உடனடிச்செய்திகள்

Thursday, January 29, 2009

வீரவணக்கம் ! வீரவணக்கம்!

தமிழகமெங்கும் முத்துக்குமாருக்கு வீரவணக்கக் கூட்டங்கள்

        ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள இனவெறி அரசையும் அதற்கு துணை போகும் இந்திய அரசையும் கண்டித்து தமிழகத் தலைநகர் சென்னையில் இந்திய மத்திய அரசு அலுவலகம் முன்பு இன்று காலை(29-01-09) தீக்குளித்து வீரமரணம் எய்திய ஈகி முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தி தஞ்சை, மதுரை ஆகிய இடங்களில் இரங்கல் கூட்டங்கள் இன்று மாலை நடந்தன.

தஞ்சை
தஞ்சை தொடர்வண்டி நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை ஈகி முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தி அமைதிப் பேரணி நடந்தது. பேரணி பழைய பேருந்து நிலையத்தை அடைந்ததும் அங்கு இரங்கல் கூட்டம் நடந்தது.

தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன், தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் நா.வைகறை, ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் துரை.பாலகிருஷ்ணன்,  இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சி சார்பில் சந்திரக்குமார், தமிழர் தேசிய இயக்கத்தை சேர்ந்த அய்யனாபுரம் சி.முருகேசன், மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில காளியப்பன், ஆதித்மிழர் பேரவை சார்பில் வழக்கறிஞர் இளமதி உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும், தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கலுரை ஆற்றினர்.

"மொழிப்போர் தியாகிகள் தொடங்கி ஈழத்தமிழர்களுக்காக முத்துக்குமார் வரை இந்தியாவிற்கான கடைசி வணக்கம். இந்திய தேசியத்தையும் காங்கிரஸ் கட்சியையும் கூண்டோடு ஒழித்து இறுதி வணக்கம் செலுத்துவோம்" என்று பெ.மணியரசன் இரங்கலுரையில் குறிப்பிட்டு பேசினார்.

ஈகி முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மதுரை
ஈழத்தமிழர்களுக்க இன்னுயிர் நீத்தி ஈகி முத்துக்குமாருக்கு இரங்கல் தெரிவித்து மதுரை ஜான்சி ராணி புங்காவில் வீரவணக்கப் பேரணி நடந்தது. மாலை 6.00 மணியளவில் ஜான்சிராணி புங்காவில் தொடங்கிய பேரணி மேலமாசி வீதியில் முடிவுற்றது.

பேரணியின் முடிவில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி மதுரை அமைப்பாளர் இராசு தலைமை தாங்கினார். இந்திய கம்யுனிஸ்ட் கட்சி மதுரை மாநகரச் செயலாளர் பரவணன், ம.தி.மு.க. மதுரை மாநகரச் செயலாளர் பொடா புமிநாதன், பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணைச் செயலாளர் செந்தில் வேல் மற்றும் வழக்கறிஞர்கள், அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாணவர்கள், சட்டக்கல்லூரி மாணவா்கள், தலித் அமைப்புகள், தமிழ்த் தேசிய அமைப்புகள் உள்ளிட்ட பல அமைப்புகளும் திரளாக இதில் கலந்து கொண்டன. இறுதியில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் சார்பில் கருப்பையா இரங்கலுரையாற்றினார்.

சென்னையில் நாளை இறுதி ஊர்வலம்
சென்னை கொளத்தூர் பகுதியில் அமைந்துள்ள முத்துக்குமாரின் வீட்டிலிருந்து நாளை காலை 10.00 மணியளவில் இறுதி ஊர்வலம் நடக்கிறது. இதில் தமிழ் உணர்வாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், வழக்கறிஞர்கள்  என அனைத்துத் தரப்பினரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கேட்டு கொள்கிறது.


தீக்குளிக்கும் முன்னர் முத்துகுமாரின் இறுதி அறிக்கை!

ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசையும் அதற்கு துணை பொகம் இந்திய அரசையும் கண்டித்து தீக்குளித்து வீரமரணியம் எய்திய சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கையின் விபரம் வருமாறு:

விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...

அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...

வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?

ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.

இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். 'நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்' என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...

உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...

உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த
இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...

அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.

அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,

உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)

இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.

இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்,

அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99

அருமைத்திமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.

இவ்வாறு அந்த துண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது...

செய்தி: விகடன்

ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்த தூத்துக்குடி இளைஞர் மரணம்

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில்

தீக்குளித்த தூத்துக்குடி இளைஞர் மரணம்


     ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கம் சிங்கள அரசையும் அதற்கு துணை போகும் இந்திய அரசையும் கண்டித்து சென்னையில் அமைந்துள்ள இந்திய அரசின் பாஸ்போர்ட் அலுவலகம்(சாஸ்திரி பவன்) முன்பு வலியுறுத்தி தூத்துக்குடியைச் சேர்ந்த வாலிபர் முத்துக்குமரன் தீக்குளித்து மரணமடைந்துள்ளார். 

    ஈழத்தமிழனத்தை அடியோடு ஒழித்துக் கட்டும் இனவெறிச் செயலில் ஈடுபட்டுள்ள சிங்கள அரசு போர் நிறுத்தம் செய்ய இந்தியா வலியுறுத்தி வேண்டுமெனவும்  சிங்கள அரசிற்கு தொடர்ந்து உதவி புரியும் இந்திய அரசைக் கண்டித்தும் தமிழகமெங்கும் தன்னெழுச்சியான மாணவர் போராட்டங்கள் வெடித்துள்ளன.     இந்நிலையில் ஈரோட்டு வழியாக சிங்கள அரசிற்கு பீரங்கிகளை இந்திய அரசு அனுப்பியதும், ஈழப்போரில் சிங்கள இராணுவத்துடன் இந்திய அதிகாரிகள் ஈடுபட்டிருப்பது புகைப்படங்கள் மூலம் அம்பலமானதும்  தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செங்கல்பட்டில் சாகும் வரை உண்ணாப்போரில் ஈடுபட்ட 4 மாணவர்களின் உடல் நிலை கவலைக்கிடமாகி மருத்துவமனையில் உள்ளனர். மேலும் அப்போராட்டத்தை நசுக்கும் தீய நோக்கோடு நேற்று காலை கலைஞர் கருணாநிதி அரசின் காவல்துறை பலவந்தமாக கைது செய்தது. அதே போல  சென்னை, சேலம், கோவை என அனைத்து கல்லூரி மாணவர்களும் பேரணி, ஆர்ப்பாட்டம் என போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். 

    இந்நிலையில்  தூத்துக்குடியை சேர்ந்த் இளைஞர் முத்துக்குமரன் என்பவர் சென்னையில் அமைந்துள்ள பாஸ்போர்ட் அலுவலகம் (சாஸ்திரி பவன்) அலுவலகம் முன்பு, ஈழத்தமிழர்களுக்காக ஆதரவான முழக்கங்களை எழுப்பிக் கொண்டே மண்ணென்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. விஜயலட்சுமி அவரை காப்பாற்றி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டது. முத்துக்குமரன் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார்.

    ஈழத்தமிழர்களை முழுவதுமாக அழித்தொழித்த வரும் சிங்கள அரசுடன் கைக்கோத்து செயல்படும் இந்திய அரசே இம்மாணவரின் மரணத்திற்கு பொறுப்பேற்க வேண்டும்.  தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி இம்மாணவரின் குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

Wednesday, January 28, 2009

சிங்கள அரசிற்கு தஞ்சையிலருந்து ஆயுதம் : விமானப்படைதளம் முற்றுகை போராட்டம்

ஈழத்தில் சிங்கள அரசு மேற்கொண்டு வரும் தமிழின அழிப்பு நடவடிக்கைகளில் இந்திய அரசு கலந்து கொண்டுள்ளது. தஞ்சையில் அமைந்துள்ள விமானப்படைத் தளத்தின் மூலம் சிங்கள அரசிற்கு இராணுவ தளவாடங்களை இந்திய அரசு அனுப்பியுள்ளதைக் கண்டித்தும் அத்தளத்தை உடனடியாக இழுத்து மூடக் கோரியும் அவ்விமானப்படைத் தளத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் 31-01-2009 அன்று சனிக்கிழமை காலை 10 மணிக்கு, தஞ்சை மேலவத்தாச்சாவடி சந்திப்பு அருகே பேரணியாக புறப்பட்டுச் சென்று விமானப்படைத் தளத்தை மூட வலியுறுத்தி முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இப்போராட்டத்தில் இதில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் த.செ.கொளத்தூர் மணி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு உள்ளிட்ட பல்வேறு தமிழ்த் தேசிய அமைப்புத் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். த.தே.பொ.க., பெ.தி.க., த.தே.வி.இ., தமிழர் கழகம் உள்ளிட பல்வேறு அமைப்புகள் பங்கெடுக்கின்றன.

ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற தாய்தமிழர்கள் கட்சி வேறுபாடு கலந்து இம்முற்றுகைப் போராட்டத்திற்கு வருமாறு உரிமையோடும் உறவோடும் கேட்டுக் கொள்கிறோம்.

இங்ஙனம்,
தமிழர்கள் ஒருங்கிணைப்பு.

Monday, January 26, 2009

செங்கல்பட்டில் தொடரும் சாகும் வரை உண்ணாப்போராட்டம் : த.தே.பொ.க.வினர் நேரில் ஆதரவு

செங்கல்பட்டில் தொடரும் மாணவர் உண்ணாப்போராட்டம் :
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நேரில் ஆதரவு
தமிழக அரசின் அலட்சியப் போக்கிற்கு கண்டனம்


தமிழீழத்தில் தமிழின அழிப்புப் போரில் ஈடுபட்டிருக்கும் சிங்கள அரசை போர் நிறுத்தம் செய்ய இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழகமெங்கும் மாணவர் போராட்டங்கள் வெடித்துள்ளன. அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் எழுச்சியுடன் நடத்தி வரும் சாகும் வரை உண்ணாப்போராட்டம் 5வது நாளாக இன்றும் தொடர்ந்து நடந்து வருகின்றது.


இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ள 14 மாணவர்களில் இரு மாணவர்கள் நேற்று மயக்க நிலை அடைந்து அரசு மருத்துவமனையில் அவரச சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடி வருகின்றனர். மேலும் தமிழகக் காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை அச்சுறுத்தும் போக்கிலும் ஈடுபட்டிருக்கிறது. ஆயினும், கைது செய்யப்பட்டால் சிறையிலும் உண்ணாப்போராட்டம் தொடரும் என அம்மாணவர்கள் தெரிவித்திருப்பது பாராட்டத்தக்கது. இந்நிலையிலும் கூட, தமிழக அரசு தனது அலட்சியப் போக்கை கைவிடாமல் கொண்டுதானிருக்கிறது.



இன்று(26-01-08) தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வெற்றித்தமிழன், தமிழ்க்கனல் உள்ளிட்ட தோழர்களும், கிளர்ச்சியாளன் இதழ் ஆசிரியர் வழக்கறிஞர் சேசுபாலன், பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ப.அமர்நாத் உள்ளிட்ட தோழர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். மேலும், இப்போராட்டத்திற்கு பல்வேறு தமிழ்த் தேசிய அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

போரை நிறுத்த நடவடிக்கை எடுக்காத இந்திய அரசையும், மாணவர்கள் நலனில் அக்கறை கொள்ளாத தமிழக அரசின் அலட்சியப் போக்கையும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

Sunday, January 25, 2009

மொழிப்போர் தியாகிகள் தினம் த.தே.பொ.க. அஞ்சலி

இன்று மொழிப்போர் தியாகிகள் நாள்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினர் அஞ்சலி
 
1938-1965 ஆகிய ஆண்டுகளில் இந்தித் திணிப்பில் ஈடுபட்ட இந்திய அரசைக் கண்டித்து தீக்குளித்தும், நஞ்சுண்டும், இந்திய இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டிலும் பலியான மொழிப்போர் தியாகிகளின் நினைவு தினம் தமிழகம் முழுவதும் இன்று(25-1-2009) கடைபிடிக்கப்படுகிறது.

திருச்சி
இதனை முன்னிட்டு, இன்று காலை திருச்சியில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகிகள் கீழப்பழூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் நினைவிடத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திப் பேசினார். திராவிட இயக்கங்களின் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கை மோசடிக் கொள்கை என்றும், தமி்ழ் மட்டுமே அனைத்து நிலைகளிலும் செயல்பட வழிவகுக்கும் ஒருமொழிக் கொள்கையே உரிமைக் கொள்கை என்றும் அவர் பேசினார்.

மேலும், மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தை தமிழகக் கல்விப் பாடத்தில் சேர்க்க வேண்டும் என்றும் மொழிப்போரில் உயர்நீத்த 500க்கும் மேற்பட்ட் தியாகிகளுக்கு அந்தந்த ஊர்களில் நினைவகம் எழுப்பப்பட வேண்டும் என்றும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சென்னை
சென்னையில் மூலக்கொத்தளம் பகுதியில் மொழிப்போர் தியாகிகள் நடராசன், தாலமுத்து நினைவிடத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினர் இன்று காலை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.  முன்னதாக அவர்கள் வள்ளலார் நகர் பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக புறப்பட்டு வந்தனர்.

 
இந்நிகழ்வில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் உதயன், பொதுக்குழு உறுப்பினர் பழ.நல்.ஆறுமுகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு, சிவகாளிதாசன் உள்ளிட்டடோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பங்கேற்ற ஏராளமான தமிழ் உணர்வாளர்கள் மொழிப் போர் தியாகளுக்கு அஞ்சலி தெரிவித்தும் தமிழினப் படுகொலையை மெற்கொள்ளும் சிங்கள அரசிற்கு உதவும் இந்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.
 
சிதம்பரம்
மொழிப்போரில் இந்திய அரசின துப்பாக்கிச் சூட்டில் வீரமரணமடைந்த சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் இராசேந்திரன் நினைவிடத்தில் தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி சார்பில் இன்று மாலை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதில் தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் அரவிந்தன், சிதம்பரம் நகர த.தே.பொ.க. செயலாளர் கு.சிவப்பரிகாசம் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொள்கின்றனர்.
 
தஞ்சை
தஞ்சை மாவட்டம் வல்லம் பகுதியில் நடைபெறும் மொழிப்போர் ஈகிகள் நினைவு நாள் பொதுக்கூட்டம் இன்று மாலை நடக்கிறது. இதில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்டபினர் கி.வெங்கடராமன் சிறப்புரையாற்றுகிறார்.
 

 

பெ.மணியரசன், கொளத்தூர் மணி, சீமான் விடுதலை :: காங்கிரஸ் தலைவர்கள் கோயில் மாடுகள் : பெ.மணியரசன் பேச்சு



ஈரோட்டில் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்திய பொதுக்கூட்டத்தில், திரைப்பட இயக்குநர் சீமான், பெரியார் திராவிடக் கழக தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் ஆகியோர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகபேசியதாக தமிழக் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் இம்மூவரையும் நிபந்தனையில்லா பிணையில் விடுதலை செய்யக்கோரி உத்தரவிட்டது. கடந்த 20-1-2008 அன்று மாலை 7 மணியளவில் மூவரும் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு வெளியில் வந்தனர்.

அவர்களை வரவேற்க பெரியார் திராவிடர் கழக கோவை செயலாளர் கு.இராமகிருட்டிணன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமை செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன், கோவை மாவட்ட த.தே.பொ.க. அமைப்பாளர் தமிழரசன் உள்ளிட்ட தலைவர்களும் தமிழின உணர்வாளர்களும் திரளாக சிறை வாயிலில் கூடி இருந்தனர். தாரை தப்பட்டை முழங்க பட்டாசுகள் வெடிக்க மூவரும் ஊர்வலமாக மக்கள் திரளுடன் கோவை காந்திபுரத்திலுள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
 
பின்னர் பெரியார் திராவிடர் கழகத்தின் அலுவலகமான பெரியார் படிப்பகத்தில் பொதுமக்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் சிறை அனுபவங்களையும் சென்னை உயர் நீதிமன்றமானது தமிழ்நாடு அரசுக்கு கண்டனம் தெரிவித்து தங்களுக்கு நிபந்தனையற்ற பிணை வழங்கியமை பற்றியும் விளக்கிகூறினார்கள்.
 
அதில் பேசிய, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் இளங்கோவன், தங்கபாலு, ஞானசேகரன் ஆகியோர் கோவில் மாடுகள் போல் தின்று, கொழுத்து, எந்த வேலையும் செய்யாமல் கிடக்கின்றனர் என்று கூறினார்.

"பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பல நாடுகள் எதிர்ப்பால், தாக்குதல் நிறுத்தப்பட்டது. பாலஸ்தீனம் மீது தாக்குதல் கூடாது என்று இந்தியாவும் சொன்னது. தமிழர்களுக்கென்று எந்த நாதியும் இல்லை. பாலஸ்தீனம் மீது தாக்குதல் கூடாது என்று சொன்ன இந்தியா, இலங்கை தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று ஏன் சொல்லவில்லை.

ராஜீவ்காந்தி கொல்லப்பட்டதை மட்டுமே தொடர்ந்து பேசுகின்றனர். தமிழகம் டில்லியில் அடிமைப்பட்டுக் கிடக்கிறது. தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தங்கபாலு, இளங்கோவன், ஞானசேகரன் ஆகியோர் கோவில் மாடுகள் போல் தின்று, கொழுத்து, எந்த வேலையும் செய்யாமல் கிடக்கின்றனர்.

காங்கிரஸ் எங்கு போட்டியிட்டாலும் அங்கு எதிர்ப்பு தெரிவிபோம்,. காங்கிரசை ஒழிப்போம் என்று பெரியார் கூறினார். அந்த வேலையை அவரது பேரன் இளங்கோவன் செய்து கொண்டிருக்கிறார். இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிப்பதை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுப்போம்" என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் பெ.மணியரசன் பேசினார்.

 

Thursday, January 8, 2009

பிரதமருக்குக் கருப்புக் கொடி :: பழ.நெடுமாறன் உள்ளிட்ட 500 பேர் கைது.

பிரதமருக்குக் கருப்புக் கொடி 
பழ.நெடுமாறன் உள்ளிட்ட 500 பேர் கைது.
 
 ஈழத்தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அரசு நடத்தும் போரை நிறுத்துமாறு தமிழக மக்கள் விடுத்தக் கோரிக்கையை மதியாத இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் சென்னை வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து காவல்துறையின் தடையை மீறி கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உட்பட 500க்கும் மேற்ப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனா.
 
ஈழத்தில் நடைபெறும் போரை நிறுத்துமாறு தமிழக முதல்வர், தமிழக அனைத்துக் கட்சிக் குழு, தமிழக சட்டமன்றம், பல்வேறு தமிழ்த் தேசிய அமைப்புகளும் இயக்கங்களும் விடுத்த கோரிக்கையை நிறைவேற்றாமல் பிரதமர் மன்மோகன் சிங் மவுனம் காத்து வருகிறார். இலங்கைக்கு செல்லப் போவதாக அறிவித்திருந்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜி அதற்கான வேலைகளில் சிறிதும் ஈடுபடவில்லை. ஈழத்தமிழர்களை முற்றாக சிங்கள அரசு அழித்து விட்ட பிறகுதான் அவரது பயணத்திற்கு நாள் குறிக்கப்படும் என தெரிகிறது.
 
இந்நிலையில் தமிழகத் தலைநகர் சென்னையில் நடைபெறும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் மாநாட்டிற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்து தற்பொழுது ஈரோடு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இயக்குநர் சீமான், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி ஆகியோரை சிறையில் சந்தித்து ஆலோசனை செய்து விட்டு வந்த தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாற்ன, சிறைவாசலில் சென்னை வரும் இந்தியப் பிரதமருக்குக் கருப்புக் கொடிக் காட்டும் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தார்.
 
இதனிடையே பிரதமர் கலந்து கொள்ளவிருக்கும் மாநாட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு போராட்டத்திற்கு அனுமதி மறுத்துத் தடை விதிக்கப்பட்டது.
 
போராட்டத்தில் கலந்து கொள்ளப் புறப்பட்ட தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மேற்கு மண்டலச் செயலாளர் கோ.மாரிமுத்து உட்பட 3 பேர் ஓசூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் நேற்றிரவு(7-1-2008) 9.30 மணியளவில் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
 
இச்சூழலில் தடையை மீறி இன்று(8-1-2008) காலை 8. மணியளவில் சென்னை கவர்னர் மாளிகைக்கு வருகை தந்த பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டும் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதாக பழ.நெடுமாறன் உள்ளிட்ட 500க்கும் மேற்ப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
 
 இவ்வார்ப்பட்டத்திற்கு பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் நா.வைகறை, பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு, தேனிசை செல்லப்பா, திரைப்பட இயக்குனர் புகழேந்தி உட்பட பல தலைவர்களும் தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தோழர்களும் கருப்பு உடையுடனும்  கருப்புக் கொடிகளுடன் திரளாக கலந்து கொண்டனர். இந்திய அரசைக் கண்டித்தும் பிரதமர் மன்மொகன் சிங்கை திரும்பிப் போ என வலியுறுத்தியம் முழக்கங்கள் எழுப்பபட்டன.
 
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்ட சைதாப்பேட்டை காவல் நிலையம் பின்புறமுள்ள பத்மாவதி திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT