உடனடிச்செய்திகள்
Showing posts with label மாநாடு. Show all posts
Showing posts with label மாநாடு. Show all posts

Thursday, April 19, 2018

இன்று மதியம் - சென்னையில் தொடங்குகிறது நீட் தேர்வு நிரந்தர விலக்கு - மாநாடு!

இன்று மதியம் - சென்னையில் தொடங்குகிறது நீட் தேர்வு நிரந்தர விலக்கு - மாநாடு!
உலகத் தமிழ் அமைப்பு முன்னெடுக்க, தமிழ்நாடு - புதுச்சேரி அனைத்து மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு, தமிழர் உரிமைக்கான மாணவர்கள் - இளைஞர்கள் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் தமிழ்நாடு - புதுச்சேரி மாநிலங்களுக்கான நீட் தேர்வு நிரந்தர விலக்க மாநாடு, இன்று (19.04.2018) சென்னையில் நடைபெறுகின்றது. 

சென்னை தேனாம்பேட்டை காமராசர் அரங்கில் பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி, இரவு 10 மணி வரை நடைபெறும் இம்மாநாட்டில் பல்வேறு அரசியல் கட்சி - இயக்கத் தலைவர்கள் பங்கேற்று வெவ்வேறு அமர்வுகளில் நீட் தேர்வு குறித்த கருத்துரை வழங்குகின்றனர். மாநாட்டை, இயக்குநர் வ. கௌதமன் ஒருங்கிணைக்கிறார். 

நிகழ்வில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் உள்ளிட்ட பல்வேறு தமிழின உணர்வாளர்களும் பங்கேற்கின்றனர். அனைவரும் வருக! 

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhthesiyam.com 

Saturday, February 3, 2018

“தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே!” - சென்னையில் நடந்த எழுச்சிமிகு மாநாடு!

“தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே!” - சென்னையில் நடந்த எழுச்சிமிகு மாநாடு!
“தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே! வெளி மாநிலத்தவர்களுக்கு அல்ல!” என்ற தலைப்பில் , இன்று (2018 பிப்ரவரி 3), சென்னையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் எழுச்சிமிகு சிறப்பு மாநாடு நடைபெற்றது.

சென்னை சேப்பாக்கம் சிவனந்தா சாலையிலுள்ள அண்ணா அரங்கில் காலை 9.30 மணியளவில் தொடங்கிய மாநாட்டின் முதல் நிகழ்வாக, பெண்ணாடம் இளநிலா கலைக் குழுவினரின் பறையாட்டம் நடைபெற்றது.

மாநாட்டின் முதல் நிகழ்வாக, “தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர்” என்ற தலைப்பில் நடக்கும் ஒளிப்படக் கண்காட்சியை தமிழுரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் கி.த. பச்சையப்பனார் திறத்து வைத்து உரையாற்றினார்.


தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் க. வெற்றித்தமிழன் நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார். பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், மாநாட்டு வரவேற்புரையாற்றினார்.
இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி து. அரிபரந்தாமன், மாநாட்டுத் தொடக்கவுரையாற்றினார்.
”வேலை வாய்ப்பில் தமிழர்” – கருத்தரங்கம் 

மாநாட்டின் முதல் கருத்தரங்காக “வேலை வாய்ப்பில் தமிழர் உரிமை” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு, தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து தலைமையேற்றார்.
“தமிழ்நாடு அரசுத் துறையில்..” என்ற தலைப்பில், த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, “இந்தியத் தொழில்துறையில்..” என்ற தலைப்பில், தமிழர் எழுச்சி இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் ப. வேலுமணி, “இந்திய அரசு அலுவலகங்களில்..” என்ற தலைப்பில், மேனாள் இந்திய வருவாய்ப் பணி அதிகாரி திரு. ஏ. அழகிய நம்பி, “மாற்றுத்திறனாளிகள் உரிமை..” என்ற தலைப்பில், திசம்பர் 3 இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தீபக்நாதன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.


சட்ட வரைவு

இதனையடுத்து, மாநாட்டின் முகாமையான நிகழ்வாக, “தமிழர் வேலை உறுதிச் சட்டம்” என்ற சட்டத்தின் வரைவை, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்மொழிந்து உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து உணவு இடைவேளைக்குப் பின், கலை நிகழ்ச்சிகளுடன் இரண்டாம் அமர்வு தொடங்கியது. பெண்ணாடம் தென்றல் தப்பாட்டக் குழுவினரின் எழுச்சி இசையும், சிதம்பரம் தமிழர் தற்காப்புப் பயிற்சிப் பள்ளி மாணவர்களின் தமிழர் வீரவிளையாட்டு நிகழ்வுகளும் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தன.





பாவரங்கம்

இதனையடுத்து, பாவலர்கள் பங்கேற்ற பாவரங்கில், “அவரவர் நாட்டில் அவரவர் வாழ்க!” என்ற தலைப்பில் பாவலர் கவிபாஸ்கர், “போர்க்குரல் எழுப்பு!” என்ற தலைப்பில் பாவலர் செம்பரிதி, “எரிதழல் ஏந்தி வா!” என்ற தலைப்பில் பாவலர் முழுநிலவன் ஆகியோர் பாவீச்சு நிகழ்த்தினர்.


ஆய்வறிக்கை வெளியீடு

“மண்ணின் மக்கள் வேலை உறுதிச் சட்டம்: மற்ற மாநிலங்களிலும் தமிழ்நாட்டிலும்” என்ற தலைப்பிலான ஆய்வறிக்கையை எல்லை மீட்புப் போராட்ட ஈகியும், சென்னை மாநிலக் கல்லூரி மேனாள் தமிழ்ப் பேராசிரியருமான பேரா. பி. யோகீசுவரன் வெளியிட, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஆலோசகர் மருத்துவர் இலரா பாரதிச்செல்வன் பெற்றுக் கொண்டார். திருவாளர்கள் ச. யோகநாதன், பிரடெரிக் ஏங்கல்ஸ், தாரை. மு. திருஞானசம்பந்தம், அர. மகேசுகுமார், இரா. இரஜினிகாந்த் உள்ளிட்டோர் படி பெற்றனர்.


“தொழில் வணிகத்தில் அயலார்” - கருத்தரங்கம் 

இதனையடுத்து, “தமிழ்நாட்டுத் தொழில் - வணிகத்தில் அயலார்” என்ற தலைப்பில், த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா. வைகறை தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது.
தமிழ்நாடு மூத்த பொறியாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர் பொறிஞர் அ. வீரப்பன் -“கட்டுமானத்துறையில்” என்ற தலைப்பிலும், தமிழ்நாடு உணவு தானிய மொத்த வணிகர் சங்கத் தலைவர் திரு. சா. சந்திரேசன் - “தொழில் வணிகத்தில்” என்ற தலைப்பிலும், தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு. களஞ்சியம் - “திரைத்துறையில்..” என்ற தலைப்பிலும், தமிழின உணர்வாளர் இயக்குநர் வ. கௌதமன் - “அரசியலில்..” என்ற தலைப்பிலும், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் வே. சுப்பிரமணிய சிவா “கல்வியில்” என்ற தலைப்பிலும் கருத்துறையாற்றினர்.



தீர்மானங்கள் 

இதனைத் தொடர்ந்து, மாநாட்டுத் தீர்மானங்களை பேரியக்கச் செயல்பாட்டாளர்கள் பழ. இராசேந்திரன், க. முருகன், க. விடுதலைச்சுடர், மூ.த. கவித்துவன், மு. தமிழ்மணி, இலெ. இராமசாமி, க. பாண்டியன், பி. தென்னவன், க. விசயன், ஏந்தல் ஆகியோர் முன்மொழிந்தனர்.

வாழ்த்தரங்கம் 

நிறைவாக நடைபெற்ற வாழ்த்தரங்கில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் திரு. தி. வேல்முருகன், மனித நேய சனநாயகக் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான திரு. மு. தமிமுன் அன்சாரி, மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சட்டப்பேரவை உறுப்பினர் திரு. உ. தனியரசு அவர்கள் பார்வையாளராக வருகை தந்தார்.



தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், மாநாட்டு நிறைவுரையாற்றினார். தோழர் பழ.நல். ஆறுமுகம் நன்றி கூறினார். பாவலர் நா. இராசாரகுநாதன், தோழர் நா. வைகறை ஆகியோர் மேடையை நெறிப்படுத்தினர்.
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இம்மாநாட்டில், தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட “தமிழர் வேலை உறுதிச் சட்டத்தை” தமிழ்நாடு அரசு நிறைவேற்றித் தர வேண்டும், தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையத் தேர்வில் வெளி மாநிலத்தவரை நீக்கி தமிழ்நாட்டு மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும், வெளி மாநிலத்தவர் தமிழ்நாட்டில் சொத்து வாங்கத் தடை விதிக்க வேண்டும், வெளி மாநிலத்தவருக்கு வாக்காளர் அட்டை – குடும்ப அட்டை வழங்கக் கூடாது, தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் சட்டத்திற்கு இந்திய அரசு உடனடியாக இசைவளிக்க வேண்டும் ஆகிய ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

முகநூல்: www.fb.com/tamizhdesiyam 
ஊடகம்: www.kannotam.com  
இணையம்: www.tamizhthesiyam.com  

Saturday, January 6, 2018

தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே! வெளி மாநிலத்தவர்களுக்கு அல்ல! பிப்ரவரி 3 - சென்னையில் சிறப்பு மாநாடு! 2049 தை 21 - 03.02.2018 காரி (சனி) காலை 9.30 - மாலை 6.00 மணி வரை

தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே! வெளி மாநிலத்தவர்களுக்கு அல்ல! பிப்ரவரி 3 - சென்னையில் சிறப்பு மாநாடு! 2049 தை 21 - 03.02.2018 காரி (சனி) காலை 9.30 - மாலை 6.00 மணி வரை!
 


 
#TamilnaduJobsforTamils
 
”தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே! வெளி மாநிலத்தவர்களுக்கு அல்ல!” என்ற தலைப்பில் வரும் 2018 பிப்ரவரி 3 அன்று, சென்னையில் சிறப்பு மாநாட்டை நடத்துகிறது - தமிழ்த்தேசியப் பேரியக்கம்!
சென்னை சேப்பாகம் சிவனந்தா சாலையிலுள்ள அண்ணா அரங்கில் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை கருத்தரங்குகள் - கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. செயலுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
 
கண்காட்சி

காலை 9.30 மணிக்கு பெண்ணாடம் இளநிலா கலைக் குழுவினரின் பறையாட்டம் - எழுச்சிப் பாடல்களுடன் தொடங்கும் மாநாட்டின் முதல் நிகழ்வாக, “தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர்” என்ற தலைப்பில் நடக்கும் ஒளிப்படக் கண்காட்சியை தமிழுரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் கி.த. பச்சையப்பனார் திறந்து வைக்கிறார். தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் க. வெற்றித்தமிழன் நிகழ்வுக்குத் தலைமை தாங்குகிறார். பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், மாநாட்டு வரவேற்புரையாற்றுகிறார்.
 
கருத்தரங்கம் - 1

சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி து. அரிபரந்தாமன், மாநாட்டுத் தொடக்கவுரையாற்ற, அதனைத் தொடர்ந்து “வேலை வாய்ப்பில் தமிழர் உரிமை” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகின்றது. கருத்தரங்கிற்கு, தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து தலைமையேற்கிறார்.
 
“தமிழ்நாடு அரசுத் துறையில்..” என்ற தலைப்பில், த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, “இந்தியத் தொழில்துறையில்..” என்ற தலைப்பில், தமிழர் எழுச்சி இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் ப. வேலுமணி, “இந்திய அரசு அலுவலகங்களில்..” என்ற தலைப்பில், மேனாள் இந்திய வருவாய்ப் பணி அதிகாரி திரு. ஏ. அழகிய நம்பி, “மாற்றுத்திறனாளிகள் உரிமை..” என்ற தலைப்பில், திசம்பர் 3 இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தீபக்நாதன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
 
சட்ட வரைவு

மாநாட்டின் முகாமையான நிகழ்வாக, “தமிழர் வேலை உறுதிச் சட்டம்” என்ற சட்டத்தின் வரைவை, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்வைத்து உரையாற்றுகிறார். அதனைத் தொடர்ந்து உணவு இடைவேளையும், பிற்பகல் 2 மணியளவில் கலை நிகழ்ச்சியும் நடக்கிறது.
 
ஆய்வறிக்கை வெளியீடு

பிற்பகல் 3 மணியளவில், “மண்ணின் மக்கள் வேலை உறுதிச் சட்டம்: மற்ற மாநிலங்களிலும் தமிழ்நாட்டிலும்” என்ற தலைப்பிலான ஆய்வறிக்கையை எல்லை மீட்புப் போராட்ட ஈகியும், சென்னை மாநிலக் கல்லூரி மேனாள் தமிழ்ப் பேராசிரியருமான பேரா. பி. யோகீசுவரன் வெளியிடுகிறார். புலவர் இரத்தினவேலவன், திருவாளர்கள் ச. யோகநாதன், வெ. சேனாபதி, பிரடெரிக் ஏங்கல்ஸ், தாரை. மு. திருஞானசம்பந்தம், சோயல் பாண்டியன், அர. மகேசுகுமார், நா. நெடுஞ்செழியன், இரா. இரஜினிகாந்த், ம. இலட்சுமி அம்மாள் ஆகியோர் அறிக்கையைப் பெற்றுக் கொள்கின்றனர்.
 
பாவரங்கம்

பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் பாவரங்கில், “அவரவர் நாட்டில் அவரவர் வாழ்க!” என்ற தலைப்பில் பாவலர் கவிபாஸ்கர், “போர்க்குரல் எழுப்பு!” என்ற தலைப்பில் பாவலர் செம்பரிதி, “எரிதழல் எந்தி வா!” என்ற தலைப்பில் பாவலர் முழுநிலவன் ஆகியோர் பாவீச்சு நிகழ்த்துகின்றனர்.
 
கருத்தரங்கம் - 2

பிற்பகல் 4 மணிக்கு, “தமிழ்நாட்டுத் தொழில் - வணிகத்தில் அயலார்” என்ற தலைப்பில், த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா. வைகறை தலைமையில் கருத்தரங்கம் நடைபெறுகின்றது.
 
தமிழ்நாடு மூத்த பொறியாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர் பொறிஞர் அ. வீரப்பன் -“கட்டுமானத்துறையில்” என்ற தலைப்பிலும், தமிழ்நாடு உணவு தானிய மொத்த வணிகர் சங்கத் தலைவர் திரு. சா. சந்திரேசன் - “தொழில் வணிகத்தில்” என்ற தலைப்பிலும், தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு. களஞ்சியம் - “திரைத்துறையில்..” என்ற தலைப்பிலும், தமிழின உணர்வாளர் இயக்குநர் வ. கௌதமன் - “அரசியலில்..” என்ற தலைப்பிலும், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் வே. சுப்பிரமணிய சிவா “கல்வியில்” என்ற தலைப்பிலும் கருத்துறையாற்றுகின்றனர்.
 
தீர்மானங்கள்

இதனைத் தொடர்ந்து, மாநாட்டுத் தீர்மானங்களை பேரியக்கச் செயல்பாட்டாளர்கள் பழ. இராசேந்திரன், க. முருகன், க. விடுதலைச்சுடர், மூ.த. கவித்துவன், மு. தமிழ்மணி, இலெ. இராமசாமி, க. பாண்டியன், பி. தென்னவன், க. விசயன், ஏந்தல் ஆகியோர் முன்மொழிக்கின்றனர்.
 
வாழ்த்தரங்கம்

நிறைவாக நடைபெறும் வாழ்த்தரங்கில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் திரு. தி. வேல்முருகன், மனித நேய சனநாயகக் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான திரு. மு. தமிமுன் அன்சாரி, மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
 
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், மாநாட்டு நிறைவுரையாற்றுகிறார். தோழர் பழ.நல். ஆறுமுகம் நன்றி கூறுகிறார். பாவலர் நா. இராசாரகுநாதன், ப. சிவவடிவேலு, இரா. இளங்குமரன், இரா. வேல்சாமி, வெ. இளங்கோவன், விளவை இராசேந்திரன் ஆகியோர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கின்றனர்.
 
தமிழ்நாடு தமிழர் தாயகமா? வெளி மாநிலத்தவர் வேட்டைக்காடா? சொந்த மண்ணிலேயே தமிழர்கள் அகதிகளா? அன்னையின் மடியிலேயே அவள் பிள்ளைகள் அனாதைகளா?
 
சிறப்பு மாநாட்டிற்கு வாருங்கள் தமிழர்களே!
 
#TamilnaduJobsforTamils
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Saturday, December 30, 2017

தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே! வெளி மாநிலத்தவர்களுக்கு அல்ல! "சென்னை சிறப்பு மாநாடு" 2049 தை 21 - 03.02.2018 காரி (சனி) காலை 9.30 - மாலை 6.00 மணி வரை

தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே! வெளி மாநிலத்தவர்களுக்கு அல்ல! "சென்னை சிறப்பு மாநாடு" 2049 தை 21 - 03.02.2018 காரி (சனி) காலை 9.30 - மாலை 6.00 மணி வரை!

#TamilnaduJobsforTamils

கல்வி கற்று வேலையில்லாமல் அலைவோரின் விகிதம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகம். வேலை தேடி தமிழ்நாட்டு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோர் எண்ணிக்கை 90 இலட்சம்!

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மாநில அரசின் 4ஆம் பிரிவுப் பணிகளுக்கு 9,351 பேர் தேவை என்றும், அதற்கான தேர்வு 11.02.2018 அன்று நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. அத்தேர்வு எழுதிப் பணியில் சேர்வதற்குப் பல இலட்சம் பேர் தமிழ்நாட்டில் விண்ணப்பித்துள்ளார்கள். இவர்களுக்குத் தேர்வுப் பயிற்சி கொடுக்க தமிழ்நாடெங்கும் ஏராளமான தனியார் பயிற்சி மையங்கள் (Coaching Centres) செயல்பட்டுவருகின்றன. பயிற்சிக்கான கட்டணமோ அதிகம்!

ஆனால், தமிழ்நாட்டு அரசின் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு நேப்பாளம், பூட்டான் நாடுகளைச் சேர்ந்தவர்களையும், பாக்கித்தான், வங்காளதேசம், திபெத், மியான்மார் போன்ற நாடுகளிலிருந்து இந்தியா வந்துள்ள அகதிகளையும் இந்தியாவின் எல்லா மாநிலங்களைச் சேர்ந்தவர்களையும் தமிழ்நாடு அரசு அழைத்துள்ளது. இதற்கான அறிவிக்கை 14.11.2017 அன்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தகுதியுள்ள தமிழ்நாட்டு ஆண், பெண் இளையோர்க்கு இந்த பன்னாட்டுப் போட்டியில் எத்தனை இடம் கிடைக்கப் போகிறது?

கர்நாடகம், குசராத், மராட்டியம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மாநில அரசுப் பணிகள், நடுவண் அரசுப் பணிகள், தனியார் துறைப் பணிகள் ஆகியவற்றில் அந்தந்த மாநிலக் குடிமக்களுக்கு 100 விழுக்காடு, 90 விழுக்காடு என்ற அளவுகளில் ஒதுக்கீடு வழங்கி மாநில அரசுகள் விதிமுறைகள் இயற்றியுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் அப்படிப்பட்ட விதிமுறைகள் இயற்றப்படவில்லை.

தமிழ்நாட்டில் மாநில அரசுப் பணிகளுக்கு விண்ணப்பம் போடுவோர், தமிழ்நாடு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள எண்ணைக் குறிப்பிட வேண்டும் என்று 2013 வரை இருந்த விதியையும், தமிழ்நாடு அரசு நீக்கிவிட்டது. ஏற்கெனவே தமிழ்நாட்டில் இயங்கும் இந்திய அரசு நிறுவனங்களில் 80 விழுக்காடு அளவிற்கு வெளி மாநிலத்தவர்களையே வேலைக்குச் சேர்க்கிறார்கள். தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் திரும்பிய பக்கமெல்லாம் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களே ஆக்கிரமித்துள்ளார்கள்.

தமிழ்நாட்டுத் தொழில், வணிகம் முதலியவற்றில், வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களே கோலோச்சுகிறார்கள். அவர்களை அண்டித் தொழில் செய்யும் நிலையிலேயே தமிழர்கள் இருக்கிறார்கள்! இந்திய அரசமைப்புச் சட்டப்படி தமிழர்கள் மொழிவழித் தாயகமாகத் தமிழ்நாடு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தமிழர் வாழ்வரிமையைப் பறிக்க யாரையும் அனுமதிக்கக்கூடாது!

தமிழ்நாடு தமிழர் தாயகமா? வெளி மாநிலத்தவர் வேட்டைக்காடா? சொந்த மண்ணிலேயே தமிழர்கள் அகதிகளா? அன்னையின் மடியிலேயே அவள் பிள்ளைகள் அனாதைகளா?

கருத்தரங்குகள் - கலை நிகழ்ச்சிகள் - செயலுக்கான தீர்மானங்கள்!

சிறப்பு மாநாட்டிற்கு வாருங்கள் தமிழர்களே!

#TamilnaduJobsforTamils

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com 

Sunday, April 18, 2010

இந்திய அரசைக் கண்டித்து தஞ்சையை உலுக்கிய உழவர்கள் மாநாடு!

இந்திய அரசு நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கொண்டுவர இருக்கும் வேளாண் விரோத கருப்புச் சட்டங்களைக் கண்டித்து தஞ்சையில் பல்வேறு உழவர் அமைப்புகள் இணைந்து நடத்திய மாநாடு நேற்று(18.04.2010) நடைபெற்றது. இதில் பல்வேறு உழவர் அமைப்புத் தலைவர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

விதைச் சட்டம், உயிரித்தொழில் நுட்ப ஆணையச் சட்டம், வெளிநாட்டு நிறுவனங்கள் வேளாண் பண்ணைகள் அமைக்க அனுமதிக்கும் சட்டம் ஆகியவை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் முன்வைக்கப்பட்டுள்ளன. மான்சான்டோ, சின்ஜென்டா, டுஃபான்ட் போன்ற பன்னாட்டு விதை நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், கருத்துரிமையைப் பறிக்கும் வகையிலும் இச்சட்டங்கள் அமைந்துள்ளன. மேலும், கிராமப்புறங்களில் வெளிநாட்டுக் கம்பெனிகளின் பண்ணைகள் அமைப்பதற்கு வழிசெய்யப்பட்டுள்ளது.

உழவர்களின் வேளாண் தொழிலையும், தமிழர்களின் தாயகத்தையும் பறிக்கிற சூதான இந்தச் சட்டங்களை எதிர்த்து உழவர் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் தஞ்சையில் 25.03.2010 அன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் இம்மாநாடு நடத்தத் திட்டமிடப்பட்டது.

அதன்படி, நேற்று தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலையில் இம்மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு கோ.நம்மாழ்வார் தலைமை தாங்கினார். “மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்தை நடத்த அறிவாளர்களும், உழவர்களும் திரள வேண்டும்என்று குறிப்பிட்டார்.

மனித நேய மக்கள் கட்சி தஞ்சை மாவட்டத் தலைவர் திரு ஜெ.கலந்தர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞசை மாவட்டச் செயலாளர் திரு பழ.இராசேந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் திரு பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தாளாண்மை உழவர் இயக்கத்தி்ன் செயலாளர் திரு பாமயன் வரவேற்புரையாற்றினார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தம் கண்டன உரையை நிகழ்த்தினர்.

கிரீன் பீஸ் அமைப்பின் வெளியீடான் ஆங்கில நூல், தமிழில் “மரபீனீ சூதாட்டம் என்ற பெயரில் மொழிப் பெயர்க்கப்பட்டு மாநாட்டு அரங்கில் வெளியிடப்பட்டது. இயற்கை வேளாண் தொடர்பான நூல்களும், இந்திய அரசின் கருப்புச் சட்டங்களை விளக்கும் நூல்களும் பெருமளவில் விற்பனையாயின.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் திரு.பெ.மணியரசன் தம் கண்டன உரையின் போது, “இந்த சட்டங்கள் அமெரிக்க காலனியாக இந்தியத் துணைக் கண்டத்தை மாற்றுகிற முயற்சி என்றும் “பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்காவின் இந்திய வைசிராயாக செயல்படுகிறார் என்றும் பேசினார்.

மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் முனைவர் வீ.சுரேஷ், “கம்பெனிகளுக்கு எதிராக பேசுவதையே தடுக்கும் வாய்ப்புட்டுச் சட்டங்களாக விதைச்சட்டமும் உயிரித் தொழில்நுட்பச் சட்டமும் இருப்பதால் இதனை கருப்புச் சட்டம் எனக் கண்டிக்கிறோம்“ என்றார்.

தொடர்ந்து, இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சி மாநிலத் துணைச் செயலாளர் திரு.சி.மகேந்திரன், மனித நேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் திரு மு.தமிமுன் அன்சாரி, தாளாண்மை உழவர் இயக்க மையக்குழு உறுப்பினர் திரு ச.ரா.சுந்தரராமன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் திரு க.சம்பந்தம், தமிழ் மாநில விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவர் திரு சோம.இராஜமாணிக்கம், பெட்காட் தலைவர் திரு. ஜெயராமன், தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் பொதுச் செயலாளர் திரு அரங்க. குணசேகரன், கா.சா. கள அலுவலர் திரு கல்யாணராமன், கேரளாவின் தணல் அமைப்பைச் சேர்ந்த உஷா மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாநாட்டுப் பேச்சாளர்கள் இந்திய அரசின் கருப்புச் சட்டங்கள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

நிறைவில், தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகர் திரு.கி.வெங்கட்ராமன், இந்திய அரசின் கருப்புச் சட்டங்களை விளக்கிப் பேசினார்.பொதுவுடைமை இயக்கங்களும் திராவிட இயக்கமும் அடித்தட்டு மக்களின் மேன்மைக்கு பங்களிப்பை செய்திருக்கின்றனர் என்ற போதிலும் “வேளாண்மை இழிவானது - தமிழரின் மரபு அறிவுத் தொழில்நுட்பம் கீழானது - கிராமம் என்பது பிற்போக்கின் மையம் என்று கருத்துகள் பரவச் செய்தார்கள். இன்னொரு பக்கம் வேளாண்மை நெருக்கடிளில் இருக்கின்றது. இவை இரண்டின் விளைவாக நிலத்தை இழப்பதற்கு உழவர்களே முன்வரும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளதுஎன்று தம் பேச்சில் அவர் குறிப்பிட்டார்.

இந்திய அரசின் இந்தக் கருப்புச் சட்டங்கள் வரைவு நிலையிலேயே திரும்பப் பெறப்பட வேண்டும், உழவர்களுக்கு நேரடி வருவாய் வழங்கக்கூடிய வருவாய் ஆணையம் நியமிக்கப்பட வேண்டும், தமிழ்நாட்டில் உயிரிப் பட்டய வாரியம் ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

தமிழக உழவர் முன்னணியின் பொதுச் செயலாளர் திரு தெ.காசிநாதன் மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி கூறினார். திரு கோ.திருநாவுக்கரசு, திரு கு.பழனிவேல் ஆகியோர் மாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைத்திருந்தனர்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT