உடனடிச்செய்திகள்
Showing posts with label பரப்புரை இயக்கம். Show all posts
Showing posts with label பரப்புரை இயக்கம். Show all posts

Sunday, October 13, 2019

"தமிழில் பெயர்ப் பலகைகளை வையுங்கள்!" வணிகர்களிடம் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் அரசாணை அளித்துப் பரப்புரை!


"தமிழில் பெயர்ப் பலகைகளை வையுங்கள்!" வணிகர்களிடம் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் அரசாணை அளித்துப் பரப்புரை!

தமிழ்நாட்டில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப் பலகைகளை வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஒரகடம் பகுதியில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.

பல்வேறு தமிழ் அறிஞர்கள் - தமிழ் அமைப்புகளின் வேண்டுகோளுக்கு இணங்க கடந்த 1982 ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் தமிழில் தங்கள் பெயர் பெயர்ப் பலகைகளை வைக்க வேண்டும் என அரசாணை வெளியிட்டது.

ஐந்து மடங்கு தமிழிலும், அதைவிட சிறிய அளவில் மூன்று மடங்கு அளவில் ஆங்கிலத்திலும், அதைவிட சிறிதாக இரண்டு பங்கு வேறு மொழிகளிலும் இருக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள அரசாணை எண் 575 (நாள் : 29.7.1982) தெரிவிக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் - ஒரகடத்தில் மிகப்பெருமளவில் வடமாநிலத்தவர்கள் குடியேறியுள்ள நிலையில், பல நிறுவனங்கள் தங்களுடைய பெயர் பலகையில் தமிழைக்கூட போடாமல் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயன்படுத்தி தங்கள் வணிக நிறுவனப் பெயர்களை வைத்துள்ளனர்.

இதனையடுத்து அந்தப் பகுதியில் விழிப்புணர்வு மேற்கொள்ள தமிழ்த்தேசியப் பேரியக்கம் திட்டமிட்டது. இதனடிப்படையில் இன்று காலை தமிழ்தேசியப் பேரியக்க தென்சென்னை கிளைச் செயலாளர் தோழர் ரமேசு தலைமையில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரா. இளங்குமரன், தென் சென்னை செயலாளர் தோழர் மு. கவியரசன், தோழர்கள் இரமேசு, பிரகாசுபாரதி, முத்துராமலிங்கம், பிரசாந்த், மா.வே. செம்மொழி உள்ளிட்ட தோழர்கள் இந்த பரப்புரையில் பங்கேற்று வீதி வீதியாக - கடை கடையாகச் சென்று தமிழில் பெயர் வைக்க கோரும் அரசாணை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

வணிகர்களிடம் தமிழில் பெயர்ப் பலகை வைக்கக் கோரும் அரசாணையை அளித்து, தங்கள் பெயர் பலகையை தமிழில் மாற்றுமாறு வேண்டுகோள் விடுத்தனர். பலர் இந்த வேண்டுகோளை ஏற்று தங்கள் நிறுவன பெயர்களை தமிழில் மாற்ற ஒப்புக் கொண்டனர். ஏற்கெனவே, தமிழில் பெயர்ப் பலகை வைத்திருந்த வணிகர்களை தோழர்கள் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Friday, March 22, 2019

அன்பார்ந்த தமிழின உணர்வாளர்களே.. வணக்கம்! உங்களுடன் ஒரு கருத்துப் பரிமாற்றம்! தோழர் பெ. மணியரசன்.

அன்பார்ந்த தமிழின உணர்வாளர்களே.. வணக்கம்! உங்களுடன் ஒரு கருத்துப் பரிமாற்றம்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் மடல்!


தேர்தலில் பங்கெடுக்காத - தேர்தல் வழியாகக் கிடைக்கும் அரசு அதிகாரத்தைப் பெற முயலாத தமிழ்த்தேசியப் பேரியக்கத்தினால் தமிழர்களுக்கு என்ன பயன்? இப்பேரியக்கத்தால் தமிழ்நாட்டுச் சிக்கல்களுக்குத் தீர்வு காண முடியுமா என்று இன உணர்வாளர்களில் சிலர் கேட்கிறார்கள்.

அவர்களுக்கும் அனைத்துத் தமிழர்களுக்கும் தெரிவிப்பதற்காக இந்த சிறு விளக்கத்தை அளிக்கிறேன்.

அறிவு, வீரம், அறம் மூன்றையும் கொண்டு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பார் போற்ற வாழ்ந்த தமிழினம் இன்று வீழ்ந்து கிடப்பதேன்?

நாம் வீழ்த்தப்பட்டோம். வீழ்த்தியோர் வெற்றிக் களிப்பில் கொக்கரிக்கிறார்கள்.

ஆரியத்திற்கும் இந்திக்கும் சமற்கிருதத்திற்கும் அடிமைகளாய் காலம் கழிக்கிறோம். வீரஞ்செறிந்த தமிழீழ விடுதலைப் போரையும் இந்தியாவின் துணையுடன் சிங்களக் கும்பல் குருதி வெள்ளத்தில் மூழ்கடித்தது.

வடவர் தங்களின் ஆதிக்கத்தின் அடையாளமாய் நம் மீது இந்தியைத் திணிக்கின்றனர். பன்னாட்டுக் கொள்ளை நிறுவனங்களும் தமிழ்நாட்டு மேட்டுக் குடிகளும் ஆங்கிலத்தைத் திணிக்கின்றன.

தமிழர்களின் தாயகமாகத் தமிழ்நாடு நீடிக்கக் கூடாது; அதனைக் கலப்பின மண்டலமாக மாற்ற வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் இந்திய அரசு வடமாநிலத்தவர்களையும், இதர வெளி மாநிலத்தவர்களையும் தமிழ்நாட்டில் குவிக்கிறது. இங்குள்ள இந்திய அரசு தொழிற்சாலைகள், நிறுவனங்கள், அலுவலகங்கள் அனைத்தும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே 100க்கு 95 வீதம் வேலைக்குச் சேர்க்கின்றன.

ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் வடநாட்டு மற்றும் பன்னாட்டுப் பெருங்குழும நிறுவனங்களின் வேட்டைக்கு ஏலம் விடுகிறது இந்தியா! தமிழ்நாட்டிலோ சிற்றதிகாரக் கேடர்களின் கங்காணி அரசியல்! இவற்றில் சில மாநிலக் கட்சிகள்; மற்றும் சில அனைத்திந்தியக் கட்சிகள். அனைத்தும் தமிழினத்தின் உரிமைகளை அடமானம் வைத்துப் பதவி அரசியல் நடத்துகின்றன அல்லது பாரத மாதா அரசியல் நடத்துகின்றன; தமிழ்நாட்டு உரிமை மீட்பு அரசியல் நடத்தவில்லை!

சட்டமன்றம் - நாடாளுமன்றம் தீர்வு தருமா?

1952 தொடங்கி எத்தனையோ தேர்தல்கள் - எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்து விட்டன. வெள்ளைக்காரன் ஆட்சியில் இருந்த உரிமைகளையும் விடுதலை பெற்ற இந்தியாவில் இழந்தது தான் மிச்சம்! தேர்தலும் சனநாயக வழியில் இல்லை. பெரும் பணக்காரர்களும் கார்ப்பரேட் நிறுவனங்களும் மட்டுமே தேர்தல் களத்தில் போட்டியிடும் நிலையை உருவாக்கிவிட்டனர். அத்துடன், தேர்தலில் சாதி முகாமையான பங்காற்றுகிறது.

தேர்தல் வேண்டாம் என்று சொல்லவில்லை. அது ஒரு சனநாயக உரிமை! ஆனால் சட்டப் பேரவையில் உறுப்பினர்கள் ஆவது, தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பது, மக்களவைக்கு உறுப்பினர்களை அனுப்புவது ஆகியவற்றின் வழியாக நம் உரிமைகளை மீட்கவும் முடியாது; காக்கவும் முடியாது என்பதே நடைமுறை உண்மை!

சட்டப்பேரவைக்கு இறையாண்மையுள்ள அதிகாரம் கிடையாது. இருந்த கொஞ்ச நஞ்ச அதிகாரங்களையும் இந்திய ஆட்சியாளர்கள் பறித்து - தில்லியில் குவித்து விட்டனர். கல்வி, நிலம், வேளாண்மை, மருத்துவம், விற்பனை வரி வசூலித்தல் போன்றவற்றில் மாநிலத்திற்கிருந்த உரிமைகளை அரசமைப்புச் சட்டத்திருத்தம் செய்தும், புதிய சட்டங்கள் இயற்றியும் நடுவண் அரசு பறித்து விட்டது. ஜி.எஸ்.டி. - நீட் போன்றவை இவற்றின் விளைவுகளே!

மாநிலங்களுக்கு உள்ள சில உரிமைகளையும் தமிழ்நாட்டிற்கு அனுமதிக்க மாட்டோம் என்கிறது இந்திய அரசு! காவிரி வழக்கில் - ஏழு தமிழர் விடுதலையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் செயலுக்கு வராமல் இந்திய அரசு தடை போடுகிறது. ஒருவகை இன ஒதுக்கலுக்கு (Apartheid) தமிழர்கள் உள்ளாகி இருக்கிறோம்.

நாடாளுமன்ற மக்களவையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 543. தமிழ்நாடும் புதுவையும் சேர்ந்து 40 உறுப்பினர்கள். எட்டுக் கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட நாம் செயற்கையாக சிறுபான்மை ஆக்கப்பட்டுள்ளோம். பல இனங்களைப் பீரங்கி முனையில் பிடித்து ஒன்றாகக் கட்டி வைத்து இந்தியா என்றது ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி! வடநாட்டு வாக்குச் சீட்டுப் பெரும்பான்மையைக் காட்டி - சனநாயகப் போர்வையில் ஆதிக்கச் சட்டங்கள் இயற்றி ஆங்கிலேயர் செய்த பேராதிக்கத்தை வடவர் ஆதிக்கமாக இந்திய ஏகாதிபத்தியம் மாற்றிக் கொண்டது. இந்தியை ஆட்சி மொழியாகக் கொண்ட வடமாநிலங்கள் பத்தின் மக்களவை உறுப்பினர்கள் 225 பேர்!

இலட்சியத் தமிழ்த்தேசியம்

“நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்” என்றார் நம் பேராசான் திருவள்ளுவர்.

சல்லிக்கட்டு உரிமையை மீட்க சட்டப்பேரவையில் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., ஆட்சிகள் மசோதாக்கள் நிறைவேற்றின. ஆனால் இந்திய அரசு ஒப்புதல் அளித்து அவற்றைச் சட்டமாக்க மறுத்தது. சென்னை கடற்கரையிலும் தமிழ்நாட்டின் பல நகரங்களிலும் இலட்சக்கணக்கில் கூடி இரவு பகலாய் அறப்போர் நடத்திய மக்கள் எழுச்சியால் சல்லிக்கட்டு உரிமைச் சட்டம் தில்லியில் கையெழுத்தானது. சட்டமன்றம் மசோதா மன்றம் ஆனது; மக்கள் மன்றம் சட்டம் இயற்றச் செய்தது! இது ஓர் எடுத்துக்காட்டு; இப்படியே எல்லாம் நடந்து விடும் என்று கூறவில்லை. இதைவிடக் கடுமையாகப் போராடித்தான் மற்ற பல உரிமைகளை மீட்க வேண்டும்.

சல்லிக்கட்டு எழுச்சி தன்னெழுச்சி! தலைமை அற்றது; காட்டாற்று வெள்ளம் போல் வந்து ஓடி வற்றுவது! தன்னெழுச்சிகளை மட்டுமே சார்ந்து இருக்கக் கூடாது. அந்த சல்லிக்கட்டு எழுச்சி போல், இன்ன பிற உரிமைகளுக்கு மக்களை வீதிக்குக் கொண்டு வரும் இயக்கம் தேவை.

அடிமைப்பட்ட தேசத்தின், ஒடுக்கப்பட்ட இனத்தின் உரிமைகளை மீட்க தேவையானவை மூன்று. ஒன்று சரியான இலட்சியம், இரண்டு அதற்குரிய தகுதியான - தன்னலமற்ற தலைமை, மூன்று அந்த இயக்கத்தில் மக்களின் பங்கேற்பு! இந்த மூன்றும் இணைந்து செயல்படும் போது, உள்நாட்டு நெருக்கடிகளும் பன்னாட்டு ஆதரவுச் சூழலும் உருவாகும் நிலையில் இலட்சியம் வெற்றி பெறும்! உலகெங்கும் நடந்த உரிமைப் போராட்டங்கள் வெற்றி பெற்ற வரலாறு இதுதான்!

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

தமிழ்நாட்டிற்குத் தமிழ்த்தேசிய இலட்சிய இயக்கம் தேவை. அந்த இலட்சிய இயக்கம் தான் தமிழ்த்தேசியப் பேரியக்கம்! பதவி, பணம், விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாதவர்களின் பாசறையாக இந்த இலட்சிய இயக்கம் செயல்படுகிறது.

“இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல்” என்ற குறளை எண்ணிப் பாருங்கள்! இன உணர்வாளர்களே முடிவெடுங்கள்! எழுந்து வரும் தமிழ்த்தேசிய உணர்வு காலப்போக்கில் திசை திரும்பி வீணாகிவிடக் கூடாது.

உறுப்பினராவீர்!

தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒரு சனநாயக இயக்கம்! கூட்டுத் தலைமையில் நம்பிக்கை உள்ள இயக்கம்! நம் இயக்கம் எவ்வளவு பெரியது என்பதை விடவும் நாம் எவ்வளவு பெரிய இனத்தின் அடையாளமாய் விளங்க வேண்டும் என்ற அக்கறை எங்களுக்கு இருக்கிறது. தமிழ் இனத்தின் அனைத்து ஆற்றல்களின் கொள்கலனாய் தமிழ்த்தேசியப் பேரியக்கம் செயல்பட வேண்டும் என்பது எமது திட்டம்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தில் உறுப்பினராய்ச் சேர வாருங்கள்; ஆதரவாளர்களாய் அணி திரளுங்கள்! உங்கள் ஊர்களில் இலட்சியத் தமிழ்த்தேசியத்திற்கான தொடக்கமாக தமிழ்த் தேசியப் பேரியக்கக் கிளைகள் தொடங்குங்கள். போராட்டக் களத்திற்கு வருவோர் வரலாம்; முடியாதவர்கள் பின்னணியில் நின்று செயலாற்றலாம். எந்த அளவில் எந்த வடிவத்தில் இந்த இயக்கத்திற்குப் பங்களிக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதை நீங்களே முடிவு செய்து செயல்படுங்கள்!

இந்த இயக்கத்தின் கருத்தியல் மற்றும் செயல்பாடு இரண்டினாலும் ஈர்க்கப்பட்ட பலர் முழுநேரச் செயல்பாட்டாளர்களாகப் பணியாற்றுகிறார்கள். மாதச் சம்பள வேலையை விட்டு விலகி தமிழ்த்தேசியப் பணிக்கு வந்தோரும் உள்ளனர்! “தமிழர் கண்ணோட்டம்” என்ற இதழையும் நடத்துகிறோம்!

நிதி தாரீர்!

உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் தமிழின உணர்வாளர்களும் கொடுக்கும் நன்கொடையில்தான் தமிழ்த்தேசியப் பேரியக்கம் செயல்படுகிறது. மனித உடல் இயங்கக் குருதி ஓட்டம் சீராக இருக்க வேண்டும். மக்கள் இயக்கம் செயல்பட நிதி வருவாய் சரியாக இருக்க வேண்டும். வருவாய் என்பது நன்கொடை வருவாய் தான்! அதுவும் நேர்மையான வழியில்தான் வர வேண்டும்.

“செய்க பொருளை செறுநர் செருக்கறுக்கும் எஃகு அதனின் கூரியது இல்” என்றார் திருவள்ளுவர். பகையை வெல்வதற்கு கூர்மையான ஆயுதத்தைவிட நிதி வளம் கூடுதல் முகாமையனது என்கிறார் திருவள்ளுவர். இது அரசுக்குக் கூறியது என்று மட்டும் புரிந்து கொள்ளாமல், இன உரிமை மீட்பு இயக்கத்திற்கும் பொருந்தும் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்த்தேசியப் பேரியக்கம் தமிழ்நாட்டிற்குத் தேவை; அது வளர வேண்டும் என்று கருதுவோர் உங்களால் முடிந்த நிதியளியுங்கள்! அதை, என் பெயரில் சென்னை கே.கே. நகர் கிளை - சிண்டிகேட் வங்கியில் உள்ள வங்கிக் கணக்கில்..
----------------------------------------------------------------
சேமிப்பு கணக்கு எண் : 60032010087176, 
கணக்குப் பெயர் : P. MANIARASAN, 
IFSC CODE : SYNB0006029, 
MICR NO : 600025028 
----------------------------------------------------------------
செலுத்துங்கள்!

இந்த வங்கிக் கணக்கு முழுக்க முழுக்க தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்ந்தது. எனது தனிப்பட்ட கணக்கு அல்ல.

நாம் புதிய வரலாற்றைப்  படைக்கும் காலத்தில் வாழ்கிறோம் என்ற உண்மையை உணர்ந்து ஒவ்வொருவரும் செயல்படுங்கள்!

நன்றி வணக்கம்!
அன்புடன்,
பெ. மணியரசன்
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Tuesday, August 15, 2017

"தமிழர் மீட்சி - இன முழக்கம்" தமிழ்நாடடெங்கும் பரப்புரை இயக்கம்!

"தமிழர் மீட்சி - இன முழக்கம்" தமிழ்நாடடெங்கும் பரப்புரை இயக்கம்!



 

பேரன்புடையீர், உங்களைத் தேடி வந்திருக்கிறோம்! “ஆதாயமில்லாமல் வருவீர்களா” என்று நீங்கள் நினைக்கலாம்! அரசியல் வாதிகள் உங்களுக்குத் தந்த அனுபவம் அவ்வாறு உள்ளது!
 
நாங்கள் எந்தப் பதவிக்கும் தேர்தலில் போட்டியிடு வதில்லை. எந்தத் தேர்தல் கூட்டணியிலும் சேர்வ தில்லை. வேறு வகையான எந்தப் பதவிக்கும் முயல்வ தில்லை. தன்னலப் பயன் கருதா தமிழர் பணி மற்றும் தமிழ்ப்பணி என்று செயல்படுகிறோம்!
 
தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தங்களுக்குள் போட்டுக் கொள்ளும் தன்னலப் பதவிச்சண்டையே தமிழ்நாட்டு அரசியல் என்று ஆகிவிட்டது. ஆனால், இந்திய அரசோ இந்தச் சண்டையைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டு உரிமைகளையும், தமிழர்களின் வாழ்வுரி மைகளையும் ஒவ்வொன்றாகப் பறித்துக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுக்கு அவ்வுரிமைகளைக் காப்பாற்றும் அக்கறையும் இல்லை; ஆற்றலும் இல்லை!
 
இந்தியாவை ஆளும் பாரதிய சனதாக் கட்சியோ, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வயிற்றில் அடித்து பெருங்குழும (கார்ப்பரேட்) முதலாளிகளைக் கொழுக்க வைக்கிறது. இட்லி, தோசைக்கு சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி.) போட்டு வசூலிக்கிறது! போர்டு, ஹூண்டாய், பாரத் பென்சு, மகேந்திரா, அசோக் லேலண்ட் போன்ற பெரும் பெரும் கார்ப்பரேட் முதலாளிகள் உற்பத்தி செய்யும் ஊர்திகளுக்கு இதுவரை வசூலிக்கப் பட்ட உற்பத்தி வரியை (எக்சைஸ்) நீக்கிவிட்டது. அவற்றிற்கான வரியை அவற்றை வாங்குபவர்கள் கட்டிக் கொள்ளட்டும் என்று கூறிவிட்டது!
 
ஏழை, நடுத்தர மக்கள் மானிய விலையில் பயன்படுத்தி வரும் சமையல் எரிவளி (கேஸ்) உருளைக்கு அளித்து வந்த மானியத்தை பா.ச.க. ஆட்சி முற்றாக நீக்கிவிட்டது. அதன்விலை கிடுகிடுவென்று உயரப் போகிறது! அத்துடன் ஞாயவிலைக் கடைகளை இழுத்து மூடும் திட்டத்தையும் இப்போது அறிவித்துள்ளது!
 
தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தின்படி படித்த தமிழ்நாட்டு மாணவர்கள், தமிழ்நாடு அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாதபடி, தில்லிப் பாடத்திட்டத்தில் (சி.பி.எஸ்.இ.) படித்த மாணவர்களுக்கு இடம்கொடுக்கும் வகையில் பா.ச.க. ஆட்சி “நீட்” தேர்வைப் புகுத்தியுள்ளது. தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் தமிழைப் புறக்கணித்து, ஆங்கில ஆதிக்கத்தை வளர்த்து வருகிறார்கள். இந்திய அரசோ இந்தியையும் சமற்கிருதத்தையும் தீவிரமாகத் திணிக்கிறது.
 
காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, தென்பெண்ணை போன்ற தமிழ்நாட்டு ஆறுகளின் உரிமைகளை அண்டை மாநிலங்கள் பறித்துக் கொள்ள இந்திய அரசு துணை செய்கிறது. கச்சத்தீவை இந்திய அரசு இலங்கைக்குக் கொடுத்ததால், ஏராளமான தமிழக மீனவர்களை சிங்களப்படை சுட்டுக் கொன்றது. இப்போதும் தமிழ் மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் சிங்களப்படை இலங்கைக்கு அன்றாடம் கடத்திக் கொண்டு போகிறது.
 
நெல், வாழை, கரும்பு, தென்னை, மஞ்சள் போன்றவை விளையும் வளமான நிலங்களில் பெட்ரோலியம், எரிவளி, மீத்தேன் உள்ளிட்ட ஐட்ரோ கார்பன் மற்றும் நிலக்கரி ஆகியவற்றை எடுக்க ஓ.என்.ஜி.சி.யையும், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களையும் களத்தில் இறக்கி விட்டுள்ளது இந்திய அரசு! தமிழ்நாடு அரசோ, தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளைக் காக்க முன்வராமல், வாழ்விற்காகப் போராடும் மக்கள் மீது காவல்துறை முற்றுகையையும், அடக்குமுறையையும் ஏவி விடுகிறது. அறப்போராட்டம் நடத்துவோரை சிறையிலடைக்கிறது!
 
பெண்களும், ஆண்களும் தங்கள் வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை நிரந்தரமாக மூடப் போராடுகிறார்கள். தமிழ்நாடு அரசோ அவர்கள் மீது காவல்துறையை ஏவித் தாக்குகிறது! புதிது புதிதாக டாஸ்மாக் கடைகளைத் திறக்கிறது! தமிழ்நாட்டின் பெரிய அரசியல் கட்சிகள் மேற்கண்ட போராட்டங்களைத் தாங்கள் முன்னெடுக்காமல், அப்போராட்டங்களை ஆதரிப்பதாக கூறிக்கொள்கின்றன.
 
இந்நிலையில்தான், தமிழ்நாட்டுத் தாயக உரிமைகளையும் தமிழர்களின் வாழ்வுரிமைகளையும் பாதுகாத்திட தமிழ்த்தேசியம் என்ற தத்துவச் சுடர் ஏந்தி, தமிழ்த்தேசியப் பேரியக்கம் மக்கள் போராட்டங்களுடன் தன்னை இணைத்துக் கொள்கிறது! அப்போராட்டங்களிடையே ஒருங்கிணைப்பை உருவாக்கவும், ஒட்டு மொத்தத் தமிழ்நாட்டின் எழுச்சியாக அவற்றைக் கொண்டு செல்லவும் திசைகாட்டுகிறது.
 
இது குறித்து உங்களுடன் உரையாட விரும்புகிறோம்!
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT