உடனடிச்செய்திகள்
Showing posts with label வெளியார் சிக்கல். Show all posts
Showing posts with label வெளியார் சிக்கல். Show all posts

Saturday, July 31, 2021

தமிழ்நாடு வெளிமுதலாளிகளின் முதல் வேட்டைக்காடா? - ஐயா பெ. மணியரசன் உரை!

தமிழ்நாடு வெளிமுதலாளிகளின் முதல் வேட்டைக்காடா?


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் உரை!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Monday, April 26, 2021

"தமிழ்நாடு இந்தியாவின் வேட்டைக்காடா? 'ழகரம்'ஊடகத்துக்கு..ஐயா கி. வெங்கட்ராமன் நேர்காணல்!

"தமிழ்நாடு இந்தியாவின் வேட்டைக்காடா?


'ழகரம்'ஊடகத்துக்கு..

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
 ஐயா கி. வெங்கட்ராமன் நேர்காணல்!



கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Wednesday, March 10, 2021

இந்திக்காரர்களைப் பார்த்தாவது இன உணர்வு கொள்க! - ஐயா பெ.மணியரசன் அறிக்கை!




இந்திக்காரர்களைப் பார்த்தாவது 
இன உணர்வு கொள்க!

தமிழ்த்தேசியப்பேரியக்கத் தலைவர்
 ஐயா பெ.மணியரசன் அறிக்கை!

“எங்கள் மாநிலத்தில் தனியார் துறையில் 100க்கு 75 வேலை மண்ணின் மக்களுக்கு மட்டுமே தரவேண்டும், மீறுவோர் மீது நடவடிக்கை எடுப்போம்”.

இப்படி வாக்குறுதி அல்ல, சட்டமே இயற்றி இருக்கிறார்கள், அரியானா மாநிலத்தில்! பா.ச.க. தலைமையிலே கூட்டணி ஆட்சி அங்கு நடக்கிறது. பா.ச.க.வைச் சேர்ந்த மனோகர் லால் கட்டார் அரியானாவின் முதலமைச்சர்!

அந்த சட்ட முன் வரைவைக் கையொப்பமிட்டு சட்டமாக்கிய ஆளுநர் பெயர் சத்திய தேவ் நாராயண் ஆர்யா! பெயரே அவர் எப்படிப்பட்ட பின்னணி கொண்டவர் என்பதைக் கூறுகிறது.

அரியானா இந்தி மாநிலம்! அந்த அரியானாவில் உள்ள தனியார் துறை வேலைகளை, அம்மாநில மண்ணின் மக்களுக்குக் கிடைக்காமல் பறித்துக் கொள்ளும் வெளி மாநிலத்தவர் யார்?

பெரும்பாலும் உ.பி., பீகார், இராசஸ்தான் போன்ற இதர இந்தி மாநிலங்களைச் சேர்தவர்களே அந்த வெளியார்! பஞ்சாபியரும் ஒரு பகுதி இருக்கலாம். இவர்கள் எல்லாம் அரியானாவின் இந்திக்காரர்களுக்கு அயலார்!
ஆனால், தமிழ்நாட்டில் தமிழர்களின் வேலைகளைப் பறித்துக்கொள்ளும், இந்திக்காரர்களிடமிருந்தும், அயல் மாநிலத்தவரிடமிருந்தும் மண்ணின் மக்களுக்கு அரியானாவைப் போல் பாதுகாப்புச் சட்டம் தேவை என்று போராடும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் இனவெறி அமைப்பு என்கின்றனர் இங்குள்ள பா.ச.க.-காரர்கள். அப்படி நமக்குப் பட்டம் கொடுப்பது, தமிழர்களின் உரிமைகளை மீட்பதில் நாம் உறுதியாக நிற்கின்றோம் என்பதற்கான சான்றிதழ்!

ஆனால் இங்கு இடதுசாரிகள் என்று சொல்லிக் கொள்வோரும், தீவிரத் திராவிடம் பேசுவோரில் ஒரு சாராரும் உதட்டளவுத் தமிழ்தேசியர்களும், நாம்  “தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே, வெளியாரை வெளியேற்றுவோம்” என்று முழங்குவதற்காக, நம்மை இனவெறியர்கள் என்கிறார்கள்.

பல தேசிய இனங்கள், பல மொழிகள், பல தாயகங்கள் கொண்ட இந்தியாவை ஒற்றைத் தாயக ஒரு தேசமாவும், இந்தியன் அல்லது பாரதீயன் என்ற ஒரே இனமாகவும், கற்பனை செய்து கொள்ளுமாறு நம்மைக் கட்டாயப்படுத்தும் பா.ச.க. ஆளும் அரியானா என்ற இந்தி மாநிலத்தில் வெளியார் வேலைக்கு வரம்பு கட்டித் தடைச் சட்டம் போட்டிருக்கிறார்கள்.

பா.ச.க.ஆளும் மத்தியப் பிரதேசத்தில் அரியானாவைப் போல் வெளியார் வேலை தடைச் சட்டம் கொண்டு வரப்போவதாக அம்மாநில முதலைமைச்சர் செளகான் அறிவித்துள்ளார்.

அரியானாவுக்கு முன்னோடியாக ஆந்திரப் பிரதேசத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசு ஆட்சி-அதன் முதல்வர் ஒய்.எஸ்.செகன் மோகன் ரெட்டி 2019-ஆம் ஆண்டே, தனியார் துறையில் ஆந்திரத்தின் மண்ணின் மக்களுக்கு 75 விழுக்காடு வேலைச் சட்டத்தை இயற்றிவிட்டார்.

அதற்கு முன் கர்நாடகம், குசராத், மராட்டியம், சத்தீசுகட் போன்ற மாநிலங்கள், மாநில அரசு மற்றும் தனியார் துறை வேலைகளுக்கு மட்டுமின்றி, நடுவண் அரசு வேலைகளுக்கும் மண்ணின் மக்கள் முன்னுரிமை ஆணைகள் வெளியிட்டுச் செயல்படுத்தி வருகின்றன.

ஆளுநரின் கையெழுத்தை 2021 மார்ச் தொடக்கத்தில் பெற்று “அரியானா மாநில மக்கள் வேலைச் சட்டம் – 2021” (Haryana State Employment of Local Canditates Act - 2021) செயலுக்கு வந்துவிட்டது. இதன்படி, 50,000 ரூபாய் வரை மாதச் சம்பளம் வாங்கும் அனைத்துத் தனியார் துறை வேலையிலும் 75 விழுக்காடு வரை, கட்டாயம் அரியானாவின் மண்ணின் மக்களுக்கே வழங்க வேண்டும் என்கிறது. தவறினால் தண்ணடனை உண்டு!

தாய் மண்ணிலேயே வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு அனாதைகள் ஆக்கப்பட்டுள்ள தமிழின இளையோர் “மண்ணின் மக்களுக்கே வேலை, வெளியாரை வெளியேற்று” என்று முழங்கி வீதிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக இந்தியத் தேசிய வாதக் கட்சிகளின் தலைமைகளும், திராவிட வாத கட்சிகளும் இந்தியத் தேசிய ஒருமைப்பாட்டை, பாரத மாதா பசனையை ஓங்கி ஒலிக்கின்றன. மண்ணின் மக்கள் வேலை உரிமைச் சட்டங்களை எதிர்க்கின்றன. பள்ளிப் பருவத்திலேயே தமிழின மறுப்பையும் “இந்தியன்” என்ற விருப்பையும் பாடத்திட்டங்களில் சேர்த்துள்ளன. அதுமட்டுமல்ல, பாரதவாத, திராவிட வாதக்கட்சிகள் – பாரத தேசியத்தைப் பரப்பி வருகின்றன. இந்தியா, பல்வேறு இனங்களின் ஒன்றியம் என்ற உண்மையை மறைக்கின்றன.

ஆங்கில இந்துவின் ஆத்திரம்
அரியானாவின் சட்டத்தைக் கண்டு ஆங்கில இந்து ஏடு ஆத்திரப்பட்டு 9.3.2021 இதழில் ஆசிரிய உரை எழுதியுள்ளது.

“அச்சுறுத்தும் கொடுஞ்சட்டம் – அரியானாவின் 75 விழுக்காட்டு வேலை உள்ளூர்காரர்களுக்கு என்பது பேரழிவின் முன்னறிவிப்பு” (Alarming diktat – Haryana’s new 75% jobs for locals’ law is a harbinger of doom) என்று தலைப்பிட்டுள்ளது அவ்வேடு.

அரியானா போன்ற மாநிலங்கள் போட்டிருக்கும் இச்சட்டம் அரசமைப்புச்சட்ட உறுப்புகள் 19(1)(g) மற்றும் 16(2) ஆகியவற்றுக்கு  எதிரானது என்று கூறும் இந்து, மறைமுகமாக – உச்சநீதிமன்றம் இச்சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும் என்று கோருகிறது.

“தனியார் நிறுவனங்களுக்குத் தேவைப்படும் திறன் மிக்கத் தொழிலாளிகள் அரியானா மக்களிடம் இருக்க மாட்டார்கள்.”

“அதிகாரிகள் தொழிற்சாலை வளாகங்களுக்குள் அடிக்கடி சென்று ஆய்வு செய்து, வெளிமாநிலத்தவர் வேலை செய்கிறார்களா என்று விசாரித்துத் தொந்தரவு கொடுப்பார்கள். மறுபடியும் “தொழிற்சாலை ஆய்வாளர் ஆட்சி (Inspector Raj) உருவாகும். இதனால் முதலாளிகள் அரியானாவுக்கு வெளியே தொழிற்சாலைகளைக் கொண்டு போய் விடுவார்கள். அதன் பிறகு, அரியானாவில் வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகரித்து விடும் என்கிறது இந்து. அரியானாவில் மண்ணின் மக்களுக்கு வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகமானதால்தான் இச்சட்டம் வந்துள்ளது என்ற உண்மையை மாற்றிப் பேசுகிறது இந்து.

“ஆனால் மண்ணின் மக்களுக்கு வேலை முன்னுரிமை என்ற போக்கினால் வெளிநாட்டு முதலாளிகள் அரியானாவில் மட்டுமல்ல, இந்தியாவில் வேறெங்கும் தொழிற்சாலை தொடங்க வரமாட்டார்கள். தலைமை அமைச்சரின் ஒரே தேசம் ஒரே சந்தை – (ஒரே பாரதம் – ஒரே ஸ்ரேஷ்ட பாரதம்) என்ற முழக்கத்தை வீணடித்துவிடும்” என்கிறது இந்து.

மிகையான தொழிற்சாலைக் குவிப்பு சுற்றுச் சூழலை மாசுபடுத்தி, மனிதர்கள் வாழத் தகுதியற்ற மண்ணாகத் தாயகத்தை மாற்றும் என்கின்ற உண்மையை மறுக்கிறது இந்து. 

“பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், “வங்கிகளில் பீகார் மக்கள் சேமிக்கும் தொகைகள் அளவிற்குப் பீகாரிலுள்ள வங்கிகள் பீகார் மக்களுக்குக் கடன் தருவதில்லை” என்று குறைபட்டுக் கொண்டுள்ளார்”. என்கிறது இந்து. 

“இது போன்ற, “மாநில விசா” தரும் சட்டங்கள் இயற்றுவதை இந்திய அரசு தடைசெய்ய வேண்டும் என்று ஆத்திரப்படுகிறது இந்து!

ஆயிரக்கணக்கான ஆர்.எஸ்.எஸ்கள் உருவானாலும், அல்லும் பகலும் ஆரியத்துவா முழக்கமான இந்துத்துவா இரைச்சல் போட்டாலும், மோடி மஸ்த்தான்கள் “ஒரே தேசம், ஒரே சந்தை” போன்ற முழங்கங்களை எழுப்பினாலும், இந்தியா பல தேசிய இனங்களின் – பல தேசங்களின் துணைக் கண்டம் என்பதை யாராலும் மறைக்க முடியாது; இந்தியைப் பொது மொழியாக ஏற்றுக்கொண்டிருக்கும் வடமாநில மக்கள், தங்களின் தாய் இனத்தையும் தாய்மொழியையும் மறக்க மாட்டார்கள். அவர்களுக்கு இந்தி இணைப்பு மொழியே தவிர தாய் மொழி அல்ல! அது மட்டுமல்ல, இந்தியும் சமற்கிருதமும் யாருக்கும் தாய் மொழிகள் அல்ல என்ற உண்மையும் மறைந்துவிடாது.

பிரித்தானியப் பீரங்கிகளின் ஆக்கிரமிப்பால் இணைக்கப்பட்ட பல்வேறு மொழி-இனத் தாயகங்களின் பிணைப்பே இந்தியா என்ற வரலாற்று உண்மையும் மாறிவிடாது. அதனால்தான் மத்தியப் பிரதேசம், அரியானா, பீகார் போன்ற இந்தி மாநிலங்களிலும், குசராத் போன்ற சேட்டுகளின் மாநிலத்திலும் மண்ணின் மக்கள் – வெளியார் என்ற சட்ட ஏற்பாடுகள் வேலைவாய்ப்பில் இருக்கின்றன.

அதுசரி, திராவிடத் திணிப்பாளர்கள் அரசியல் அம்பலம் செய்யும் தமிழ்நாட்டில் மண்ணின் மக்கள் வேலை முன்னுரிமைச் சட்டங்கள் இல்லையே ஏன்?  

மது போதைக்கு அடிமை ஆனவர்கள் தன் உணர்வு, தன்மதிப்பு அனைத்தையும் இழந்து விடுகிறார்கள் அல்லவா! திராவிடம் என்பது ஆரியம் உற்பத்தி செய்த மது! அதைத் தமிழ்நாட்டில் கள்ளச் சாராயமாகத் தயாரித்துத் தமிழர்களுக்கு வழங்கினார்கள். கள்ளச்சாரயத்திற்குப் போதை அதிகம்! அந்த போதையில் தமிழ் மொழி உணர்வு, தமிழ் இன உணர்வு, தமிழர் தாயக உணர்வு அனைத்திலும் நமக்கு ஊனம் ஏற்பட்டுள்ளது.

இப்போது இந்திக்காரர்களைப் பார்த்தாவது தமிழர்கள் இன உணர்வு கொள்ள வேண்டும்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Thursday, February 11, 2021

“நெய்வேலி வேலை சேர்ப்பில் தமிழர்கள் முற்றிலும் புறக்கணிப்பு ” - ஐயா பெ.மணியரசன் ஆவேசம்!.


நெய்வேலி வேலை சேர்ப்பில்

 தமிழர்கள் முற்றிலும் புறக்கணிப்பு  ”


ஐயா பெ.மணியரசன் ஆவேசம்!. 



கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Friday, January 22, 2021

தமிழ்நாட்டிற்குள் கன்னட வெறியர்கள் “ஒற்றுமை மாநாடு” நடத்த தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது! அனுமதித்தால் நாங்களே தடுப்போம்! ஐயா பெ. மணியரசன் அறிக்கை!


தமிழ்நாட்டிற்குள் கன்னட வெறியர்கள் 
“ஒற்றுமை மாநாடு” நடத்த
தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது!
அனுமதித்தால் நாங்களே தடுப்போம்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் 
தலைவர் பெ. மணியரசன் அறிக்கை!

கிருட்டிணகிரி மாவட்டம் – ஓசூர் உட்கோட்டம் சிப்காட் காவல் சரகம் பகுதியிலுள்ள அத்திப்பள்ளியில் 26.01.2021 அன்று, “தேசபிரேமிகளா சேனை” என்ற கன்னட அமைப்பும், கர்நாடகத்திலே உள்ள தமிழ் அமைப்பு ஒன்றும் இணைந்து “கன்னடர் – தமிழர் ஒற்றுமை மாநாடு” நடத்த இருப்பதாக அறிவிப்பு வந்துள்ளது. 

கர்நாடகத்தில் தமிழர்களை இனப்படுகொலை செய்தும், தாக்கியும், தமிழர்களின் பேருந்து களையும் வணிக நிறுவனங்களையும் வீடுகளையும் எரித்தும் இனவெறியாட்டம் நடத்திக் கொண்டிருக்கும் கன்னட வெறியர்களின் மறைமுகத் தமிழர் தாயக ஆக்கிரமிப்பு மாநாடுதான் இந்த மாநாடு! 

அண்மையில்தான் தாளவாடிப் பகுதியில் தமிழ்நாட்டு எல்லையில் தமிழ்நாடு அரசு வைத்திருந்த வரவேற்புப் பெயர்ப் பலகையை கன்னடவெறி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராசன் தலைமையில் கன்னட வெறியர்கள் பிடுங்கி எறிந்து, அந்தப் பெயர்ப் பலகையிலுள்ள தமிழை அழித்து, தமிழ் எழுத்துகளைக் காலில் போட்டு மிதித்து இனவெறியாட்டம் நடத்திவிட்டு, எந்த சிக்கலும் இல்லாமல் திரும்பினார்கள். இந்த வன்முறையை காணொளியாக  அவர்களே வெளியிட்டார்கள். 

தமிழ்நாட்டு எல்லைக்குள் புகுந்து தமிழ் இன அடையாளப் பெயர்ப் பலகையைத் தகர்த்துச் சென்ற வாட்டாள் நாகராசன் மற்றுமுள்ள கன்னட இனவெறிக் கயவர்கள் மீது தமிழ்நாடு அரசு வழக்குப்பதிந்து அவர்களைக் கைது செய்து தமிழ்நாட்டுச் சிறையில் அடைத்திருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்காமல் கன்னட இனவெறியர்கள் தமிழ்நாட்டிற்குள் நடத்திய வன்முறைகளை கண்டுகொள்ளாததுபோல் இருந்து, கன்னட இனவெறியர்களின் வன்முறைக்கு மறைமுகமாக ஆதரவளித்திருக்கிறது. 

அந்தத் துணிச்சலில் கன்னட இனவெறி அமைப்பொன்று அங்குள்ள தமிழ் இனத்துரோக அமைப்பு ஒன்றுடன் இணைந்து, தமிழ்நாட்டிற்குள் கன்னடர் – தமிழர் ஒற்றுமை மாநாடு நடத்துவது – புதிய வடிவில் கன்னடர்கள் தமிழ்நாட்டில் நடத்தும் ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகும். 

ஏற்கெனவே தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டம், ஒகேனக்கல், தாளவாடி பகுதி முதலியவற்றை கர்நாடகத்தோடு இணைக்க வேண்டுமென்று கன்னட அரசியல் கட்சிகளும், கன்னட இனவெறி அமைப்புகளும் ஆக்கிரமிப்புக் குரல் கொடுத்து வருகின்றன. இன்றைய கர்நாடகத்தின் பா.ச.க. முதல்வர் எடியூரப்பா, எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அத்துமீறி காவிரியின் குறுக்கே படகில் வந்து ஒகேனக்கலில் கன்னடக்கொடியேற்றி, ஒகேனக்கல்லை கர்நாடகத்துடன் இணைக்க வேண்டுமென முழக்கமிட்டுத் திரும்பினார் என்பது நினைவு கூரத்தக்கது. 

காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பை உச்ச நீதிமன்ற அறிவுரையின்படி 1991 நவம்பர் மாதம், இந்திய அரசு அரசிதழில் வெளியிட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகச் சொல்லி, அன்றைய காங்கிரசு முதலமைச்சர் பங்காரப்பா துணையோடு கன்னட கட்சிகள் மற்றும் கன்னட வெறி அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் வன்முறை வேட்டையாடி நூற்றுக்கணக்கான தமிழர்களை இனப்படுகொலை செய்தனர். பல்லாயிரக்கணக்கான வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டன. 2 இலட்சம் தமிழர்கள் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் அகதிகளாகத் தமிழ்நாடு ஓடி வந்தனர். அன்றைய முதலமைச்சர் செயலலிதா, இவர்களுக்காகத் தமிழ்நாட்டில் 2 இடங்களில் அகதி முகாம்கள் திறந்தார். 

கடந்த 2016 செப்டம்பர் 12ஆம் நாள், காவிரிச் சிக்கலை சாக்கு வைத்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த கே.பி.என். மற்றும் பல நிறுவனங்களின் 200க்கும் மேற்பட்ட பேருந்துகளையும், சரக்குந்து களையும் கன்னட வெறியர்கள் பெங்களூரில் ஒரே நேரத்தில் எரித்துச் சாம்பலாக்கினார்கள். எரிந்து முடியும் வரை கர்நாடகக் காவல்துறையினர் தலையிடவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர், சரக்குந்து ஓட்டுநர்களையெல்லாம் ஆடைகளைக் களைந்துத் தாக்கி படமெடுத்து விளம்பரம் செய்தார்கள். தமிழ்நாட்டு நடிகர்கள் நடித்த படங்கள் கர்நாடகத் திரையரங்குகளில் வெளியானால் கூட, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பதாகைகளைக் கிழித்து வெறியாட்டம் போடுகின்றனர். நடிகர் விசயின் “மெர்சல்” திரைப்படப் பதாகையை அவ்வாறு கிழித்தெறிந்தனர். கன்னட மொழியுடன் தமிழிலும் பெயர்ப் பலகை இருந்தால் அந்தப் பெயர்ப் பலகைகளை உடைக்கின்றனர்.

இவ்வாறு தொடர்ந்து கன்னட இனவெறியர்கள் தமிழர்களை இனப்படுகொலை செய்தும், தமிழர்களைத் தாக்கியும், தமிழ்நாட்டு எல்லையில் ஆக்கிரமிப்பு வேலைகள் செய்தும் தமிழர்களுக்கு எதிராக இனவெறியாட்டம் நடத்தியபோதிலும் தமிழ்நாட்டில் வசிக்கும் கன்னடர்களைத் தமிழர்கள் துன்புறுத்தியதில்லை. எனவே, கன்னட இனவெறியர்கள் ஒருவேளை திருந்தியிருந்தால் அவர்கள்தான் கர்நாடகத்தில் இன ஒற்றுமை மாநாடு நடத்த வேண்டுமே தவிர, தமிழ்நாட்டில் நடத்த வேண்டிய தேவையில்லை! 

ஓசூர் பகுதியில் கன்னட இனவெறி அமைப்பு நடத்தத் திட்டமிட்டுள்ள கன்னடர் – தமிழர் ஒற்றுமை மாநாடு என்பது கன்னட இனவெறியர்களின் இன்னொரு வடிவ ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகும். இந்த மாநாட்டிற்கு அனுமதி மறுத்துத் தடுத்து நிறுத்த வேண்டும். மீறுகின்றவர்களை எல்லையிலேயே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு, தமிழர்களின் தற்காப்புக்கான இந்த சட்ட நடவடிக்கைகளை எடுக்கவில்லை யெனில், தமிழ்த்தேசியப் பேரியக்கம் தமிழின உணர்வாளர்களை ஒருங்கிணைத்து இம் மாநாட்டை நடத்த விடாமல் மறியல் செய்துத் தடுப்போம் எனத் தெரிவித்துக் கொள்கிறேன். 

அருள்கூர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் கவனம் செலுத்தி, இம்மாநாட்டைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Wednesday, December 23, 2020

"வெளியாரை வெளியேற்று என்பது மக்களின் கோரிக்கை!” - ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் உரை!

"வெளியாரை வெளியேற்று 

என்பது மக்களின் கோரிக்கை!”



18.12.2020 அன்று சீர்காழியில் நடைபெற்ற தமிழ்நாட்டு தொழில் வணிகம் வேலை வாய்ப்பில் தமிழருக்கே முன்னுரிமை என்ற கருத்தரங்கில்  தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்    ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் உரை!  




கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Friday, November 20, 2020

"தமிழர் கடைகளில் பொருட்கள் வாங்குவோம்! எச். இராசாவுக்கு பதிலடி" “தமிழ் கேள்வி” இணைய ஊடகத்துக்கு, - ஐயா பெ. மணியரசன் அவர்களின் நேர்காணல்..!

"தமிழர் கடைகளில் பொருட்கள் வாங்குவோம்!

எச். இராசாவுக்கு பதிலடி" 


“தமிழ் கேள்வி” இணைய ஊடகத்துக்கு,

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் அவர்களின் நேர்காணல்..!




கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Wednesday, October 7, 2020

தமிழ்நாட்டு வேலைகளை இந்திக்காரர்கள் பறித்துக் கொள்ள தமிழ்நாடு அரசே துணை போகிறதா? உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி! - ஐயா பெ. மணியரசன் அறிக்கை!



தமிழ்நாட்டு வேலைகளை இந்திக்காரர்கள்
பறித்துக் கொள்ள தமிழ்நாடு அரசே துணை
போகிறதா? உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் அறிக்கை!

தமிழ்நாட்டில் தமிழ்நாட்டு அரசுப் பணிகளிலும், இந்திய அரசுத் துறைகளின் பணிகளிலும் மண்ணின் மக்களாகிய தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு இந்திக்காரர்கள் அதிகமாக சேர்க்கப்படுவதை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீதிபதிகள் என். கிருபாகரன் அவர்களும், பி. புகழேந்தி அவர்களும் சுட்டிக்காட்டி கடும் விமர்சனங்கள் தெரிவித்துள்ளனர். மற்ற மாநிலங்களில் மண்ணின் மக்களுக்கான சட்டங்கள் - ஏற்பாடுகள் இருக்கும்போது, தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அது இல்லை என்றும் கேட்டிருக்கிறார்கள்.
இந்த விமர்சனங்களையும் கேள்விகளையும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் 2005லிருந்து தமிழ்நாடு அரசை நோக்கிக் கேட்டு வருகிறது. கடந்த 2018 பிப்ரவரி 3ஆம் நாள், சென்னை சேப்பாக்கம் அண்ணா அரங்கத்தில் இதற்காகவே “தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே!” என்ற தலைப்பில் பெரும் மாநாடு ஒன்றை நடத்தி, அதில் தீர்மானம் போட்டு, மற்ற மாநிலங்களில் உள்ள மண்ணின் மக்கள் வேலை உரிமைக்கான சட்டங்களைத் தொகுத்து நூலாக வெளியிட்டோம். அந்தத் தீர்மானத்தையும், அந்த நூலையும் 2018 பிப்ரவரி மாதமே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் நேரில் கொடுத்தோம். ஆனால், தமிழ்நாடு அரசு தமிழர்களின் வேலை வாய்ப்புப் பறிபோவதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் அயல் மாநிலத்தவர்களின் ஆக்கிரமிப்புக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தைச் சேர்ந்த சரவணக்குமார் என்பவர் ஊட்டியிலுள்ள நடுவண் அரசின் ஆயுதத் தொழிற்சாலையில் கெமிக்கல் பிராசசிங் பணிக்கு நடந்தத் தேர்வில் கலந்து கொண்டு, 40 மதிப்பெண் வாங்கியதாகவும், ஆனால் அவருக்கு வேலை கொடுக்கப்படவில்லை என்றும், அவரை விட மிகக் குறைவாக மதிப்பெண் பெற்ற வெளி மாநிலத்தவர்கள் ஆறு பேருக்கு வேலை கொடுத்ததாகவும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்திருந்தார்.
இவ்வழக்கில், தனி நீதிபதி அளித்த தீர்ப்பில் தகுதியுள்ள சரவணக்குமாருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்றும், அத்தொழிற்சாலையிலுள்ள காலிப் பணியிடங்கள் 12இல் ஒரு பணியிடத்தை இவருக்கு வழங்க வேண்டுமென்றும் தீர்ப்பளித்தார்.
ஊட்டி ஆயுதத் தொழிற்சாலை இந்தத் தீர்ப்பை செயல்படுத்த மறுத்து, உயர் நீதிமன்றத்தில் இருநீதிபதிகள் அமர்வுக்கு மேல் முறையீடு செய்தது.
இந்த மேல் முறையீட்டை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீதிபதிகள் கிருபாகரன் அவர்களும், புகழேந்தி அவர்களும் 06.10.2020 அன்று விசாரித்தனர். அப்பொழுது, நீதிபதி கிருபாகரன் அவர்கள், “நடுவண் அரசின் பணித் தேர்வில் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்கலாம். இதில் வெற்றி பெற்று பணியமர்த்தப் படுபவர்களுக்கு அந்தந்த மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும். ஆனால், பிற மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பணியமர்த்தம் செய்யப்படுகின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
“வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அவர்களின் தாய்மொழியான இந்தியில் இத்தேர்வுகளில் தேர்ச்சி பெற இயலாத நிலையில், தமிழ் மொழியில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவதும், பணியமர்த்தம் பெறுவதும் எப்படி? இதுபற்றி நீதிமன்றம் கேள்வி கேட்டால், இது அரசின் கொள்கை முடிவு என்று ஏமாற்றுகிறார்கள்.
“பணித் தேர்வுகள் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெற வேண்டும். தொடர்வண்டித் துறை பணித்தேர்வுகளில், அதிகளவில் மோசடிகள் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டில் மின் வாரியம், தொடர்வண்டித் துறை எனப் பல்வேறு துறைகளில் பிற மாநிலத்தவர்கள் அதிகளவில் பணியமர்த்தம் செய்யப்பட்டுள்ளனர். இதற்குத் தமிழ்நாடு அரசே பொறுப்பேற்க வேண்டும்” என்று நீதிபதி கிருபாகரன் கடுமையாகப் பேசியுள்ளார்.
அப்போது, நடுவண் அரசின் வழக்கறிஞர் சுப்பையா “மேற்படி ஆயுதத் தொழிற்சாலை பணியில் 140 பணியிடங்களில் 50 விழுக்காடு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள்” என்று கூறினார்.
உடனடியாகக் குறுக்கிட்ட நீதிபதி என். கிருபாகரன், “தமிழ்நாட்டுக்கு என்ன பிச்சைப் போடுகிறீர்களா?” என்று கேட்டார். அத்துடன், மேற்படி ஆயுதத் தொழிற்சாலை எழுத்துத் தேர்வு விடைத்தாள்கள் மூன்று நாளில் திருத்தப்பட்டு, அதன் பிறகு அழிக்கப்பட்டுவிட்டன என்று சொல்கிறார்கள் என்று வழக்குத் தொடுத்துள்ள சரவணக்குமார் கூறியுள்ளார். இதுபற்றி அத்தொழிற்சாலையின் பொது மேலாளர் விடையளிக்க வேண்டும் என்று கூறி வழக்கை தேதிகுறிப்பிட்டு ஒத்திவைத்துள்ளார் நீதிபதி.
இச்செய்திகள் இன்று (07.10.2020) நாளேடுகளிலும், காட்சி ஊடகங்களிலும் வந்துள்ளன. தமிழ் நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களுக்கான தேர்வுகளில் ஆள் மாறாட்டம் செய்தல், வினாவிடைத் தாள்களை முன்பே பெற்று தேர்வெழுதுதல் போன்ற பல்வேறு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டே இந்திக்காரர்கள் அதிக எண்ணிக்கையில் வேலையில் சேர்கிறார்கள் என்று நாம் தொடர்ந்து கூறி வருகிறோம். இப்போது உயர் நீதிமன்ற நீதிபதிகளே இந்த மோசடியை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
தமிழ்நாடு அரசு, இதற்கு என்ன விடை சொல்கிறது? தமிழ்நாட்டு மக்களின் தலைவிதி தங்கள் கையில்தான் உள்ளது எனச் சொல்லிக் கொள்ளும் அரசியல் கட்சிகள், இந்த அநீதியை மாற்ற – சொந்த மண்ணிலேயே அகதிகளாக விடப்பட்டுள்ள தகுதியுள்ள தமிழர்களைக் காக்க, என்ன தொடர் போராட்டம் நடத்தியுள்ளன?
தமிழ்நாட்டு வேலைகளை இந்திக்காரர்களும், பிற மாநிலத்தவரும் மோசடியாக அபகரித்துக் கொள்கிறார்கள் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சொல்லும் குற்றச்சாட்டுகள் கற்பனையல்ல – உண்மைகள்தான் என்பதற்கு உயர் நீதிமன்றம் கூறியுள்ள விமர்சனமே சான்று!
மண்ணின் மக்களே, பல்வேறு தகுதிகளில் கல்வி கற்று, பயிற்சி பெற்று வேலையில்லாமல் அன்னை மண்ணிலேயே அநாதையாகிப் போன இளையோரே, “தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே!” என்ற நமது கோரிக்கையும், முழக்கமும் சட்டப்படியானது, நீதியானது! இந்த உரிமையை மீட்க வீதிக்கு வாருங்கள்!
1. தமிழ்நாடு அரசுப் பணிகளில் 100 விழுக்காடு தமிழர்களுக்கு வழங்க வேண்டும், 2. தமிழ் நாட்டிலுள்ள நடுவண் அரசுத் துறைகளில் 90 விழுக்காடு வேலைகள் தமிழர்களுக்கு வழங்க வேண்டும். அவற்றில் 10 விழுக்காட்டுக்கு மேல் உள்ள வெளியாரை வெளியேற்ற வேண்டும். 3. தமிழ்நாட்டுத் தனியார் துறை வேலைகளில் 90 விழுக்காட்டுப் பணிகள் தமிழர்களுக்கே வழங்க வேண்டும், 4. மண்ணின் மக்களுக்கான வேலை உரிமைக்கு கர்நாடகம், குசராத்து, மராட்டியம் போன்ற மற்ற மாநிலங்களில் சட்டம் இருப்பதைப் போல், தமிழ்நாட்டுக்கும் சட்டம் வேண்டும் என்று உரிமைக் குரல் எழுப்புவோம்!
இதுவரை இந்திய அரசோ, தமிழ்நாடு அரசோ மண்ணின் மக்களின் இந்தக் குரலுக்கு செவி சாய்க்க மறுத்து வருவதால், தமிழ்த்தேசியப் பேரியக்கம் அயல் மாநிலத்தவரின் ஆக்கிரமிப்புக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தை 2020 நவம்பர் 1 முதல் தொடங்குகிறது! இது ஓர் அமைப்பு நடத்தும் ஒத்துழையாமை இயக்கமல்ல, தமிழர்களின் ஒத்துழையாமை இயக்கம் – தமிழ்நாட்டு மக்களின் ஒத்துழையாமை இயக்கம் என்ற வடிவில் செயல்பட வேண்டும்!
அயல் மாநிலத்தவர்களுக்கு தனியார் துறை உட்பட எதிலும் வேலை தர மாட்டோம், அயல் மாநிலத்தவர்களுக்குக் குடியிருக்கவோ, வணிகம் நடத்தவோ இடங்களை வாடகைக்கும், விலைக்கும் தர மாட்டோம்! அயல் மாநிலத்தவர் நடத்தும் வணிக நிறுவனங்களில் இயன்றவரை பொருள் வாங்க மாட்டோம்! அயல் மாநிலத்தவரோடு எந்த உறவும் வைத்துக் கொள்ள மாட்டோம் என்ற உறுதி ஏற்பே தமிழர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒத்துழையாமை இயக்கம்! காந்தியடிகள் காட்டிய வழியில், இந்த அறப்போராட்டத்தை சனநாயக முறையில் நடத்துவோம்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam



Sunday, October 4, 2020

“வெளிமாநிலத்தவர்களுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் ! ஏன்?” - “பேரலை” ஊடகத்துக்கு...ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

“வெளிமாநிலத்தவர்களுக்கு எதிராக 

ஒத்துழையாமை இயக்கம் ! ஏன்?”


“பேரலை” ஊடகத்துக்கு...


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்

ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!




கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Friday, October 2, 2020

“தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வட இந்தியர்களின் ஆதிக்கம்!” - “News Focus Tamil” ஊடகத்துக்கு.. ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

“தமிழ்நாட்டில் அதிகரிக்கும்

வட இந்தியர்களின் ஆதிக்கம்!”


“News Focus Tamil” ஊடகத்துக்கு..


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்

ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!




கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Sunday, September 27, 2020

“வெளி மாநிலத்தவருக்கு வீடு, வேலை, பொருள் எதுவும் தராதீங்க.!!” “ழகரம்” ஊடகத்துக்கு.. - ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!!

“வெளி மாநிலத்தவருக்கு வீடு, வேலை, பொருள் எதுவும் தராதீங்க.!!”


“ழகரம்” ஊடகத்துக்கு..  


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!!



கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Sunday, September 20, 2020

"பதவி அரசியலுக்கு வெளியே தமிழன்டா முழக்கத்தோடு புதிய இளைஞர்கள் புறப்பட்டுவிட்டார்கள்!” - தோழர் கி. வெங்கட்ராமன் அவர்களின் பேச்சு!

"பதவி அரசியலுக்கு வெளியே தமிழன்டா முழக்கத்தோடு புதிய இளைஞர்கள் புறப்பட்டுவிட்டார்கள்!”



தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுத்த தொடர் மறியலின் இறுதி நாள் (18.09.2020) போராட்டத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்களின் பேச்சு!  




கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Saturday, September 19, 2020

“வெளி மாநிலத்தவர்களுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்துவோம்! “வெளி மாநிலத்தவர்களுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்துவோம்! தோழர் பெ. மணியரசன் அவர்களின் பேச்சு!

வெளி மாநிலத்தவர்களுக்கு எதிராக

ஒத்துழையாமை இயக்கம் நடத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுத்த தொடர் மறியலின் இறுதி நாள் (18.09.2020) போராட்டத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்களின் பேச்சு! 




கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Saturday, August 29, 2020

“தமிழ்தேசிய எதிர்ப்பாளர்கள் ,ஏன் தமிழன் முதல்வர் ஆக கூடாதுன்னு நினைக்குறாங்க.!” - “ழகரம்” இணைய ஊடகத்துக்கு, ஐயா பெ. மணியரசன் அவர்களின் செவ்வி!

தமிழ்தேசிய எதிர்ப்பாளர்கள் ,ஏன் தமிழன் முதல்வர் ஆக கூடாதுன்னு நினைக்குறாங்க.!”


“ழகரம்” இணைய ஊடகத்துக்கு,

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் அவர்களின் செவ்வி!




கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Monday, July 20, 2020

வடமாநிலத் தொழிலாளர்களை மீண்டும் அழைக்கக் கூடாது! தமிழ்நாடு முதல்வருக்கு பெ. மணியரசன் கோரிக்கை!


வடமாநிலத் தொழிலாளர்களை
மீண்டும் அழைக்கக் கூடாது!

தமிழ்நாடு முதல்வருக்கு
தமிழ்த்தேசியப் பேரியக்கத்
தலைவர் பெ. மணியரசன் கோரிக்கை!


தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், கடந்த 17.07.2020 அன்று ஈரோடு சென்றிருந்தபோது, அம்மாவட்ட சிறுதொழில் உரிமையாளர் சங்கத்தின் தலைவர்கள் முதலமைச்சரிடம் ஒரு கோரிக்கை விண்ணப்பம் தந்துள்ளார்கள். அதில், ஈரோட்டில் வேலை பார்த்த 25,000 வடமாநிலத் தொழிலாளர்கள் கொரோனாவினால் சொந்த ஊர் திரும்பி விட்டார்கள். எனவே, இங்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக தொழிற்சாலைகளை இயக்க முடியவில்லை என்றும், வடமாநில அரசுகளைத் தொடர்பு கொண்டு மீண்டும் 25,000 தொழிலாளர்களை ஈரோட்டுக்குத் திருப்பி அழைத்து வர வேண்டுமென்றும் அம்மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

வடமாநிலத் தொழிலாளிகள் சொந்த ஊர் சென்றுவிட்டதால் ஏற்படும் தொழிலாளர் பற்றாக்குறையை ஈடுகட்ட தமிழ்நாடு அரசு, கடந்த 16.06.2020 அன்று “தமிழ்நாடு தனியார் துறை வேலை இணைம்” (Tamilnadu Private Job Portal) - www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தது. அதில் தொழிலாளர் வேண்டுவோரும், வேலை வேண்டுவோரும் தங்களது முகவரியைப் பதிவு செய்து கொண்டால், அவர்களுடைய தேவைகளை நிறைவு செய்வோம் என்று கூறியிருந்தார்கள். அந்த இணையதளம் செயல்படுகிறதா? அதன் மூலம், தேவைப்படும் நிறுவனங்களுக்குத் தொழிலாளிகளை இதுவரை அனுப்பி வைத்திருக்கிறார்களா என்ற விவரம் தெரியவில்லை.

“தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் வேலை வழங்கு வாரியம்” என்ற நிறுவனத்தை உருவாக்கி, அதன் மூலமாக வேலை கோரும் திறன் பெற்ற / திறன் குறைந்த மற்றும் தொழில் பயிற்சி பெற்ற அனைவரையும் பதிவு செய்து, எந்தெந்த நிறுவனங்களுக்கு எந்தத் தகுதியில் தொழிலாளர் தேவைப்படுகிறார்களோ, அவர்களை வழங்க வேண்டும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் கடந்த 2020 ஏப்ரல் மாதத்திலிருந்து தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை வைத்து வருகிறது.

மீண்டும் வடமாநிலத் தொழிலாளிகளை அழைத்து வருவதால் பின்வரும் பாதிப்புகள் உருவாகும் ஆபத்து உள்ளது. ஒன்று, கொரோனா கொள்ளைத் தொற்று நோய் மேலும் பரவும் அபாயம். இரண்டு, மண்ணின் மக்கள் வேலையின்றித் தவிக்கும்போது வெளி மாநிலத்தவர்களை வேலைக்கு அமர்த்தும் அநீதி. மூன்று, வடமாநிலத்தவர்கள் மிகை எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் குவியும்போது தமிழ்நாடு தமிழர்களின் தாயகமாக – தமிழ் மொழியை ஆட்சிமொழியாகக் கொண்ட தாயகமாக நீடிக்காமல் இந்தி மாநிலமாக மாறிவிடும் ஆபத்து.

மேற்கண்ட அனைத்தையும் கவனத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டுத் தொழில் முனைவோருக்குத் தேவையான தொழிலாளிகளை தமிழ்நாட்டிலிருந்தே வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும், வடமாநிங்களிலிருந்து தொழிலாளர்களை அழைக்கும் கோரிக்கையை நிராகரிக்குமாறும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.



தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Tuesday, October 22, 2019

“வெளி மாநிலத்தவரே திரும்பிப் போங்கள்!” சென்னை நடுவண் தொடர்வண்டி நிலையம் முன்பு மனிதச் சுவர் போராட்டம்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு முடிவு!


“வெளி மாநிலத்தவரே திரும்பிப் போங்கள்!” சென்னை நடுவண் தொடர்வண்டி நிலையம் முன்பு மனிதச் சுவர் போராட்டம்! 
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு முடிவு!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் தஞ்சை பேரியக்க அலுவலகத்தில் நேற்று (21.10.2019), பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமையில் நடைபெற்றது. பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு தோழர்கள் க. அருணபாரதி, பழ. இராசேந்திரன், நா. வைகறை, கோ. மாரிமுத்து, க. முருகன், இரெ. இராசு, க. விடுதலைச்சுடர், ம. இலட்சுமி, தை. செயபால், மு. தமிழ்மணி ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் - 1 :

“வெளி மாநிலத்தவரே திரும்பிப் போங்கள்!” சென்னை நடுவண் தொடர்வண்டி நிலையம் முன்பு மனிதச் சுவர் போராட்டம்!

தமிழ்நாட்டிலேயே தமிழர்களின் வேலை வாய்ப்பு, தொழில், வணிகம், கல்வி ஆகிய வாழ்வுரிமைகள் கிடைக்காமல் செய்து வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களும், வெளி மாநிலத்தவரும் பறித்துக் கொள்கிறார்கள். ஒரு நாளைக்கு பல்லாயிரக்கணக்கானோர் வெளி மாநிலங்களிலிருந்து வந்து தமிழ்நாட்டில் குவிகிறார்கள்.

இந்திய அரசு நிறுவனங்களான பி.எச்.இ.எல்., நெய்வேலி, படைக்கலத் தொழிற்சாலைகள் போன்ற பல்வேறு தொழிற்சாலைகள், வருமான வரி, ஜி.எஸ்.டி. வரி, கணக்காயர் அலுவலகம், அஞ்சலகம், வங்கிகள் போன்ற பல்வேறு அலுவலகங்கள், ஓ.என்.ஜி.சி. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள் போன்றவற்றில் 100க்கு 90 விழுக்காடும், சிலவற்றில் 100 விழுக்காடும் வட இந்தியர்களையும், வெளி மாநிலத்தவர்களையுமே இந்திய அரசு வேலையில் சேர்க்கிறது.

இவ்வேலைகளுக்கான தேர்வுகள் தமிழர்களைப் புறக்கணிக்கும் வகையில் திட்டமிட்டு நயவஞ்சகமாகவும், ஊழல் நிறைந்ததாகவும் நடத்தப்படுகின்றன.

தமிழ்நாட்டில் எல்லா துறைக்கும் தேவையான கல்வி கற்று வேலை இல்லாமல் பதிவு செய்திருப்போர் 90 இலட்சம் பேர் என்று அரசுப் பதிவுகள் கூறுகின்றன. வெளியார் குவிகின்ற இந்த நிலை தொடர்ந்தால், தமிழ்நாட்டிலேயே தமிழர்கள் வேலையற்ற அகதிகளாக - அயலாரை அண்டிப் பிழைக்கும் அடிமைகளாக மாறக்கூடிய ஆபத்து ஏற்படும்.

மண்ணின் மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் சட்டத்தை கர்நாடகம், மகாராட்டிரம், குசராத், ஆந்திரம், தெலுங்கானா போன்ற பல மாநிலங்கள் செயல்படுத்தி வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் இதேபோன்று சட்டத்தை இயற்றுமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கம் தமிழ்நாடு அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆனால், தமிழ்நாடு அரசு அனைத்து இந்தியாவில் இருந்தும் வந்து தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையத் தேர்வை எழுதுமாறு தொடர்ந்து அழைத்து வருகிறது. தமிழ்நாட்டிலுள்ள நடுவண் அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கு 90 விழுக்காடு வேலை வழங்க வேண்டுமென்ற பேரியக்கத்தின் கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை. தனியார் துறையிலும் தமிழர்களுக்கு 90 விழுக்காடு வேலை உறுதி செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை.

இந்நிலையில், மண்ணின் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கவும், வெள்ளம் போல் வந்து குவியும் வெளி மாநிலத்தவரைத் தடுக்கவும் – “வெளி மாநிலத்தவர்களே திரும்பிப் போங்கள்” என்று வேண்டுகோள் முழங்கி – சென்னை நடுவண் (சென்ட்ரல்) தொடர்வண்டி நிலையத்தில் வரும் 20.12.2019 அன்று காலை 10 மணிக்கு – மனிதச் சுவர் அமைத்து அறப்போராட்டம் நடத்துவதென்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு ஒருமனதாக முடிவு செய்கிறது.

தமிழ் மக்கள் அனைவரும் தமிழர் வாழ்வுரிமைக் காக்கும் இந்த அறப்போராட்டத்தில் அணிதிரளுமாறு அன்புடன் தமிழ்த்தேசியப் பேரியக்கம் அழைக்கிறது!

தீர்மானம் – 2

தமிழர் வரலாற்றை சிதைக்கும் தமிழ்த்துறை அமைச்சர் பாண்டியரசனைப் பதவி நீக்கம் செய்க!

தமிழ்த்துறை அமைச்சர் பாண்டியராசன் கீழடி தமிழர் நாகரிகத்தை “பாரத நாகரிகம்” என்று கூறி, தமிழர் வரலாற்றைத் திரிக்கும் கருத்துகளை அண்மையில் கூறினார். இது தமிழர் வரலாற்றை மறைக்கும் செயலாகும்!

ஏற்கெனவே மதுரையில் தமிழன்னை சிலை எழுப்புவதற்கான பன்னாட்டு ஏல அறிக்கை வெளியிட்டதில், சங்ககாலத் தமிழ்ப் பண்பாடு என்பது வேதகால பிராமணப் பண்பாடு கலந்தது என்றும், அதையும் பிரதிபலிக்கும் வகையில் தமிழன்னை சிலை அமைய வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசு கூறியிருந்தது.

தமிழன்னை பெயரில் சமற்கிருத மாதா சிலை எழுப்பும் திட்டத்தை எதிர்த்து, தமிழ்த்தேசியப் பேரியக்கம், நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் உணர்வாளர்கள் மதுரையில் நடத்திய கண்டனப் போராட்டத்தின் விளைவாக தமிழன்னை சிலையில் நடைபெறவிருந்த திரிபு வேலையை தடுத்து நிறுத்தினோம்.

நடப்பாண்டு பன்னிரெண்டாம் வகுப்பின் புதிய ஆங்கிலப் பாடப் புத்தகத்தில், தமிழ் மொழி கி.மு. 3ஆம் நூற்றாண்டில் தோன்றியது என்றும், சமற்கிருதம் கி.மு. 20ஆம் நூற்றாண்டில் தோன்றியது என்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜார்ஜ் எல். ஹார்ட் தவறாக எழுதிய கட்டுரை இடம் பெற்றிருந்தது. இக்கட்டுரையிலும் சங்ககாலத் தமிழர் பண்பாடு என்பது, வேதகால பிராமணப் பண்பாடும், இந்துப் பண்பாடும் கலந்திருந்தது என்று தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த கட்டுரையாசிரியர் ஜார்ஜ் ஹார்ட்டுக்கு 2015ஆம் ஆண்டு, பா.ச.க. அரசு “பத்மசிறீ” விருது கொடுத்து சிறப்பித்தது. இதுவரை இல்லாத வரையில் தமிழர்களின் சங்ககாலப் பண்பாட்டை வேத பிராமணப் பண்பாட்டுடன் இணைந்தது என்ற கூற்றை திரும்பத் திரும்ப சொல்வது அண்மையில்தான் அதிகரித்துள்ளது.

கீழடி நாகரிகத்தை பாரத நாகரிகம் என்பதும், திராவிட நாகரிகம் என்பதும் தமிழர் வரலாற்றையும் தனித்தன்மையுள்ள பெருமிதங்களையும் மறைத்து ஆரியத்துவப் பண்பாட்டிற்கு கீழ்ப்பட்டதாக மாற்றும் கொடுஞ்செயலாகும்!

தமிழ்த்துறைக்கென்று உள்ள அமைச்சர் பாண்டியராசன் கீழடி நாகரிகத்தை பாரத நாகரிகம் என்று குறிப்பிட்டது வேண்டுமென்றே திட்டமிட்டு தமிழை மறைக்க – தமிழர் நாகரிகத்தை மறைக்கக் கூறிய கருத்தாகும்! எனவே, தமிழ்த்துறை அமைச்சர் பாண்டியராசனை அப்பதவியிலிருந்து நீக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது!

தீர்மானம் – 3

ஏழு தமிழர் விடுதலை தீர்மானத்தை தமிழ்நாடு அரசு மீண்டும் ஆளுநருக்கு அனுப்ப வேண்டும்!

இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, தமிழ்நாடு அமைச்சரவை கடந்த 2018 செப்டம்பர் 9ஆம் நாள் – பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, இராபர்ட்பயஸ், அருப்புக்கோட்டை இரவிச்சந்திரன், செயக்குமார் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்யும் அறிக்கையை ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஓராண்டு கடந்தும் அவ்வறிக்கையை ஏற்று கையொப்பமிடாமல் வேண்டுமென்றே கிடப்பில் போட்டுள்ளார்.

அண்மையில் “இந்து” ஆங்கில நாளேட்டில் வெளியான செய்தியில், மேற்படி அறிக்கையை ஆளுநர் ஏற்கவில்லை என்றும், கையொப்பமிட முடியாது என்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் ஆளுநர் கூறிவிட்டார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசமைப்புச் சட்ட உறுப்பு 163 (1)–இன்படி தனது அதிகாரத்திற்கு உட்பட்ட பொருளில், மாநில அமைச்சரவை அளிக்கும் பரிந்துரையை அப்படியே ஏற்று செயல்படுவது ஆளுநரின் சட்டப்படியான கடமையாகும். இதுகுறித்து, ஏற்கெனவே உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் தெளிவாக வந்துள்ளன. 1999இல் நளினியின் சாவுத் தண்டனையை வாழ்நாள் தண்டனையாகக் குறைத்து அப்போதுள்ள தி.மு.க. அமைச்சரவை அளித்த பரிந்துரையை ஏற்க மறுத்தார் அன்றைய ஆளுநர் பாத்திமா பீவி.

அதுமட்டுமின்றி, இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கில் ஆளுநர் மாநில அரசின் பரிந்துரையை மறுப்பதற்கோ அல்லது தானே சொந்தமாக குற்றஞ்சாட்டப்பட்டவரை தூக்கிலிட வேண்டுமென்று ஆணையிடுவதற்கோ ஆளுநருக்கு அதிகாரமில்லை என்று தீர்ப்பளித்தார்கள். அதன்பின்னர், மாநில அரசின் பரிந்துரைப்படி நளினியின் சாவுத் தண்டனை வாழ்நாள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

இராசீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள ஏழு தமிழர்களை விடுதலை செய்வது பற்றி நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசமைப்புச் சட்ட ஆயம் விசாரித்து, கடந்த 2018 ஆகத்தில் அளித்த தீர்ப்பிலும் ஏழு தமிழர்களை விடுதலை செய்கின்ற அதிகாரம் 161-இன் கீழ் தங்கு தடையின்றி மாநில அரசுக்கு இருக்கிறது என்று கூறப்பட்டிருக்கிறது.

இவை அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சட்ட விரோதமாகச் செயல்படுகிறார். அவர் மீது இந்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், மோடி அரசு அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக – இனப்பாகுபாடு காட்டி ஏழு தமிழர்களுக்கு நீதி வழங்க மறுத்து வருவதால், அதே நிலைபாட்டை எடுத்துள்ள பன்வாரிலால் புரோகித்தை ஆதரிக்கிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு ஆளுநர் பதில் அளிக்கவில்லை என்று கூறி ஒதுங்கிக் கொள்வது தனது சட்டக்கடமையை நிறைவேற்ற மறுக்கும் செயல் மட்டுமல்ல, ஆளுநரின் சட்ட விரோதச் செயலுக்குத் துணை போகும் செயலும் ஆகும்.

மாநில அரசு அனுப்பும் பரிந்துரை / அறிக்கை ஆகியவற்றிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பது அல்லது மறுப்பது என்பதை வெளிப்படுத்த சட்டத்தில் காலவரம்பு கோரப்படவில்லை. எனவே, அவர் இறுதிவரை ஒரு அறிக்கையை அல்லது பரிந்துரையை கிடப்பில் போட்டு சாகடித்து விடலாம் என்று புரிந்து கொள்வதோ வாதம் செய்வதோ மிகமிகத் தவறானது. ஆளுநரின் விருப்பத் தேர்வு என்பது சட்டத்திற்கு உட்பட்டுத்தான் அமைய வேண்டும். தமது சொந்த விருப்பு வெறுப்புக்கேற்ப பாகுபாடு காட்டி முடிவெடுக்க ஆளுநருக்கு சட்ட அனுமதி இல்லை.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் பலவற்றில் ஆளுநரின் விருப்பத் தேர்வுக்குள்ள வரம்புகள் கூறப்பட்டுள்ளன. எனவே, தமிழ்நாடு அரசு ஓராண்டுக்கு மேல் அமைச்சரவையின் முடிவுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருக்கும் ஆளுநரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு நடவடிக்கையை கேள்விக்குள்ளாக்க வேண்டும். அத்துடன், மறுபடியும் ஏழு தமிழர் விடுதலையை அமைச்சரவையின் தீர்மானமாக்கி ஆளுநரின் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும். அதற்கும் ஆளுநர் செயல்பட மறுத்தால், அவர் மீது வழக்குத் தொடுக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு தமிழ்நாடு முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறது!

தீர்மானம் – 4

தமிழ்நாடு அமைந்த நவம்பர் – 1 விழாவை அனைத்து மாவட்டங்களிலும் அரசு கொண்டாட வேண்டும்!

கடந்த 1956 நவம்பர் 1 அன்று, தமிழர்களின் தாயகமாக “தமிழ்நாடு” மாநிலம் அமைக்கப்பட்டது. அப்போது, அண்டை மாநிலங்களிடம் ஏராளமான தமிழ்நாட்டின் பகுதிகளை இழந்துள்ளோம். அத்துயரம் ஒருபக்கம் இருந்தாலும், தமிழர்களுக்கான மொழிவழித் தாயகமாக தமிழ்நாடு அமைக்கப்பட்டதை வரவேற்கிறோம். அதற்கான “தமிழ்நாடு நாள்” விழாவை தமிழ்நாடு அரசு நடத்தும் என அண்மையில் அறிவித்துள்ளது.

அவ்விழாவை தமிழ் அறிஞர்களின் உரைகள், கவிதைகள், பல்வேறு கலைஞர்களின் நிகழ்ச்சிகள் ஆகியவற்றைக் கொண்டு சிறப்பாக எல்லா மாவட்டத்திலும் தமிழ்நாடு அரசு கொண்டாட வேண்டும். அவ்விழாக்களில் தமிழ்நாடு எல்லைகளை மீட்கப் போராடிய பெருமக்களையும், அவர்தம் குடும்பத்தினரையும் அழைத்து, அவர்களுக்கு சிறப்பு செய்ய வேண்டும். அவர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தித் தர வேண்டும் என்றும், எல்லை மீட்புப் போராட்ட வரலாற்றை பாடப் புத்தகத்தில் சேர்க்க வேண்டுமென்றும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT