உடனடிச்செய்திகள்
Showing posts with label பெ. மணியரசன் தமிழீழ விடுதலை!. Show all posts
Showing posts with label பெ. மணியரசன் தமிழீழ விடுதலை!. Show all posts

Tuesday, December 3, 2019

ஈழத்தமிழரை ஏமாற்றியதே 13ஆவது திருத்தம்! குமுதம் ரிப்போர்ட்டர்” ஏட்டில் பெ. மணியரசன் செவ்வி!



ஈழத்தமிழரை ஏமாற்றியதே

13ஆவது திருத்தம்!


“குமுதம் ரிப்போர்ட்டர்” ஏட்டில்
ஐயா பெ. மணியரசன் செவ்வி!



“ஈழத்தமிழரை ஏமாற்றியதே 13ஆவது திருத்தம்!” என “குமுதம் ரிப்போர்ட்டர்” வார ஏட்டுக்கு அளித்த செவ்வியில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் தெரிவித்துள்ளார்.

“மோடியின் அரவணைப்பில் கோத்தபய!” என்ற தலைப்பில் 06.12.2019 நாளிட்ட “குமுதம் ரிப்போர்ட்டர்” வார ஏட்டில் வந்துள்ள செவ்வியில் ஐயா பெ. மணியரசன் தெரிவித்துள்ளதாவது :

"கடந்த 27.7.1987 அன்று இந்தியத் தலைமையமைச்சர் இராசீவ்காந்தியும், இலங்கை அதிபர் செயவர்த்தனாவும் செய்து கொண்ட இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி, அரசியலமைப்புச் சட்டம் 13ஆவது திருத்தத்தை அமலாக்க வேண்டும் என்று சொன்னது இந்தியா. ஆனால், சுதுமலையில் நடைபெற்ற கூட்டத்தில் புலிகள் தலைவர் பிரபாகரன், “இது (இந்திய இலங்கை ஒப்பந்தம்) தமிழர் பிரச்சினைக்குத் தீர்வல்ல, சிங்கள இனவாத பூதம் இதை விழுங்கிவிடும். தமிழீழ தனி அரசே தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு” என்றார். அந்தப் பதின்மூன்றாவது திருத்தத்தில் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பு இல்லை. மாகாண அரசுக்குக் காவல்துறை அதிகாரம் கிடையாது. காவலர்கள் அனைவரும் சிங்களக் காவல்துறையின் கட்டுப்பாட்டில்தான் இயங்குவார்கள். நிலம் வாங்குவதும், விற்பதும் மாகாண அரசின் கட்டுப்பாட்டில் வராது.

இலங்கையில் ஒற்றையாட்சிதான், கூட்டாட்சி கிடையாது. திரையரங்கு வரி, வீட்டு வரி வசூலிக்கலாம். அதைச் செலவு செய்ய சிங்கள ஆளுநர் ஒப்புதல் அவசியம். மத்திய அரசு எப்போதாவது மாகாண அரசுகளுக்கு நிதி ஒதுக்கும். அது ஒன்றுதான் நிதி ஆதாரம். எனவே, 13ஆவது சட்டத் திருத்தம் என்பது ஏமாற்று வேலை. ஆனால், அதைக்கூட ஆதரிப்பதாக வெளிப்படையாக கோத்தபய சொல்லவில்லை என்பது வேதனையான விஷயம். அவர் தமிழர்களுக்கு நல்லது செய்வார் என்று எப்படி எதிர்பார்க்க முடியம்?”.

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் தெரிவித்துள்ளார்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Tuesday, November 19, 2019

கோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும்! பெ. மணியரசன் அறிக்கை!



கோத்தபய வெற்றியிலிருந்து

பாடம் கற்க வேண்டும்!



ஐயா பெ. மணியரசன்
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்


கடந்த 16.11.2019 அன்று நடந்த இலங்கை குடியரசுத் தலைவர் தேர்தலில், “சிறீலங்கா பொதுஜன பெரமுனா” கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட, மகிந்த இராசபக்சேவின் தம்பி கோத்தபய இராசபக்சே 52.25% வாக்குகள் பெற்று பெரும் வெற்றியை ஈட்டியுள்ளார். இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழர் தாயக மாநிலங்களில் உள்ள தமிழர்களும், தமிழ் பேசும் முசுலிம்களும் கோத்தபய இராசபக்சேயை எதிர்த்து நின்ற “ஐக்கிய தேசியக் கட்சி” வேட்பாளரான சஜித் பிரமேதாசாவுக்கு ஒட்டுமொத்தமாக வாக்களித்திருக்கிறார்கள்.

இராசபக்சே குடியரசுத் தலைவராகவும், அவரது தம்பி கோத்தபய இராசபக்சே பாதுகாப்புத் துறைச் செயலாளராகவும் இருந்த காலத்தில் தமிழின அழிப்புப் போரை தீவிரமாக நடத்தினார்கள். 2008 - 2009இல் இலட்சக்கணக்கான தமிழ்ப் பொது மக்களையும், விடுதலைப்புலி வீரர்களையும் இனப்படுகொலை செய்து நரவேட்டை நடத்தினார்கள்.

சிங்கள பௌத்த பேரினவாத ஆதிக்கத்தை – தமிழர்கள் மீது திணித்ததைப் போலவே, முசுலிம் மக்கள் மீதும் இராசபக்சே அரசு திணித்தது. இதனால் இம்மக்கள் இராசபக்சே தம்பிக்கு வாக்களிக்க மறுத்து, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இன்னொரு சிங்களக் கட்சி வேட்பாளருக்கு வாக்களித்தனர். ஆனால், கோத்தபய இராசபக்சே மிகப்பெருவாரியான வாக்குகள் பெற்றது எப்படி என்ற கேள்வி எழுகிறது!

இலங்கையில் தமிழர்கள் செயற்கையாகச் சிறுபான்மையாக்கப்பட்ட மக்கள் ஆவர். வரலாற்றில் தமிழர்களின் அரசு தனித்து அங்கு நடந்து வந்தது. ஐரோப்பிய வணிக வேட்டைக் கொள்ளைக் கம்பெனிகள் வேட்டையாட வந்தபொழுது, பீரங்கிகளால் தமிழின அரசை வீழ்த்தி சிங்கள அரசையும் வீழ்த்தி ஒரே நிர்வாகக் கட்டமைப்பாக இலங்கையை உருவாக்கினார்கள். அதில் ஆங்கிலேய அரசு கோலோச்சியது. இதனால், செயற்கையாக சிறுபான்மையாக்கப்பட்ட தமிழர்கள் எந்தக் காலத்திலும் நாடாளுமன்றத் தேர்தல் வழியாக தம் மொழியை – பண்பாட்டை – தாயகப் பரப்பை பாதுகாத்துக் கொள்ளும் அரசு அதிகாரத்தை பெறவே முடியாத நிலை ஏற்பட்டது.

இலங்கை மக்கள் தொகையில் வடக்கு கிழக்கு மாநிலங்களில் உள்ள “சிறுபான்மை” மக்கள் எண்ணிக்கை 30 விழுக்காடு. மற்ற சிங்கள மாநிலங்களி்ல் சிங்களரின் மக்கள் தொகை 70 விழுக்காடு.

காலனி வேட்டையாடிகளாலும், பெருந்தேசிய இன ஆக்கிரமிப்பாளர்களாலும் செயற்கையாக உருவாக்கப்பட்ட நாடுகளில் செயற்கையாக சிறுபான்மையாகிப் போன மக்களின் உரிமையை அந்நாடுகளில் நடைபெறும் தேர்தல் வாக்குரிமை மூலம் அடைந்துவிட முடியாது என்பதற்கு, இப்பொழுது நடந்துள்ள இலங்கைத் தேர்தல் மற்றுமொரு எடுத்துக்காட்டு!

“பெரும்பான்மையினரின் முடிவை செயல்படுத்துவது” என்ற சனநாயகக் கோட்பாட்டை பல்வேறு இனங்களைக் கொண்ட நாடுகளில் ஒற்றைப் பொருளில் பயன்படுத்தினால், ஒப்பீட்டளவில் சிறுபான்மையாக உள்ள இனங்கள் நிரந்தர அடிமைகளாக வாழ வேண்டிய நிலைதான் ஏற்படும்.

ஏற்கெனவே, பிரித்தானியாவில் (U.K) சிக்கிக் கொண்டுள்ள ஐரிஷ் (அயர்லாந்து), ஸ்காட்டிஷ் (ஸ்காட்லாந்து) தேசிய இனங்கள் தங்களின் மொழி மற்றும் இன உரிமைகளைப் பாதுகாக்க நாடாளுமன்ற – சட்டமன்றத் தேர்தல் மூலம் வழியில்லை என்ற முடிவுக்கு வந்து தனிநாடு கேட்டுப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். உலகத்தில் ஒப்பீட்டளவில் மிகச்சிறந்த சனநாயகம் உள்ள நாடாகக் கருதப்படும் பிரித்தானியாவிலேயே இந்த இனப்பாகுபாடு நடந்து கொண்டுள்ளது.

இதேபோல்தான், ஸ்பெயினில் சிக்கிக் கொண்ட “சிறுபான்மை” தேசிய இனங்கள் விடுதலைக்குப் போராடுகின்றன. சோவியத் ஒன்றியத்தில் இரசியப் பேரினவாதத்தின் ஆதிக்கம் தாங்க முடியாத “சிறுபான்மை” தேசிய இனங்கள் பிரிந்து தனிநாடு அமைத்துக் கொண்டன.

அனைவருக்கும் வாக்குரிமை இருப்பதால், “சிறுபான்மை” தேசிய இனங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று எந்த நாட்டிலும் நம்ப முடியாது. இந்தியாவிலும் அப்படித்தான்!

இந்த உண்மைக்கான இன்றைய எடுத்துக்காட்டுதான், ஒட்டுமொத்த தமிழர்களும், தமிழ் பேசும் முசுலிம்களும் கோத்தபய இராசபக்சேவுக்கு எதிராக வாக்களித்தும், அந்த வாக்குகள் வலிமையற்றவை – அந்தத் தேர்தல் வெறும் சடங்கு என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தியுள்ளது.

இலங்கை நாடு மிகப்பெரிய பொருளாதாரச் சிக்கலில் தவித்துக் கொண்டுள்ளது. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. நாணய மதிப்பு நாள்தோறும் குறைந்து கொண்டுள்ளது. மக்களின் வாழ்க்கைத் தரம் மிக மோசமாகிக் கொண்டிருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியுள்ளது. ஊழல் மலிந்துள்ளது. இவையெல்லாவற்றுக்கும் இராசபக்சே கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் காரணங்களாக இருக்கின்றன.

போர் வெறி கொண்டு, இலங்கையின் கருவூலத்தைக் காலி செய்தவர், இராசபக்சே! அவருடைய கட்சியை சிங்கள மக்கள் பெருமளவு தேர்வு செய்திருக்கிறார்கள் என்றால், அதற்கு என்ன காரணம்? தமிழர்களையும், முசுலிம்களையும் கடுமையாக ஒடுக்குவதில் – அழிப்பதில் முதல் பரிசு பெற வேண்டியது இராசபக்சே குடும்பம் என்ற சிங்களப் பேரினவாத உணர்வு பெரும்பாலான சிங்கள மக்களிடம் இருப்பதுதான் இத்தேர்வுக்குக் காரணம்!

வெற்றி பெற்ற உடனேயே கோத்தபய இராசபக்சே, “எனக்கு வாக்காளிக்காதவர்களும் என் பக்கம் வாருங்கள், உங்களுக்கும் நான்தான் குடியரசுத் தலைவர். ஒரே இலங்கையை உருவாக்க வேண்டும்” என்று மிரட்டல் பாணியில் கோரிக்கை வைத்துள்ளார். சிங்கள பௌத்த இன ஆதிக்கத்தை – மொழி ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டு, முழுமையான சிங்கள பௌத்த நாடாக இலங்கையை மாற்றுவதற்கு, சிறுபான்மையினரே மரியாதையாக என்னோடு வாருங்கள் என்ற இராணுவ அழைப்புதான் கோத்தபய விடுத்துள்ள அந்த அழைப்பு!

கோத்தபய இராசபக்சே ஒரே நாடு முழக்கத்தை நரேந்திர மோடியிடமிருந்து எடுத்துக் கொண்டாரா என்ற ஐயப்பாடு எழுகிறது.

வடக்கு - கிழக்கு மாநிலங்களில் மிகத் தீவிரமாக சிங்களக் குடியேற்றங்கள் நடக்கும் அபாயமிருக்கிறது. வடக்கு கிழக்கு மாநிலப் பகுதிகளில் மணலாறு என்ற தமிழர் பகுதியில் இருந்த தமிழர்களை 1984 வாக்கில் இராணுவத்தை வைத்து வெளியேற்றிவிட்டு, வலுவந்தமாக சிங்களக் குடியேற்றங்களை இலங்கை அரசு கொண்டு வந்தது அன்று வலுவந்தமாக 18 கிராமங்களில் சிங்கள அரசு சிங்களக் குடியேற்றங்களைக் கொண்டு வந்தது. இன்றைக்கு அங்கு சிங்களக் குடியேற்ற கிராமங்களின் எண்ணிக்கை சற்றொப்ப நூறு!

மணலாறு என்ற தமிழ்ப் பெயரை “வெலிஓயா” என்று சிங்களத்தில் மாற்றிவிட்டார்கள். ஏராளமான தமிழ் கிராமங்களின் பெயர்களையும் சிங்களத்தில் மாற்றிவிட்டார்கள். அப்பகுதியின் 90 விழுக்காட்டிற்கு மேல் கோத்தபய இராசபக்சேவுக்கு வாக்குகள் கிடைத்துள்ளன. இதே பாணி சிங்களக் குடியேற்றங்களைத்தான், இன்றைக்குள்ள வடக்கு - கிழக்கு தமிழர் மாநிலங்களில் வலுக் கட்டாயமாகக் கொண்டு வரப் போகிறது, கோத்தபய ஆட்சி! ஏற்கெனவே, இந்துக் கோயில்களை பௌத்த கோயில்களாக மாற்றிக் கொண்டுள்ளார்கள். அப்போக்கு இன்னும் தீவிரப்படும்.

தமிழ்நாட்டுத் தமிழர்கள் இலங்கையில் நடந்த தேர்தல் முடிவுகளிலிருந்து மேற்கண்ட பாடங்களைப் படிக்க வேண்டும். தமிழ்நாட்டிலும் இப்படித்தான் குடியேற்றங்களும், தமிழர் ஆன்மிகத்திற்குப் புறம்பான வடஇந்திய ஆன்மிகத் திணிப்பும் நடந்து கொண்டுள்ளன.

வாக்குரிமை மூலம் இலங்கையில் தமிழர்கள் தங்களின் தாயகப் பகுதிகளையும் இன உரிமைகளையும் இன அடையாளங்களையும் தக்க வைத்துக் கொள்ள முடியாது என்று சொல்லும்போது, இதற்கு மாற்று ஆயுதப்போர் என்று கருத வேண்டாம்!

இப்போதைய நிலையில், ஒட்டுமொத்த தமிழர்கள் ஒருங்கிணைந்து சனநாயக வழிப்பட்ட போராட்டங்களை நடத்தி சிங்களப் பேரினவாத அரசுக்கு நெருக்குதல் கொடுத்து, உலகக் கவனத்தை ஈர்த்து உரிமைகளைப் பெற முயல வேண்டும். அதற்கான முதல் தேவை – சம்பந்தர், சுமந்திரன் போன்றவர்களுக்கு அப்பால் உண்மையான தமிழின உரிமையில் அக்கறையும் ஒப்புக் கொடுப்பும் கொண்டு, மக்களைத் திரட்டி சனநாயக வழியில் உரிமைப் போராட்டங்கள் நடத்தும் தலைமை தமிழீழத்தில் உருவாக வேண்டும். தமிழினத்தைச் சேர்ந்த இளம் ஆண்களும், பெண்களும் இதுபற்றி சிந்தித்து சரியான முடிவுக்கு வந்து கூட்டுப் போராட்டங்களை நடத்த வேண்டும்.

இவ்வாறான ஒருங்கிணைந்த மக்கள் திரள் உரிமைப் போராட்டங்கள் தமிழீழத்தில் நடக்கும்போது, தாய்த் தமிழ்நாட்டு மக்கள் அவர்களுக்கு ஆதரவு நல்க வேண்டும். இங்கு சொல்லப்பட்ட படிப்பினைகள், தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் பொருந்தும்!

கோத்தபய அரசு சீனாவுக்கு ஆதரவாக இருக்கும். அதனால், இந்திய அரசு இலங்கைக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபடும் என்று நம்மில் சிலர் கதைக்கத் தொடங்குவார்கள். இந்த கதைப்புகளை நம்ப வேண்டாம். கடந்தகால படிப்பினைகள் நமக்கு உணர்த்துவது, எதிர்க்க வேண்டியது சீனர்களையா – தமிழர்களையா என்று முரண்பாடு வந்தால், தமிழர்களைத்தான் எதிர்ப்போம் என்று இந்திய அரசு நிலைபாடு எடுக்கும் என்பதுதான்! எனவே, கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்கும் உத்திகளைச் சொல்லும் “சிந்தனைச் சிற்பி”களின் ஆசை வார்த்தைகளில் தமிழர்கள் பலியாகக் கூடாது என்ற படிப்பினையும் பெற வேண்டும். உரிமை மீட்பிற்கான வழி மக்கள் திரள் எழுச்சியே!


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT