உடனடிச்செய்திகள்
Showing posts with label உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு. Show all posts
Showing posts with label உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு. Show all posts

Saturday, June 26, 2010

செம்மொழி மாநாட்டை சாக்காக வைத்து உளவுத்துறையின் அத்துமீறலும் பழிவாங்கும் முயற்சியும்

செம்மொழி மாநாட்டை சாக்காக வைத்துக் கொண்டு அச்சுறுத்துகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன்.

அவர் மேலும் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையும், விழுப்புரம் தண்டவாள குண்டு வெடிப்பையும் சாக்காக வைத்துக் கொண்டு ஓசூரில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்களை அச்சுறுத்திட அத்துமீறிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள காவல்துறையையும் உளவுத்துறையையும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிச் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.


தமிழின உரிமைக்காகவும் தமிழ் மொழி உரிமைக்காகவும் சுறுசுறுப்பாக சனநாயக வழிப்பட்ட போராட்டங்களில் ஈடுபடும் ஓசூர் த.தே.பொ.க. தோழர்களை அச்சுறுத்தி பழிவாங்கவே காவல்துறை இவ்வாறு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது.

த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் ஓசூர் கோ. மாரிமுத்துவை 23.06.2010 அன்று குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 160ன் கீழ் ஓசூர் நகரக் காவல்துறையினர் அழைப்பாணை கொடுத்து காவல் நிலையத்திற்கு வரச் சொல்லி செம்மொழி மாநாட்டிற்கு எதிராக எந்த நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டோம் என்று எழுதிக் கொடுக்குமாறு வலியுறுத்தினர். அதற்கு தோழர் மாரிமுத்து அவ்வாறு எழுதித் தர மறுத்துவிட்டார்.

25.6.2010 அன்று த.தே.பொ.க ஓசூர் கிளைச் செயலாளர் தோழர் முத்தாலுவிடம் க்யூ பிரிவைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் தொலைபேசியில் “இம்மாதம் 9,10 தேதிகளில் எங்கிருந்தீர்கள்” என்று விசாரித்துள்ளார். அதற்கு தோழர் முத்தாலு “நான் ஓசூரில்தான் இருந்தேன்”, என்றும் “தொழிற்சாலைப் பணிக்கு இரு நாள்களும் போயிருந்தேன்”, என்றும் கூறியுள்ளார்.

அதன் பிறகு மேற்படி சக்திவேல் “நீங்கள் சொல்வது உண்மையா என்று விசாரிக்க உங்கள் பக்கத்து வீடுகளின் தொலைபேசி எண்களைக் கொடுங்கள்” என்றும் “அப்படிக் கொடுக்காவிட்டால் நாங்கள் காவல்துறையிலிருந்து வந்து உங்கள் குடும்பத்தையும் தெருவில் உள்ளவர்களையும் விசாரிப்போம்” என்றும் மிரட்டும் தொணியில் கூறியுள்ளார்.

விழுப்புரம் குண்டுவெடிப்பிற்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு குறித்து மாற்றுக் கருத்துகள் எங்கள் கட்சிக்கு உண்டு. எங்களின் மாற்றுக் கருத்துகளை சனநாயக வழிகளில் வெளிப்படுத்த எங்களுக்கு உரிமை உண்டு என்ற போதிலும் நாங்கள் அவ்வாறான எதிர்ப்பு நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடவில்லை. எங்கள் கட்சி அமைப்பை வலுப்படுத்துவதற்குரிய இதர பணிகளைப் பார்த்துக் கொண்டுள்ளோம்.

மேற்கண்ட காவல் துறை மற்றும் உளவுத் துறைகளின் சட்டத்திற்குப் புறம்பான அத்துமீறல்கள் குறித்து கிருட்டிணகிரி மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் 25.6.2010 அன்று தொலைபேசி வழி முறையீடு செய்துள்ளேன்.

இதன்பிறகும் த.தே.பொ.க.விற்கு எதிரான காவல்துறை மற்றும் உளவுத்துறையின் அத்துமீறலும் பழிவாங்கும் முயற்சியும் ஓசூரில் தொடர்ந்தால் உடனடியாகத் தமிழகமெங்கும் கண்டன இயக்கம் நடத்துவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT