உடனடிச்செய்திகள்
Showing posts with label பெ. மணியரசன் தாயகப் பாதுகாப்பு!. Show all posts
Showing posts with label பெ. மணியரசன் தாயகப் பாதுகாப்பு!. Show all posts

Thursday, July 9, 2020

ஊர்ப் பெயர்களைத் தமிழில் உள்ளது போல் ஆங்கிலத்திலும் மாற்றுவதை தமிழ்நாடு அரசு நிரந்தரமாகக் கிடப்பில் போட்டு விட்டதா? பெ. மணியரசன் கேள்வி!


ஊர்ப் பெயர்களைத் தமிழில் உள்ளது போல்
ஆங்கிலத்திலும் மாற்றுவதை தமிழ்நாடு அரசு
நிரந்தரமாகக் கிடப்பில் போட்டு விட்டதா?


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் கேள்வி!


ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள் நம் தமிழ்நாட்டைக் கைப்பற்றியபோது, ஆதிக்கச் செருக்குடன் தமிழில் உள்ள ஊர்ப் பெயர்களை சிதைத்து, மனம்போன போக்கில் மாற்றி ஒலித்தார்கள். திருவல்லிக்கேணியை “ட்ரிப்ளிக்கேன்” (TRIPLICANE) என்றும், தூத்துக்குடியை “தூத்துக்கொரின்” (TUTICORIN) என்றும் மாற்றினார்கள். அவ்வாறே ஆங்கிலத்தில் எழுதினார்கள்.

ஆங்கிலேய ஆதிக்கவாதிகள் உருவாக்கிய இந்தச் சீரழிவுகளைப் போக்கிட, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊர்ப்பெயர்களை தம்தம் தாய்மொழிகளில் உள்ளபடியே ஆங்கிலத்தில் எழுத வேண்டும், பேச வேண்டும் என ஆணைபோட்டுச் செயல்படுத்தியுள்ளார்கள். எடுத்துக் காட்டாக, கர்நாடகத்தில் ஆங்கிலயர் சிதைத்த பிஜப்பூர், குல்பர்கா, பெல்காம் முதலிய ஊர்களின் பெயர்களை முறையே பிஜப்புரா, கலபுர்க்கா, பெலகாம் என்று ஆங்கிலத்திலும் எழுத வேண்டும் என அம்மாநில அரசு 2014 நவம்பர் 1-இல் ஆணையிட்டது.

ஆனால், “திராவிட இன” அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டு தி.மு.க. – அ.இ.அ.தி.மு.க. ஆட்சிகள் தமிழ் மரபுப்படியான மாற்றங்களை ஊர்ப்பெயர்களுக்குச் செய்யவில்லை. எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, அப்போதைய அமைச்சர் எஸ்.டி.எஸ். முயற்சியின் பயனாய், மயூரம் – மயிலாடுதுறை என மாற்றப்பட்டது. அத்தோடு நின்று போனது. கலைஞர் கருணாநிதி ஆட்சியில் மெட்ராஸ் – “சென்னை” என மாற்றப்பட்டதோடு நின்று போனது. அதுவும், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை உயர் நீதிமன்றம் முதலியவற்றுக்குப் பொருந்தாது, அவற்றின் பெயரில் “மெட்ராஸ்” தொடர்கிறது.

தமிழ்நாட்டின் ஊர்ப் பெயர்களை தமிழ் ஒலிப்பிற்கு ஏற்ப ஆங்கிலத்திலும் எழுத வேண்டும் என்று ஆணையிடப்படும் என்ற அறிவிப்பை 2018 – 2019 நிதிநிலை அறிக்கை – மானியக் கோரிக்கையில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க. பாண்டியராசன் சட்டப்பேரவையில் அறிவித்தார். இப்பணிக்காக 5 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்றும் அறிவித்தார்.

மாவட்ட ஆட்சியர்கள் வழியாக, தமிழ் முறைப்படி மாற்றம் செய்ய வேண்டிய ஊர்ப் பட்டியல்களைப் பெற்று, தமிழ்நாடு அரசு அதனை 01.04.2020 அன்று அரசிதழில் வெளியிட்டது. அவ்வாறு தமிழ்வழியில் மாற்றம் செய்யப்பட வேண்டிய ஊர்கள் 1018. எடுத்துக்காட்டாக, எக்மோர் என்பது எழும்பூர் என்றும், சின்ஞ்ஜி என்பது செஞ்சி என்றும் ஆங்கிலத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.
ஆனால், அப்பட்டியலில் சில ஊர்ப் பெயர்கள் தமிழ் எழுத்துகளுக்கு ஏற்ப சரியான ஆங்கில எழுத்துகளில் மாற்றப்படவில்லை என்றும், அதைச் சரி செய்து இரண்டு – மூன்று நாட்களில் சரியான புதுப்பட்டியலை வெளியிடுவோம் என்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராசன் 18.06.2020 அன்று அறிவித்தார்.

எடுத்துக்காட்டாக, வேலூர் என்பது VEELOOR (வீலூர்) என்று மாற்றப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற தவறுகள் மிகமிகச் சில மட்டுமே! இவற்றிற்கு மட்டும் தனியே ஒரு திருத்தம் வெளியிட ஏற்பாடு செய்துவிட்டு, சரியாக உள்ள மிகப்பெரும்பான்மையான பெயர்களை அரசு ஆணையாக வெளியிட்டிருக்கலாம்.

ஆனால், தமிழ்நாடு அரசின் நோக்கம் வேறொன்றாக இருந்திருக்கிறது. சமற்கிருதத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்ட தமிழ் ஊர்ப் பெயர்களையும் தமிழுக்கு மாற்றுங்கள் என்ற கோரிக்கை இதே காலத்தில் ஆட்சியாளர்களை நோக்கி தமிழ் உணர்வாளர்களால் எழுப்பப்பட்டது.

எடுத்துக்காட்டாக, வேதாரணியம் என்பதை மரைக்காடு என்றும், விருத்தாச்சலம் என்பதை முதுகுன்றம் என்றும் பழைய நிலைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. ஆரியத்தின் அடிமடியில் கைவைக்கிறார்களே என்று கலங்கிப் போனவர்கள், ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து தமிழ் ஒலிப்புப்படி ஆங்கிலத்திலும் எழுத வேண்டுமென்ற திட்டத்தைக் கிடப்பில் போடச் செய்துவிட்டார்கள் என்று ஐயப்படுகிறோம்.

20.06.2020 அன்று இக்கருத்தை நான் காணொலி உரையில் கூறியிருந்தேன். அதுதான் உண்மை என்பதுபோல் ஆட்சியாளர்களின் நடைமுறை உள்ளது.

இரண்டு – மூன்று நாட்களில் சரி செய்து இப்பட்டியலை வெளியிடுவோம் என்று 18.06.2020 அன்று உறுதியளித்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராசன், அதுபற்றி எதுவும் பேசாமல் இருப்பதன் நோக்கம் என்ன?

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று 2015 திசம்பரில் தீர்ப்பளித்தும், அதைச் செயல்படுத்த முன்வரவில்லை அ.இ.அ.தி.மு.க. ஆட்சி! அதைச் செயல்படுத்துமாறு, தி.மு.க. போராடவில்லை! இப்பொழுது, சமற்கிருதத்தில் மாற்றப்பட்ட ஊர்களின் பெயர்களையும் தமிழில் மாற்றி ஆணையிட வேண்டுமென்ற கோரிக்கை வந்தவுடன் ஆங்கிலத்தில் செய்யவிருந்த திருத்தத்தை அ.இ.அ.தி.மு.க. அரசு, நிரந்தரமாகக் கைவிட்டு விட்டதோ என்று கருத வேண்டியுள்ளது.

தமிழில் உள்ளதுபோலவே ஆங்கிலத்திலும் மாற்றியமைக்கப்பட்ட ஊர்களின் பெயர்ப் பட்டியலை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட்டு செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இல்லையேல், தமிழ் உணர்வு அமைப்புகளையும், உணர்வாளர்களையும் ஒருங்கிணைத்து தமிழ்த்தேசியப் பேரியக்கம் இதற்கான போராட்டங்களை முன்னெடுக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Wednesday, June 17, 2020

தமிழ்நாடு அரசின் தனியார் வேலைவாய்ப்பு இணையத்தை வரவேற்கிறோம்! தனி வாரியம் கோருகிறோம்! பெ. மணியரசன் அறிக்கை!


தமிழ்நாடு அரசின் தனியார் வேலைவாய்ப்பு
இணையத்தை வரவேற்கிறோம்!
தனி வாரியம் கோருகிறோம்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் அறிக்கை!


தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர்கள் வெள்ளம்போல் புகுந்து தனியார் துறைகளிலும், இந்திய அரசுத் துறைகளிலும் வேலைகளைக் கைப்பற்றியதால், மண்ணின் மக்களுக்கு பெருமளவில் வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்பட்டது. தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே என்ற கோரிக்கையை வைத்து, தமிழ்த்தேசியப் பேரியக்கம் பல ஆண்டுகளாகப் பேராடி வருகிறது. கொரோனா காலத்தில், வெளி மாநிலத் தொழிலாளிகள் அவரவர் தாயகத்திற்குச் செல்ல விரும்பி, பலர் போய்விட்டார்கள்.

இந்நிலையில், மீண்டும் வெளி மாநிலத் தொழிலாளிகளை தமிழ்நாட்டு வேலைகளுக்கு அழைக்கக் கூடாதென்றும், தமிழர்களையே தனியார் துறை வேலைகளில் சேர்க்க வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை வைத்திருந்தோம். கடந்த 16.05.2020 அன்று, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு இதுகுறித்த கோரிக்கை மனுவை இணையம் வழியே அனுப்பியிருந்தோம்.

இன்று (17.06.2020) தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தனியார் வேலை வாய்ப்பு இணையத்தைத் (https://www.tnprivatejobs.tn.gov.in/) தொடங்கி வைத்திருக்கிறார்கள். அதில், தொழிலாளிகள் தேவைப்படும் நிறுவனங்களும் வேலை கோருவோரும் பதிவு செய்து கொண்டால், அவரவர்க்குத் தேவையான தொழிலாளிகளையும், வேலைகளையும் பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.

இத்திட்டத்தைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் முழு மனதுடன் வரவேற்கிறது! அதேவேளை, இந்த இணையதளத்தில் தமிழ்நாட்டு மக்கள் மட்டுமே பதிவு செய்யலாம் என்று நிபந்தனை விதிக்க வேண்டும்.

அடுத்து, கடந்த 16.05.2020 அன்று முதலமைச்சருக்கு நாங்கள் அனுப்பிய மனுவில், “அமைப்பு சாராத் தொழிலாளர் வேலை வழங்கு வாரியம்” என்ற அமைப்பை தமிழ்நாடு அரசு உருவாக்கி, அதில் வேலை கோருவோரை பதிவு செய்ய வைக்க வேண்டும். திறன் பெற்ற / தொழில் பயற்சி பெற்ற மற்றும் உடலுழைப்புத் தொழிலாளிகளைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அந்தப் பட்டியலிலிருந்து நிறுவனங்கள் கோரக்கூடிய தொழிலாளிகளை இந்த வாரியம் அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறியிருந்தோம்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இவ்வாறு வாரியம் அமைத்தால், அவருடைய முயற்சி முழுமை பெற வாய்ப்புண்டு. தமிழ்நாட்டு மக்களுக்கும் தொழில் முனைவோருக்கும் மிகவும் பயனளிக்கும். எனவே, இதுபோன்ற வாரியத்தை அமைக்குமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Friday, May 15, 2020

வெளிநாடுகளில் பணி செய்த தமிழர்களை அழைத்து வருவதில் இனப்பாகுபாடு காட்டக்கூடாது! தமிழ்நாடு முதல்வர் தலையிடக் கோரி. பெ. மணியரசன் அறிக்கை!


வெளிநாடுகளில் பணி செய்த
தமிழர்களை அழைத்து வருவதில்
இனப்பாகுபாடு காட்டக்கூடாது!

தமிழ்நாடு முதல்வர் தலையிடக் கோரி..

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் அறிக்கை!


பணிக்காக வெளிநாடுகளுக்குச் சென்ற இந்தியப் பணியாளர்களை அழைத்து வர சிறப்பு வானூர்திகளை இந்திய அரசு ஏற்பாடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் இதில், தமிழர்களுக்கு எதிராக இனப்பாகுபாடு காட்டப்படுவதாக ஒரு செய்தி வருகிறது.

குறிப்பாக, வளைகுடா நாடுகளில் மலையாளிகள் அதிகமாக இருக்கிறார்கள். அந்நாடுகளின் தூதரகங்களில் மலையாள அதிகாரிகள் இருக்கிறார்கள். மலையாளிகளுக்கு அடுத்த எண்ணிக்கையில், அந்நாடுகளில் தமிழர்கள் இருக்கிறார்கள். தமிழர்கள் தமிழ்நாடு திரும்பி வர பதிவு செய்துவிட்டு பல்லாயிரக்கணக்கில் காத்துக் கிடக்கிறார்கள். அவர்கள் தமிழ்நாடு வருவதற்கு ஒரு வானூர்தி கூட ஒதுக்கப்படவில்லை என்று அங்கே சிக்கியுள்ள தமிழர்கள் தொலைப்பேசிகளில் தமிழ்நாட்டில் பல்வேறு தலைவர்களுக்கும் பேசுகிறார்கள். எனக்கும் பேசியிருக்கிறார்கள்.

முதல்கட்டமாக ஒதுக்கப்பட்ட 149 வானூர்திகளிலும், இரண்டாம் கட்டமாக ஒதுக்கப்பட்ட 176 வானூர்திகளிலும் ஒன்றுகூட தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்படாதது, தமிழர்களுக்கு எதிரான இந்திய அரசின் இனப்பாகுபாட்டையே காட்டுகிறது.

குவைத் போன்ற பல நாடுகளில் முறையான அனுமதியின்றி வேலை பார்த்ததாக நடவடிக்கைக்கு உட்பட்ட தமிழர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கி, அவர்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்ப அந்நாடுகள் தயாராக உள்ள நிலையில், இந்திய அரசு அவர்களை அழைத்து வர உரிய ஏற்பாடுகளைச் செய்யவில்லை! அதுபோல், மாலத்தீவு போன்ற நாடுகளில் இந்தியா திரும்ப பதிவு செய்துவிட்டு ஏராளமான தமிழர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

உலகத்தின் எந்த நாட்டில் இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி சிக்கிக் கொண்டிருந்தாலும், அவர்கள் அனைவரையும் இனப்பாகுபாடு காட்டாமல் அழைத்து வர வேண்டியது இந்திய அரசின் பொறுப்பு! இந்தியாவுக்கு அழைத்து வருவதில் இனப்பாகுபாடு காட்டுவதாக எழுந்துள்ள புகார் குறித்து, தமிழ்நாடு அரசு உரியவாறு விசாரித்து அவர்களுக்கும் நீதி வழங்கி, அவர்கள் அனைவரையும் தமிழ்நாட்டுக்கு அழைத்து வர இந்திய அரசிடம் வலியுறுத்தி, அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


Tuesday, May 12, 2020

புலம்பெயர் தொழிலாளர்கள் போகட்டும் “மண்ணின் மக்கள் வேலை வழங்கு வாரியம்” அமைத்திடுக! முதலமைச்சருக்கு வேண்டுகோள்! பெ. மணியரசன் அறிக்கை!


புலம்பெயர் தொழிலாளர்கள் போகட்டும்
“மண்ணின் மக்கள் வேலை
வழங்கு வாரியம்” அமைத்திடுக!
முதலமைச்சருக்கு வேண்டுகோள்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் அறிக்கை!


கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் புலம் பெயர் தொழிலாளர்கள் தங்களின் தாய் மண்ணில் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று விரும்புவது தற்காப்பு உணர்வு சார்ந்த உளவியல் உந்துதல் ஆகும். எனவே, வெளி மாநிலங்களில் பணிபுரிந்த தமிழ்நாட்டுத் தொழிலாளிகள் அனைவரையும் தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவதும், தமிழ்நாட்டில் சிக்கிக் கொண்டுள்ள வெளி மாநிலத் தொழிலாளர்கள் அனைவரையும் அவரவர் தாயகப் பகுதிக்கு அனுப்பி வைப்பதும் இந்திய மற்றும் தமிழ்நாடு அரசுகளின் கட்டாயக் கடமையாகும்.
இவ்வாறு தமிழ்நாட்டிலிருந்து புலம் பெயர் தொழிலாளிகள் போய் விட்டால், இங்கு திறக்கப்படவுள்ள சிறு – குறு – நடுத்தரத் தொழிற்சாலைகளுக்கும், பெருந்தொழிற் சாலைகளுக்கும் தேவையான தொழிலாளிகளுக்கு என்ன செய்வது என்ற கேள்வி எழும்.
தமிழ்நாட்டில் மண்ணின் மக்களின் மனித வளம் அதிகம். இப்போது வெளி மாநிலங்களிலிருந்து வந்து சேரும் தமிழ்த் தொழிலாளிகளும் இந்த மனித வளத்தில் கூடுதலாகச் சேர்ந்து கொள்வார்கள். ஏற்கெனவே தமிழ்நாட்டுத் தொழில் நிறுவனங்களால் புறக்கணிக்கப்பட்ட தமிழ்நாட்டுத் தொழிலாளிகள் பல இலட்சம் பேர் வேலையின்றி இருக்கிறார்கள். வேலைக்குப் போகாமல் சோம்பேறிகளாய்த் திரிந்தவர்களும் இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டு மக்களுக்குரிய “தமிழ்நாடு அமைப்பு சாராத் தொழிலாளர் வேலை வாய்ப்பு வாரியம்” ஒன்றைப் புதிதாகத் தொடங்கி மேலே சொல்லப்பட்ட ஆண் – பெண் தொழிலாளிகள் அனைவரையும் பதிவு செய்து கொள்ள வேண்டும். பல துறை வேலை வாய்ப்பிற்குரிய கல்வித் திறன் பெற்றவர்களும் உடல் உழைப்பாளிகளும், கட்டுமானத் தொழிலாளிகள் உள்பட அனைவரும் இந்த வாரியத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
எல்லாத் தொழில் நிறுவனங்களும் இந்த வாரியத்திலிருந்து தங்களுக்குத் தேவையான தொழிலாளிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சட்டமியற்ற வேண்டும். தொழில் நிறுவனங்களுக்குத் தமிழ்நாட்டிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் தொழிலாளிகளை அழைத்து வரும் பணவேட்டைத் தரகர்களுக்குத் தடை விதிக்க வேண்டும்.
இந்தத் தொழிலாளிகளுக்கு வேலை நேரம், வேலைக்கேற்ற ஊதியம் அனைத்தையும் வரையறுத்துக் கொள்ள வேண்டும்.
தொழில் நிறுவனங்கள் செயல்படத் தொடங்கும்போது, தொழிலாளி கிடைக்கவில்லை என்ற சிக்கல் ஏற்படாது. வெளி மாநிலத் தொழிலாளிகளைக் கட்டாயப்படுத்தித் தங்க வைக்கும் உரிமை மீறல் தேவை இல்லை.

மிகக் குறைந்த கூலிக்காகவும், மிகை நேர வேலைக்காகவும் தமிழ்நாட்டு குடிமக்களைப் புறக்கணித்துவிட்டு, வெளி மாநிலத் தொழிலாளிகளை வேலைக்குச் சேர்க்கும் அவலமும் இடம் பெறாது. தமிழ்நாட்டில் தனியார் துறையில் 10 விழுக்காட்டிற்கு மேல் வெளி மாநிலத்தவர் வேலை செய்யக்கூடாது என்று சட்ட ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வேண்டுகோளைத் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பரிசீலித்து செயல்படுத்துமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Thursday, February 13, 2020

முதலமைச்சர் தொடங்கி வைத்த டயர் தொழிற்சாலையில் தமிழர்களுக்கு எத்தனை சதவீதம் வேலை கிடைத்தது? பெ. மணியரசன் அறிக்கை!


முதலமைச்சர் தொடங்கி வைத்த டயர்
தொழிற்சாலையில் தமிழர்களுக்கு
எத்தனை சதவீதம் வேலை கிடைத்தது?

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்

பெ. மணியரசன் அறிக்கை!


திருப்பெரும்புதூர் அருகே சியட் டயர் தொழிற்சாலையைத் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 12.02.2020 அன்று தொடங்கி வைத்துப் பேசும் போது, ஆசியாவிலேயே வெளிநாட்டு முதலீடுகளை அதிகம் ஈர்க்கும் ஆற்றலாகத் தமிழ்நாடு விளங்குகிறது என்று பெருமைப்பட்டுக் கொண்டார்.

பொதுக்கல்வித் தகுதியும் தொழிற்கல்வித் தகுதியும் பெற்றவர்களில் உரிய வேலையில்லாமல் தவிப்போர் விகிதம் மிக அதிகமாக உள்ள மாநிலம் தமிழ்நாடாகத்தான் இருக்கிறது என்ற உண்மையையும் முதலமைச்சர் சேர்த்துப் பேசியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு உரிய வேலையில்லாமல் வறுமையில் வாடுவார் எண்ணிக்கை தமிழ்நாட்டில் ஒரு கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

பக்கத்து மாநிலமான ஆந்திரத்தில் 2019 சூன் மாதம், புதிதாக பொறுப்பேற் செகன் மோகன் ரெட்டி அரசு, தனியார் துறையில் தெலுங்கர்களுக்கு 75 விழுக்காடு வேலை தர வேண்டுமெனத் தனிச் சட்டம் இயற்றினார்.

இன்னொரு பக்கத்து மாநிலமான கர்நாடகத்தில் தனியார் துறையில் கன்னடர்களுக்கு 100 விழுக்காடு வேலை வழங்க வேண்டுமென கர்நாடக அரசு அமர்த்திய சரோஜினி மகிசி அம்மையார் குழு, 1988லேயே பரிந்துரை வழங்கியது. அதை செயல்படுத்த 1994லிருந்து கன்னட வளர்ச்சி ஆணையம் என்ற தனி அமைப்பு உருவாக்கப்பட்டது.

அதன்படி, கர்நாடகத்திலுள்ள பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் மண்ணின் மைந்தர்களான கன்னடர்களுக்கே பணி வாய்ப்பு வழங்க வேண்டுமென கர்நாடக அரசு அவ்வப்போது அறிவுறுத்தி வந்தது. 2019இல், காங்கிரசு முதலமைச்சர் சித்தராமையா தனியார் நிறுவனங்கள் கன்னடர்களுக்கே வேலை அளிக்க வேண்டுமென சட்ட விதிகளைத் திருத்தி வெளியிட்டார் (Karnataka Industrial Employment (Standing Orders), Rules, 1961).

இப்போது, இதை முறைப்படுத்தும் வகையில் தனியார் துறையில் கன்னடர்களுக்கு 75 விழுக்காடு கட்டாயம் வேலை வழங்க வேண்டுமென தனிச் சட்டம் இயற்றப்படவுள்ளதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இச்சூழலில், தனியார் துறையில் கன்னடர்களுக்கு வேலை தரவில்லை என்று கண்டித்தும், வேலை தரக் கோரியும் இன்று (13.02.2020) கர்நாடகம் முழுவதும் வெற்றிகரமாக முழு அடைப்பு நடக்கிறது.

ஆனால், தமிழ்நாட்டில் மண்ணின் மக்களாகிய தமிழர்களுக்குக் குறிப்பிட்ட விகிதம் வேலை தர வேண்டும் என்று நிபந்தனை விதிக்கும் சட்டமோ அல்லது அரசு ஆணையோ போடப்படவில்லை!

திருவள்ளூர் தொடங்கி திருநெல்வேலி வரை டயர் தொழிற்சாலைகள் இருப்பதாக முதலமைச்சர் அவ்விழாவில் பேசினார். இந்தத் தொழிற்சாலைகளில் தமிழர்கள் எத்தனை விழுக்காட்டினர் வேலை பார்க்கிறார்கள் என்ற கணக்கை முதலமைச்சர் எடுத்தாரா?

திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, திருப்பெரும்புதூர் வட்டாரங்களில் குவிந்துள்ள பெருந்தொழிற்சாலைகளில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களே மிக அதிக எண்ணிக்கையில் வேலை பார்க்கிறார்கள். இவற்றில் மொத்தத் தொழிலாளிகள் மற்றும் அலுவலர்களில் பெரும்பான்மையோர் வெளி மாநிலத்தவர்களே!

சியட் தொழிற்சாலையில் பணி புரிவோரில் 40 விழுக்காட்டினர் பெண்கள் என்ற கணக்கை மகிழ்ச்சியுடன் முதலமைச்சர் சொன்னார். புதிதாகத் தொடங்கப்படும் தனியார் தொழிற்சாலைகளில் 60 விழுக்காட்டு வேலைகள் தமிழ்நாட்டின் மண்ணின் மக்களுக்கு வழங்கிட நிபந்தனை விதிப்போம் என்று தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் சில மாதங்களுக்கு முன் கூறியிருந்தார். அந்த எண்ணிக்கையாவது சியட்டில் தமிழர்களுக்கு வழங்கப்பட்டது என்று முதலமைச்சர் பேச்சில் குறிப்பிட்டிருந்தால் இளைஞர்களுக்கு ஆறுதல் கிடைத்திருக்கும்.

மாநில அரசு, நடுவண் அரசு, தனியார் துறைப் பணிகளில் மண்ணின் மக்களுக்கு – முறையே 100 விழுக்காடு, 80 விழுக்காடு வழங்க வேண்டும் என்று கர்நாடகம், குசராத் மற்றும் பல மாநிலங்களில் சட்டங்களும் அரசு ஆணைகளும் இருக்கின்றன. அதுபோல் தமிழ்நாட்டிலும் சட்டமியற்றி செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9025162216, பகிரி : 7667077075

முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Monday, December 2, 2019

வெளி மாநிலத்தவரே திரும்பிப் போங்கள்! திசம்பர் 20 அன்று சென்னை நடுவண் தொடர்வண்டி நிலையம் முன் மனிதச் சுவர் போராட்டம்! பெ. மணியரசன் அறிவிப்பு!



வெளி மாநிலத்தவரே திரும்பிப் போங்கள்!

திசம்பர் 20 அன்று சென்னை

நடுவண் தொடர்வண்டி நிலையம் முன்
மனிதச் சுவர் போராட்டம்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் அறிவிப்பு!



தமிழ்நாட்டில் அன்றாடம் பல்லாயிரக்கணக்கானோர் வெளி மாநிலங்களிலிருந்து வந்து குவிகிறார்கள். உயர் தொழில்நுட்ப வேலையிலிருந்து, உடலுழைப்பு வரை எல்லா வேலைகளையும் அவர்கள் பறித்துக் கொள்கிறார்கள். அவர்கள் தமிழ்நாட்டிலே தங்கிக் குடும்பம் நடத்துகிறார்கள்.

இந்திய அரசு நிறுவனங்களான தொடர்வண்டித் துறை, எண்ணெய் எரிவளித் துறை, பி.எச்.இ.எல், நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம், அனல் மின் நிலையங்கள், படைக்கலத் தொழிற்சாலைகள், வருமான வரி – சரக்கு சேவை (ஜி.எஸ்.டி.) வரி, சுங்க வரி அலுவலகங்கள், வங்கிகள், அஞ்சல் துறை, கணக்குத் தணிக்கை அலுவலகங்கள், துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் 90 விழுக்காடு வேலை வெளி மாநிலத்தவர்களுக்கே வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு வேலைகளுக்கும் (TNPSC) இந்தியா முழுவதுமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியுள்ளது. தமிழ்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் மிகக் கொடிய நிலையில் உள்ளது. கல்வித் தகுதிக்குரிய வேலை கிடைக்காமல் மிகமிகக் குறைந்த கூலிக்கு வேலை பார்ப்போர் மிக அதிகம்! கல்வித்தகுதி பெற்று, வேலை தேடி, வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்போர் 90 இலட்சம் பேர்!

அண்மையில் கோவை மாநகராட்சித் துப்புரவுப் பணியாளர் வேலைக்கு பி.டெக்., பி.ஆர்க்., எம்.பி.ஏ., போன்ற பட்டம் பெற்றோர் பல்லாயிரக்கணக்கானோர் விண்ணப்பம் போட்டார்கள் என்ற செய்தி ஏடுகளில் வந்தது.

தமிழ்நாட்டு வேலைகளை வட இந்தியர்களும், பிற மாநிலத்தவரும் பறித்துக் கொண்டால், தமிழர்களின் கதி என்ன? வெளி மாநிலத்தவர் மக்கள் தொகை தமிழ்நாட்டில் வெள்ளம் போல் உயர்ந்து கொண்டே போனால், தமிழர் தாயகமாகத் தமிழ்நாடு மிஞ்சுமா என்ற கேள்விகள் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் கொழுந்து விட்டெரிகின்றன.

தமிழ்த்தேசியப் பேரியக்கம், பல ஆண்டுகளுக்கு முன் இந்த சிக்கலை முன்னுணர்ந்து 2005இல் ஈரோட்டில் “வெளியாரை வெளியேற்று” என்ற தலைப்பில் மாநாடு போட்டது. வெளியார் ஆக்கிரமிப்பால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளையும் அவர்களை வெளியேற்றுவதற்குரிய கோட்பாடுகளையும் வழிமுறைகளையும் கூறி, அம்மாநாட்டில் புத்தகமும் வெளியிட்டது.

தொடர்ந்து, சென்னை, திருச்சி, தஞ்சை, கோவை, குடந்தை, ஓசூர் எனப் பல இடங்களில் வெளியாரை வெளியேற்றக் கோரியும், மண்ணின் மக்களுக்கு மாநில அரசில் 100 விழுக்காடும், நடுவண் அரசுத் துறைகளில் 90 விழுக்காடும், தனியார் துறையில் 90 விழுக்காடும் வேலை ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைத்துப் போராடி வருகிறது.

இவ்வாண்டின் (2019) தொடக்கத்தில் தொடர்வண்டித்துறையில் சென்னை பெரம்பூர், திருச்சி பொன்மலை, கோவை போன்ற இடங்களில் பழகுநர் பணிக்கும், நிரந்தரப் பணிக்கும் வேலைக்கு ஆள் சேர்த்தபோது 90 விழுக்காடு இடங்கள் வடவர்க்கும், வெளி மாநிலத்தவர்க்கும் தரப்பட்டது. அந்த அநீதியைக் கண்டித்தும், 10 விழுக்காட்டுக்கு மேல் உள்ள வெளியாரை வெளியேற்ற வலியுறுத்தியும் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கு வழங்கக் கோரியும் கடந்த 03.05.2019 அன்று திருச்சி பொன்மலை தொடர்வண்டித்துறை தொழிற்சாலை வாயில் முன் தமிழ்த்தேசியப் பேரியக்கம் மறியல் போராட்டம் நடத்தியது. ஏராளமான இளைஞர்கள், அம்மறியலில் கலந்து கொண்டு கைதானார்கள்.

நமது போராட்டம் வீண்போகவில்லை! போராட்டம் நடைபெற்ற சில வாரங்கள் கழித்து 2019 மே 20 அன்று புதிதாக 510 பேரை வேலைக்கு எடுப்பதற்கான அறிவிப்பை சென்னை ஐ.பி.எப். தொழிற்சாலை வெளியிட்டபோது, அதில் தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்திருப்போருக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்படும் என்று அறிவித்தது.

இதன் அடுத்தகட்டமாக, இப்போது சென்னை, திருச்சி, கோவை தொடர்வண்டித்துறை தொழிற்சாலைகளில் பழகுநர் வேலைக்கு (Act Apprentice) தென்னகத் தொடர்வண்டித்துறை உள்ள தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலிருந்து மட்டுமே விண்ணப் பிக்கலாம் என்று 26.11.2019 நாளிட்ட புதிய அறிவிப்பை தென்னகத் தொடர் வண்டித்துறை வெளியிடடுள்ளது. நமது பேராட்டத்திற்குப் பலன் உண்டு என்பதற்கு இந்த மாற்றம் ஒரு அளவுகோல்!

தென்னகத் தொடர்வண்டித்துறையிலும் தமிழ்நாட்டில் உள்ள தொடர்வண்டிக் கோட்டங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தோர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தொடர்வண்டித்துறையை வலியுறுத்துகிறோம்! ஒருபடி முன்னேற்றம் என்ற வகையில் இந்த மாற்றத்தை வரவேற்கிறோம்!

வெளி மாநிலத்தவர்களே
திரும்பிப் போங்கள் – மனிதச் சுவர் போராட்டம்
---------------------------------------------------------------------------
தமிழ்நாட்டு வேலைகளுக்காக வெளி மாநிலங்களிலிருந்து வருவோரை, வந்த வழியே திரும்பிப் போங்கள் என்று வேண்டுகோள் வைக்கும் மனிதச்சுவர் போராட்டத்தை 20.12.2019 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை நடுவண் (சென்ட்ரல்) தொடர்வண்டி நிலையம் முன் தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்துகிறது. இப்போராட்டத்திற்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் தலைமை தாங்குகிறார்!

பெருந்திரளாகத் தமிழர்கள் இந்த மனிதச் சுவர் போராட்டத்தில் பங்கேற்று, தமிழர்களின் வாழ்வுரிமைகளையும் தாயக உரிமையையும் பாதுகாக்க முன்வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.



தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Monday, September 23, 2019

கீழமை நீதிபதிகள் பணிக்கு வெளி மாநிலத்தவரை அழைக்கும் அறிவிப்பை இரத்து செய்க! பெ. மணியரசன் அறிக்கை!


கீழமை நீதிபதிகள் பணிக்கு வெளி மாநிலத்தவரை

அழைக்கும் அறிவிப்பை இரத்து செய்க!
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்

தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

தமிழ்நாட்டில் 176 குடிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதிகளுக்கான தேர்வு விண்ணப்பம் கோரி தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 09.09.2019 அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது (அறிவிப்பு எண் - 555/2019). அதில், இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் தேர்வெழுதலாம் என்றும், தமிழ் தெரிந்திருக்க வேண்டிய முன் நிபந்தனை இல்லை என்றும், வேலையில் சேர்ந்த பிறகு தகுதிகாண் காலத்திற்குள் (Probation Period) இரண்டாம் வகுப்பு தமிழ்ப் பாடத் தேர்வெழுதினால் போதும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, 2016இல் தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையத் தேர்வை இந்தியாவிலுள்ள அனைவரும் எழுதலாம் என்றும் நேப்பாளம், பூட்டான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும், பாக்கித்தான், வங்காளதேசம், மியான்மர் போன்ற நாடுகளிலிருந்து குடிபெயர்ந்தவர்களும் எழுதலாம் என்றும் திருத்தம் கொண்டு வந்தது அ.தி.மு.க. ஆட்சி. கடந்த 2017 செப்டம்பரில் அரசுப் பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் தேர்விலும், 2018 பிப்ரவரியில் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. பொதுத் தேர்விலும், 2019 ஏப்ரலில் மின்வாரியத்திற்கான பொறியாளர் தேர்விலும் வெளி மாநிலத்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தமிழர்களுக்குள் எழும் சிக்கல்களிலும், தமிழ்நாட்டு மக்கள் மீது போடப்படும் வழக்குகளிலும் சாட்சியங்கள் தமிழில்தான் இருக்கும். காவல்துறை ஆவணங்களும் தமிழில்தான் இருக்கும். தமிழ் தெரியாத வெளி மாநிலங்களைச் சேர்ந்த நீதிபதிகள், மாவட்ட அளவில் செயல்பட்டால் இந்த சாட்சியங்களை எப்படிப் புரிந்து கொள்வார்கள்? மாவட்ட நீதிமன்றம் வரை தமிழில் வழக்கு நடத்தலாம், தீர்ப்பெழுதலாம் என்று தமிழ்நாட்டில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. தமிழ் தெரியாத பிறமொழியாளர்கள் நீதிபதிகளானால் இச்சட்டம் நடைமுறையில் சாகடிக்கப்பட்டு விடும்.

கர்நாடகம், குசராத், மகாராட்டிரம், சத்தீசுகட் போன்ற மற்ற மாநிலங்களில் மாநில அரசு வேலைகள் – நடுவண் அரசு வேலைகள் – தனியார் துறை வேலைகள் அனைத்திலும் மண்ணின் மக்களுக்கு வேலை வழங்குவதற்கான விழுக்காட்டு ஒதுக்கீடுகள் அரசு ஆணைகளாக, சட்டங்களாக இயற்றப்பட்டுள்ளன. அண்மையில்கூட, ஆந்திரப்பிரதேச அரசு தனியார் துறையில் 75 விழுக்காட்டு வேலைகளை தெலுங்கு மக்களுக்கு வழங்க வேண்டுமென்று தனிச் சட்டம் இயற்றியுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் அவ்வாறான ஒரு சட்டமியற்ற தமிழ்நாடு ஆட்சியாளர்கள் தொடர்ந்து மறுத்து வருகிறார்கள். இதன் மர்மம் என்ன? பொது மக்களைப் பொறுத்தவரை இம்மறுப்பை இனத்துரோகம் என்றுதான் புரிந்து கொள்கிறார்கள்.

குசராத்தில் மாவட்ட அளவிலான நீதிபதிகள் தேர்வுக்கு குசராத் உயர் நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பில் (நாள் – 26.08.2019, அறிவிப்பு எண் - RC/0719/2019-20) குசராத்தி மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்று முன் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் மாவட்ட அளவிலான நீதிபதி வேலையில் சேர தமிழ் மொழி அறிந்திருப்பது முன் நிபந்தனை அல்ல; வேலையில் சேர்ந்த பிறகு கற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசே கூறியிருக்கிறது. குசராத்தி மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்க அம்மாநில உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரமளித்துள்ள சட்டம், தமிழ்நாடு அரசுக்கு மட்டும் அனுமதி மறுக்கிறதா? தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் இதற்கு விடை சொல்ல வேண்டும்!

ஏன் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சி மாநில வேலை வாய்ப்பில் தொடர்ந்து வேலையற்றுத் துயருரும் தமிழ் இளைஞர்களைப் புறக்கணிக்க வேண்டும்? ஏன் வஞ்சிக்க வேண்டும்?

தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில் திட்டமிட்டு நூற்றுக்கு நூறு – நூற்றுக்கு தொண்ணூறு வீதம் வட இந்தியர்களையும், வெளி மாநிலத்தவரையும் வேலையில் சேர்க்கிறது நடுவண் அரசு. அன்றாடம் ஆயிரம் பல்லாயிரமாக வட மாநிலத்தவர் தமிழ்நாட்டில் வந்து குவிந்து தனியார் துறை வேலைகளையும் கவ்விக் கொள்கிறார்கள். இந்தக் கொடுமைகளைத் தடுத்து மண்ணின் மக்களாகிய தமிழர்களுக்கு வேலை உரிமையை நிலைநாட்ட வேண்டிய தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் இந்திய அரசோடு போட்டி போட்டுக் கொண்டு வெளி மாநிலத்தவர்களை தமிழ்நாட்டு வேலைகளுக்கு அழைப்பது சொந்த மக்களுக்குச் செய்யும் துரோகமாகும்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள நீதிபதிகள் தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்று, தமிழ்நாட்டில் மாவட்ட அளவில் நீதிபதிகளாக செயல்பட மண்ணின் மக்களுக்கே வாய்ப்பு வழங்கும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

#தமிழகவேலைதமிழருக்கே
#TamilnaduJobsForTamils


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT