உடனடிச்செய்திகள்
Showing posts with label தமிழீழ தேசிய மாவீரர் நாள். Show all posts
Showing posts with label தமிழீழ தேசிய மாவீரர் நாள். Show all posts

Thursday, November 30, 2017

உலகெங்கும் எழுச்சியுடன் நடந்த தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள்!

 
உலகெங்கும் எழுச்சியுடன் நடந்த தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள்!
தமிழீழ விடுதலைக்காக தன்னுயிரை ஈந்த விடுதலைப் போராட்ட ஈகியரான மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாள், “தமிழீழ தேசிய மாவீரர் நாள் - நவம்பர் 27” இவ்வாண்டு (2017), உலகெங்கும் இந்நாளை தமிழர்கள் எழுச்சியுடன் நினைவு கூர்ந்து, ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
 
தமிழீழத்தில்...

2009ஆம் ஆண்டு இனப்படுகொலைப் போருக்குப் பின்னர் தமிழீழத்தில் சிங்கள இராணுவத்தின் கெடுபிடி களாலும் தடைகளாலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்றன. ஆனால் இந்த ஆண்டு இராணுவத்தைப் பற்றி எந்த கவலையும் படாமல் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் சீரமைக்கப்பட்டு பெரும் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் கடைபிடிக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றுதிரண்டு, மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர். பிரிட்டன், பிரான்சு, கனடா என புலம் பெயர்ந்த தமிழீழ மக்கள் வாழும் நாடுகளிலும், உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்றன.
தமிழ்நாடெங்கும் பல்வேறு இடங்களில், பல்வேறு அமைப்புகள் சார்பில் வீரவணக்க நிகழ்வுகள் நடைபெற்றன.
 
ஓசூர் 

ஓசூரில், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில் சாந்திநகரில் நடைபெற்ற மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வை த.க.இ.பே. நடுவண் குழு உறுப்பினர் தோழர் செம்பரிதி நோக்கவுரையாற்றி ஒருங்கிணைத்தார். மின்விளக்குகள் அணைக்கப்பட்ட அரங்கில் அனைவரும் கையில் ஒளியேந்தி நிற்க, தோழர் முத்து மாவீரர் வீரவணக்கப் பாடலை உணர் வெழுச்சியுடன் பாடினார். தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமை செயற்குழு உறுப்பினர் தோழர் கோ. மாரிமுத்து, த.க.இ.பே. ஓசூர் செயலாளர் தோழர் முத்துவேலு, பேரியக்க நகரச் செயலாளர் தோழர் சுப்பிரமணியன், தொழிலாளர் பாதுகாப்புப் பேரவை தோழர் ரோம்லெஸ், பாவலர் குடந்தை மாறன், வள்ளுவர் இலக்கிய மன்ற பொறுப்பாளர் சிவந்தி அருணாச்சலம், தமிழக மாணவர் முன்னணி தோழர் ம.சு. தமிழ்மாறன், தமிழ்த் தேச குடியரசு இயக்க பொறுப்பாளர் தோழர் தமிழரசன், தொழில் முனைவோர் திரு. ஜெய்சன் உள்ளிட்டோர் வீரவணக்க உரையாற்றினர். முன்னதாக, இளம் தோழர் கோபி கவி படித்தார். தோழர் முத்து ஈழ எழுச்சிப் பாடல்களை நிகழ்வின் இடையிடையே பாடினார். த.க.இ.பே. பாவலர் நடவரசன் நிறைவுரையாற்றினார்.
 
குடந்தை

குடந்தை ஒன்றியம் புதுப்படையூரில் நடைபெற்ற மாவீரர் நிகழ்வுக்கு குடந்தை நகரச்செயலர் தோழர் ம. தமிழ்த்தேசியன் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் தோழர் க. தீந்தமிழன் முன்னிலை வகித்தார். தேவநேசன் மற்றும் மகளிர் ஆயம் தோழர் இளவரசி, மேரி மற்றும் மாணவ மாணவியர் திரளாக கலந்து கொண்டனர்.
 
திருச்சி

திருச்சியில், த.தே.பே. அலுவலகத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டத்திற்கு, மாநகரச் செயலாளர் தோழர் மூ.த. கவித்துவன் தலைமை தாங்கினார். பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் மாவீரர் ஈகச்சுடரேற்றி உரையாற்றினார். பொதுக்குழு உறுப்பினர் பாவலர் நா. இராசாரகுநாதன், ஜி.பி. பொறியியல் தொழிலா ளர்கள் சங்கம் திரு. மதியழகன், பேரியக்க தோழர்கள் தியாகராசன், இராமராசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
புதுச்சேரி

புதுச்சேரி வேல்ராம்பட்டில், தமிழீழ தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 26.11. 2017 அன்று குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகளும், 27.11.2017 மாவீரர் நாளன்று ஈகியர் வீரவணக்கமும் நடைபெற்றது. பேரியக்க புதுச்சேரி செயலாளர் தோழர் இரா. வேல்சாமி தலைமை தாங்கினார். பகுதி மக்களும், பேரியக்கத் தோழர்களும் பங்கேற்றனர்.
 
தருமபுரி

தருமபுரி தொலைப்பேசித் தொடர்பகம் அருகில் நடை பெற்ற மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வுக்கு, பேரியக்கச் செயலாளர் தோழர் க. விசயன் தலைமை தாங்கினார். திராவிடர் கழக மண்டலச் செயலாளர் தோழர் கரு.பாலன், பா.ம.க. திரு. சரவணன், விடுதலைச் சிறுத்தைகள் ஒன்றியச் செயலாளர் தோழர் குமார் உள்ளிட்ட பல்வேறு அமைப்பு உணர்வாளர்களும், முருகேசன், அன்பழகன் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்களும் பங்கேற்றனர்.
 
செங்கிப்பட்டி
 
தஞ்சை மாவட்டம் - செங்கிப்பட்டியில், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும், மரக்கன்றுகள் நட்டும் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் 63ஆவது பிறந்தநாள் 26.11.2017 அன்று கொண்டாடப்பட்டது. நிகழ்வுக்கு, பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் பி. தென்னவன் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரெ. கருணாநிதி, தோழர்கள் ஆ. தேவதாசு, பழ. மலைத்தேவன், பெ. ஆனந்த் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.
 
தஞ்சை

தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில், உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் நடைபெற்ற மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வுக்கு உ.தே.பே. தலைவர் திரு. பழ. நெடுமாறன் தலைமை தாங்கினார். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை வீரவணக்க முழக்கங்களை எழுப்ப, மாவீரர் நாள் ஈகச்சுடரேற்றம் நடைபெற்றது. பச்சைத் தமிழகம் கட்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு.ப. உதயகுமார், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. அயனாபுரம் சி. முருகேசன், திருவாரூர் அமைப்பாளர் மருத்துவர் இலரா. பாரதிச் செல்வன், பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
 
மதுரையில் தடை 

மதுரை - சிம்மக்கல் ஆறுமுச்சந்தியில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்ட ஏற்பாடுகள் செய்து வந்த நிலையில், முதலில் அனுமதி தந்த காவல்துறையினர் கடைசி நேரத்தில் திடீரென அனுமதி மறுத்தனர்.
 
தமிழீழ தேசிய மாவீரர்களுக்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் வீரவணக்கங்கள்!!!

தலைமைச் செயலகம், 
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT