உடனடிச்செய்திகள்
Showing posts with label உழவர் முன்னணி. Show all posts
Showing posts with label உழவர் முன்னணி. Show all posts

Monday, November 17, 2014

இராயக்கோட்டையில் எழுச்சிமிகுப் போராட்டம் - கோரிக்கைக்கு அரசு நிர்வாகம் பணிந்தது!










எழுச்சிமிக்க மக்கள் போராட்டம்! பணிந்தது அரசு நிர்வாகம்!
தென்பெண்ணை கிளைவாய்க்கால் கோரும்
இராயக்கோட்டை மக்கள் போராட்டத்திற்கு முதல் கட்ட வெற்றி! 



இராயக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் போராட்டத்திற்கு முதல் கட்ட வெற்றி கிடைத்துள்ளதாக, தமிழக உழவர் முன்னணி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தமிழக உழவர் முன்னணி வெளியிட்ட செய்தி குறிப்பு;

கிருட்டிணகிரி மாவட்டம் - இராயக்கோட்டையில், வறட்சியைப் போக்கி வேளாண்மையை செழுமைப்படுத்தும் வகையில், தென்பெண்ணைக் கிளைவாய்க்கால் மூலம் நீர் கொண்டு வரும் 'தென்பெண்ணைக் கிளைவாய்க்கால் திட்டத்தை' நிறைவேற்றக் கோரி பல்லாண்டு காலமாக, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். 

இக்கோரிக்கையை, தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமையிலான தமிழக உழவர் முன்னணியும், அப்பகுதி மக்களையும், உழவர்களையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட 'தென்பெண்ணை கிளைவாய்க்கால் கோரும் உழவர் இயக்கமும்' முன்னெடுத்துச் சென்றன.

இவ்வமைப்புகளின் தொடர்ச்சியான போராட்டங்கள் காரணமாக, 2010ஆம் ஆண்டு இத்திட்டம் குறித்து அரசு ஆய்வு செய்தது. 2012-2013ஆம் நிதி ஆண்டில், இத்திட்டம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, 2014ஆம் ஆண்டு எப்ரலில் இந்தத் திட்டத்துக்கு ரூ.22.20 கோடி செலவாகும் என மதிப்பீடும் செய்யப்பட்டது. ஆனாலும், இத்திட்டத்திற்கானப் பணிகள் நடக்கவில்லை.

எனவே, இந்த நிதியாண்டிலேயே இப்பணிகளை நடத்த வேண்டுமெனக் கோரி, இன்று (17.11.2014) இராயக்கோட்டையில் சாலை மறியல் மற்றும் கடையடைப்புப் போராட்டத்திற்கு, தமிழக உழவர் முன்னணி - தென்பெண்ணை கிளைவாய்க்கால் கோரும் உழவர் அமைப்பு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இவ்வழைப்பை ஏற்று, வணிகர் சங்கங்களும், காய்கறிக் கடை உரிமையாளர்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட வணிகர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். 

இன்று, காலை முதல் இராயக்கோட்டை பகுதியில் முழுமையான கடையடைப்பு நடைபெற்று வந்த நிலையில், இராயக்கோட்டை முதன்மைச் சாலையில், தமிழக உழவர் முன்னணித் தலைமை ஆலோசகர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில், ஆயிரக்கணக்கான உழவர்களும், வணிகர்களும், பொது மக்களும் கலந்து கொண்டு எழுச்சியுடன் முழக்கங்கள் எழுப்பினர். 

தென்பெண்ணை கிளைவாய்க்கால் கோரும் உழவர் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் தோழர் மு.வேலாயுதம், தமிழக உழவர் முன்னணி - தென்பெண்ணை கிளைவாய்க்கால் கோரும் உழவர் அமைப்பு பகுதி நிர்வாகிகள், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் செம்பரிதி உள்ளிட்ட திரளான த.தே.பே. தோழர்கள் என நூற்றுக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர். 

இதனைத் தொடர்ந்து, பேரணி நடைபெறும் இடத்திற்கு வந்த காவல்துறையினரும் அரசு அதிகாரிகளும் போராட்டக்குழுவினருடன் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்தனர். 

இராயக்கோட்டை காவல் நிலையத்தில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அரசுத் தரப்பில், தேன்கனிக்கோட்டை வட்டம் - வட்டாட்சியர், கிருட்டிணகிரி பொதுப்பணித்துறை திட்ட வடிவமைப்பு உப கோட்டம் உதவி செயற்பொறியாளர்  திருமதி. வனஜா, தேன்கனிக்கோட்டை துணை வட்டாட்சியர், இராயக்கோட்டை வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

போராட்டக் குழு சார்பில், தமிழக உழவர் முன்னணி தலைமை ஆலோசகர் தோழர் கி.வெங்கட்ராமன், தென்பெண்ணை கிளைவாய்க்கால் கோரும் உழவர் அமைப்பு ஆலோசகர் தோழர் கோ.மாரிமுத்து, இராயக்கோட்டை தமிழக உழவர் முன்னணிக் கிளைச் செயலாளர் தோழர் தூருவாசன், முகளுர் கிளைச் செயலாளர் தோழர் முகுந்தன், அளேசீபம் கிளைச் செயலாளர் தோழர் அனுமந்தப்பா, கொப்பக்கரை கிளைச் செயலாளர் தோழர் இராசேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

பேச்சுவார்த்தையின் நிறைவில், திட்டத்தை இந்த நிதியாண்டிலேயே நிறைவேற்றுவதற்கான உடனடிப் பணிகளில் ஈடுபட அரசுத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. 

இராயக்கோட்டை மக்கள் போராட்டம் வெல்லட்டும்!

Thursday, July 11, 2013

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி காவிரி உரிமை மீட்புக் குழு சார்பாக சிதம்பரத்தில் நடைபெற்ற பெரும்திரள் ஆர்ப்பாட்டத்தில் தோழர் கி.வெங்கட்ராமன் ஆற்றிய உரை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சிதம்பரத்தில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் 09.07.2013 அன்று காலை சிதம்பரம் தலைமை அஞசலகம் முன்புபெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளரும்,தமிழக உழவர் முன்னணி ஆலோசகருமான தோழர் கி.வெங்கட்ராமன் அவர்கள் ஆற்றிய உரை





Friday, March 1, 2013

இந்திய அரசின் வரவு - செலவுத் திட்டம் மாய்மாலக் கணக்குகளில் ஒளிந்துள்ள மக்கள் பகைத் திட்டம் - தோழர் கி.வெங்கட்ராமன் அறிக்கை



இந்திய அரசின் வரவு - செலவுத் திட்டம்
மாய்மாலக் கணக்குகளில் ஒளிந்துள்ள
மக்கள் பகைத் திட்டம்
 

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர்
தோழர் கி.வெங்கட்ராமன் அறிக்கை

உண்மை நிலையைச் சொல்வது போன்ற பாவனையில் பித்தலாட்டங்கள், அறிவார்ந்த மேற்கோள்களுக்கு அடியில் இழிவான நோக்கம், மாய்மாலக் கணக்குகளில் பதுங்கி இருக்கும் மக்கள் பகைத்திட்டம் – இதுவே ப.சிதம்பரம் முன் வைத்துள்ள வரவு -செலவுத் திட்டம்.

நாடாளுமனற மக்களவையில் 28-02-2013 அன்று இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் முன்வைத்த இந்தியாவின் வரவு செலவுத் திட்டம் 2013 – 2014, வளர்ச்சி நோக்கிய  நிதித் திட்டம் என்று மன்மோகன்சிங் மட்டுமே பாராட்ட முடியும். பன்னாட்டு பெரு நிறுவனங்கள் மட்டுமே மகிழ்ச்சி அடையமுடியும்.

நாடாளுமன்றத்தில் வரவு-செலவுத் திட்டம் முன்வைக்கப்படுவதற்கு முன்னாலேயே தனித்தனி அறிவிப்புகள் மூலம் மக்கள் மீது நிதிச் சுமைகளை ஏற்றுவது அண்மைக்காலமாக வழக்கமாகிவிட்ட ஒன்று. இந்த வரவு செலவு திட்டத்திற்கு முன்பாகவே பெட்ரோல் டீசல் விலைகள் உயர்த்தபட்டுவிட்டன. மண்ணெண்ணெய் அளவு வெட்டப்பட்டுவிட்டது. மானியவிலை எரிவளி உருளைகளுக்கு வரம்புகட்டப்பட்டுவிட்டது. இதற்கு முதல் நாள் முன்வைக்கப்பட்ட தொடர்வண்டி வரவு செலவு அறிக்கையில் சரக்குக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுவிட்டன. ஆறு மாதத்துக்கு ஒருமுறை பயணிகள் கட்டணம், சரக்குக் கட்டணம் ஆகியவற்றை உயர்த்திக்கொள்ள நிரந்தர ஏற்பாடும் செய்யப்பட்டுவிட்டது.

பட்ஜெட் அறிவித்த மறுநாள்(01.03.2013) அன்று மீண்டும் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இவைபோன்ற தில்லி அரசின் கொள்கைகளால் ஏற்கெனவே பண வீக்கமும், விலை உயர்வும் மக்களை அழுத்திவருகின்றன. இதற்குமேல் ப.சிதம்பரம் மக்களுக்கான மானியச் செலவுகளை இந்த வரவு செலவுத் திட்டத்தில் கடுமையாகக் குறைத்துவிட்டார். வேளாண்மை மற்றும் சமூக நல மானியங்கள் சென்ற ஆண்டை ஒப்பிட 26,571 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. எரி எண்ணெய் மானியம் 30 ஆயிரம் கோடி ரூபாய் வெட்டப்பட்டுள்ளது.  உணவு மானியத்துக்கு சென்ற ஆண்டை விட கூடுதலாக குறைந்தது 25 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட வேண்டும் என இதற்கான நாடாளுமன்ற நிலைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ள  நிலையில் இந்த வரவு செலவுத்திட்டத்தில் வெறும் 5 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.  பண வீக்கத்தை கருத்தில் கொண்டால் இதுவும் குறையும்.

இவை அனைத்தும் விலை உயர்வை இன்னும் அதிகரிக்கும்.

சென்ற வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்படும் போது கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு 5,21,25,000 கோடிரூபாய் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த வரவு செலவு திட்ட அறிக்கையில் மேற்கண்ட திட்ட மதிப்பீடு திருத்திய மதிப்பீட்டில் 4,29,1840 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

சமூகப் பாதுகாப்பு திட்ட செலவுகளில் பெரும்பாலானவை மாநில அரசுகளின் வழியாக செயல்படுத்தப்படுபவை ஆகும். நிதிவரவை நம்பி மாநில அரசுகள் பல நலத்திட்டங்களுக்கு செலவு செய்துவிட்டன. இந்நிலையில் திருத்திய மதிப்பீட்டில் ஏறத்தாழ 1 இலட்சம் கோடி ரூபாய் குறைவாக அறிவிக்கப்பட்டால் மாநில அரசுகள் இக்கட்டான நிலையில் வைக்கப்படும்.

இந்திய அரசின் வரவு செலவுத் திட்ட அறிக்கை நம்ப முடியாத பித்தலாட்டமாக இழிந்துவிட்டதை இது எடுத்துக்காட்டுகிறது. 

ப.சிதம்பரம் விதித்துள்ள வரியினங்கள் பெரும்பாலும்  மேல்வரி (சர் சார்ஜ்), சேவை வரி போன்றவையே ஆகும். இந்த வரி வருமானத்தில் மாநிலங்களுக்கு பங்கு கொடுக்க வேண்டியதில்லை. எனவே மாநில வரிப் பங்கு உயர வாய்ப்பில்லை  மாறாக இந்த வரவு செலவுத் திட்டத்தில் மாநிலங்களுக்கான வரி வருமானப் பங்கு 8000 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.  பல தலைப்புகளில் மாநிலங்களுக்கு இந்திய அரசு வழங்கி வந்த நிதித்தொகை 38,000 கோடி ரூபாய் வெட்டப்பட்டுள்ளது.

வேளாண்மைக்கு சென்ற நிதியாண்டைவிட 1.25 இலட்சம் கோடி ரூபாய் கூடுதலாக சேர்த்து 7 இலட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க வழி வகை செய்யப்பட்டுள்ளதாக வாண வேடிக்கை காட்டப்பட்டுள்ளது.   வரவு - செலவு திட்டத்தில் இதற்கென்று ஒரு ரூபாய் கூட  ஒதுக்கப்படவில்லை. இது அரசு வங்கிகளுக்கான வழிகாட்டல் இலக்கே தவிர வேறொன்றுமில்லை.

கடந்த 2007-க்குப் பிறகு ’வேளாண்மை’ என்ற வகையினத்துக்குள் வேளாண்மைக்கு மறைமுகமாகத் துணை செய்பவை என்ற பெயரால் உணவுப் பதப்படுத்துதல், உரம், நீர் மோட்டார்கள், உழவு எந்திரங்கள், விதை உற்ப்பத்தி போன்ற பலத்தொழில்களும் கொண்டுவரப்பட்டுவிட்டன.

இத்தொழில் நிறுவனங்களுக்கு சலுகை வட்டியில் வேளாண்மைக் கடன் என்ற பெயரில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப் படுகிறது. உழவர்கள் பெயரால் இம்பீரியல் டொபாக்கோ, இந்துஸ்தான் லீவர், கிரிலோஸ்கர், மகிந்திரா, பைசர், மான்சாண்டோ ஆகிய பெரு நிறுவனங்களுக்கும், அவற்றின் துணை நிறுவனங்களுக்கும் மக்களின் சேமிப்புப் பணம் சலுகைக் கடனாக வழங்கப்படுகிறது.

அரசுடைமை வங்கிகளின் வேளாண் கடன் விவரங்களை உற்று நோக்கினால் இது புரியும். 

கடந்த 20 ஆண்டுகளில் அரசு வங்கிகளின் கிராமப்புற கிளைகள் வழங்கிய வேளாண்மைக் கடன் அவ்வங்கிகளின் மொத்தக் கடன் வழங்கலில் 55 விழுக்காட்டிலிருந்து 38.4 விழுக்காடாக குறைந்துள்ளது.   மாறாக நகரங்களிலும், பெரு நகரங்களிலும் உள்ள அரசு வங்கிக் கிளைகளில் பெறப்பட்டுள்ள வேளாண்மைக்கடன் இதே கால இடைவெளியில் 4 விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காடாக ஐந்து மடங்கு உயர்ந்துள்ளது.

வேளாண்மைக் கடன் என்ற பெயரால் 2 இலட்சத்திற்கு மேல் 25 கோடி ரூபாய்வரை கடன் பெற்றுள்ளவர்கள் விழுக்காடே உயர்ந்துவருகிறது.  எடுத்துகாட்டாக கடந்த 20 ஆண்டுகளில் 2 இலட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுள்ளவர்களுக்கு கடன்வழங்கல் தொகை 83 விழுக்காட்டிலிருந்து 44 விழுக்காடாக சரிந்துள்ளது. இதுதான் உண்மையில் உழவர்கள் பெற்ற பயிர்க் கடனாகும். உழவர்களுக்கு பயிர்க்கடன் வழங்கல் குறைந்து வரும் அதே காலத்தில் வேளாண்மைக் கடன் என்றப் பெயரால் 25 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெறுவோருக்கான கடன் வழங்கல் விழுக்காடு 5% லிருந்து 18 % ஆக உயர்ந்துள்ளது.

இது தாராள மயமாக்கலுக்குப் பிறகு படிப்படியாக வளர்ந்து வரும் போக்காகும். இதுபற்றி ஆய்வறிக்கைகளை மேற்கோள்காட்டி அவ்வப்போது சுட்டிக்காட்டிவருகிறோம். (எ.கா: காண்க: எதிர்க்கப்பட வேண்டிய வரவு செலவுத்திட்டம் – கி.வெங்கட்ராமன் , தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் – மார்ச் 16 – 31, 2011 இதழ்)  

அரசுத்துறை நிறுவன பங்குகளை தனியார் முதலாளிகளுக்கு விற்பனை செய்து அதில் கிடைக்கும் தொகையே வரும் நிதியாண்டில் வருவாயைத் திரட்ட  முதன்மையான வழியாக ப.சிதம்பரத்தின் வரவு செலவுத் திட்டம் கூறுகிறது. இவ்வாறு வரும் நிதியாண்டில் 50 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.   பாட்டன் சேர்த்த சொத்தை விற்று செலவு செய்யும் நாட்டுப்புற சோக்காளிகளின் ஊதாரித்தனத்துக்கு பெரிய பொருளியல் திட்டம் போன்ற ஒப்பனை செய்யப்படுகிறது.

ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு பத்து விழுக்காடு மேல் வரி போடப்பட்டுள்ளது. பணக்காரர்கள் மேல் வரிவிதித்து அத்தொகையை ஏழைகளுக்கு செலவு செய்யும்  ஆகப்பெரிய மக்கள் நலத்திட்டம் போல் இதனை காங்கிரசு தலைமை புகழ்ந்து தள்ளுகிறது.

ஆனால், இந்த வரவு செலவுத்திட்டத்தில் மட்டும் இந்த நிதியாண்டில் மட்டும் இந்திய  மற்றும் வெளிநாட்டுப் பெருமுதலாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வரிச்சலுகை 5,73,630 கோடி ரூபாய் ஆகும். இவ்வளவு பெரும் தொகையை  பெருமுதலாளிகளுக்கு வரிகுறைப்பாக வாரி வழங்கிவிட்டு நிதிப் பற்றாக்குறை இந்திய அரசை நிமிர முடியாமல் அழுத்துவதாக நிதியமைச்சர் ப.சிதம்பரம் புலம்புகிறார்.

அவர் கூறுகிற நிதிப்பற்றாக்குறை திருத்திய மதிப்பீட்டின்படி 5,20,925 கோடி ரூபாய் ஆகும். பெரு முதலாளிகளுக்கு வழங்கப்பட்ட மேற்கூறிய வரிச்சலுகையை விட இந்த நிதிப் பற்றாக்குறை குறைவானது. அதாவது பெருமுதலாளிகளுக்கு சலுகை செய்வதற்காகவே  நிதிப்பற்றாக்குறையை இந்திய அரசு சுமக்கிறது. இந்த சுமையை அப்படியே மக்கள் மீதும், மாநிலங்கள் மீதும் இறக்கிவிடுகிறது.

இந்த மக்கள் பகைத்திட்டத்தை நிறைவேற்ற பல்வேறு மாய்மாலக் கணக்குகளைக் காட்டி மக்கள் கண்ணில் மண் தூவ முயல்கிறார் ப.சிதம்பரம்.

இவண்,
கி.வெங்கட்ராமன்,
பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.

இடம்: சிதம்பரம்


 
 

Tuesday, August 21, 2012

சிதம்பரத்தில் தமிழக உழவர் முன்னணி மறியல்200க்கும் மேற்பட்ட உழவர்கள் கைது!


காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பீன்படி கர்நாடகத்திலிருந்து மாதந்தோறூம் நீரைப்பெற தமிழக அரசு தவறியதால் ஏற்பட்ட குறுவை சாகுபடி இழப்புக்கு ஏக்கருக்கு ரூ12,000/- இழப்பீடு கோரி தமிழக உழவர் முன்னணி சிதம்பரம் கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு 21.08.2012 காலை 11.30 மணி அளவில் மறியல் போராட்டம் நடத்தினர், உழவர் முன்னணியின் கடலூர் மாவட்டச் செயலாளர் திரு.சி.ஆறுமுகம் தலைமையில் இம்மறியல் போராட்டத்தில் கலந்துக்கொண்ட 200க்கும் மேற்பட்ட உழவர்கள் கைது செய்யப்பட்டனர்.

காவிரி தடுக்கும் கர்நாடகத்திற்கு

பொருளாதார தடை விதித்தும்

இந்திய அரசுக்கு எதிராக

வரி கொடாமை நடத்தியும்

காவிரி நீரைப் பெற்றுத் தராத

தமிழக அரசே! ஜெயா அரசே!

குறுவை காய்ந்து போனதற்கு

நீயே பொறுப்பு! நீயே பொறுப்பு

குறுவை சாகுபடி இழப்புக்கு

ஏக்கருக்கு 12ஆயிரம்

இழப்பீடு உடனே வழங்கு!

தானே புயல் காப்பீட்டு தொகையை

கடனுக்காக பிடித்தம் செய்யாதே

உழவர்களை வஞ்சிக்காதே!

பயீர்க்காப்பீட்டு தொகையினை

முழுமையாக உடனே வழங்கு!

தானே புயலால் பாதித்த

பயீர் கடன் முழுவதையும்

தள்ளுபடி செய்! தள்ளுபடி செய்!

என்ற முழக்கங்களோடு சிதம்பரம் பெரியார் சிலை அருகிலிருந்து தமிழக உழவ்ர் முன்னணியின் எழுச்சி பேரணி புறப்பட்டது.

மாவட்டச் செயலாளர் திரு.சி.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில் மாவட்டத் தலைவர் திரு.அ.கோ.சிவராமன்,மா.கோ.தேவராசன் மற்றும் பொறியாளர் செயபாலன், சரவணன், மதிவாணன், கென்னடி , இராசேந்திரன், நாராயணசாமி, ஆசிரியர் கோவிந்தராசன், பாலன், பொன்னுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பேரணியின் முடிவில் கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து மறியல் செய்த உழவர் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.




(செய்தி : த.தே.பொ.க.செய்தி பிரிவு,படங்கள் : அரவிந்தன்)

Thursday, March 24, 2011

கட்சிகளைப் புரிந்துக்கொள்வோம்! உழவர்களாய் அணிதிரள்வோம்!

கட்சிகளைப் புரிந்துக்கொள்வோம்! உழவர்களாய் அணிதிரள்வோம்!

தமிழக உழவர் முன்னணி அறிக்கை!

வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கும் முக்கிய கட்சிகள் அனைத்தும் வேளாண்மையைப் புறக்கணித்திருப்பது உழவர்களுக்கு வேதனை அளிக்கிறது.

அரசியல் கட்சிகள் ஒன்றோடொன்று முந்திக் கொண்டு இலவசங்கள் வழங்குவதாக அறிவிக்கிறார்களே அன்றி தமிழக மக்களின் வாழ்வாதாரமான வேளாண்மையையும், சிறுதொழில்களையும் பாதுகாப்பதற்கு உருப்படியான திட்டம் எதையும் முன்வைக்கவில்லை.

தமிழக வேளாண் சந்தையை பாதுகாப்பது, வேளாண் விளைபொருள்களுக்கு
இலாபவிலை உறுதி செய்வது, வேளாண் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது போன்ற வேளாண்மை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தேர்தல் கட்சிகள் கவலைப்படுவதாகவே தெரியவில்லை.

காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு ஆகியவை அண்டை மாநிலங்களால் முடக்கப்பட்டு தமிழகம் ஒரு வகை நீர் முற்றுகையில் வைக்கப்பட்டிருக்கிறது. வேளாண்மைக்கும், குடிநீர் தேவைக்கும் அடிப்படை ஆதாரமான ஆற்றுநீர் உரிமையை மீட்பதற்கு அண்டை மாநிலங்களுக்கும், இந்திய அரசுக்கும் அரசியல்-பொருளியல் அழுத்தம் கொடுப்பது பற்றி இக்கட்சிகள் சிந்திக்கவே இல்லை.

வற்றிய ஆறுகளில் மணல் அள்ளி அண்டை மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைத்து கொள்ளையடிப்பதில் அனைத்து கட்சிகளும் ஒன்றுபோல் செயல்படுகின்றன.வேளாண் நிலங்கள் சிறப்பு பொருளியல் மண்டலத்திற்காகவும், அடுக்குமாடி கட்டடங்களுக்காகவும் மிக வேகமாக மனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இந்த மனை வணிகத்தில் கட்சி வேறுபாடின்றி தேர்தல் தலைவர்கள் அனைத்து மட்டத்திலும் தரகர்களாக செயல்படுகின்றனர்.

வேளாண்மைக்கும் சுற்றுச்சூழலுக்கும் உலைவைக்கும் மரபீனி மாற்று விதைகளைப்பற்றி இத்தேர்தலில் போட்டியிடும் பெரியகட்சிகள் எதுவும் கண்டுக்கொள்ளவேயில்லை.

ஒரு ரூபாய் அரிசித்திட்டம், இலவச அரிசித் திட்டம் போன்றவை நெல்லுக்கு உரிய விலை கிடைக்காமல் அழுத்தும் முக்கிய காரணிகளாக அமைகின்றன.

இந்திய அரசு வேளாண் மானியத்தையும், வங்கிக் கடன்களையும் பெருமளவு வெட்டியுள்ள சூழலில் தமிழக உழவர்கள் கூட்டுறவு வங்கிகளை மட்டுமே குறைந்த வட்டிக்கடனுக்கு சார்ந்து நிற்கும் நிலை உள்ளது.ஆனால் கூட்டுறவு வங்கிகள் வேளாண் கருவிகளை வாங்க கடன் வழங்குவது பெரிதும் குறைக்கப்பட்டுள்ளது. இதை சரிசெய்து உழவர்களுக்கு வேளாண் கடன்கள் தாரளமாக வழங்குவது பற்றி கட்சிகள் கவனம் செலுத்தவில்லை.

இவ்வாறு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் பெரும்பாலான கட்சிகள் வேளாண்மையையும் உழவர்களையும் முற்றிலும் புறக்கணித்துவிட்டன. இலவ சங்கள் அறிவித்தும் வாக்காளர்களுக்கு கையூட்டு கொடுத்தும் பதவியைப் பெறுவது என்பது மட்டுமே அவர்கள் கடைபிடிக்கும் அரசியல் பாதையாக உள்ளது. எந்தத் தேர்தல் கட்சியிலும் உழவர்கள் செல்வாக்கு செலுத்தும் அளவுக்கு வலுவுள்ள சக்தியாக இல்லை.ஆனால் கிராமப்புற வாக்காளர்கள் தான் எந்தத் தேர்தலிலும் அதிக எண்ணிக்கையில் வாக்களிப்பவர்களாக உள்ளனர்.

தமிழ்நாட்டு உழவர்கள் தங்கள் உரிமைகளையும் நலன்களையும் மறந்து இவ்வாறான கட்சிகளில் கரைந்து பிரிந்து கிடப்பதே இந்த அவல நிலைக்கு முதன்மையான காரணமாகும்.

இனியாவது உழவர் பெருமக்கள் இந்தத் தேர்தல் சூதாட்ட அரசியலைப் புரிந்துக் கொண்டு கட்சிகளுக்கு அப்பால் அணிதிரண்டு உரிமைகளை வலியுறுத்தும் மாற்று அரசியல் சக்தியாக மாற வேண்டும்; உழவர்களாய் அணிதிரளவேண்டும் என தமிழக உழவர் முன்னணி கேட்டுக்கொள்கிறது.

இப்படிக்கு,
சி.ஆறுமுகம்,
செயலாளர்,
தமிழக உழவர் முன்னணி

23.03.2011

Thursday, August 5, 2010

தமிழகத்தை நெருங்குகிறது உணவுப்பஞ்சம் - தமிழக உழவர் முன்னணி எச்சரிக்கை!

தமிழகத்தை நெருங்குகிறது உணவுப்பஞ்சம்
தமிழக உழவர் முன்னணி எச்சரிக்கை!
சிதம்பரம், 05.08.2010.

தமிழகத்தை உணவுப்பஞ்சம் நெருங்குவதற்குள் நாம் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் திரு. கி.வெங்கட்ராமன் பேசினார். சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு, தமிழக உழவர் முன்னணி சார்பில் இன்று (05.08.2010) காலை நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.

தமிழகத்தின் காவிரி ஆற்றுநீர் உரிமையை மெல்லக் கொன்றுக் கொண்டிருக்கும் இந்திய, தமிழக அரசுகளைக் கண்டித்து நடந்த இவ்வாப்பாட்டத்திற்கு தமிழக உழவா முன்னணி கடலூர் மாவட்டச் செயலாளர் திரு. சி.ஆறுமுகம் தலைமை தாங்கினார்.




ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றிய, தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகர் திரு.கி.வெங்கட்ராமன் பேசியதாவது:

திராவிட நல்லிணக்கம் பேசி, காவிரி உரிமையை தமிழக முதலமைச்சர் கருணாநிதி கைகழுவிவிடுகிறார். இதுவரை கர்நாடக முதலமைச்சர்கள் தான் கர்நாடகாவில் மழை பொழிந்து அணை நிரம்பினால் தமிழகத்திற்கு தண்ணீர் விடுவோம் என்று சொல்லி வந்துள்ளனர். ஆனால் இப்போது கோவையில் அண்மையில் பேசிய முதல்வர் கருணாநிதி கர்நாடகத்தில் போதிய மழை பொழிந்தால் தான் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்று பேசினார். இது கர்நாடகத்தின் குரலை எதிரொலிப்பதாகும்.
இடைக்காலத் தீர்ப்பு செயலில் இருப்பதாக தமிழக உழவர் முன்னணி கடந்த 3 ஆண்டுகளாக, இறுதித் தீர்ப்பு வந்ததிலிருந்து சொல்லி வந்தது. ஆனால், இப்போது தான் இதை கருணாநிதி கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்த கால தாமதம் காவிரி பாசனப் பகுதியின் குறுவை சாகுபடியை கொன்று விட்டது.

இதே போக்கு நீடித்தால் உழவர்கள் வேளாண்மையை விட்டு ஒதுங்குவதோடு தமிழகத்தில் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலை வரும். அதனால், இப்போதே நாம் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ்நாட்டு உழவர்களின் குரலை எதிரொலித்த இவ்வார்ப்பாட்டத்தில், திரளான உழவர்களும், பொது மக்களும் கலந்து கொண்டனர்.

Saturday, July 31, 2010

காவிரி நீர் உரிமையை மறுக்கும் இந்திய, தமிழக அரசுகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!


காவிரி நீர் உரிமையை மறுக்கும் இந்திய, தமிழக அரசுகளை எதிர்த்து தமிழக உழவர் முன்னணி சார்பில் 05.08.2010 அன்று சிதம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக, தமிழக உழவர் முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காவிரி ஆற்றுநீர் உரிமைப் பிரச்சினை காவிரி பாயும் பகுதியின் உழவர் பிரச்சினை மட்டுமல்ல; தமிழ்நாட்டின் உரிமைப் பிரச்சினையாகும்.

1924-ஆம் ஆண்டு காவிரி ஒப்பந்தத்தை மீறி கர்நாடகம் காவிரியின் குறுக்கே அணைகளைக் கட்ட, வழக்கம் போல் தமிழகத்திற்கு வஞ்சகம் செய்யும் இந்திய அரசு இதிலும் கர்நாடகத்திற்கே துணை நின்றது. தமிழகத்தின் உரிமையைப் பறிகொடுத்ததோடு இந்திய அரசைப் பாதுகாக்கும் பணியை செம்மையாக செய்து வருகின்றன.

வேளாண்மையில் ஈடுபட்டுள்ள உழவர்களாகிய நாமும் கட்சிகளாக பிரிந்து லாவணியில் பங்கெடுத்து காவிரி உரிமையை இழந்துக் கொண்டிருக்கிறோம். குறுவை சாகுபடியை இழந்தோம்; சம்பாவுக்கும் நீரின்றி தவித்தோம். பின் புழுதி ஒட்டி நேரடி விதைப்புக்கு மாறினோம். தமிழக வேளாண் வல்லுனர்களும் காவிரி உரிமையைப் பெறுவதற்கு பதிலாக மாற்று பயிர் சாகுபடி செய்யுங்கள்; மரம் வளருங்கள்; சொட்டு நீர் பாசனம் செய்யுங்கள் என்று இலவச ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். சில அரசியல் கட்சிகள் நதிகளை இணைப்போம்! நதிகளை தேசியமயமாக்குவோம்! என போகாத ஊருக்கு வழி காட்டுகின்றன.

பாகிஸ்தானும், பங்களாதேசும் ஆற்றுநீரை உரிமையுடன் இந்திய அரசிடமிருந்து பெறுவது போல் காவிரி நீரை தமிழகமும் பெற வேண்டும் என்ற சிந்தனை அற்றவர்களாக உழவர்களாகிய நாம் இருக்கிறோம்.

காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி ஜூலை வரை வரவேண்டிய நீரை தமிழகம் மாதந்தோறும் கேட்டுப்பெற்றிருந்தால் குறுவைக்க ஜன் மாதம் 12ம் தேதி மேட்டூர் அணையை திறந்திருக்கலாம். இதைவிடுத்து, ஆடிப்பெருக்குக்காக அணையை திறப்பதாக தமிழக முதல்வர் அறிவிப்பது ஒரு அரசியல் நாடகம். இதை நம்பி உழவர்கள் வேளாண்மையில் ஈடுபடுவது சூதாட்டத்திற்கு ஒப்பானது.

ஆகவே தமிழக உழவர்களே! இன்னும் காலம் கடந்து விடவில்லை. கட்சி வேலிகளைக் கடந்து உழவர்களாய் நாம் சிந்தித்தால் காவிரி உரிமையை மீட்டெடுக்க முடியும். காவிரியில் நமது உரிமையை இழப்பது வேளாண்மையை மட்டும் பாதிக்காது. தமிழகத்து தொழில், வணிகம், குடிநீர் தேவை ஆகியவற்றையும் பாதிக்கும். ஆகவே ஒட்டுமொத்த தமிழர்களும் ஓருடம்பாய் வீறுகொண்டு எழுவோம்! காவிரி உரிமை மீட்போம்!

தமிழக அரசே! காவிரி நீர் தராத கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரம் நிறுத்து! காவிரி நீர் தராத கர்நாடகத்தின் மீது பொருளாதார தடைவிதி! என்று கோரிக்கைகளை முன்வைத்தும், நடுநிலை தவறிய இந்திய அரசு, தமிழகத்தில் வரிவசூல் செய்வதை நிறுத்த வேண்டும், நரிமணம் பெட்ரோல், இயற்கை எரிவாயு, நிலக்கரி போன்ற தமிழகத்து கனிம வளங்களை இந்திய அரசு கொண்டு செல்லக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், 05.08.2010 அன்று சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழக உழவர் முன்னணியின் கடலூர் மாவட்டச் செயலாளர் திரு. சி.ஆறுமுகம் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்குகிறார். தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகர் திரு. கி.வெங்கட்ராமன் சிறப்புரை நிகழ்த்துகிறார்.

இவ்வார்ப்பட்டத்தில் திரளான உழவர்களும், தமிழின உணர்வாளர்களும் கலந்து கொண்டு இனஉரிமைக்கு குரல் கொடுக்க வேண்டும்.

Saturday, November 14, 2009

முல்லைப் பெரியாறு தீர்ப்பு: தமிழக அரசின் துரோகத்திற்கு தமிழக உழவர் முன்னணி கடும் கண்டனம்

முல்லைப் பெரியாற்றுத் தீர்ப்பு

கேரள அரசின் அடாவடிக்கு துணைபோன தமிழக அரசு
தமிழக உழவர் முன்னணி கண்டனம்


முல்லைப் பெரியாறு வழக்கில், கேரள அரசுக்கு துணை போய் தமிழக அரசு செய்த துரோகத்திற்கு கடும் கண்டனத்தை தமிழக உழவர் முன்னணி தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகர் தோழர் கி.வெங்கட்ராமன் 12.11.09 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை:





முல்லைப் பெரியாறு வழக்கில் நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையிலான உச்சநீதிமன்ற ஆயம் (டிவிசன் பென்ச) 10.11.09 அன்று அளித்துள்ள தீர்ப்பு தமிழக உரிமையை பறிப்பதாக உள்ளது. இத்தீர்ப்புக்கு தமிழக அரசின் முன் ஒப்புதல் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட பிறகே இத்தீர்ப்பு உரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முல்லைப்பெரியாறு உரிமையை தமிழக அரசே கை கழுவிவிட்டது.

2006இல் உச்சநீதிமன்ற ஆயம் அளித்த தீர்ப்பு உடனடியாக 142 அடி தண்ணீர் முல்லைப் பெரியாறு அணையில் தமிழக அரசு தேக்கிக் கொள்ளலாம் என்று அறிவித்தது. இத்தீர்ப்பை முறியடிக்கும் தீய உள்நோக்கத்தோடு கேரள அரசு அம்மாநில அணைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முல்லைப் பெரியாற அணையையும் கொணர்ந்தது. இதன் மூலம் தமிழகப் பொதுப் பணித்துறையின் கட்டு்ப்பாட்டில் இருக்கும் முல்லைப் பெரியாறு அணையை சட்டவிரோதமாக கேரள அரசு பறிக்க முயன்றது. முல்லைப் பெரியாறு அணை சட்டப்படி கேரள அரசின் அதிகார எல்லையில் இல்லை.

ஆனால், இப்போதைய தீர்ப்பின் மூலம் நிலவும் நிலைமை செயலில் இருக்கட்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் கேரள அரசின் அடாவடியான சட்டம் செயலில் இருக்கும் என்பதும், 136 அடி மட்டுமே தண்ணீர் தேக்கப்பட வேண்டும் என்பதும் ஆகும்.

முப்பது ஆண்டுகால முயற்சியில் கிடைத்த நியாயத்தை இத்தீர்ப்பு பறிக்கிறது. இதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்காவிட்டால் இத்தீர்ப்பு வழங்கப்படுவதற்கு வாய்ப்பே இல்லை. இத்தீர்ப்பு வரைவிற்கு தமிழக அரசு முன் ஒப்புதல் தந்ததின் மூலம் தமிழகத்தின் உரிமையை கைகழுவி முப்பது ஆண்டு முயற்சியால் தமிழகத்திற்கு கிடைத்த நியாயத்தை குழு தோண்டி புதைத்து விட்டது.

ஏனெனில் இப்போதைய தீர்ப்பில் மேல் ஆய்வுக்காக அனுப்பப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ள அரசமைப்பச் சட்டசிக்கல் அனைத்துமே 2006 ஆம் ஆண்டு நீதிபதி ஒய்.கே.சபர்வால் தலைமையிலான மூன்று நீதிபதிகள் ஆயம் தீர விவாதித்து முடியு கூறிய செய்திகள் தாம். அரசமைப்புச் சட்ட விதிகள் 3 மற்றும் 4, 131, 363 போன்ற அனைத்து பிரிவுகளின் கீழும் கேரள தீர்ப்பு எழுப்பிய ஆட்சேபணைகளையெல்லாம் அத்தீர்ப்பு நிராகரித்தது. மேலும் 1956 ஆம் ஆண்டு சட்டப்படி முல்லைப் பெரியாறு பிரச்சினை இரு மாநிலங்களுக்கிடையேயான தண்ணீர் பகிர்வு தகராறு இல்லை. மாறாக அணையின் பாதுகாப்பு பற்றிய பிரச்சினையே இவ்வழக்கின் மையச் சிக்கல் என்று தெளிவுபடுத்தியது.

கேரள அரசு முன்பு எழுப்பிய ஆட்சேபணைகளைத்தான் இப்போதும் எழுப்பியுள்ளது. அன்று தமிழக அரசின் சார்பில் எல்லாவற்றிற்கும் மறுப்புரை அளிக்கப்பட்டு அது நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு இன்று அதே சட்டப் பிரச்சினைகளின் மீது மறு ஆய்வுக்கு ஒப்புதல் கொடுத்ததன் மூலம் தன்னுடைய முந்தைய நிலைப்பாட்டை கைகழுவி விட்டது. இவ்வாறு தமிழக அரசு ஒப்புதல் அளிக்காமல் போனால் ஐந்து நீதிபதிகள் கொண்ட புதிய ஆயத்திற்கு அனுப்புவது என்ற தீர்ப்பே வர வாய்ப்பில்லை. ஏனெனில் இப்போது தீர்ப்புரைத்துள்ள உச்சநீதிமன்ற ஆயமும் மூன்று நீதிபதிகள் கொண்டது தான். சம அதிகாரம் கொண்டது தான். இவ்வாறு சம அதிகாரம் கொண்ட ஒரு ஆயம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்தும் முடிவை இந்த ஆயம் எடுப்பதற்கு தமிழக அரசின் ஒப்புதலே கதவை திறந்து விட்டுளளது.

முல்லைப் பெரியாற்றுப் பாசன உழவர்களின் முப்பதாண்டு கால முயற்சியில் கிடைத்த வெற்றியை கைகழுவிவிட்ட தமிழக அரசுக்கு தமிழக உழவா முன்னணி சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இனி தமிழக அரசையோ இந்திய அரசையோ நம்பி காத்திராமல் உழவர்களும் தமிழக மக்களும் இன உணர்வு பெற்று ஒன்றுபட்டு போராடுவது மட்டுமே முல்லைப் பெரியாறு உரிமையை நிலைநாட்ட உள்ள ஒரே வழியாகும். இதற்கு அணியமாகுமாறு அனைவரையும் தமிழக உழவர் முன்னணி அழைக்கிறது.



இடம் : சிதம்பரம்
நாள் : 12.11.09

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT