உடனடிச்செய்திகள்

Friday, June 30, 2017

வெறியாட்டம்!

வெறியாட்டம்!
கதிராமங்கலத்தில் இந்திய அரசின் எண்ணெய் மற்றும் எரிவளிக் கழகமான ஓ.என்.ஜி.சி. எண்ணெய் குழாய்களில் ஏற்பட்ட எண்ணெய் கசிவைத் தொடர்ந்து ஏற்பட்ட பதட்டமான சூழலில், அறவழியில் போராடிக் கொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது காவல்துறையினர் வன்முறை ஏவி, மக்கள் மீது தாக்குதல் தொடுத்துள்ளனர்.

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. செயராமன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. விடுதலைச்சுடர் உள்ளிட்ட 13 பேர் மீது கொடுந்தாக்குதல் நடத்தி, காவல்துறையினர் கைது செய்து, பந்தநல்லூர் காவல் நிலையத்தில் அடைத்துள்ளனர். அவர்களது தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அ. நல்லதுரை அவர்களும், ஊர் பொதுமக்களும் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

தற்போது ஊரில் பதட்டமான சூழல் நிலவி வருகின்றது. மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: tamizhdesiyam.com

Friday, June 23, 2017

”கதிராமங்கலத்தில் இதுதான் நடக்கிறது?" ஒ.என்.ஜி சி-யை அதிரவைத்த ஆவணப்படம்! விகடன் இணையதளத்தில் வெளியான செய்தி!

”கதிராமங்கலத்தில் இதுதான் நடக்கிறது?" ஒ.என்.ஜி சி-யை அதிரவைத்த ஆவணப்படம்! விகடன் இணையதளத்தில் வெளியான செய்தி!
தஞ்சை மாவட்டம் - கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.யின் பாதிப்புகளை விளக்கும் “கதிராமங்கலம் கதறல்” ஆவணப்படத்தை கடந்த 20.06.2017 அன்று குடந்தையில் நடைபெற்ற போராட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பன்மைவெளி வெளியீட்டகம் வெளியிட்டது. அது குறித்த செய்தி விகடன் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அது வருமாறு : 

கதிராமங்கலத்தில், ஓ.என்.ஜி.சி செயல்படுத்தி வரும் எண்ணெய் எடுக்கும் திட்டத்துக்கு எதிரான ஆவணப்படம் ஒன்று வெளியாகி இருப்பது மத்திய அரசை அதிர வைத்துள்ளது.அந்தப் படத்தைப் பார்த்து மக்கள் கிளர்ந்தெழுந்து விடுவார்கள் என எண்ணிய ஓ.என்.ஜி.சி நிறுவனம்,ஆவணப்படம் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டு மக்களை சாமாதானப்படுத்தும் வேலைகளில் இறங்கியுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது கதிராமங்கலம் கிராமம். கம்பனை ஆதரித்த சடையப்ப வள்ளல், நெற்கதிரை கூரையில் வேய்ந்து கொடுத்த காரணத்தால், கதிர் வேய்ந்த மங்கலம் என்ற பெயர் வந்ததாக வரலாறு. காவிரி ஆறு மற்றும் விக்கிரமனாறு நடுவில் அமைந்துள்ள இந்தக் கிராமம் ஒருகாலத்தில், பசுமைக்குப் பஞ்சம் இல்லா ஊராக இருந்தது.நெல் சொரிந்த வயல்வெளிகள், வரப்பை மறைத்த கரும்புக் காடுகள், குருவிகளும் காக்கைளும் தின்று மிச்சம் வைத்த சோளத் தோட்டங்கள் எனப் பல்வேறு பசுமை அடையாளங்களைத் தாங்கி நின்றிருந்தது கதிராமங்கலம்.

இப்படி தழைத்தோங்கிய விவசாய நிலத்தில்,கடந்த 2002 -ம் ஆண்டு மத்திய அரசின் நிறுவனமான ஓ.என். ஜி.சி எண்ணை எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தியது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு ஆண்டுகள் பல கடந்து விட்ட நிலையில், அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்பைப் படம் பிடித்துக் காட்டும் ஆவணப்படத்தை சமீபத்தில் வெளியிட்டு அதிர வைத்துள்ளது பன்மைவெளி வெளியீட்டகம்.

மக்கள் போராட்டம் 

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.அருணபாரதி, கதிராமங்கல கிராம மக்களுடன் சேர்ந்து "கதிராமங்கலம் கதறல்" என்ற ஆவணப்படத்தை எடுத்துள்ளார். 47 நிமிடம் ஓடக் கூடிய இந்த ஆவணப்படம் ஊர் மக்களின் போராட்டக் காட்சிகளுடன் தொடங்குகிறது. மக்கள் போராட்டம் அரசின் அடக்குமுறை ஆகியவற்றைக் குறித்த செய்திகளை விவரிக்கிறது இந்த ஆவணப்படம்.15 ஆண்டுகளுக்கு முன்பு செழிப்பாக இருந்த கதிராமங்கலம் தற்போது அதன் பசுமைத் தன்மையில் இருந்து எப்படியெல்லாம் சிதைந்துள்ளது என்பதைக் காட்சிகள் எடுத்துரைக்கின்றன. ஊர் பெரியவர்கள்,படித்தவர்கள்,சமூக ஆர்வலர்கள் என அனைவரும் கிராமத்தின் கடந்த கால நிலைமையையும் தற்போதைய நிலைமையையும் விரிவாக அதில் பேசுகின்றனர்.அப்படி பசுமைப் போர்த்தியக் கிராமம் தற்போது குடிதண்ணீருக்கே தள்ளாடி நிற்கிறது என நீள்கிறது இந்தப் படம்.

இப்படியான அவல நிலை வருவதற்கு மத்திய அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி நடைமுறைப்படுத்தியுள்ள திட்டமே காரணம் எனக் காட்சிகளை ஆங்காங்கே அம்பலப்படுத்துகிறது.மத்திய அரசின் கோர முகத்தைக் கிழித்துக் காட்டும் இந்த ஆவணப்படத்துக்குத்தான் தற்போது ஓ.என்.ஜி .சி நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 'இந்த ஆவணப்படத்தை மக்கள் கருத்தில் எடுத்துக்கொள்ளக்கூடாது' என விளக்க அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

இது குறித்து இந்த ஆவணப்படத்தை இயக்கிய தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் அருணபாரதியிடம் பேசியபோது, " 2002 -ல் மத்திய அரசின் நிறுவனமான ஓ.என். ஜி. சி, எண்ணெய் எடுக்கும் இந்தத் திட்டத்தை கதிராமங்கலத்தில் செயல்படுத்தியது.9 இடங்களில் இதற்கான பைப் லைன்கள் அமைத்து திட்டம் செயல்படுத்தப்பட்டது. 

பூமியில் துளை போட்டு இங்கிருந்துதான் குத்தாலத்தில் உள்ள ஆயில் ஃபீல்டு கிடங்குக்கு எண்ணெய் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட நாளில் இருந்து நீர் ஆதாரம் முற்றிலுமாகக் குறைந்து பாலைவனமாகி விட்டது. அதுமட்டுமன்றி நீரில் ஆயில் கலந்துவருவதும் அவ்வப்போது பூமியில் புதைக்கப்பட்டுள்ள பைப் லைன்கள் வெடித்து விபத்து ஏற்படுவதுமான சம்பவங்களும் நடந்துள்ளன. இதில் ஜெயலட்சுமி என்ற பெண்ணின் முகம் பாதிக்கப்பட்டுள்ளது.இப்படியான பல பிரச்னைகளை அனுபவித்து வந்த நிலையில்தான் போராட்டத்தை அந்தக் கிராமத்து மக்கள் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். அந்தப் போராட்டத்தையும் கிராமத்தின் நிலையையும் பதிவு செய்துதான் இந்தப் படத்தை எடுத்துள்ளோம். இந்த ஆவணப்படத்தை கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக, கும்பகோணத்தில் நடைபெற்ற போராட்டத்தில் வெளியிட்டுள்ளோம்.

இந்த ஆவணப்படத்துக்குத்தான் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 'எண்ணெய் எடுக்கும் திட்டம் குறித்து ஆவணப்படங்கள், செய்திகள் அறிக்கைகள் வந்தால் அவற்றை மக்கள் நம்ப வேண்டாம்' என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

ஹைட்ரோ கார்பன்,மீத்தேன் போன்றத் திட்டங்களை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்துதான் இதுவரை ஆவணப்படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த ஆவணப்படும் மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள திட்டத்தால், எப்படி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை விளக்குகிறது.இந்த ஆவணப்படத்தைப் பார்த்து மக்கள் எங்கே திட்டத்தை நிறுத்தி விடுவார்களோ எனப் பயந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது" என்கிறார்.

நன்றி: விகடன் 
http://www.vikatan.com/news/tamilnadu/93126-this-is-what-happening-in-kathiramangalam.html

ஆவணப்படத்தைப் பெற : 
https://www.facebook.com/panmaiveli/photos/a.1461988764024142.1073741828.1460639837492368/1907244619498552/?type=3&theater

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச : 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannotam.com 
இணையம் : www.tamizhdesiyam.com

Wednesday, June 21, 2017

“சிறை மானியக் கோரிக்கையில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் வழங்க வேண்டும்” தமிழ்நாடு முதலமைச்சருக்குப் பெ. மணியரசன் வேண்டுகோள்!

“சிறை மானியக் கோரிக்கையில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் வழங்க வேண்டும்” தமிழ்நாடு முதலமைச்சருக்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் வேண்டுகோள்!
பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, இரவிச்சந்திரன், இராபர்ட் பயஸ், செயக்குமார் ஆகிய ஏழு தமிழர்களும் 26 ஆண்டுகளாக சிறையில் துன்புற்றுக் கொண்டிருக்கிறார்கள். 

இராசீவ்காந்தி கொலை வழக்கில், தடா சட்டத்தின்கீழ் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தில், பேரறிவாளன் சொல்லாத செய்தியை தான் சேர்த்துக் கொண்டதாக அன்றைய விசாரணை அதிகாரி தியாகராசன் அண்மையில் குற்றவுணர்வுடன் கூறியிருந்தார். இது ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல், தடா வழக்கின் கீழ் இராசீவ்காந்தி கொலை வழக்கு விசாரிக்கப்பட்டு எவ்வாறு சோடிக்கப்பட்டது என்பதற்கு எடுத்துக்காட்டாகும். 

மேலும், அவ்வழக்கின் மேல் முறையீட்டில் உச்ச நீதிமன்ற அமர்வுக்குத் தலைமை தாங்கிய நீதிபதி கே.டி. தாமஸ் அவர்கள், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இராசீவ்காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்படாத புதிர்கள் பல இருக்கின்றன, அவர்களுக்குத் தண்டனை குறைப்பு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். 

இவை அனைத்திற்கும் மேலாக இந்த ஏழு தமிழர்களும் 26 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். மன உளைச்சல்களுக்கு ஆளாகித் துன்புறுகின்றனர். தன்னை கருணைக் கொலை செய்துவிடுமாறு இராபர்ட் பயாஸ் அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார். 

இந்நிலையில், நாளை (22.06.2017) தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறைத்துறை மானிய கோரிக்கை வருகிறது. இந்த ஏழு தமிழர்களுக்கும் முதல் கட்டமாக, உடனடி நிவாரணமாக நீண்டகால பரோல் வழங்கி வெளியே அனுப்புமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இதற்கான அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது. 

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhdesiyam.com

Saturday, June 17, 2017

தோழர்கள் திருமுருகன், டைசன், இளமாறன், அருண்குமார் நால்வரையும் விடுதலை செய்க! இன்று (17.06.2017) - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீடு முற்றுகைப் போராட்டம்!

தோழர்கள் திருமுருகன், டைசன், இளமாறன், அருண்குமார் நால்வரையும் விடுதலை செய்க! இன்று (17.06.2017) - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீடு முற்றுகைப் போராட்டம்!
தமிழீழ இனப்படுகொலையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்திய “குற்றத்”திற்காக கைது செய்யப்பட்டு, “குண்டர்” சட்டம் ஏவப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சி ஒருங்கிணைப்பாளர் தோழர் டைசன், தோழர்கள் இளமாறன், அருண்குமார் ஆகிய நால்வரையும் விடுதலை செய்யக் கோரி, இன்று (17.06.2017) தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறுகின்றது.

தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில், பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் ஒருங்கிணைந்து நடத்தும் இப்போராட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கமும் பங்கெடுக்கிறது. நாளை (17.06.2017) மாலை 3 மணிக்கு, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகிலிருந்து முதல்வர் வீட்டை முற்றுகையிடும் பேரணி நடைபெறுகின்றது.

இந்நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், சனநாயக ஆற்றல்களும் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைப்பு விடுக்கிறோம்!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhdesiyam.com 

Sunday, June 11, 2017

“எய்ம்ஸ் மருத்துவமனைக்காக மாவட்டங்களிடையே முரண்பாட்டை வளர்க்கக் கூடாது! இந்திய அரசு உடனடியாக ஓரிடத்தை அறிவிக்க வேண்டும்” பெ. மணியரசன் அறிக்கை!

“எய்ம்ஸ் மருத்துவமனைக்காக மாவட்டங்களிடையே முரண்பாட்டை வளர்க்கக் கூடாது! இந்திய அரசு உடனடியாக ஓரிடத்தை அறிவிக்க வேண்டும்” தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
தமிழ்நாட்டில் “அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனை”யை (AIIMS) எங்கு நிறுவுவது என்பதில் தமிழர்களிடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் – செங்கிப்பட்டியில் நிறுவிட தமிழ்நாடு அரசு ஏற்கெனவே பரிந்துரைத்துள்ளது என்ற செய்தி அண்மையில் வெளியானவுடன், மதுரையில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை அ.இ.அ.தி.மு.க. அமைச்சர்களும் மற்றவர்களும் தீவிரமாக முன் வைக்கிறார்கள். செங்கிப்பட்டியில்தான் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை தஞ்சைப் பகுதியினர் தீவிரமாக முன் வைக்கிறார்கள்.

தஞ்சையா, மதுரையா என்ற போட்டியில் தீவிரமாக இறங்க வேண்டியதில்லை. அந்தந்தப் பகுதியினரும் அவ்வாறு கோரிக்கை வைப்பதில் தவறில்லை. ஆனால், அதே வேளை அக்கோரிக்கையை தமிழர்களிடையே மாவட்ட முரண்பாடாக வளர்த்து தீவிரப்படுத்தக் கூடாது.

இம்முரண்பாட்டை மேலும் வளரவிடும் நோக்கத்தில், இந்திய அரசு தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் இடத்தேர்வை தள்ளிப்போடக் கூடாது. இம்முரண்பாட்டை சாக்காக வைத்து, தமிழ்நாட்டுக்குரிய எய்ம்ஸ் மருத்துவமனையை வேறு மாநிலத்துக்குக் கொண்டு போகவும் கூடாது.

இந்திய அரசு உடனடியாக இதில் ஒரு முடிவெடுத்து தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை அறிவிப்பதுடன், அதற்கான பணிகளையும் தொடங்க வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு திரைமறைவு வேலை எதிலும் ஈடுபடாமலும் பொறுப்பைத் தட்டிக் கழிக்காமலும் மேற்கண்டவாறு ஒரு முடிவை எடுக்க இந்திய அரசை வலியுறுத்த வேண்டுமென்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் பொது நல அக்கறையாளர்களும் இச்சிக்கலை தமிழர்களிடையே முரண்பாட்டையும் பிளவையும் உண்டாக்கும் வகையில் வளர்க்கக் கூடாது. இழப்புக்கு மேல் இழப்பை அன்றாடம் சந்தித்துவரும் தமிழர்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையில் இதை வளரவிடவும் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhdesiyam.com  

Sunday, June 4, 2017

*அவசர செய்தி:* பெ.மணியரசன் அவர்கள் கைது.

*அவசர செய்தி:* பெ.மணியரசன் அவர்கள் கைது.


சற்றுமுன்:-

*உழவர் போராட்டக்களத்தில் தமிழக உழவர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து அறவழியில் போராடிவரும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அவர்கள் கைது.*

*மீத்தேன் திட்ட எதிர்ப்பு மக்கள் திரள் போரட்டத்தில் பங்கேற்க சென்றுகொண்டிருந்தபோது கதிராமங்களம் செல்லும் வழியில் குடந்தை புறவழிச்சாலையில் அய்யா பெ.மணியரசன் அவர்ளின் காரை வழிமறித்து கைது செய்துள்ளது தமிழக காவல்துறை.*

*தமிழக அரசே!*
*விடுதலை செய்!*
*அய்யா பெ.மணியரசன் அவர்களை உடனடியாக விடுதலை செய்!*
*அநீதிக்கு எதிராக அறவழியில் சனநாயகமுறையில் போராடும் தலைவர்கள் மீது அடக்குமுறை ஏவாதே!*

#ReleaseManiyarasan

Friday, June 2, 2017

மீத்தேன் எதிர்ப்புத் தலைவர் பேராசிரியர் த. செயராமன் உள்ளிட்ட 11 பேர் சிறையிலடைப்பு! பெ. மணியரசன் கண்டனம்!

மீத்தேன் எதிர்ப்புத் தலைவர் பேராசிரியர் த. செயராமன் உள்ளிட்ட 11 பேர் சிறையிலடைப்பு! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கண்டனம்!

இந்திய அரசின் எண்ணெய் எரிவளிக் கழகம் (ஓ.என்.ஜி.சி.), தஞ்சை மாவட்டம் – கதிராமங்கலத்தில் புதிதாக எரிவளிக் குழாய்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது, அப்பணியை நிறுத்தக் கோரி அறவழியில் எதிர்ப்பைத் தெரிவித்த இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் – பெண்களை தமிழ்நாடு காவல்துறை இன்று (02.06.2017) காலை கைது செய்து, மண்டபங்களில் அடைத்து வைத்திருந்தது.

அவர்களில் 11 பேரைத் தேர்வு செய்து, அவர்கள் மீது பிணை மறுப்புப் பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, இன்றிரவு 10.30 மணிக்கு மேல் கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் அவர்களை நிறுத்தி, சிறைக்கு அனுப்பியுள்ளது காவல்துறை!

அண்மையில் இதே கதிராமங்கலத்தில் ஏற்கெனவே எண்ணெய் எரிவளிக் கழகம் குழாய்ப் பதிக்க வந்தபோது, கிராம மக்கள் ஒட்டுமொத்தமாகத் திரண்டு அம்முயற்சியைத் தடுத்தனர். இன்று பெரும் எண்ணிக்கையில் காவல்துறையினரைத் திரட்டி வைத்துக் கொண்டு, மக்களுக்கு எதிராகப் போர் புரிவது போல் – எரிவளிக் குழாய்களை இறக்க முயன்ற போது, மக்கள் திரண்டு தடுத்துள்ளார்கள்.

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்புத் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. செயராமன் மற்றும் அவ்வமைப்பின் பொறுப்பாளர்கள் விசயரங்கன், சீனிவாசன் மற்றும் ம.தி.மு.க.வின் மாநிலப் பொறுப்பாளர் ஆடுதுறை முருகன் உள்ளிட்ட 11 பேரை இன்று சிறையில் அடைத்துள்ளார்கள்.

தமிழர் மரபுவழி வேளாண் அறிவியலாளர் ஐயா கோ. நம்மாழ்வார் தொடங்கி வைத்த மீத்தேன் திட்ட எதிர்ப்புப் போராட்டம், காவிரி டெல்டா மாவட்டங்களில் மாபெரும் மக்கள் இயக்கமாய் வளர்ச்சியடைந்த போது, அன்றைய முதலமைச்சர் செயலலிதா அவர்கள், மக்கள் உணர்வை மதித்து மீத்தேன் எடுக்கத் தடை ஆணை போட்டார்.

மராட்டிய மாநிலம் செய்தாப்பூரில் அணுமின் ஆலைக்கான கட்டுமானப் பணிகள் வேகமாக நடந்து வந்த போது, அங்கு அணுஉலை கூடாது என்று மக்கள் போராடினர். அப்போதிருந்த மராட்டிய மாநிலக் காங்கிரசு ஆட்சி, மக்கள் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து செய்தாப்பூர் அணுஉலைத் திட்டத்தை நிறுத்தி வைக்குமாறு இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தது. அவ்வாறே அத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

கடந்த பல ஆண்டுகளாக காவிரி டெல்டாவின் நஞ்சை நிலங்களில் பெட்ரோலியம் மற்றும் எரிவளி எடுக்கப்பட்டு வரும் பல ஊர்களில், நிலத்தடி நீர் நஞ்சாகி – வயல் வெளியும் சாகுபடிக்கு லாயக்கற்ற இரசாயண தரிசுகளாக மாறின. குடிநீருக்கும் வழி இல்லாத நிலை ஏற்பட்டது. இந்த அவலங்களைப் பார்த்த அனுபவத்தில் காவிரி டெல்டா மக்கள் எண்ணெய் எரிவளிக் கழகம் பெட்ரோலியம் மற்றும் எரிவளி எடுப்பதை கைவிடக் கோரிப் போராடி வருகிறார்கள்.

தமிழ்நாடு அரசு மக்களின் இந்த உணர்வைப் புரிந்து கொண்டு, விளைநிலங்களில் எண்ணெய் மற்றும் ஐட்ரோகார்பன் உள்ளிட்ட எரிவளி ஆகியவற்றை இந்திய எண்ணெய் எரிவளிக் கழகம் எடுக்கத் தடை விதித்திருக்க வேண்டும். மாறாக, மக்கள் மீது தமிழ்நாடு அரசு போர் தொடுக்கிறது!

கதிராமங்கலத்தில் எண்ணெய் எரிவளிக் கழகம் எரிவளிக் குழாய்கள் பதிப்பதை சனநாயக வழியில் எதிர்த்த மக்களை தமிழ்நாடு அரசு கைது செய்வதும், அவர்களில் முன்னோடிகளாக உள்ளவர்களை சிறையில் அடைப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்க செயல்! அவர்கள் அனைவரையும் நிபந்தனையின்றி உடனே விடுதலை செய்ய வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களைக் கேட்டுக் கொள்கிறது.

மக்கள் மீது அடக்குமுறை ஏவுவது, தொடக்கத்தில் ஆட்சியாளர்களுக்கு சுகமாகவே இருக்கும். பின்னர் அதுவே அவர்களுக்கு சோகமாக மாறிவிடும் என்பதுதான் வரலாறு தந்துள்ள பாடம்! நரேந்திர மோடி அரசு மகிழத்தக்க வகையில் தமிழ்நாட்டு மக்கள் மீது அடக்குமுறை ஏவுவது சனநாயகமற்ற எதேச்சாதிகார நடவடிக்கை மட்டுமின்றி, தமிழ்நாடு ஆட்சியாளர்கள் தங்களைத் தாங்களே வீழ்த்திக் கொள்ளும் செயலாகவும் அமையும் என்பதைத் தெரிவித்து, இந்த அடக்குமுறைப் பாதையைக் கைவிட வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhdesiyam.com 

தொடரும் குண்டாஸ்? : 10 பேரை குறிவைக்கிறதா இந்திய அரசு? பெ. மணியரசன் செவ்வியுடன் மின்னம்பலம் இணைய இதழில் கட்டுரை!

தொடரும் குண்டாஸ்? : 10 பேரை குறிவைக்கிறதா இந்திய அரசு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் செவ்வியுடன் மின்னம்பலம் இணைய இதழில் கட்டுரை!

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன், தமிழர் விடியல் கட்சி ஒருங்கிணைப்பாளர் தோழர் டைசன் உள்ளிட்ட நால்வர் மீதான குண்டர் சட்ட வழக்கைத் தொடர்ந்து, மேலும் பத்து செயல்பாட்டாளர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய இந்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்களின் செவ்வியுடன் மின்னம்பலம் இணைய இதழில் வெளியாகியுள்ள கட்டுரை வருமாறு :

2௦௦9 ஆம் ஆண்டு மே மாதம் ஈழத்தில் சிங்கள அரசால் கொல்லப்பட்ட தமிழர்களுக்கான நினைவேந்தல் கூட்டத்தை மெரினா கடற்கரையில் நடத்தினார் என்பதற்காக... மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியையும், அவரது சகாக்கள் இருவர் தமிழர் விடியல் கட்சியை சேர்ந்த இளமாறன் ஆகிய நால்வரை சில நாட்களுக்கு முன் குண்டர் சட்டத்தில் கைது செய்தது தமிழக அரசு.

“மத்திய அரசின் ஆணைக்கிணங்க மாநில எடப்பாடி அரசு செயல்படுகிறது. அதன் வெளிப்பாடுதான் இந்த கைது” என்று கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில்...

காவிரி உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசை எதிர்த்துப் போராடும் மேலும் சில அமைப்புகளை சேர்ந்தவர்களையும் குண்டர் சட்டத்தில் அடைக்க அரசு தயாராகிவருவதாக தகவல்கள் கசிந்துவருகின்றன.

பெ.மணியரசன் தலைமையிலான தமிழ்த்தேசியப் பேரியக்கம் மத்திய அரசின் இந்தித் திணிப்பு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது, தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பணிகளில் தமிழர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காதது ஆகியவற்றை எதிர்த்து தொடர்ச்சியாக கடுமையான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

கடந்த வாரம் காவிரி விவகாரத்துக்காக தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பில் பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைந்து ஒரு வாரம் ரயில் மறியல் போராட்டங்கள் நடத்தினர். இவை பெரும்பாலுமே மத்திய அரசை எதிர்த்து நடத்தப்பட்டு வந்த போராட்டங்கள். திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதையும் இந்த இயக்கங்கள் கண்டித்துவருகின்றன.

இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாட்டில் தொடர்ந்து நடக்கும் போராட்டங்களை ஒடுக்கும் வகையில்... இந்த அமைப்புகளில் ஒவ்வொரு அமைப்பில் இருந்தும் ஒருவரை குண்டர் சட்டத்தில் கைது செய்வது என்ற தகவல் உளவுத்துறை வட்டாரத்தில் சில நாட்களாக உலவி வருகிறது.
இந்த பட்டியலில் தமிழ் தேசிய பேரியக்கத்தை சேர்ந்த அருணபாரதி, இயக்குனர் வ. கௌதமன் உள்ளிட்டோர் இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து இயக்குனர் வ. கௌதமன் வெளியிட்டிருக்கும் காணொளியில்,

“மத்திய அரசுக்கு எதிராக திருச்சியில் நடந்த ஐயா பழ. நெடுமாறன் தலைமையிலான போராட்டத்தில் கலந்துகொள்ள சென்று கொண்டிருந்த என்னை, சென்னை கத்திப்பாரா பகுதியை உள்ளடக்கிய செயின்ட் தாமஸ் காவல் நிலைய அதிகாரி அழைத்தார். ‘என்ன சார்... கத்திபாரா பாலத்துக்கு பூட்டு போட்ட வழக்கில் 15 நாள் வந்து கையெழுத்து போட்டீங்க. அப்புறம் வரவே இல்லை. கொஞ்சம் வந்துட்டு போங்களேன்’ என்று அழைத்தார். நாங்கள் அந்த வழக்கில் பிணையில் வந்துவிட்டோம். பிணை நிபந்தனைகளை பின்பற்றினோம். இப்போது திடீரென ஏன் அந்த அதிகாரி அழைக்கிறார் என்று ஆராயும்போதுதான்...திருமுருகன் காந்தியை தொடர்ந்து... தமிழ் உரிமைக்காக களத்தில் தொடந்து போராடும் தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மத்திய அரசு உத்தரவிட்டு அதை மாநில அரசு அதை செயல்படுத்த தயாராகிவிட்டது என்று எங்களுக்கு உறுதியான தகவல் கிடைத்துள்ளது.

என்னையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய திட்டமிட்டுள்ளார்கள். ஐயா மணியரசன் அவர்களது தமிழ் தேசிய பேரியக்கத்தில் செயல்பட்டு வரும் அருண பாரதி, லயோலா கல்லூரியில் மாணவர்களோடு உண்ணாவிரதம் இருந்த செம்பியன், என்னோடு கத்திபாரா பாலத்தை பூட்டு போட்ட தம்பிகள் அருள்தாஸ், பிரபாகரன் என்று பத்து பேர் மீது குண்டர் சட்டம் பாய்ச்ச ஏற்பாடுகள் நடந்துவருகிறது.

இதைக் கண்டு நாங்கள் அஞ்ச மாட்டோம். திருமுருகனை கைது செய்தால், எங்களைக் கைது செய்தால் கேட்க ஆளில்லை என்று நினைத்தார்களா? கைது செய்து பாருங்கள்” என்று உணர்ச்சிகரமாக பேசியிருக்கிறார் வ. கௌதமன்.
இதுபற்றி தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசனிடம் பேசினோம்.

"இப்படிப்பட்ட தகவல்கள் இரண்டு நாட்களாக எங்களுக்கும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அது உண்மையாக இருக்குமானால்... நாங்கள் கைதாக தயாராக இருக்கிறோம். இந்த கைதுகள் நடந்தால்... அது, மத்திய அரசு தமிழர் பகை அரசுதான் என்று தானே அம்பலப்படுத்தும் நடவடிக்கையாகவே இருக்கும்.

மேலும் மத்திய அரசின் தமிழர் பகை செயல்பாடுகளை எங்கள் பாமர தமிழன் தமிழச்சிகளுக்கு எடுத்துச் சென்று சேர்க்கும் வகையில் தான் இருக்கும். மத்திய அரசுக்கு ஒத்துழைக்கும் மாநில அரசும் பதவிக்காக இனத்தைக் காட்டிக் கொடுக்கும் துரோக அரசாகவே அறியப்படும். கைதுக்கு நாங்கள் தயார்" என்றார் உறுதியாக நிதானத்துடன்.

திருமுருகன் கைது மூலம் அரசியல் சூழலை திசைதிருப்ப முயன்ற மாநில அரசு, தொடர்ந்து குண்டாஸ் கைதுகளை அரங்கேற்றினால்... அரசியல் சூழலில் சுழல் உறுதி.

நன்றி: https://www.minnambalam.com/k/2017/06/01/1496300130 

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhdesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT