உடனடிச்செய்திகள்
Showing posts with label தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்!. Show all posts
Showing posts with label தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்!. Show all posts

Monday, April 11, 2016

தமிழ்நாட்டு உரிமைகளைப் பெற்றுத் தர உதவாத சட்டமன்றப் பொதுத் தேர்தலை புறக்கணிப்போம்! தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்!

தமிழ்நாட்டு உரிமைகளைப் பெற்றுத் தர உதவாத
சட்டமன்றப் பொதுத் தேர்தலை புறக்கணிப்போம்!

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்!

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், நேற்று (11.04.2016) ஞாயிறு - காலை முதல் மாலை வரை தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் குழ. பால்ராசு, தோழர் பழ. இராசேந்திரன், தோழர் நா. வைகறை, தோழர் கோ.மாரிமுத்து, தோழர் கா. விடுதலைச்சுடர், தோழர் ரெ. இராசு, தோழர் க. முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


முன்னதாக, அண்மையில் மறைந்த தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் சாதிக்குல் ஜன்னா (எ) புதுமொழி, பொறியாளர் ஆர்.வி.எஸ். விசயகுமார் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, ஒரு நிமிட அமைதிவணக்கம் செலுத்தப்பட்டது.

தமிழ்நாட்டு உழவர் சிக்கல்களுக்கானத் தீர்வுகளை விளக்கியும், உழவர்கள் சிக்கல் குறித்த விழிப்புணர்வைஏற்படுத்தவும், வரும் சூன் 17, 18, 19 ஆகிய நாட்களில், தமிழக உழவர் முன்னணி மற்றும் தமிழ்த் தேசியப்பேரியக்கம் சார்பில், “உழவர் சிக்கல்களுக்கான பரப்புரைப் பயணம்நடத்தத் தீர்மானிக்கப்பட்டது
.
கூட்டத்தில், தமிழ்நாடு புதுச்சேரி சட்டப்பேரவைக்கானப் பொதுத் தேர்தல் குறித்து பின்வரும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

சட்டப்பேரவைத் தேர்தலைப் புறக்கணிப்போம்!


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், 2016 மே 16 அன்று நடைபெறவுள்ள சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல், தேர்தல் அரசியலில் சீரழிவை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவில், இந்தத் தேர்தலில் வெளிப்படையான பண பேரங்கள் நடைபெறுவதை அரசியல் கட்சிகள் ஒன்றின் மீது ஒன்று வைக்கும் குற்றச்சாட்டுகளே வெளிப்படுத்துகின்றன. கொள்கைகள் கோட்பாடுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, வாக்குவங்கி அடிப்படையிலான கூட்டணி பேரங்களும், அதற்கான குதிரை பேரங்களும்தான் பெருமளவில் நடைபெறுகின்றன.

தேர்தல் அல்லாத காலங்களில் மக்கள் சிக்கலில் போராடும் கட்சிகள் கூட, வெற்றி வாய்ப்பை மட்டுமே கணக்கில் கொண்டு கொள்கையற்ற கூட்டணிகளில் இறங்குகின்றன.

கடந்த 05.04.2016 அன்று மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய சேம வங்கி ஆளுநர் இரகுராம் ராஜன், சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ரூபாய் 60,000 கோடி கூடுதல் பணப்புழக்கம் உள்ளது ஏற்பட்டுள்ளது என்றும்,இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்திருப்பது, தேர்தலின் வழியே புழங்கும் சட்டவிரோதப் பணம் குறித்து எச்சரிக்கிறது.

இவ்வளவு பெரும் பணத்தை முதலீடாகமேற்கொள்கின்ற கட்சிகளும், அதன் வேட்பாளர்களும், ஆட்சிக்கு வந்தபின் அதனை வட்டியுடன் திரும்ப எடுப்பதற்கான ஊழல் கமிசன் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இவையெல்லாம், மக்கள் அனைவருக்கும் தெரிந்தே நடைபெறுவது, தேர்தல் அரசியலின் சீரழிந்த தன்மையை உணர்த்துகிறது.

இன்னொரு புறத்தில், இக்கட்சிகள் ஒவ்வொரு தேர்தலிலும் சொல்லுவது போலவே இந்தத் தேர்தலிலும் வானளாவிய வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கை என்ற பெயரால் அள்ளி வீசுகின்றன. எடுத்துக்காட்டாக, வேளாண்மையைப் பாதுகாப்பதாகச் சொல்லிக் கொண்டே, கண்மண் தெரியாத தொழில் வீக்கத்தையும், நூறு நாள் வேலைத் திட்டத்தை நூற்றைம்பது நாள் வேலைத் திட்டமாக மாற்றுவதாகவும் அறிவிப்பது வேளாண்மையை அழிக்கும் செயல் என்பதை தெரிந்தே முன் வைக்கிறார்கள். அதேநேரம், வேளாண்மையை வளர்ப்பதற்கு என்று சொல்லி வானளாவிய திட்டங்களையும் அறிவிக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் உரிமைச் சிக்கல்களான காவிரிச் சிக்கல், கச்சத்தீவு சிக்கல், முல்லைப் பெரியாறு அணை உரிமை, அணுஉலைகள் திணிப்பு, ஏழு தமிழர் விடுதலை, ஏறுதழுவல் உரிமை உள்ளிட்ட சிக்கல்களோ, வேளாண் தொழில் நசிவு, தொழில்துறை முடக்கம், விலைவாசி உயர்வு, கனிம வளக் கொள்ளை, தமிழீழ விடுதலை உள்ளிட்ட சிக்கல்களோ, கட்சிகளின் உண்மையான நிகழ்ச்சி நிரலில் இல்லை. ஊடகங்கள் கூட, அவற்றை முக்கிய சிக்கல்களாக முன்வைப்பதில்லை. மாறாக, நட்சத்திர வேட்பாளர்கள் குறித்தும், வாக்கு வங்கி வரலாறு குறித்துமே அவை பேசுகின்றன.

இவை அனைத்திற்கும் மேலாக, அரசமைப்புச் சட்டப்படி மக்களுக்கான அடிப்படை சிக்கல்களைத் தீர்ப்பதற்கு அதிகாரமற்ற தீர்மான மன்றமே (மசோதா மன்றமே) சட்டமன்றம் என்ற உண்மையை மறைத்து, இந்திய வல்லாட்சியின் கைகளை வலுப்படுத்தும் செயலில் இறங்குகின்றன.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஈழத்தமிழர் குறித்தோ, ஏழு தமிழர் விடுதலை குறித்தோ, காவிரி உரிமை குறித்தோ, முல்லைப் பெரியாறு உரிமை குறித்தோ இயற்றியத் தீர்மானங்கள் வெறும் தீர்மானங்களாக சட்ட வலுவற்றவைகளாக இருந்து வருகின்றன. இதுவே, தமிழ்நாடு சட்டமன்றம் சட்டம் இயற்ற - தமிழர் உரிமைகளை நிலைநாட்ட வலுவற்றது என்பது தெளிவாக்குகிறது.

ஆயினும், தமிழ்நாட்டு மக்களின் தலைவிதியையே மாற்றி அமைப்பதற்கு வல்லமை உள்ளதுபோல் படம்காட்டி வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப்படும் முதலமைச்சர்கள், இந்திய அரசின் செயல்திட்டங்களை நிறைவேற்றும் கங்காணிகளாகவே செயல்படுகின்றனர். இந்திய அரசமைப்பு இதனை உறுதி செய்கிறது.


எனவே, தமிழினத்தின் உரிமைச் சிக்கல்களில் அக்கறை செலுத்துவோர், தூய்மையான அரசியலை விரும்புவோர், இந்நோக்கங்களுக்கு உதவாத சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்காமல், இப்பொதுத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டுமெனவும், மாறாக தமிழக மக்களின் உரிமைகளை நிலைநாட்டும் மக்கள் திரள் போராட்டப் பாதைக்கு அணிதிரளுமாறும் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
 

                                  

Monday, October 5, 2015

இலங்கைக்குப் பாலம் அமைக்கும் திட்டம்: தமிழ்நாட்டை சிங்களமயப்படுத்த இந்திய அரசின் சதி!


இலங்கைக்குப் பாலம் அமைக்கும் திட்டம்: தமிழ்நாட்டை சிங்களமயப்படுத்த இந்திய அரசின் சதி!

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்!

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் இன்று (04.10.2015) சென்னையில் நடைபெற்றது. பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். பேரியக்கப் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். தலைமைச் செயற்குழு தோழர்கள் பழ. இராசேந்திரன், நா. வைகறை, குழ. பால்ராசு, அ. ஆனந்தன், கோ. மாரிமுத்து, க. விடுதலைச்சுடர், க. முருகன், இரெ. இராசு, க.அருணபாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 இலங்கைக்குப் பாலம் அமைக்கும் திட்டம் – தமிழ்நாட்டை சிங்களமயப்படுத்த இந்திய அரசின் சதி!

கடந்த (17.06.2015) அன்று, திரிபுராத் தலைநகர் அகர்தலாவில் நிகழ்வு ஒன்றில் பேசிய இந்திய அரசின் சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், இராமேசுவரத்தின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னார் வரையிலான 23 கிலோ மீட்டர் நீளத்திற்கு, கடலில் பாலம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தப் போவதாகவும் அறிவித்தார்.

மேலும், இத்திட்டத்திற்கு, ரூ. 22,000 கோடி செலவாகும் என ஆசிய வளர்ச்சி வங்கி கணக்கிட்டுள்ளதையும், ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவருடன் இது குறித்து ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு விட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, சாலை மட்டுமின்றி, தொடர்வண்டி பாதையும் அமைக்கவுள்ளதாகவும், இலங்கை அரசிடம் இது குறித்து பேச்சுவார்த்தை தொடங்க உள்ளதாகவும், நடுவண் அரசின் சாலை மற்றும் தொடர்வண்டிப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன், மாநிலங்களவையில் 03.08.2015 அன்று தெரிவித்தார். (காண்க: தி எகனாமிக் டைம்ஸ், 03.08.2015).

தெற்காசியப் பகுதியில், சீனாவின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்தவும், தெற்காசிய நாடுகளில் தமது மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தவும் இந்திய அரசு பல திட்டங்களை இந்நாடுகளில் செயல்படுத்தி வருகிறது. புதிய வணிக ஒப்பந்தங்களை இயற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே, இலங்கையை இந்திய செல்வாக்கின் கீழ் கொண்டு வர, இக் கடற் பாலம் திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்த முனைகிறது.

தமிழ்நாடு ஏற்கெனவே வெளியார் மயமாகி வருகின்ற நிலையில், இந்த புதிய பாலத்திட்டத்தின் வழியே, தமிழ்நாட்டிற்குள் சிங்களர்களைக் கொண்டு வந்து குவிக்கவும், ஏற்கெனவே சிங்களமயமாக்கப்பட்டு வரும் தமிழீழத் தாயகத்தில், இந்தியாவிலிருந்து பீகாரிகள், உ.பி.காரர்கள் உள்ளிட்ட அயல் இனத்தாரைக் குவிக்கவுமான சதி ஏற்பாடு இது.

தமிழீழ மக்கள் வளம்பெற வேண்டுமென இந்திய அரசு விரும்பினால், தமிழீழத்தில் குவிக்ப்பட்டுள்ள சிங்கள இராணுவத்தைத் திரும்பப் பெற்று, அங்குள்ள வேளாண் நிலங்களை தமிழீழ மக்களிடம் திரும்ப ஒப்படைத்தல், தமிழீழ மக்கள் தொழில் தொடங்குவதற்கான கட்டமைப்பு வசதி ஏற்படுத்தித் தருதல், சிங்களமயமாக்கத்தை உடனடியாக நிறுத்துதல் ஆகிய வேலைத்திட்டங்களை செயல்படுத்தினாலே போதும். ஆனால், அதையெல்லாம் செய்வதை விட்டு, “பாலம் அமைக்கிறோம்” எனச் சொல்வது, தமிழர் தாயகங்களை வெளியார் மயமாக்கி அழிக்கும் சதிச் செயலையே அம்பலப்படுத்துகிறது. எனவே, இத்திட்டத்தை முளையிலே கிள்ளி எறிய வேண்டும்.

தமிழ்த் தேசியப் பேரியக்கம், இப் புதிய பாலத் திட்டத்தை கண்டிப்பதுடன், இத்திட்டத்தை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்துகிறது.
-> வேலை வாய்ப்பு அளிக்காமல் புறக்கணிக்கப்பட்டு வரும், சென்னை ஐ.சி.எப். வேலைப் பழகுநர்களுக்கு (Apprentice) உடனடியாக வேலை அறிவித்து, அவர்களது தொடர் உண்ணாப்போராட்டத்தை இந்திய அரசு முடித்து வைக்க வேண்டும்!

சென்னை அயனாவரம் இந்தியத் தொடர்வண்டி பெட்டித் தொழிற்சாலை(ICF – ஐ.சி.எப்.)யில், 1998ஆம் ஆண்டிலிருந்து வேலைப் பழகுநர் (Apprentice) முடித்த மாணவர்கள், சற்றொப்ப 5000 பேருக்கு இதுவரை பணிவாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால், தமிழ்நாட்டைத் தவிர மற்ற மண்டலங்களைச் சேர்ந்த வடநாட்டவர் உள்ளிட்ட அயல் இனத்தாருக்கு, சென்னை ஐ.சி.எப்.இல், புதிய பணிவாய்ப்புகள், வழங்கப்பட்டு வருகின்றன.

பல்லாண்டுகளாக வேலை இல்லாததால், விரக்திக்குக் தள்ளப்பட்ட தமிழ்நாட்டு மாணவர்களில் சற்றொப்ப 20க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டு இறந்துனர். இதனைக் கண்டித்தும், தங்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கக் கோரியும் பழகுநர் மாணவர்கள் பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

தற்போது, கடந்த 01.10.2015 முதல், அம்மாணவர்கள் தொடர் உண்ணாப் போராட்டத்தை அறிவித்து, வெயில் – மழையைப் பொருட்படுத்தாமல் சாலையில் குடும்பத்துடன் அமர்ந்து உண்ணாப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.



இம்மாணவர்களின் ஞாயமான கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி, அவர்களது உண்ணாப் போராட்டத்தை இந்தியத் தொடர்வண்டித்துறை முடித்து வைக்க வேண்டுமென தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT