உடனடிச்செய்திகள்

Thursday, June 30, 2016

சுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்களின் மனநிலை பற்றியும் விவாதிக்க வேண்டும்! தோழர் பெ. மணியரசன் அறிக்கை!


சுவாதி கொலையைத் தடுக்க முன் வராத
மக்களின் மனநிலை பற்றியும் விவாதிக்க வேண்டும்!


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

 
சென்னை நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தில் 25.06.2016 அன்று காலை மென்பொறியாளர் சுவாதி என்ற இளம்பெண் நடைமேடையில் வைத்து, ஒரு கயவனால் படுகொலை செய்யப்பட்ட போது, அங்கு இருந்த மக்கள் தலையிட்டு அப்பெண்ணை பாதுகாக்க முன்வரவில்லை என்றும் கொலைகாரனை விரட்டிப் பிடிக்க முயலவில்லை என்றும் விமர்சனங்கள் பரவலாகப் பேசப் படுகின்றன.


இதற்கு முன், திருப்பூர் மாவட்டம் – உடுமலைப்பேட்டை கடை வீதியில் சங்கர் – கவுசல்யா கலப்புமண இளம் தம்பதியினர் கொடியவர்களால் தாக்கப்பட்டு, சங்கர் அதே இடத்தில் இறந்தார். கவுசல்யா படுகாயமுற்று துடித்துக் கொண்டிருந்தார். 
அப்போதும்கூட, மக்கள் நிறைந்த அக்கடை வீதியில் கொலைகாரர்கள் தாக்கும் போது, குறுக்கே புகுந்து தடுக்க மக்கள் முன் வரவில்லை என்ற செய்தி வெளியானது.

மேற்கண்ட இரு கொலை நிகழ்வுகளும் இருபத்தைந்தாண்டுகளுக்கு முன் அதே தொடர்வண்டி நடை மேடையிலும், கடை வீதியிலும் நடந்திருந்தால் பொது மக்கள் தலையிடாமல் ஒதுங்கியிருப்பார்களா என்று எண்ணிப் பார்க்கத் தோன்றுகிறது. உறுதியாக, கொலையைத் தடுக்க முடியாவிட்டாலும் கொலைகாரர்களை விரட்டிப் பிடிக்கவாவது முயன்றிருப்பார்கள்.

இப்போது ஏன் மக்கள் தலையீடு இல்லாமல் மக்கள் நிறைந்த இடங்களில் கொலைகள் செய்ய முடிகின்றது?

எல்லை கடந்த பன்னாட்டு நிறுவன வேட்டைப் பொருளியல் (உலகமயப் பொருளியல்) செயலுக்கு வந்தபின், மக்கள் உதிரி நுகர்வோராகவும், ஒருவருக்கொருவர் போட்டியாளராகவும் மாற்றப்பட்டு விட்டார்கள். இந்த நுகர்வு வாதம் மக்கள் மனத்தில் மேலோங்கிய பின், ஒவ்வொருவரும் சமூகக் கூட்டுப் பண்பை – பொறுப்புணர்வை மெல்ல மெல்ல இழந்து, மனத்தளவில் தனித்தனித் தீவுகளாகிவிட்டனர்.

இன்றைய சமூகப் பொதுமனத்தில் வளர்க்கப்படும் தன்னல நுகர்வுவாதம், ஒரு தனி நபரின் துணிச்சல் பண்பையும் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து, கோழைகளாக்கி விடுகிறது.

தமிழ்நாட்டிலுள்ள ஆட்சியின் திறமைக்குறைவு, பொது அமைதியில் அதற்குள்ள அக்கறை குறைவு, காவல்துறையில் நிலவும் ஊழல் மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களை அண்டிப் பிழைக்கும் உளவியல், நீதித்துறையில் நிலவும் ஊழல்கள், சமூகப் பொறுப்பின்மை போன்றவற்றை இவ்வாறான நிகழ்வுகளுக்கு அடிப்படைக் காரணங்களாகச் சொல்வது, சரிதான்!

அதே வேளை, தனி மனிதர்களின் கூட்டுப் பண்பு, அநீதியைத் தடுக்க வேண்டுமென்ற நேர்மையுணர்ச்சி, துணிச்சல் ஆகியவை மேற்கத்தியத் திணிப்பான உலகமயப் பொருளியல் பண்பாட்டால் சிதைந்து விட்டன என்பதையும் தவறாமல் கணக்கில் கொள்ள வேண்டும். இதைச் சரி செய்வதற்கு அரசியல் அமைப்புகள், சமூக அமைப்புகள், கல்வித்துறை, ஊடகத்துறை போன்றவை மக்களிடையே சமூகக் கூட்டுணர்ச்சி, பிறர் மீது அக்கறை, நேர்மையின் பால் எழும் துணிச்சல் போன்ற பண்புகளை வளர்க்க முயல வேண்டும்.

தனக்கென மட்டும் வாழாது பிறர்க்கெனவும் வாழ வேண்டும் என்ற சங்க காலத் தமிழரின் அறப் பண்புகளை தமிழ் மக்களிடம் விதைப்பதும், தமிழ்ச் சமூகத்திற்கேற்ற பொருளியல் கொள்கையை வடிவமைப்பதும் மிகமிகத் தேவை!

Tuesday, June 28, 2016

“ஏழு தமிழர்கள் சிறையிலிருக்கும் ஒவ்வொரு நாளும் தமிழினத்திற்கு அவமானம்!” கோவை நூல் அறிமுக விழாவில் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு!



“ஏழு தமிழர்கள் சிறையிலிருக்கும்
ஒவ்வொரு நாளும் தமிழினத்திற்கு அவமானம்!”

கோவை நூல் அறிமுக விழாவில் 
தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு!


தமிழீழத்திற்கு இந்திய அமைதிப்படையை அனுப்பி, ஆயிரக்கணக்கானத் தமிழ் மக்கள் கொல்லப் படுவதற்குக் காரணமான முன்னாள் இந்தியப் பிரதமர் இராசீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் தொடர்பு படுத்தப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட ஏழு தமிழர்கள் கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் வாடுகின்றனர். இந்த ஏழு தமிழர்களின் விடுதலை குறித்து சட்ட விளக்கங்களோடு பேசுகின்ற, “ஏழு தமிழர் விடுதலை - உச்ச நீதிமன்ற மறுப்பு - தமிழ்நாடு அரசு அதிகாரம்” - நூலின் அறிமுக விழா கோவையில், 26.06.2016 ஞாயிறு மாலை தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் நடைபெற்றது.



கோவை தொடர்வண்டி நிலையம் அருகிலுள்ள அண்ணாமலை அரங்கில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, பாண்டியர் பேரியக்கத் தலைவர் தோழர் கோப்மா. கருப்பசாமி தலைமையேற்றார். தமிழ்த் தேசியப் பேரியக்க கோவை மாநகரச் செயலாளர் தோழர் விளவை இராசேந்திரன் வரவேற்புரையாற்றினார்.

மக்கள் சிவில் உரிமைக் கழகத் தோழர் பொன். சந்திரன், எழுத்தாளர் மு. சந்திரகுமார், தமிழர் நடுவம் தலைவர் திரு. செல்வ பாண்டியர் ஆகியோர் நூலைத் திறனாய்வு செய்து உரையாற்றினர். தமிழ்த் தேசக் குடியரசு இயக்கப் பொறுப்பாளர் தோழர் திலகர். செங்குட்டுவன் நூலை வெளியிட்டார்.

தமிழர் தொழில் முனைவோர் இணையம் தலைவர் திரு. க. தங்கராசு, கோவை _ திருப்பூர் தொழில் முனைவோர் சங்கச் செயலளர் திரு. வே. துரைசாமி, தமிழர் தாயகம் கட்சி திரு. செட்டி. அசோக் பண்ணாடி, இளந்தமிழர் இலக்கிய மன்றச் செயலாளர் செல்வி க. சங்கவி, கிருஷ்ணம்மாள் - ஜெகநாதன் அறக்கட்டளை திருவாட்டி சரோஜா உள்ளிட்டோர் நூலைப் பெற்றுக் கொண்டனர்

நிறைவில், நூல் ஆசிரியரும் தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளருமான தோழர் கி. வெங்கட்ராமன் ஏற்புரை வழங்கினார். அவர் பேசியதாவது :

“ஏழு தமிழர் விடுதலை - உச்ச நீதிமன்ற மறுப்பு _ தமிழ்நாடு அரசு அதிகாரம்” - நூலின் அறிமுக விழாவை, கோவையில் சிறப்புற ஏற்பாடு செய்துள்ள தோழர்களுக்கு வாழ்த்துகள். இதில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் நம் பாராட்டுகள்!

இராசீவ் காந்தி கொலை வழக்கில் - இதன் தீர்ப்பில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை - குளறுபடிகளை, இந்நூலைத் திறனாய்வு செய்து பேசிய தோழர்கள் இங்கே நுணுக்கமாக எடுத்துரைத்தனர். ஏழு தமிழர் விடுதலைக்காக தமிழ்நாட்டில் தற்போது எழுச்சி ஏற்பட்டுள்ள நிலையில், இந்தச் சிக்கலில் நாம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என சிந்திக்க வேண்டும்.

பொதுவாக மனித உரிமை என்று பேசினாலும் உண்மையில், மனிதர்கள் உதிரிகளாக வாழ்வ தில்லை. தேசிய இனமாகத்தான் வாழ்கிறார்கள். அகராதியில் மக்கள் - A People என நாம் தேடினால், ஒரு தேசிய இன மக்களைத்தான் அது பொருளாகச் சொல்கிறது. உலகம் அப்படித்தான் இருக்கிறது. மனிதர்கள் அப்படித்தான் வாழ்கிறார்கள்.

இராசீவ் கொலை வழக்கில் இருக்கும் அந்த ஏழு பேரும் வெறும் உதிரிகளாக இல்லை. அவர்களை உதிரிகளாக மாற்ற முயன்றாலும் அது வெல்லப் போவதில்லை. அந்த ஏழு பேரும், மண் சார்ந்து - மொழி சார்ந்த மக்களுடனே அடையாளப்பட்டிருக்கிறார்கள். அதனால்தான், அவர்களுக்கு அநீதி இழைக்கப்படும் போது, தமிழினம் கொந்தளிக்கிறது.

இப்பொழுது மட்டுமல்ல, இதற்கு முன்பே - இதே வழக்கில் 26 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்ட போதே, தமிழ்நாடு கொந்தளித்தது. தமிழர்கள் கொந்தளித்தனர்.

இராசீவ் காந்தி கொலைக்கு முன்புவரை, தமிழீழ விடுதலையை ஆதரித்து எல்லாத் தரப்பினரும் - எல்லாக் கட்சிகளும் பேசிவந்த நிலையில், கொலைக்குப் பிறகு ஒரு மயான அமைதி நிலவியது. கூட்டம் போட்டு பேசுவதற்குக்கூட, சட்டப்படியான உரிமைகள் மறுக்கப்பட்ட காலம் அது! தமிழர் என்று பேசவே அச்சமிருந்த காலம் அது!

அந்த நேரத்தில், பெருந்துறை அருகில், ஈழத்தமிழர் குறித்த ஒரு கருத்தரங்கத்தில் நான் பேசினேன். பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசியதாக என் மீது வழக்குப் பதிவு செய்தார்கள். அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்த மாணவர்கள் - இளைஞர்கள், தங்கள் ஆசிரியர் ஒருவரை அந்தக் கூட்டத்தில், “நீராரும் கடலுடுத்த” என தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடச் சொன்னார்கள். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய அவர் மீதும் சேர்த்தே இந்தியத் தண்டனைச் சட்டம் - 124A- பிரிவின்கீழ் “தேசத் துரோக” வழக்குப் போட்டார்கள். அந்தளவிற்கு கடுமையான ஒடுக்குமுறைகள் நிலவிய காலமது!

அப்படியிருந்த காலகட்டத்தில்தான், ஒரு பெரும் திருப்பமாக, 26 பேருக்கு மரண தண்டனை என்ற அநீதியானத் தீர்ப்பிற்குப் பிறகு, எங்கே நமது மவுனம் - இந்தியாவுக்கு கொலைகார அதிகாரத்தை வழங்கி விட்டதோ என்ற ஐயத்தில், தமிழினம் கொந்தளித்து எழுந்தது.

அய்யா பழ. நெடுமாறன் அவர்களைத் தலைவராகக் கொண்டும், தோழர் பெ. மணியரசன் அவர்களைச் செயலாளராகக் கொண்டும் “இருபத்தாறு தமிழர்கள் உயிர்க்காப்புக் குழு” என்ற கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு, அநீதியானத் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள்  கண்டனக் கூட்டங்கள் ஊர் ஊராக நடைபெற்றன.

பேராசிரியர் சுப. வீரபாண்டியன், பாவலர் அறிவுமதி, நான், தோழர் தியாகு உள்ளிட்டோர் இந்தத் தீர்ப்பின்வழியே நம் இனத்திற்கு அநீதி நேர்ந்துள்ளது என ஒவ்வொரு கூட்டங்களிலும் எடுத்துரைத்தோம். தலைவர்களும் விளக்கமாக எடுத்துக் கூறினார்கள். அதைக் கேட்ட தமிழ் மக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள் .

கூட்டத்தில் பாவலர் அறிவுமதியும் பேராசிரியர் சுப.வீ.யும் இருபத்தாறு தமிழர்களின் உயிர்காப்புப் போராட்டத்திற்கு நிதி தாருங்கள் என துண்டேந்தி வந்தார்கள். அவர்களிடம் அப்படியே தன் கையிலிருந்த வளையலைக் கழட்டிக் கொடுத்த பெண்கள் உண்டு தன் கையில் இருந்த 5 ரூபாயை - 10 ரூபாயை அப்படியே கொடுத்த மக்கள் இருந்தார்கள். அது மிகப்பெரும் எழுச்சியை உருவாக்கியது.

முதலில், “தடா” சட்டப்படி விசாரிக்கப்பட்ட இராசீவ் காந்தி கொலை வழக்கில், நீதி வழங்குவதில் மாநில அரசுக்கு அதிகாரமில்லை எனச் சொல்லப் பட்டது. அநீதியான அத்தீர்ப்புக்கு எதிராக மாநில உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அதிகாரமில்லை என்றார்கள். எனவே, அவ்வழக்கு அப்போது உச்ச நீதிமன்றத்திற்கு நேரடியாக மேல்முறையீடாகச் சென்றது. தீர்ப்பைப் படித்த நீதிபதிகள், “நீதியின் பெயரால் நீதிக்கொலை” நடந்துவிட்டது என கருத்துக் கூறினர்.
2013ஆம் ஆண்டு அக்டோபரில், வீரப்பன் கூட்டாளிகள் என்ற பெயரில், தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு, கர்நாடகாவின் பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சைமன், பிலவேந்திரன், ஞானப்பிரகாசம், மாதையன் ஆகிய நால்வரையும் தோழர் பெ. மணியரசன், அற்புதம் அம்மாள் உள்ளிட்டோர் கொண்ட ஒரு குழுவாக நாங்கள் நேரில் சென்று சந்தித்து வந்தோம்.
அதில், ஞானப்பிரகாசம் என்பவர் வீரப்பனுடன் துளியும் தொடர்பில்லாதவர். ஞானப்பிரகாசம் என்ற பெயரில் ஒருவரைத் தேடி வந்தார்கள்.

ஈரோட்டில் ஒரு பண்ணையில் வேளாண்மை செய்து வந்த அவரை, “ஞானப்பிரகாசம்” என்ற பெயரை வைத்து, காவல்துறையினர் பிடித்து கதையைப் புனைந்தார்கள்.

அதுபோலத்தான், வேலூர் சிறையிலே அடைபட்டுக் கிடக்கும் சாந்தனுக்கும் நேர்ந்திருக்கிறது. உண்மையான குண்டு சாந்தனைக் காவல்துறையினரே கொன்று விட்டார்கள் என்ற உண்மை வெளி வந்திருக்கிறது. எனவே, கையில் கிடைத்த சாந்தன் மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்து, தண்டனை வாங்கிக் கொடுத்து விட்டார்கள். இருபத்தைந்து ஆண்டுகள் கழித்தும், அவரை விடுதலை செய்ய மறுக்கிறார்கள்.

இராசீவ் காந்தி கொலை என்பது, சட்டத்தின்படியே ஒரு பயங்கரவாதச் செயல் அல்ல என உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. இந்திய அமைதிப்படையை தமிழீழத்திற்கு அனுப்பி, அங்கே தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதும், அதன் காரணமாக இராசீவ் காந்தியை பழிவாங்கவே இச்செயல் செய்யப்பட்டது என்பதும் தீர்ப்பிலேயே சொல்லப்படுகின்றது. அதாவது, தம் மக்கள் கொல்லப்பட்ட ஆத்திரத்தில் பதிலடியாக நடைபெற்றக் கொலைதான் இது!

எனவே, இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் விசாரித்த நீதிபதிகள், அது பயங்கரவாதச் செயல் அல்ல எனக் கூறிவிட்டப் பிறகு, அவ்வழக்கை மாவட்ட நீதிமன்றத்திற்கு அனுப்பியிருக்க வேண்டும். குறைந்த பட்சம், மாநில உயர் நீதிமன்றத்திற்காவது அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. அங்கே அநீதி இழைக்கப்பட்டது. ஏன் இந்த அநீதி?

ஏனெனில், இவ்வழக்கை தனிப்பட்ட பழிக்குப் பழி கொலை வழக்கு என உச்ச நீதிமன்றம் கருதவில்லை. இதுவொரு இனம் சார்ந்த பிரச்சினை! சாதாரணக் கொலைக் குற்றம் என்றால் இப்படி செய்ய மாட்டார்கள். ஆனால், குற்றவாளிகள் தமிழர்கள்!

தன் கணவன் கொல்லப்பட்ட அநீதியான தீர்ப்புக்கு எதிராகப் பேச வந்த கண்ணகி, பாண்டிய மன்னனை “தேரா மன்னா” என்று எடுத்தவுடனேயே அழைத்தாள். இந்தக் காலத்தில் இப்படி பேசியிருந்தால், நீதிமன்ற அவமதிப்பு - Contempt of Court என்றிருப்பார்கள். ஆனால், கண்ணகி காலத்தில் அநீதிக்கு எதிராக இருந்த பேச்சுரிமை, “சனநாயக” காலத்தில் இல்லாமல் போய்விட்டது!

தேர்தல் நேரத்தில் ஏழு தமிழர் விடுதலையை தமிழ்நாடு அரசு அறிவித்தபோதுகூட, எந்தக் கட்சியும் இதனை எதிர்க்கவில்லை. தமிழ்நாட்டு பா.ச.க. தலைவர் தமிழிசை சவுந்திரராசன் கூட எதிர்க்கவில்லை. காங்கிரசுத் தலைவர் ஈ.வி.கே.எசு. இளங்கோவன் சட்டப்படி விடுதலை செய்தால் தாம் எதிர்க்கப் போவதில்லை என்றார்.

வடநாட்டுத் தலைவர்கள் அணைவரும் ஏழுத் தமிழர் விடுதலை என்ற அறிவிப்பை எதிர்த்தார்கள். கடைசி சனநாயகவாதி கெஜ்ரிவால் கூட எதிர்த்தார். கும்மிடிப்பூண்டி தாண்டினால் நம் உணர்வை மதித்து -ஏழு பேர் விடுதலையையும் ஆதரிக்கும் சில தனிப்பட்ட மனித உரிமையாளர் களைத்தாண்டி, மக்கள் எத்தனை பேர் இருக்கின்றனர்? ஏன் இல்லை? என்ன காரணம்?

இதுவொரு மனித உரிமைப் பிரச்சினைதான். ஆனாலும், அடிப்படையில் இதுவொரு தேசிய இனம் சார்ந்த சிக்கல்!

காஞ்சி மக்கள் மன்றப் போராளி - தழல் ஈகி செங்கொடியின், வீரச்சாவுக்கு முதல்நாள்வரை, சட்டப்படி எங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளன என்று தமிழ்நாடு முதலமைச்சர் செயலலிதா, நடுவண் அரசின் சுற்றறிக்கை ஒன்றைக் காரணமாகக் காட்டினார். நீதிபதி கலிபுல்லா தலைமையிலான, அரசமைப்பு அமர்வு மாநில அரசுக்கு இருந்த அதிகாரத்தை மறுத்தது. ஆயினும் 161 இன் படியான மன்னிப்பு அதிகாரம் கட்டற்றது என உறுதி படுத்தியது. மற்ற வகையில் அது மோசமான தீர்ப்பு.

இந்தத் தீர்ப்பை நாம் அனைவரும் படிக்க வேண்டும். எந்த சட்டநெறியும் இல்லாமல், நமக்கு எப்படி அநீதி இழைக்கப்பட்டுள்ளது எனத் தெரிந்து கொள்வதற்காகவது இதனைப் படிக்க வேண்டும். இந்த நாட்டின் சட்டப்படியே நமக்கு எப்படி அநீதி இழைக்கப்பட்டுள்ளது, எனத் தெரிந்து கொள்ள படிக்க வேண்டும்.

மற்றவர்களுக்கு செல்லுபடியாகும் சட்டம், தமிழர்களுக்கு மட்டும் ஏன் செல்லுபடியாகாது? ஏனெனில், இந்தியாவில் நாம் புறக்கணிக்கப்பட்ட இனம், வஞ்சிக்கப்படும் இனம்.

1956இல் இயற்றப்பட்ட, மாநிலங்களுக்கு இடை யிலான தண்ணீர்த் தகராறுச் சட்டம், எல்லா மாநிலங்களுக்கும் பொதுவானது. அந்தச் சட்டப்படியே, காவிரிச் சிக்கில் ஒரு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு, இன்று தீர்ப்பும் வழங்கப்பட்டுவிட்டது. அந்தத் தீர்ப்பை நிறைவேற்ற வேண்டிய சட்டக்கடமை இந்திய அரசுக்குத்தான் இருக்கிறது.

இதே இந்திய அரசு, கிருஷ்ணா நதிநீர்ச் சிக்கலில் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை செயல்படுத்துகின்றது. நான்கு மாநிலங்களுக்கு இடையிலான நர்மதா நதிநீர்ச் சிக்கலில், தீர்ப்பாயத்தின் தீர்ப்பைச் செயல்படுத்து கின்றது. ஆனால், காவிரிச் சிக்கலில் மட்டும் தீர்ப்பைச் செயல்படுத்த மறுப்பதன் நோக்கம் என்ன?

நாம், தமிழர்கள் என்பதால்தான் இந்தப் புறக்கணிப்பு நமக்கு நடக்கிறது. நாம் தமிழ்த் தேசிய இனம் என்பதற்காக பழி வாங்கப்படுகிறோம்.

தமிழ்நாட்டு முதல்வர், எதிர்க்கட்சிகள், மக்கள் என எல்லோரும் சட்டப்படி கோருகின்ற ஏழு தமிழர் விடுதலையை இந்திய அரசு தடுக்கிறது.

இதுவொரு இன மறுப்பு - இன அழிப்பு! இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், இதுவொரு கட்டமைப்பு இனப்படுகொலை - இன அழிப்பு (Structural Genocide). தமிழ் இனம் என்பதால்தான் நாம் திட்டமிட்டு அனைத்து முனைகளிலும் வஞ்சிக்கப்படுகிறோம்.

2008-2009ஆம் ஆண்டு, தமிழீழத்தில் இனப் படுகொலை நடைபெற்ற போது, “போரை நிறுத்து” என்ற ஒற்றை முழக்கத்தின்கீழ்தான், ஒட்டு மொத்தத் தமிழ்நாடும் போராடியது. தமிழீழத்தை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் அந்த முழக்கம் எழுந்தது.

நாம் மிகவும் மதிக்கும் மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் மேதா பட்கர், அருந்ததி ராய் போன்றவர்கள், அதற்கு என்ன எதிர்வினை ஆற்றினார்கள்?

அருந்ததிராய் டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஒரு கட்டுரை எழுதியதோடு நிறுத்திக் கொண்டார். பின்னர், சென்னையில் நடைப்பெற்ற ஒரிசாவில் இந்திய அரசின் “பச்சை வேட்டை நடவடிக்கை”க்கு எதிரான கூட்டத்தில் பங்கேற்க வந்தபோது, ஈழ விடுதலை தொடர்பாகவும் பேசினார். அவ்வளவுதான்!

தில்லியின் ஜந்தர் மந்தரில், நம் தமிழ்நாட்டு வழக்கறிஞர்கள் போர் நிறுத்தம் கோரி ஒரு உண்ணாப் போராட்டம் நடத்திய போது, அந்த இடத்திற்குப் பக்கத்தில் வேறொரு போராட்டத்தில் பங்கேற்க வந்த மேதா பட்கரை அழைத்துவரச் சென்றார்கள். அவர்களிடத்தில், “நான் பயங்கரவாதத்தை ஆதரிக்க மாட்டேன் (I will not support Terrorist)” என்றும் இச்சிக்கலில் நாங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்றும் சொன்னவர் மேதா பட்கர்!

இதுதான் இந்திய உளவியல்! இந்தியன் என்ற உளவியலுக்குள், தமிழர்களுக்கு என்றைக்குமே இடம் கிடையாது!
எனவே, நாம் தமிழ்த் தேசிய இனமாகத் திரள வேண்டும். அதுவே காலத்தின் கட்டாயம்!
2004ஆம் ஆண்டு, அக்டோபரில் பா.ச.க. ஆட்சிக் காலத்தில், வாஜ்பாயி தலைமை அமைச்சராக இருந்த போது, எவ்வளவு பெரிய குற்றச் செயலாக இருந்தாலும், ஒருவரை 25 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வைக்க மாட்டோம் என இந்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது.

அதனடிப்படையில் கேட்கிறோம், இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. ஏழு தமிழர்களையும் விடுதலை செய்யுங்கள். குற்றவியல் நடைமுறைச் சட்ட உறுப்பு 435 இன்கீழ், நடுவண் அரசு ஒப்புதல் அளித்தே இவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. எனவே, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் உணர்வை மதிப்பதாக இருந்தால், இந்திய அரசே இவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

இல்லையெனில், அதே தீர்ப்பில் சுட்டிக்காட்டி யுள்ளதைப் போல், நீதிமன்றங்களின் குறுக்கீடுகளுக்கு அப்பால் தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் அளிக்கும் இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன்கீழ், தமிழ்நாடு அரசே ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும். இதற்கு எந்தவொரு சட்டத் தடையும் இல்லை, அரசியல் தடையும் இல்லை!

“விசாரணை முடிந்து காலையில் வந்துவிடுவான்” என காவல்துறையினர் வாக்குறுதி அளித்து, பேரறிவாளனை அழைத்துச் சென்று, கடந்த சூன் 11ஆம் நாளோடு, இருபத்தைந்து ஆண்டுகள் கடந்து விட்டன. அந்நாளை நினைவு கூறும் வகையில், சென்னையில் 11.06.2016 அன்று ஏழு தமிழர் விடுதலைக்காக மிகப்பெரும் பேரணியை நடத்தினோம். அற்புதம் அம்மாள் முறைப்படி, தமிழ்நாடு அரசுக்கு மனு செய்திருக்கிறார். 161 இன் படி விடுதலை அளிக்கக் கோரியுள்ளார் இம்மனுக்களை சட்டப்படி பரிசீலித்து, உடனடியாக ஏழு பேரையும் தமிழ்நாடு அரசு விடுதலை செய்ய வேண்டும்!

இவர்கள் ஏழு பேரும் சிறையில் இருக்கும், ஒவ்வொரு நாளும் தமிழினத்திற்கு அவமானம் என்று உணர வேண்டும். இவர்கள் சிறையில் இருப்பது, நம் மீது பட்ட கறை என்று உணர வேண்டும்.

எல்லா உணர்வாளர்களும், அரசியல் இயக்கத் தினரும் இந்தக் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.
இது நம் உரிமைப் பிரச்சினை - தமிழினத்தின் பிரச்சினை என்றுணர்ந்து, நாம் செயலாற்ற வேண்டும்! நன்றி!”

இவ்வாறு தோழர் கி. வெங்கட்ராமன் பேசினார்.
நிறைவில், தோழர் ஸ்டீபன் (த.தே.பே.) நன்றி நவின்றார். நிகழ்வில், தமிழின உணர்வாளர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தோழர்கள் திருவள்ளுவன், இராசேசுக் குமார், வீரக்குமார் ஆகியோர் கூட்ட ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தனர்.

Friday, June 24, 2016

“ஏழுதமிழர் விடுதலை - உச்சநீதிமன்ற மறுப்பு தமிழ்நாடு அரசு அதிகாரம்” - நூல் அறிமுக விழா !



ழுதமிழர் விடுதலை - உச்சநீதிமன்ற மறுப்பு
தமிழ்நாடு அரசு அதிகாரம்” - நூல் அறிமுக விழா !


சூன் 26 - ஞாயிறன்று கோவையில் நடக்கிறது..!



தமிழீழத்திற்கு இந்திய அமைதிப்படையை அனுப்பி, ஆயிரக்கணக்கானத் தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமான முன்னாள் இந்தியப் பிரதமர் இராசீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புபடுத்தப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன்,நளினி உள்ளிட்ட ஏழு தமிழர்களின் விடுதலை குறித்தும், அதற்கு மறுப்புத் தெரிவித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்தும்,தமிழ்நாடு அரசின் அதிகாரங்கள் குறித்தும் சட்ட விளக்கங்களோடு பேசுகின்ற, “ஏழு தமிழர் விடுதலை - உச்ச நீதிமன்ற மறுப்பு - தமிழ்நாடு அரசு அதிகாரம்” - நூலின் அறிமுக விழா வருகின்ற வரும் ஞாயிறு (சூன் 26) அன்று கோவையில் நடைபெறுகின்றது.

சூன் 26 - ஞாயிறு மாலை 5 மணியளவில், கோவை தொடர்வண்டி நிலையம் அருகிலுள்ள அண்ணாமலை அரங்கில் நடைபெறும் இவ்விழாவிற்கு, பாண்டியர் பேரியக்கத் தலைவர் தோழர் கோப்மா. கருப்பசாமி தலைமையேற்கிறார். தமிழ்த் தேசியப் பேரியக்க கோவை மாநகரச் செயலாளர் தோழர் விளவை இராசேந்திரன் வரவேற்புரையாற்றுகிறார்.

மக்கள் சிவில் உரிமைக் கழகத் தோழர் பொன். சந்திரன், எழுத்தாளர் மு. சந்திரகுமார், தமிழர் நடுவம் தலைவர் திரு. செல்வ பாண்டியர் ஆகியோர் நூலைத் திறனாய்வு செய்து உரையாற்றுகின்றனர். தமிழ்த் தேசக் குடியரசு இயக்கப் பொறுப்பாளர் தோழர் திலகர். செங்குட்டுவன் நூலை வெளியிடுகிறார்.

வழக்கறிஞர்கள் கலையரசன், சந்திரன், தமிழர் தொழில் முனைவோர் இணையம் தலைவர் திரு. க. தங்கராசு, கோவை திருப்பூர் தொழில் முனைவோர் சங்கச் செயலளர் திரு. வே. தரைசாமி, தமிழர் தாயகம் கட்சி திரு. செட்டி. அசோக் பண்ணாடி, இளந்தமிழர் இலக்கிய மன்றச் செயலர் திரு. க. சங்கவி, கொங்கு இளைஞர் பேரவை திரு. பி.கி. வெள்ளிங்கிரி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

நிறைவில், நூல் ஆசிரியரும் தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளருமான தோழர் கி. வெங்கட்ராமன் ஏற்புரை நிகழ்த்துகிறார்.
தோழர் ஸ்டீபன் (த.தே.பே.) நன்றி நவில்கிறார்.

இந்நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், பொது மக்களும் கலந்து கொள்ள வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

Monday, June 13, 2016

ஏழு தமிழர் விடுதலை கோரி எழுச்சியூட்டிய சென்னைப் பேரணி!




ஏழு தமிழர் விடுதலை கோரி
எழுச்சியூட்டிய சென்னைப் பேரணி!


                                                             தமிழீழத்திற்கு இந்திய அமைதிப்படையை அனுப்பி, ஆயிரக்கணக்கானத் தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமான முன்னாள் இந்தியப் பிரதமர் இராசீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புபடுத்தப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், இரவிச்சந்திரன், செயக்குமார் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்யக் கோரி, 11.06.2016 அன்று, எழுவர் விடுதலைக் கூட்டியக்கம் சார்பில் சென்னையில் மாபெரும் பேரணி நடைபெற்றது.



பேரறிவாளன் கைது செய்யப்பட்டு 25 ஆண்டுகள் முடியும் சூன் 11 அன்று வேலூரிலிருந்து இரு சக்கர ஊர்திப் பயணமாக சென்னையை வந்தடைந்து, சென்னை தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில் எழுவர் விடுதலை கோரி மனு அளிக்கும் வகையில் இப்பேரணித் திட்டமிடப்பட்டது.

 இதற்கான ஊர்தி ஏற்பாடுகள், திருமண மண்டபங்களில் தங்குவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று வந்த நிலையில், சூன் 10 அன்று மாலை, வேலூரிலிருந்து ஊர்திப் பயணமாக வந்தால் சாலைப் போக்குவரத்து முடங்கும் எனக் காரணம்கூறி, ஊர்திப் பயணத்திற்கு தமிழ்நாடு காவல்துறை தடை விதித்தது. இதனையடுத்து, சென்னை எழும்பூர் இராசரத்தினம் விளையாட்டு அரங்கத்திலிருந்து பேரணியாகப் புறப்படும் வகையில், இந்நிகழ்வு மாற்றியமைக்கப்பட்டது.


சூன் 11, நண்பகல் 1 மணியளவில், இராசரத்தினம் விளையாட்டரங்கம் அருகிலிருந்து, பேரறிவாளன் தாயார் திருவாட்டி. அற்புதம் அம்மையார் தலைமையில் பேரணி புறப்பட்டது. “விடுதலை செய்! விடுதலை செய்! ஏழு தமிழர்களையும் விடுதலை செய்!”, “இந்திய அரசே! இந்திய அரசே! எழுவர் விடுதலையைத் தடுக்காதே!” என்பன உள்ளிட்ட முழக்கங்களை விண்ணதிர எதிரொலித்துக் கொண்டே, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பெண்களும் குழந்தைகளும் ஆண்களும் சாரை சாரையாகப் பேரணியில் சென்றது புதிய எழுச்சியை ஊட்டியது.

பேரணியில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் திரு. த. வெள்ளையன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி. வேல்முருகன், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் துணைப் பொதுச் செயலாளர் தோழர் வன்னியரசு, பா.ம.க. இளைஞரணித் தலைவர் திரு. அன்புமணி இராமதாசு, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ. மணி, தந்தை பெரியார் தி.க. தலைவர் தோழர் கோவை கு. இராமகிருட்டிணன், புரட்சிகர இளைஞர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் தோழர் சீராளன், தமிழ்த் தேச மக்கள் கட்சித் தலைவர் வழக்கறிஞர் பா. புகழேந்தி, தமிழர் தேசிய முன்னணி செய்தித் தொடர்பாளர் திரு. த. அய்யநாதன், தமிழக மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் பொழிலன், பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் சுந்தர்ராசன், பேராசிரியர் சரசுவதி உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும், தமிழின உணர்வாளர்களும் பேரணியில் திரளாகப் பங்கேற்றனர்.

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் தலைமையில், துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் மதுரை இரெ. இராசு, தஞ்சை நா. வைகறை, பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் பழ.நல். ஆறுமுகம், ஈரோடு வெ. இளங்கோவன், சென்னை நடுவண் செயலாளர் தோழர் வி. கோவேந்தன், தென்சென்னை செயலாளர் தோழர் கவியரசன், வடசென்னை செயலாளர் தோழர் செந்தில், தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் குடந்தை ச. செந்தமிழன், மகளிர் ஆயம் தோழர்கள் சத்யா, சரண்யா, ஜூலி, தமிழக உழவர் முன்னணி செயற்குழு உறுப்பினர் தோழர் திருத்துறைப்பூண்டி தனபாலன் உள்ளிட்ட திரளான பேரியக்கத் தோழர்கள் பேரணியில் பங்கேற்றனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் திரு. நாசர், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் இயக்குநர் விக்ரமன், நடிகர்கள் சத்யராஜ், பொன்வண்ணன், இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன், ஜனநாதன், இராம், வ. கவுதமன், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட திரைத்துறையினர் பேரணியில் பங்கேற்றனர்.

பேரணியின் நிறைவில், அற்புதம் அம்மையார் தமிழ்நாடு அரசு முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு நேரில் சென்று, ஏழு தமிழர்களை விடுதலை செய்யக் கோரும் கோரிக்கை மனுவைக் கையளித்தார்.

தமிழ்நாடு அரசே! அரசமைப்பச் சட்ட விதி 161-இன்படி ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்! 

Wednesday, June 8, 2016

ஏழு தமிழர் விடுதலை இருசக்கரப் பேரணியில் திரளாகக் கலந்து கொள்வீர்! தோழர் பெ. மணியரசன் வேண்டுகோள்!


ஏழு தமிழர் விடுதலை இருசக்கரப் பேரணியில்
திரளாகக் கலந்து கொள்வீர்!

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் வேண்டுகோள்!
 
இருபத்தைந்தாண்டுகளுக்கு மேலாக தனிமைச் சிறையில் வாடும் ஏழு தமிழர் விடுதலை கோரி இருசக்கர ஊர்திப் பேரணி 11.06.2016 காலை 8 மணிக்கு, வேலூர் நடுவண் சிறை முன்பிருந்து புறப்பட்டு, வழிநெடுகக் கோரிக்கை ஞாயத்தை எடுத்துக்கூறி, பிற்பகல் சென்னைக் கோட்டையில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு செயலலிதா அம்மையார் அவர்களிடம் விண்ணப்பம் அளிக்க உள்ளதாக அறத்தமிழ் அன்னை அற்புதம் அம்மாள் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.


தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்கள் இவ்விரு சக்கரப் பேரணியில் வேலூரிலிருந்து கலந்து கொள்கிறார்கள். நான் பூவிருந்தவல்லியிலிருந்து இப்பேரணியில் பேரியக்கத் தோழர்களுடன் கலந்து கொள்கிறன்.

மனித உரிமையில் அக்கறையுள்ள அனைவரும் இப்பேரணியில் கலந்து கொள்வது கடமையாகும்.

தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி ஏழு தமிழர் விடுதலையைக் கோரியுள்ளது. வாச்பாயி அவர்கள் தலைமை அமைச்சராக இருந்த போது 2004இல் இந்திய அரசு, வாழ்நாள் சிறையாளிகள் பொதுவாக 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்க வேண்டியதில்லை என்றும், எப்படிப்பட்ட கொடுங்குற்றம் புரிந்தவராக இருந்தாலும் 25 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கத் தேவையில்லை என்றும் உச்ச நீதிமன்றத்தில் உறுதிமொழி ஆவணம் (அஃபிடவிட்) தாக்கல் செய்துள்ளது.

அண்மையில் தமிழ்நாடு அரசு குற்றவியல் நடைமுறைச் சட்டம் 435-இன் கீழ் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், செயக்குமார், அருப்புக்கோட்டை இரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய இந்திய அரசின் கருத்தைக் கேட்ட போது, எதிர்மறையாகச் செயல்பட்டது நரேந்திர மோடி அவர்களின் அரசு.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தீர்மானம், தமிழ்நாடு அரசின் கோரிக்கை, தமது கட்சி முந்தைய ஆட்சியில் நடுவண் அரசு அளித்த உறுதிமொழி ஆவணம் ஆகிய அனைத்திற்கும் மாறாக திரு. நரேந்திர மோடி அவர்களின் அரசு ஏழு தமிழர் விடுதலையில் எதிர்மறை அணுகுமுறை கொண்டிருப்பது சரியன்று. நடுவண் ஆட்சியாளர்கள் சட்டநெறி, மனித உரிமை, தமிழ் மக்களின் உணர்வு ஆகிய அனைத்தையும் கருத்தில் கொண்டு, தங்கள் அணுகுமுறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். ஏழு தமிழர் விடுதலைக்குத் தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு குற்றவியல் நடைமுறைச் சட்டம் 435-ஐ மட்டும் சார்ந்திராமல், அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன் கீழ் ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்யும் சட்ட நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்றும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

சட்டநெறி, மனித உரிமை, தமிழின உணர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு 11.06.2016 இருசக்கரப் பேரணியில் வேலூரிலிருந்து சென்னை வரை தமிழ்நாட்டு இருபால் இளையோர்கள் திரளாகக் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


Monday, June 6, 2016

வழக்குரைஞர்களுக்கு வாய்ப் பூட்டு நீதிமன்ற நடுநிலைமைக்கு வேட்டு தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!


வழக்குரைஞர்களுக்கு வாய்ப் பூட்டு
நீதிமன்ற நடுநிலைமைக்கு வேட்டு

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!


வழக்குரைஞர்களை பழிவாங்குவதற்கும், மிரட்டிப் பணியவைப்பதற்கும் நீதிபதிகளுக்கு வரம்பற்ற அதிகாரம் அளிக்கும் ஒழுங்கு விதிகளை சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்து, அவை கடந்த 2016 மே 25 அன்று தமிழ்நாடு அரசு இதழிலும் வெளியிடப்பட்டது.

தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக நீதிமன்றங்களில் நிலவிவரும் கசப்பான சூழல்களை கவனத்தில் கொண்டால் இந்த ஒழுங்கு விதிகள் சட்டத்தின் ஆட்சியையே சீர்குலைத்துவிடும் என்பது விளங்கும்.

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஊழல் பட்டியலை வெளியிட்டு பேரணி நடத்தியதாலும், உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக அறிவிக்க வலியுறுத்தி அமைதியாக போராடியதற்காகவும் மதுரை வழக்குரைஞர்கள் சிலர் தொழில் நடத்த தடை விதிக்கப்பட்டு, அந்த தடை இன்னும் தொடர்கிறது.

இந்த நிலையில் கடந்த மே 25 இல் வெளியிடப்பட்ட வழக்குரைஞர்கள் மீதான ஒழுங்குமுறை விதிகள்.

“நீதிபதியின் பெயரைப் பயன்படுத்தி கையூட்டு வாங்கினாலோ, நீதிமன்ற ஆவணங்களை சிதைத்தாலோ தவறான ஆவணங்கள் உருவாக்கினாலோ, நீதிபதியை மிரட்டினாலோ, அவதூறாகப் பேசினாலோ, கீழமை நீதிபதிகள் மீது மேல் நீதிமன்றத்தில் பொய்யான அல்லது ஆதாரம் இல்லாத அல்லது தேவையற்ற புகார் மனு அளித்தாலோ, மது குடித்து விட்டு நீதிமன்றத்தில் நேர் நின்றாலோ அவரை உயர்நீதிமன்றத்திலோ அல்லது கீழமை நீதிமன்றத்திலும் சேர்த்தோ வழக்காட வாழ்நாள் முழுவதுமோ அல்லது குறிப்பிட்ட காலத்திற்கோ உயர்நீதிமன்ற நீதிபதிகளோ அல்லது கீழமை நீதிபதிகளோ தடையாணை பிறப்பிக்கலாம்
என்று கூறுகின்றன.

உண்மையில் நீதிபதிகள் கையூட்டு பெறுவது அண்மைக்காலத்தில் அதிகரித்துள்ளதை அனைவரும் அறிவர். இவ்வாறு கையூட்டு பெற்று தருவதற்கென்றே தரகர்கள் நீதிமன்ற வளாகத்தில் நடமாடுவதும் சில வழக்குரைஞர்களே இவ்வாறு தரகர்களாக செயல்படுவதும் ஊர் அறிந்த உண்மையாகும். இந்த தரகு வழக்குரைஞர்கள் இப்போது பிறப்பிக்கப் பட்டுள்ள ஒழுங்கு விதிகளால் தண்டிக்கப் படபோவதில்லை. 


வேண்டாதவர்களை பழிவாங்குவதற்கே இவ்விதி பெரிதும் பயன்படும். நீதிபதிகள் பெயரால் கையூட்டு வாங்குவதைத் தடுப்பதற்கும் தண்டனை அளிப்பதற்கும் ஏற்கெனவே போதுமான சட்ட விதிகள் இருக்கின்றன.

நீதிபதியை மிரட்டினார் என்றோ, அவதூறாகப் பேசினார் என்றோ குற்றம் சாட்டுவதற்கு நீதிபதிகளுக்கு அளிக்கப்படும் அதிகாரம் மிக விரிவானதாகும் நீதிபதிகளின் எதிர்நிலையான அல்லது தவறான புரிதலுக்கு எதிரான வலுவாக வாதம் செய்தாலே அதனை நீதிபதிக்கு எதிரான மிரட்டல் என்றோ அவதூறு என்றோ வரையறுத்துக் கொண்டு தண்டனை வழங்க விரிவான அதிகாரம் இதன் மூலம் நீதிபதிகளுக்கு வழங்கப்படுகிறது.

அதேபோல் கீழமை நீதிபதிகள் மீது புகார் அளிப்பதை முற்றிலும் தடைசெய்யவே மேற்கூறிய ஒழுங்குமுறை விதிபயன்படும் .

இவ்விதி வழங்கும் அதிகாரம் உரத்துப்பேசும் யாரையும் குடித்துவிட்டு பேசினார் என குற்றம் சாட்டுவதற்கும், தண்டனை அளிப்பதற்கும் பயன்படும் ஆபத்துண்டு.
மொத்ததில் வழக்குரைஞர்களுக்கு வாய்ப்பூட்டு போடும் கொடிய அடக்குமுறை விதிகளாகவே சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள ஒழுங்குமுறை விதிகள் உள்ளன.

வழக்குரைஞர்களின் கருத்துரிமை, பேச்சுரிமை, கேள்வி கேட்கும் உரிமை ஆகிவை தடை செய்யப்படுவது வழக்குரைகளின் உரிமையை பறிக்கும் செயல் மட்டும் அல்ல. நீதிமன்றத்தின் நடுநிலைத் தன்மையையே குலைத்து, சட்டத்தின் ஆட்சியை நிலைகுலையச் செய்துவிடும் ஆபத்து இதில் உள்ளது.

இந்த ஒழுங்குமுறை விதி நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்களின் அனைத்து வகைப் போராட்டங்களையும் ஒட்டு மொத்தமாக தடை செய்வதும் விவாதத்திற்கு உரியது. எதற்கெடுத்தாலும் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவதையும், நீதிமன்ற வளாகத்தில் கண்ணியக் குறைவாக நடந்துக் கொள்வதையும் எதிர்த்து ஒழுங்குமுறை விதிகள் ஏற்படுத்துவது தேவை தான். அதற்கு நீதிபதிகளும் வழக்குரைஞர்களும் இணைந்து இணக்கமான முறையில் விதிவகுத்துக் கொள்ள வேண்டும்.
 மாறாக நீதிமன்ற அரங்கில் அமைதியான முறையில் கோரிக்கை அட்டை பிடிப்பதையோ, கருப்பு பட்டை அணிவதையோ கூட தடை செய்யும் சர்வாதிகாரம் கூடாது.

ஏ.கே. ஆனந்த் – எதிர் – தில்லி உயர்நீதிமன்ற பதிவாளர் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை காட்டி, வழக்குரைஞர் சட்டப் பிரிவு 34(1) வழங்கும் அதிகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் மிகத் தவறாக பயன்படுத்துகிறது.

இந்த ஒழுங்குமுறை விதிகள் பிறப்பிக்கப்பட்டமுறை குறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் 03.06.2016 அன்று வெளியிட்டுள்ள விளக்கம் ஏற்கக்கூடியதாக இல்லை மாறாக மெல்லிய மிரட்டலாக உள்ளது.


நீதிமன்றத்திற்குள் மயான அமைதியை நிலைநாட்டுவது நீதித்துறை தற்சார்பையே சீர்குலைத்துவிடும்.

எனவே உயர்நீதிமன்றம் கடந்த 2016 மே 25 நாளிட்ட வழக்குரைஞர் சட்ட விதிகளைத் திரும்ப பெற்று, வழக்குரைஞர் அமைப்புகளோடு பேச்சு வார்த்தை நட்த்தி இருத்தரப்பினரும் ஏற்கக் கூடிய ஒழுங்குவிதிகளை உருவாக்கிக் கொள்வதே இணக்கமான சூழல் நிலவவும், சட்டத்தின் ஆட்சி நிலை பெறவும் உதவும் என்பதை தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்புதிய ஒழுங்குமுறை விதிகளைத் திரும்பப் பெற வலியுறுத்தி 06.06.2016 அன்று வழக்குரைஞர்கள் சென்னையில் நடத்தும் பேரணிக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


Sunday, June 5, 2016

காவிரி உரிமையை மீட்க அ.தி.மு.க. – தி.மு.க. தனிநபர் ஆதாய – தனிநபர் பகை அரசியலைப் புறக்கணிப்பீர்! காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடக் களம் காண்போம் உழவர்களாக – தமிழர்களாக ஒருங்கிணைவோம்! தோழா பெ. மணியரசன் வேண்டுகோள்!


காவிரி உரிமையை மீட்க அ.தி.மு.க. தி.மு.க. 
தனிநபர் ஆதாய தனிநபர் பகை அரசியலைப் புறக்கணிப்பீர்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடக் 
களம் காண்போம் உழவர்களாக தமிழர்களாக ஒருங்கிணைவோம்!

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் 
தோழா பெ. மணியரசன் வேண்டுகோள்!


சூன் 12-ஆம் நாள் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்கப்படாது என்று முதலமைச்சர் செயலலிதா அறிவித்த செய்தியைக் கேட்டு, திடீரென்று அதிர்ச்சி அடைந்தது போல் பலர் அறிக்கை வெளியிடுகிறார்கள்.


கடந்த பல ஆண்டுகளாக வனவாசம் போய் இப்போதுதான் நாடு திரும்பியவர் போல் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஐயோ சூன் 12-இல் இந்தாண்டும் மேட்டூர் திறக்கப்படவில்லையாஎன்று பேரதிர்ச்சி அடைந்து”, எத்தனை ஆண்டுகளாக செயலலிதா ஆட்சியில் சூன் 12-இல் மேட்டூர் திறக்கப்படவில்லை என்ற பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.



காவிரி நீர் உரிமையை மீட்காததற்கும் குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் திறக்க முடியாமல் போனதற்கும் செயலலிதாவும் கருணாநிதியும் சமமாகப் பொறுப்பேற்க வேண்டும் என்ற வரலாற்று உண்மையை மறைப்பதில் இருவரும் முந்திக் கொள்கிறார்கள்.


குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் திறக்க முடிந்தது கடந்த காலங்களில் எப்படி நடந்தது?

1924 ஆண்டு காவிரி ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்டபோது, தமிழ்நாட்டிற்கு மாத வாரியாக வர வேண்டிய காவிரி நீரைக் கர்நாடகம் திறந்து விட்டதால் குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் திறக்க முடிந்தது. 1974-க்குப் பிறகு அந்த ஒப்பந்தத்தை செயல்படுத்தக் கர்நாடகம் மறுத்த பிறகு முந்தைய சாகுபடி ஆண்டில் குறிப்பாக நவம்பர் டிசம்பரில் மேட்டூர் அணையில் தண்ணீரைச் சேமிக்க முடிந்த காலங்களில் சூன் அல்லது சூலையில் குறுவைக்கு மேட்டூரில் தண்ணீர் திறக்க முடிந்தது.


அவ்வாறு சேமிக்காத அல்லது சேமிக்க முடியாத ஆண்டுகளில் அடுத்துவரும் குறுவைக்கு போதிய தண்ணீர் மேட்டூரில் இருப்பதில்லை. அவ்வாறான ஆண்டுகளில் குறுவை சாகுபடி இல்லை என்ற நிலைதான் ஏற்பட்டு வருகிறது.


காவிரித் தீர்ப்பாய இறுதித் தீர்ப்பை இந்திய அரசின் அரசிதழில் வெளியிட்டுச் செயல்படுத்துமாறு உச்ச நீதிமன்றம் கெடுவிதித்துக் கட்டளையிட்டபின், அதன் ஒரு பகுதியாக இறுதித் தீர்ப்பை கெடுவின் கடைசி நாளான 19.02.2013 அன்று அரசிதழில் வெளியிட்டுவிட்டு, அதைச் செயல்படுத்தும் அமைப்புகளான காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை ஏற்படுத்தாமல் நயவஞ்சகமாக ஒதுங்கிக் கொண்டது சோனியா காந்தியின் மன்மோகன் சிங் அரசு!


உச்ச நீதிமன்றக் கட்டளையை ஒட்டி இறுதித் தீர்ப்பை இந்திய அரசு அரசிதழில் வெளியிட்டதையே தமது சாதனையாகச் சித்தரித்து, தஞ்சையில் தமக்கான பாராட்டு விழாவை நடத்திக் கொண்டார் செயலலிதா. காவிரித் தாய்என்று செயலலிதாவின் பெயருக்கு முன்னால் பட்டம்போட்டு, அவரின் ஆதாய விசுவாசிகள் இன்று வரை வர்ணித்து வருகிறார்கள்.

காவிரியை மீட்ட காவிரித்தாய் செயலலிதாவின் ஆட்சியில் 2013-லிருந்து 2016 வரை குறுவைக்குத் தண்ணீர் பெற முடியவில்லை! காவிரிப் பாசன குறுவை சாகுபடி 2013 – 2016 ஆண்டுகளில் இல்லை என்றானது.

ஆனாலும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் டெல்டா மாவட்டங்களில் காவிரியை மீட்ட காவிரித்தாய் என்று செயலலிதாவை அவரது ஆதாய விசுவாசிகள் போற்றிப் புகழ்ந்தனர். விவசாயிகளில் ஒரு சாரார் இதை இரசித்துக் கொண்டிருந்தனர்.

இப்பொழுது கருணாநிதி, செயலலிதா ஆட்சி காலத்தில் எந்தெந்த ஆண்டுகளில் குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் திறந்து விடவில்லை என்று பட்டியல் போட்டுள்ளார்.

கருணாநிதி முதலமைச்சராக இருந்த போதெல்லாம் காவிரியில் மாதாமாதம் கர்நாடகம் தர வேண்டிய தண்ணீரை வாங்கினாரா?

கருணாநிதி தில்லியில் வாஜ்பாயி அரசு இருந்த போது அதனுடன் கூட்டணி சேர்ந்திருந்தார். மன்மோகன் அரசு 10 ஆண்டுகள் இருந்தபோது, அதனுடன் கூட்டணி சேர்ந்திருந்தார். இந்த ஆண்டுகளில் கருணாநிதி காவிரி உரிமையை மீட்டாரா? குறுவை சாகுபடியை உறுதி செய்தாரா? இல்லை.

காவிரி மேலாண்மை வாரியம் ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை அமைத்திட இந்திய அரசை வலியுறுத்தி மன்மோகன் ஆட்சி காலத்தில் இவர் சாதித்திருக்கலாமே!

நவம்பர் டிசம்பரில் பருவமழை கூடுதலாகப் பெய்து மேட்டூர் அணையில் தண்ணீர் சேமிக்கப்பட்டிருந்தால் குறுவை சாகுபடி உண்டு; இல்லையென்றால் குறுவை இல்லையென்ற நிலை தி.மு.க. ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி இரண்டிலுமே பொதுவான நடைமுறை!

தமிழ்நாட்டின் காவிரி உரிமை, கச்சத்தீவு உரிமை, பாலாற்று உரிமை, முல்லைப் பெரியாறு அணை உரிமை ஆகியவற்றைப் பலியிட்டு தமிழர்களின் வாழ்க்கையை பாழ்படுத்தியதில் தி.மு.க. அ.தி.மு.க. இரண்டிற்கும் சமபங்கு உண்டு.


விழிப்புணர்வு பெற்ற உழவர்கள் விவரம் தெரிந்த தமிழர்கள் காவிரி உரிமைச் சிச்கலில் தி.மு.க.வையும் ஆதரிக்க மாட்டார்கள். அ.தி.மு.க.வையும் ஆதரிக்க மாட்டார்கள்.

காவிரியில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, தீர்ப்பாயத் தீர்ப்பு ஆகியவற்றை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கே இருக்கிறது. இதில் இந்திய அரசைச் செயல்பட வைத்திருக்க வேண்டிய பொறுப்பு தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளுக்கே இருக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட இந்திய அரசை வலியுறுத்தி, பெருந்திரள் போராட்டம் எதையும் அ.தி.மு.க. தலைமையும் நடத்தவில்லை; தி.மு.க. தலைமையும் நடத்தவில்லை.

எமது தமிழ்த் தேசியப் பேரியக்கம் தனித்தும், உழவர் அமைப்புகள், தோழமை அரசியல் இயக்கங்கள் ஆகியவற்றுடன் கூட்டாகவும், காவிரி உரிமை மீட்பிற்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக இந்திய அரசை வலியுறுத்திப் பல போராட்டங்கள் நடத்தியுள்ளது.

காவிரி நீரைத் தடுக்கும் கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரம் அனுப்பக் கூடாது என்று முதல்முதல் நெய்வேலி அனல் மின் நிலையத் தலைமை நிர்வாகியை முற்றுகையிட்டது எமது இயக்கம்!
காவிரி என்ற இயற்கை வளத்தைப் பாதுகாத்துத் தராத இந்திய அரசு காவிரிப் படுகையில் கிடைக்கும் பெட்ரோலியம் மற்றும் எரிவளியை எடுக்கக்கூடாது என்று முதலில் நரிமணத்தில் போராட்டம் நடத்தியது எமது அமைப்பு. பின்னர் கூட்டமைப்பான தமிழ்த் தேசிய முன்னணி சார்பிலும் அப்போராட்டத்தில் பங்கு கொண்டோம்.


கடந்த ஆண்டு உழவர் மற்றும் அரசியல் இயக்கங்களின் கூட்டமைப்பான காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், நாகூர் பனங்குடி எண்ணெய் துப்புரவு ஆலை முற்றுகையை இரண்டாயிரம் உழவர்களுடன் நடத்தினோம்.
அதற்குமுன் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கர்நாடகம் காவிரியில் புதிய அணை கட்டாமல் தடுக்க மேகேதாட்டு முற்றுகைப் போராட்டத்திற்கு தேன்கனிக்கோட்டையிலிருந்து 5000 உழவர்கள் பேரிணாகச் சென்றபோது கைதானோம்!

காவிரி உரிமை மீட்பிற்காக இவ்வாறான ஒரு போராட்டத்தை தி.மு.க.வோ அல்லது அ.தி.மு.கவோ நடத்தியதுண்டா? இல்லை. தி.மு.க. கடந்த ஆண்டு அடையாள ஆர்ப்பாட்டங்களில் டெல்டா மாவட்டங்களில் கலந்து கொண்டது. அவ்வளவே!


தி.மு.க. தலைமையோ அல்லது அ.தி.மு.க. தலைமையோ முன்னெடுத்து, காவிரி உரிமை மீட்பிற்காக இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு இலட்சம் பேர் கொண்ட பேரணி நடத்தியிருக்க முடியாதா? ஏன் நடத்தவில்லை?


தனிநபர் பகை அரசியலிலேயே தமிழ் மக்களை ஈடுபட வைத்து, தாங்கள் ஆதாயம் அடைய வேண்டும் என்பதுதான் கருணாநிதி செயலலிதா அரசியல் உத்தி!

தமிழர்களின் காவிரி உரிமையைப் பறித்ததில் பெருங்குற்றவாளி இந்திய அரசுதான்! அந்த இந்திய அரசை எதிர்த்துத் தமிழர்கள் திரும்பிவிடாமல், செயலலிதாவை எதிர்த்தும் கருணாநிதியை எதிர்த்தும் தமிழ் மக்கள் எப்போதும் சிந்தித்தால்தான், தங்களுக்கு அரசியல் ஆதாயம் என்று கருணாநிதியும் செயலலிதாவும் திட்டமிட்டுப் பகை அரசியல் நடத்திக் கொண்டுள்ளார்கள்.


இவ்விருவரின் தன்னலப் பகை அரசியலில் ஏதோ ஒரு பக்கம் சேராமல், காவிரி உரிமையை மீட்க இந்திய அரசு மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை அமைத்திட வலியுறுத்தி தமிழர்கள் போராட வேண்டும்.

மேலாண்மை வாரியமும் ஒழுங்குமுறைக்குழுவும் அமைக்கப்பட்டால் கர்நாடக அணைகளைத் திறந்து, மூடும் அதிகாரம் அந்த அமைப்புகளுக்கு வந்துவிடும். கர்நாடகத்தில் இருக்கின்ற தண்ணீரில் தமிழ்நாட்டிற்குரிய விகிதம் திறந்து விடப்படும்!

எனவே உழவர்களே, தமிழர்களே காவிரி உரிமையை மீட்க இந்திய அரசுக்கு நெருக்கடி தரும் போராட்டங்களைக் கட்டமைப்போம்!



அ.தி.மு.க. தி.மு.க. தனிநபர் ஆதாய தனிநபர் பகை அரசியலைப் புறக்கணிப்போம்!
அண்டை அயல் இனங்கள் தமிழர்களின் உரிமைகளைப் பறித்திட மறைமுகமாகத் துணை நிற்கும் இந்திய அரசின் இனப்பகை அரசியலுக்குப் பாடம் கற்பிப்போம்!

காவிரி உரிமை மீட்கக் களம் காண்போம்!

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT