உடனடிச்செய்திகள்

Friday, February 28, 2020

தில்லி வன்முறைகளை பா.ச.க.வினர் தமிழ்நாட்டிலும் கட்டவிழ்த்துவிடும் அபாயமுள்ளது! தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! பெ. மணியரசன் அறிக்கை!


தில்லி வன்முறைகளை பா.ச.க.வினர்

தமிழ்நாட்டிலும் கட்டவிழ்த்துவிடும் அபாயமுள்ளது!
தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் அறிக்கை!


தில்லியில் கடந்த 23.02.2020 முதல் நடந்து கொண்டிருக்கும் மதப்படுகொலைகளும், மதக் கலவரங்களும், வீடுகள் – கடைகள் கொளுத்தப்படுவதும், தமிழ்நாட்டிலும் தொடங்கி விடுமோ என்ற அச்சம் பெருமளவுக்கு ஏற்பட்டுள்ளது.

குடியுரிமைத் திருத்தச் சட்டம், மக்கள் தொகைப் பதிவேடு, என்.ஆர்.சி. ஆகியவற்றில் இந்தியாவில் குடியுரிமைப் பதிவில் முதல் தடவையாக மதத்தை அடிப்படையாக்கி செயல்படுத்த உள்ளார்கள். பா.ச.க ஆட்சியினரின் இவ்வாறான இசுலாமிய எதிர்ப்பு - ஆரியத்துவா மதத் தீவிரவாதம் (இந்துத்துவா) ஆகியவற்றைக் கண்டித்து, அனைத்திந்தியா முழுவதும் இசுலாமிய மக்களும், இந்து சனநாயகவாதிகளும் சனநாயக வழியில் பெருந்திரள் போராட்டங்களை நடத்திக் கொண்டுள்ளனர்.

சனநாயக அடிப்படையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடி ஆட்சி, மக்களின் மாற்றுக் குரலுக்கு செவி கொடுத்து இணக்கமான தீர்வு காண முயற்சி எடுக்காமல், அரசதிகாரத்தைப் பயன்படுத்தி, மக்கள் போராட்டங்களை வன்முறை மூலம் முறியடிக்கும் சட்ட விரோதச் செயல்களில் இறங்கியுள்ளது.

இதன் தொடக்கமாக, இசுலாமிய மக்கள் அறவழியில் நடத்தும் காத்திருப்புப் போராட்டக் களங்களில் பா.ச.க.வினர் எதிர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வன்முறையில் ஈடுபட்டனர். கடந்த 23.02.2020 முதல் தில்லியில் பா.ச.க.வினரின் தூண்டுதலால் நடந்த வன்முறைகளில் சற்றொப்ப 40 பேர் கொல்லப்பட்டார்கள். இருநூறுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவ மனைகளில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

இந்த வன்முறையைத் தொடங்கி வைக்கும் வகையில் பா.ச.க.வின் நடுவண் அமைச்சர் அனுராக் தாக்குர், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடும் துரோகிகளை சுட்டுத் தள்ளுங்கள் என ஏற்கெனவே தில்லிப் பொதுக்கூட்டத்தில் பேசினார். பா.ச.க.வின் நாடாளுமன்ற உறுப்பினரான பர்வேஷ் வர்மா, “சாகின்பாக் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களைக் கொல்ல வேண்டும், முசுலிம் பெண்களை பாலியல் வன்முறை செய்ய வேண்டும்” என்று வெளிப்படையாகப் பேசினார். பா.ச.க.வின் தில்லி பகுதித் தலைவர்களில் ஒருவரான கபில் மிஸ்ரா, “சாகின்பாக் போராட்டக்காரர்களை வெளியேற்ற கெடு விதிக்கிறேன். அதற்குள் வெளியேற்றவில்லையென்றால், நாங்கள் மோதுவோம்! காவல்துறைக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம்” என்று வலைத்தளங்களில் எழுதினார். பா.ச.க. நடத்திய கண்டன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களில் பேசியோர் “துரோகிகளை சுட்டுத் தள்ளுங்கள்” என்ற முழக்கத்தைப் பொது முழக்கமாக்கினர்.

எனவே, பா.ச.க. தலைவர்கள் வெளிப்படையாகவே இந்த மதப்படுகொலைகளை – வன்முறைகளைத் தூண்டிவிட்டுள்ளனர். உண்மையான இந்தக் குற்றவாளிகள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை.

இந்த வன்முறையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு ஆணையிடுமாறு வேண்டுகோள் வைத்து, தில்லி உயர் நீதிமன்றத்தில் மனித உரிமை ஆர்வலர்கள் சிலர் வழக்குத் தொடுத்தார்கள். அந்த வழக்கை, 26.02.2020 அன்று தில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ். முரளிதர் மற்றும் தல்வந்த் சிங் ஆகியோர் அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதி முரளிதர், மேற்கண்ட மூன்று பேர் மீதும் ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என்று கேட்டு, கடுமையாக விமர்சித்தார். அந்த விசாரணையின்போதே, இந்திய அரசின் முதன்மை வழக்கறிஞர் (சொலிசிட்டர் ஜெனரல்) மேற்படி நீதிபதியின் அணுகுமுறையைக் கடுமையாக எதிர்த்தார்.

மேற்படி வன்முறைகளைத் தடுக்க – கட்டுப்படுத்த – குற்றங்களின் மீது தில்லி காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை மறுநாள் (27.02.2020) அறிக்கையாகக் கேட்டிருந்தார். இன்று விசாரணை தொடர இருந்தது. இதற்குத் தண்டனையாக, பா.ச.க. ஆட்சி 26.02.2020 அன்று இரவு மேற்படி நீதிபதி முரளிதர் அவர்களை தில்லியிலிருந்து பஞ்சாப் அரியானா உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்துள்ளது மோடி ஆட்சி! இந்தப் பழிவாங்கும் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி துணை போயுள்ளார்.

செர்மனியில் 1930களில் இட்லர் ஆட்சி நீதித்துறை, காவல்துறை, படைத்துறை அனைத்தையும் தன் கட்சியின் வன்முறைத் தொண்டர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததுபோல், தன் கட்சிக்காரர்களின் வன்முறைகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க முடியாதபடி தடை போட்டுள்ளது மோடி ஆட்சி. நீதிபதிகள் சட்டப்படி செயல்பட முடியாத பேராபத்து ஏற்பட்டுள்ளது.

அதே 26.02.2020 அன்று, தில்லி வன்முறைகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் நீதிபதிகள் எஸ்.கே. கவுல், ஜோசப் ஆகியோர் தில்லி வன்முறைகளை கண்டனம் செய்யும் தொனியிலும், காவல்துறையின் செயல்பாடுகளின் மீது அதிருப்தி தெரிவிக்கும் வகையிலும் பேசியதற்காக இந்திய அரசின் முதன்மை வழக்கறிஞர் துஷார் மேத்தா, “இப்படியெல்லாம் நீங்கள் பேசக்கூடாது” என்று எச்சரித்தார். குறிப்பாக, தில்லி வன்முறைகளை “துரதிர்ஷ்டமான (Unfortunate) நிகழ்வுகள்” என்று மேற்படி நீதிபதிகள் கூறியபோது, இந்த சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்று நீதிபதிகளுக்குக் கட்டளையிடும் தொனியில் துஷார் மேத்தா கூறினார்.

தில்லி மத வன்முறையில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மை எண்ணிக்கையில் முசுலிம்களும், சிறுபான்மை எண்ணிக்கையில் இந்துக்களும் இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமான இந்தப் படுகொலைகளுக்குப் பொறுப்பேற்க வேண்டியது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும், நாட்டின் தலைமையமைச்சர் நரேந்திர மோடியும் ஆவர். உள்துறை அமைச்சர் அமித்சா இந்த வன்முறைகளை ஏன் கண்டிக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. அமித்சா கண்டித்தால் அவரை, “நம்பிக்கைத் துரோகி” என்று தில்லி வன்முறையாளர்கள் சாடுவார்கள் அல்லவா?

தமிழ்நாட்டிற்கும் ஆபத்து
------------------------------------------
தில்லி வன்முறையைத் தமிழ்நாட்டில் அரங்கேற்றுவோம் என்று மறைமுகமாகவும், நேர்முகமாகவும் பா.ச.க.வின் தலைமைப் பொறுப்புகளில் உள்ள எச். இராசா உள்ளிட்ட சிலர் பொது மேடைகளில் பேசி வருகிறார்கள்; சமூக வலைத்தளங்களில் சவால் விட்டு எழுதுகிறார்கள். ஏற்கெனவே இவர்கள் தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பல்வேறு இந்து மத நிகழ்வுகளை வன்முறைக் கலவரங்களாக மாற்றியவர்கள்.

நாளைக்கு (28.02.2020) பா.ச.க.வினர் தமிழ்நாடு முழுவதும் நடத்தவுள்ள பேரணிகளின் மூலம் தமிழ்நாட்டின் எந்தெந்த பகுதிகளில் – என்னென்ன வழிகளில் வன்முறைகள் அரங்கேறுமோ என்று தமிழ்நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளார்கள். தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாக்க வேண்டிய முழுப் பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அ.இ.அ.தி.மு.க. ஆட்சி இவர்கள் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து, தமிழ்நாட்டில் அமைதியைப் பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9025162216, பகிரி : 7667077075
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Tuesday, February 18, 2020

தெய்வம் தீண்டாமொழியாம் தமிழ்! சீண்டுகிறார் தினமணி வைத்தியநாதன்! பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!



தெய்வம் தீண்டாமொழியாம் தமிழ்!
சீண்டுகிறார் தினமணி வைத்தியநாதன்!


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!



தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்திற்கும் நல்ல காலம் பிறந்திருக்கிறது என்றே தோன்றுகிறது. தமிழ் முகமூடி அணிந்து கொண்டு ஆரியம் பரப்பிய பலர் அம்முகமூடியைக் கழற்றி வைத்து விட்டு, அசல் முகத்துடன் தமிழை எதிர்க்க, தமிழர்களை எதிர்க்க முன்வந்துள்ளார்கள்.
இது கருதியே, தமிழுக்கும் தமிழர்களுக்கும் நல்ல காலம் பிறந்துள்ளது என்று கூறுகிறேன்.
தமிழ் முகமூடி சாகசக்காரர்களுள் மிகமிகத் தந்திரசாலி “தினமணி” ஆசிரியர் வைத்தியநாதன். அவர் தமது மூல மொழியான – சமற்கிருதம் தமிழ்க் கோயில்களிலிருந்து வெளியேற்றப்படும் – காலம் தொடங்கிவிட்டதைப் பார்த்து மிகவும் பதறிப் போய் இருக்கிறார்.
மரபுப் பெருமை மிக்க ஒரு நாளிதழின் ஆசிரியர் என்ற அந்தத் தகுதியையும் மறந்துவிட்டு, எச். இராசாவின் தரத்துக்கு இறங்கி ஆசிரியவுரை ஒன்று 04.02.2020 அன்று எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டு இதழியல் துறையில் தனித்தடம் பதித்த மாபெரும் ஆளுமைகளான டி.எஸ். சொக்கலிங்கம், ஏ.என். சிவராமன், ஐராவதம் மகாதேவன், இராம சம்பந்தம் போன்ற பெருமக்கள் அணிசெய்த தினமணி ஆசிரியர் இருக்கையில் வைத்தியநாதன் அமர்ந்துள்ளார்.
ஆரிய ஆதிக்கத்தின் அச்சாணி வேத வைதிக சனாதன ஆன்மிகம்! தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கைத் (05.02.2020) தமிழ் மந்திரங்கள் ஓதி நடத்த வேண்டும், சமற்கிருத மந்திரங்களைச் சொல்லி நடத்தக்கூடாது என்ற குரல் இந்தத் தடவை ஓங்கி ஒலித்தது. உள்நாட்டுத் தமிழர் மட்டுமின்றி, உலகெங்கும் வாழும் தமிழர்கள் ஒட்டுமொத்தமாகப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கைத் தமிழ் வழியில் நடத்திட ஓங்கிக் குரல் கொடுத்தார்கள்.
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மற்ற நண்பர்களும் நாமும் தமிழ்வழிக் குடமுழுக்கு கோரிப் போட்ட வழக்கில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை நீதிமன்றத்திற்கு அளித்த உறுதிமொழி வைத்தியநாதன் போன்றோர் வயிற்றை மிகவும் கலக்கி விட்டது. தமிழும் சமற்கிருதமும் சம அளவில் பெருவுடையார் கோயில் குடமுழுக்கில் கடைபிடிக்கப்படும் என்று அறநிலையத்துறையும் தஞ்சை அரண்மனைத் தேவத்தானமும் மதுரை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்தன. இந்த உறுதிமொழியை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமியும், இரவீந்திரனும் இதைச் செயல்படுத்திக் காட்டிவிட்டு, செயலாக்க அறிக்கையை, குடமுழுக்கு நிறைவு பெற்றபின் நான்கு வாரங்களுக்குள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று தங்கள் தீர்ப்பில் நிபந்தனை போட்டிருந்தார்கள்.
“அண்ணா தி.மு.க. ஆட்சியிலா, சமற்கிருதத்தின் ஆதிக்கத்திற்கு சரிவு ஏற்பட்டிருக்கிறது” என்று ஆரியம் அதிர்ச்சியடைந்துள்ளது; ஆசாபங்கம் ஏற்பட்டு அலறுகிறது.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கைத் தமிழ்வழியில் மட்டுமே நடத்த வேண்டும் என்று 28.12.2019 அன்று தஞ்சையில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் முடிவு செய்தோம். அதற்கான வேண்டுகோள் மாநாட்டைத் தஞ்சையில் 22.01.2020 அன்று நடத்துவது என்றும் முடிவு செய்தோம். அம்மாநாட்டை வாழ்த்தியும் தமிழ்க் குடமுழுக்கை வலியுறுத்தியும் தி.மு.க., ம.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகியவை உடனடியாக அறிக்கை வெளியிட்டன. மேலும், காங்கிரசு, சி.பி.எம்., சி.பி.ஐ., பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள், தமிழர் தேசிய முன்னணி முதலிய கட்சிகள் தமிழ்வழிக் குடமுழுக்கு கோரி அறிக்கை வெளியிட்டன.
எச். இராசா - வைத்தியநாதன் போன்ற ஆரியத்துவா அறிவாளிகள் திகைத்துப் போனார்கள். “தமிழ்நாட்டிற்குப் பயித்தியம் பிடித்துவிட்டதா? தமிழ்த்தேசியவாதிகள், திராவிடவாதிகள், இந்தியத்தேசிய வாதிகள், அதிலும் பொதுவுடைமைவாதிகள் அத்தனை பேரும் “தமிழர்” என்ற ஒற்றைப் புள்ளியில் இணைந்து, ஒற்றைக் குரலில் தமிழ்வழிக் குடமுழுக்கு கோருகிறார்களே! தமிழ் இன முழக்கம், தமிழ் மொழி முழக்கம் புதிய வலுப் பெற்றுள்ளதே!” என்று பொங்கிப் பொங்கி அவர்களுக்குப் பயித்தியம் பிடித்துவிட்டது. தமிழ் மொழியின் பேராற்றல் அவர்களை அச்சுறுத்தியது.
“ஆலயங்களில் தமிழ்வழிக் குடமுழுக்கு என்பதற்கு வரலாற்றுச் சான்று இல்லை. கல்வெட்டோ, செப்பேடோ, ஓலைச் சுவடியோ, ஆவணங்களோ, பிரபந்த அங்கீகாரமோ எதுவுமே இல்லை” என்று ஆசிரியவுரையில் தினமணி வைத்தியநாதன் கூறுகிறார்.
சமற்கிருதத்தில்தான் குடமுழுக்கு நடைபெற வேண்டுமென்று கல்வெட்டு கூறுகிறதா? செப்பேடோ, பழைய ஆவணமோ செப்புகிறதா? இல்லை!
அக்ரகாரம்தான் அர்ச்சனைப் பூசை செய்ய வேண்டுமென்று ஆகமம் கூறுகிறதா? எந்த ஆகமம் அவ்வாறு கூறுகிறது? என்றைக்காவது ஆகம மேற்கோள் காட்டியிருக்கிறார்களா?
தஞ்சைப் பெருவுடையார் கோயில் மகுட ஆகமப்படி கட்டப்பட்டது. அந்த மகுட ஆகமத்தில், பிராமணர்களைக் கொண்டு வடமொழயில்தான் பெருவுடையாருக்கு பூசை செய்ய வேண்டும், குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று எங்காவது கூறப்பட்டிருக்கிறதா? தினமணி வைத்தியநாதன் மகுட ஆகமத்திலிருந்து சான்று காட்டினாரா? இனியாவது சான்று காட்டுவாரா? அவரால் சான்று காட்ட முடியாது!
உச்ச நீதிமன்றமே கூறிவிட்டது; இன்ன சாதியினர்தான், இன்ன மொழியில்தான் பூசை நடத்த வண்டும் என்று எந்த ஆகமமும் முன் நிபந்தனை விதிக்கவில்லை என்று உச்ச நீதிமன்றமே கூறிவிட்டது (16.12.2015).
தமிழர்களாகிய நாங்கள், எங்கள் தெய்வங்களுக்குத் தமிழ் மந்திரம் ஓதி பூசை செய்ய, குடமுழுக்கு நடத்த சான்று காட்ட வேண்டும் என்று கொக்கரிக்கின்ற வைத்தியநாதன் வகையறா, தமிழ்க் கோயில்களில் தாங்கள் நாட்டாமை செய்வதற்கு வரலாற்றுச் சான்று காட்டுகின்றனரா?
சமற்கிருதம் மட்டுமே அர்ச்சனை மொழியாக இருக்க வேண்டும், பிராமணர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக இருக்க வேண்டும் என்பதற்கெல்லாம் கல்வெட்டு, செப்பேட்டுச் சான்று காட்ட வேண்டிய தேவை இல்லை என்று கருதுகிறார்கள். அவர்களின் பிராமணப் பிறப்பே சான்று என்ற ஆணவ ஆதிக்கம், திமிர்தானே இதற்கெல்லாம் அடிப்படை!
“நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப”
என்று நம் தொல்காப்பியம் தமிழ் மந்திரம் பற்றிக் கூறுகிறது!

“கடவுள் ஏற்பு, மறுப்புப் பிரச்சினையல்ல. மொழிப் பிரச்சினை” என்கிறார்கள், ஆகமவழி குடமுழுக்கு எதிர்ப்பாளர்கள். சரி, ஏற்றுக் கொள்வோம். அப்படியானால், தமிழகத்திலுள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் தமிழில் மட்டும்தான் வழிபாடு நடத்தப்பட வேண்டும் என்று தமிழ் உணர்வாளர்களான இவர்கள் வலியுறுத்த முன்வர வேண்டும். ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே குறிவைத்து நடத்தப்படும் இவர்களது தாக்குதலில் இருக்கும் பின்னணி மொழி உணர்வு அல்ல; ஹிந்து மத எதிர்ப்பு என்பது வெளிப்படுகிறது” என்கிறார் தினமணி வைத்தியநாதன்.
பெருவுடையார் கோயிலில் “நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!” என்ற மாணிக்கவாசகரின் போற்றி மந்திரத்தைச் சொல்லி – பூசை செய்யுமாறு கோருகிறோம். இப்படிச் சொன்னால், இது இந்து மத எதிர்ப்பு என்கிறார் வைத்தியநாதன்.
தேவாரம் பாடிய திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும், சுந்தரரும், திருமந்திரம் தந்த திருமூலரும், திருவிசைப்பா வழங்கிய கருவூராரும், திவ்வியப்பிரபந்தம் படைத்த ஆழ்வார்களும் இந்துமத எதிர்ப்பாளர்களா? வைத்தியநாதன் வகையறாக்களின் வாதப்படி பார்த்தால், சிவநெறி – திருமால் நெறிச் சான்றோர்கள் – பெருமக்கள், தமிழில் தந்த தெய்விகப் பாடல்களும் மந்திரங்களும் இந்து மத எதிர்ப்புப் பாடல்களாக அல்லவா ஆகிவிடும்!
அடுத்த வினா, இந்து மதத்திற்கு வாத்தியார் வேலை பார்க்கும் பொறுப்பை வேத ஸ்மார்த்த பிராமணர்களுக்கு வழங்கியவர்கள் யார்? அதை மட்டுமாவது அடுத்த ஒரு கட்டுரையில் வைத்தியநாதன் விளக்க வேண்டும்.
“ஐயர்” என்றும், “பார்ப்பார்” என்றும் “அந்தணர்” என்றும், தமிழ் இன ஆன்மிகச் சான்றோர்களுக்கு வழங்கப்பட்டிருந்த மரபுவழிச் சிறப்புப் பெயர்களை வடக்கே இருந்து வந்த வேத பிராமண ஸ்மார்த்தர்கள் தங்களுக்குச் சூட்டி வேடம் புனைந்து கொண்டு, தமிழ்நாட்டில் திரிபு வேலை செய்தார்கள். இந்த பிராமணப் புனைவுகளை மறைமலை அடிகளார், கா.சு. பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், தேவநேயப் பாவாணர் போன்ற தமிழ் மூதறிஞர்கள் விளக்கியுள்ளார்கள்.
கிறித்துவம் பரப்புவதற்காக வெளிநாடுகளிலிருந்து வந்த ஆன்மிகர்கள், தங்கள் பெயரை தமிழ் மரபுப்படி மாற்றிக் கொண்டார்கள். எடுத்துக்காட்டாக, போப் ஐயர், கால்டுவெல் ஐயர்! கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி என்ற பாதிரியார் வீரமாமுனிவர் என்றே தமிழர் ஆன்மிக மரபுப்படி பெயர் மாற்றிக் கொண்டார். அவ்வாறு தமிழர் மரபுப்படி பெயர் மாற்றிக் கொண்ட ஐரோப்பிய பாதிரியார்கள், வர்ணசாதிப் பிளவுகளை உருவாக்கவில்லை.
ஆனால், வடபுலத்திலிருந்து தமிழ் மண்ணிற்கு வந்த ஆரிய பிராமணர்கள், தமிழ்ச் சான்றோர்களின் சிறப்புப் பெயர்களான ஐயர், பார்ப்பார், அந்தணர் என்ற பெயர்களைத் தங்களுக்குச் சூட்டிக் கொண்டு, தமிழர்களைச் சூத்திரர்கள் என்றும், பஞ்சமர்கள் என்றும் கூறி, பிறப்பை வைத்து இழிவு கற்பித்தார்கள். தமிழர்களுக்குள் சூழ்ச்சியாக உயர்வு தாழ்வு கற்பித்து, இன ஒற்றுமையைச் சீர்குலைத்தார்கள்.
பிராமண வகுப்பில் பிறந்து, வர்ணாசிரமத்தை மறுத்து, சாதி ஏற்றத்தாழ்வைக் கைவிட்டு, மனித சமத்துவத்திற்குப் பாடுபட்ட சான்றோர்கள், நேர்மையாளர்கள் அந்தக் காலத்திலும் இருந்தார்கள்; இந்தக் காலத்திலும் இருக்கிறார்கள்.
பிராமண வகுப்பில் பிறந்த திருஞானசம்பந்தர் ஒடுக்கப்பட்ட வகுப்பில் பிறந்த திருநீலகண்ட யாழ்ப்பாணருடன் சமநிலை நட்பு பூண்டொழுகினார். பிற்காலத்தில் மகளுக்கு மறுமணம் செய்து வைத்த இதழாளர் ஜி. சுப்பிரமணிய அய்யர், மதுரைக் கோயில் நுழைவுப் போராட்டம் நடத்திய வைத்தியநாதய்யர், அறிஞர் அண்ணாவால் அக்கிரகாரத்து அதிசய மனிதர் என்று போற்றப்பட்ட வ.ரா., கம்யூனிஸ்ட்டுத் தலைவர்களான ஏ.எஸ்.கே. அய்யங்கார், ஏ. பாலசுப்பிரமணியம், முரசொலி சின்னக்குத்தூசி என எத்தனை எத்தனை பெருமக்கள்! ஆனால், இவர்கள் எல்லாம் வர்ணாசிரமப் பிராமணர்களின் – வைதிகப் பிராமணர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது மிகமிகச் சிறு எண்ணிக்கையினர்!
பிராமண வகுப்பில் பிறந்த பெரும்பாவலர் பாரதியார் பிராமண ஆதிக்கக் கொடுமைகளை எதிர்த்து ஆவேசமாகப் பாடல்கள் தந்தவர். பூணூலைக் கழற்றி எறிந்து சமத்துவம் பேசியவர். கனகலிங்கம் என்ற ஒடுக்கப்பட்ட வகுப்பு இளைஞரைத் தம் இல்லத்தில் சேர்த்து வைத்துக் கொண்டார். “நந்தனைப் போல் ஒரு பார்ப்பானை இந்த நானிலத்தில் கண்டதுண்டோ” என்று பாடினார். அந்தப் பாரதியாரைப் பெரும்பாலான பிராமணர்கள் ஒதுக்கி வைத்தனர். புதுச்சேரியிலிருந்து வந்து மாமனார் ஊரான கடையத்தில் தங்கிய போது, பாரதியாரை அக்ரகாரத்திற்குள் அனுமதிக்க மறுத்தனர் பிராமணர்கள். அக்ரகாரத்திற்கு வெளியே உள்ள பிள்ளையார் கோயிலில் பாரதியார் தங்க நேர்ந்ததும் உண்டு!
சமூகத்தில் மற்ற எல்லாரையும்விட தாங்களே உயர்வானவர்கள்; தலைமையானவர்கள், மற்ற அனைவரும் தங்களுக்குக் கீழ்ப்பட்டவர்கள், தங்களுக்கு சேவை செய்யப் பிறந்தவர்கள் என்ற கற்பிதத்தை, தங்களின் மேலாதிக்கத்தை உருவாக்கிக் கொள்ள பிராமணர்கள் பயன்படுத்திய மொழி சமற்கிருதம் - சமற்கிருத வேதங்கள், உபநிஷத்துகள் – சமற்கிருதப் புராணங்கள்! ஏகலைவனின் கட்டை விரலைக் காணிக்கையாக வாங்கியது, தவம் செய்த சம்பூகனின் தலையை வெட்டியது போன்ற சமற்கிருதக் கதைகள் ஏராளம். சமற்கிருதம் தேவமொழி என்று கயிறு திரித்தனர்; தமிழ் நீச மொழி என்று இழிவுபடுத்தினர். இந்த வஞ்சகத் தந்திரங்களை – வடமொழி மூலம் செயல்படுத்தித்தான் தமிழர்களை பிராமணர்கள் இழிவுபடுத்தினார்கள்.
இன்று தமிழ்நாட்டில் தெய்வங்கள் முன் ஒலிக்கக் கூடாத நீசமொழி – தீண்டாமொழி தமிழ் என்றுதான் தினமணி வைத்தியநாதன், பா.ச.க.வின் எச். இராசா போன்றவர்கள் குதிக்கிறார்கள்; கொதிக்கிறார்கள்!
இந்து மதம் என்ற பெயர் வெள்ளையர் ஆட்சி வழங்கிய பெயர். அப்பெயர் பிராமணர்கள் உருவாக்கியதில்லை. சமற்கிருத வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள் எதிலும் இந்து மதம் என்ற பெயர் கிடையாது. அதேபோல் தமிழ் மொழியிலும் பழங்காலத்தில் இந்து மதம் என்ற பெயர் கிடையாது.
இந்து மதத்திற்குத் தாங்கள்தாம் தலைவர்கள், தாங்கள்தாம் ஆண்டவனின் அந்தரங்கச் செயலாளர்கள் என்பதுபோல் பிராமணர்கள் உரிமை கொண்டாட இந்து மதத்தில் எங்கேனும் விதிகள் இருக்கின்றனவா? இல்லை! இந்து மதத்திற்கு ஒற்றைத் தலைமைத் தெய்வம் இல்லை; ஒற்றைப் புனித நூல் இல்லை. ஒற்றைத் தலைமை பீடம் இல்லை. பலவகைத் தெய்வங்கள், பலவகைப் புனித நூல்கள், பல வகை வழிபாட்டு முறைகள், பல வகை இனங்கள், பல வகை மொழிகள் இருக்கின்றன. இந்து மத நூல்களில் வர்ணசாதி கருத்துகளும், உயர்வு தாழ்வும் இருக்கின்றன. அதேபோல், வர்ணசாதி, உயர்வு தாழ்வு எதிர்ப்புக் கருத்துகளும் இருக்கின்றன.
கடவுள் மறுப்பாளரைக் கூட இந்து மதத்திலிருந்து நீக்குவதற்கு வைத்தியநாதன் வகையறாவுக்கோ அல்லது வேறு எந்த இந்து மதத்தின் எந்தப் பிரிவு பீடத்திற்குமோ, அதிகாரம் இல்லை. தமிழ் நாத்திகர்களை மட்டுமல்ல, சமற்கிருத நாத்திகர்களையும் அக்ரகாரம் மத நீக்கம் செய்ய முடியாது. “லோகாய்தவாதம்” என்ற கடவுள் மறுப்புக் கோட்பாடு சமற்கிருத மொழியிலும் உண்டு!
தமிழ்த்தேசியப் பேரியக்கம் கடவுள் ஏற்பாளர்களையும், கடவுள் மறுப்பாளர்களையும் கொண்டது. இந்து மதம் – தமிழர்களின் மதம் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் தமிழர்களின் மதங்களாக இந்து மதம், முசுலிம் மதம், கிறித்தவ மதம் ஆகியவை இருக்கின்றன. சிறு எண்ணிக்கையில் சமண, பௌத்தர்களும் தமிழர்களில் இருக்கிறார்கள்.
தமிழர் தெய்வத்திற்குத் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று நாங்கள் குரல் எழுப்பினால், எங்களை இந்து விரோதிகள் என்று கூறுவதற்கு எச். இராசா – வைத்தியநாதன் வகையறாக்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? என்ன உரிமை இருக்கிறது? தமிழில் குடமுழுக்கு நடத்தக் கூடாது என்று கூக்குரலிடுகின்ற எச். இராசா – தினமணி வைத்தியநாதன் போன்றோர் தமிழ் விரோதிகள்! இன்னொரு வகையில் இந்து மத வளர்ச்சிக்கும் விரிவாக்கத்திற்கும் தடையாய் உள்ள இந்து விரோதிகள்! மறைமுகமாக மாற்று மத வளர்ச்சிக்குத் துணை போகிற இந்துமதத் துரோகிகள்! ஆரிய ஆதிக்கவாதக் குறுங்குழுவினர்!
ஐரோப்பாவில் கிறித்துவ மதத்தைக் கருவியாக வைத்துக் கொண்டு, ரோமாபுரிப் போப்பரசர்கள் எதேச்சாதிகாரம் செய்தார்கள். இலத்தீன் மொழியில் மட்டுமே தேவாலயங்களில் வழிபாடு நடத்த வேண்டும் என்றார்கள். ரோமாபுரிப் போப்பரசர்களின் பிடியிலிருந்து ஒவ்வொரு நாடாக விடுதலை அடைந்தது. ஆனாலும் இலத்தீன் அந்தந்த நாட்டு மேட்டுக் குடிகளின் ஆதிக்கத்திற்கான கருவியாகத் தொடர்ந்தது. இங்கிலாந்தில் நீதிமன்றங்களில், அரசு அலுவலகங்களில் ஆங்கிலத்தில் பேசினால் தண்டித்தார்கள். மறுமலர்ச்சிக் கால வளர்ச்சிக்குப் பின், இலத்தீன் நீக்கப்பட்டு அவரவர் தாய்மொழி ஐரோப்பிய நாடுகளில் ஆட்சிமொழியானது.
கடைசியாகக் கிறித்துவத் தேவாலயங்களில் அவரவர் தாய்மொழியில் தொழுகை நடத்தலாம் என்ற ஆணையை 1960களில் போப்பரசர் நிர்வாகமே பிறப்பித்தது. அவ்வாறான சீர்திருத்தம் – இந்துக் கோயில்களில் இருந்து சமற்கிருதத்தை நீக்கும் மறுமலர்ச்சி தமிழ்நாட்டில் தேவைப்படுகிறது. சமற்கிருத ஆதிக்கம் என்பது ஆரிய பிராமண சமூக ஆதிக்கத்தின் வடிவமாகும்!
தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழ்ப் புறக்கணிக்கப்படுகிறது என்று கூறுவது திராவிட இயக்கத்தினரின் அப்பட்டமான பொய் என்று சத்தியமூர்த்தியான தினமணி வைத்தியநாதன் கூறுகிறார். தேவாரம், திருவாசகம், பிரபந்தங்கள், திருப்பாவை போன்றவை சிவ – வைணவக் கோயில்களில் ஓதப்படுகின்றன என்கிறார்.
அவர் வாதப்படி சிவநெறி, திருமால்நெறி தமிழ் மந்திரப் பாடல்கள் தமிழ்நாட்டுக் கோயில்களில் ஓதப்படும்போது, தமிழ்வழியில் குடமுழுக்கு நடத்தக் கூடாது என்று வைத்தியநாதன் ஆசிரியவுரை எழுதியது ஏன்? ஏன் இந்தத் தன் முரண்பாடு? திருடன் ஏதாவது தடயம் விட்டுச் செல்வான் என்பதுபோல், வைத்தியநாதன் இந்தத் தருக்கத்தில் தமிழுக்கெதிரான தனது தடயத்தை விட்டுச் சென்றுள்ளார்!
கருவறைக்கு வெளியேயும், கோயில் குடமுழுக்குக் கலசத்திற்கு அப்பாலும், சைவ – வைணவப் பாடல்களைப் பாடிக் கொள்ளுங்கள்; கருவறைக்குள் – கலச நீராட்டில் “நீச பாஷை”யான தமிழை அனுமதிக்க முடியாது என்பதுதான் தினமணி வைத்தியநாதன் கூற வரும் வர்ணாசிரமவாதம்!
இந்த அந்தரங்க இலட்சியத்தை மூடி மறைத்து பூ சுற்றுகிறார் வைத்தியநாதன். ஆகமம் – மரபு ஆகியவை அரசமைப்புச் சட்டம் வழங்கும் மனித சமத்துவத்திற்கு எதிராக இருந்தால், அவற்றைக் கடைபிடிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் 2015 திசம்பரில் வழங்கிய தீர்ப்பு உள்பட பல தீர்ப்புகளில் ஏற்கெனவே உறுதி செய்துள்ளது.
இந்துத் தமிழ்க் கோயில்களில் ஸ்மார்த்த பிராமணர்கள் கருவறைக்குள் நுழையக் கூடாது; கொடிக் கம்பம் தாண்டிக் கோயிலுக்குள் வரக் கூடாது என்று ஆகமங்கள் கூறுவதாக ஐயா சத்தியவேல் முருகனார் கூறுகிறார். ஆனால், ஆரிய பிராமணர்களோ கருவறைக்குள் தமிழ் நுழையக் கூடாது என்கிறார்கள்! என்ன கொடுமை! தென்னாப்பிரக்காவில் குடியேறிய வெள்ளை இனத்தவர்கள், மண்ணின் மக்களாகிய கருப்பின மக்களை இன ஒதுக்கல் செய்த கொடுமை போல் அல்லவா இருக்கிறது! இங்கேயும் நெல்சன் மண்டேலாக்கள் தேவை!
தமிழர்களின் வற்புறுத்தலால் தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தத் தமிழ்நாடு அரசு ஒத்துக் கொண்டது குற்றம் என்கிறார் வைத்தியநாதன். “இதை பெரிய கோயில் எழுப்பிய “ஸ்ரீ ராஜராஜ தேவர்” ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்” என்று தமது ஆசிரியவுரையை முடித்துள்ளார் வைத்தியநாதன். ஆரிய சூழ்ச்சியின் “அழகை”ப் பாருங்கள்! “அழகாக முடிச்சவிழ்த்தால் அனுமதிப்பார் உண்டோ” என்று ஆரிய சூழ்ச்சி பற்றி அன்று பாடினார் நம் பாவேந்தர்! இன்றும் அது பொருந்துகிறது!
சிதம்பரம் தீட்சிதர்கள் தமிழ் அழிப்பு நோக்கத்தோடு மறைத்து வைத்திருந்த, தேவாரத்தை மீட்டுக் கொண்டு வந்த தமிழ்ப் பேரரசன், திருமுறைகளை முதல் முதலாகத் தொகுத்து, “திருமுறை கண்ட சோழன்” என்று சிறப்புப் பட்டம் பெற்ற தமிழ் வேந்தன், தஞ்சைப் பெருவுடையார் கோயிலை எழுப்பி அங்கு பூசை செய்வோர் குழுவை உருவாக்கி அதற்குப் பவனப்பிடாரன் என்ற தமிழ் இனச் சான்றோரை தலைவராக அமர்த்திய சோழப் பேரரசன், தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்கென்று தமிழ் மந்திரங்கள் ஓதுவார் 48 பேரை அமர்த்திய தமிழ் மாமன்னன் இராசராசன், தமிழில் குடமுழுக்கு நடந்தபோது துயரப்பட்டிருப்பாராம்! பொய் சொல்ல அஞ்சாதே என்பது ஆரியப் பொன்மொழி!
கொம்புத்தேன் கசக்கிறது என்று கொடிய மனத்தோர் கூறுகின்றனர்; கோபுரக் கலசத்தில் தமிழ் ஒலித்து, தமிழன் ஒருவன் குடம் கவிழ்த்து நீராட்டிய போது, கூடி நின்ற இலட்சக்கணக்கான மக்கள் கடல் அலையென ஆர்ப்பரித்து கையொலி எழுப்பினர். அப்போது, அந்த ஒவ்வொரு தமிழனிலும், தமிழச்சியிலும் பேரரசன் இராசராசன் மறுபிறப்பு கண்டான்!


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்


பேச: 9025162216, பகிரி : 7667077075
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Thursday, February 13, 2020

முதலமைச்சர் தொடங்கி வைத்த டயர் தொழிற்சாலையில் தமிழர்களுக்கு எத்தனை சதவீதம் வேலை கிடைத்தது? பெ. மணியரசன் அறிக்கை!


முதலமைச்சர் தொடங்கி வைத்த டயர்
தொழிற்சாலையில் தமிழர்களுக்கு
எத்தனை சதவீதம் வேலை கிடைத்தது?

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்

பெ. மணியரசன் அறிக்கை!


திருப்பெரும்புதூர் அருகே சியட் டயர் தொழிற்சாலையைத் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 12.02.2020 அன்று தொடங்கி வைத்துப் பேசும் போது, ஆசியாவிலேயே வெளிநாட்டு முதலீடுகளை அதிகம் ஈர்க்கும் ஆற்றலாகத் தமிழ்நாடு விளங்குகிறது என்று பெருமைப்பட்டுக் கொண்டார்.

பொதுக்கல்வித் தகுதியும் தொழிற்கல்வித் தகுதியும் பெற்றவர்களில் உரிய வேலையில்லாமல் தவிப்போர் விகிதம் மிக அதிகமாக உள்ள மாநிலம் தமிழ்நாடாகத்தான் இருக்கிறது என்ற உண்மையையும் முதலமைச்சர் சேர்த்துப் பேசியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு உரிய வேலையில்லாமல் வறுமையில் வாடுவார் எண்ணிக்கை தமிழ்நாட்டில் ஒரு கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

பக்கத்து மாநிலமான ஆந்திரத்தில் 2019 சூன் மாதம், புதிதாக பொறுப்பேற் செகன் மோகன் ரெட்டி அரசு, தனியார் துறையில் தெலுங்கர்களுக்கு 75 விழுக்காடு வேலை தர வேண்டுமெனத் தனிச் சட்டம் இயற்றினார்.

இன்னொரு பக்கத்து மாநிலமான கர்நாடகத்தில் தனியார் துறையில் கன்னடர்களுக்கு 100 விழுக்காடு வேலை வழங்க வேண்டுமென கர்நாடக அரசு அமர்த்திய சரோஜினி மகிசி அம்மையார் குழு, 1988லேயே பரிந்துரை வழங்கியது. அதை செயல்படுத்த 1994லிருந்து கன்னட வளர்ச்சி ஆணையம் என்ற தனி அமைப்பு உருவாக்கப்பட்டது.

அதன்படி, கர்நாடகத்திலுள்ள பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் மண்ணின் மைந்தர்களான கன்னடர்களுக்கே பணி வாய்ப்பு வழங்க வேண்டுமென கர்நாடக அரசு அவ்வப்போது அறிவுறுத்தி வந்தது. 2019இல், காங்கிரசு முதலமைச்சர் சித்தராமையா தனியார் நிறுவனங்கள் கன்னடர்களுக்கே வேலை அளிக்க வேண்டுமென சட்ட விதிகளைத் திருத்தி வெளியிட்டார் (Karnataka Industrial Employment (Standing Orders), Rules, 1961).

இப்போது, இதை முறைப்படுத்தும் வகையில் தனியார் துறையில் கன்னடர்களுக்கு 75 விழுக்காடு கட்டாயம் வேலை வழங்க வேண்டுமென தனிச் சட்டம் இயற்றப்படவுள்ளதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இச்சூழலில், தனியார் துறையில் கன்னடர்களுக்கு வேலை தரவில்லை என்று கண்டித்தும், வேலை தரக் கோரியும் இன்று (13.02.2020) கர்நாடகம் முழுவதும் வெற்றிகரமாக முழு அடைப்பு நடக்கிறது.

ஆனால், தமிழ்நாட்டில் மண்ணின் மக்களாகிய தமிழர்களுக்குக் குறிப்பிட்ட விகிதம் வேலை தர வேண்டும் என்று நிபந்தனை விதிக்கும் சட்டமோ அல்லது அரசு ஆணையோ போடப்படவில்லை!

திருவள்ளூர் தொடங்கி திருநெல்வேலி வரை டயர் தொழிற்சாலைகள் இருப்பதாக முதலமைச்சர் அவ்விழாவில் பேசினார். இந்தத் தொழிற்சாலைகளில் தமிழர்கள் எத்தனை விழுக்காட்டினர் வேலை பார்க்கிறார்கள் என்ற கணக்கை முதலமைச்சர் எடுத்தாரா?

திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, திருப்பெரும்புதூர் வட்டாரங்களில் குவிந்துள்ள பெருந்தொழிற்சாலைகளில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களே மிக அதிக எண்ணிக்கையில் வேலை பார்க்கிறார்கள். இவற்றில் மொத்தத் தொழிலாளிகள் மற்றும் அலுவலர்களில் பெரும்பான்மையோர் வெளி மாநிலத்தவர்களே!

சியட் தொழிற்சாலையில் பணி புரிவோரில் 40 விழுக்காட்டினர் பெண்கள் என்ற கணக்கை மகிழ்ச்சியுடன் முதலமைச்சர் சொன்னார். புதிதாகத் தொடங்கப்படும் தனியார் தொழிற்சாலைகளில் 60 விழுக்காட்டு வேலைகள் தமிழ்நாட்டின் மண்ணின் மக்களுக்கு வழங்கிட நிபந்தனை விதிப்போம் என்று தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் சில மாதங்களுக்கு முன் கூறியிருந்தார். அந்த எண்ணிக்கையாவது சியட்டில் தமிழர்களுக்கு வழங்கப்பட்டது என்று முதலமைச்சர் பேச்சில் குறிப்பிட்டிருந்தால் இளைஞர்களுக்கு ஆறுதல் கிடைத்திருக்கும்.

மாநில அரசு, நடுவண் அரசு, தனியார் துறைப் பணிகளில் மண்ணின் மக்களுக்கு – முறையே 100 விழுக்காடு, 80 விழுக்காடு வழங்க வேண்டும் என்று கர்நாடகம், குசராத் மற்றும் பல மாநிலங்களில் சட்டங்களும் அரசு ஆணைகளும் இருக்கின்றன. அதுபோல் தமிழ்நாட்டிலும் சட்டமியற்றி செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9025162216, பகிரி : 7667077075

முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Friday, February 7, 2020

கலசத்தில் தமிழ் ஒலித்தது! கடமை இன்னும் இருக்கிறது! பெ. மணியரசன்,


கலசத்தில் தமிழ் ஒலித்தது!

கடமை இன்னும் இருக்கிறது!

பெ. மணியரசன்,

ஒருங்கிணைப்பாளர்,
தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு

தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கில் (05.02.2020) கோபுரத்தில் தமிழ் மந்திரங்கள் ஒலித்ததைக் கேட்டு உலகெங்கும் வாழும் தமிழர்கள் பெற்ற உள்ளக் கிளர்ச்சிக்கு எல்லையே இல்லை!

பல நூறாண்டு காலமாக நிலவிவரும் பல கோடித் தமிழர்களின் தாய் மொழி ஏக்கம், தமிழர் ஆன்மிகத் தவிப்பு எத்துணை சோகம் நிறைந்தது என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது.

தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கைத் தமிழ், சமற்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் சம அளவில் நடத்த வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றம் 31.01.2020 அன்று அளித்தத் தீர்ப்பை இந்து சமய அறநிலையத்துறையும் தஞ்சாவூர் அரண்மனைத் தேவத்தானமும் முழுமையாக செயல்படுத்தாமல் அரைகுறையாகத்தான் நிறைவேற்றினார்கள்.

ஆனாலும், தி.பி.2051 தை 22ஆம் நாள் (05.02.2020) அறிவன் (புதன்) கிழமை காலை 9 மணியளவில் தஞ்சைப் பெருவுடையார் கோயில் கருவறைக் கோபுரத்தின் உச்சியிலும், மற்ற கோபுரங்களின் உச்சியிலும் தமிழ் மந்திரங்கள் தமிழ்ச் சைவ ஓதுவார் மூர்த்திகளால் முழங்கப்பட்ட போது உண்மையிலேயே தேன் வந்து பாய்ந்தது காதினிலே! நாங்கள் கோபுரத்தின் கீழே நின்று பார்த்தும் கேட்டும் மெய் சிலிர்த்தோம். “நாங்கள்” என்றால் தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக்குழுவைச் சேர்ந்த நாங்கள் நாலைந்து பொறுப்பாளர்கள் மட்டும் அல்ல, கோபுரத்தின் கீழே நின்ற இலட்சோபலட்ச மக்கள்!

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்த மறுநாள் (01.02.2020) தொடங்கி, ஒவ்வொரு நாளும் 04.02.2020 வரை பெரிய கோயிலுக்குள் வேள்விச்சாலை உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று தமிழ் மந்திரங்கள் ஓதப்படுகின்றனவா என்று பார்த்து வந்தோம். இப்பணியில் நானும் தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு பொருளாளர் பழ. இராசேந்திரன், குடந்தை இறைநெறி இமயவன், அம்மாப்பேட்டை கிருஷ்ணகுமார், வெள்ளாம் பெரம்பூர் துரை இரமேசு, வழக்கறிஞர் அ. நல்லத்துரை, இராமதாசு ஆகியோரும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தோம்.

நடராசர் சந்நிதியில் தொடர்ந்து சைவத் தமிழ்ச் சான்றோர்கள் திருமுறைகள் பாடி வந்தனர். பெருவுடையார் கருவறை மருந்து செய்தலுக்காக (பந்தனத்திற்காக) நடைசாத்தப்படிருந்தது. வேள்விச் சாலையில் 110 குண்டங்கள். அங்கே ஆரியம் இரட்டை நடைமுறையைக் கடைபிடித்தது.

வேள்விச் சாலையின் நடுவே அகலமான பாதை விடப்பட்டிருந்தது. அப்பாதைக்கு மேற்கிலும் கிழக்கிலும் குண்டங்கள் – தெய்வப் படிமங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அகலமான நடுப்பாதையில் உட்காருவதற்கு பலகைகள் போடப்பட்டுள்ளன. அவற்றில் அமர்ந்து, தமிழ் மந்திரங்கள் சொல்வோரும், சமற்கிருத மந்திரங்கள் சொல்வோரும் சமமான அளவில் முறையே தமிழிலும் சமற்கிருதத்திலும் ஓதினார்கள். ஆனால் குண்டங்களும், தெய்வப் படிமங்களும் உள்ள வேதிகையில், பிராமணப் பூசாரிகள் சமற்கிருதம் சொல்லி தீப தூப ஆராதனை செய்தனர். அதாவது கிரியைகள் செய்யுமிடத்தில் தமிழுக்கும் தமிழர்க்கும் இடமில்லை!

இந்த ஆன்மிகத் தீண்டாமையை - ஆரிய வர்ணாசிரம அதர்மத்தை எதிர்த்து அன்றாடம், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடமும், அரண்மனை தேவத்தான அதிகாரிகளிடமும், தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழாக் குழுத் தலைவர் உள்ளிட்டோரிடமும் முறையிட்டு வந்தோம்.

கிரியைகள் செய்வதற்குரிய தமிழ்மொழி மந்திரங்களை ஐயா குடந்தை இறைநெறி இமயவன் தொகுத்துத் தந்தார். அதைத் தட்டச்சு செய்து அதன் நகல்களை மேற்படி அதிகாரிகளிடமும் விழாக் குழுவினரிடமும் தந்தோம்.

ஆனாலும் வேதிகையில் நடைபெறும் தமிழ்ப் புறக்கணிப்பு கைவிடப்படவில்லை என்ற நிலையில் 04.02.2020 அன்று, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரையும் தஞ்சை அரண்மனைத் தேவத்தான உதவி ஆணையரையும் நேரில் சந்தித்து, உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்குப் புறம்பாகச் செயல்படக்கூடாது, அத்தீர்ப்பை வேள்விச்சாலை வேதிகை, கருவறை, கலசம் உள்ளிட்ட அனைத்து இடத்திலும் செயல்படுத்தி தமிழுக்கு சரிபாதி இடம் அளிக்க வேண்டும் என்று எழுத்து வடிவில் கோரிக்கை விண்ணப்பம் அளித்தோம்.

இப்பின்னணியில்தான் மறுநாள் 05.02.2020 குடமுழுக்கில், கோபுரத்தில் தமிழ் ஒலித்தது; கலசங்களில் தமிழ் ஓதுவார்களும் தண்ணீர் ஊற்றித் தமிழ் மந்திரம் ஓதி வழிபாடு நடந்தது.

குடமுழுக்கை நேர்முக வர்ணனை செய்து கொண்டிருந்த பேச்சாளர், “பேரரசன் இராசராசன் காலத்திற்குப் பிறகு முதல் முறையாகக் கோபுரக் கலசத்தில் தமிழ் ஒலிக்கிறது” என்று மகிழ்ச்சி பொங்க அறிவித்தார். அதைக் கேட்டு மனிதக் கடல் எழுப்பிய கையொலி நீண்ட நேரம் நீடித்தது. தாய் மொழித் தமிழ் உணர்ச்சி, தமிழ் இன உணர்ச்சி, இயல்பூக்கமாய் எல்லோர் மனத்திலும் உறைந்துள்ளதை உணர முடிந்தது.

தமிழ்நாடெங்கும் உள்ள சைவ, வைணவ, கிராமப்புறக் கோயில்களில் தமிழ் மட்டுமே பூசை மொழியாக வேண்டும் என்பதே தமிழர்களின் நீண்டகால ஏக்கமும் நோக்கமும் ஆகும்.

அந்தப் பயணத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கில் கோபுரக் கலசத்திலும் மற்ற சந்நிதியிலும் தமிழ் மந்திரங்கள் ஒலித்தது நமக்கு முதல் கட்ட முன்னேற்றம்!

தமிழர் ஆன்மிகத்தில் இந்த முதல்கட்ட முன்னேற்றம் கிடைக்கப் பலரின் உழைப்பும் ஒத்துழைப்பும் காரணமாக இருந்துள்ளது. தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக்குழுவில் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தோரும், இன உணர்வாளர்கள் ஆன்மிகச் சான்றோர் எனப் பலரும் இருக்கிறார்கள். அவர்களின் அத்துணை பேர் உழைப்பும் இப்பணிகளில் இருக்கின்றது. பா.ச.க.வை தவிர கிட்டத்தட்ட தமிழ்நாட்டுக் கட்சிகள் அனைத்தும் தமிழ்க் குடமுழுக்கை ஆதரித்து அறிக்கைகள் வெளியிட்டன.

தமிழ்க் குடமுழுக்குக் கோரி நான் உள்ளிட்ட நம்மவர்கள் தொடுத்த நான்கு வழக்குகளிலும் மூத்த வழக்கறிஞர்கள் சிகரம் ச. செந்தில்நாதன், திருச்சி முத்துகிருட்டிணன், மதுரை லஜபதிராய், அழகுமணி, ஹென்றி டிபேன் மற்றும் இளம் வழக்கறிஞர்கள் ரூபஸ், மது ஆகியோர் கட்டணமின்றி தன்னார்வமாக வழக்கு நடத்தினர்.

தஞ்சையில் 22.02.2020 அன்று நடந்த தமிழ்க் குடமுழுக்கு வேண்டுகோள் முழுநாள் மாநாட்டில் தமிழர் ஆன்மிகச் சான்றோர்களும், பதினெண் சித்தர் பீடங்களைச் சேர்ந்த குருமார்களும் பெருமக்களும், பொதுவான தமிழ் உணர்வாளர்களும் திரளாகக் கலந்து கொண்டார்கள். அம்மாநாட்டுக்குத் தாராளமாகப் பலரும் நிதி உதவி அளித்தனர்; அனைவருக்கும் காலை மற்றும் பகல் உணவளித்தனர்.

தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கைத் தமிழ்வழியில் நடத்திட வேண்டும் என்ற வேண்டுகோளை உலகெங்கும் வாழும் தமிழர்களிடம் தொலைகாட்சிகளும், நாளேடுகளும், கிழமை ஏடுகளும், சமூக வலைத்தளங்களும் ஊக்கமாக எடுத்துச் சென்றன.

குடந்தை அரசு கவின்கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் தமிழர் மரபு பெருமிதங்களையும், கலை பண்பாட்டு சிறப்புகளையும் தஞ்சை நகர் சுவர்களில் வண்ண வண்ண ஓவியங்களாகத் தீட்டினர்.

தமிழ்நாடு அரசும், தஞ்சை மாவட்ட வருவாய்துறையும் காவல் துறையும் பல நாள் திட்டமிட்டு குடமுழுக்கு விழாவைச் சிறப்பாக நடத்தினர். காவல்துறையின் பணி கூடுதலானது. எல்லாவற்றிற்கும் மேலாக பல இலட்சம் மக்கள் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.

தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு சார்பில் அனைவருக்கும் பாராட்டுகளையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறோம்!


தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு 

Tuesday, February 4, 2020

தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழுவினர் பார்வையிட்டனர்! பெ. மணியரசன் அறிக்கை!


தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு
தஞ்சைப் பெரிய கோயில் உரிமை
மீட்புக் குழுவினர் பார்வையிட்டனர்!

தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு

ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!



தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு தமிழ் வழியில் நடத்தப்பட வேண்டும் என்று தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழுவும் மற்ற நண்பர்களும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்திருந்தோம். அவ்வழக்கில் இந்து அறநிலையத்துறையும், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானமும் குடமுழுக்கு தமிழ் வழியிலும், சமற்கிருத வழியிலும் சம அளவில் நடத்தப்படும் என்று உறுதி கொடுத்தன. அதன்படி, பெருவுடையார் கோயிலில் சமற்கிருத மந்திரங்கள் சொல்வோரும், தமிழ் ஓதுவார்களும் வழிபாடுகள் செய்து வருகின்றனர். வழிபாட்டு மந்திரங்களும் பாடல்களும் ஓதி வருகின்றனர்.



தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு நிர்வாகிகள் கடந்த 01.02.2020 அன்று தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவரையும், விழாக்குழுத் தலைவர் திரு. துரை. திருஞானம் அவர்களையும் இன்று (03.02.2020), தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அவர்களையும், அரண்மனை தேவஸ்தான அதிகாரியையும், விழாக் குழுவினரையும் சந்தித்தோம். நானும், தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு பொருளாளர் பழ. இராசேந்திரன், வழக்கறிஞர் அ. நல்லதுரை, இறைநெறி இமயவன், ந. கிருஷ்ணக்குமார், முனைவர் துரை. செந்தில்நாதன், வெள்ளாம்பெரம்பூர் துரை. இரமேசு, பி. தென்னவன், மா. இராமதாசு ஆகியோர் இதற்காகச் சென்றிருந்தோம்.



வேள்விச் சாலையில் (யாக சாலையில்) தமிழ் ஓதுவார்களும், சமற்கிருத சுலோகங்கள் சொல்வோரும் முறையே தமிழிலும், சமற்கிருதத்திலும் ஓதி வருகின்றனர். நடராசர் சன்னதியில் முழுக்க முழுக்க தமிழ் ஓதுவார்கள் பாடி வருகின்றனர். அதேவேளை, வேள்விச் சாலைக்குள் வேதிகை மற்றும் குண்டம் இருக்குமிடத்தில் தெய்வப் படிமங்களை காலையில் எழுந்தருளச் செய்யும் வழிபாட்டில் சமற்கிருத சுலோகங்கள் மட்டுமே சொல்லப்படுகின்றன. தமிழ் மந்திரம் ஓதப்படவில்லை.



இந்தக் குறைபாட்டை விழாக்குழுத் தலைவர் அவர்களிடமும், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அவர்களிடமும், அரண்மனை தேவஸ்தான அதிகாரியிடமும் தெரிவித்துள்ளோம். நாளையிலிருந்து வேதிகையிலும், குண்டத்திலும் தமிழ் மொழி மந்திரங்களும் சொல்ல ஏற்பாடு செய்வோம் என உறுதி கூறியிருக்கிறார்கள். அதற்கான, தமிழ் மந்திரங்களை தமிழ்ச் சான்றோர்களிடமிருந்து பெற்று, தட்டச்சு செய்து உரிய அதிகாரிகளிடமும், விழாக் குழுத் தலைவரிடமும் கொடுத்துள்ளோம்.



அடுத்து, பெருவுடையார் கோயில் வளாகத்திற்குள் தென்னகப் பண்பாட்டு மையம் கலை நிகழ்ச்சிகள் நடத்துகிறது. பல்வேறு மொழிகளில் அந்நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். குடமுழுக்குக் காலமானதால், திருமுறைகள் போன்ற சிவ வழிபாட்டுப் பாடல்களையும், அதையொட்டிய கலை நிகழ்ச்சிகளையும் நடத்துமாறு தென்னகப் பண்பாட்டு மையத்திற்கு அறிவுறுத்த வேண்டுமென்று உரிய பொறுப்பாளர்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளோம்.



அடுத்து, உயர் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டபடி கருவறை, கோயில் கலசம் உள்ளிட்ட இடங்களில் தமிழ் மந்திரங்கள் சொல்ல தமிழ் அர்ச்சகர்களை ஏற்பாடு செய்துள்ளோம் என்று அதிகாரிகள் கூறினார்கள். இவை அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றுமாறு தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு சார்பில் குடமுழுக்கு விழா பொறுப்பாளர்களைக் கேட்டுக் கொண்டோம்.



தமிழ்வழிக் குடமுழுக்கில் அக்கறையுள்ள நண்பர்கள் தமிழ் மந்திரங்கள் ஓதப்படுகிறதா என்று நேரில் கவனித்து அதில் குறைபாடு இருந்தால் உரிய அதிகாரிகளிடமோ, பொறுப்பாளர்களிடமோ அதிலுள்ள குறைபாடுகளைப் போக்க கோரிக்கை வைப்பது தேவையானது. அதேவேளை, நடைமுறையைச் சரி பார்க்காமல் தமிழ்வழியில் குடமுழுக்கு நடைபெறவே இல்லை என்பதுபோன்ற கருத்துகளை வெளியிட வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன்.



கருவறையிலிருந்து கலசம் வரை சொல்லக்கூடிய தமிழ் மந்திரங்களை தனிச் சிறு நூலாக தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு அச்சிட்டுள்ளது. அந்த நூல்கள் குடமுழுக்கு விழாவுக்கு வரும் மக்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு


பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/thanjaikovilurimai
ஊடகம் : www.kannottam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

Sunday, February 2, 2020

தமிழ்க் குடமுழுக்கை எதிர்ப்பவர்கள் யார்? ஐயா பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!


தமிழ்க் குடமுழுக்கை எதிர்ப்பவர்கள் யார்?

ஐயா பெ. மணியரசன்
தலைவர் – தமிழ்த்தேசியப் பேரியக்கம்.


தமிழர்களின் கலைச்சின்னமாக - தமிழர்களின் பொறியியல் ஆற்றலின் வடிவமாக - தமிழர் ஆன்மிகச் சின்னமாக தஞ்சையில், தமிழ்ப் பேரரசன் இராசராசச்சோழன் எழுப்பியுள்ள பெருவுடையார் கோயிலுக்கு, வரும் 05.02.2020 அன்று குடமுழுக்கு நடத்தவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இருபத்து மூன்று ஆண்டுகள் கழித்து தமிழ்நாடு அரசு அக்கோயிலுக்குக் குடமுழுக்கு நடத்த முன்வருவதை வரவேற்ற நாம், கடந்த 2019 திசம்பர் மாதம் 17ஆம் நாள் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் அக்குடமுழுக்கை முழுக்க முழுக்க தமிழர் ஆன்மிக நெறிப்படி - தமிழில் நடத்த வேண்டுமென மனு அளித்தோம். தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழுத் தலைவர் திரு. ஐயனாபுரம் சி. முருகேசன், பொருளாளர் திரு. பழ. இராசேந்திரன் ஆகியோர் நேரில் சென்று அம்மனுவை அளித்தனர். அத்துடன் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரிடமும் மனு அளித்தனர்.
அடுத்த கட்டமாக, இதுகுறித்து கலந்தாய்வு செய்ய கடந்த 28.12.2019 அன்று தஞ்சையில் ஆன்மிகப் பெரியவர்களையும், தமிழின உணர்வாளர்களையும் அழைத்துக் கலந்துரையாடினோம். தஞ்சைப் பெரிய கோயிலுக்குத் தமிழிலேயே குடமுழுக்கு நடத்த வேண்டுமென்று தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் வைத்து ஒரு பெருந்திரள் மாநாடு நடத்துவது என்று முடிவானது. கடந்த 22.01.2020 அன்று மிக எழுச்சியாக அந்த மாநாடு நடந்து முடிந்தது.
இம்மாநாடு நடத்த அறிவிப்பு வெளியிட்ட நாளிலிருந்து, பல்வேறு அரசியல் கட்சிகளும் தமிழ்க் குடமுழுக்குக்கு ஆதரவாகக் கருத்து வெளியிட்டன. தி.மு.க. தலைவர் திரு. மு.க. ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் திரு. வைகோ, தமிழர் தேசிய முன்னணித் தலைவர் ஐயா பழ. நெடுமாறன், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி. வேல்முருகன், காங்கிரசுத் தலைவர் திரு. கே.எஸ். அழகிரி, பா.ம.க. தலைவர் மருத்துவர் இராமதாசு, சி.பி.எம். தமிழ்நாடு செயலாளர் தோழர் கே. பாலகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு செயலாளர் தோழர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் தொல். திருமாவளவன், மக்கள் நீதி மையம் தலைவர் திரு. கமலகாசன் உள்ளிட்ட பலரும் தமிழ்க் குடமுழுக்கிற்கு ஆதரவான தங்கள் கருத்துகளை அறிக்கைகளாக வெளியிட்டனர். சமூக வலைத்தளங்களில் எழுதினர். பல்வேறு இயக்கங்கள் இக்கோரிக்கையை ஆதரித்தன. பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு தமிழ்க் குடமுழுக்கிற்காக சென்னையில் போராட்டம் நடத்தியது.
அ.இ.அ.தி.மு.க. அரசு பெரிய கோயில் குடமுழுக்கை தமிழிலும் சமற்கிருதத்திலும் நடத்துவோம் என முதல் தடவையாக அறிவித்ததுடன், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் பதில் மனுத் தாக்கல் செய்தது. தஞ்சைப் பெருவுடையார் கோயில் கருவறையில், கோபுரக் கலசத்தில் தமிழ் மந்திரங்களும் அர்ச்சிக்கப்படும் என்று இந்து அறநிலையத்துறை தனது பதில் மனுவில் கூறியது.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கைத் தமிழ் வழியில் மட்டுமே நடத்துவதற்கு ஆணையிடு மாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு சார்பில் என் பெயரிலும், நாம் தமிழர் கட்சி - வீரத்தமிழர் முன்னணி சார்பில் திரு. து. செந்தில்நாதன் பெயரிலும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. வேறு சிலரும் வழக்குகள் போட்டிருந்த னர்.
இப்படி எல்லோரும் தமிழுக்கு ஆதரவாக இயங்கி வரும் நிலையில், தஞ்சைப் பெரிய கோயில் பெருவுடையாருக்கு தமிழில் குடமுழுக்கு நடத்துவதா, சமற்கிருதத்தில் நடத்துவதா என்பதில், எந்தக் கருத்தும் சொல்லாத ஒரே கட்சி - பாரதிய சனதா கட்சிதான்! அதிகாரப்பூர்வமாக அவர்கள் தமிழ்க் குடமுழுக்கை ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை! ஏன்? எதற்கெடுத்தாலும் முந்திரிக்கொட்டை போல் அறிக்கை விடும் அவர்கள், இந்தச் சிக்கலில் ஏன் எந்தக் கருத்தும் சொல்லவில்லை?
இப்போது, பா.ச.க.வின் தமிழ்நாட்டுத் தலைவர்களில் ஒருவரான கே.டி. இராகவன் மற்றும் எச். இராசா ஆகியோர் அவர்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் எழுதியுள்ள கருத்துகளைப் பார்த்தால், அவர்கள் பெரிய கோயில் குடமுழுக்கை தமிழ்வழியில் நடத்துவதை ஆதரிக்கவில்லை, சமற்கிருதத்திலேயே அதை நடத்தத் துடிக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது.
இதையும்கூட, அவர்கள் நேரடியாகச் சொல்லாமல், தமிழ்வழிக் குடமுழுக்கிற்காக இயக்கம் நடத்திக் கொண்டிருக்கும் “பெ. மணியரசன் - இந்து அல்ல கிறித்தவர்” என்றும், அவரது உண்மையான பெயர் “டேவிட்” என்றும் கூறியிருக்கிறார்கள். அத்துடன், தமிழ்க் குடமுழுக்குக் கோரிக்கைக்கான ஆர்ப்பாட்டத் துண்டறிக்கை யில், இந்திய யூனியன் முசுலிம் லீக் கட்சியின் பொறுப்பாளர் திரு. ஜெனுலாப்தீன், மனித நேய சனநாயகக் கட்சித் தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு. அகமது கபீர், இந்திய சனநாயகக் கட்சித் தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு. சிமியோன் சேவியர்ராசு ஆகியோரின் பெயர்கள் இருப்பதை வட்டமிட்டுக் காட்டி, இப்போராட்டத்தைப் பிற மதத்தினர் தூண்டுவதைப் போல எழுதியுள்ளார்கள். மேற்கண்ட இருவரும் “இசுலாமிய பயங்கரவாதிகள்” என்றும் எழுதியுள்ளார்கள்.
இது எச். இராசா - கே.டி. இராகவன் வகையறாக்களின் வழக்கமான பாணிதான்! ஒருவரின் கருத்தை அல்லது செயலை திறனாய்வு செய்யாமல், பிறப்பை இழிவுபடுத்தும் ஆரிய வர்ணாசிரமப் “பண்பாடு” அப்படித்தான் சிந்திக்க வைக்கும்!
ஆரிய வர்ணாசிரமத்தை - சமற்கிருத மேலாதிக்கத்தை - சாதிய வன்கொடுமைகளைக் கண்டித்துக் களம் காணும் பிராமணப் பெருமக்களும் இங்கு இருக்கிறார்கள். ஆனால், அதை மாற்றிக் கொள்ளாத கே.டி. இராகவன் - எச். இராசா போன்றவர்களும் இங்கு இருக்கிறார்கள்.
ஒருவேளை, பெ. மணியரசன் கிறித்தவராகப் பிறந்திருந்தால்தான் என்ன குற்றம்? ஒரு கிறித்தவர் தமிழுக்காகப் போராடக் கூடாதா? பா.ச.க.வின் இந்தியத் தலைமையமைச்சர் மோடி கிறித்தவ நாடுகளுடனும், இசுலாமிய நாடுகளுடனும் கூடிக் குலாவுகிறாரே! கெஞ்சியும் உறவு வைத்துக் கொள்கிறாரே! கிறித்தவ நாடான அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் மோடிக்குக் கை கொடுத்துவிட்டார் என்று பா.ச.க.வினர் மெச்சிக் கொள்கிறார்களே! கிறித்தவ - இசுலாமிய நாட்டு மன்னர்களுடனும் ஆட்சித் தலைவர்களுடனும் உறவு வேண்டுமென பா.ச.க.வினர் தவம் கிடக்கிறார்களே!
கிறித்தவர்களோ, இசுலாமியர்களோ தீண்டத்தகாதவர்களா? மனிதர்களில் தீண்டத்தகாதவர்கள் யாருமில்லை என்பதே எங்கள் நிலைப்பாடு! வேற்று மதத்தினராகவே இருந்தால் கூட என்ன தாழ்வு வந்துவிடப்போகிறது? தஞ்சை பெருவுடையார் கோயில், தமிழ்ப் பேரரசன் இராசராசன் கட்டிய தமிழர் கோயில்! அங்கே தமிழ் முழங்க வேண்டுமென தமிழர்களான கிறித்தவர்களும், இசுலாமியர்களும் கேட்டால் என்ன குற்றம் வந்துவிடப் போகிறது? அவர்கள் தாய்மொழி தமிழ்; அவர்கள் தமிழர்கள்!
பெரிய கோயில் குடமுழுக்கிற்காக நாங்கள் நடத்தியக் கலந்தாய்வில் கலந்து கொண்ட, இத் தோழர்கள் தங்கள் முன்னோர்கள் இந்து மதத்திலிருந்து மாறியவர்கள் தானே என்று உரிமையோடு பேசினார்கள்.
இசுலாமியத் தமிழர்களின் மசூதிகளில் அரபியில் ஓதுகிறார்களே, அதைக் கேட்டீர்களா என்கிறார்கள். நாங்கள் கேட்டோம். இனியும் கேட்போம். மசூதிகளில் உரையாற்றும் போது தமிழ்ப் பயன்படுத்தப்படுவதைப் போல், மசூதி வழிபாட்டிலும் அரபியில் செய்யாமல் தமிழில் தொழுகை நடத்த முயலுங்கள் என்கிறோம். அதற்கான குரலும் தமிழுணர்வுள்ள இசுலாமியரிடத்திலிருந்து வர வேண்டும். இசுலாமியர் அல்லாதவர்கள் அதற்கான போராட்டத்தை முன்னெடுக்கக் கூடாது. இசுலாமியர்கள் முன்னெடுத்து மற்ற மதத்தினர் அதை ஆதரிக்க வேண்டும். அவ்வாறு வரும்போது, அப்போராட்டத்திற்கு நாங்களும் துணை நிற்போம்.
கிறித்தவ தேவாலயங்களில் 1960 வரைகூட இலத்தீன் மொழியே வழிபாட்டு மொழியாக இருந்தது. பின்னர், போப் அரசர்களிடம் கிறித்தவ மக்கள் தங்கள் மொழிக்காக எழுச்சி பெற்றுப் போராடினார்கள். பல பாதிரியார்களும்கூட தாய்மொழியில் வழிபாடு செய்யப் போராடினார்கள். இப்போது, 1962லிருந்து கிறித்துவத்தில் அவரவர் தாய்மொழியில் வழிபாடு நடக்கிறது.
அதுபோல, இந்து மதத்திலும் சமற்கிருத மேலாதிக்கத்தை நீக்கி - அந்தந்த மொழிகளில் வழிபாடு நடத்துங்கள் என்கிறோம்! இதை மாற்ற முடியாது என கே.டி. இராகவன் - எச். இராசா போன்ற ஆரியத்துவாவாதிகள் கூறுவதற்கு என்ன உரிமை இருக்கிறது? இந்து மதம் அவர்களின் தனிப்பட்ட சொத்தா?
இந்து மதம் பல தெய்வங்களைக் கொண்டது. இந்து மதத்திற்கென்று ஒற்றைத் தலைமை குரு யாருமில்லை. பல்வேறு உட்சமயப் பிரிவுகளைக் கொண்டது. பல்வேறு மொழிகளைக் கொண்டது. பல்வேறு இனங்களைக் கொண்டது. இந்து மதத்திற்கு பிராமணர்களோ, மற்ற யாருமோ தலைவர்கள் அல்லர்!
சிவபெருமான் தமிழ்த்தெய்வம்! “கண்ணுதற் பெருங் கடவுளும் கழகமோடு அமர்ந்து பண்ணுறத் தெரிந்து ஆய்ந்தவிப் பசுந் தமிழ்” என்று இறையனார் அகப் பொருள் கூறுகிறது. முதல் தமிழ்ச் சங்கத்திற்கு சிவபெருமான் தலைமை தாங்கினார் என்பது இதன் பொருள்.
தமிழையும், சிவனையும் பிரிக்க முடியாது. “என்னை நன்றாய் இறைவன் படைத்தனன் தன்னை நன்றாய்த் தமிழ்ச் செய்யுமாறு!” என்று திருமூலர் திருமந்திரத்தில் கூறினார்.
இந்த உரிமையும், உறவும் உள்ள தமிழில் குடமுழுக்கு நடத்துமாறு நாங்கள் கோரும்போது, குறுக்கே நின்று எச். இராசா போன்ற ஆரியத்துவாவாதிகள் தடுப்பது ஏன்? எச். இராசா – கே.டி. இராகவன் போன்ற ஆரியத் துவாவாதிகள் இந்து விரோதிகளாக அல்லவா செயல்படுகிறார்கள்!
நான் கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவன் என்றும், இந்துக்கோயில் வழிபாட்டில் நான் தலையிடக் கூடாது என்றும் எச். இராசா - கே.டி. இராகவன் போன்ற வைதிக வர்ணாசிரமவாதிகள் கேட்கிறார்கள்.
மணியரசன் என்ன மர்ம மனிதரா? தஞ்சை மாவட்டம் - பூதலூர் வட்டம் - ஆச்சாம்பட்டி எனது ஊர். நான் யாரென்று, எங்கள் ஊருக்குப் போய் கேட்டுப் பாருங்கள். திருவரங்கம் நகராட்சியிலுள்ள வீரேசுவரத்தில் அமைந்துள்ள காமாட்சியம்மன் கோயில்தான் எங்கள் குலதெய்வம். எங்கள் குடும்பத்தில் குழந்தைகளுக்கு அங்குதான் நாங்கள் முதல் மொட்டை போட வேண்டும். வைகாசி மாதம் அங்கு ஆண்டுதோறும் விழா நடக்கும். அந்த விழாவுக்கு நாங்கள் செய்ய வேண்டிய காணிக்கை இருக்கிறது. பிராமணர் அல்லாதவர்கள் பூசை செய்யும் கோயில் அது! ஒவ்வொரு ஆண்டும் அந்தக் கோயிலிலிருந்து எங்கள் வீட்டுக்கு என் தந்தை பெரியசாமி பெயரிலும், இப்போது என் தம்பி ரெங்கராசு பெயரிலும் கடிதம் வரும். நாங்கள் விழாவில் கலந்து கொண்டு காணிக்கை செலுத்துவோம்.
நான் மார்க்சிஸ்ட்டுக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியில் செயல்பட்டுக் கொண்டிருந்தபோது, இந்திரா காந்தி அம்மையார் 1975இல் நெருக்கடிநிலைப் பிரகடனம் செய்து, சனநாயக உரிமைகளைப் பறித்தார். 1976 சனவரி 31-இல் தி.மு.க. ஆட்சியைக் கலைத்து, நெருக்கடி நிலையை தமிழ்நாட்டில் தீவிரப்படுத்தினார்.
அந்த நெருக்கடி நிலை காலத்தில், சி.பி.எம். கட்சியில் அனைத்திந்திய அளவில் ஒரு முடிவெடுக்கப்பட்டது. தலைமையிலிருந்து கீழ் வரை ஒரு குழுவினர் தலைமறைவாக இயங்கிக் கைதாகாமல் நெருக்கடி நிலைக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராட வேண்டும் என்பதே அம்முடிவு.
அம்முடிவின்படி, சி.பி.எம். கட்சியின் தலைமைக் குழுவில் செயல்பட்ட பி.டி. இரணதிவே, பி. சுந்தரய்யா போன்றோர் தலைமறைவாக இருந்து இயக்கப் பணியாற்றினர்கள். அதுபோல், ஒவ்வொரு மாநிலத்திலும் - ஒவ்வொரு மாவட்டத்திலும் தலைமறைவாக இருந்து செயல்பட வேண்டிய தோழர்கள் முடிவு செய்யப்பட்டனர். ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் தலைமறைவாக இருந்து இயக்கப் பணியாற்றத் தேர்வு செய்யப்பட்டவர்களில் நானும் ஒருவன். எங்களுக்கு அப்போது தலைமறைவு இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் - அண்மையில் காலமான தோழர் கோ. வீரய்யன் அவர்கள்! அப்போது எனக்கு எதிராக பிடிவாரண்ட் போடப் பட்டிருந்தது. என்னைத் தேடிக் கொண்டிருந்தது காவல்துறை!
இப்போதைய சி.பி.எம். நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் டி.கே. ரங்கராசன் அவர்கள் அப்போது திருச்சி மாவட்டத்தில் பெட்டவாய்த்தலை சர்க்கரை ஆலையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். நான் தொடக்கத்தில் தலைமறைவாக இருந்தபோது, அவரது அரவணைப்பில் தான் இருந்தேன். எனது மீசை மழிக்கப்பட்டது. உருவத்தை மாற்றிக் கொண்டேன். “டேவிட்” என்றொரு கற்பனையான புனைப்பெயரை எனக்கு தோழர் டி.கே. ரங்கராசனும், அவர்களுடைய தோழர்களும் சூட்டினர். 1977இல் நெருக்கடி நிலை தளர்ந்த பிறகுதான் நான் மீண்டும் மணியரசனாக வெளிவந்தேன். இதையெல்லாம், இப்போது சி.பி.எம். மாநிலச் செயலாளர் தோழர் கே. பாலகிருஷ்ணன் அவர்களிடமும், சி.பி.எம். நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் டி.கே. ரங்கராசன் அவர்களிடமும் கேட்டால் சொல்லுவார்கள்.
நெருக்கடிநிலையும், சனநாயக உரிமை மறுப்பும் நீண்டகாலம் தொடரும் என்று அப்போது சி.பி.எம். மத்தியக்குழு முடிவு செய்து அறிவித்தது. சனநாயக உரிமை மீட்கப்படும் வரை தலைமறைக் கட்சி இயங்க வேண்டுமென்று சி.பி.எம். தலைமை முடிவு செய்தது. இப்பின்னணியில், தலைமறைவு காலத்தில் எனக்குத் திருமணமும நடைபெற்றது. தலைமறைவு மாவட்டச் செயலாளர் தோழர் கோ. வீரய்யன் அவர்கள் தலைமையில் என் திருமணம் தலைமறைவாக நடந்தது. இதுகுறித்து, என் மனைவியும், மகளிர் ஆயம் தலைவருமான தோழர் ம. இலட்சுமி தனது “லட்சுமி எனும் பயணி” என்ற நூலில் எழுதியுள்ளார். டேவிட் என்ற தலைமறைவுப் பெயருடன் செயல்பட்ட பெ. மணியரசனை திருமணம் செய்து கொண்டேன் என்று அந்நூலில் விரிவாக எழுதியுள்ளார். இதுகுறித்து, “ஆனந்த விகடன்” வார ஏட்டுக்கும் பேட்டி அளித்துள்ளார். கே.டி. இராகவன் - எச். இராசா - வகையறாக்கள் இதை ஏதோ ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்ததைப் போல பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
எனக்கு மட்டுமல்ல, பலருக்கும் இப்படி பிறப்புத்திரிபு செய்திருக்கிறார்கள். தோழர் சீமான், தோழர் திருமுருகன் காந்தி, இயக்குநர் கௌதமன் உள்ளிட்ட பலரையும் வெவ்வேறு மதப்பெயர் சொல்லி அழைப்பது அவர்களின் வழக்கமாக உள்ளது.
கிறித்துவராகவே இருந்தால் என்ன குற்றம்? அது என்ன இழிவான பிறப்பா? இவையெல்லாம் எவ்வளவு மலிவான - கேவலமான - அற்பத்தனமான உத்திகள்!
ஒருவேளை, ஒருவர் தனது பெயரை மாற்றிக் கொண்டவராகவே இருந்தால்கூட, அவர் மாற்றி வைத்துக் கொண்ட பெயரைத்தானே சொல்ல வேண்டும்! அது தானே நேர்மையும், நாகரிகமும் கொண்ட செயல்!
முதலில், இந்த ஆரியத்துவா வர்ணாசிரமவாதிகள் மனிதர்களை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அதன்பிறகு அரசியல் பேசலாம்! இவர்களின் முன்னோர்கள், அனைத்துத் தமிழர்களையும் சூத்திரர்கள் என்றும் பஞ்சமர்கள் என்றும்தானே அழைத்தார்கள். அனைத்துத் தமிழர்களுக்கும் எதிராகத் தீண்டாமை கடைபிடித்தவர்கள் அல்லவா இவர்கள்! இவர்களின் அசல் வாரிசுகளாக எச். இராசாவும் – கே.டி. இராகவனும் இன்றும் நவீன வடிவத்தில் செயல்படுகிறார்கள். அந்த வடிவத்தின் பெயர்தான் “இந்துத்துவா”!
இப்போது, தஞ்சைப் பெருவுடையார் குடமுழுக்கைத் தமிழில்தான் நடத்த வேண்டும் என்ற வழக்கு உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நடந்து, தமிழையும் சமற்கிருதத்தையும் சம அளவில் பயன்படுத்தி குடமுழுக்கு நடத்த வேண்டுமென்று தீர்ப்பும் வந்துவிட்டது. இவ்வழக்கில் மூத்த வழக்கறிஞர்கள் “சிகரம்” செந்தில்நாதன், திருச்சி முத்துக்கிருஷ்ணன், மதுரை லஜபதிராய், அழகுமணி, ஹென்றி திபேன் ஆகிய ஆளுமைகள் அருமையான வாதங்களை முன்வைத்தார்கள்.
தமிழ்க் குடமுழுக்குக் கோரிக்கை இவ்வாறு முன்னேறிக் கொண்டிருக்கும்போது, இந்த ஆரியத்துவா வர்ணாசிரமவாதிகளுக்கு ஏன் இவ்வளவு வயிற்றெரிச்சல் வருகிறது? உங்களுக்கு ஏன் இரட்டை நாக்குகள் இருக்கின்றன? இவர்கள் கூறுவதையெல்லாம் பார்த்தால், இரண்டிற்கும் மேற்பட்ட நாக்குகள் இருக்கும்போல் தெரிகிறதே!
தமிழ் மொழி தமிழ்நாட்டில் முதன்மை பெறுவதை - முழுமையான ஆட்சி மொழியாவதை – முழுமையான ஆன்மிக மொழியாவதை – முழுமையான கல்வி மொழியாவதை இந்த ஆரியத்துவாவாதிகள் தங்களின் ஆதிக்கக் கொள்கைப்படி எதிர்க்கிறார்கள். “தமிழர் ஆன்மிகத்தில் ஆரிய ஆதிக்கத்தை நிலைநாட்டி, சமற்கிருதத்தின் துணை கொண்டு தமிழர்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறோம், அதற்கு ஆபத்து தொடங்கியிருக்கிறதே!” என்று இவர்கள் அலறுகிறார்கள்! தமிழ் உரிமைக்கு – தமிழர் உரிமைக்குப் போராடுவோர்கள் மீது அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள்.
எச். இராசா - கே.டி. இராகவன் ஆகியோருக்கும் தஞ்சைப் பெரிய கோயிலுக்கும் உள்ள உறவைவிட, எனக்கும் பெரிய கோயிலுக்கும் உள்ள இனவழி உறவும், மொழிவழி உறவும் அதிகம்!
எங்கள் தொல்காப்பியம் தமிழ்நாட்டின் நால்வகை நிலங்களில் வாழும் மக்களாக எங்கள் முன்னோர்களைக் குறித்துள்ளது. அதில், எங்கள் ஒவ்வொரு மக்களின் சொந்த நிலமும், அதற்குரிய கடவுளும் குறிக்கப்பட்டுள்ளன. எம் முன்னோர்கள் அந்த நான்கில் எந்த நிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான தெய்வமும் குறிக்கப்பட்டிருக்கிறது. எச். இராசா - கே.டி. இராகவன் ஆகியோரின் முன்னோர்க்கு அவ்வாறான உண்மையான தமிழ் நில உரிமை குறிக்கப்பட்டிருக்கிறதா? இல்லை! இவர்களின் முன்னோர்கள் வடக்கே இருந்து வந்த ஸ்மார்த்தர்கள்! கோயில் வழிபாடு இல்லாதவர்கள்! சமற்கிருத சுலோகங்களை ஒதிக் கொள்வோர். ஆகமப்படி பார்த்தால், பிராமண ஸ்மார்த்தர்கள் எங்கள் கோயிலின் கொடி மரத்தைத் தாண்டி உள்ளே வரக்கூடாது.
எங்கள் கடவுள்களின் அழகானத் தமிழ்ப் பெயர்களை நீக்கி ஆரியமயப்படுத்தப்பட்ட சமற்கிருதப் பெயர்களை, இவர்களின் முன்னோர்கள் எங்களின் கடவுள்களுக்கு சூட்டினார்கள். அவர்களின் வாரிசுகள் அல்லவா எச். இராசா - கே.டி. இராகவன் வகையறா! உங்களுக்கு எங்கள் இந்துக் கோயில்கள் மீது என்ன உரிமை இருக்கிறது?
ஐந்து ஆறுகள் ஓடக்கூடிய இடம் திருவையாறு! அங்கு வீற்றுள்ள இறைவனின் பெயர் ஐயாறப்பர். அவரை, பஞ்சநதீஸ்வரர் என்று மாற்றினீர்களே, எதற்காக? அங்குள்ள இறைவியின் பெயர் அறம் வளர்த்த நாயகி! அந்தப் பெயரை சமற்கிருதப்படுத்தி தர்மசம்வித்தினி என்று மாற்றினீர்களே, எதற்காக? கரு உண்டாகாத பெண்களுக்குக் குழந்தைப் பேறு அளிக்கும் கடவுளாகப் போற்றப்படும் கருகாத்த நாயகி வீற்றிருக்கும் இடம் திருகருகாவூர்! கருகாத்தநாயகியை கர்ப்பரட்சகாம்பிகா என்று எதற்காக மாற்றினீர்கள்?
தமிழ்க் கடவுள் முருகனை “சுப்ரமணிய” என்று பெயர் மாற்றி தீட்டுக் கழித்து ஆரியமயப்படுத்தியவர்கள் யார்? கே.டி. இராகவன் - எச். இராசா வகையறாக்களின் ஆரிய முன்னோர்கள்! அந்த “சுப்ரமணிய”னுக்கு ஏற்கெனவே அலகாபாத்திலோ, பாட்னாவிலோ வடநாட்டு ஆரியர்கள் கோயில் கட்டி வணங்கி வந்தார்களா? இல்லை!
தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் திரு. என். நாராயணன் சமற்கிருதத்தில்தான் குடமுழுக்கு நடத்த வேண்டுமென அறிக்கை வெளியிடுகிறார். அதுவும், தஞ்சைப் பெருவுடையார் என்றுகூட சொல்ல அவருக்கு மனம் வரவில்லை, “பிரகதீசுவரர்” என்கிறார். இப்படி எங்கள் தெய்வங்களை சூத்திரக் கடவுளாகக் கருதி, “தீட்டுக் கழித்து”, சமற்கிருதத்தில் பெயர் மாற்றுவதன் பொருள் என்ன? இதுதான் கடவுளுக்கும் வர்ணாசிரமம் கற்பிக்கும் ஆரியத்துவா அதர்மம்!
எங்கள் தெய்வங்களின் பெயர்களில் கூட தமிழ் இருக்கக் கூடாது என சமற்கிருதத்தில் மாற்றிய ஆரியத்தின் வழிவந்த எச். இராசா - கே.டி. இராகவன் போன்றோர், எந்தத் துணிச்சலில் தமிழ்க் குடமுழுக்கை எதிர்க்கிறீர்கள்? எங்கள் தோளில் அமர்ந்து எங்கள் செவியைக் கடிக்கும் வேலையை அல்லவா, நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள்!
பா.ச.க.வில் வழிமாறிப் போய் சேர்ந்துள்ள அப்பாவித் தமிழர்களுக்கும் சேர்த்துத்தான் நாங்கள் தமிழ்க் குட முழுக்கு - தமிழில் வழிபாட்டுரிமை என்று கேட் கிறோம்.
தமிழர் கோயில்களில் சமற்கிருத வழிபாடு பழமையானது என்கிறீர்களே, எவ்வளவு ஆண்டு பழமையானது? எங்கள் தொல்காப்பியத்தைவிட பழமையானதா? தொல்காப்பியர் கட வுளை வணங்க காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல், பெரும்படை, வாழ்த்து என ஆறு வகை முறைகளைச் சொல்கிறார். எங்களுக்கு ஆதியிலேயே உருவத்தால் ஆனக் கடவுள் வணக்கம் உண்டு, உங்களைப் போல் நாங்கள் “ஸ்மிருதி” வழிபாட்டாளர்கள் அல்லர்! கோயில் கட்டி வழிபடும் மரபினர்! உங்கள் இரிக், எசூர், சாம, அதர்வண வேதங்களில் சிவலிங்க வழிபாடு இருக்கிறதா? இல்லை!
கடவுளையே உரிமையுடன் கேள்வி கேட்ட மரபு எங்களுடைய தமிழ் மரபு! கடவுளை உரிமையுடன் திட்டுவதைக் கூட, “ஏசல் வழிபாடு” என்று எங்கள் முன்னோர்கள் ஒரு மரபாக எங்களுக்கு வழங்கி யிருக்கிறார்கள். “கடவுளே, உனக்குக் கண்ணில்லையா? உன் கண் அவிந்து போச்சா? என் துன்பத்தை ஏன் போக்கவில்லை?” என்று இன்றைக்கும்கூட எங்கள் தாய்மார்கள் தங்கள் துயரத்தைப் போக்க தெய்வத்திடம் உரிமையாக வேண்டுகோள் வைப்பார்கள். இது தெய்வத்தை அவமதிக்கும் நோக்கத்தில் அல்ல, “உன்னை விட்டால் எனக்கு வேறு கதி ஏது?” என்ற ஏக்கத்தில் வரும் உரிமைச் சீற்றம்!
“ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய தோழனுமாய் யான்செய்யுந் துரிசுகளுக் குடனாகி” என்று சிவபெருமானை “தோழன்” என்று பல இடங்களில் அழைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார்! ”தான் செய்யும் தவறுகளுக்கும் நீ உடந்தையாக இருக்கிறாய்!” என்று உரிமையோடு இறைவனிடம் வேண்டுகிறார். சுந்தரர் அந்தக் காலத்திலேயே சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்.
திருநாவுக்கரசர், அம்மையுமாய் அப்பனுமாய் அன்புடைய மாமனுமாய் மாமியுமாய் என்று குடும்பப் பாசத் துடன் சிவபெருமானை அழைத்தவர். இறைவனோடு தமிழர் ஆன்மிகத்தில் உள்ள இந்த நெருக்கமும், உறவும் ஆரிய ஆன்மிகத்தில் இருக்கிறதா?
தமிழர்களின் தெய்வங்களை நீங்கள் வணங்கலாம். ஆனால், தமிழர்களின் தெய்வங்களை ஆரியத்தின் கைப் பாவைகளாக சித்தரிக்க உங்களை அனுமதிக்க மாட்டோம்.
வைணவத்தில், கம்பராமாயணத்தின் யுத்த காண்டத்தில் கடவுள் வாழ்த்துப் பாடிய கம்பர், “ஒன்றே என்னின் ஒன்றேயாம், பல என்று உரைக்கின் பலவே யாம் / அன்றே என்னின் அன்றேயாம், ஆமே என்னின் ஆமேயாம் / இன்றே என்னின் இன்றேயாம், உளது என்று உரைக்கின் உளதேயாம் / நன்றே நம்பி குடி வாழ்க்கை நமக்கு இங்கு என்னோ பிழைப்பு? அம்மா!” என்றார். அதாவது, கடவுள் ஒன்றே என்றால், ஒன்று தான். பல என்றால் பல தான். இல்லை என்றால் இல்லை தான். கடவுள் பிழைப்பே இப்படி இருக்கும் போது, நம் பிழைப்பு என்னாவது என்று கடவுள் வாழ்த்துப் பாடுகிறார் கம்பர்!
தமிழினத்தில் பிறந்த கடவுள் மறுப்பாளர்களுக்கும் தமிழர்களின் இந்து மதத்தில் இடமுண்டு! அவர்களின் தங்கள் இனத்தின் ஆன்மிக உரிமையை, தங்களின் தாய் மொழி உரிமையை பாதுகாக்கப் போராடுவதற்கு உரிமையுள்ளோர் ஆவர். அவர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள என்ன உரிமை இருக்கிறது என்று கேட்பதற்கு, எச். இராசா – கே.டி. இராகவன் போன்ற ஸ்மார்த்தர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?
கடவுளை உரிமையோடு நெருங்கி உறவாடும் சுதந்திரம் - விமர்சிக்கும் சுதந்திரம் இந்து மதத்தில் உள்ளது. இதுதான் இந்து மதத்தின் தனிச்சிறப்பு! இந்து மதத்தை விமர்சிப்பதற்காக ஒருவரை, இந்து மதத்தைவிட்டு நீக்கிவிடவும் முடியாது. அந்த அதிகாரம் இந்து மதத்தில் யாருக்கும் கிடையாது.
இந்தியாவுக்கே சிவ நெறி (சைவ) – திருமால் நெறி (வைணவ) ஆன்மிகத்தை வழங்கிய இனம் – தமிழினம்! இந்து மதம் என்ற பெயர் ஆங்கிலேய ஆட்சி கொடுத்தது. இதை காலஞ்சென்ற பெரிய சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சுவாமிகள், “தெய்வத்தின் குரல்” நூலில் குறிப்பிட்டுள்ளார். “நாமெல்லாம் சிவனை வணங்குவோர், விஷ்ணுவை வணங்குவோர், காளியை வணங்குவோர், வைசேஷியர்கள், நியாய வைசேஷியர்கள் என்று பலவாறு பிரிந்து கிடந்தோம். நம்மையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து, வெள்ளைக்காரன் “இந்து” என்று பெயரிட்டான். நாம் பிழைத்துக் கொண்டோம்” என்று நன்றியுடன் கூறுகிறார். (“தெய்வத்தின் குரல்”, பாகம் – 1, பக்கம் 267).
இப்படிப்பட்ட பன்மைத்தன்மை கொண்ட இந்து மதத்தை ஒற்றைக் கோட்பாடும், ஆரியத் தலைமையும் கொண்ட புதிய இந்து மதமாக மாற்றிட ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க. பரிவாரங்கள் படாதபாடுபடுகின்றன. ஆட்சி அதிகாரத்தை தன்னல நோக்கில் தவறாகப் பயன்படுத்துகின்றன.
ஐரோப்பா முழுவதும் கிறித்துவர்கள் இருந்தாலும், அது ஒரே தேசமாக இல்லை! இசுலாமியர்களின் அரபு நாடுகள் அனைத்தும் ஒரே தேசமாக இல்லை! ஏனெனில், மதம் ஒரு மெய்யியல்! அது இனம் கடந்து, மொழி கடந்து பரவக்கூடியது. கிறித்துவம் போல், இசுலாம் போல் இந்து மதம் நாடு கடந்து பரவாமல் போனதற்கு யார் காரணம்? பிறப்பிலேயே வர்ணசாதி அறிவித்த ஆரிய வைதீக மதப்பிரிவினர்தான் காரணம்! இந்தியாவில் பிறந்த புத்த மதம் எத்தனை நாடுகளில் பரவியுள்ளது! இந்து மதம் வெளி நாடுகளில் பரவாமல் போனதற்கு எச். இராசா - கே.டி. இராகவன் வலியுறுத்தும் ஆரிய வர்ணா சிரம வைதீக வாதம்தான் காரணம்!
இந்து மதத்தில், ஒரே தெய்வம் - ஒரே ஆசான் - ஒரே தத்துவம் என்பதெல்லாம் கிடையாது. இங்கு யாரும் இந்து மதத்திலிருந்து ஒருவரை நீக்க முடியாது! யாரையும் அதிகாரம் செய்ய முடியாது! இதில், தமிழுக்கு எதிராக - தமிழர்களுக்கு எதிராக வாத்தியார் வேலை பார்ப்பதற்கு ஆரியத்துவாவாதிகளுக்கு என்ன உரிமை இருக்கிறது?
ஆரியத்தை பேசிக் கொண்டு, அதைத் தந்திரமாக இந்துத்துவா என்று நீங்கள் திரிக்கிறீர்கள்! இலங்கையில் எங்கள் தமிழர்கள் கட்டிய இந்துக் கோயில்களை இடித்தார்களே, அதை நீங்கள் கண்டித்தீர்களா? இப்போதும், அங்கு இந்துக் கோயில்களை இடித்து - பௌத்த விகாரைகளை வைத்துக் கொண்டிருக்கிறார்களே, அதை உங்கள் மோடியும், அமித்சாவும் கண்டித்தார்களா? பா.ச.க.வின் வெளியுறவு அமைச்சர்கள் சுஷ்மா சுவாராசும், செயசங்கரும் கண்டித்தார்களா? தடுத்தார்களா? இல்லை! அந்த சிங்களர்கள், ஆரியர்கள் என்பதால் அவர்களுடன் இன்றைக்கும் பா.ச.க. அரசு நல்லுறவு பேணி வருகிறது! தமிழினப் படுகொலைக் குற்றவாளி கோத்தபய, இலங்கையின் குடியரசுத் தலைவரானவுடன் அவர்களுடன் உள்ள உறவு மேலும் நெருக்கமாகிவிட்டது.
இந்து மத பாதுகாப்பில் உங்களுக்கு உண்மையான அக்கறையில்லை! ஆரிய மேலாதிக்க வைதீகப் பாதுகாப்பில்தான் நீங்கள் “இந்துத்துவா” என்றுகூறி அப்பாவி இந்துக்களை ஏமாற்றி, உங்கள் ஆதிக்கத்தின் கீழ் திரட்டிக் கொள்கிறீர்கள். தமிழ்நாட்டு – தமிழீழ இந்துக்களை, நீங்கள் மதிப்பதில்லை! அவர்களின் நலனில் - உரிமையில் நீங்கள் அக்கறை காட்டுவதில்லை! ஏனெனில், நீங்கள் ஆரியத்துவா பேசிக் கொண்டிருக்கிறீர்கள்! இதைத்தான் உங்களது பேச்சுகள் - செயல்பாடுகள் அம்பலப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
எங்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவிருந்த இசுலாமியத் தோழர்களை “பயங்கரவாதிகள்” என எழுதுகிறார் பா.ச.க.வின் எச். இராசா அவர்கள். அவர் பார்வையில், அறவழி ஆர்ப்பாட்டம் நடத்துவதுகூட “பயங்கரவாதம்” போலிருக்கிறது!
முசுலிம்களுடன் உங்களுக்கு எந்த உறவும் இல்லையா? இந்த இசுலாமியர்கள் “பயங்கரவாதிகள்” என்றால், உங்கள் பா.ச.க. அமைப்பில் முக்தர் அப்பாஸ் நக்வி போன்றோரை வைத்துள்ளீர்களே, அவர்கள் யார்?
சொந்த மதத்தை, சொந்த இனத்தைக் காட்டிக் கொடுத்தால் நீங்கள் யாரையும் சேர்த்துக் கொள்வீர்கள், தங்களின் ஞாயமான உரிமைக்குக் குரல் கொடுப்போரை “பயங்கரவாதிகள்” என்பீர்கள்! பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்று முக்தர் அப்பாஸ் நக்வி போன்ற முசுலிம்களை சொல்ல வைக்கிறீர்கள். அதற்காக அவர்களுக்கு அமைச்சர் பதவி தருகிறீர்கள்.
நீங்கள் - ஆரியத்துவாவை இன்னும் விரிவாகப் பேச வேண்டும் என்பதே என் விருப்பம்! நீங்கள் இப்படியே பேசுங்கள்; ஆரிய வர்ண சாதி வாதத்தை - ஆரிய சமற்கிருதத்தைத் தூக்கி வைத்துப் பேசுங்கள்; அப்போதுதான் உங்களிடம் ஏமாந்து கிடக்கும் எங்கள் தமிழர்கள் விழிப்புணர்வு பெறுவார்கள்! உங்களின் உண்மை உருவத்தை அடையாளம் கண்டு கொள்வார்கள்!
நாங்கள் தமிழர்கள் - எல்லோரையும் அரவணைக்கும் இனத்துக்குச் சொந்தக்காரர்கள்! மதத்தால் வேறுபட்டவர்களாக இருந்தாலும், இசுலாமியர்களும், கிறித்தவர்களும் தமிழர்களே! ஒரு மரத்தின் கிளைகள் நாங்கள்! மதம் என்பது ஒரு மெய்யியல்! ஓர் இனத்தில் பல மதங்கள் இருக்கும். எங்களுக்குள் ஓடுவது ஒரே இரத்தம்! எங்களுக்குள் நீடித்த உறவு உண்டு!
விவரம் தெரியாத சில அப்பாவித் தமிழர்களை நீங்கள் ஏமாற்றலாம்; ஆனால், எல்லோரையும் ஏமாற்ற முடியாது!
தமிழர்கள், இதையெல்லாம் புரிந்து கொண்டு தமிழின் பக்கம் இன்னும் உறுதியாக நிற்க வேண்டும். தமிழில் பெயர் வைத்துக் கொள்வது தொடங்கி, சமற்கிருத வழிபாட்டு முறையில் குடும்பச் சடங்குகளை - கோயில் விழாக்களை நடத்துவதைக் கைவிட்டு முற்றிலும் தமிழ்வழியில் செய்வது - தமிழில் வழிபாடு செய்வது என மறைமலையடிகள் போன்ற நம் முன்னோர்கள் காட்டிய பாதையில் இன்னும் எழுச்சியுடன் செயல்பட வேண்டும்!
நம் பாதை மக்கள் திரள் அறப்போராட்டப் பாதை! ஒருநாள் கூத்து நடத்துபவர்கள் அல்லர் நாம்; தொடர்ந்து இலட்சியத்திற்காக நிற்பவர்கள். பதவி - பணம் - விளம்பரம் ஆகிய மூன்றுக்கும் ஆசைப்படாத இலட்சியத் தமிழர்களின் பாசறையாக உள்ள அமைப்பு, தமிழ்த் தேசியப் பேரியக்கம்! தேர்தலில் நிற்பவர்கள் நிற்கட்டும், அவர்களை நாம் கொச்சைப்படுத்தவில்லை. அவர்களை மக்கள் தேர்ந்தெடுக்கட்டும்! ஆனால், தேர்தல் வேலிக்குள் முடங்காத தமிழர்களின் இலட்சியப் பாசறையாகத் தமிழ்த்தேசியத்தை வளர்ப்போம்!
நம் கோயில் உரிமைகள் மீட்புக்காகவும், பல துறை உரிமைகளுக்காகவும் நாம் போராட வேண்டியுள்ளது. அதற்கான தலைமுறையாக, இன்றைக்கு உள்ள இளைய தலைமுறையினர் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். முழுக்க முழுக்கத் தமிழ்ச் சிந்தனைகளை வடிவமைத்துக் கொள்ளுங்கள்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9025162216, பகிரி : 7667077075
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT