உடனடிச்செய்திகள்

Sunday, December 30, 2012

“ஓவியங்களை அனுபவத்திலிருந்து உட்புகுந்து புரிந்து கொள்ள வேண்டும்” தோழர் பெ.மணியரசன் பேச்சு!


ஓவியங்களை அனுபவத்திலிருந்து உட்புகுந்து புரிந்து கொள்ள வேண்டும்
தோழர் பெ.மணியரசன் பேச்சு!

ஓவியங்களை அனுபவத்திலிருந்து உட்புகுந்து புரிந்து கொள்ள வேண்டும்என, சென்னையில் நடைபெற்ற ஓவியர் புகழேந்தி நூல் மற்றும் ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் பேசினார்.

தமிழீழ விடுதலைதமிழர் உரிமைப் போராட்டங்களின் ஆதரவாளரான ஓவியர் புகழேந்தி அவர்களது நூல் மற்றும் ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வு நேற்று(29.12.2012) மாலை, சென்னை வடபழனியிலுள்ள திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்க அரங்கில் நடைபெற்றது.

ஓவியர் புகழேந்தி அவர்களது படைப்புகள் குறித்து, தமிழீழ விடுதலைக்கு ஆதரவாகஆணிவேர்என்ற திரைப்படத்தை இயக்கியவரும், தமிழ்த் திரை இயக்குநர் மகேந்திரன் அவர்களது மகனுமான திரு. ஜான் அவர்கள் இயக்கத்தில், ‘எரியும் வண்ணங்கள்என்ற தலைப்பிலான ஆவணப்படமும், ஓவியர் புகழேந்தி அவர்களால் எழுதப்பட்ட புகழ் பெற்ற ஓவியர் எம்.எப்.உசேன் அவர்களது வாழ்க்கையை விவரிக்கும்எம்.எஃப்.உசேன்; சமகால இந்திய ஓவியக் கலையின் முன்னோடிஎன்ற நூலும், ஓவியர் புகழேந்தியின் ஓவியங்கள் மீதான பார்வையாளர் கருத்துகள் தொகுக்கப்பட்டு, ‘வண்ணங்கள் மீதான வார்த்தைகள்என்ற தலைப்பிலான நூலாகவும் இந்நிகழ்வில் வெளியிடப்பட்டன.

விழாவிற்கு வந்தோரை, நிழல் இதழாசிரியர் திரு ப.தி.அரசு வரவேற்று உரையாற்றினார். ‘பாலைஇயக்குநர் .செந்தமிழின், ஓவியர் புகழேந்தியின் படைப்புகள் குறித்தும், வெளியிடப்பட்ட நூல் மற்றும் ஆவணப்படம் குறித்தும் அறிமுகவுரையாற்றி, நிகழ்வை நெறிப்படுத்தினார்.

'எரியும் வண்ணங்கள்' ஆவணப்படத்தை இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வெளியிட, ஆவணப்பட இயக்குநர் அருள்மொழி பெற்றுக்கொண்டார். எம்.எப்.உசேன் நூலை ஓவியர் மருது வெளியிட இயக்குநர் மகேந்திரன் பெற்றுக் கொண்டார். 'வண்ணங்கள் மீதான வார்த்தைகள்நூலை, கவிக்கோ அப்துல் இரகுமான் வெளியிட வெளியிட தொழில் முனைவர் திரு. ஸ்ரீகாந்த் மீனாட்சி பெற்றுக் கொண்டார்.
கவிக்கோ அப்துல் ரகுமான், பேராசிரியர் பத்மவதி விவேகானந்தன் ஆகியோர் கருத்துரை வழங்க, ஓவியர் புகழேந்தி ஏற்புரை நிகழ்த்தினார்.

வந்திருந்த விருந்தினர்கள் அனைவருக்கும், சால்வை அணிவித்து சிறப்பு செய்து, தலைமையுரையாற்றிய, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், “ஓவியர் புகழேந்தியின் படைப்புகள் குறித்து பேசுகின்ற ஆவணப்படமும், அவரது   நூலும் இங்கு வெளியிடப்பட்டுள்ளன. ஓரு நல்ல தமிழ்த் தேசியராக நம்முன் விளங்கும் ஓவியர் புகழேந்தியின், தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்தான ஓவியங்களை நாங்கள் தஞ்சையில் பெரிய கோயில் அருகில் ஒருமுறைக் காட்சிக்கு வைத்த போது, ஈழப்போராட்டம் குறித்து பொது மக்கள் பலரை அது ஈர்த்தது. மக்கள் ஆர்வத்துடன் அதைப் பார்த்துச் சென்றனர்.

பல நல்ல ஓவியங்களை நான் மிகவும் மதிப்பதற்கானக் காரணம், அதை புரிந்து கொள்ள முடிவதால் அல்ல. என்னால் அதை புரிந்து கொள்ள முடியாததால் தான் நான் அப்படி சொல்கிறேன். அதற்காக, ஓவியங்களை புரியும்படி வரையுங்கள் என நாம் படைப்பாளிகளுக்கு வேண்டுகோள் விடுக்கக் கூடாது. ஓவியங்களைப் புரிந்து கொள்ள நாம் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். நான் சிறுவயதில் பள்ளியில் படிக்கும் போது, ஓவியத்திற்கென ஒரு ஆசிரியர் இருப்பார். ஓவியங்கள் குறித்துப் பேசுவார். இன்றைக்கெல்லாம், அவை அரிதாகிவிட்டன. நமது மெய் அறிவிலிருந்து, நடைமுறை அனுபவத்திலிருந்து நாம் ஓவியங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்றைக்கு நாம் பார்க்கிற பாரத மாதா ஓவியத்திலிருக்கும் பாரத மாதாவை, 2009 முள்ளிவாய்க்கால் போரில் நம் தமிழ்ச் சொந்தங்களை இலட்சம் இலட்சமாகக் காவு வாங்கிய இரத்தக் காட்டேரியாகத் தான் பார்க்கிறேன். அதற்கு முன் அப்படித் தெரியவில்லை. 2009 தமிழின அழிப்புப் போரில் மட்டுமா, 1965இல் இந்தி எதிர்ப்புப் போரில் தீக்குளித்தும், நஞ்சுண்டும் மாண்டத் தமிழர்கள், துப்பாக்கிச் சூட்டில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர் இராசேந்திரன் தொடங்கி 300 பேர் வரை கொல்லப்பட்டார்களே, அது பாரத மாதா வாங்கிய பலி தானே. 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் ஒரு சுண்டக்காய் நாட்டுக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார்களே, அது பாரத மாதா வாங்கிய இரத்தக்காவு தானே. இப்படி, தமிழர்களின் நரமாமிசம் தின்னும் இரத்தக்காட்டேரியாகத் தான் பாரத மாதாவின் ஓவியம் எனக்குத் தோன்றுகிறது. அந்த ஓவியம் பொதுப் பார்வையில் அழகாகத்தான் வரையப்பட்டிருக்கிறது. இப்படித்தான் நாம் ஓவியங்களை, நம்முடைய அனுபவத்தில் உட்புகுந்து புரிந்து கொள்ள வேண்டும்.

எமது இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழில்நாடாளுமன்றத்தில் நரிகள் ஊளைஎன இந்திய நாடாளுமன்றத்தின் நிலை குறித்து, இவ்வாறுத் தலைப்பிட்டு எழுதினோம். அதை கருத்தை, வலியுறுத்தும் விதமாக, இந்திய நாடாளுமன்றம் கழிவறைக் கூடம் போல காட்சியளிக்கும் விதமாகவும், இந்திய அரசின் மூன்று சிங்க சின்னத்தில், சிங்கத்திற்கு பதில் நரிகள் இருப்பதைப் போலவும் மும்பையில்  ஓவியர் ஒருவர் ஓவியம் வரைந்தார். அதற்காக அவரை சிறையிலடைத்தார்கள். பல கட்டுரைகள் சொல்லும் செய்தியை, ஒரு ஓவியம் காட்சிப்படுத்தியது, அதனால் அது அரசுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. மக்களிடத்தில் அந்த ஓவியமும் சென்றடைந்தது. இவ்வாறு, ஓவியங்கள் உள்ளிட்ட கலை இலக்கியப் படைப்புகளை நாம் நமது சொந்த அனுபவத்திலிருந்துப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஓவியர் புகழேந்தி, ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு மட்டுமல்ல, ஆந்திராவில் ஒடுக்கப்பட்ட மக்கள் சுண்டுரில், சாதி வெறியர்களால் கொல்லப்பட்டக் கொடுமையை எதிர்த்து ஓவியம் தீட்டியுள்ளார். குஜராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு மக்கள் பலியான போது, மனம் வருந்தி ஓவியம் தீட்டினார். இவ்வாறு பரந்த மனப்பான்மையுடன் அவர் ஓவியங்கள் தீட்டியுள்ளது பாராட்டத்தக்கது. ஓவியர் புகழேந்தியின் இந்த பண்பும், மரபும், நம் இனத்தின் தொடர்ச்சியாக வருவது தான்.

தமிழ் தான் உலகின் முதன்மொழி என பாவாணர் கூறியபோது, பலரும் அதை தற்பெருமைக்காக சொல்கிறார் எனக் கூறினார்கள். ஆனால், இன்றைக்கு இவை உண்மையாகும் விதத்தில் பல சான்றுகள் கிடைத்துக் கொண்டுள்ளன. சில நாட்களுக்கு முன் உலகம் அழியும் என வதந்தி ஏற்பட்டதே, அதன் மூலவர்களான மாயர்கள் குறித்து இங்கு உலகெங்கும் பேசப்படுகிறது. அவர்களது கட்டடிக்கலை, ஓவியம், சிற்பங்கள் குறித்தெல்லாம் பல ஆய்வுகள் வருகின்றன. அவர்கள் தமிழர்களே என பல மேற்கத்திய ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். நம்முடைய சிந்து சமவெளி நாகரிக எழுத்துகளே, ஓவிய வடிவிலான சித்திர எழுத்துகள் தானே.

இவ்வாறு ஓவியங்களுடன் தமிழினத்திற்கெனத் தொடரும் மரபு வளர்ச்சிதான் ஓவியர் புகழேந்தி அவர்கள் மூலமும் தொடர்கின்றது. எங்கே பாதிப்பு நேர்ந்தாலும் இங்கே நம் ஓவியர் புகழேந்தி துடிப்பது போல, வடநாட்டில் யாராவது நமக்காகத் துடித்தார்களா? தமிழினம் ஈழத்தில் இலட்சக்கணக்கில் கொல்லப்பட்ட போதும், நமது மீனவர்கள் கொல்லபட்ட போதும் அதை வடநாட்டில் யாராவது படைப்புகளாக்கியிருக்கிறார்களா எனத் தெரியவில்லை. படைப்பாளிகளை விடுங்கள். வடநாட்டு அரசியல்வாதிகள் யாராவது கொல்லப்பட்ட மக்களுக்கு இரங்கல் தீர்மானமாவது போட்டார்களா? நாம் மட்டும்யாதும் ஊரே யாவரும் கேளிர்என பரந்த மனப்பான்மையுடன் இருப்பதில் தவறில்லை என்றாலும், நாம் ஏமாளிகளாகிவிடக் கூடாது என்பதை மட்டும் இங்கு கூறிக் கொள்ள விரும்புகிறேன்என பேசினார்.

இந்நிகழ்வில், திரளான தமிழின உணர்வாளர்களும், கலை இலக்கிய ஆர்வார்களும் பங்கேற்றனர்.













(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு, படங்கள்: அருணபாரதி)

Wednesday, December 26, 2012

தமிழக முதலமைச்சர் கோரிக்கையை ஏற்று இந்திய அரசு நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே வழங்க வேண்டும் - தோழர் கி.வெங்கடராமன் வலியுறுத்தல்


தமிழக முதலமைச்சர் கோரிக்கையை ஏற்று இந்திய அரசு
நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே வழங்க வேண்டும்
தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர்  தோழர் கி.வெங்கட்ராமன் வலியுறுத்தல்

நெய்வேலி மின்சாரம் உள்ளிட்டு தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் இந்திய அரசு நிறுவன மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டிற்கே வழங்க வேண்டும் என இந்தியப் பிரதமரை  வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் செயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இதனை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் வரவேற்கிறேன்.

நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே வழங்க வேண்டும்; காவிரி மறுக்கும் கர்நாடகத்திற்கும்; முல்லைப் பெரியாற்றை மறிக்கும் கேரளத்திற்கும் கொடுக்கக் கூடாது என வலியுறுத்தி 1991 ஆம் ஆண்டு முதல் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. அண்மைக் காலமாக பல்வேறு அரசியல் கட்சியினரும், வணிகர் அமைப்புகளும், சமூக நல நிறுவனங்களும் இக்கோரிக்கையை எடுத்து கூறிவருகின்றன.

இந்நிலையில் இக்கோரிக்கையை தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் முன்வைத்திருப்பது சரியானது. மூத்த அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டு இந்திய அரசில் உறுப்பு வகிக்கும் தமிழகத்தின் அனைத்து அமைச்சர்களும் கட்சி வேறுபாடின்றி ஒரே குரலில் இதனை வலியுறுத்த வேண்டும்.

கடுமையான மின்வெட்டில் தத்தளித்துக் கொண்டுள்ள தமிழகத்தின் இந்த உரிமைக் கோரிக்கையை நிறைவேற்றுவதாக பிரதமர் மன்மோகன் சிங் இப்போது நடக்க உள்ள தேசிய வளர்ச்சி மன்ற கூட்டத்திலேயே அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இக்கோரிக்கையை இந்திய அரசு நிறைவேற்றச் செய்ய அனைத்து வகை அரசியல் அழுத்தங்களையும் கொடுப்பதற்கு தமிழக முதலமைச்சர் அணியமாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.


                                                                                

இடம்: சென்னை
 
                                                              தோழமையுடன்    கி.வெங்கட்ராமன்
 பொதுச்செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி



(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

Friday, December 21, 2012

காவிரி உரிமைக்குப் போராடாத தமிழக அரசைக் கண்டித்து மறியல்! காவிரி டெல்டா மாவட்டங்கள்ல் நூற்றுக்கணக்கானோர் கைது!


காவிரி உரிமைக்குப் போராடாத தமிழக அரசைக் கண்டித்து மறியல்!
காவிரி டெல்டா மாவட்டங்கள்ல் நூற்றுக்கணக்கானோர் கைது!

தமிழகத்தை வஞ்சிக்கும் நடுவண் அரசைக் கண்டித்து, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் (மக்களவை, மாநிலங்களவை மற்றும் அமைச்சர்கள்) அனைவரும் உடனடியாகப் பதவி விலக வேண்டும், தமிழக முதல்வர் சட்டப் பேரவையில் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, நடுவண் அரசு நெய்வேலி மின்சாரத்தைக் கர்நாடகத்திற்கு அனுப்பக் கூடாது என்றும், நிலக்கரி, பெட்ரோலியம் உள்ளிட்ட தமிழகக் கனிம வளங்களை நடுவண் அரசு எடுக்கக் கூடாது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும், கருகிப் போன சம்பாப் பயிருக்கு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும் ஆகிய தீர்மானங்களை வலியுருத்தியும், தமிழக அரசு காவிரி நீரைப் பெற்றுத் தர உரிய முயற்சிகள் எடுக்காததைக் கண்டித்தும், காவிரி டெல்டா மாவட்டங்களில், இன்று தமிழகப் பொதுப்பணித்துறை அலுவலகங்கள் முன் மறியல் நடத்தப்படும் என காவிரி உரிமை மீட்புக் குழு அறிவித்தது. அதன்படி பல்வேறு இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டு, பல நூற்றுக்கணக்கானோர் கைதாகியுள்ளனர்.

தஞ்சை
தஞ்சை மாவட்டத் தலைநகரான தஞ்சாவூரில், காலை 10 மணியளவில், சாந்தப் பிள்ளை கேட் அருகிலுள்ள காவிரி கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகத்தை 1000க்கும் மேற்பட்ட உழவர்களும், உணர்வாளர்களும் முற்றுகையிட்டனர். காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான தோழர் பெ.மணியரசன் மறியலுக்குத் தலைமையேற்றார்.

.தி.மு.. துணைப் பொதுச்செயலாளர் துரை. பாலகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் நல்லதுரை, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன், தமிழர் தேசிய இயக்கம் பொதுச் செயலாளர் அய்யனாபுரம் சி.முருகேசன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை மாவட்ட்த் தலைவர் மணிமொழியன், டெல்டா மாவட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் வலிவலம் மு.சேரன், தமிழக உழவர் முன்னணி பொதுச் செயலாளர் தெ.காசிநாதன், தமிழக மக்கள் சனநாயகம் கட்சித் தலைவர் புதுக்கோட்டை கே.என்.செரிப், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் தமிழ்நேசன், விடுதலைத் தமிழ் புலிகள் மாவட்டச் செயலாளர் கலைச்செல்வன், புதிய தமிழகம் மாவட்ட்த் துணைச் செயலாளர் வழக்கறிஞர் சுகுமார், மனித நேய மக்கள் கட்சி எஸ்.எஸ்.நூறுதீன், பாரதிய சனதா கட்சி எஸ்.பி.சந்திரன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும், உழவர்களும், தமிழின உணர்வாளர்களும் இதில் திரளாக கலந்துக் கொண்டனர்.

முன்னதாக காவிரி கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகத்தின் வாயிலில் நின்று,   காவல்துறையினரே கதவை பூட்டினர். அந்த நிலையில் ஒரு குழுவினர் காவல்துறையினரை தாண்டி அலுவலகத்திற்குல் சென்று அலுவலகப் பணியாளர்களை வெளியேற்றினர். அதன்போது மோதல் ஏற்பட்டு, தமிழக இளைஞர் முன்னணி தோழர்கள் செங்கிப்பட்டி விசயகாந்த், குடந்தை செயலாளர் சரவணன் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டு இரத்தம் கொட்டியது. அருகிலுள்ள மருத்துவமனையில் உடணடியாக அழைத்து செல்லப்பட்டு தோழர்களுக்க சிகிச்சையளிக்கப்பட்டது. தோழர் விசயகாந்துக்கு தையல் போடப்பட்டது.

காவிரி கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகமும் அதல் சாலையும் முழுமையாக முற்றுகையிடப்பட்ட நிலையில், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருகிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான தோழர் பெ.மணியரசன் பேசுகையில், நாம் அலுவலகத்திற்குள் செல்லாமல் மறித்து முற்றுகையிட வந்தோம். ஆனால் காவல்துறையோ அலுவலக வாயிலை பூட்டியுள்ளனர். இந்த வகையில் நமது போராட்டம் வெற்றிப் பெற்றது என அறிவித்த போது, கூடியிருந்தவர்கள் கரவொலி எழுப்பினர். அடுத்த கட்டப் போராட்டத்தின் திட்டமிடல் கலந்தாய்வு கூட்டம் வருகின்ற 28.12.2012 அன்று தஞ்சையில் நடைபெரும் என்றும் அறிவிக்கப்பட்டது.

சிதம்பரம்
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், காலை 10 மணியளவில் தொடர்வண்டி நிலையம் அருகிலுள்ள, தமிழகப் பொதுப்பணித்துறை அலுவலகம் முன் தமிழக உழவர் முன்னணி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்று, சற்றொப்ப 120 பேர் கைது செய்யப்பட்டனர்.

போராட்டத்திற்கு தமிழக உழவர் முன்னணி கடலூர் மாவட்டச் செயலாளர் திரு.சி.ஆறுமுகம் தலைமையேற்றார். தமிழக உழவர் முன்னணி மாவட்டத் தலைவர் திரு. அ.கோ.சிவராமன்ஒருங்கிணைப்பாளர் திரு. ம.கோ.தேவராசன், மாவட்ட துணைச் செயலாளர் சரவணன்செயற்குழு உறுப்பினர் தங்க. கென்னடி, தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு திரு. இரா.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 120க்கும் மேற்ப்பட்டோர் கைது செய்யப்பட்டு சிதம்பரம் நகரில் ஒரு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

திருவாரூர்
திருவாரூரில் காலை 10.30 மணியளவில் உதவி செயற்பொறியாளர் அலுவளகம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.  போராட்டத்திற்கு விடுதலைத் தமிழ்ப்புலிகள் அமைப்பு நிறுவனத் தலைவர் திரு. குடந்தை அரசன் தலைமையேற்றார், தமிழக உழவர் முன்னணி பொறுப்பாளர் திரு.  .கோவிந்தசாமி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி திருத்துறைபூண்டி ஒன்றிய செயலாளர் தோழர் இரா.தனபால், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் தோழர் ப.சிவவடிவேல், . பாலசுப்பிரமணியன், து.ரமேசு உள்ளிட்ட திரளான்னோர் கலந்து கொண்டு கைதாகினர்.

திருச்சி
திருச்சியில் இன்று காலை 11.00 மணியளவில், மாவட்ட நீதிமன்றம் அருகிலுள்ள திருச்சி மாவட்ட பொதுப்பணித்துறை  செயற்பொறியாளர் அலுவலகம்  முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 24 பேர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்திற்கு .தி.மு.. அரசியல் ஆலோசகர் குழு உறுப்பினர் புலவர் முருகேசன் தலைமையேற்றபார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன், திருச்சி நகரச் செயலாளர் தோழர் கவித்துவன், த.தேபொ.க. தோழர்கள் பாவலர் மு..பரணர், ஆத்மநாதன், இனியன், முத்துக்குமார், ஓசூர் மு.வேலாயுதம், செந்தில், செல்வக்குமார், துவாக்குடிக் கிளை செயலாளர் இலட்சுமணன், ராசாங்கம், குன்றாண்டார்க் கோயில் ஒன்றியச் செயற்குழு உறுப்பினர் திருப்பதி, ஒன்றியச் செயலாளர் அரோக்கியசாமி, கிள்ளுக்கோட்டை தமிழக இளைஞர் முன்னணி கிளைத் தலைவர் பெருமாள், ஒன்றியத் தலைவர் லட்சுமணன், செயலாளர் மணிகண்டன், தமிழக கலை இலக்கியப் பேரவை மாவட்டச் செயலாளர் இராசரகுநாதன் உள்ளிட்ட தமிழின உணர்வாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.





(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு, படங்கள் : சம்பந்தம்)

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT