்த அற வாழ்வியல்!

பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிப்பதும் வருணங்கள் பிரித்து இன்னின்ன சாதிகள் இன்னின்ன தொழில் மட்டுமே செய்ய வேண்டும் என்பதுவும் அதுவே அவர்களது பிறவிப் பயன் என்று சொல்வதும் ஆரியக் கோட்பாடுகள். ஆமாம் தமிழரின் வாழ்வியலுக்கு முற்றும் எதிரான தமிழரின் பண்பாட்டோடு அறவே ஒத்து வராத ஆரியத்தின் கோட்பாடுகள் அவை.

தமிழியத்திற்கும் ஆரியத்திற்குமான போராட்டம் என்பது ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்டது. ஆரியத்தால் எப்போதும் விழுங்கிச் செறிக்க முடியாதது தமிழியமே! அதனால்தான் இன்றளவும் ஆரியத்தின் அரசமைப்பு வடிவமான இந்தியம் தமிழரை வஞ்சம் கொண்டு பழிவாங்கி வருகிறது. 

அதிலும் மோடி தலைமையிலான பா.ச.க. அரசு ஆட்சியமைத்தவுடன் தமிழை - தமிழரை இல்லா தொழிக்கும் வேலைகள் படுவேகமாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. தமிழர்களால் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்ட ஆரியம் தனது வேதகால செருக்கோடு தமிழர் நிலத்தில் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் ஆரியத்துவவாதிகளின் அண்மைக்காலப் பேச்சுகளும் செயல்பாடுகளும் தமிழுக்கு எதிரான - தமிழருக்கு எதிரான ஆரிய வன்மத்தைக் கக்குவதாகவே உள்ளன. 

கேரளாவின் கொச்சியில் உலகளாவிய தமிழ் பிராமணர்கள் சந்திப்பு (Tamil Brahmins Global Meet) என்ற பெயரில் 2019 சூலை மாதம் 19, 20, 21 ஆகிய மூன்று நாட்கள் ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றிய கேரள உயர்நீதிமன்ற நீதியரசர் வி.சிதம்பரேசு பேசியதாவது, "பிராமணர்கள் நாம் முற்பிறப்பில் செய்த நன்மைகளால் இப்பிறவியில் இரு பிறப்பாளர்களாகப் பிறந்துள்ளோம். பிராமணர்களுக்கே உண்டான சிறப்பு பண்பு நலன்களால் நாம் அறிவுசார் தளங்களில் முகாமையான ஆட்களாக உள்ளோம். மேலும் பிறப்பினால் உயர்ந்த நல்லொழுக்கங்களைப் பெற்ற பிராமணர்களே அனைத்து உயர் பொறுப்புகளிலும் இருக்க தகுதியானவர்கள். பிராமணர்கள் பிரிவினைவாதிகளல்ல. அகிம்சாவாதிகள். அக்கிரகாரம் போன்ற நமது தனித்துவ அடையாளங்களை நாம் பாதுகாக்க வேண்டும்” என்றார். 

மேலும் உயர்சாதியினரில் பொருளியல் அளவுகோலில் பின்தங்கியோருக்கு பத்து விழுக்காடு இடவொதுக்கீடு அளிப்பதைப் பற்றி பேசுகையில், “அழுத பிள்ளை பசியாறும். நாம் இதுபோன்ற விடயங்களில் அமைதியாக இருந்து விடக் கூடாது” என்கிறார். 

அதே கூட்டத்தில் பேசிய சென்னைப் பல்கலைக் கழகத்தின் வைணவத் துறை முன்னாள் தலைவரும், தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகப் பேராசிரியருமான எம்.ஏ. வெங்கடகிருட்டிணன் என்பவரின் பேச்சிலோ ஆரியத்துவம் வருணாசிரம சலங்கை கட்டி தாண்டவம் ஆடியது. அவர் சொல்கிறார், “பிறப்பால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லை, பிறப்பால் அனைவரும் சமம் என்பது பொய்யான கூற்று. ஒருவரது பண்பு நலன்களை பிறப்புதான் தீர்மானிக்கிறது”. இவர் மனிதர்களை நாய்களுடன் ஒப்பிட்டு நாயிலும் கூட பிறப்பின் அடிப்படையில் பண்பு நலன்களை வைத்து சாதிப் பிரிவுகள் இருக்கும்போது மனிதர்களிலும் அவ்வாறு இருப்பதில் என்ன தவறு என்று கேட்கிறார். 

எந்த நாயும் தான் உயர்ந்த சாதி நாய் என்ற பெருமிதத்தோடு இருப்பதில்லை. பாவம் நாய்களுக்குத் தெரியாதே நம்மை மனிதர்கள் சாதிப் பார்த்து உயர்வு தாழ்வு கற்பிப்பார்கள் என்று!

வைணவத்தைப் போற்றி வளர்த்த ஆழ்வார்கள் பிறப்பில் உயர்வு தாழ்வு கற்பிப்பதையும் நால்வருணம் பார்ப்பதையும் ஏற்றுக் கொண்டவர்களா? அல்லது கடவுளின் முன் உயிர்கள் அனைத்தும் சமம் என்று கற்பித் தார்களா என்பது வைணவத் துறையில் பேராசிரியராக இருந்த வெங்கடகிருட்டிணனுக்கே வெளிச்சம்!

காலிபர் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் குழு உறுப்பினராக உள்ளவர் ஒய்.ஜி. மதுவந்தி. இவர் தமிழ்த் திரைப்பட நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. கல்வியாளர் என்பதோடு திரைப்பட நடிகை எனும் முகமும் இவருக்கு உண்டு. 

‘நக்கீரன்’ இணைய ஊடகத்திற்கு அண்மையில் இவர் அளித்த செவ்வியில் கேரளாவில் நடந்த பிராமணர்கள் கூட்டத்தில் பேசிய எம்.ஏ. வெங்கடகிருட்டிணன் பேச்சு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர் பேசியதில் தவறொன்றுமில்லை, அவர் வருணாசிரம தர்மத்தைப் பற்றிதான் பேசியுள்ளார் என்று கூறுகிறார்.

மேலும் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் ஆகியோருக்கு பிறப்பின் அடிப்படையிலேயே பண்பு நலன்கள் இருப்பதாகவும், ஒருவர் செய்யும் தொழிலை இன்னொருவர் செய்ய முடியாது என்றும் கூறுகிறார். தான் ஒரு பிராமணப் பெண் என்பதைப் பெருமையாக கருதுவதாகவும் அதைப் பெருமிதத்தோடு வெளிப்படுத்து வேன் என்றும் கூறுகிறார். 

மேலும் பொருளியல் அளவுகோலில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு இட ஒதுக்கீடு தேவையானது என்றும் அதை மறுப்பதற்கு நீங்கள் யார் என்றும் கேள்வி எழுப்புகிறார். காசுமீரின் சிறப்புத் தகுதியை உறுதி செய்த அரசமைப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை தாம் வரவேற்பதாகவும், அதுகுறித்த ரசினிகாந்தின் கருத்து சரியானது என்றும் குறிப்பிடுகிறார். பல கேள்விகளுக்கு மழுப்பலாகவும் மேலோட்டமாகவும் பதில் அளித்தாலும் அவர் பேசியது ஆரியத்துவ வருணாசிரம வாதமே என்பது அவரது செவ்வியில் அப்பட்டமாக தெரிந்தது. 

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆரியத்துவ அமைப்பு “வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம்”. அவ்வமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் “சபதமேற்பு நாள்” என்ற பெயரில் ஒரு நிகழ்வு ஒருங்கிணைக்கப்படுகிறது. பதினெட்டு ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் இந்நிகழ்வு இவ்வாண்டு ஆகத்து மாதம் 14 ஆம் நாளன்று சென்னையில் நடந்தது. அதில் அவ்வமைப்பின் இயக்குநர் பால கவுதமன் பின் வருமாறு பேசுகிறார் - 

“காசுமீர் பிரச்சினையில் மோடி எடுத்துள்ள நடவடிக்கை பாதிக்கப்பட்ட நோயாளிக்கு தலைப் பகுதியில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை போன்றது. மோடி அதை திறம்பட செய்து முடித்துள்ளார். தலையில் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்ட அறுவை சிகிச்சை அடுத்து கால் பகுதியிலும் செய்யப்படும். ஆமாம் அடுத்த அறுவை சிகிச்சை தமிழ்நாட்டுக்குதான். மோடி அதை செய்து முடிப்பார். அமித்சா துணை நிற்பார். நம்மைப் போன்ற எண்ணற்ற தேசபக்தர்கள் அவர்களுக்குப் பின்னால் உறுதுணையாக நிற்க வேண்டும். அகண்ட இந்து தேசத்தை உருவாக்குவதே நமது இலட்சியமாக இருக்க வேண்டும். அதை நோக்கி நாம் வேகமாக நகர்கிறோம்” என்கிறார். 

வருணாசிரமத்தை வெளிப்படையாக ஊடகங்களில் ஆதரித்துப் பேசுவது, காசுமீரைப் போல தமிழ்நாட்டை யும் எது வேண்டுமானாலும் செய்வோம் என மிரட்டுவது என்று ஆரியத்துவவாதிகள் தமிழுக்கும் தமிழருக்கும் எதிராக நஞ்சை உமிழத் தொடங்கியிருக்கிறார்கள். இவ்வளவு துணிச்சலாகவும் திமிராகவும் இவர்கள் எப்படி பேசுகிறார்கள்? ஆரியத்துவவாதிகள் என்ற ஆணவத்தில் பேசுகிறார்கள். இந்தியாவை ஆள்வது ஆரியம் என்கிற திமிரில் பேசுகிறார்கள். தமிழினத்தை வேரோடு வீழ்த்த நினைக்கும் ஆரியத்தின் தளபதிகளாக தம்மை எண்ணிக் கொண்டு பேசுகிறார்கள். 

தேசியப் புலனாய்வு முக வாண்மை சட்ட திருத்த தீர்மானம் குறித்து அமித்சா பேசினாரே “இச்சட்டம் இசுலாமிய பயங்கரவாதிகளுக் கானது மட்டுமல்ல தமிழ் அமைப்புகளுக்குமானது” என்று. அந்தப் பேச்சின் தொடர்ச்சியாகத்தான் இவர்களது பேச்சுகளையும் நாம் நோக்க வேண்டியுள்ளது. 

ஆரியம் தமிழை, தமிழரை, தமிழர் தாயகத்தை அழித்தொழிக்க முழுவேகத்தோடு களமிறங்கியுள்ளது. தமிழரின் நிலங்களில் நஞ்சை விதைத்து எரிவளி எடுக்க எக்காளமிடும் ஆரியத்துவ வல்லாதிக்கம், தமிழரின் மனங்களில் ஆரிய வருணாசிரம நஞ்சை விதைத்து தமிழினத்தை விழுங்கிச் செறிக்க “அகண்ட பாரதம்” என்ற கனவோடு தன் வாயை அகலத் திறந்து காத்திருக்கிறது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நடந்து வரும் தமிழர் - ஆரியர் போர் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. ஈழத்தில் நம் இனத்தை கருவறுத்த ஆரியம் தமிழ் நாட்டைக் குறிவைத்து வல்லூறாக வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. 

தமிழர்கள் நாம் இந்த ஆரியப் பகையைத் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். ஆரியத்துவக் கருத்துகளோ, வருணாசிரமக் கோட்பாடுகளோ தமிழ்நாட்டில் வேரூன்ற எக்காலத்திலும் நாம் அனுமதிக்கக் கூடாது. ஆன்மிகமானாலும் அறம் சார்ந்த மரபு வாழ்வியலானாலும் நமது தமிழினம் தனித்துவமானது. அது ஒன்று மட்டுமே ஆரியத்தால் ஆட்கொள்ள முடியாதது. 

திருவள்ளுவரும், திருமூலரும், சிவவாக்கியாரும், வள்ளலாரும் எனப் பல நூறு ஆண்டுகளாக அறம் பாடி ஆரியத்தை எதிர்த்த மரபு நம்முடையது. அந்த மரபை நாம் மறந்துவிடக் கூடாது. தமிழினம் கடும் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் இந்த வேளையில் நமது செம்மாந்த அந்த தனித்துவ மரபு ஒன்றே நம்மை காக்க வல்ல பெருங்கருவி!

திராவிடம், தலித்தியம் என முற்போக்கு முகமூடிகள் அணிந்து கொண்டு ஆரியத்தையும் சனாதனத்தையும் அழித்தொழிப்போம் என எக்காளமிடும் கட்சிகளால் அதை ஒருபோதும் செய்ய முடியாது. ஏனெனில் ஆரியத்தை தலையில் சுமந்து அரசு கட்டிலில் அமர வைத்தவர்கள் அவர்கள். அவர்கள் ஆரியத்தோடு இரண்டறக் கலந்து விட்டார்கள். ஆரியத்துவத்திற்கு எதிரான இப்போரில் தமிழினத்தை தோள் கொடுத்து தூக்கி நிறுத்தும் ஆற்றல் அவர்களுக்கு இல்லை. 

பண்பாடு, ஆன்மிகம், தற்சார்பு வாழ்வியல் என அனைத்திலும் தனித்துவம் கொண்ட தமிழர்களுக்குப் பூட்டப்பட்டுள்ள அடிமைத்தளையை உடைக்கவல்ல விடுதலை முழக்கம் ‘தமிழ்த்தேசியம்’ ஆகும். வருணாசிரமத்திற்கு எதிரான - ஆரியத்துவ இனவாதத் திற்கு எதிரான ‘தமிழர் அறம்’ என்னும் மெய்யியல் கோட்பாடே நாம் முன் வைக்கும் தமிழ்த்தேசியத்தின் ஆணிவேர் ஆகும். 

”தமிழர் அறமென்னும் தழலை ஏந்துவோம்!
தலை தூக்கும் ஆரியத்தை வீழ்த்துவோம்!”


தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095 
முகநூல் : www.fb.com/tamizhdesiyam 
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam 
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Thursday, August 22, 2019

“கல்லாக்கோட்டை மது ஆலையை மூடுக!” பத்தாயிரம் மக்கள் கையெழுத்திட்ட மனுக்கள் தமிழ்நாடு அரசிடம் நேரில் கையளிப்பு!

“கல்லாக்கோட்டை மது ஆலையை மூடுக!” பத்தாயிரம் மக்கள் கையெழுத்திட்ட மனுக்கள் தமிழ்நாடு அரசிடம் நேரில் கையளிப்பு!
புதுக்கோட்டை மாவட்டம் – கல்லாக்கோட்டையில் கால்ஸ் மது ஆலையை மூடக் கோரி தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மகளிர் ஆயமும், நாம் தமிழர் கட்சியும் திரட்டிய பத்தாயிரம் மக்கள் கையெழுத்திட்ட மனுக்கள் இன்று (22.08.2019) காலை, தமிழ்நாடு அரசிடம் கையளிக்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டம் - கந்தர்வக்கோட்டை வட்டம் - கல்லாக்கோட்டையில் செயல்பட்டு வரும் கால்ஸ் மது உற்பத்தி ஆலை, கடந்த 2008ஆம் ஆண்டு வாக்கில் திறக்கப்பட்ட பின் கல்லாக்கோட்டையைச் சுற்றியுள்ள 20 கிராமங்களில் நிலத்தடி நீர் வற்றிப் போய் வேளாண்மை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்று வட்ட கிராமங்களின் மக்கள் போதிய குடிநீரின்றித் தவிக்கிறார்கள்.
ஒரு நாளைக்கு இலட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை ஆழ்குழாய்க் கிணறுகள் வழியாகக் கால்ஸ் நிறுவனம் உறிஞ்சுகிறது. அந்த சாராய ஆலைக்கு அருகில் 600 ஏக்கரில் இயங்கி வந்த தமிழ்நாடு அரசு வேளாண் விதைப்பண்ணை தண்ணீரில்லாமல் மூடப்பட்டு விட்டது.

கால்ஸ் ஆலை தொடங்கப்பட்டால் இவ்வாறான பாதிப்புகள் வரும் என்று கடந்த 2008இல் சனநாயக வழியில் போராடிய சுற்று வட்ட மக்கள் மீதும் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் மீதும் ஏராளமான வழக்குகளைப் போட்டு, சிறையிலடைத்து அப்போதைய தி.மு.க. ஆட்சியாளர்கள் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டார்கள். ஒருவர் மீது நான்கு, ஐந்து வழக்குகள் போட்டுள்ளார்கள். இன்னும் அந்த வழக்குகளுக்காக அவர்கள் நீதிமன்றம் அலைந்து கொண்டுள்ளார்கள்.

இந்நிலையில், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மகளிர் அமைப்பான “மகளிர் ஆயம்” தலைமையில் கடந்த 14.05.2019 அன்று கல்லாக்கோட்டை கால்ஸ் மது ஆலையை மூட வலியுறுத்தி அவ்வாலை முன்பு மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்று இருநூறுக்கும் மேற்பட்ட பெண்களும் சுற்று வட்ட மக்களும் பங்கேற்று கைதாகினர்.

அதன்பிறபு, நாம் தமிழர் கட்சியினரும் மகளிர் ஆயத்தினரும் இணைந்து கடந்த 28.06.2019லிருந்து 05.07.2019 வரை கந்தர்வகோட்டை சுற்று வட்டாரப் பகுதியில் மக்களிடம் இக்கோரிக்கைகளுக்காக பத்தாயிரம் கையெழுத்துகள் வாங்கினர். இக்கையெழுத்துகள் கொண்ட மனு இன்று (22.08.2019) காலை சென்னை தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

இம்மனுவை, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன், மகளிர் ஆயம் தலைவர் தோழர் ம. இலட்சுமி அம்மாள், நாம் தமிழர் கட்சி கந்தர்வக்கோட்டை செயலாளர் திரு. செல்வக்குமார், புதுக்கோட்டை நடுவண் செயலாளர் திரு. முருகானந்தம், தமிழுரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் புலவர் இரத்தினவேலன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, மகளிர் ஆயம் செயற்குழு தோழர் பிருந்தா, தோழர்கள் கோ. செந்தாமரை, த. சத்தியா ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்திற்கு வந்து அளித்தனர்.
முன்னதாக, தமிழ்நாடு அரசு உள்துறை செயலாளர் திரு. நிரஞ்சன் மார்டி இ.ஆ.ப., அவர்களை நேரில் சந்தித்துப் பேசிய ஐயா பெ. மணியரசன் தலைமையிலான தோழர்கள், 2008இல் மது ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளைக் கைவிட வேண்டுமெனக் கோரினர். அதன்பின், தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி திரு. டி. பாஸ்கரபாண்டிய் இ.ஆ.ப., அவர்களை நேரில் சந்தித்து பத்தாயிரம் மக்கள் கையெழுத்துகள் வழங்கப்பட்டன.

அதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஐயா மணியரசன் அவர்கள், “கல்லாக்கோட்டையிலுள்ள கால்ஸ் மது உற்பத்தி ஆலை நிலத்தடி நீரை உறிஞ்சிவிட்டதால், சுற்றுவட்டத்தில் 20 கிராமங்கள் நிலத்தடி நீர் வற்றி வேளாண்மை முற்றிலும் பாதிக்கப்பட்டுவிட்டது. குடிநீரும் இல்லை. எனவே, கால்ஸ் மது ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். இவ்வாலையைத் தொடங்கக் கூடாது என்று 2008இல் போராடிய மக்கள் மீது போட்டுள்ள அனைத்து வழக்குகளையும் கைவிட வேண்டும். கல்லாக்கோட்டையில் நிலத்தடி நீரின்றி மூடப்பட்டுள்ள அரசு வேளாண் விதைப் பண்ணையை மீண்டும் செயல்படுத்த வேண்டும். கால்ஸ் மது ஆலையில் வேலை பார்க்கும் தொழிலாளிகளுக்கு மாற்று வேலை வழங்க வேண்டும்” ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Tuesday, August 20, 2019

நீலகிரி மாவட்டம் மிகப்பெரும் சூழலியல் பேரழிவை நோக்கிச் சென்று கொண்டுள்ளது! கூடலூர் சென்று வந்த தமிழ்த்தேசியப் பேரியக்கக்குழு ஆய்வறிக்கை!




“நீலகிரி மாவட்டம் மிகப்பெரும் சூழலியல் 

பேரழிவை நோக்கிச் சென்று கொண்டுள்ளது!”

கூடலூர் சென்று வந்த தமிழ்த்தேசியப் 

பேரியக்கக்குழு ஆய்வறிக்கை!



“மலைகளின் அரசி” என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம், கடந்த 2019 ஆகத்து இரண்டாம் வாரத்தில் பெய்த வரலாறு காணாத பெரு மழையால், தன் இயல்பை இழந்து தவித்து வருகிறது. சற்றொப்ப 300க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பழங்குடியின மக்களும், தோட்டத் தொழிலாளர்களும் வசித்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இப்போதும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தங்கள் வீடு – உடைமைகளை இழந்த ஆயிரக்கணக்கான மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.
நீலகிரியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அறிந்து வர, கடந்த 18.08.2019 அன்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, கோவை செயலாளர் தோழர் விளவை இராசேந்திரன், தோழர்கள் தமிழ்ச்செல்வன், திருவள்ளுவன், ஸ்டீபன், இராசேசுக்குமார் ஆகியோர் ஒரு குழுவாக கூடலூருக்குப் பயணம் மேற்கொண்டோம்.
வழியெங்கும் நிலச்சரிவுகள்
---------------------------------------------
குன்னூரைக் கடந்து ஊட்டியை நோக்கிச் செல்லும் மலைச் சாலைகளிலும், அங்கிருந்து கூடலூர் நோக்கிச் செல்லும் மலைச் சாலைகளிலும், கூடலூரிலிருந்து தேவாலா செல்லும் வரையிலான சாலைகளிலும் என திரும்பிய திசையெங்கும் உள்ள மலைச் சாலைகளில் ஆங்காங்கு நிலச்சரிவுகள் ஏற்பட்டிருப்பதைக் காண முடிந்தது. சில இடங்களில் சாலையோர மரங்கள் சரிந்ததுடன், தார்சாலையில் பிளவு ஏற்பட்டுள்ளது. அங்கெல்லாம் சாலையில் தடுப்பு வைக்கப்பட்டு, ஊர்திகள் ஒரு வழியாக மட்டும் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. இதன் காரணமாக மலைப்பாதையின் பல இடங்களில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுக் கொண்டுள்ளது.

அனுமாபுரம், பதினாறு, வாளவயல் போன்ற பல இடங்களில் சாலை வளைவுகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகளை நேரில் ஆய்வு செய்தோம். வாளவயல் கிராமத்தில், தார்ச்சாலையின் நடுவிலேயே மண் அரிக்கப்பட்டு பள்ளம் ஏற்பட்டுள்ளது. கொளப்பள்ளிச் சாலையில் மிகப்பெரும் அளவுக்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தின்போது அங்கு தன்னார்வப் பணியில் ஈடுபட்ட “கன்சர்வ் எர்த்” அறக்கட்டளைத் தலைவர் இரவிக்குமார், அப்போது தங்கள் குழுவினர் எடுத்த கைப்பேசி படங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
மண் பலமிழந்து நிலச்சரிவு ஏற்படக்கூடும் என ஏற்கெனவே ஊகிக்கப்பட்ட பல சாலை வளைவுகளில், இம்மழைக்கு முன்னதாகவே சாலையைப் பலப்படுத்தும் பணிகள் நடந்துள்ளது. சில இடங்களில் அப்பணிகள் நடந்து முடிந்திருந்தாலும், சில இடங்களில் அவை பாதியில் நின்று கொண்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபாய் செலவில் இதுபோன்ற பணிகள் முன்னெடுக்கப் பட்டாலும், மழைக்கால சீற்றங்களால் மட்டுமின்றி, சாலைகள், தடுப்புச்சுவர் போன்றவற்றின் தரமற்ற தன்மையாலும் சில நேரங்களில் சிக்கல்கள் ஏற்படுவதுண்டு என்கின்றனர் அப்பகுதி மக்கள்!
மழைப்பொழிவு அளவு
------------------------------------ 
சென்னையின் ஒரு ஆண்டு சராசரி மழைப் பொழிவு 1,383 மில்லி மீட்டர் ஆகும். அதுபோல், மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டியுள்ள கோவையில் ஓராண்டுக்கு சராசரியாக 618 மில்லி மீட்டர் மழை கிடைக்கிறது. கடந்த ஆகத்து 6 தொடங்கி ஐந்து நாட்களுக்கு – நீலகரி மாவட்டத்தின் அவலாஞ்சி கிராமத்தில் பெய்த மழையோ 2,528 மில்லி மீட்டர்! இதற்கு முன்பு கடந்த 1943இல் கடலூரில் ஒரே நாளில் 570 மில்லி மீட்டர் மழைப் பெய்துள்ளதே மிகப்பெரும் மழைப் பொழிவாகக் கருதப்பட்டு வந்தது.

இப்போது, அதையெல்லாம் முறியடித்து அவலாஞ்சியில் ஒரே நாளில் 911 மில்லி மீட்டர் மழைக் கொட்டித் தீர்த்துள்ளது. அவலாஞ்சியில் பெய்த இந்தப் பெருமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு கூடலூர் மலைக் கிராமங்களின் வீடுகளுக்குள் திடீரெனப் புகுந்ததும், இதன் காரணமாக ஆங்காங்கு ஏற்பட்ட நிலச்சரிவுகளும்தான் இந்த அவலங்களுக்கு முகாமையான காரணம்!
உயிரிழப்புகள்
----------------------- 
மழைப் பொழிவும், காட்டாற்று வெள்ளமும் ஏற்படுத்திய பாதிப்பால் ஆறு பேர் இதுவரை இறந்துள்ளனர். உதகை அருகே இத்தலார் வினோபாஜி நகரில் வீட்டின் மீது மண் சரிந்து விழுந்து சென்னி (அகவை 70) என்ற முதியவர் உயிரிழந்தார். குருத்துக்குளி கிராமத்தில் பணிக்குச் சென்று திரும்பிய விமலா, சுசீலா ஆகிய இரு பெண்கள், காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். கூடலூர் அருகிலுள்ள நடுவட்டம் இந்திரா நகரில் வீட்டின் மீது மண் சரிந்ததில் அமுதா, அவரது மகள் பாவனா (அகவை 10) ஆகியோர் உயிரிழந்தனர். மஞ்சூர் அருகே காட்டுக்குப்பை பகுதியில் மின்வாரிய ஒப்பந்தப் பணி மேற்கொண்டிருந்தபோது, மண் சரிந்து விழுந்ததில் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த சஜீவ் (அகவை 30) உயிரிழந்தார். அதுபோல், கோவை மாவட்டம் – பொள்ளாச்சி அருகில் மழைப் பொழிவால் வீடு இடிந்து இருவர் பலியாகினர். தமிழ்நாடு அரசு உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளது.

நீலகிரியின் கூடலூரையொட்டியுள்ள பாலவாடி, சூண்டி, பார்வுட், கல்லறைமூலா, சேரன் நகர் போன்ற பல இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இன்னும் நிலைமை சீராகவில்லை. பாதை தடைபட்டுள்ளதால், அங்கெல்லாம் நமது குழு செல்ல இயலவில்லை!
மழைப்பொழிவுக்கு காரணம் என்ன?
--------------------------------------------------------- 
நீலகிரியில் மட்டுமின்றி, இம்மாவட்டத்தை ஒட்டியுள்ள கேரள – கர்நாடக வனப்பகுதிகளில் பொழிந்த மழைப்பொழிவு அங்கும் இதுபோல் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக அறிகிறோம். கேரளாவின் வயநாடு பகுதியில் இதுவரை 116 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகத்தின் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும், கடற்கரை மாவட்டங்களிலும் வெள்ள சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

அண்மைக் காலமாக, ஒரே நாளில் அதிகளவிலான மழைப் பொழிவு ஏற்படும் புதிய இயற்கைப் போக்கு உலகெங்கும் எழுந்துள்ளது. மிகப்பெரும் அளவுக்கு புவியின் காற்று வெளி மாசுபட்டு, புவிவெப்பமயமாவதே இதற்கு முதன்மைக் காரணம் என்றாலும், பிற காரணிகளும் இருக்கத்தான் செய்கின்றன.
தொல் தமிழர் வாழ்விடமான நீலகிரி
---------------------------------------------------------- 
நீலகிரி மாவட்டத்தின் இயற்கை எழில் கொஞ்சும் பேரழகைப் பார்த்த ஆங்கிலேய ஆட்சியாளர்கள்தான், இந்த மாவட்டத்தில் “கான்கிரீட்” கட்டடங்களைக் கட்டி முதன் முதலில் இங்கு பழங்குடி அல்லாத மனிதக் குடியேற்றங்களை ஊக்குவித்தனர். நீலகிரி மலைக்குத் தொடர்பில்லாத தேயிலை, காபி, தைலம் (யுகலிப்டஸ்), இரப்பர் போன்ற பல புதிய வகைப் பயிர்களையும், மரங்களையும் இங்கு கொண்டு வந்தனர். இந்தக் குடியேற்றங்களுக்கு முன்பு வரை, நீலகிரி மாவட்டம் – பல்வேறு பழங்குடியின மக்களின் தாயகப் பகுதியாக விளங்கியது. இப்போதும் அவர்கள் இங்கு வசித்து வருகின்றனர்.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான தமிழர் நாகரிகமான சிந்துவெளி நாகரிகத்துடன் தொடர்புள்ள பல சித்திரக் குறியீடுகள் பாறை ஓவியங்களாக தமிழ்நாட்டின் விழுப்புரம் (கீழ்வாலை), தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் கண்டறியப்பட்டது. பாறை ஓவியங்கள் கிடைத்த மாவட்டங்களில் நீலகிரி மாவட்டமும் முகாமையானது!
கடந்த (2019) சூன் மாதம், நீலகிரியின் கரிக்கையூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பாறை ஓவியம்தான், தென் இந்தியாவில் கிடைத்த பாறை ஓவியங்களிலேயே மிகப்பெரியது என்கிறார் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவாநந்தம். இவை இரண்டாயிரம் முதல் ஐயாயிரம் ஆண்டுகள் வரைப் பழமையானவை என்ற செய்தி, நீலகிரி மலைத்தொடரில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மக்கள் வாழ்ந்து வருவதை விளக்குகிறது.
நீலகிரியில் இப்போதும் வாழ்ந்து வரும் குரும்பர் பழங்குடியின மக்கள், இன்றைக்கும் அதே ஓவிய மரபோடு விளங்குவது இந்த மரபுத் தொடர்ச்சியை உறுதிப்படுத்துவதாக உள்ளது. குரும்பர்கள் மட்டுமின்றி, தொதவர், கோத்தர், குறும்பர், பணியர், இருளர், காட்டுநாயக்கர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் இங்கு வசித்து வருகின்றனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கர்நாடகத்திலிருந்து இங்கு வந்து குடியேறிய படுகர் இன மக்களும் இங்கு காலங்காலமாக வசித்து வருகின்றனர். கேரளா மற்றும் கர்நாடக மாநில எல்லைப் பகுதியை ஒட்டிய மாவட்டம் என்பதால், மலையாளிகளும், கன்னடர்களும் கணிசமான அளவில் இங்கு வாழ்கின்றனர்.
ஆங்கிலேயர் ஆட்சியின்போது வறுமை காரணமாக - தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், விழுப்புரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து இலங்கையின் தென்பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிவதற்காகக் கொண்டு செல்லப்பட்ட மலையகத் தமிழ் மக்களில் கணிசமானோரை 1948ஆம் ஆண்டு இலங்கை அரசு இந்தியாவிற்கே திருப்பி அனுப்பியது. அவ்வாறு அனுப்பப்பட்ட மலையகத் தமிழர்கள் நீலகிரி – கோவை – தேனி போன்ற தேயிலைப் பயிரிடப்பட்ட மலை மாவட்டங்களில் குடியேறினர். அவர்களில் கணிசமானோருக்குப் பணி வாய்ப்பு வழங்கவே 1968இல் தமிழ்நாடு அரசின் தேயிலைக் கழகம் (TANTEA - Tamilnadu Tea Plantation Corporation Limited) உருவானது. நீலகிரியிலுள்ள அரசுத் தேயிலைக் கழகத் தோட்டங்களில் தற்போது மலையகத் தமிழர்கள் கணிசமான அளவில் பணிபுரிகின்றனர்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர் தாயகப் பகுதியாக விளங்கும் நீலகிரியில், இன்றைக்கு மண்ணின் மக்களான பழங்குடியினரும், தமிழர்களும் ஒதுக்கி வைக்கப்பட்டு மலையாளிகளும், கன்னடர்களும், மார்வாடிகளும் பொருளியல் ஆதிக்கம் செலுத்திக் கொண்டுள்ளனர். கூடலூரின் முக்கிய வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில் மலையாளப் பெயர்கள் பொறிக்கப்படுவது இயல்பாகிவிட்டதை அங்கு காணலாம்.
நீலகிரி மாவட்டத்தின் கணிசமான தனியார் தேயிலைத் தோட்டங்களும், பணப்பயிர் தோட்டங்களும், சொகுசு சுற்றுலா விடுதிகளும், வணிக நிறுவனங்களும் அயலார்க்கே சொந்தமானதாக உள்ளது. தமிழ்நாட்டை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் முகாமையான சுற்றுலா நகரங்களில் இதே நிலைதான் நீடிக்கிறது.
வரைமுறையற்ற மனித ஆக்கிரமிப்புகள்
மண்ணின் மக்களான பழங்குடியினர் இயற்கையோடு இயைந்து வாழ்ந்து வந்த இப்பகுதிகள், இப்போது மிக மோசமான சூழலியல் சீர்கேடுகளுக்கு ஆளாகியுள்ளது. அவ்வப்போது இங்கு நடைபெறும் இயற்கைச் சீற்றங்களுக்கு முகாமையான காரணமாக இதுவே உள்ளது. இந்த மலைப்பகுதிகளில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தொடங்கி வைக்கப்பட்ட “கான்கிரீட்” கட்டட மரபு, இன்றைக்கு மலையையே தகர்த்துவிட்டு சுற்றுலா விடுதி கட்டும் அளவுக்கு சீரழிந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தின் மசினக்குடி, மோயார், மாவல்லா, பொக்காபுரம் போன்ற பகுதிகளில் மட்டும் 400க்கும் மேற்பட்ட சொகுசு விடுதிகள், உணவகங்கள் முதலியவை யானைகளின் வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.
ஒருபுறம், நீர்த்தொட்டியாக விளங்கும் நீலகிரி மாவட்டத்தின் முகாமையான நீர் நிலைகளில் கழிவு நீர் கலந்து மாசுபடுவது நடக்கிறது; இன்னொருபுறத்தில், பணப்பயிர் வேளாண்மைக் காகவும், கட்டடக் கட்டுமானங்களுக்காகவும் நீர்நிலைகளும், நீர்வழித்தடங்களும் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது. இதுபோன்ற மனித அத்துமீறல்களால் நீலகிரியின் மலைகள் தனது சூழலியல் தற்சார்பை மெல்ல இழந்து வருகின்றன. இவ்வாறு, கடந்த 2005ஆம் ஆண்டிலிருந்து 2017 வரையிலான 12 ஆண்டுகளில் சற்றொப்ப 32,000 ஹெக்டேர் வனப்பகுதியை இழந்துள்ளது நீலகிரி மாவட்டம்!
நீர்வழித்தடங்கள் முறையாகத் தூர்வாரப்படாததாலும், ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருப்பதாலும் வெள்ள நீர், பாய்ந்தோடு வழியின்றி வீடுகளையும், விளை நிலங்களையும் விட்டு வைக்காமல் சென்றுள்ளது. நூற்றுக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் நீரில் மூழ்கின.
பணப்பயிர் வேளாண்மைக்காக காடுகள் அழிக்கப்படுவது ஒருபுறம் நடக்க, இன்னொருபுறத்தில் சட்டவிரோதமாக அரிய வகை மரங்கள் வெட்டப்படுவதும் கடத்தப்படுவதும் நடப்பதாக நீலகிரி சூழலியல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். சோலைக்காடுகள், முட்புதர்காடுகள், சதுப்பு நிலங்கள், புல்வெளிகள் எனப் பலவகையான வனப்பகுதிகளும் இவ்வாறு அழிவை சந்தித்து வரும் நிலையில், இது மழைப் பொழிவை குறைப்பதுடன், நீரை உள்ளே தேக்கி வைத்துக் கொள்ளும் தன்மையை இம்மலைகள் இழந்து விடும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். சூழலியல் எழுத்தாளர் நக்கீரன், நீலகிரியில் மட்டும் இவ்வாறு நான்காயிரம் ஓடைகள் வற்றி விட்டதாகத் தெரிவிக்கிறார்.
கடந்த 2015ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, நீலகிரியில் மலைப்பகுதி கட்டுமான விதிமுறை களை மீறிக் கட்டப்பட்ட கட்டுமானங்களின் எண்ணிக்கை 1,337 என நீதிமன்றத்திலேயே தெரிவித்தார் நீலகிரி நகராட்சி ஆணையர் சிவக்குமார்.
கடந்த 2018ஆம் ஆண்டு ஆகத்து மாதம், உச்ச நீதிமன்றம் ஆணையிட்டதன் பேரில் காட்டையும், யானை வழித்தடங்களையும் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட 39 சொகுசு விடுதிகளை மாவட்ட நிர்வாகம் இழுத்து மூடியது. உதகையிலிருந்து கூடலூர் செல்லும் வழியிலுள்ள டி.ஆர். பசார் என்ற பகுதியில் மலைச்சரிவில் ஆபத்தான முறையில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட ஒரு பிரம்மாண்ட சொகுசு விடுதியை நாங்கள் நேரில் கண்டோம். இவற்றைக் கண்டவுடன், குளிர்ச்சியான நீலகிரிப் பகுதி இதுபோன்ற அடுக்கடுக்கான கான்க்ரீட் கட்டடங்களால் வெப்ப மண்டலமாக மாறி வருகிறதோ என்ற அச்சம் எழத் தொடங்கியது.
கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தின்போது நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டதாலேயே மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. இப்போது நீலகிரியிலும் கிட்டத்தட்ட அதுதான் நடந்துள்ளது. மலைப்பாங்கான சரிவுப் பகுதி என்பதால் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழப்பதும் இங்கு நடக்கிறது. இந்த மழையில் கூட அவ்வாறு இருவர் உயிரிழந்துள்ளனர். சென்னை போன்ற பெருநகரங்களை எட்டியுள்ள “வளர்ச்சிப் பேரழிவு” நீலகிரியையும் விட்டு வைக்கவில்லை!
மாறுபடும் நிலத்தின் தன்மை
-----------------------------------------------
அந்தந்த திணைக்கும் அந்தந்த தாவரங்கள் என்பது இயற்கையின் திணை ஒழுங்கு. இது மீறப்படுவதை “திணை மயக்கம்” என்று பழந்தமிழர்கள் குறித்தனர். இது அழிவை உண்டாக்கும் என எச்சரித்தனர். நீலகிரியில் இந்த மீறல்தான் “வளர்ச்சி” என்ற பெயரால் நடந்துள்ளது.

மண்ணின் பழங்குடியின மக்களின் அரவணைப்பில் மண்ணுக்கேற்ற மரங்கள் இயல்பாக வளர்ந்திருந்தபோது நீடித்து நின்ற நீலகிரி மலைகள், இப்போது மண்ணுக்குத் தொடர்பில்லாத தேயிலை, தைலம் போன்ற பணப்பயிர்கள் பயிரிடப்பட்ட பிறகு தனது இறுக்கத்தன்மையை மெல்ல இழந்து நிற்கின்றன. இந்த நிலையில், திடீரென ஏற்படும் பெருமழைப் பொழிவு நிலத்தை நெகிழ வைத்து விடுகிறது. இதன் காரணமாகவே, ஆங்காங்கு நிலச்சரிவுகளும், குடியிருப்புகள் தகர்வதும் நடந்துள்ளது. பல இடங்களில் தேயிலைத் தோட்டத்தையொட்டி நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதை நாங்கள் நேரில் கண்டோம்.
வன உயிரினங்களுக்கு பேராபத்து
ஐ.நா.வின் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ (UNESCO) அமைப்பு, தமிழ்நாடு - கேரளா - கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களையொட்டியுள்ள 5,520 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு வனத்தை – 1986ஆம் ஆண்டு “நீலகிரி உயிர்க்கோள் காப்பகம்” (Biosphere reserves) என அறிவித்துள்ளது. இந்தியாவின் முதல் “உயிர்க்கோள் காப்பகம்” இதுதான்! முதுமலை மற்றும் சத்தியமங்கலம் வனவிலங்குகள் சரணாலயம் இங்குதான் அமைந்துள்ளது. அந்தளவிற்கு மிக முகாமையான உயிரியல் பன்மைத்துவம் பேணப்பட வேண்டிய பகுதி இது. ஆனால், மனித ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் - வன உயிரினங்களுக்கு பேராபத்து ஏற்பட்டு வருகிறது.

காடுகள் அழிக்கப்பட்டு செயற்கையாக வேளாண் நிலங்கள் உருவாக்கப்படுவதும், விடுதிகளும் கட்டுமானங்களும் விரிவாக்கப்படுவதும் வன உயிரினங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலை அளித்துள்ளது. எனவேதான், அவை மனிதக் குடியிருப்புகளை நோக்கி சீற்றமிடுகின்றன. யானைகள், கரடிகள், காட்டுமாடுகள் ஆகியவை அவ்வப்போது குடியிருப்பு நோக்கி வருவதற்கு உணவுத் தேடலே முதன்மைக் காரணம் என்கின்றனர் அப்பகுதி மக்கள்!
யானைகளுக்கு மிகப்பிடித்த உணவான எலுமிச்சை வகைப் புற்கள் (லெமன் கிராஸ்) அழிக்கப்படுவதால், மலை உச்சிகளில் அவை வளரும் இடத்தை நோக்கி யானைகள் ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றன. இதன் காரணமாக அவ்வப்போது மலைகளிலிருந்து கீழே விழுந்து அவை இறக்கும் நிகழ்வுகளும் நடக்கின்றன. அதுபோல், பொதுவாகவே அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் மேய்ச்சலில் ஈடுபடும் பழக்கம் கொண்ட காட்டுமாடுகள் இப்போது, உணவு தேடி இரவில் பயணிக்கும் அவல நிலைக்கு உள்ளாகியுள்ளது.
இந்த நிலை இப்படியே நீடிப்பது வன உயிரினங்களுக்கு மட்டுமின்றி, வனத்திற்குமே நல்லதல்ல!
அடர்ந்த வனங்களுக்கு அருகில் உள்ள வேளாண் நிலங்களில் பயன்படுத்தப்படும் வேதி உரங்களும், முறைப்படுத்தப்படாத சுற்றுலாவும் நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் நிலவுகிறது. வெறும் 7.5 இலட்சம் மக்கள் தொகை கொண்ட இம்மாவட்டத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் சற்றொப்ப 30 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் சுற்றுலாவுக்காக இங்கு குவிகின்றனர். இதனால் ஏற்படும் மாசுபாடு மற்றும் போக்குவரத்துகளால் ஏற்படும் காற்று மாசுபாடு ஆகியவை கவனம் கொள்ள வேண்டிய முகாமையான சிக்கலாகும்.
தற்போது கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளைவிட நீலகிரியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறைவுதான் என்றாலும், தற்போது நீலகிரியில் ஏற்பட்டுள்ளவை எதிர்காலத்திற்கான எச்சரிக்கையாகக் கருதப்பட வேண்டும். நீலகிரி உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைகளின் முகாமையான உயிர்ச்சூழல் மையங்களில் ஏற்படும் பாதிப்புகள், அங்கிருப்போரை மட்டும் பாதிக்கப்போவதில்லை – அங்கிருந்து நமக்கு வரும் ஆறுகள் சுருங்கி சமவெளி மக்களும் இதனால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாவோம் என்ற எச்சரிக்கை உணர்வு வேண்டும்.
என்ன செய்ய வேண்டும்? - பரிந்துரைகள்
---------------------------------------------------------------- 
1. முதலில், நிலச்சரிவு ஏற்பட்டுள்ள இடங்களில் போர்க்கால வேகத்தில் சாலைகளை சரி செய்யும் பணியில் ஈடுபட வேண்டும்.

2. அரசின் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு அரசு சார்பில் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.
3. நிலச்சரிவிலும், வெள்ளத்திலும் இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அவர்களது தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்க வேண்டும்.
4. வனப்பகுதிக்குள் வசித்தாலும் கூட, வீடுகளை இழந்த மக்களுக்கு தமிழ்நாடு அரசே வீடு கட்டித் தர வேண்டும்.
5. நீர் நிலைகள் மற்றும் நீர் வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள விடுதிகள், நிறுவனங்கள், வீடுகள், வேளாண் நிலங்கள் இருப்பின் அவற்றை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும். வீடுகள் இழக்கும் ஏழைகளுக்கு பகுதிகளில் வீடு ஒதுக்கித் தரலாம்.
6. நீலகிரி மாவட்டத்தில் புதிய சுற்றுலா விடுதிகளுக்கோ, தோட்ட விரிவாக்கத்திற்கோ அனுமதி தரக்கூடாது.
7. பாதுகாக்கப்பட்ட நிலங்களாக உள்ள “பிரிவு 17” வகை நிலங்களில் பல்லாண்டுகளாக வாழ்ந்து வரும் சிறிய எண்ணிக்கையிலான மக்களுக்கு பட்டா வழங்குவதுடன், இவ்வகை நிலங்களை ஆக்கிரமித்துள்ள தனியார் நிறுவனங்களை அங்கிருந்து மாவட்ட நிர்வாகம் வெளியேற்ற வேண்டும்.
8. சாலை வளைவுகளில் நிலச்சரிவு ஏற்படாமல் தடுக்க, கான்க்ரீட் பலப்படுத்தும் முறைகளை மட்டும் கையாளாமல், மண்ணை இறுக்கமாக்கும் மரங்களை நட்டு வளர்க்கும் பணியையும் வனத்துறை மேற்கொள்ள வேண்டும்.
9. மலையையொட்டி சாய்வான பகுதிகளில் கட்டுமானங்கள் கட்டுவோர், சம உயர வரப்புகள் ஏற்படுத்தியே அதைச் செய்ய வேண்டும். அவ்வாறு கட்டாததால் நிலச்சரிவுக்கு வாய்ப்பு ஏற்படுகிறது. இவற்றை மாவட்ட நிர்வாகம் முறையாக ஆய்வு செய்து முறைப்படுத்த வேண்டும்.
10. வனப்பகுதிகளை ஒட்டியுள்ள நிலங்களில் வளர்ந்து வரும் சிகை, உண்ணி போன்ற களைத் தாவரங்களை அகற்றி, யானைகளுக்கான உணவாக உள்ள புற்களை வனத்துறையே நடவு செய்ய வேண்டும்.
11. நீலகிரி மாவட்டத்தில் கிடைத்த தொல்லியல் சான்றுகளையும், இம்மாவட்டத்தின் உயிர்ச்சூழல் முக்கியத்துவத்தையும் இம்மாவட்டப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கட்டாயப் பாடமாக வைத்து, வளரும் தலைமுறையினரிடம் இதைப் பாதுகாக்க வேண்டுமென்ற உணர்வை வளர்த்தெடுக்க வேண்டும்.
12. வரைமுறையற்ற முறையில் மேற்கொள்ளப்படும் சுற்றுலாவை வரம்புக்குள் கொண்டு வர, வடகிழக்கு மாநிலங்களில் உள்ளதைப் போல் உள் அனுமதிச் சீட்டு (Inner Line Permit) முறையைக் கொண்டு வர வேண்டும். நெகிழிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உறுதியுடன் செயல்படுத்த வேண்டும்.
13. நீலகிரிக்கு சுற்றுலா வரும் பொதுமக்கள், இப்பகுதியை சுற்றுலா மண்டலமாகப் பார்க்காமல் உயிர்ச்சூழல் மண்டலமாகப் பார்க்கும் பொறுப்புணர்வுடன் இங்கு வர வேண்டும்.
14. நீலகிரி மாவட்டத்திற்குள் மண்ணின் பழங்குடியினர், மலையகத் தமிழர்கள் உள்ளிட்ட பூர்வகுடி மக்கள் தவிர்த்து பிறர் இங்கே குடியேற நிரந்தரத் தடை விதிக்க வேண்டும்.
15. நீலகிரி பெருமழை பாதிப்புகளை சரி செய்ய 200 கோடி ரூபாய் வேண்டுமென தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்துள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களோ வெறும் 30 கோடி ரூபாய் தான் ஒதுக்கியுள்ளார். இந்தத் தொகை போதுமானதல்ல – கூடுதல் நிதி ஒதுக்குவதுடன், தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் வந்து பாதிப்புகளைப் பார்வையிட்டு துயர் துடைப்புப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
மேற்சொன்ன கோரிக்கை விரைந்து செயல்படுத்தினால், தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புகளிலிருந்து மட்டுமின்றி, எதிர்காலத்தில் ஏற்படவுள்ள சூழலியல் பேராபத்திலிருந்தும் நீலகிரி மலைமகளைப் பாதுகாக்கலாம்!
சூழலை - வனங்களைப் பாதுகாக்கும் பணியில் பொது மக்களையும் ஈடுபடுத்தும் வகையிலான முன்னெடுப்புகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். இந்நோக்கில், 1800களில் ஆங்கிலேய ஆட்சியாளர்களால் மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்டு உருவாக்கப்பட்ட “நீலகிரி சுற்றுச்சூழல் மற்றும் கானுயிர் சங்கம்” தனது பணியிலிருந்து விலகி நிற்பதை சென்னை உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. மாவட்ட ஆட்சியரே அதிலிருந்து விலகும் நிற்கும் அளவுக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகளின் “கேளிக்கை மன்றம்” போல் மாறி நிற்கும் அச்சங்கத்தை ஏன் கலைத்து விடக்கூடாது என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
எனவே, இதுபோல் இல்லாமல் அந்தந்த வட்டார அளவில் உள்ள பழங்குடியின மக்கள், பூர்வகுடிமக்கள், சூழலியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து புதிய சூழல் காப்பு தன்னார்வ அமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
தமிழ்த்தேசியப் பேரியக்கம் தன்னால் இயன்ற அளவில் மலைவாழ் மக்களுக்கான துயர் துடைப்புப் பணிகளில் ஈடுபடத் திட்டமிடப்பட்டுள்ளது! நீலகிரியைப் பாதுகாப்போம்!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=====================================

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT