உடனடிச்செய்திகள்

Sunday, August 25, 2013

“உழைப்பு சக்தியின் தேய்மான நிதியே ஓய்வூதியம் என்ற கோட்பாட்டை ஆட்சியாளர்களுக்கு உணர்த்த வேண்டும்”

“உழைப்பு சக்தியின் தேய்மான நிதியே ஓய்வூதியம் என்ற
கோட்பாட்டை ஆட்சியாளர்களுக்கு உணர்த்த வேண்டும்”
புதிய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து நடைபெற்ற தொழிலாளர்
உண்ணாப் போராட்டத்தில் தோழர் கி.வெங்கட்ராமன் பேச்சு!










ஆவடியில் இயங்கும் இந்திய அரசுப் பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான திண்ணூர்தி தொழிற்சாலை (Heavy Vehicles Factory - HVF)யிலும், பல்வேறு அரசுத் தொழில் நிறுவனங்களிலும் 2004ஆம் ஆண்டு தொடங்கி நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து, 25.08.2013 ஞாயிறு அன்று ஒருநாள் அடையாளப்பட்டினிப் போராட்டம் நடைபெற்றது.

புதிய ஓய்வூதியத் திட்ட மறுசீரமைப்பு நலச்சங்கம் (NPSERA) சார்பில், ஆவடி பேருந்து நிலையம் அருகில்காலை 8 மணிக்கு தொடங்கி மாலை வரை நடைபெற்ற இப்போராட்டத்திற்குசங்கத்தின் தலைவர் திருமு.கண்ணன்செயலாளர் திருஇரட்சகராஜா ஆகியோர் தலைமையேற்றனர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் மு.வீரபாண்டியன், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பிரடெரிக் ஏங்கல்ஸ், தமிழ்நாடு ஆசிரியர் ஊழியர் சங்க மாநிலத் தலைவர் திருமதி. தமிழ்ச்செல்வி, பத்திரிகையாளர் திரு. டி.எஸ்.எஸ்.மணி, தமிழின மான மீட்பு இயக்கத் தலைவர் திரு. சேக்காடு ஐ.மனோகரன் உள்ளிட்ட பல்வேறு கட்சி, அமைப்புத் தலைவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

நிறைவாக, மாலையில்தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் உண்ணாப் போராட்டத்தை பழரசம் வழங்கி முடித்து வைத்து, நிறைவுரையாற்றினார். அவர் பேசியதாவது:

“காலை முதல் மாலை வரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ள தொழிலாளத் தோழர்கள் அனைவருக்கும் முதலில் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்துப் போராடுகின்ற நாம், ஓய்வூதியத்தின் கோட்பாட்டை புரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியமெனக் கருதுகிறேன்.

வெறும் 33 ரூபாய்க்கு மேலே ஒருவர் சம்பாதித்தால், அவர்கள் வறுமைக் கோட்டுக்கு மேலானவர் என வரையறுத்துள்ள இந்தியத் திட்டக்குழுத் துணைத் தலைவராக உள்ள மாண்டேக் சிங் அலுவாலியா, தன்னுடைய அலுவலக கழிப்பறையை சீரமைப்பதற்கு மட்டும் 66 இலட்சம் ரூபாயை செலவழித்துள்ளார்.

அவர் கேட்கிறார், தொழிலாளர்களுக்கு வெறும் சம்பளம் மட்டும் போதுமே, வேலை முடிந்து வீட்டுக்குச் சென்ற பிறகும் உங்களுக்கு எதற்காக சம்பளம் கொடுக்க வேண்டும்? எதற்காக உங்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டுமெனக் கேட்கிறார். உங்களால் நாட்டுக்கு என்ன செல்வமதிப்பு சேர்க்கப்படுகிறது எனக் கேட்கிறார். இது கோட்பாட்டுப் பிரச்சினை.

ஓய்வூதியம் குறித்த கோட்பாட்டை நாம் ஆழமாகப் புரிந்து கொண்டால் தான் அவருக்கு நாம் பதிலளிக்க முடியும். நாம் வாங்குகின்ற சம்பளத்தின் ஒரு பகுதி தான் ஓய்வூதியமாக நமக்கு வழங்கப்படுகின்றது என்ற உண்மையை அவருக்கு புரிய வைக்க வேண்டும்.

1976ஆம் ஆண்டு இந்திரா காந்தி பிரமராக இருந்த போது, இந்தியாவில் அவசரநிலைச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. அப்போது போனஸ் வழங்குவது நிறுத்தப்பட்டது. நிறுவனத்திற்கு இலாபம் இருந்தால் மட்டும் தான், அதன் ஒரு பகுதி தொழிலாளர்களுக்கு போனசாகப் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் இலாபமில்லையெனில் போனஸ் கேட்க முடியாது என்றும் சொல்லப்பட்டது.

இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிட்ட போது, நீதிபதி வீ.ஆர்.கிருஷ்ணய்யர் ஒரு சிறப்பானத் தீர்ப்பை வழங்கினார். போனஸ் என்பது நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளம் (Deffered Wage) என அவர் தீர்ப்பு வழங்கினார். போனஸ் என்பது சம்பளத்தின் ஒரு பகுதிதான் என்பதை அத்தீர்ப்பின் மூலம் அவர் உறுதி செய்தார்.

அதே போல ஓய்வூதியம்(Pension) என்பது உழைப்புச் சக்திக்கான தேய்மானம் (Labour Power depreciation). ஒரு எந்திரம் இருக்கிறதென்றால் அதற்கென்று உள்ள வாராண்டி(Warranty) தனியாக வழங்கப்பட்டும் கூட, இருப்பு நிலைக்குறிப்பில்(Balance Sheet) அதன் தேய்மானமும் குறிப்பிடப்படுகின்றது. கட்டிடத்திற்கு தேய்மான நிதி வழங்கப்படுகிறது. அதே போல, உழைப்புச் சக்தியை வெளியிடும் தொழிலாளர்களுக்கான தேய்மானம் தான் ஓய்வூதியம். இதற்குரிய நிதி ஒதுக்கப்பட்டு பணி ஓய்வுக்குப் பிறகு வழங்கப்பட வேண்டும். இதை எல்லா நிலைகளிலும் தொழிற்சங்கத் தோழர்கள் வலியுறுத்த வேண்டும். இதில் உணருவதில், உணர்த்துவதில் எவ்வித சமரசமும் கூடாது.

ஒரு இயந்திரமயமாக்கப்பட்ட தொழிற்சாலையில்(Automated Industry) பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, உடல் உழைப்பாக இருக்கட்டும் அல்லது மூளை உழைப்பாக இருக்கட்டும், நாளொன்றுக்கு சராசரியாக 3200 கலோரிகள் சக்தி தேவைப்படுகின்றது. வயது முதிரும் போது இது நாளொன்றுக்கு 2100 ஆக தேய்கிறது.

ஒரு இயந்திரத்திற்கு பதில் இன்னொரு இயந்திரத்தை அவர்கள் மாற்றிக் கொள்ளலாம். ஆனால், தொழிலாளர்களை அப்படி தூக்கிப்போட்டுவிட முடியாது. எனவே தான், தொழிலாளர் சக்தியின் (Labour power) இந்தத் தேய்மானத்தையே நாம் ஓய்வூதியமாகக் கேட்கிறோம். இந்தக் கோட்பாட்டை நாம் அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டும்.

தொழிற்சங்கங்கள் சமூக உணர்வுடன் வளர்த்தெடுக்கப்பட வேண்டியவை. பொதுப் பிரச்சினைகளில், பொது உரிமைச் சிக்கல்களில் தொழிற்சங்கங்கள் பங்களிப்பு செய்தல் வேண்டும். ஆனால் நடப்பதென்ன? தொழிற்சங்கங்கள் நடைமுறையில் கூட்டு சுயநலமாக (Collective Selfishness) மாறிவிட்டன. தொழிலாளர்களின் இது போன்ற பலவீனங்களை வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கின்ற ஆட்சியாளர்கள், அதற்கென அவர்கள் காலம் எடுத்துக் கொண்டாலும் நம்மை பிளவுபடுத்தி காரியம் சாதிக்கின்றனர்.

அதனால் தான், தொழிற்சங்கங்கள், இரசிகர்களுக்கு ஏற்ப கச்சேரி வாசிக்கும் மன்றங்களாகச் சுருங்கி விட்டன. எனவே, தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் கோரிக்கைகளை மட்டுமின்றி, பொதுப் பிரச்சினைகளிலும் ஆர்வம் செலுத்த வேண்டும். அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்க்கின்ற நாம், அதற்கு அடிப்படையான புதிய பொருளாதாரக் கொள்கையையும் எதிர்த்தாக வேண்டும். அதை எதிர்க்காமல் இதை மட்டும் எதிர்க்க முடியாது. நம்முடைய ஞாயங்களை வலிமையாக உணர்த்த வேண்டும். நாம் போராடுவது வீணல்ல. நம் போராட்டங்களுக்கு வலிமையுண்டு. நம்முடைய ஞாயங்களுக்கும் வலிமையுண்டு. நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடு போராடுவோம்!”

இவ்வாறு தோழர் கி.வெங்கட்ராமன் பேசினார்.

இப்போராட்டத்தில், எச்.வி.எப். தொழிலாளர்களும், தமிழுணர்வாளர்களும் திரளாகப் பங்கேற்றனர். 

“தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்” கருத்தரங்கில் தோழர் பெ,மணியரசன் ஆற்றிய உரை!

“தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்” கருத்தரங்கில் தோழர் பெ,மணியரசன் ஆற்றிய உரை!



தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்’ என்ற தலைப்பில் தமிழர் குடியரசு முன்னணியின் பண்பாட்டு அமைப்பான - தமிழ்த் தேசிய பண்பாட்டு இயக்கம் சார்பில், 24.08.2013 - காரிக்கிழமை(சனி) அன்று சென்னை இலயோலா கல்லூரியில் காலை 9.30 முதல் இரவு 8.30 வரை ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

மாலை 5.30 மணிக்கு நடைபெறும் மூன்றாம் அமர்வில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் ஆற்றிய உரை!

Thursday, August 22, 2013

கர்நாடகம் மேகத்தாட்டுவில் காவிரியில் புதிய அணைகள் கட்ட முயன்றால் தடுத்து முறியடிப்போம்!


கர்நாடகம் மேகத்தாட்டுவில் காவிரியில்
புதிய அணைகள் கட்ட முயன்றால் தடுத்து முறியடிப்போம்!

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவரும்,
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான
தோழர் பெ.மணியரசன் அறிக்கை !

ஆடுதாண்டு காவிரி என்று அறியப்பட்டுள்ள மேகத்தாட்டு வனப்பகுதியில், காவிரியின் குறுக்கே 3 நீர்த்தேக்கங்கள் கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டிருப்பதாக அம்மாநில சட்ட அமைச்சர் ஜெயச்சந்திரா, நேற்று (21.08.2013) பெங்களுருவில் அறிவித்துள்ளார்.

இம்மூன்று நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு 50 ஆ.மி.க.(டி.எம்.சி.) என்றும் கூறியுள்ளார். கர்நாடகத்திலிலிருந்து வெளியேறும் காவிரி உபரி நீரைத் தேக்கி, மின்சாரம் எடுக்கவும், குடிநீருக்குப் பயன்படுத்திக் கொள்ளவும் இவ்வணைகள் கட்டப்படவுள்ளதாகவும் இவற்றிற்கான செலவு மதிப்பீடு ரூ. 600 கோடி என்றும் அறிவித்துள்ளார். இத்திட்டத்தை இறுதி செய்வதற்காக நேற்று பாசன மற்றும் மின்துறை வல்லுநர்கள் கூட்டம் நடந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு நடுவண் அரசின் அரசிதழில் வெளியிட்டப் பிறகு, காவிரியில் புதிய அணைகள் கர்நாடகம் கட்டுவதற்கு முழு உரிமையுண்டு எனறும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்கண்ட மூன்று அணைகள் கட்டப்பட்டுவிட்டால், ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தமிழ்நாட்டிற்கு காவிரியில் வராது. பாலாற்றுக்கு ஏற்பட்ட கதிதான் காவிரிக்கும் ஏற்படும்.

வெள்ளக் காலத்தில் வெளியேற்றப்படும் உபரி நீர் அனைத்தையும் இந்த மூன்று அணைகளும் தேக்கிக் கொள்ளும். 50 டி.எம்.சி. அணை என்பது, இப்பொழுதுள்ள கிருட்டிணராஜசாகர் அணையை விடக் கூடுதல் கொள்ளளவு கொண்டதாகும். கிருட்ஷ்ணராஜ சாகர் அணையின் முழுக் கொள்ளளவு 44 ஆ.மி.க.

கேரளப் பகுதியில் உற்பத்தியாகி வரும் கபினியின் உபரி நீர் முழுவதும் நேரடியாக மேட்டூர் அணைக்கு இப்பொழுது வந்து கொண்டுள்ளது. இந்த கபினி அணையின் உபரி நீர் தமிழகத்திற்கு வராமல் தடுக்கும் சதித்திட்டம் தான் கர்நாடகம் தீட்டியுள்ள மேகத்தாட்டு நீர்த்தேக்கத் திட்டம்.

கிருஷ்ணராஜ சாகரிலிருந்தும், கபினியிலிருந்தும் அருட்காவதி ஆற்றிலிருந்தும் வரும் உபரி நீர் முழுக்க மேட்டூருக்கு இப்பொழுது வந்து கொண்டுள்ளது. இந்நீர் முழுவதையும் தடுத்து தேக்கி வைத்துக் கொள்வதற்காகத்தான் தமிழக – கர்நாடக எல்லையான பில்லிகுண்டுலுவுக்கு மேலே 35 கி.மீ. தொலைவிலுள்ள மேகத்தாட்டுவில் புதிய அணைகள் கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு செயல்படுத்த முனைகிறது.

வெள்ளக் காலத்தில் இப்பொழுதுள்ள கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீராக 50 ஆ.மி.க. வெளியேறுவற்கு வாய்ப்பில்லை. எனவே, உபரி நீர் முழுவதையும் ஒரு சொட்டுக் கூட தமிழ்நாட்டிற்கு விடாமல் தேக்கிக் கொள்ள புதிய அணைகள் கட்ட சதித்திட்டம் தீட்டியுள்ளது.

காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு உபரித் தண்ணீரை கர்நாடகம் தேக்கிக் கொள்ள அனுமதியளித்துள்ளதென்று அம்மாநில சட்ட அமைச்சர் கூறுவது முழுப்பொய். கர்நாடகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 270 ஆ.மி.க. தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்ளும் உரிமைதான் அவர்களுக்கு இருக்கிறதே தவிர, தமிழ்நாட்டிற்கு ஓடிவரும் உபரித் தண்ணீரைத் தேக்கிக் கொள்ள கர்நாடகத்திற்கு எந்த உரிமையும் கிடையாது. அந்த 270 ஆ.மி.க.வையும் தமிழ்நாட்டிற்கு 192 ஆ.மி.க. தண்ணீரை கொடுத்துவிட்டுத்தான் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையோ, தீர்ப்பாயத்தின் தீர்ப்புகளையோ செயல்படுத்தாமல் அடாவடித் தனம் செய்யும் கர்நாடகத்திற்கு நடுவண் அரசின் மறைமுக ஆதரவு இருக்கிறது என்ற துணிச்சலில் தான் கர்நாடக அரசு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல், புதிய அணைகள் கட்டும் திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை பயன்படுத்திக் கொள்ளும் உரிமை தமிழ்நாட்டிற்கு உண்டா இல்லையா என்பதை நடுவண் அரசு தெளிவுபடுத்தியாக வேண்டும். ஏனெனில், அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாகத்தான் எல்லா அநீதிகளையும் அட்டூழியங்களையும் கர்நாடகம் இழைத்து வருகின்றது.

அடுத்து, இந்தியாவுக்குள் தமிழ்நாடு இருக்கிறதா இல்லையா, தமிழ்நாட்டிற்கு நீதி வழங்க வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு இருக்கிறதா இல்லையா என்பதை இந்திய அரசு அறிவித்தாக வேண்டும்.

தமிழ்நாட்டிற்குரிய இப்பொறுப்புகள் இந்திய அரசுக்கு இருக்கிறதென்றால், பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக இதில் தலையிட்டு, மேகத்தாட்டுவில் கர்நாடகம் புதிய அணைகள் கட்டுவதற்கு அனுமதியில்லை என்றும் அந்த முன்மொழிவிற்குக் கண்டனம் தெரிவித்தும் அறிக்கை வெளியிட வேண்டும்.

தமிழக அரசு, உடனடியாக இந்த அபாயத்தை உணர்ந்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, கர்நாடகத்தின் அட்டூழியங்களுக்கு எதிராகவும் நடுவண் அரசின் ஓரவஞ்சனைக்கு எதிராகவும் கண்டன ஆர்ப்பாட்டங்களை தமிழகம் முழுவதும் நடத்த வேண்டும். தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிக் குழுவினரை அழைத்துக் கொண்டு பிரதமரை நேரில் சந்தித்து, தமிழகத்திற்குரிய நீதியை நிலைநாட்ட வற்புறுத்த வேண்டும்.

கர்நாடக அரசு, மேகத்தாட்டுவில் அணைகள் கட்ட முயன்றால் தமிழ்நாட்டிலிருந்து உழவர்களும், தமிழின உணர்வாளர்களும் பல்லாயிரக்கணக்கில் திரண்டு மேகத்தாட்டுவுக்கே சென்று, கால்கோள் விழா நடத்தவிடாமல் தடுப்போம்! அணைகள் கட்டும் முயற்சியை முறியடிப்போம் என்பதை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பிலும், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்ஙனம்,
பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.
ஒருங்கிணைப்பாளர், காவிரி உரிமை மீட்புக் குழு

Tuesday, August 20, 2013

தமிழீழ ஏதிலிகள் மூவரை நாடு கடத்தும் இந்திய அரசின் உத்தரவை திரும்பப் பெறுக! - தோழர் பெ.மணியரசன் அறிக்கை!

தமிழீழ ஏதிலிகள் மூவரை நாடு கடத்தும்
இந்திய அரசின் உத்தரவை திரும்பப் பெறுக!
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை!

தமிழ்நாட்டுத் தமிழர்களின் உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும் இந்திய அரசு, அதன் நீட்சியாக தமிழீழத் தமிழர்களின் உயிரையும், உரிமைகளையும் காவு கொள்ளத் துடிப்பதை 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் போரிலிருந்து நாம் உணர்ந்து வருகிறோம்.

இதன் ஒரு பகுதியாகத்தான், செங்கல்பட்டு சிறப்பு முகாமில் பல்லாண்டு காலமாக இருந்து பின்விடுதலையாகி, தற்போது தாம்பரத்தில் வசித்து வரும் திரு. செந்தூரன், தற்போது திருச்சி நடுவண் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திரு. ஈழநேரு, சென்னை புழல் சிறையில் அடைபட்டுள்ள திரு. சவுந்தரராஜன் ஆகிய மூவரையும் இலங்கைக்கு நாடு கடத்துகின்ற நடவடிக்கையை இந்திய அரசு தொடங்கியுள்ளது.

சிங்களப் பேரினவாத அரசின் ஒடுக்குமுறையிலிருந்து உயிர் பிழைத்து தமிழகத்திற்கு வந்த தமிழீழ ஏதிலிகளை, திரும்பவும் இலங்கை அரசின் இனவாதக் கொடுங்கரங்களிடம் ஒப்படைப்ப தென்பது, ஒரு கசாப்புக்கடையில் ஆடுகளை ஒப்படைப்பது போன்றதுதான்; அவர்களது உயிருக்கு தெரிந்தே விளைவிக்கும் தீங்காகும்.

செந்தூரன் உள்ளிட்ட இம்மூவரும், இந்திய மக்களுக்கும், இந்திய அரசுக்கும் எதிரான எவ்விதக் குற்றங்களிலும் இங்கு  ஈடுபடவில்லை. தம்மை பொய் வழக்குகளில் சிறைவைத்திருப்பதைக் கண்டித்தே தொடர்ந்து, அறவழிப் போராட்டங்களை நடத்தினர்.

மார்வாடி, குசராத்தி சேட்டுகள், மலையாளிகள் என வந்தவனெல்லாம் தமிழகத்தில் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்க, பேரினவாத ஒடுக்குமுறையிலிருந்து தப்பித்து தமிழகம் வரும் தமிழீழ ஏதிலிகளுக்கு சிறையும், நாடு கடத்தல் உத்தரவுகளும் வழங்கப்படுகின்றன.

திபெத், பர்மா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த ஏதிலிகளுக்கு இந்தியாவில் பெரும் சலுகைகள் அளிக்கப்படுவதும், தமிழீழ ஏதிலிகளுக்கு எந்நேரமும் கண்காணிப்பு – கெடுபிடிகளை அதிகப்படுத்தி, அவர்களுக்கு அடிப்படை வசதிகளைக் கூட செய்துத் தர மறுப்பதும், இந்திய அரசின் தமிழினத்திற்கு எதிரான இனப்பாகுபாட்டையே எடுத்துக்காட்டுகிறது.

எனவே, இந்திய அரசு இம்மூவரையும் நாடு கடத்தும் உத்தரவினை திரும்பப் பெற வேண்டும். தமிழ் உணர்வாளர்கள், மாணவர்கள், பொது மக்கள் என அனைத்துத் தரப்பினரும் இக்கோரிக்கையை முன்னேடுத்து போராட வேண்டும். இம்மூவரையும் சூழ்ந்துள்ள ஆபத்திலிருந்து, அவர்களைப் பாதுகாக்க வேண்டும்! 

இவண், 
                                                                           பெ.மணியரசன்
தலைவர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.


இடம்: தஞ்சை



(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

Sunday, August 18, 2013

ஈரோட்டில் நடைபெற்ற சாதி மறுப்புத் திருமணப் பாதுகாப்பு மாநாடு!

ஈரோட்டில் நடைபெற்ற சாதி மறுப்புத்
திருமணப் பாதுகாப்பு மாநாடு!

ஈரோட்டில் 18.08.2013 அன்று சாதி மறுப்பு மக்கள் கூட்டியக்கத்தின் சார்பில் சாதி மறுப்புத் திருமணப் பாதுகாப்பு மாநாடு சிறப்புற நடைபெற்றது.

முன்னதாக மாநாட்டிற்கு ஈரோடு காவல்துறை தடைவிதித்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இது குறித்த முறையீடு செய்யப்பட்டு, அவ்வழக்கில் மாநாடு நடத்த அனுமதிக்குமாறு காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுத் தீர்ப்பளித்த நிலையிலேயே மாநாடு வ.உ.சி. பூங்கா அருகில் நடைபெற்றது.

காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற்ற முழுநாள் மாநாட்டின், மாலை அரங்கிற்கு, தமிழக மக்கள் புரட்சிக் கழகத் தலைவர் தோழர் அரங்க.குணசேகரன் தலைமையேற்றார். தமிழினப் பாதுகாப்பு இயக்கப் பொறுப்பாளர் தோழர் கி.வே.பொன்னையன் மாநாட்டுத் தீர்மானங்களை முன்மொழிந்தார்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் த.செ.மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தோழர் கு.இராமகிருட்டிணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கறிஞர் ஸ்டாலின் குணசேகரன், திராவிடர் கழக வழக்கறிஞர் அருள் மொழி, ஆதித்தமிழர் பேரவைத் தலைவர் தோழர் இரா.அதியமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி, அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றுக் கருத்துரை வழங்கினர்.

மாநாட்டில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  1. இந்திய தமிழ்ச் சமூகத்தில் பெருந்துயரமாகவும் கொடிய குற்றமாகவும் நெடுங்காலமாக நிலவி வரும் சாதிமுறையை எதிர்த்தும் அதன் ஆதிக்கத்தை எதிர்த்தும் போராடி உயிர்நீத்த சாதி ஒழிப்புப் போராளிகளுக்கு இம்மாநாடு தனது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

  1. சாதி ஒழிப்புப் போராட்டத்தில் பண்பாட்டுப் புரட்சியில் முதன்மைப் பாத்திரம் வகிக்கும் சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டதால் உயிர்பறிக்கப்பட்ட மதுரைவீரன் முதல் தருமபுரி இளவரசன் வரை உயிரிழந்த ஈகிகளுக்கு இந்த மாநாடு வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

  1. தருமபுரி இளவரசன் கொலை செய்யபட்டிருந்தாலும் அல்லது தற்கொலைக்குத் தூண்டப்பட்டிருந்தாலும் இந்த மாநாடு அதை வன்மையாகக் கண்டிக்கிறது, இதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்துக் கடுமையாகத் தண்டிக்கவேண்டுமென்று தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

  1. சாதிப் பெயரில் இயங்கும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களின் சாதி அடையாளங்களையும் அகற்ற உடனடியாக உத்தரவிடுமாறு தமிழக அரசை இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

  1. தமிழகத்தின் முதன்மையான அரசியல் கட்சிகள் சாதிக் கட்சிகளோடும சாதிச் சங்கங்களோடும் தேர்தல் கூட்டணி வைப்பதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. அத்தகைய கூட்டணிகளைத் தவிர்க்குமாறு இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

  1. தமிழகத்தின் முதன்மையான அரசியல் கட்சிகள் தமது கட்சிகளில் சாதிய ஆதிக்கத்திற்குத் துணை போகும் நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

  1. குறுகிய சுயநல அரசியல் இலாபத்திற்காகக் காதல்-சாதிமறுப்புத் திருமணங்களை எதிர்க்கும் பா.ம.க. உள்ளிட்ட சாதி அரசியல் கட்சிகளையும் சாதிச் சங்கங்களையும் புறக்கணிக்குமாறு தமிழக மக்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

  1. சாதி வெறியர்களின் அச்சுறுத்தல்களிலிருந்தும் கௌரவக் கொலைகளிலிருந்தும் சாதி மறுப்பு இணையர்களைப் பாதுகாக்க, குடும்ப வன்முறைச சட்டம் போன்ற வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்களுக்கு இணையான  சிறப்புச் சட்டம் இயற்றி, அவர்களுக்கு முழுப்பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துமாறு இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

  1. சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்களுக்கு சட்ட, சமூக, பொருளியல் பாதுகாப்புக்கு வகை செய்யும் தனி ஆணையம் அமைக்குமாறு இம்மாநாடு வலியுறுத்துகிறது.

  1. சாதிமறுப்பு இணையர்களை சாதி மறுப்பாளர்கள் என்றும், அவர்க்ளுடைய  குழந்தைகளை ஏதாவது ஒரு சாதியில் தள்ளி இழிவுபடுத்தாமல் சாதியற்றவர் என்றும்  பதிவு செய்யுமாறு இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

  1. சாதியற்ற குழந்தைகளுக்குத் தொடக்கக் கல்வி தொடங்கி ஆராய்ச்சிக் கல்வி வரை அரசின் முழுப்பொறுப்பில் தரமான இலவசக் கல்வியை வழங்கு!மாறு தமிழக அரசை இந்த மாநாடு  கேட்டுக் கொள்கிறது.


  1. சாதிமறுப்புத் திருமணம் புரிந்தோர் சமூக அங்கீகாரம் பெறும் வகையில் அவர்களை நாட்டின் சிறப்புரிமை பெற்ற குடிமக்கள் என்று அறிவித்துச் சிறப்பிக்க வேண்டும் என்றும்,  இதை ஊடகங்கள் மூலமாக அரசுச் செலவில் பரப்புரை மேற்கொள்ள வேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

  1. சாதிமறுப்புத் திருமண இணையர்க்கும் அவர்களுடைய குழந்தைகளுக்கும் கூடுதல் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று  இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

  1. சாதிமறுப்புத் திருமணம் புரிந்த ஏழைகளுக்குப் பொருளாதாரப் பாதுகாப்புக் கருதி இலவயமாக ஒரு வீடும், கிராமப் புறங்களில் இரண்டு ஏக்கர் நிலமும் வழங்கவேண்டும்.


இம்மாநாட்டில், தமிழின உணர்வாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் திரளாகப் பங்கேற்றனர்.










Saturday, August 17, 2013

“13ஆம் சட்டத்திருத்தத்தையும் மாகாணத் தேர்தலையும் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்” - தோழர் கி.வெங்கட்ராமன் பேச்சு!


“13ஆம் சட்டத்திருத்தத்தையும் மாகாணத் தேர்தலையும்
தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்
மே பதினேழு இயக்க ஆர்ப்பாட்டத்தில்
த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் பேச்சு!



“ஒன்றுபட்ட இலங்கையை வலியுறுத்தும் 13ஆவது சட்டத் திருத்தத்தையும், வடகிழக்கு மாகாண சபைத் தேர்தலையும் தமிழீழத் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்” என, சென்னையில் இன்று(17.08.2013), மே பதினேழு இயக்கம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் பேசினார்.

இலங்கை அரசமைப்பின் 13ஆவது சட்டத்திருத்தம்மாகாணசபைத் தேர்தல் எனும் போலிகளைப் புறக்கணிக்கக் கோரியும், காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாதென வலியுறுத்தியும், இலங்கையில் தொடர்ச்சியாக மசூதிகள் தாக்கப்படுவதை கண்டித்தும், தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு ஒன்றே தமிழர் சிக்கலுக்கான இறுதித் தீர்வு என வலியுறுத்தியும், இன்று (17.08.2013) மாலை, மே பதினேழு இயக்கம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.

இனப்படுகொலைக்கு எதிரான இசுலாமியர் இளைஞர் இயக்க ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் உமர்கயான் கண்டன முழக்கங்களை எழுப்பி, ஆர்ப்பாட்டத்தைத் தொகுத்து வழங்கினார்.

.தி.மு.. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, மனித நேய மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் திரு. தமிமுன் அன்சாரி, விடுதலைத் தமிழ்ப்புலிகள் தலைவர் திரு. குடந்தை அரசன், தமிழக மக்கள் சனநாயகக் கட்சித் தலைவர் திரு. கே.எம்.சேரீப், எஸ்.டி.பி.ஐ(SDPI) மாநிலப் பொதுச் செயலாளர் திரு. நெல்லை முபாரக், திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் அன்பு தனசேகரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தொழிலாளர் பாசறைச் செயலாளர் திரு. சைதை கு.சிவராமன், தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தோழர் சிபி, தொழிலாளர் சீரமைப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் மா.சேகர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

அவரது பேச்சு:

தமிழீழ விடுதலைக் கோரிக்கைக்கு ஒவ்வொரு கட்டத்திலும் முட்டுக் கட்டைகள் போடும் வேலையை இந்தியாத் தொடர்ந்து செய்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாகத்தான் இராசீவ் – செயவர்த்தனா ஒப்பந்தம் 1987-இல் ஏற்படுத்தப்பட்டது. நம்மில் பலர், அந்த இராசீவ் – செயவர்த்தனா ஒப்பந்தத்தில், வடக்கு – கிழக்குப் பகுதிகள் தமிழர்களின் ஒட்டுமொத்த தாயகமாக ஏற்கப்பட்டிருக்கிறது என நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மை அதுவல்ல.

இலங்கைத் தீவின் வடகிழக்கு மாகாணப் பகுதிகளில் தமிழர்களும், அவர்களோடு வேறுபல சமூகத்தினரும் இருக்கின்றனர். அவர்களது தாயகமே அது என்றே குறிப்பிட்டுள்ளனர். அதாவது, அப்பகுதியில் நிலவும் இனச்சமநிலை என்பது இலங்கை முழுவதுமுள்ள இனச்சமநிலையை ஒத்திருப்பதைப் போல் குறிப்பிடப்பட்டுள்ளது. கொழும்பில், 90 விழுக்காடு சிங்களர்கள் இருக்கின்றனர் எனில், இதே இனவிகிதத்தில் வடகிழக்குப் பகுதிகளில் இனச்சமநிலையை ஏற்படுத்த வேண்டுமென அது குறிப்பிடுகிறது. இன்றைக்கு வடகிழக்குப் பகுதிகளில் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற சிங்களமயமாக்கல் அதனடிப்படையில் செய்யப்படுவது தான்.

இவ்வாறான இராசீவ் – செயவர்த்தனா ஒப்பந்தத்தின்படி இலங்கை அரசமைப்பில் ஏற்படுத்தப்பட்ட 13ஆவது சட்டத்திருத்தம் தமிழர்களுக்கு எவ்வித அதிகாரத்தையும் வழங்கப் போவதில்லை. இதை நாம் மட்டும் சொல்லவில்லை. இராசீவ் – செயவர்த்தனா ஒப்பந்தத்தையொட்டி, இந்திய அமைதிப்படையின் இராணுவ உதவியோடு 1987இல் வடகிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் வெறும் 20 ஓட்டுகளே பதியப்பட்டன, அதில் 2 ஓட்டுகள் செல்லாதவை. அதில், 10 ஓட்டு பெற்று ‘வெற்றி’ பெற்றவர், இந்தியாவின் கையாளாக நிறுத்தப்பட்ட வரதராஜபெருமாள் இதைச் சொன்னார்.

“நான் முதலமைச்சராக இருந்தாலும்கூட, என்னுடைய அலுவலகத்திற்காக ஒரு கதிரை (நாற்காலி) வாங்குவதற்காகக்கூட, நான் இலங்கையின் ஜனாதிபதியிடம் கோரிக்கை மனு போட வேண்டியிருக்கிறது. இந்தப் பதவிக்கு எவ்வித அதிகாரமும் இல்லை” என இந்தியாவால் நியமிக்கப்பட்ட கையாளான வரதராஜபெருமாளே சொன்னார். சொல்லிவிட்டு, இந்திய இராணுவத்தின் உதவியுடன் தப்பி பெங்களுரில் தஞ்சம் புகுந்தார்.

இதைத்தாண்டி, இந்த சட்டத்திருத்தம் மோசடியானது என்பதற்கு என்ன சான்று வேண்டும்?

இங்குள்ள காங்கிரசுக் கட்சியினரும், ‘இந்து’ ராம் போன்றவர்களும், இராசீவ் – செயவர்த்தனா ஒப்பந்தத்தை பிரபாகரன் நிராகரித்தது தவறு என்றும், அதை ஏற்றுக் கொண்டிருந்தால் இவ்வளவு பெரிய இழப்பை சந்திருக்கத் தேவையில்லை என்றும் பேசுகிறார்கள். காசுமீரின் சிங்கமெனப் போற்றப்பட்ட சேக் அப்துல்லா, மிசோரம் விடுதலைப் போராளி லால் டெங்கா ஆகியோரைப் போல், பிரபாகரன் தவறு செய்யவில்லை. பெங்களுரில் எம்.ஜி.ஆரை வைத்துக் கொண்டு பிரபாகரனிடம் பேசிப் பார்த்தார்கள். பிரபாகரன் முதலமைச்சர் பதவி எனது இலக்கில்லை என்றார். லால் டெங்கா இலண்டனில், “என்னை விட வயதில் இளையவராக இருந்தாலும் பிரபாகரன் அறிவுக்கூர்மையுடன் இருக்கிறார்” எனப் பாராட்டிப் பேசினார். ஏனெனில், சேக் அப்துல்லா, லால் டெங்கா போன்ற மிகப்பெரும் போராளிகள் இடறி விழுந்த இடம் அது.

அண்மையில், ஐ.நா. மனித உரிமை அவையில் முன்வைக்கப்பட்ட அமெரிக்கத் தீர்மானத்தை நிராகரித்து இங்கு போராட்டங்கள் வெடித்த நிலையில், இங்கு சிலர் பேசினார்கள். அமெரிக்கத் தீாமானத்தை நிராகரித்துவிட்டால் நமக்கு வேறு என்ன இருக்கிறது என்று கேட்டார்கள். நிராகரிப்பு தான் வெற்றிடத்தை ஏற்படுத்தும். அந்த வெற்றிடம்தான் சரியான கோரிக்கையை வைப்பதற்கான இடமாகும். எனவே, இலங்கை அரசமைப்பின் 13ஆவது சட்டத் திருத்தத்தைத் தமிழர்கள் நிராகரித்து, தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்புக் கோரிக்கையையே நாம் உயர்த்திப் பிடிக்க வேண்டும்.

இலங்கை அரசின் இந்தச் சதிகளின் பின்னணியில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முதன்மையான செய்தி, இந்தியா தமிழினப் பகை நாடு. இந்தியாவிடம் வாதாடிப் புரிய வைக்க முடியாது. இந்தியாவைப் போராடிப் பணிய வைக்கத்தான் முடியும். ஏனென்றால், உலகத் தமிழர்களின் முதன்மைப்பகை இந்திய அரசுதான்.

ஒரு நாட்டின் உள்நாட்டுக் கொள்கை என்னவோ, அதன் நீட்சிதான் அதன் வெளியுறவுக் கொள்கை. உலகமயமாக்கலை, உள்நாட்டுக் கொள்கையாக ஏற்றுக் கொண்டதால்தான், தனது வெளிநாட்டுக் கொள்கையை அமெரிக்காவுக்கு ஆதரவாக இந்தியா வடிவமைக்கிறது. அதே போல, உள்நாட்டில் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு எதிராக, பல்வேறு சிக்கல்களில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டுள்ள இந்தியா தான், தனது வெளியுறவுக் கொள்கை மட்டுமோ, அல்லது சோனியாகாந்தி மட்டுமோ தான் தமிழர் சிக்கலுக்குக் காரணம் என்பதல்ல. ஒட்டுமொத்த இந்தியக் கட்டமைப்பே, தமிழர்களுக்கு எதிரானப் பகைக் கட்டமைப்புதான் என்ற உண்மையை நாம் இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டும்”.

இவ்வாறு தோழர் கி.வெங்கட்ராமன் பேசினார்.

பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களும், உணர்வாளர்களும் பெருந்திரளாகப் பங்கேற்ற இவ்வார்ப்பாட்டத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழக இளைஞர் முன்னணிப் பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி, சென்னை த.தே.பொ.க. செயலாளர் தோழர் தமிழ்ச்சமரன், தமிழக இளைஞர் முன்னணி சென்னை தலைவர் தோழர் கோவேந்தன், செயலாளர் தோழர் வினோத், தாம்பரம் செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், பல்லாவரம் செயலாளர் தோழர் கோ.நல்லன் உள்ளிட்ட த.தே.பொ.க. தோழர்கள் பங்கேற்றனர்.







போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT