உடனடிச்செய்திகள்
Showing posts with label இரசினிகாந்த். Show all posts
Showing posts with label இரசினிகாந்த். Show all posts

Thursday, May 18, 2017

இரசினிகாந்த், அசீத், விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள்! - இந்தியன், திராவிடன் “இனப்பெயரை” நீக்குங்கள்! பெ. மணியரசன்

 இரசினிகாந்த், அசீத், விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள்! - இந்தியன், திராவிடன் “இனப்பெயரை” நீக்குங்கள்! தோழர் பெ. மணியரசன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்.
தமிழ்நாட்டு அரசியலுக்குத் தலைமை தாங்க வருமாறு கன்னட நாட்டு நடிகர் இரசினிகாந்தை அழைக்கும் அளவிற்குத் தமிழ் இனத்தில் ஒரு சாரார் தரம் தாழ்ந்து தன்மானம் குறைந்து போனதற்குக் காரணமானவர்கள் யார்?

தமிழின அடையாளத்தை மறைத்து, திராவிட அயல் இன அடையாளத்தைத் தமிழர்கள் மீது திணித்த திராவிடச் சந்தர்ப்பவாதிகளும், இந்தியன் என்ற வடநாட்டு இனப்பெயரைத் தமிழர் தலையில் சுமத்திய வடநாட்டுத் தாசர்களான காங்கிரசு, கம்யூனிஸ்ட்டு, பா.ச.க. கட்சிகளைச் சேர்ந்தவர்களுமே காரணம் ஆவர்!

குறிப்பாக, ஒற்றை அதிகாரத் தலைவரை உருவாக்கிக் கொண்டு - அவரை கடவுளாக அல்லது கடவுளுக்கும் மேலானவராக சித்தரித்து, மாயாசாலம் காட்டி, மக்களின் தன்மதிப்பையும், தன்முயற்சியையும் சிதைத்து, அவதாரத் தலைவரைத் தேடும் அவலத்தை வெகுமக்கள் உளவியலில் பதித்துவிட்டன தி.மு.க. – அ.தி.மு.க. கட்சிகள்!

மற்ற மாநிலங்களில் திரைக் கதாநாயகர்களுக்கு அரசியல் தலைமை கிடைப்பதில்லை. திரைப்படத்தில் நடித்துப் பெற்ற பிரபலத்தைப் பயன்படுத்தி அரசியல் தலைமை ஏற்க முனைந்த அமிதாப்பச்சனை இந்தி வட்டார மக்கள் புறக்கணித்தனர்; ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவியின் அரசியல் கடையை மூடச் செய்தனர் தெலுங்கர்கள்; ஏற்கெனவே கேரளாவில் அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் பிரேம் நசீர் கட்சியைக் கலைக்கச் செய்தனர் மலையாளிகள்! ஆந்திரப்பிரதேசத்தில் என்.டி. இராமாராவின் அரசியல் வாழ்வையும் அரைகுறையாக முடித்து வைத்தனர் தெலுங்கு மக்கள்!

தமிழ்நாட்டில் மட்டும் கன்னடர் இரசினிகாந்த், மலையாள அசீத், தெலுங்கர் விசால் ஆகிய அயல் இன நடிகர்கள் அரசியல் தலைவர்களாகித் தமிழர்களை ஆளத் துடிப்பதேன்? ஏமாளித் தமிழர்கள் அவர்களை அரசியலுக்கு அழைப்பதேன்?

ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் தமிழ்த் திரைப்படங்கள் ஓடுகின்றன. தமிழின நடிகர்களான சத்தியராசு, விசய், சூரியா போன்றோரை அம்மாநிலங்களில் அரசியலுக்குத் தலைமை தாங்க அழைக்கிறார்களா? இல்லை! அந்த மொழிப்படங்களில் தமிழர்களைக் கதாநாயகர் அளவுக்கு வளர விட்டார்களா? இல்லை! இந்த நான்கு மாநிலங்களிலும், வட மாநிலங்களிலும் தமிழர்களை அரசியல் தலைவர்களாக வளர விட்டார்களா? மாநில அளவில் தொழிற்சங்கத் தலைவர்களாகவாவது வளர விட்டார்களா? இல்லை!

தைப்புரட்சியில் “தமிழன்டா” என்ற பதாகையை ஏந்திய இலட்சோப இலட்சம் தமிழின இளையோரே, உங்களில் தகுதிமிக்கோரிடமிருந்தும், அனுபவம் - இலட்சியக் கூர்மை - நேர்மை ஆகிய பண்புகளைக் கொண்ட தமிழின மூத்தோரிடம் இருந்தும்தான் தமழர்களுக்கு புதிய தலைமைகள் உருவாக வேண்டும்.

தமிழின அடையாளத்தை மறைத்து, திராவிடன், இந்தியன் என்ற அயல் இன அடையாளங்களைத் திணிக்கும் அரசியல்வாதிகளைப் புறந்தள்ளுங்கள்! இரசினிகாந்த் போன்ற அயல் இன நடிகர்களை ஓரங்கட்டுங்கள்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Tuesday, May 16, 2017

இரசினிகாந்தை அரசியலுக்கு அழைப்போரும் அதை ஆதரிப்போரும் தமிழினத்துரோகிககள் ஆவர்! பெ. மணியரசன் அறிக்கை!

இரசினிகாந்தை அரசியலுக்கு அழைப்போரும் அதை ஆதரிப்போரும் தமிழினத்துரோகிகள் ஆவர்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
இரசினிகாந்த் வழக்கம்போல் “அரசியலுக்கு வந்தாலும் வருவேன்” என்று கூறி தம் இரசிகர்களுக்குக் குச்சிமிட்டாய் கொடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் அவரின் இரசிகர்கள், இரசினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று பெருங்குரல் எழுப்புகிறார்கள். இப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பா.ச.க.வின் தமிழிசை, தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாரின் ஆகியோரும் இரசினிகாந்த் அரசியலில் ஈடுபடுவதை வரவேற்பதாகக் கூறியுள்ளார்கள்.

தமிழ்நாட்டு அரசியலில் ஈடுபடவோ அல்லது தனிக்கட்சித் தொடங்கவோ இரசினிகாந்துக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதை அவர்கள் சொல்ல வேண்டும்; என்னென்ன தகுதிகள் இல்லை என்பதை நான் சொல்கிறேன்.

முதல் தகுதியின்மை அவர் கன்னடக்காரர் என்பது. இரண்டாவது, தகுதியின்மை தனக்கு வாழ்வளித்த தமிழர்களுக்கு நன்றி விசுவாசத்துடன் அவர் நடந்து கொள்ளாதவர் என்பது!

காவிரிச்சிக்கலை சாக்காக வைத்துக் கர்நாடகத்தில் கன்னட வெறியர்கள் தமிழர்களை இனப்படுகொலை செய்தபோது, தமிழர்களைத் தாக்கியபோது, தமிழர் வீடுகளை, வணிக நிறுவனங்களை எரித்த போது, சூறையாடிய போது, தமிழ்த்திரைப்படங்கள் ஓடாமல் தடுத்தபோது, நடுநிலையில் நின்று, அந்த அட்டூழியங்களை – வெறியாட்டங்களை இரசினிகாந்த் கண்டிக்கவில்லை.

காவிரி உரிமைக்காக இயக்குநர் பாரதிராசா தலைமையில் தமிழ்த்திரைக் கலைஞர்கள் நெய்வேலியில் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது, அதைச் சீர்குலைக்க சதி செய்தவர்.

அண்மையில் அநீதியாக கன்னடர்கள் தமிழர் சத்தியராசு நடித்த “பாகுபலி-2” படத்தைக் கர்நாடகத்தில் திரையிடத் தடை விதித்தார்கள். ஒன்பதாண்டுகளுக்கு முன் காவிரிச் சிக்கலில் கன்னடர் செய்த அட்டூழியங்களை சத்தியராசு கண்டித்தார் என்பதற்காக – இப்பொழுது தடை விதித்தார்கள். தமிழர் சத்தியராசு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டபின்தான், “பாகுபலி-2” படத்தைக் கர்நாடகத்தில் அனுமதித்தனர். அச்சிக்கலில் தலையிட்டு ஒரு சமரசத் தீர்வு காண இரசினி முன்வராமல் தந்திரமாக ஒதுங்கிக் கொண்டார்.

காவிரிச் சிக்கலில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, கன்னடர்கள் தமிழர்களைத் தாக்கி அட்டூழியம் புரியும்போது, அதைத் கண்டித்ததில்லை. சட்டப்படி தமிழ்நாட்டிற்குரிய காவிரி உரிமையைத் தடுக்காதீர்கள் என்று இரசினிகாந்த் தம் கன்னட உடன்பிறப்புகளுக்கு வேண்டுகோள் விட்டதுமில்லை.

இரசினிகாந்த் தமிழ்நாட்டு அரசியலில் செல்வாக்குப் பெற்றுவிட்டால், காவிரி உரிமையைத் தமிழர்கள் நிரந்தரமாக மறந்துவிட வேண்டியதுதான்! தமிழ்நாடு கர்நாடகத்தின் காலனியாக மாற்றப்படும்!

இரசினிகாந்த் தாய்மொழி எதுவாக இருந்தாலும் அவர் கன்னடநாட்டைச் சேர்ந்தவர். கன்னட இனப்பற்றுடன் தமிழ்நாட்டில் வாழ்பவர்! தமிழர் உரிமைகளுக்குத் துரோகம் செய்பவர்.

இரசினிகாந்தைத் தமிழ்நாட்டில் “அரசியல் வணிகம்” செய்ய அழைப்பவர்களும், அவரின் அரசியல் நுழைவை ஆதரிப்பவர்களும் தமிழர்களுக்குத் துரோகம் செய்பவர்களே!

தமிழின இளைஞர்கள் ஆண்களும் பெண்களும் எச்சரிக்கையாக விழிப்புடன் செயல்பட்டு இரசினிகாந்த் என்ற நச்சுக்கொடி தமிழ்நாட்டு அரசியலில் படராமல் தடுக்க வேண்டும்!


இன்னணம், 
பெ.மணியரசன்,
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com




இணையம்: www.tamizhdesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT