உடனடிச்செய்திகள்

Tuesday, May 25, 2021

ஏழு தமிழர் விடுதலையில் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டியது என்ன? - கி. வெங்கட்ராமன் அறிக்கை!



ஏழு தமிழர் விடுதலையில் 
தமிழ்நாடு அரசு செய்ய வேண்டியது என்ன?

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் 
கி. வெங்கட்ராமன் அறிக்கை!


ஏழு தமிழர் விடுதலை குறித்து தமிழ்நாடு அரசு செய்யவேண்டியது என்ன என்பதைப் பற்றி கூர்மையான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தைப் பொறுத்தவரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ரவிச்சந்திரன், இராபட்பயஸ், செயக்குமார் ஆகிய ஏழு தமிழர்கள் இராசிவ் காந்தி கொலை வழக்கில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அநீதியான முறையில் சிறையில் வாடுவதை சுட்டிக்காட்டி இவர்கள் விடுதலைக்கு உடனடியான ஒப்புதல் தருமாறு குடியரசுத் தலைவரை கோரியதை தவறு என்று கருதவில்லை.

அதே நேரம் கூடிய விரைவில் இந்திய தலைமை அமைச்சர் நரேந்திமோடியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்ததித்து உரிய அழுத்தம் கொடுக்கவேண்டும், தமிழ்நாடு அரசு தண்டணை இடைநிறுத்த விதிகள் - 1982 (The Tamilnadu Suspension of Sentence Rules - 1982) பிரிவு 40 - இன் கீழ் உள்ள சிறப்பதிகாரத்தை பயன்படுத்தி ஏழு தமிழர்களுக்கும் காலவரையற்ற சிறை விடுப்பு வழங்கி இடைக்கால விடுதலைத்தர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

ஆயினும் திராவிடக் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் முனைவர் தொல். திருமாவளவன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன். சீமான், பஞ்சாப் மனித உரிமை செயல்பாட்டாளர் பேராசிரியர் செக்மோகன்சிங் உள்ளிட்டோர். அரசமைப்பு சட்ட உறுப்பு 161 ன் கீழ் மீண்டும் தமிழ்நாடு அமைச்சரவை ஏழு தமிழர்களை விடுதலை செய்ய முடிவு செய்து அதனை ஆளுநருக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனக் கூறுகின்றனர். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருப்பது. கூட்டாட்சி முறைக்கு எதிரான ஆளுநரின் முடிவை ஏற்பதாக அமைந்து விடும் என்று திறனாய்வு செய்கின்றனர். 

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஏழு தமிழர் விடுதலை தொடர்பாக நடந்து கொண்ட விதமும், செய்த முடிவும் கூட்டாட்சி முறைக்கு எதிரானது என்பது மட்டுமின்றி அப்பட்டமான தமிழினப் பகைச் செயல் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

அரசமைப்புச் சட்ட உறுப்பு 163 (1) ன் படி மாநில அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் ஆவார். இச்சிக்கலில் ஆளுநருக்கு தனிப்பட்ட எந்த விருப்பதிகாரமும் கிடையாது.
இதனை மாருரா – எதிர் – இந்திய ஒன்றிய அரசு என்ற வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட ஆயம் ஐயத்திற்கு இடமின்றி தெளிவுபடுத்தி விட்டது. (1981, 1 SCCB, 107). “ஆளுநர் என்பவர் அமைச்சரவையின் சுருக்கெழுத்து வடிவமே தவிர தனித்த அதிகாரம் படைத்தவர் அல்ல” என்று அத்தீர்ப்பு தெளிவுப்படுத்துகிறது.

அதன் பிறகு வந்த அரசமைப்புச் சட்ட ஆயங்களும் இதே நிலைப்பாட்டை உறுதிப்படுத்தின. 

இந்த நிலையில் ஆளுநர் புரோகித் முதலில் இரண்டாண்டுகளுக்கு மேலாக காலம் தாழ்த்தியதும், அடுத்து இராசிவ் காந்தி கொலை தொடர்பான பல்நோக்கு விசாரணைக்குழுவின் முடிவுக்கு காத்திருப்பதாக சாக்குப் போக்கு சொல்லியதும், இறுதியில் இதன் மீது முடிவெடுக்க தனக்கு அதிகாரமில்லை என்று கூறி குடியரசுத் தலைவருக்கு இந்த கோப்பை அனுப்பியதும் அரசமைப்புச் சட்ட கவிழ்ப்பாகும். ஏழு தமிழர் விடுதலை தொடர்பான இந்திய அரசின் தமிழினப் பகை முடிவு தான் ஆளுநர் வழியாக வெளிப்பட்டிருக்கிறது. 

ஆளுநரின் முடிவு கூட்டாட்சிக்கு முறைக்கு எதிரானது என்ற திறனாய்வு சரியானதுதான் என்றாலும் மீண்டும் தமிழ்நாடு அமைச்சரவை ஏழு தமிழர் விடுதலை பரிந்துரைத்து ஆளநருக்கு அனுப்பிவைப்பது உரிய பலன் தராது என்றே கருதுகிறோம்.
அதே இந்திய அரசு, அதே ஆளுநர் என்ற நிலையில் மீண்டும் காலதாமதம் மீண்டும் இதே முடிவு என்ற ஆபத்து நிகழவாய்ப்பு உண்டு.

குடியரசுத் தலைவர் வழியாகவும் ஏழு தமிழர் விடுதலை கிடைக்குமா என்பது ஐயத்திற்குரியதுதான். ஆயினும் இருக்கிற சட்ட நிலைமையின் படி இந்திய அரசை வலியுறுத்துவது செய்ய வேண்டிய பணிதான்.

ஏற்ககெனவே 2014 இல் அன்றைய முதலமைச்சர் செயலலிதா குற்றவியல் சட்ட விதி 432 ன் கீழ் ஏழு தமிழரை விடுதலை செய்வதாக அறிவித்து அதனை 435 (1) ன் கீழ் இந்திய அரசின் கருத்து கேட்டு அனுப்பிய போது அன்றைய காங்கிரசு ஆட்சி அச்சிக்கலை அரசமைப்புச் சட்ட ஆயத்திற்கு கொண்டு சென்றது. அதில் 02.12.2015 அன்று வந்த தீர்ப்பு குற்றவியல் சட்டப்படியான மாநில அரசின் அதிகாரங்களையே பறிப்பதாக அமைந்து விட்டது. ஆயினும் அரசமைப்பு சட்ட உறுப்பு 161ன் படியான மாநில அரசின் தண்டனை குறைப்பு அதிகாரம் கட்டற்றது என்று மட்டும் உறுதி செய்தது. ஆளுநர் புரோகித்தின் செயல் இதையும் தட்டிப்பறிப்பதாக அமைந்தது. 

ஆளுநரின் முடிவை ஆதரிக்கும் சிலர் இராசிவ் காந்தி கொலை வழக்கில் இந்திய அரசின் அதிகாரத்திற்குட்பட்ட சட்டங்களும் இருப்பதால் குற்றவியல் சட்டம் 435 (1) ன் கீழ் பொருந்தும் இந்திய அரசின் அதிகாரம் 161 க்கும் பொருந்தும் என உள் நோக்கத்தோடு கூறுகிறார்கள்.

ஆனால் மாநில அரசின் தண்டனைக் குறைப்பு அதிகாரத்தை வெட்டி குறைத்த உச்ச நீதிமன்ற அரசரமைப்பு ஆயம் (இந்திய ஒன்றிய அரசு – எதிர் – முருகன் என்கிற சிறிகரன் மற்றும் பிறர் வழக்கு) கூட உறுப்பு 161ன் கீழ் மாநில அரசின் தண்டனைக் குறைப்பு அதிகாரம் கட்டற்றது, எந்த நேரத்திலும் செயல்பட கூடியது என்று கூறியது மட்டும்மல்ல “ஆளுநர், அதாவது அவர் தொடர்புடைய அவரது அமைச்சரவை, இந்திய குடியரசுத் தலைவரை விட உயரதிகாரம் படைத்தது அல்ல என்றாலும் அரசமைப்பு சட்ட உறுப்பு 161 இதற்கு விதிவிலக்கானது. குடியரசுத் தலைவரின் அதிகாரமும் மாநில ஆளுநரின் அதிகாரமும் தண்டனைக் குறைப்பு குறித்த செய்தியில் ஒன்றுக்கொன்று இணையானவை, ஒன்றுக்கொன்று சமமானவை” எனக் கூறியது.

“மாநில அரசின் நிர்வாக அதிகார எல்லையில் எந்த சட்டத்தின் படி தண்டிக்கப்பட்ட எந்த நபரின் தண்டனையையும் குறைக்கவோ, நிறுத்தி வைக்கவோ, மீட்சி வழங்வோ, மன்னிப்பு வழங்கவோ மாநில ஆளுநருக்கு அதிகாரம் உண்டு” என்பது தான் உறுப்பு 161.

இதில் குறிப்பிடப்படும் “மாநில அரசின் நிர்வாக அதிகார எல்லை” என்பது மாநில எல்லையைக்குறிக்கிறது என்பதை தவிர வேறொன்றுமில்லை.

சட்ட நிலைகள் தெளிவாக இருந்தாலும் ஆளுநர் புரோகித் இது தனது அதிகாரத்திற்கு உட்டபட்டது அல்ல என்று கூறி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருப்பது தான்தோன்றிதனமான சட்ட கவிழ்ப்பாகும். இது நடந்து ஓராண்டு கூட ஆக வில்லை. 
இந்த நிலையில் 161 ன் கீழ் தமிழ்நாடு அமைச்சரவை மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தால் இதே நிலை ஏற்படும் ஆபத்து உண்டு.

மேலும் சில நண்பர்கள் ஆளுநரின் சட்ட கவிழ்ப்பை சுட்டி காட்டி நீதி மன்றத்தை அணுகலாம் என கருத்து தெரிவிக்கின்றனர். சட்டப்படி இது சரிதான் என்றாலும் உச்ச நீதிமன்றத்தில் தற்போது நிலவும் சூழலை கருத்தில் கொண்டால் உறுப்பு 161, 163 (1) ஆகியவற்றையும் அரசமைப்புச் சட்ட ஆயத்திற்கு அனுப்பி நிச்சயமற்ற நிலையை உருவாக்கிவிடும் ஆபத்து உண்டு என உணர முடியும்.

இந்த சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக இந்திய தலைமைச்சரை சந்தித்து வலியுறுத்திவிட்டு தமிழ்நாடு தண்டனை இடை நிறுத்த விதிகள் பிரிவு 40- ஐ பயன்படுத்தி பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், இரவிச்சந்திரன், இராபட்பயஸ், செயக்குமார் ஆகிய ஏழு தமிழர்களுக்கு காலவரையற்ற நீடித்த விடுப்பு வழங்கி இடைக்கால விடுதலை தருவதே தமிழ்நாடு அரசின் முன் உள்ள கடமை என வலியுறுத்துகிறோம்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Monday, May 24, 2021

"ஏழு தமிழர் விடுதலை: ஸ்டாலின் இதைச் செய்வாரா?" - "எமது தேசம்" ஊடகத்துக்கு.. தோழர் கி. வெங்கட்ராமன் நேர்காணல்!

"ஏழு தமிழர் விடுதலை: 

ஸ்டாலின் இதைச் செய்வாரா?"



"எமது தேசம்" ஊடகத்துக்கு..

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் 
தோழர் கி. வெங்கட்ராமன் நேர்காணல்!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Thursday, May 20, 2021

“ஜக்கி வாசுதேவ் மீதான அமைச்சர் பி.டி.ஆர். குற்றச்சாட்டுகள் சரியானவையே!” “பேரலை” ஊடகத்திற்கு - ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

“ஜக்கி வாசுதேவ் மீதான அமைச்சர் பி.டி.ஆர். குற்றச்சாட்டுகள் சரியானவையே!”



“பேரலை” ஊடகத்திற்கு

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
 ஐயா பெ. மணியரசன் நேர்காணல்! 


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

ஆரியவாதிகளின் புரட்டுகளை அம்பலப்படுத்தவே! - ஐயா பெ. மணியரசன்!



ஆரியவாதிகளின் புரட்டுகளை அம்பலப்படுத்தவே!

ஐயா பெ. மணியரசன்,

தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்



என் மதம் குறித்து ஆரியத்துவாவாதிகள் கூறும் புரட்டை அம்பலப்படுத்தவே இக்கட்டுரையை எழுதுகிறேன்.


என் மதம் எது? எனது பிறப்பாலும், இருப்பாலும் நான் ஓர் இந்து. அரசு சார்ந்த ஆவணங்கள் அனைத்தும் அதைத்தான் கூறுகின்றன. நடைமுறை உண்மையும் அதுவே!  


இந்து மதத்தில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இரு பிரிவுகள் இருக்கின்றன. ஒன்று தமிழ் இந்து; இன்னொன்று ஆரிய இந்து. தமிழர்கள் தமிழ் இந்துக்கள்; எச்.இராசா போன்றவர்களும் வட நாட்டினரும் ஆரிய இந்துக்கள்! தமிழ் இந்துக்களின் புனித நூல்கள் திருக்குறள், தேவாரம், திருமந்திரம் திருவாசகம், ஆழ்வார் - ஆண்டாள் பாசுரங்கள், கரூவூரார், வைகுண்டர், வள்ளலார் நூல்கள் போன்றவை! ஆரிய இந்துக்களின் புனித நூல்கள் சமற்கிருத வேதங்கள்; பகவத் கீதை போன்றவை!


அந்த வரையறுப்பின்படி நான் தமிழ் இந்து! என் தந்தை பெயர் பெரியசாமி; அன்னை பெயர் பார்வதி; தந்தை வழி தாத்தா காத்தையன்;  அப்பாயி (பாட்டி) பெயர் - பெரியவீட்டாயி; தாய் வழித் தாத்தா சப்பாணி முத்து;  அம்மாச்சி (அம்மாவின் அம்மா) பெயர் மங்கலம். என் பெற்றோர் எனக்கு வைத்த பெயர் மணிராசு. (அதைத்தான் மணியரசன் என்று தனித் தமிழ் ஆக்கினேன்); என் தம்பி பெயர் ரெங்கராசு; என் தங்கை பெயர் மணிமேகலை. என் சொந்த ஊர் முகவரி: ஆச்சாம்பட்டி வடக்குத் தெரு, பூதலூர் வட்டம், தஞ்சை மாவட்டம். எனது வாழ்க்கை திறந்த புத்தகம்!


இவற்றையெல்லாம் சொல்வதற்குக் காரணம், சங்கிகளிடம், “நான் இந்து” என்று சான்றிதழ் வாங்குவதற்காக அன்று! அவர்களின் பொய்யை, புரட்டை அம்பலப்படுத்தவே!


எச்.இராசா, கே.டி.இராகவன் போன்றவர்களின் முன்னோர்கள் தமிழர்களின் பழம்பெரும் தெய்வங்கள், ஊர்கள் பெயர்களையே மாற்றியவர்கள்; என்னைப் போன்றவர்களின் பெயர்களை, மதங்களை மாற்றுவது அவர்களுக்கு எளிய பொழுது போக்கு!


தமிழ்க் கடவுள் முருகனை “சுப்ரமண்ய” என்று மாற்றினார்கள். தமிழச்சி வள்ளியுடன் அவருக்குக் காதல் திருமணம் நடந்து விட்ட நிலையில், வடநாட்டு தெய்வயானையை “இரண்டாம் திருமணம்” செய்தார் என்று கதை கட்டினார்கள். ஐயாறப்பனை “பஞ்சநதீஸ்வரர்” ஆக்கினார்கள்; அறம் வளர்த்த நாயகியைத் “தர்மசம்வர்த்தினி” ஆக்கினார்கள். மயிலாடுதுறையை “மயூரம்” என்று மாற்றினார்கள்; மரைக்காட்டை “வேதாரண்யம்” என்றார்கள். பூசை மொழி தமிழாக இருந்ததை சமற்கிருதம் என்று மாற்றினார்கள்.


“யாதும் ஊரே யாவரும் கேளிர்,” “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”, “ஒன்றே குலம்” என்ற தமிழர்களின் மனித சமத்துவ மாண்பை மாற்றி, தமிழர்களைச் சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்று மாற்றி இழிவுபடுத்தினார்கள். தங்களை, பிராமணர்கள் - பிரம்மாவின் தலையில் பிறந்தவர்கள் என்று கற்பித்து “புனிதப்” படுத்திக் கொண்டனர். தமிழை “நீச பாஷை” என்றார்கள்; சமற்கிருதத்தைத் “தேவ பாஷை” என்றார்கள்.


எச்.இராசாக்கள், கே.டி.இராகவன்கள், எஸ்.வி.சேகர்கள் – அவர்களின் இன்ன பிற உறவுகள், ஆரிய ஆதிக்கத்திற்காகத் தங்களின் முன்னோர்கள் செய்த அதே சதிகளை, “மாற்றங்களை” இன்றும் செய்கிறார்கள். இன்று அவர்களின் முழக்கம்” ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீஹனுமான், பாரத் மாத்தா கீ ஜே”! சமற்கிருதம் புனித மொழி, இந்தி தேசிய மொழி; தமிழர்கள் இந்த இரண்டையும் படிக்க வேண்டும்; தமிழ் பிராந்திய மொழி! விரும்பினால் தமிழைப் படிக்கலாம். இதுவே இவர்களின் மும்மொழிக் கொள்கை.


எனவே, இந்த வர்ண-சாதி பகாசுரர்கள் என் பெயரையும் என் மதத்தையும் இப்போது மாற்றிப் பேசுவது, அவர்களுக்குரிய மரபு வழிப்பட்ட (அ)தர்மமே!


ஆரியத்துவா வாதிகள் அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை தமிழர்கள் மீதும் தமிழ் மொழியின் மீதும் ஆதிக்கம் செய்வதற்குப் பயன்படுத்திய “ஆயுதம்” ஆன்மிகம்! தமிழர்களைப் பொறுத்தவரை ஆன்மிகம் என்பது அப்பழுக்கற்ற மெய்யியல்! கடவுளை அடைதல்; கடவுள் துணை வேண்டல்! ஆரியர்களுக்கோ ஆன்மிகம் என்பது, அவர்களும் அவர்களது சமற்கிருதமும் மற்ற இனங்களின் மீதும் மற்ற மொழிகளின் மீதும் ஆதிக்கம் செலுத்துவதற்கான ஓர் ஆயுதம் அல்லது ஓர் ஊடகம்!


ஆரியர்கள் வடக்கே இருந்து படையெடுத்து வந்தா, தமிழர்களை வென்று ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அப்படிப் படை கொண்டு வந்திருந்தால் “பகைவன்” என்று அடையாளம் கண்டு புரட்டி எடுத்திருப்பர் நம் முன்னோர்; விரட்டி அடித்திருப்பர்! ஆண்டவனின்  அணுக்கச் செயலாளர் போல், ஆண்டவனின் அருளை  நமக்கு வாங்கித் தருவது போல் நாடகமாடி, நம் முன்னோரை ஏமாற்றி நம் தலையில் ஏறி உட்கார்ந்து கொண்டார்கள்.


அந்த ஆரியர்களின் இன்றைய வாரிசுகள் தங்களின் ஆதிக்கப் பவனிக்காக அணியம் செய்திருக்கும் ஊர்தியின் பெயர் “இந்துத்துவா!” இதில் மறைக்கப்பட்டுள்ள அசல் பெயர் “ஆரியத்துவா!” இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் ஆரியப் பிராமணியத்தின் ஆதிக்கத்தை எதிர்த்து, அதன் மாய்மாலங்களை அம்பலப்படுத்தி ஊரெங்கும் கருத்து விதைத்து வெகு மக்களைத் திரட்டியது. பெரியார் தலைமையில் போராடினார்கள். பிராமண ஆதிக்கத்தில் சரிவு ஏற்பட்டது. உரிமை மீட்பில் முன்னேற்றம் கண்டோம். ஆனால் ஆன்மிகத்தை அக்ரகாரத்தின் ஏகபோகமாக விட்டு விட்டு வெளியே நின்றார்கள். அது பிராமணர்களின் ஆதிக்கம் தொடர வசதியாகப் போய்விட்டது.


இன்றும் பிராமணியவாதிகள் நம் தமிழ் மொழியில் பூசை செய்யக்கூடாது என்கிறார்கள்; நம் தமிழர்கள் பூசகர்கள் – அர்ச்சகர்கள் ஆகக் கூடாது என்கிறார்கள்.  ஆனால் நாமெல்லாம் இந்துக்கள் – நமக்கான முழக்கம் “இந்துத்துவா” என்று பாசாங்கு பேசி அவர்கள் பவனிவரும் பல்லக்கைத் தூக்க நம்மை அழைக்கிறார்கள்!


ஆரியத்துவாவின் இந்த சூழ்ச்சியை முறியடிக்கும் வகையில், தமிழர் சிவநெறியை  தமிழர் திருமால் நெறியை, தமிழர் குல தெய்வ வழிபாட்டை மீட்கவும் காக்கவும் தமிழினத்தில் காலந்தோறும் சான்றோர்கள் – அறவோர்கள் தோன்றி தமிழர்களுக்கான ஆன்மிக அரணை வலுப்படுத்தி உள்ளார்கள்.

அவர்களின் வழியில் நின்று தமிழ்த் தேசியப் பேரியக்கம், தமிழர் ஆன்மிகத்தில் நிலவும் ஆரிய-சமற்கிருத ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடி வருகிறது. மரபு வழிப்பட்ட – முற்போக்கான தமிழர் ஆன்மிகத்தை நிலைநாட்டிட அரும்பணி ஆற்றிவரும் ஆன்மிகச் சான்றோர்கள், அமைப்புகள், ஆதினங்கள், பீடங்கள் ஆகியவற்றுடன் இணைந்து தமிழ்மந்திரப் பூசை, தமிழ்வழிக் குடமுழுக்கு, மனித சமத்துவம் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து இயங்கி, அவற்றில் முன்னேற்றம் கண்டு வருகிறோம்.


அவர்கள் எல்லோரும் ஒருங்கிணைந்து உருவாக்கிய “தெய்வத் தமிழ்ப் பேரவை” யின் ஒருங்கிணைப்பாளராக நான் செயல்படுகிறேன்.


ஆரியத்துவா ஆன்மிக ஆதிக்கத்திற்கு எதிரான தமிழர் ஆன்மிக விழிப்புணர்ச்சியும் எதிர்ப்பாற்றலும் வளர்ந்து வருவதை சங்கிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதே வேளை நமது தமிழர் ஆன்மிக உரிமை மீட்பு முயற்சிகள் தவறானவை என்று நேரடியாகச் சொல்ல முடியவில்லை. அப்படி நேரடியாகச் சொன்னால் அவர்களின் அசல் மரபைத் தமிழர்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள் என்று அச்சப்படுகிறார்கள். எனவே அவதூறுகளே அவர்களின் ஆயுதங்கள் ஆயின. என் பெயர் டேவிட், என் மதம் கிறித்துவம் என்கிறார்கள்.


நான் சி.பி.எம் கட்சியில் ஒரு பொறுப்பில் முழுநேரச் செயல்பாட்டாளராகச் சற்றொப்ப 12 ஆண்டுகள் பணியாற்றினேன். 1984-இல் அந்தக் கட்சியிலிருந்து விலகி விட்டேன்.


இந்திரா காந்தி செயல்படுத்திய நெருக்கடி நிலைப் பிரகடனம் மக்களின் சனநாயக உரிமைகளைப் பறித்தது. அப்போது அந்த நெருக்கடி நிலையை எதிர்த்து, தலைமறைவாகச் செயல்பட ஒரு பிரிவை சி.பி.எம் கட்சி உண்டாக்கியது. தஞ்சை மாவட்டத்தின் தலைமறைவுச் செயல்பாட்டாளர்களில் நானும் ஒருவன். என்மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறை என்னைக் கடுமையாகத் தேடியது. கடைசி வரை என்னைக் கைது செய்ய முடியவில்லை. அத்தலைமறைவு வாழ்க்கையில் எனக்குத் துணை நின்ற தோழர்கள் எனக்கு வைத்த தலைமறைவுப் பெயர் டேவிட்! பெயரும் வேறொரு மதம் சார்ந்ததாக இருந்தால் தலைமறைவுக்கு உதவியாக இருக்கும் என்று அப்பெயர் சூட்டினார்கள். மற்றபடி எந்த ஆவணத்திலும் வேறு எந்த நடைமுறை வழக்கிலும் என் பெயர் டேவிட் என்று இல்லை.


    1976 சனவரி 31-இல் தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு பிப்ரவரியிலிருந்து 1977 பிப்ரவரி வரை சற்றொப்ப ஓராண்டுகாலம் தலைமறைவு வாழ்க்கை. அதன் பிறகு இந்திரா காந்தி தேர்தல் அறிவித்தார். தலைமறைவு வாழ்க்கை முடிவுக்கு வந்தது.


என் வாழ்க்கைத் துணைவியார் இலட்சுமி, ஆனந்த விகடன் இதழுக்கு அளித்த செவ்வியில் அந்தத் தலைமறைவு காலத்தில், தொழிற்சங்கத் தோழர்கள் சந்திப்பில் “டேவிட்” என்ற பெயரில் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தியதைக் கூறியிருந்தார். டேவிட் பெயரைக் கண்டு பிடித்த கொலம்பசுகளான கே.டி.இராகவன், எச்.இராசா வகையறாக்கள் கோயபல்சுப் பரப்புரை செய்து வருகின்றனர். அவர்களுக்குச் சற்சூத்திரர்களாகப் பணிபுரிந்து வரும் தமிழினச் சங்கிகளும் இதைப் பரப்பி வருகின்றனர். 


தமிழர் சமயநெறிகளில் நிலவும் ஆரிய ஆதிக்கத்தை நான் எதிர்த்துப் போராடி வருவதால், அதைத் தடுக்க “இந்து மதத்தில் தலையிடக் கூடாது” என்று சூழ்ச்சியாக, “டேவிட்” என்று  பொய் பரப்பி  வருகிறார்கள். 

என்னை இழிவு படுத்தும் நோக்கத்தோடு மேற்கண்ட நபர்களும் அவர்களைச் சேர்ந்தவர்களும் சட்டப்படியான என் பெயரை மாற்றியும் சட்டப்படியான எனது இந்து மதத்தை மாற்றியும் பொய்ப் பரப்புரை நடத்தி அவதூறு செய்யும் வேலையை இனியும் தொடர்ந்தால் அவர்கள் மீது சட்டப் படியான நடவடிக்கை எடுப்பேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 


என்னைப் பொறுத்தவரை “டேவிட்” என்பது என் பெயர் இல்லை என்று சொல்கிறேனே தவிர, அது இழிவான பெயர் என்று கருதவில்லை. அது கிறித்துவத்தில் உயர்வான பெயர்; என் மதம் தமிழ் இந்து என்கிறேனே தவிர, கிறித்துவ, இசுலாமிய மதங்கள் இழிவானவை என்று கூறவில்லை. அவை  உயர்வான மதங்களே!


தமிழினத்தில் இந்து, முசுலிம், கிறித்தவர் இருக்கிறார்கள். அவரவர் சமயம் அவரவர்க்கு! தமிழர் சிவநெறி, திருமால் நெறி, குலதெய்வ வழிபாடு ஆகியவற்றில் ஆரிய ஆதிக்கத்தை அகற்றுவோம். தமிழர் ஆன்மிகம் முழுமையாக மலரட்டும்!



தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்


பேச: 9443918095, புலனம் : 9841949462

முகநூல் : www.fb.com/tamizhdesiyam

ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


Tuesday, May 18, 2021

ஐயா துளசி ஐயா வாண்டையார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்! - பெ. மணியரசன் அறிக்கை!



ஐயா துளசி ஐயா வாண்டையார் 
மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் 
தலைவர் பெ. மணியரசன் அறிக்கை!


“கல்விக் காவலர்” துளசி ஐயா வாண்டையார் அவர்கள், நேற்று (17.05.2021) காலமான செய்தி, துயரமளிக்கிறது. தனிநபர் பண்பாடு, ஒழுக்கம், எளிமை ஆகியவற்றில் தலைசிறந்து விளங்கியவர். மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர். 

கல்விக் கொள்ளை கடல் போல் சூழ்ந்துள்ள தமிழ்நாட்டில், கல்வி வள்ளல் நிறுவனத் தீவாக பூண்டி புட்பம் கல்லூரியை நடத்தி வந்தவர். பல தலைமுறையாக ஏழை எளிய ஒடுக்கப்பட்ட – பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இலவசக் கல்லூரிக் கல்வியைப் பெற வாய்ப்பளித்தார்கள். 

ஐயா அவர்களின் மறைவுக்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 


 


Monday, May 17, 2021

தமிழினத்தின் இரோசிமா - நாகசாகி | நந்திக்கடல் - முள்ளிவாய்கால் மே 18 | - ஐயா பெ. மணியரசன் உரை!

தமிழினத்தின் இரோசிமா - நாகசாகி | நந்திக்கடல் - முள்ளிவாய்கால் மே 18 |


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
 ஐயா பெ. மணியரசன் உரை!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Saturday, May 15, 2021

ஜக்கி போலி சாமியார்! நிதியமைச்சர் பழனிவேல் தியாகராசன் தோலுரிக்கிறார்! - பெ. மணியரசன் நேர்காணல்!

ஜக்கி போலி சாமியார்! நிதியமைச்சர் பழனிவேல் தியாகராசன் தோலுரிக்கிறார்!


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
 ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Friday, May 14, 2021

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களைக் காலவரம்பற்ற விடுப்பில் விடுக! - பெ. மணியரசன் வேண்டுகோள்!



பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களைக் 
காலவரம்பற்ற விடுப்பில் விடுக!

தமிழ்நாடு முதல்வர்க்குத் தமிழ்த்தேசியப் 
பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் வேண்டுகோள்!

தமிழ்நாட்டில் மக்களால் தேர்தெடுக்கப்பட்டு புதிதாக அமைந்துள்ள திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி, இராசீவ் கொலை வழக்கில், தண்டிக்கப்பட்டு வாழ்நாள் சிறையாளர்களாக முப்பது ஆண்டுகளுக்கு மேலாக வாடும் ஏழு தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 
 
அ.இ.அ.தி.மு.க அமைச்சரவை ஏழுதமிழர்களை விடுவிக்கும் பரிந்துரையை நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்காக 2018-ஆம் ஆண்டு அனுப்பிவைத்தார்கள். வேண்டுமென்றே இரண்டாண்டிற்கு மேல் அப்பரிந்துரையைக் கிடப்பில் போட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அது தொடர்பாக பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த பின் அமைச்சரவைப் பரிந்துரையை ஏற்க மறுத்தார். குடியரசுத் தலைவர் ஆய்வுக்கு அனுப்பி இருப்பதாகக் கூறினார்.

சட்டங்களுக்கு உட்பட்ட மாநில அரசின் பரிந்துரைகளை ஆளுநர் ஏற்க வேண்டும் என்று பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமைச்சரவையின் உதவி மற்றும் அறிவுரைப்படி (Aid and advise) ஆளுநர் செயல்பட வேண்டும் என்று அரசமைப்புச் சட்ட உறுப்பு 163 (1) கூறுகிறது.
ஆனால், இந்தியாவில், அரசமைப்புச் சட்டம் வழங்கும் கொஞ்ச நஞ்ச உரிமைகளும் தமிழ்நாட்டிற்குப் பொருந்தாது என்பது தான், காங்கிரசு மற்றும் பா.ச.க ஆட்சிகளின் செயல்பாடாக இருந்து வருகிறது.

ஏழுதமிழர் விடுதலை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அப்போதையத் தலைமை நீதிபதி  சதாசிவம் தலைமையிலான அரசமைப்பு ஆயமும், அடுத்து, நீதிபதி எச்.எல்.தத் தலைமையிலான அரசமைப்பு ஆயமும் மாநில அரசுகள் பொது மன்னிப்பு வழங்கி சிறையாளிகளை விடுதலை செய்வதற்கு, தங்குதடையற்ற அதிகாரத்தை அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 வழங்குகிறது என்று தெரிவித்துள்ளன.

இந்த உச்சநீதிமன்றத் தீர்ப்புகளும் தமிழ்நாட்டிற்குப் பொருந்தாது என்பது போல் இந்தியக் காங்கிரசு ஆட்சியும் பா.ச.க. ஆட்சியும் நடந்து கொண்டன.

காந்தியடிகளைக் கொலை செய்த வழக்கில் வாழ்நாள் தண்டனை பெற்ற கோபால் கோட்சேயை 14 ஆண்டுகளில் மராட்டியக் காங்கிரசு ஆட்சி விடுதலை செய்தது.

பஞ்சாப் முதலமைச்சர் பியாந்த்சிங்கைக் கொலை செய்த வழக்கில் தண்டிக்கப்பட்ட பல்வந்த் சிங்கின் தூக்குத் தண்டனையை வாழ்நாள் தண்டனையாகக் குறைத்து, பின்னர் விடுதலை செய்தார்கள்.

இப்படிப்பட்ட தண்டனைக் குறைப்பு உரிமைகள் தமிழர்களுக்கு இல்லை என்பதுதான் இந்திய அரசின் நடைமுறையாக உள்ளது.

இவ்வாறான பின்னணியில் ஏழு தமிழர் விடுதலைக்குத் குரல் கொடுத்து வந்த தி.மு.க. தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்துள்ளது.

ஏழு தமிழர்களை விடுதலை செய்ய உடனடியான மாற்றுச் சட்ட வழிகளைத் தமிழ்நாடு அரசு கையாள வேண்டும். அதற்கு முன்பாக, சிறையாளர்களுக்கு விடுப்புக் கொடுக்க உள்ள அதிகாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பயன்படுத்தி, பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, அருப்புக் கோட்டை இரவிச்சந்திரன், இராபர்ட்  பயாஸ், செயக்குமார்   ஆகிய 7 பேரைக் காலவரம்பு வரையறுக்காமல்  நீண்ட கால விடுப்பில் விடுவிக்க வேண்டும். இதற்கான அதிகாரத்தை “தமிழ்நாடு தண்டனை இடைநிறுத்த விதிகள் – 1982 (The Tamil Nadu Suspension of sentence Rules -1982) பிரிவு 40 தமிழ்நாடு அரசுக்கு  வழங்குகிறது.

கொலை வழக்கொன்றில் பெற்ற தூக்குத் தண்டனையை  வாழ்நாள் தண்டனையாக மாற்றப்பட்டிருந்த  புலவர் கு.கலியபெருமாள் அவர்களுக்கு, இதழாளர் ஒருவர் போட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் காலவரம்பற்ற பரோல் (விடுமுறை) வழங்கிய நிகழ்வைத் தங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

மும்பை பயங்கரவாதிகளுடன் இணைந்து செயல்பட்டு, சட்ட விரோத ஆயுதங்கள் வைத்திருந்தார் என்ற வழக்கில் தண்டிக்கப்பட்ட நடிகர் சஞ்சய்தத்திற்கு 2½ ஆண்டு பரோல்  கொடுத்தது மராட்டிய அரசு என்பதையும் நினைவூட்ட விரும்புகிறேன்.

எனவே ஏழுதமிழர்களையும் உடனடியாகக் காலவரம்பற்ற விடுப்பில் விடுவிக்குமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

விடுப்பில் வரும் ஈழத் தமிழர்களைத் தங்கவைத்துப் பராமரிக்க முன்வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தோரிடம் ஒப்படைக்கலாம்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Thursday, May 13, 2021

இளவல் சீமான் அவர்களின் தந்தையார் மறைவுக்கு இரங்கல்! பெ.மணியரசன்



இளவல் சீமான் அவர்களின் தந்தையார் மறைவுக்கு இரங்கல்!

பெ.மணியரசன்

தலைவர், தமிழ்த்தேசியப்பேரியக்கம்


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இளவல்  சீமான் அவர்களின் அன்புத் தந்தையார் ஐயா செந்தமிழன் அவர்கள் உடல் நலக் குறைவால் இன்று (13.5.2021) காலமானார் என்ற செய்தி துயரமளிக்கிறது. உடனடியாக இளவல் சீமான் அவர்களிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன்.


பெரியவர் ஐயா செந்தமிழன் அவர்களுக்கு வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஐயா அவர்களை இழந்துவாடும் இளவல் சீமான் அவர்களுக்கும் குடும்பத்தினர்க்கும் நாம் தமிழர் கட்சி தம்பிகளுக்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்


பேச: 9443918095, புலனம் : 9841949462

முகநூல் : www.fb.com/tamizhdesiyam

ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


Wednesday, May 12, 2021

அரங்கநாத சுவாமி திருக்கோயில் ஜீயர் நியமனமும் ஆரியத்துவா எதிப்பும்! - ஐயா பெ. மணியரசன் உரை!

அரங்கநாத சுவாமி திருக்கோயில் ஜீயர் நியமனமும் ஆரியத்துவா எதிப்பும்!


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
 ஐயா பெ. மணியரசன் உரை!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Saturday, May 8, 2021

மராத்தா” ஒதுக்கீடு நீக்கம் வர்ணாசிரம (அ)நீதி! - பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!



மராத்தா” ஒதுக்கீடு நீக்கம் வர்ணாசிரம (அ)நீதி!

தமிழ்த்தேசியப் பேரியக்கதலைவர்
ஐயா பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் மக்களுக்கு இதுவரை மாநில அரசுகள் வழங்கி வரும் இட ஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்கும் வகையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பொன்று 05.05.2021 அன்று வெளி வந்துள்ளது. 

மராட்டிய மாநிலத்தில் “மராத்தா” எனப்படும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு அம்மாநில அரசு அளித்து வந்த இட ஒதுக்கீடு செல்லாது என்று, அறிவித்த தீர்ப்பில்தான் இந்த உரிமைப் பறிப்பு நடந்துள்ளது. 

மராட்டிய மாநிலத்தில் 30 விழுக்காடு அளவிற்கு “மராத்தா” என்ற மண்ணின் மக்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் மரபுவழியில் உழவர்கள். சொந்த நிலமுள்ள உழவர்களும், நிலமற்ற உழவுத் தொழிலாளிகளும் மராத்தா மக்களில் அதிக விகிதம் உள்ளனர். அவர்களுக்குப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ஏற்கெனவே இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. 

பா.ச.க. முதலமைச்சர் பட்னவிஸ், 2018இல் மராத்தா மக்களைப் பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பட்டியலில் சேர்த்து, சட்டம் இயற்றினார். அம்மாநிலத்தின் சமூகம் மற்றும் கல்வியில் பின்தங்கியோர் இட ஒதுக்கீடு சட்டத்தில் (Socially and Educationally Backward Classes (SEBC) Reservation Act) மராத்தா வகுப்பினரைச் சேர்த்ததே அச்சட்டம்! அச்சட்ட முன்வடிவு மராட்டிய சட்டப்பேரவை மற்றும் மேலவையில் நிறைவேற்றப்பட்டு சட்டம் ஆனது. 

இந்தச் சட்டத்தை எதிர்த்து மராட்டிய உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார்கள். இந்தச் சட்டம் செல்லும் என்று அந்த உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்குத் தாக்கல் செய்தார்கள். மேல் முறையீட்டு வழக்கின் தலைப்பு : “டாக்டர் ஜெயஸ்ரீ லட்சுமண்ராவ் பாட்டீல் – எதிர் – முதலமைச்சர் (CA 3123 of 2020)”.

உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூசன் தலைமையில், நீதிபதிகள் எல். நாகேசுவரராவ், எஸ். அப்துல் நசீர், ஹேமந்த் குப்தா, எஸ். இரவீந்திர பட் ஆகியோரைக் கொண்ட ஐந்து நீதிபதிகள் ஆயம் இவ்வழக்கை விசாரித்தது. மராட்டிய அரசு நிறைவேற்றிய மேற்படி புதிய சட்டம் செல்லாது என்று 05.05.2021 அன்று மேற்படி ஆயம் தீர்ப்பளித்தது. 

மராட்டிய மராத்தா மக்கள் தலை மீது உச்ச நீதிமன்றம் போட்ட இந்த குண்டு, மற்ற மாநிலங்களின் பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவர்க்கும் தலைவலியை உண்டாக்கி விட்டது! 

மராத்தா இடஒதுக்கீடு
 
மராத்தா மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படாதது பெருங்குறையாக மராட்டியத்தில் பேசப்பட்டு வந்தது. 2016 – 2017ஆம் ஆண்டுகளில் மராட்டியத்தில் மராத்தா வகுப்பு மக்கள் இதற்காகப் பெரும் போராட்டங்கள் நடத்தினர். இதன் காரணமாக - பா.ச.க. ஆட்சியில் 2017 சூன் மாதம் அமைக்கப்பட்ட நீதிபதி எம்.ஜி. கெய்க்வாட் குழு 16 விழுக்காடு மராத்தா மக்களுக்கு ஒதுக்கீடு வழங்கப் பரிந்துரைத்தது. என்.ஜி. கெய்க்வாட் பரிந்துரையை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் அந்த அறிக்கையை இரத்து செய்தது. 

அதன்பிறகு இயற்றப்பட்ட மாநில சட்டத்தை எதிர்த்து நடந்த வழக்கில் மராட்டிய உயர் நீதிமன்றம் 2019 சூன் மாதம் அளித்த தீர்ப்பில் அவர்களுக்குக் கல்வியில் 12 விழுக்காடும், வேலை வாய்ப்பில் 13 விழுக்காடும் ஒதுக்கீடு செய்ய ஆணையிட்டது. அதன்படி பா.ச.க. மாநில அரசு தனது சட்டத்தைத் திருத்தியது. 

மராட்டியத்தின் இந்த சட்டத்தை எதிர்த்து நடந்த வழக்கில் தான் உச்ச நீதிமன்றம், மராத்தாக்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை முற்றிலுமாக செல்லாது என்று நீக்கிவிட்டது. 

இரண்டு காரணங்கள்
 
இந்திய அரசுப் பணிகளில் – அதன் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு இட ஒதுக்கீடு இல்லாத நிலை தொடர்ந்தது. சமூகநீதிக்கான இயக்கங்கள் கொடுத்த அழுத்தத்தினால் 01.01.1979 அன்று அன்றைய தலைமை அமைச்சர் மொரார்ஜி தேசாய் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கான இரண்டாவது ஆணையத்தை பி.பி. மண்டல் தலைமையில் அமைத்தார். அந்த ஆணையம் 1980 திசம்பரில் தனது அறிக்கையை நடுவண் அரசிடம் அளித்தது. அப்போதிருந்த தலைமை அமைச்சர் இந்திராகாந்தியும், அவர்க்குப் பின்வந்த தலைமை அமைச்சர் இராசீவ்காந்தியும் மண்டல் அறிக்கையை செயல்படுத்த முன்வரவில்லை.

மண்டல் அறிக்கையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முன்னேற்றத்திற்கான பரிந்துரைகள் பல இருக்கின்றன. அவற்றுள் ஒன்று அவர்களுக்கு வேலை வாய்ப்பிலும் கல்வியிலும் நடுவண் அரசில் 27 விழுக்காடு வழங்க வேண்டும் என்பது. 

தேசிய முன்னணி சார்பில் கூட்டணி ஆட்சியின் தலைமை அமைச்சராக இருந்த வி.பி. சிங், மண்டல் குழு பரிந்துரைகளில் உள்ள நடுவண் அரசு வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு ஒதுக்கீட்டிற்கு 13.08.1990 அன்று ஆணையிட்டார். இதனால் வி.பி. சிங்கிற்குக் கொடுத்து வந்த ஆதரவைப் பா.ச.க. விலக்கிக் கொண்டது. காங்கிரசும், பா.ச.க.வும் இணைந்து வி.பி. சிங் ஆட்சியை நாடாளுமன்றத்தில் வீழ்த்தினர். 

வி.பி. சிங் செயல்படுத்திய 27 விழுக்காடு வேலை ஒதுக்கீடு ஆணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிலர் வழக்குப் போட்டனர். வி.பி. சிங் செயல்படுத்திய ஆணைக்கு உடனடியாகத் தடை விதித்தது உச்ச நீதிமன்றம்.

1991இல் காங்கிரசுக் கட்சியின் பி.வி. நரசிம்மராவ் தலைமை அமைச்சர் ஆனார். அவர் வி.பி. சிங் பிறப்பித்துத் தடைப்பட்டுள்ள மண்டல் பரிந்துரை ஆணையில் சில திருத்தங்கள் செய்து, பிற்படுத்தப்பட்டோர்க்கு 27 விழுக்காடு வேலை வாய்ப்புடன், இதுவரை இட ஒதுக்கீட்டில் வராத பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்க்கு வேலை வாய்ப்பில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடும் வழங்கிப் புதிதாக 25.09.1991 அன்று ஆணையிட்டார். 

நரசிம்மராவ் வெளியிட்ட இந்த ஆணையை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம், ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு ஆய விசாரணைக்கு மாற்றியது. 

தலைமை நீதிபதி ஏ.எம். வெங்டாச்சலையா தலைமையில் ஏ.எம். அகமதி, எம். கனியா, எஸ். இரத்தினவேல் பாண்டியன், கே. சிங், பி. சாவந்த், ஆர். சகாய், பி.ஜே. ரெட்டி மற்றும் ஒருவர் ஆகிய 9 நீதிபதிகள் ஆயம் 26.11.1992 அன்று தீர்ப்பு வழங்கியது. அது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இந்திய அரசு வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்துவது செல்லும் என்று தீர்ப்பளித்தது. அதேவேளை இரண்டு தடைகளை நிபந்தனையாக்கியது. 

ஒன்று, பிற்படுத்தப்பட்டவர்களில் வசதி படைத்தவர்களுக்கு – வருமானம் அதிகம் உள்ள மேல் திரட்சிப் படலத்தினர்க்கு (Creamy Layer) இட ஒதுக்கீடு கிடையாது. இரண்டு, இந்திய அரசிலோ மாநில அரசிலோ மொத்த இட ஒதுக்கீடு வரம்பு 50 விழுக்காட்டைத் தாண்டக்கூடாது. இயல்பற்ற சிறப்புச் சூழ்நிலை (Extraordinary circumstances) ஏற்பட்டால் அப்போது மட்டும் 50 விழுக்காட்டினர்க்கு மேல் ஒதுக்கீடு வழங்கலாம். 

இதே ஒன்பது நீதிபதிகள் ஆயம் முன்னேறிய வகுப்பாரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு நரசிம்மராவ் அரசு 10 விழுக்காடு அளித்தது செல்லாது என்று தீர்ப்பளித்தது. சமூகம் மற்றும் கல்வி இரண்டிலும் பின் தங்கியவர்களுக்கு மட்டுமே அரசமைப்புச் சட்டம் ஒதுக்கீடு வழங்க உரிமை அளித்துள்ளது, பொருளியலில் பின் தங்கியவர்களுக்கு இல்லை என்று கூறிவிட்டது. 

இப்பொழுது மராத்தா ஒதுக்கீட்டை நீக்கிட அசோக் பூசன் தலைமையிலான 5 நீதிபதிகள் ஆயம் ஒருமித்துக் கூறியுள்ள காரணம், மராட்டியத்தில் ஏற்கெனவே 52 விழுக்காடு ஒதுக்கீடு நடைமுறையில் உள்ள நிலையில், அதற்கும் மேலே முறையே 12%, 13% இட ஒதுக்கீடு கூடுதலாக்குவது மண்டல் வழக்கு (இந்திரா சகானி வழக்கு) தீர்ப்பிற்கு எதிரானது என்பதாகும். 

இரண்டாவது காரணம்
 
மோகன் பகவத் – மோடி அரசு 2018இல் இயற்றிய 102ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம்! 

இந்தத் திருத்தம் அரசமைப்புச் சட்ட உறுப்புகள் 338B, 342A, 366 (26c) ஆகிய புதிய பிரிவுகளை இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சேர்த்தது. ஏற்கெனவே 338இல் பட்டியல் வகுப்பார்க்கான ஆணையம் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றிக் கூறப்பட்டுள்ளது. 

102ஆவது திருத்தம், 338B என்ற புது உறுப்பை அரசமைப்புச் சட்டத்தில் சேர்த்து, அதில் 9 உட்பிரிவுகளை உருவாக்கியுள்ளது. இதன்படி “பின்தங்கிய வகுப்புகளுக்கான தேசிய ஆணையம்” என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 

இதன் 9ஆவது பிரிவு இந்திய அரசும், ஒவ்வொரு மாநில அரசும் சமூகம் மற்றும் கல்வி அடிப்படையில் பின்தங்கிய வகுப்பார்களுக்குரிய எல்லா முக்கியச் செய்திகள் குறித்தும் மேற்படி பின்தங்கிய வகுப்பு ஆணையத்துடன் கலந்து பேசி (அதன் ஒப்புதலுடன்) முடிவு செய்ய வேண்டும். 

அடுத்து அரசமைப்புச் சட்டத்தில் புதிதாக 342A என்ற உறுப்பை 102ஆவது திருத்தம் சேர்த்தது. இதில் இரு உட்பிரிவுகள் இருக்கின்றன. 

உட்பிரிவு (1), மாநில அரசுடன் கலந்து பேசி, குடியரசுத் தலைவர் அம்மாநிலத்திற்குரிய பின் தங்கிய வகுப்பு (சாதிகள்) பட்டியலை வெளியிடுவார் என்று கூறுகிறது. அப்பட்டியலில் உள்ளவர்களுக்கு மட்டுமே அரசமைப்புச் சட்டம் வழங்கும் உதவிகள் – உரிமைகள் கிடைக்கும். 

இதன் அடுத்த உட்பிரிவு (2) – நாடாளுமன்றம், தனது சட்டத்தின் மூலம் சமூகம் மற்றும் கல்வியில் பின்தங்கியோர் குறித்த நடுவண் பட்டியலில் இருந்து ஒரு பிரிவை (சாதியை) சேர்க்கலாம் அல்லது நீக்கலாம். 

மூன்றாவதாக அரசமைப்புச் சட்ட உறுப்பு 366இல் 26c என்ற பிரிவை சேர்த்தது. இதில் இந்த சட்டத்தின் பெயர் மற்றும் கூறப்படுகிறது.  

மராத்தா இட ஒதுக்கீடு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஐவரில் எஸ். இரவீந்திர பட், “குடியரசுத் தலைவர் (அதாவது நடுவண் அரசு) மட்டுமே பின்தங்கிய வகுப்புப் பட்டியலில் எந்தெந்த சாதியினரைச் சேர்க்கலாம் என்று முடிவு செய்ய முடியும் என்று அரசமைப்புச் சட்ட உறுப்பு 342A (1) கூறுகிறது. இப்பட்டியலே எல்லா மாநில அரசுக்கும் உரியது; ஒன்றியப் பிரதேசங்களுக்கும் உரியது. இந்தப் பட்டியலில் உள்ளோர்க்கு மட்டுமே அரசமைப்புச் சட்டம் வழங்கும் பின்தங்கியோர்க்கான சிறப்புரிமைகள் பொருந்தும். எனவே மராட்டியத்தில் மராத்தா வகுப்பினர் பின்தங்கிய பிரிவினர் என்று நடுவண் அரசுப் பட்டியலில் இல்லாததால் – மராத்தாக்களை – பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் அம்மாநில அரசு அறிவித்தது செல்லாது” என்று தமது தீர்ப்புரையில் கூறினார். 

நீதிபதி எஸ். இரவீந்திர பட் கூறிய மேற்படித் தீர்ப்புரையை நீதிபதி எல். நாகேசுவரராவ், நீதிபதி ஹேமந்த் குப்தா இருவரும் ஏற்றுக் கொண்டனர். 

ஆனால் நீதிபதி இரவீந்திரபட் கூற்றை, நீதிபதி அசோக் பூசனும் நீதிபதி எஸ். அப்துல் நசீரும் ஏற்காமல், மாநில அரசு தனது பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை வெளியிட, செயல்படுத்த உரிமை உண்டு என்று தீர்ப்பில் எழுதினர். ஆனால் ஐந்து நீதிபதிகளில் இந்த இருவர் கூற்று – தீர்ப்பாகாமல் மேற்படி மூவர் கூற்று தீர்ப்பானது. 

இவ்வழக்கில் வாதிட்ட இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்) கே.கே. வேணுகோபால் – மாநில அரசு தனது சொந்த பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை முடிவு செய்ய அதிகாரம் உண்டு என்று கூறினார். ஆனால், அதனை நீதிபதி இரவீந்திரபட்டும் மற்ற இருவரும் ஏற்கவில்லை. 

தீர்வு என்ன?
 
இந்திய அரசமைப்புச் சட்டம் உருவான காலத்திலிருந்தே, பிற்படுத்தப்பட்டோர்க்கான இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்தாளர்கள் அரசமைப்புச் சட்ட அவையிலும் அதன் பிறகு நாடாளுமன்றத்திலும் முனைப்பாகச் செயல்பட்டுள்ளனர். 

பிற்படுத்தப்பட்ட பெருந்தொகை வெகுமக்களைத் தொடர்ந்து பின்தங்கிய நிலையிலேயே கட்டுப்படுத்தியும், பிரித்தும் வைத்திருந்தால் தான் ஆரியப் பிராமணர்களும் ஆரிய வைசியர்களும் தங்களுடைய மேலாதிக்கத்தை சனநாயகக் காலத்திலும் நீட்டித்துக் கொள்ளலாம் என்பது அவர்களின் போர் உத்தி! நீதித்துறை எப்பொழுதுமே அவர்கள் ஆதிக்கத்தின் கீழ்தான் இருக்கிறது. 

அதிலும் வகுப்புவாரி இடஒதுக்கீடு இல்லாத உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் அவர்கள் – அதிலும் குறிப்பாகப் பிராமணர்களின் ஆதிக்கத்தின் கீழ்தான் தொடர்கின்றன. ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திரு. அரிபரந்தாமன் அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் இப்போது பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து ஒருவர் கூட நீதிபதியாக இல்லை என்று வேதனையுடன் குறிப்பிடுகிறார். 

உச்ச நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 34. இதில் இப்பொழுது 27 பேர்தாம் பணியாற்றுகிறார்கள். ஏழு இடங்கள் காலியாக உள்ளன. 27 பேரில் ஒருவர் கூட பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் இல்லை! 

ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே அங்கு நீதிபதியாக உள்ளார். அதுவும் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து ஒருவர் கூட நீதிபதியாக இல்லாத பின்னணியில் இப்பொழுது ஒருவர் உள்ளார். 

உயர் நீதிமன்ற – உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும், வகுப்பவாரி இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும். தகுதியான சட்ட வல்லுநர்கள் பிற்படுத்தப்பட்ட – பட்டியல் வகுப்பு – பழங்குடி மக்களிடையே இருக்கிறார்கள். 

மராத்தா இட ஒதுக்கீடு வழக்கையே எடுத்துக் கொள்வோம். மராட்டிய உயர் நீதிமன்றம் மராத்தா மக்களுக்கான இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. அந்த உயர் நீதிமன்ற நீதிபதிகளும் இந்திய அரசமைப்புச் சட்டத்தையும், மற்ற சட்டங்களையும் நன்கு கற்றவர்கள்தானே! 

மராத்தியச் சமூகச் சூழல் – அரசியல் சூழல் போன்றவை அம்மாநில உயர் நீதிமன்ற நீதிபதிகளிடம் செல்வாக்குச் செலுத்துகிறது. எங்கோ தில்லியில் இருப்பவர்களுக்குத் தாங்கள் பிறந்த குடும்பம் – பின்னணி முதலியவற்றின் உளவியலே கோலோச்சுகிறது. 

பட்டியல் வகுப்பில் எந்தெந்த சாதிகளைச் சேர்க்கலாம் என்பதை இந்திய அரசு மட்டுமே முடிவு செய்யும் என்று ஏற்கெனவே உள்ள அரசமைப்பு உறுப்பு 342ஐ நீக்க வேண்டும்; மாநில அரசுக்கு இதில் அதிகாரம் வேண்டும். பிற்படுத்தப்பட்டோர்க்காகப் புதிதாகச் சேர்க்கப்பட்ட 342Aயையும் நீக்க வேண்டும்; மாநில அரசுகளுக்கு இப்பட்டியல்கள் தயாரிப்பில் முழு உரிமை வேண்டும்; ஏனெனில் மக்கள் இருப்பது மாநிலங்களில் மட்டுமே; இந்திய அரசுக்கென்று தனியே மக்களோ, மக்களினமோ கிடையாது. இவ்வாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்புச் சொல்லியிருந்தால் சனநாயக வளர்ச்சிக்கும், சமூகநீதிக்கும் உரிய நீதியாக அமைந்திருக்கும். 

மாநில மண்ணோடு ஒட்டாமல், ஏகஇந்திய மையமே தங்களின் ஒரே தாயகம் என்று கருதிக் கொள்வோரால், இந்தியாவின் – பல தாயக உணர்வுகளை – பல தாயக உரிமைகளைப் புரிந்து கொள்ள முடியாது. 

பல கட்டுரைகளில் நாம் குறிப்பிட்டு வந்துள்ளோம் – இந்தியாவின் இனப்பன்மை – சமூகப்பன்மை பா.ச.க.வுக்குள்ளேயே பிளவுகளை ஏற்படுத்துகிறது. மராட்டிய பா.ச.க. ஆட்சிதான் மண்ணின் மக்களான – வேளாண்மை வீழ்ச்சியால் வாழ்விழந்து தவிக்கும் மராத்தாக்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்கியது. அதே பா.ச.க. இந்திய ஆட்சியில் இருந்து கொண்டு, பிற்படுத்தப்பட்ட சாதிகளை அடையாளம் கண்டு பட்டியலிடும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்று அதே 2018-இல் அரசமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. இப்பொழுதும் மராட்டியத்தில் – பா.ச.க.வினர்க்கிடையே முரண்பாடு எழும். 

அரசமைப்புச் சட்டப்படி பின்தங்கிய வகுப்பார்க்கு ஒதுக்கீடு வழங்குவது பற்றி அறிக்கை தருவதற்காக மண்டல் ஆணையம் நிறுவப்பட்டது. அதன் பரிந்துரையை ஏற்று 27 விழுக்காடு இந்திய அரசு வழங்கியது. அதை எதிர்த்த வழக்கில், மொத்த இட ஒதுக்கீடு 50 விழுக்காட்டு வரம்புக்குள் இருக்க வேண்டும் என்று நீதிபதி வெங்கடாச்சலையா ஆயம் 1992இல் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்புரைக்க வேண்டிய தேவை என்ன? அந்த 50 விழுக்காடு வரம்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதி இரத்தினவேல் பாண்டியன் தனக்கு உடன்பாடில்லை என்று அத்தீர்ப்புரையில்  எதிர்ப்புக் கருத்தைப் பதிவு செய்தார். 

அவ்வழக்கு நடுவண் அரசு ஒதுக்கீடு சார்ந்தது. மாநில அரசுகள் 50 விழுக்காட்டிற்கு மேல் இ்ட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று நீதிபதிகள் சினந்து சீற வேண்டிய தேவை என்ன? பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு கூடாது – அவர்கள் தங்களுக்குச் சமமாக வளர்ந்துவிடக் கூடாது என்ற மேட்டிமை உளவியல்தானே! 

மராத்தா வழக்கில் பெரும்பான்மைத் தீர்ப்பெழுதிய இரவீந்திரநாத் பட், “பின்தங்கியோர் பட்டியல் எடுப்பதில் மாநில அரசின் கருத்துகளை நடுவண் அரசு கேட்கலாம்; கேட்க வேண்டும்; ஆனால் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் 338B-இன்படி நடுவண் அரசுக்கே உண்டு” என்று கூறுகிறார். மாநில அரசைக் கலந்து பேசுவது, ஒரு கண்துடைப்பே என்று மறைமுகமாக ஒப்புக் கொள்கிறார் நீதிபதி! 

முன்னேறிய வகுப்பார்க்கு – பொருளியலில் பின்தங்கியோர் என்று பெயர்ச் சூட்டிக் கொடுக்கப்படும் 10 விழுக்காட்டை எதிர்த்து ஒரு சொல்கூட அசோக் பூசனும், இரவீந்திரநாத் பட்டும் பேசவில்லை.! இந்தப் புதிய பத்து - ஐம்பது விழுக்காட்டைத் தாண்டுவது பற்றி ஏன் பேசவில்லை? காரணம் தெரிந்ததே! 

அடுத்து மாநிலக் கலைப்பா?
 
மாநிலங்களுக்கு காங்கிரசாட்சி விட்டு வைத்திருந்த சில உரிமைகளையும் அதிகாரங்களையும், அடுக்கடுக்காகப் பறித்து வருகிறது மோகன் பகவத் – மோடி ஆட்சி! வர்ணாசிரம ஆதிக்கத்திற்கு சிறுசிறு தடைக் கற்களைப் போடும் வகுப்புவாரி இடஒதுக்கீட்டை முற்றிலும் நீக்க வேண்டும் என்பதே பா.ச.க.வின் இலட்சியத் திட்டம்! 

அந்த நடவடிக்கையின் முதற்கட்ட வேலைதான், பிற்படுத்தப்பட்ட மக்களை அடையாளம் கண்டு, பட்டியலில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்கும் மாநில உரிமையைப் பறிக்கும் 102ஆவது அரசமைப்புச் சட்டத்திருத்தம்! இத்திருத்தம் 2018இல் பெரும் எதிர்ப்பின்றி நிறைவேறிவிட்டது. சமூகநீதி, சனநாயகம், வகுப்புரிமை ஆகியவற்றில் அக்கறையுள்ளோரின் விழிப்புணர்ச்சிக் குறைவின் வெளிப்பாடே இந்த அவலம்! நம்மை நாமே தன் திறனாய்வு செய்து கொள்ள வேண்டும். 

பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டைச் சிதைத்து, சின்னாப்பின்னப்படுத்திய பிறகு, பட்டியல் வகுப்பு, பழங்குடி மக்கள் ஆகியோரின் இடஒதுக்கீட்டையும் வெட்டிக் குறுக்கி, வெறும் பெயருக்கு ஏதோ ஒன்றை வைத்துக் கொள்வார்கள்! 

இப்போதுள்ள தேசிய இன – மொழித் தாயக அடிப்படையிலான மாநிலங்களைப் பிளந்து சிறுசிறு நிர்வாக மண்டலங்களாக மாற்ற வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க.வின் அடுத்த திட்டம்! 

தமிழ்நாட்டின் 69 விழுக்காடு என்னாகும்?

எங்கோ மராட்டியத்திற்கு வந்த தலைவலி என்று நினைக்கக் கூடாது. தமிழ்நாட்டிற்கு வரப்போகும் 69 விழுக்காடு ஒதுக்கீடு அழிப்புக்கான முன்னோடி மராத்தா உரிமை மறுப்பு என்று தமிழர்கள் உணர வேண்டும்! 

தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள், இந்திய அரசின் சமூகநீதிப் பறிப்பையும் மாநில உரிமைப் பறிப்பையும் தடுத்து, உரிமைகளை மீட்டிட மாற்றுத் திட்டங்களை முன்வைத்து இந்திய அரசிடம் வைத்து உரிமைக்குரல் எழுப்ப வேண்டும்.

தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளும் அனைத்து இயக்கங்களும், மக்களும் தற்காப்பு நோக்கில் பொது முழக்கம் எழுப்பி – வகுப்புரிமை காக்க வீதிக்கு வர வேண்டும்! 

1. இந்திய அரசே! 102ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை முறைப்படி இரத்துச் செய்! 

2. மராத்தா இடஒதுக்கீட்டை மறுத்த ஐந்து நீதிபதி ஆயத் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய - அதைவிட பெரிய பதினோரு நீதிபதிகளைக் கொண்ட ஆயம் அமைத்திடு! 

3. இந்திய அரசுத் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் கூறியதே தமது அரசின் கருத்து, மராத்தா இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்கிட மாற்று ஏற்பாடு செய்வோம் என்று தலைமை அமைச்சர் நரேந்திர மோடி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். 


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 


Tuesday, May 4, 2021

“தமிழ்ச்செம்மல்” இளவழகனார் மறைவு பேரிழப்பு! பெ. மணியரசன் இரங்கல்!



“தமிழ்ச்செம்மல்” 
இளவழகனார் மறைவு பேரிழப்பு!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
பெ. மணியரசன் இரங்கல்!


“தமிழ்மண்” பதிப்பக உரிமையாளர் – “தமிழ்ச்செம்மல்” கோ. இளவழகன் அவர்கள் இன்று (04.05.2021) விடியற்காலை சென்னை மருத்துவமனையில் காலமான செய்தி, திடுக்கிடச் செய்தது. 

அண்மைக்காலமாக தமிழ் மொழி – இனம் – தாயகம் ஆகியவற்றின் உரிமைகளுக்காக அறிவுத் துறையிலும், போராட்டக் களத்திலும் களமாடி வந்த ஆளுமைகள் அடுத்தடுத்துக் காலமாவது பெரும் துயரமளிக்கிறது. 

கோ. இளவழகன் அவர்கள், மாணவப் பருவத்திலேயே இன உணர்ச்சியும் மொழி உணர்ச்சியும் கொண்டு, 1965 – இந்தி எதிர்ப்புப் போரில் கலந்து கொண்டு, சிறையில் அடைக்கப்பட்டவர். தமிழ் மொழி – இனம் ஆகியவற்றை சீரழித்த ஆரியத்தையும், சமற்கிருதத்தையும் எதிர்க்கும் உணர்வினை இளமையிலேயே பெற்றவர்.

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் “தென்மொழி” அன்பராகி, பாவாணரின் பற்றாளராகி, ஒரத்தநாட்டில் “உலகத் தமிழ்க் கழகத்தை” நிறுவியவர்களில் முகாமையானவர் கோ. இளவழகன். தேவநேயப் பாவாணர் மன்றம் தொடங்கிச் செயல்பட்டார். இறுதிவரை தனித் தமிழில் பேசுவதை, எழுதுவதை தமது பண்பாகக் கொண்டிருந்தார். 

அவர் நிறுவி நடத்திவந்த “தமிழ்மண்” பதிப்பகம், பழந்தமிழ் நூல்களையும், சமகாலத் தமிழறிஞர்களின் நூல்களையும் தொடர்ந்து வெளியிட்டு வந்தது. அவற்றில் குறிப்பிடத்தக்கவை “சங்க இலக்கியக் களஞ்சியம்” (22 தொகுப்புகள்), பாவவேந்தர் படைப்புத் தொகுப்புகள் (25 தொகுப்புகள்), நா.மு.வே. நாட்டார் தமிழ் உரைகள் (32 நூல்கள்), பாவாணர் தமிழ்க் களஞ்சியம் (53 நூல்கள்), நாவலர் சோமசுந்தர பாரதியார் நற்றமிழ் ஆய்வுகள் (10 நூல்கள்), தொல்காப்பிய பழைய உரைகள் (19 நூல்கள் - பதிப்பாசிரியர் : “இலக்கணக்கடல்” கோபாலய்யர்), அண்ணாவின் படைப்புத் தொகுப்புகள்... இவை போல் இன்னும் பல அரிய நூல்களுக்கு மறு உருவாக்கம் தந்தார். 

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குப் பேருதவியாக விளங்கியவர். தமிழீழ விடுதலைப் புலிகளை முழுக்க முழுக்க ஆதரித்து, அதனால் பல இன்னல்களையும் ஏற்றவர். தமிழ்நாட்டு உரிமைகள், தமிழ்மொழி உரிமைகள், தமிழ்வழிக் கல்வி ஆகியவற்றிற்கான செயல்பாடுகளிலும் பங்கேற்றவர். தமிழ்த்தேசிய உணர்வாளர்களுக்கு பெரும் ஊக்கமளித்தவர். 

தமிழ்த்தேசியப் பேரியக்கத்துடன் நட்பு பாராட்டி, சென்னை புத்தகக்காட்சியில் “தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” விற்பனை அரங்கம் முதன்முதலாகக் கிடைக்கத் துணை நின்றார். “தமிழ்த்தேசியம் – அரசியல், அறம், அமைப்பு” என்ற தலைப்பில் நான் எழுதிய நூலை வெளியிட்டு சிறப்பித்தார். 

தென்னிந்தியப் புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர் சங்கத்தில் (பபாசி - BAPASI) பொறுப்பு வகித்து, அதன் வளர்ச்சிக்கும், ஆண்டுதோறும் சென்னை புத்தகக்காட்சி நடைபெறவும் பெருந்துணையாய் நின்றார். அரசு நூலகங்களுக்கு நூல்களைத் தாராளமாக வாங்கி, பதிப்பகங்களை ஊக்குவிக்க அமைச்சர்களுடன் பேசி பணியாற்றினார். 

இளமை முதல் இறுதிவரை தமிழ்மொழிக்கும், தமிழினத்திற்கும் உழைத்த இளவழகனார் மறைவு, பெரும் துயரம் அளிக்கிறது! தமிழ் இன உணர்வுப் போராளி இளவழகனார்க்கு வீரவணக்கம்! அவருடைய இல்லத்தார்க்கும், நண்பர்களுக்கும், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT