உடனடிச்செய்திகள்

Wednesday, April 24, 2019

வள்ளலாரின் வெளிவிரிவியல் கோட்பாடு - தமிழக மாணவர் முன்னணி தோழர் வே. சுப்ரமணிய சிவா.

வள்ளலாரின் வெளிவிரிவியல் கோட்பாடு - தமிழக மாணவர் முன்னணி தோழர் வே. சுப்ரமணிய சிவா.
தொன்றுதொட்டு வானியல் அறிவியலில் முன்னேறி இருந்த இனம் தமிழினம்! வள்ளலாரின் வானியல் கருத்துகள் வியக்க வைக்கின்றன.

இயற்கையின் இயங்கியலை தமிழர்கள் அறிந்தது போல வேறெந்த இனமும் இவ்வளவு நுட்பமாக அறிந்திருக்குமா என்பது ஆய்வுக்குரியது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் வானியல் அறிஞர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

“செஞ்ஞாயிற்றுச்செலவும்
அஞ்ஞாயிற்றுபரிப்பும்
பரிப்புச்சூழ்ந்தமண்டிலமும்
வளி திரிதருதிசையும்,
வறிதுநிலைஇய காயமும், என்றிவை...”

என்று புறநானூற்றில் உறையூர் சாத்தனார் பாடியுள்ளார்.

மன்னன் நலங்கிள்ளி இயல்பைக் குறிப்பதற்கான இப்பாடலில் வானியல் செய்தியையும் புலவர் எடுத்துரைக்கிறார்.

இதன் பொருள் கதிரவனின் இயக்கப்பாதையும் அதன் ஈர்ப்பும் காற்றின் விசை திசையும் எவ்விதத் தாங்குதலும் இல்லாமல் தொங்கும் ஆகாயத்தையும் நேரில் சென்று அளந்து அறிந்த வந்தது போல் கணிக்கும் வானியலாளர்கள் என்று குறிப்பிடுவது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாம் வானியல் அறிவின் உச்சத்தில் இருந்திருக்கிறோம் என்பதைப் பறை சாற்றுகிறது.

“வளிதிரிதருதிசை” என்றால் காற்று இல்லாத அண்டப்பெருவெளி என்று பொருள். காற்று இல்லாத ஒரு வெளி இருப்பதை அன்றே கூறுகின்றனர்.

பொருளையும் ஆற்றலையும் ஆக்கவோ, அழிக்கவோ முடியாது என்று மேற்கத்திய அறிவியல் உலகம் 18 - 19 ஆம் நூற்றாண்டுகளில் எடுத்துக் கூறியது. ஓர் ஆற்றல் இன்னொரு ஆற்றலாக வடிவ மாற்றம் பெறுமே தவிர அழியாது. எடுத்துக்காட்டாக, வெப்ப ஆற்றல் மின்சார ஆற்றலாக மாறலாம். மின் ஆற்றல் ஒளி ஆற்றலாக மாறலாம். ஆனால், இவற்றின் கூட்டுத்தொகை மாறாது. இதுவே ஆற்றலின் அழியா விதி.

இதனை ‘இல்லது தோன்றாது, உள்ளது மறையாது” என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிந்திருந்தனர் நம் தமிழர்கள்.

உலகம் உருண்டை என்பதை மேற்குலகம் கண்டறிந்து கூறியதே 16-ஆம் நூற்றாண்டில் தான். ஆனால் நாம் அதற்கு முன்பே கண்டறிந்து விட்டோம். அவற்றிற்கான குறிப்புகள் தமிழ் இலக்கியங்கள் எங்கிலும் காண முடியும்.

“அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெடுப் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன”

என்ற திருவாசகத்தின் திருவண்டப்பகுதியில் இவ்வரிகள் வானியல் (அஸ்ட்ரானமி) என்ற அடிப்படையில் உலகம் உருண்டை, வான் பொருட்கள் யாவும் உருண்டை வடிவில் உள்ளன, அண்டம் விரிவடைகிறது என்ற அறிவியல் செய்திகளைக் கூறுகிறது.

இவ்வாறான வானியல் குறிப்புகள் தமிழ் இலக்கியங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிறைந்திருந்தாலும் அவற்றை ஒருங்கிணைத்து தனக்கான செய்திகளை உள்ளடக்கி, தமிழர் வானியல் அறிவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றவர் வள்ளலார்.

வள்ளலாரின் அருட்பெருஞ்சோதி அகவல் பகுதி என்பது உலகத் தோற்றம், உயிர்த் தோற்றம் மற்றும் இயல்பு, ஐம்பெரும் ஆற்றல் தோற்றம். அண்டவியல், இயற்கை அமைப்பு, அதன் தன்மை மற்றும் செயல்பாடுகள், இப்படி பிரபஞ்சம் தொடக்கம் முதல் முடிவு வரை உள்ள அனைத்தையும் குறிப்பிட்டப்பட்டுள்ள ஒரு அறிவியல் அடிப்படை நூல் ஆகும்.

இவற்றில் தான் வானியல் குறிப்புகள் குவிந்து கிடக்கின்றன. ‘உலகம் எப்போது தோன்றியது?’ என்ற கேள்விக்கு பெருவெடிப்புக் கோட்பாட்டின் வாயிலாக அறிவியல் பதில் தருகிறது. பேரண்ட மூலத்தில் ஏற்பட்ட பெரு அழுத்தம் காரணமாக ஒரு பெரு வெடிப்பு நிகழ்ந்தது, அவற்றிலிருந்து இப்பிரபஞ்சம் விரிந்தது என்பதாகும்.

ஒன்றிலிருந்தே இந்த பிரபஞ்சம் உருவானது என்ற அறிவியல் உண்மையை நம் இலக்கியங்கள் கூறியிருந்தாலும் அவற்றை வள்ளலாரும் குறிப்பிடுகிறார்.

வெளியிடை ஒன்றே விரித்துஅதில் பற்பல
அளி உற வகுத்த அருட்பெருஞ்சோதி (253)

வெளி என்பது ஒன்றுதான், அவை பலவாக விரிந்தது என்ற உண்மையை இப்பாடல் வாயிலாக கூறுகிறார்.

மேலும்,

வெளியிடை பலவே விரித்து அதில் பற்பல
அளிதர அமைந்த அருட்பெருஞ்சோதி (254)

இவ்வாறான வெளி பல வெளியாக பிரிந்து அதில் அண்டங்கள், பேரண்டங்கள், கோள்கள், விண்மீன்கள், ஐம்பெரும் ஆற்றல்கள், இன்னும் வான்பொருட்கள் தோன்றி விரிந்தன என்கிறார்.

வெளியிடை உயிர் இயல் வித்தியல் சித்தியல்
அளிபெற அமைத்த அருட்பெருஞ்சோதி (255)

வெளியில் உயிர்களைப் படைத்தும் அவை வாழ்வதற்கான இயல்புகளையும் இவ்வுயிர்களுக்கான பேராற்றலும் சில அதிசய ஆற்றலையும் (சித்தர்கள், ஞானிகள் உணரக்கூடிய சித்தியல் ஆற்றல்) இவ்வெளியில் இருக்கிறது என்கிறார் வள்ளலார்.

அண்டமும் அதன் மேல் அண்டமும் அவற்றுள்
பண்டமும் காட்டிய பரம்பர மணியே (646)

அண்டங்களையும் அவற்றின் மேல் அடுக்காக உள்ள பிற அண்டங்களையும் அவற்றில் உள்ள கோள்கள், அசையும் அசையா பொருட்கள் உள்ளிட்ட வான் பொருட்கள் இருக்கின்றன என்கிறார் வள்ளலார்.

”இவ்வெளி எல்லாம் இலங்க அண்டங்கள்
அவ்வயின் அமைத்த அருட்பெருஞ்சோதி” (290)

என்ற வரியின் மூலம் இப்பரந்த வெளிகளில் ஒவ்வொன்றிலும் பற்பல அண்டங்களும் உள்ளடக்கி இருக்கிறது என்ற செய்தியை குறிப்பிடுகிறார்.

வெளியிடைப் பகுதியின் விரிவியல் அணைவியல்
அளிஉற அமைத்த அருட்பெருஞ்சோதி (247)

வெளியின் இரு ஆற்றலைப் பற்றி கூறுகிறார். ஒன்று வெளி விரிந்துக்கொண்டு போகும் விரிவாற்றலையும் இரண்டாவதாக மீண்டும் தன்னில் இழுத்து அணைத்துக் கொள்ளும் அணைவியல் ஆற்றலையும் குறிப்பிடுகிறார்.

வள்ளலார் குறிப்பிடும் இந்த அணைவியல் என்ற ஆற்றல் தான் இன்றைய நவீன பிரபஞ்சத்தின் உச்சபட்ச அறிவாக நவீன அறிவியலாளர் கருதுகிறார்கள். அவர்களின் ஆய்வுகளைப் பற்றி தெரிந்து கொண்டால் தான் வள்ளலாரின் வானியல் சிந்தனை எவ்வளவு வியப்பானது என்பது தெரியும்.

1300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பேரண்ட மூலத்தில் பெரும் அழுத்தத்தினால் ஏற்பட்ட பெருவெடிப்பில் விரியத் தொடங்கிய இப்பேரண்டத்தின் விரிவு அதன் பிறகும் விரிந்து கொண்டே இருக்கிறது என்ற உண்மையை 1920 ஆம் ஆண்டு பெல்ஜிய வானியல் அறிஞர் ஜார்ஜிஸ் லெமெய்டர் (Georges Lamaitre) கண்டறிந்து கூறினார். இன்னொரு வியப்பு என்ன வென்றால் இவ்விரிவு வேகம் இன்னமும் குறையவில்லை என்பதுதான். மேலும் இதே கால கட்டத்தில் அமெரிக்க வானியலாளர் எட்வின் ஹப்பிள் (Edwin Hubble) பூமியிலிருந்து பல்லாயிரக்கணக்கான கி.மீ. தொலைவில் இருக்கும் விண்மீன் கூட்டங்கள் மிக விரைவாக விலகிச் சென்றன என்றார். 

இப்படி விரிந்து கொண்டே செல்லும் போது ஒரு சமயத்தில் தன் விரிவை நிறுத்திக்கொண்டால் அதன் எதிர்வினையாக உள்ளிழுக்கும் ஆற்றலை அவை பெறக் கூடும். அவ்வாறான உள்ளிழுக்கும் பட்சத்தில் பரந்த விரிந்த இப்பேரண்டம் தான் தொடங்கிய புள்ளியிலே சுருங்கி அடங்கிவிடும். அதனை “பெருஞ் சுருக்கம்” (Big Crunch) என்று அழைக் கிறார்கள். பிரபஞ்ச விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின் இதனை ஒற்றைத்திரட்சி (Singularity) என்பார்.

இச்சுருக்க விதி கருந்துளைக் (Black hole) கோட்பாடுகளுடன் பொருத்தி நிறுவப்படுகிறது. கருந்துளை என்பது மிகச்சிறிய இடத்தில் அதிகமாக அடக்கி வைக்கப்பட்ட பல பொருட்களின் தொகுப்பாகும். இத்துகள் சுற்றியுள்ள அனைத்தையும் தன்னுள் ஈர்த்து அடக்கிக் கொள்ளும் பேராற்றலைப் பெற்றது.

இவற்றிலிருந்து பிரபஞ்சத்தில் இருக்கும் நட்சத் திரங்கள், கோள்கள், பால்வெளி மண்டலம் போல உள்ள எண்ணற்ற மண்டலங்கள் உள்ளிட்ட எதுவும் தப்பிக்க இயலாது; ஏன் ஒளியும்கூட தப்பிக்க இயலாது. மேலும் ஈர்க்கப்படும் ஒளி திரும்ப வர முடியாதபடி இந்த ஈர்ப்பு விசை தன்னுள் அடக்கிக் கொள்ளும், பிரபஞ்சம் அழிவு என்ற ஒன்றை சந்தித்தால் எல்லாமும் ஒரு புள்ளிக்குள் ஈர்க்கப்பட்டுவிடும் என்று அறிவியலாளர்கள் கூறு கிறார்கள்.
இவ்வாறான பிரபஞ்சத்தின் உச்சபட்ச அறிவியல் கோட்பாடான பெருஞ்சுருக்கம் மற்றும் கருந்துளைக் கோட்பாடுகளை மிக எளிமையாக அணைவியல் என்று போகிற போக்கில் குறிப்பிடும் வள்ளலாரின் பிரபஞ்ச அறிவு நம்மை வியக்கக் வைக்கிறது.

மேற்கண்ட அண்டவியல் விரிவியலில் விரிந்து போகிறது என்பதை நாம் அறிந்தோம். ஆனால் அது எப்படி, எந்த முறையில் விரிகிறது என்பதை இன்னமும் யாரும் விளக்கவில்லை. இவற்றை வள்ளலார் விரிவாக விளக்குகிறார். ஒரு சூத்திரம் போல் கூறுகிறார். அதாவது புதிய பொருள்கள் எப்படி பிறக்கிறது என்பதை விளக்குகிறார்.

ஒரு பொருளில் அகம், புறம், அகப்புறம், புறப்புறம் என்ற நான்கு நிலைகள் இருப்பதைக் குறிப்பிடும் வள்ளலார் அவை ஒவ்வொன்றிலும் உட்கூறுகளாக அடி, முடி, கடை என்ற நிலை இருப்பதாக விளக்குகிறார். இந்த நிலைகள் ஒன்றுக்கொன்று இணைதல் மூலம் புதிய பொருள் உருவாகிறது என்கிறார்.

எல்லா விதமான கணக்குகளுக்கும் 0 (சுழியம்) முதல் 9 வரை உள்ள எண்கள் அடிப்படை. இவற்றை கொண்டே பத்தாயிரம், இலட்சம், பத்து இலட்சம், கோடி, பத்துக் கோடி, பில்லியன், மில்லியன், டிரில்லியன் உள்ளிட்ட பெரும் மதிப்புகளும் எண்ணிக்கையும் உருவாகின்றன. அதாவது சிறிய எண்களே பெரும் மதிப்பு எண்களுக்கு அடிப்படை என்பதாகும். கணித மேதைகள் பலர் உலக விரிவு - கணித அடிப்படையிலேயே விரிகிறது என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதைப் போலத் தான் உலகில் எல்லா விதமான பொருள்களும் மேற்கண்ட வள்ளலார் குறிப்பிடும் அகம், அகப்புறம், புறம், புறப்புறம் அதில் உட்கூறுகளான அடி, முடி, கடை போன்றவற்றின் சேர்க்கையில் தான் தோன்றுகிறது என்பதையும் இவையே பொருள் பிறப்பதற்கான காரணம் என்கிறார் வள்ளலார்.

இவற்றை வேறு பாடலில் இச்சூத்திரத்தை பொருத்தி பாடியுள்ளார்.

ஆரியல் அகம்புறம் அகப்புறம் புறப்புறம்
ஆரமுது எனக்கருள் அருட்பெருஞ்சோதி (141)

ஆர் என்றால் ஒளி என்பதாகும். ஆரியல் என்றால் ஒளியியல் என்று பொருள். அதாவது ஒளியில் அகம், புறம், அகப்புறம், புறப்புறம் என்ற நான்கு நிலை இருப்பதைக் குறிப்பிடுகிறார். 

மேலும்,
அண்டப்புறப்புற அமுதம் பொழிந்து உயிர்
அண்டுறக் காத்தருள் அருட்பெருஞ்சோதி (374)

இப்பாடலில் அண்டத்தின் புறப்புற பகுதி மழை என்று குறிப்பிடுவதை கவனிக்கலாம். அமுதம் என்றால் மழையைக் குறிக்கும்.

இவ்விரிவுக் கோட்பாடு அண்டவியலுக்கும் பிண்ட வியலுக்கும் உள்ளிட்ட எல்லா பொருட்களுக்கும் பொருந்தும்.

இவ்விரிவியல் கோட்பாடுகளை இவ்வளவு துல்லிய மாக வள்ளலாரை தவிர வேறு யாரும் இதுவரையிலும் சொல்லவில்லை. வள்ளலாரின் வெளிவிரிவியல் சூத்திரம் நம்மை இன்னும் வியப்பில் ஆழ்த்துகிறது. இவற்றை நாம் இன்னமும் ஆராயவில்லை, இனிமேலாவது அவற்றை ஆராய்ந்து உலகத்திற்கு அறிய வைக்க வேண்டியது நம் கடமையாகும்.

ஐம்பெரும் ஆற்றல் தோற்றத்தையும் வள்ளலார் போகிற போக்கில் குறிப்பிடுகிறார்.

வானிடைக் காற்றும் காற்றிடை நெருப்பும்
ஆனற வகுத்த அருட்பெருஞ்சோதி (273)

நெருப்பிடை நீரும் நீரிடைப் புவியும்
அருப்பிட வகுத்த அருட்பெருஞ்சோதி (274)

வான்வெளியிலிருந்து காற்றும் காற்றிலிருந்து நெருப்பும் தோன்றின என்கிறார் வள்ளலார். தீயிலிருந்து நீரும் நீரினால் நிலமும் தோன்றியதை குறிப்பிடுகிறார்.

நீர்மேல் நெருப்பும் நெருப்பின் மேல் உயிர்ப்பும்
ஆர் உற வகுத்த அருட்பெருஞ்சோதி (275)

நீரின் மேல் நெருப்பும் அந்த நெருப்பின் மேல் உயிர்ப்பும் இருக்கிறது என்கிறார்.

நீரின் வெப்பநிலை குறையும்போது உறைபனியாகவும் சராசரி வெப்பநிலையில் இயல்பான நீராகவும் மேலும் அதீத வெப்ப நிலையில் ஆவியாகவும் வெப்ப நிலையைப் பொருத்து மாறுகிறது.

மேலும் நெருப்பில் உயிர்ப்பு இருப்பதாகக் குறிப்பிடுகிறார். நெருப்பிற்கு இரு இயல்புகள் உண்டு ஒன்று வெளிச்சம், இரண்டாவது வெப்பம். வெளிச்சத்தைப் பார்க்கலாம், வெப்பத்தைக் காண இயலாது, ஆனால் உணர முடியும் இவ்வாறு காண இயலாத வெப்ப ஆற்றலே உயிர்களை இயக்குகிறது. வெப்பம் இல்லாத பொருட்கள் இல்லை, அதுவும் உயிர் உள்ள பொருட்கள் அனைத்திலும் வெப்பம் இருக்கும், வெப்பம் இல்லாமல் இருந்தால் அவை உயிருடன் இல்லை என்ற பொருள்.

வெப்பம் இல்லாத உடல் பிணமாகும். மனித விந்தில் வெப்ப நிலை குறைந்தால் அவ்விந்து உயிராற்றல் இழந்து குழந்தையின்மை ஏற்படலாம் என மருத்துவ அறிவியலாளர்கள் கூறுவது குறிப்பிட்டதக்கது. இவற்றையே நெருப்பின் மேல் உயிர்ப்பும் என்று குறிப்பிடுகிறார் வள்ளலார். 

இப்பிரபஞ்ச வெளியில் பரந்து விரிந்திருக்கிற அண்டங்கள் நிறைந்துள்ளன. இவ்வாறு விரிந்திருக்கிற வெளிகளையும் அவற்றின் அமைப்பையும் வள்ளலார் விவரிக்கிறார்.

வெளிவகை விரிவுப் பகுதியில் பலவகை வெளிகளை வகைப்படுத்துகிறார். அவை பூதவெளி, உயிர்வெளி, பகுதி வெளி, கலைவெளி, சுத்தநல்வெளி, பரவெளி, பரம்பர வெளி, பராபர வெளி, பெருவெளி, பெருஞ்சுக வெளி போன்ற வெளிகள் இருப்பதாக விளக்கிச் செல்கிறார்.

இவ்வாறான வெளிகளில் ஒலி நிறைந்திருக்கிறது என்ற அறிவியல் செய்தியை,

வெளியினில் ஒலி நிறைவியன் நிலை அனைத்தும்
அளியுற அமைத்த அருட்பெருஞ்சோதி (249)

வெளி எங்கிலும் ஒலி பரவி இருக்கிறது, அவற்றோடும் விரிவடைகிறது என்று கூறுகிறார்.

மேலும் கணக்கிட முடியாத இப்பிரபஞ்சத்தை ஆராய்வதற்கும் காண்பதற்கும் வழியை அறிவியல் முறையில் வள்ளலார் கீழ்க்காணும் பாடலில் தெரியப்படுத்துகிறார்.

அண்டகோடிகள் எலாம் அரைக்கணத்து ஏகிக்
கண்டுகொண்டிட ஒளிர் கல நிறை மணியே (651)

கோடிக்கணக்கான அண்டங்களை அரை நொடியில் சென்று அங்குள்ள பண்டங்களை (பொருட்களை) கண்டு கொள்ள ஒளியை படைத்த மணியே என்கிறார்.

அதாவது ஒளியே மிக அதிவேகமாக பயணிக்கக்கூடிய ஊடு என்கின்ற அறிவியல் செய்தியை கூறுகிறார். இன்றைய நவீன அறிவியல் கூறும் செய்தியை வள்ளலார் உணர்ந்து கூறி இருக்கிறார், நாம் காணும் ஒவ்வொரு பொருளும் நம் கண்ணுக்கு தெரிகிறது என்றால் ஒளி தான் காரணம். பொருள் மீது ஒளி பட்டு எதிரொளிக்கும் போது ஒரு பொருள் நமக்கு தெரிகிறது என்பது அறிவியல் உண்மை.

வெற்றிடத்தில் ஒளி வேகம் விநாடிக்கு 299,792,458 மீட்டர்களாகும். ஒளியின் வேகம் ஒரு மாறிலி (constant) ஆகும்.

ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாட்டின்படி ஒளியின் திசைவேகம் தான் இப்பிரபஞ்சத்தின் வேக எல்லையாகும். ஒளி என்பது போட்டான் (photons) எனும் நிறை இல்லாத ஒரு துகள் ஆகும். இத்துகள்கள் புவியீர்ப்பு விசைக்கு கட்டுபடாததால் ஒளியின் திசைவேகம் தான் இப்பிரபஞ்சத்தின் வேக எல்லை என ஐன்ஸ்டின் கூறியுள்ளார்.

இதுவரை நாம் கண்டது அருட்பெருஞ்சோதி அகவலில் ஒரு சில பாடல்களை மட்டுமே. இதில் மொத்தம் 798 இரண்டடி செய்யுள் பாடல்கள் உள்ளன. அதில் இருக்கும் அனைத்து பாடல்களும் அறிவியல் செய்திகளை நிரப்பி இருக்கின்றன. இதில் கற்பனை, கட்டுக்கதைகள், புனைவு, புகழ் பாடுதல் உள்ளிட்ட எதுவும் இல்லை என்பது மேலும் சிறப்பிற்குரியது.

ஆனால் இவ்வளவு அறிவுக்களஞ்சியமாக இருக்கக் கூடிய வள்ளலாரின் பெருமிதங்கள் வெளியுலகத்திற்குத் தெரியாமல் போனது எப்படி என்பது பெரும் வருத்தத்தைத் தருகிறது.

ஈராயிரம் ஆண்டுகளாக நிலவி வந்த தமிழர் அறிவியல், பண்பாடு உள்ளிட்டவற்றை பகுத்தறிவு என்ற பெயரில் நம் மக்களைக் கற்க விடாமல் செய்துவிட்டனர்.

தமிழ் காட்டுமிராண்டி மொழி, அவற்றில் ஒன்று மில்லை எல்லாம் மூட நம்பிக்கைகள் நிறைந்துள்ளது. அவற்றைப் புறக்கணியுங்கள், வீட்டில் மனைவியிடம், வேலைக்காரப் பெண்களிடம் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று கூறப்பட்டது. இவ்வாறு நம்மின அறிவை மண் போட்டு மூடியது பகுத்தறிவுப் பகலவர் கூட்டம்!

முற்போக்கு, பகுத்தறிவு போன்ற சொற்களில் நம் தமிழினத்தின் அறிவை மறைத்து விட்டார்கள். தமிழில் ஒன்றுமில்லை - தமிழ் இலக்கியங்களில் ஒன்றுமில்லை, என்ற எவ்வித ஆய்வும் செய்யாமல் வாய்க்கு வந்த தெல்லாம் சொல்லி தமிழினத்தை தாழ்வு மனப்பான் மைக்கு உள்ளாக்கி விட்டனர்.

இவ்வாறான தாழ்வு மனநிலையிலிருந்து நம்மினத்தை விடுவிக்க வந்தவரே வள்ளலார்.

தமிழரின் பண்பியல், வாழ்வியல், வானியல், மெய்யியல், தத்துவவியல், உயிர் நேயப் பண்பாடு, சாதி ஒழிப்பு, ஆண் - பெண் சமத்துவம், உருவ வழிபாடு மறுப்பு உள்ளிட்ட எல்லாக் கூறுகளையும் வெளிக் கொணர்ந்தவர் வள்ளலார். தமிழினம் மிகச்சிறந்த வானியலாளர் மரபு கொண்டது என்பதைத் தம் அகவல் கொண்டு நிறுவியவர் வள்ளலார்.

வள்ளலாரின் வானியல் கோட்பாடுகள் இன்னமும் நுட்பமாக ஆராயப்பட வேண்டும், அவ்வாறு ஆராயப்பட்ட கோட்பாடுகளைக் கல்விக் கூடங்களில் பாடமாக்க வேண்டும்.

மேலும் தமிழ்நாடு அரசு கல்விக்கூடங்களில் “அறிவியல் தமிழ்” என்ற பாடத்தை மறு சீரமைத்து தமிழ் இலக்கியங்களில் இருக்கும் விஞ்ஞானம், வானியல் உள்ளிட்ட பல அறிவியல் செய்திகளை தொகுத்து “அறிவியல் தமிழ்” என்ற பாடத்தை கல்வி நிறுவனங்களில் கற்பிக்க வேண்டும்.

தமிழ் முன்னோரின் அறிவியல் அறிவை அடித்தளமாகக் கொண்டு நவீன அறிவியலை அத்துடன் இணைத்து இங்கு அறிவியல் வளர்ச்சி காணவேண்டும். இந்த அறிவியல் வளர்ச்சி ‘எவ்வுயிரும் நம் உயிரே’ என்ற தமிழர் அறத்திற்கு இசைய வளரவேண்டும். வள்ளலாரின் அறிவியல் பார்வையும், அறவியல் தேவையும் இதில் நமக்கு வழிகாட்டும்!

(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2019 ஏப்ரல் மாத இதழ்)

கண்ணோட்டம் இணைய இதழ்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: tamizhdesiyam.com

Tuesday, April 16, 2019

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 90 விழுக்காட்டு இடங்களை புதுச்சேரி மாணவர்களுக்கே ஒதுக்க வேண்டும்! பல்கலைப் பதிவாளரிடம் புதுச்சேரி மாணவர் முன்னணி கோரிக்கை!

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 90 விழுக்காட்டு இடங்களை புதுச்சேரி மாணவர்களுக்கே ஒதுக்க வேண்டும்! பல்கலைப் பதிவாளரிடம் புதுச்சேரி மாணவர் முன்னணி கோரிக்கை!
புதுச்சேரி பல்கலைக்கழகம் 1985 ஆம் ஆண்டு காலாப்பட்டு பகுதியில் 870 ஏக்கர் வேளாண் விளை நிலங்கள் மீது அமைக்கப்பட்ட பல்கலைக்கழகமாகும். இந்த பல்கலைக்கழகம் அமைக்கப்படுவதற்காக சற்றோப்ப 870 ஏக்கரில் நடைபெற்று வந்த விவசாயம் முற்றிலுமாக கைவிடப்பட்டது.

இப்பல்கலைக்கழகம் புதுச்சேரியில் அமைக்கப்படுவதற்கான நோக்கத்தை அப்போதே தெளிவுபடுத்தினார்கள். புதுச்சேரி மக்கள் தங்களுடைய கல்வி - வேலைவாய்ப்பு ஆகியவற்றை வளர்த்தெடுக்கும் நோக்கத்தில் தான் இப்பல்கலைக்கழகம் அமைக்கப்படுவதாக அன்றைய இந்திய தலைமை அமைச்சர் ராஜீவ் காந்தி வாக்குறுதி அளித்தார். அதன் பெயரிலேயே வேளாண் விளை நிலங்களின் மீது இந்த பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

ஆனால் இந்த நோக்கங்கள் இன்றைக்கு சரிவர கடைபிடிக்கப்படுவதில்லை!
புதுச்சேரி பல்கலைக்கழகம் வெளி மாநில மாணவர்களால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. புதுச்சேரி மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தில் பயிலும் புதுச்சேரி மண்ணின் மைந்தர்கள் மிக மிகக் குறைவு! புதுச்சேரி மாணவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.

ஏற்கெனவே புதுதில்லியில் அம்மாநில அரசு மத்திய பல்கலைக் கழகமாக உள்ள தில்லி பல்கலைக்கழகத்தில் அந்த மண்ணின் மக்களுக்கு 85 விழுக்காடு இட ஒதுக்கீட்டை 2017ஆம் ஆண்டிலிருந்து செயல்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக மத்திய பல்கலைக்கழக இருந்தாலும் கூட அந்த மண்ணின் மக்கள் டெல்லியில் இருக்கக்கூடிய பல்கலைக்கழகத்தில் படிக்கும் கூடிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

ஆந்திராவில் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் 1978ஆம் ஆண்டிலிருந்து இந்திய குடியரசுத் தலைவர் தனி ஆணையின் பேரில் 85 விழுக்காடு அந்த மண்ணின் மக்களுக்கே என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீட் தேர்வு ஆந்திராவில் மட்டும் பொருந்தாது என்ற நிலை இருக்கிறது.

எனவே இந்த நடைமுறைகளை பின்பற்றி புதுச்சேரியிலும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 90 விழுக்காடு இடங்களை புதுச்சேரி மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தமிழக மாணவர் முன்னணி சார்பில் பல்கலைக்கழக பதிவாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

பல்கலைக்கழகப் பதிவாளர் திருமதி. சித்ரா அவர்களிடம் புதுச்சேரி மாணவர் முன்னணி தோழர்கள் உதயச்சங்கர், கணேசமூர்த்தி, தினேஷ், பவித்திரன்,
தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் வே. சுப்ரமணிய சிவா உள்ளிட்டோர் இம்மனுவை இன்று (16.04.2019) காலை நேரில் கையளித்தனர்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 25 விழுக்காட்டு இடங்களை புதுச்சேரி மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டுமென தாம் இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி உள்ளதாக பதிவாளர் திருமதி. சித்ரா தெரிவித்தார். அதற்கு நன்றி தெரிவித்த நம் தோழர்கள் 25 விழுக்காட்டு இடங்கள் போதாது எனவும், 90 விழுக்காட்டு இடங்களை புதுச்சேரி மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், எவ்வித முன்னறிவிப்புமின்றி புதுச்சேரி பல்கலைகழகத்தின் கல்வி கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது ஏழை எளிய மாணவர்களை கடுமையாக பாதிக்கக்கூடிய நடவடிக்கை எனக் குறிப்பிட்டு, இக் கல்வி கட்டண உயர்வைத் திரும்பப் பெற்று பழைய கல்வி கட்டண விகிதம் தொடரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புதுச்சேரி பல்கலைக் கழக நிர்வாகத்தை வலியுறுத்தி வேண்டுகோள் விடப்பட்டது.

#வெளியார்

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Sunday, April 14, 2019

பொன்மலை தொடர்வண்டிப் பணிமனையில் தமிழர்களுக்குத் தடை! வடவர்க்கே வேலை! திருச்சி, பொன்மலை பணிமனையில் த.தே.பே. நடத்தும் தமிழர் மறியல் போராட்டம்!

பொன்மலை தொடர்வண்டிப் பணிமனையில் தமிழர்களுக்குத் தடை! வடவர்க்கே வேலை! திருச்சி, பொன்மலை பணிமனையில் த.தே.பே. நடத்தும் தமிழர் மறியல் போராட்டம்!
#TamilnaduJobsForTamils

தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரும் அளவில் வெளி மாநிலத்தவர்கள் குடியேறிக் கொண்டுள்ளனர். தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்கள் - அலுவலகங்கள் - தொழிற்சாலைகள் அனைத்திலும் இந்திக்காரர்களை இந்திய அரசு திட்டமிட்ட முறையில் பணியமர்த்தி வருகின்றது.

அண்மையில் திருச்சி பொன்மலையில் தென்னகத் தொடர்வண்டித் துறையில் பழகுநர் பணியிடங்களுக்காக எடுக்கப்பட்ட 1765 பேரில் 1,600 பேர் வடமாநிலத்தவர் ஆவர். அவர்களில் 300 பேர், திருச்சி பொன்மலை தொடர்வண்டிப் பணிமனையில் பணியில் சேர்ந்துள்ளனர்.

இவர்களை வெளியேற்ற வேண்டுமென வலியுறுத்தி, வரும் தி.பி. 2050 சித்திரை 20 - 3.5.2019 வெள்ளி காலை 11 மணிக்கு, திருச்சி, பொன்மலை பணிமனை (ஒர்க்சாப்) முன்பு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி தலைமையில், தமிழர் மறியல் போராட்டம் நடைபெறுகின்றது.

தொடர்வண்டித்துறை (இரயில்வே) நிர்வாகமே!
பொன்மலைப் பணிமனையில் புகுத்தப்பட்டுள்ள வெளியாரை வெளியேற்று! புதிதாகப் புகுந்துள்ள 300 பழகுநர் (அப்ரண்டீஸ்) அனைவரையும் வெளியேற்று! அந்த வேலைகளைத் தமிழர்களுக்குக் கொடு!

இந்திய அரசே!
தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்கள், அலுவலகங்கள் அனைத்திலும் 10 விழுக்காட்டிற்கு மேல் பணியில் உள்ள வெளிமாநிலத்தார் அனைவரையும் வெளியேற்று! 90 விழுக்காடு வேலைகளைத் தமிழர்களுக்கு வழங்கு! தமிழர் தாயகமான தமிழ்நாட்டை அயல் இனத்தார் மண்டலம் ஆக்காதே!

உனது சதித்திட்டத்தைத் தகர்ப்போம்! தமிழர் தாயகம் காப்போம்!

தமிழ்நாடு அரசே! 
தமிழர்களுக்குரிய வேலைகளை அயலார் பறிக்கத் துணைப்போவதேன்? தமிழ்நாட்டை அயலார் மண்டலமாக்கும் தில்லியின் சதியை அனுமதிப்பதேன்? மண்ணின் மக்கள் வேலை உரிமைக்கு கர்நாடகம், குசராத், மராட்டியம், சதீசுகட் மாநிலங்களில் 
உள்ளது போல் தமிழ்நாட்டில் சட்டம் இயற்ற மறுப்பதேன்?

தமிழ்நாட்டு ஆளுங்கட்சி - ஆண்டகட்சித் தலைவர்களே!
உங்கள் பணி தமிழர்களைக் காப்பதா? தில்லிக்குக் கங்காணி வேலை பார்ப்பதா?

தமிழர்களே,
உங்கள் உரிமைத் தாயகம் அயலார் மண்டலமாவதை அறிந்தீர்களா? ஒரு கோடித் தமிழ் இளையோர் வேலை இன்றி 
வீதிகளில் அலைவதை உணர்ந்தீர்களா? “அறிந்தோம்; உணர்ந்தோம்” என்பது உங்கள் விடையானால் வாய்ப்புள்ளோர் மறியலுக்கு வாருங்கள்; வாய்ப்பில்லாதோர் இச்செய்தியைப் பரப்புங்கள்!

#TamilnaduJobsForTamils

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Wednesday, April 10, 2019

தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் கைத்தடியாக செயல்படுகிறது! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கண்டனம்!

தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் கைத்தடியாக செயல்படுகிறது! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கண்டனம்!
தேர்தல் ஆணையம் அரசமைப்புச் சட்டப்படி தன்னதிகார அமைப்பு; அதாவது தன்னாட்சி அமைப்பு. ஆனால், அது ஆளும் பா.ச.க.வின் கைத்தடி அமைப்பாக மாறிப்போனது. தமிழ்நாட்டில் பா.ச.க. – அ.தி.மு.க. கூட்டணியின் குற்றேவல் புரியும் அமைப்பாக அது குறுகிப்போனது.

தேர்தல் சின்னம் ஒதுக்குவதில் நாம் தமிழர் கட்சிக்கும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கும் வேண்டுமென்றே திரிபு வேலைகள் செய்தது. காலதாமதம் செய்தது. அ.ம.மு.க.விற்கு உச்ச நீதிமன்றத்தின் ஆணையால்தான் கடைசி நேரத்தில் ஒரே வகைத் தேர்தல் சின்னம் ஒதுக்கியது.

இப்பொழுது கணிப்பொறியில் செய்யப்பட்டுள்ள தேர்தல் சின்னங்களில் நாம் தமிழர் கட்சியின் கரும்பு உழவர் சின்னம் கண்ணுக்குத் தெரியாத அளவில் வேண்டுமென்றே மங்கலாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அச்சின்னத்தை வாக்காளர்கள் தேடிக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.

அ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு அடுத்த சுயேட்சை வேட்பாளர்ரின் சின்னமாக அக்கட்சியின் பழைய குக்கர் சின்னத்தை வழங்கியுள்ளார்கள். எடுத்துக்காட்டாக, திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் எஸ். காமராஜ் (மன்னார்குடி). இதற்கு அடுத்த பெயராக உள்ள பி. காமராஜ். (கர்ணக்கொல்லை நன்னிலம்) – சுயேட்சை வேட்பாளர்க்கு பிரஷர் குக்கர் சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது.

அ.ம.மு.க. ஆதரவு வாக்காளர்களைக் குழப்ப வேண்டும் என்பதற்காகப் பல தொகுதிகளில் பரிசுப் பெட்டிக்கு அடுத்த சின்னமாக வரும் வகையில் பிரஷர் குக்கர் ஒதுக்கப்பட்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிகள்!

நாம் தமிழர் கட்சி வடசென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளர் காளியம்மாள் அவர்கள், தங்கள் கட்சிச் சின்னம் மற்ற சின்னங்களைப் போல் தெளிவாகத் தெரியும் வகையில் பதிவு செய்ய ஆணையிட வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். ஆனால், கடைசி நேரம்; கால அவகாசம் இல்லை என்று உயர் நீதிமன்றம் அம்மனுவைத் தள்ளுபடி செய்தது. இது சரியல்ல!

கணிப்பொறி யுகத்தில், அதுவும் மோடியின் “டிஜிட்டல் இந்தியா”வில் மேற்கண்ட குறையைக் களைந்து, கரும்பு உழவர் சின்னத்தைத் தெளிவாகத் தெரியும்படி பதிவிட அதிகநேரம தேவைப்படாது.

தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் கைத்தடியாக செயல்படுவது வன்மையான கண்டனத்திற்குரியது!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Sunday, April 7, 2019

2019 மே 14 அன்று கந்தர்வக்கோட்டை - கல்லாக்கோட்டை சாராயத் தொழிற்சாலை முற்றுகைப் போராட்டம். மகளிர் ஆயம் சிறப்புப் பேரவை தீர்மானம்!

2019 மே 14 அன்று கந்தர்வக்கோட்டை - கல்லாக்கோட்டை சாராயத் தொழிற்சாலை முற்றுகைப் போராட்டம்.  மகளிர் ஆயம் சிறப்புப் பேரவை தீர்மானம்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மகளிர் அமைப்பான “மகளிர் ஆயம்” – தமிழ்நாடு சிறப்புப் பேரவைக் கூட்டம், இன்று (07.04.2019) தஞ்சை பெசண்ட் அரங்கில் தோழர் ம. இலட்சுமி அம்மாள் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது. தோழர் செம்மலர் வரவேற்றார். மகளிர் ஆயம் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் தோழர் மதுரை அருணா மகளிர் ஆயத்தின் செயல்பாட்டு அறிக்கையை முன்வைத்துப் பேசினார். முன்னதாக, மகளிர் ஆயத்தின் மறைந்த முன்னோடிகள் சென்னை சாதிக்குல் ஜன்னா - தஞ்சை சரசுவதி ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து ஒரு நிமிடம் அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.

மகளிர் ஆயத்தின் தலைவராக தோழர் ம. இலட்சுமி, துணைத் தலைவராக தோழர் பே. மேரி, பொதுச்செயலாளராக தோழர் அருணா, துணைப் பொதுச்செயலாளராக தோழர் க. செம்மலர், பொருளாளராக தோழர் பெண்ணாடம் கனிமொழி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 15 பெண் தோழர்களைக் கொண்ட புதிய செயற்குழு தேர்வு செய்யப்பட்டது.

சிறப்புப் பேரவையையும், புதிய பொறுப்பாளர்களையும் வாழ்த்தி தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை ஆகியோர் உரையாற்றினர். நிறைவில், தோழர் இளவரசி நன்றியுரையாற்றினார்.
கூட்டத்தில், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் – 1

சாராயத் தொழிற்சாலை முற்றுகைப் போராட்டம்!

தமிழ்நாடு அரசே மது விற்பனை நடத்தி தெருவெங்கும் மது ஆறாக ஓடிக் கொண்டிருப்பதற்கும், அதன் காரணமாக ஒவ்வொரு குடும்பமும் சீரழிந்து வருகின்றது என்பதற்கும் புள்ளி விவரங்கள் தேவையில்லை.

டாஸ்மாக் மதுவால் ஒவ்வொரு நாளும் குடும்ப அமைதி குலைந்து கொண்டிருக்கிறது. விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. குற்றங்கள் அதிகரித்துக் கொண்டுள்ளது; பாலியல் வன்முறைகளுக்குப் பின்னணியில் மதுப்பழக்கம்தான் இருக்கிறது என்பதை எல்லா ஊடகங்களும், நீதிமன்றங்களும் சான்று கூறுகின்றன. மருத்துவ வல்லுனர்களும் இதைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். மது அருந்துவோர் உருக்குலைந்து அகால மரணமடைகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு மது விற்பனைக் குறியீடு வைத்து சாராய வணிகம் செய்வது, தமிழ்நாட்டுக்குப் பேரழிவை உண்டாக்குகிறது. “மதுவிலக்கை படிப்படியாக நிறைவேற்றுவோம்” என்றும், “டாஸ்மாக் கடைகளை நெடுஞ்சாலைகளில் இருந்து எடுப்போம்” என்றும் சொல்லி கொண்டிருக்கிறார்களே தவிர சட்டத்தின் சந்து பொந்துகளைப் பயன்படுத்தி மது விற்பனையை அதிகரிப்பதிலேயே தமிழ்நாடு அரசு குறியாக இருக்கிறது.

மகளிர் ஆயம் தொடர்ந்து பல ஆண்டுகளாக டாஸ்மாக் கடைகளை இழுத்துப் பூட்ட வேண்டும் என்று போராட்டங்களை நடத்தி வருகிறது.

தமிழ்நாடு அரசு மதுத் தீமையை ஏற்றுக்கொண்டாலும் அரசாங்கத்தின் நிதி நிலையைப் பெருக்குவதற்கு இதைத் தவிர வேறு வழி இல்லை என்பது போல ஒவ்வொரு நிதி நிலை அறிக்கையின் போதும் சொல்லிக்கொண்டிருக்கிறது. ஆனால், உண்மை நிலை வேறானது!

எடுத்துக்காட்டாக, கடந்த நிதியாண்டில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக்கின் மூலமாக பெற்ற விற்பனை வருமானம் 26 ஆயிரத்து 796 கோடி ரூபாய்! தமிழ்நாடு அரசு அரிசி, மடிக்கணினி. மின்விசிறி, கிரைண்டர், வேட்டி சேலை, பசுமை வீடுகள், மருத்துவ காப்பீடு, பள்ளிச்சீருடை, பேருந்து சலுகை, தங்கத்தாலி, விலையில்லா ஆடு மாடு, மாணவர்களுக்கு மிதிவண்டி நோட்டுப் புத்தகம் போன்ற அனைத்து இலவசங்கள் - விலையில்லா அறிவிப்புகளில் செலவிட்ட தொகை இதே நிதியாண்டில் 12 ஆயிரத்து 274 கோடி ரூபாய் தான்! எனவே இலவசங்களை வழங்குவதற்காகத்தான் மதுவிற்பனையை தொடர்கிறோம் என்று சொல்வதில் பொருளில்லை.

இன்னொருபுறம் அரசாங்கத்தின் வருமானத்தை பெருக்குவதற்கான வழிகள் குறைந்திருக்கிறது. இந்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) கொண்டு வந்துவிட்டது எனக் கூறுவது டாஸ்மாக் தொடர்வதற்கு பொருத்தமான காரணமில்லை! மாநில அரசின் வருவாயைப் பெருக்க மாற்று வழிகள் இருக்கின்றன.

எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டிலிருந்து இந்திய அரசு வசூலித்து செல்கிற நேர்முக மறைமுக வரிகள் தொகை ஆண்டுக்கு ஒரு இலட்சத்து 32 ஆயிரத்து 483 கோடி ரூபாய் ஆகும்! இதுதவிர தமிழ்நாட்டில் இருந்து ஒரு இலட்சத்து 96 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி ஆகியிருக்கிறது. இந்திய அரசுக்கான வருமானத்தில் 30 விழுக்காடு தமிழ்நாட்டிலிருந்துதான் செல்கிறது.

இவ்வளவு வருமானத்தை இந்திய அரசுக்கு ஈட்டித் தரும் தமிழ்நாடு, அதில் தனக்குரிய பங்கைக் கோரிப் பெற்றாலே நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கும், அரசை நடத்துவதற்கும் போதிய நிதி கிடைக்கும். எனவே இதை உணர்ந்து தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் இருந்து இந்திய அரசு வசூலிக்கும் வரி வருவாயிலும் ஏற்றுமதி வருவாயிலும் கிடைக்கும் தொகையில் பாதியை வலியுறுத்திப் பெற வேண்டும்.

இதைச் செய்வதற்கு மாறாக டாஸ்மாக் கடைகளின் விற்பனை மூலமாகத்தான் எங்களுக்கு முதன்மையான வருமானம் வருகிறது என்று சொல்வதை சமூகத்தின் மீது அக்கறையுள்ள யாரும் ஏற்க முடியாது.

இன்னொரு காரணத்தையும் தமிழ்நாடு அரசு கூறுகிறது. அரசு மதுவிற்பனையை செய்யாவிட்டால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்று கூறுகிறது. காவல்துறையும், மதுவிலக்கு அமலாக்கத் துறையும் செயலற்றுதான் இருக்கும் என்று தமிழ்நாடு அரசே கூறும் ஒப்புதல் வாக்குமூலம் இது! மது விலக்கை உறுதியாக நிறைவேற்றுவதற்கு தன்னால் முடியாது என்பதால், டாஸ்மாக்கை நடத்துகிறோம் என்று தமிழ்நாடு அரசு கூறுமானால், தங்களது செயலற்றத்தன்மைக்கு தமிழ்நாட்டு மக்களைப் பலியிடும் பொறுப்பற்ற செயலாகும் அது! எனவே, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகளை முற்றிலும் மூட வேண்டும் என மகளிர் ஆயம் தமிழ்நாடு சிறப்பு பேரவை வலியுறுத்துகிறது!

டாஸ்மாக் கடைகளை முற்றிலும் மூட வேண்டும் என வலியுறுத்தி வரும் 2019 மே 14 அன்று டாஸ்மாக் கடைகளுக்காக மது உற்பத்தி செய்யும் புதுக்கோட்டை மாவட்டம் – கந்தர்வக்கோட்டை வட்டம் – கல்லாக்கோட்டையிலுள்ள KAALS டிஸ்டிலரீஸ் ஆலை முன் முற்றுகைப் போராட்டம் நடத்துவதென்று மகளிர் ஆயம் தமிழ்நாடு சிறப்பு பேரவை தீர்மானிக்கிறது! இம்முற்றுகைப் போராட்டத்திற்கு அனைத்துத் தரப்புப் பெண்களும் திரளாக வந்து பங்கேற்க வேண்டும் என்று மகளிர் ஆயம் அன்புரிமையோடு கேட்டுக் கொள்கிறது!
தீர்மானம் – 2

மாவட்டந்தோறும் மகளிர் சிறப்பு நீதிமன்றங்கள் வேண்டும்!

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக் குற்றங்களை விசாரித்து உடனடியாகத் தீர்ப்பு வழங்க மாவட்டந்தோறும் மகளிர் சிறப்பு நீதிமன்றங்களை ஏற்படுத்த வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் எந்த அதிகார மட்டத்தில் இருந்தாலும், எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும் – எந்த அரசியல் பின்னணி இருந்தாலும் அவர்களை உடனுக்குடன் விசாரித்து - வழக்குகளை ஓராண்டுக்குள் முடித்துத் தீர்ப்பு வழங்கும் நடைமுறையை இந்நீதிமன்றங்களில் கடைபிடிக்க வேண்டும்.

தீர்மானம் – 3

33% மகளிர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்!

புதிதாக அமையும் நாடாளுமன்றத்தில் 33% மகளிர் இட ஒதுக்கீட்டுக்கான சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

செய்தித் தொடர்பகம், 
மகளிர் ஆயம்

தொடர்புக்கு:
7373456737, 9486927540
முகநூல் : www.fb.com/MagalirAyam

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Thursday, April 4, 2019

விதிகளுக்கு முரணாக மேட்டூர் தண்ணீரை தமிழ்நாடு அரசு விரையமாக்குவது ஏன்? தோழர் பெ. மணியரசன் கேள்வி!

விதிகளுக்கு முரணாக மேட்டூர் தண்ணீரை தமிழ்நாடு அரசு விரையமாக்குவது ஏன்? காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் கேள்வி!
மேட்டூர் அணையிலிருந்து கடந்த 31.03.2019 முதல் “குடிநீருக்காக” என்று சொல்லி 8,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதற்கு முன்னர் “குடிநீருக்காக” 8,000 கன அடி தண்ணீர் திறந்துவிட்டதில்லை. கடந்த காலத்தில் குடிநீர் பற்றாக்குறைக்காக அதிகபட்சமாக 2,000 கன அடி திறந்துவிட்டிருக்கிறார்கள்.

இந்த 8,000 கன அடி தண்ணீர் - காவிரிப் பாசன வரம்பிற்கு உட்படாத சாகுபடி நிலங்களுக்கு இந்தக் கோடை காலத்தில் திருப்பி விடப்படுகிறதோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. மேட்டூரில் இருக்கின்ற சேமிப்புத் தண்ணீரை விதிமுறைகளுக்குப் புறம்பாக திறந்துவிட்டு காலி செய்து விட்டால், குறுவை சாகுபடிக்கு நீர் சேமிப்பு இருக்காது!

வழக்கமாக, பருவமழை காலத்தில் மேட்டூரில் தேங்கியுள்ள மிச்ச நீரை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான், கர்நாடகத்திலிருந்து வர வேண்டிய தண்ணீரில் ஓரளவைப் பெற்று குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணைத் திறக்கப்பட்டு வந்தது. கடந்த பருவமழை அதிகமாக இருந்ததால், மேட்டூர் அணையில் மார்ச்சு இறுதி வாக்கில் 64 அடி உயரத்திற்குத் தண்ணீர் இருந்தது.

அந்த சேமிப்பைக் காலி செய்கின்ற வகையில், 8,000 கன அடி திறந்துவிட்டதைக் கண்டித்து, கடந்த 02.04.2019 அன்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தஞ்சையில் தொலைக்காட்சி ஊடகத்தினரை சந்தித்து நானும், காவிரி உரிமை மீட்புக் குழு பொறுப்பாளர்களான ஐயனாபுரம் முருகேசன் அவர்களும், மணிமொழியன் அவர்களும் 8,000 கன அடி திறப்பதை நிறுத்த வேண்டும், 2,000 கன அடி திறந்துவிட்டாலே குடிநீருக்குப் போதும் என அறிக்கை கொடுத்தோம்.

அதன்பிறகு, 03.04.2019 முதல் மேட்டூரில் திறந்துவிடப்படும் அளவு 6,000 கன அடியாகக் குறைக்கப்பட்டாலும், இதுவும் அதிகமான வெளியேற்றம்தான். குறைக்கப்பட்ட அளவு போதாது! கிடுகிடுவென்று மேட்டூர் நீர் மட்டம் குறைந்து வருகிறது. இந்த விகிதத்தில் மேட்டூர் அணை நீர் மட்டம் குறைந்துவந்தால், குறுவை சாகுபடிக்கு தண்ணீர் இருக்குமா என்பது மட்டுமல்ல, கடும் கோடைக்காலத்தில் குடிநீருக்குக்கூட தண்ணீர் இல்லாத நிலை உருவாகும்.

கடந்த 2018 திசம்பரிலிருந்து மாதந்தோறும் திறந்துவிட வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிடவில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி திசம்பர் மாதம் 7.3 டி.எம்.சி., சனவரி மாதம் – 3 டி.எம்.சி., பிப்ரவரி மாதம் - 2.3 டி.எம்.சி., மார்ச்சு மாதம் – 2.3 டி.எம்.சி. – ஆக மொத்தம் 14.9 டி.எம்.சி. தண்ணீர் வந்திருக்க வேண்டும். இந்தத் தண்ணீரைத் திறந்துவிடும்படி காவிரி மேலாண்மை ஆணையத்தைத் தமிழ்நாடு அரசு ஏன் வலியுறுத்தவில்லை?

இதில் கடமை தவறிய தமிழ்நாடு அரசு, குறைந்தளவு இருக்கின்ற மேட்டூர் நீரையும் விதிகளுக்கு முரணாகத் திறந்து விரையமாக்குவது வன்மையான கண்டனத்திற்குரியது. எனவே, வெளியேற்றும் நீரின் அளவை 2,000 கன அடிக்குள் வைக்குமாறும், மாத வாரியாக கர்நாடகத்திலிருந்து பெற வேண்டிய காவிரி நீரைத் திறந்துவிட மேலாண்மை ஆணையத்தைத் வலியுறுத்திப் பெறுமாறும் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Monday, April 1, 2019

அ.இ.அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் காவிரி உரிமையைக் கைவிட்டது ஏன்? தோழர் பெ. மணியரசன் கேள்வி!

அ.இ.அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் காவிரி உரிமையைக் கைவிட்டது ஏன்? காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் கேள்வி!
கடந்த 30.03.2019 அன்று நாகப்பட்டினம் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் பரப்புரை செய்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், “காவிரித் தண்ணீரைக் கொண்டு வருவதற்காக சட்டப் போராட்டம் நடத்திக் களைத்துப் போய் விட்டோம். எனவே, மாற்று ஏற்பாடுகளின் மூலம் பாசன நீர் கிடைக்கச் செய்ய முயன்று வருகிறோம். அந்த மாற்று ஏற்பாடுகளில் ஒன்று கோதாவரித் தண்ணீரைக் கொண்டு வருவது. இன்னொன்று, தமிழ்நாட்டில் அங்கங்கே தடுப்பணைகள் கட்டுவது” என்று கூறியிருக்கிறார்.

ஒருபக்கம், காவிரி உரிமையை மீட்டது அண்ணா தி.மு.க. ஆளுங்கட்சிதான் என்று மார்தட்டிக் கொள்ளும் முதலமைச்சர், காவிரியை நம்பிப் பயனில்லை என்று இப்படி பேசியிருக்கிறார். ஒரு முதலமைச்சர் இப்படி பேசுவது, சட்டப்படியான தமிழ்நாட்டு உரிமையைக் காவு கொடுப்பதாக உள்ளது.

அடுத்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி கிடைக்க வேண்டிய காவிரி நீரைக் கொண்டு வர முடியாத முதலமைச்சர் ஆந்திரப்பிரதேசத்திலிருந்து கோதாவரித் தண்ணீரை மட்டும் எப்படிக் கொண்டு வருவார்? ஆந்திரப்பிரதேச மாநிலம், கோதாவரித் தண்ணீரைத் தமிழ்நாட்டிற்கு அளிக்க ஒப்புதல் அளித்துள்ளதா? அதற்கான ஒப்புதலை நடுவண் நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பெற்றிருக்கிறாரா? அல்லது முதலமைச்சர் எடப்பாடி பெற்றிருக்கிறாரா? ஆந்திரப்பிரதேச மாநிலம், ஒருபோதும் கோதாவரித் தண்ணீரை தமிழ்நாட்டிற்குத் தர அனுமதிக்காது!

காவிரி உரிமை மீட்பிலிருந்து தமிழர்களின் கவனத்தைத் திசைத் திருப்புவதற்காக இந்திய ஆட்சியாளர்களும், தமிழ்நாட்டிலுள்ள துரோகிகளும் திட்டமிட்டு கங்கை நீரைக் கொண்டு வரப் போகிறோம் என்று நாற்பது ஆண்டுகளாக நாடகமாடினார்கள். அந்த நாடகம் மோசடி என்று அம்பலமான பிறகு, கோதாவரி நீரைக் கொண்டு வரப்போவதாக பா.ச.க. ஆட்சியாளர்களும், அண்ணா தி.மு.க. ஆட்சியாளர்களும் கூட்டுச் சேர்ந்து புதிய நாடகத்தை தயாரித்திருக்கிறார்கள்.

அண்ணா தி.மு.க. மற்றும் தி.மு.க. தேர்தல் அறிக்கைகளில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரித் தண்ணீரை கர்நாடகத்திடமிருந்து பெறுவோம் என்று வாக்குறுதி கொடுக்கப்பட வில்லை. அதுமட்டுமின்றி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி முழுநேரப் பணி உள்ளவர்களைக் கொண்ட அமைப்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்திருக்க வேண்டும். அவ்வாறில்லாமல், திட்டமிட்ட கெட்ட நோக்கத்தோடு பா.ச.க. நடுவண் அரசு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் புறம்பாக வேறு பணிகளில் முழுநேர அலுவலர்களாக உள்ளவர்களைக் கொண்டு, ஒப்புக்குக் காவிரி ஆணையம் அமைத்திருக்கிறது. அந்தக் காவிரி ஆணையம் செயல்படவே இல்லை!

2018 திசம்பரிலிருந்து மாதந்தோறும் திறந்துவிட வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிடவில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி திசம்பர் மாதம் 7.3 டி.எம்.சி., சனவரி மாதம் – 3 டி.எம்.சி., பிப்ரவரி மாதம் - 2.3 டி.எம்.சி., மார்ச்சு மாதம் – 2.3 டி.எம்.சி., ஏப்ரல் மாதம் – 2.3 டி.எம்.சி. – ஆக மொத்தம் 14.9 டி.எம்.சி. தண்ணீர் வந்திருக்க வேண்டும். இந்தத் தண்ணீர் தமிழ்நாட்டிற்கு வருவதற்குக் காவிரி மேலாண்மை ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை! செயல்படாத அந்த காவிரி ஆணையத்தை செயல்பட வைத்திட அ.இ.அ.தி.மு.க. அரசு ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை!

அ.இ.அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் இந்தத் தேர்தல் பரப்புரையில் காவிரி நீர் பெற்றுத் தருவதை முக்கியப் பரப்புரையாக செய்யவே இல்லை! கர்நாடகத்தின் பொல்லாப்பு வேண்டாம் என்று உள்நோக்கத்தோடு அ.இ.அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தலைவர்கள் காவிரிச் சிக்கலைப் பேசாமல் ஒதுங்கிக் கொண்டதாகவே தெரிகிறது.

எனவே, தமிழர்கள் இந்தத் “தேர்தல் திருவிழா”வில் குழந்தையைப் பறிகொடுத்த தாயைப் போல் இல்லாமல், காவிரி உரிமை குறித்து இந்தக் கட்சிகள் பேசாததைக் கண்டிக்க வேண்டும்; போராட முன் வர வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT