உடனடிச்செய்திகள்
Showing posts with label போக்குவரத்து. Show all posts
Showing posts with label போக்குவரத்து. Show all posts

Tuesday, September 25, 2018

தஞ்சை மாவட்டம் - நண்டம்பட்டி கிராமத்திற்கு சிற்றுந்தை நிறுத்தியது ஏன்? தமிழ்த்தேசியப் பேரியக்கம் போராட்டம்..!

தஞ்சை மாவட்டம் - நண்டம்பட்டி கிராமத்திற்கு சிற்றுந்தை நிறுத்தியது ஏன்? தமிழ்த்தேசியப் பேரியக்கம் போராட்டம்..!
தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைகோடி கிராமம் நண்டம்பட்டி. இந்த கிராமம் புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களின் தொடக்கப் பகுதியாகும். நண்டம்பட்டியில் 150 குடும்பங்களும் அர்சுணம்பட்டியில் 75 குடும்பங்களும் வீமம்பட்டியில் 50 குடும்பங்களும் வசிக்கிறார்கள்.
 
இந்த மூன்று ஊர் கிராம மக்களும் இளைஞர்களும் மாணவர்களும் கூலித் தொழிலாளிகளும், கட்டுமான ஆட்களும் வேலைக்கு திருச்சி, தஞ்சை செல்லும் நிலையில் நண்டம்பட்டி வழியாக இயங்கிய சிற்றுந்து (மினிபஸ்) நிறுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிறது.
 
தஞ்சை மாவட்ட ஆட்சியரிடமும், வருவாய் வட்டாச்சியரிடமும் கோரிகை மனு கொடுத்தோம். எந்த பயனும் இல்லை! எனவே, மக்களின் அடிப்படை கோரிக்கை நிறைவேற்றிடாத மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியப் போக்கை கண்டித்து தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒருங்கினைக்கும் மக்கள் திரள் போராட்டம் வரும் 28.09.2018 அன்று

தஞ்சை மாவட்டம் - செங்கிப்பட்டி (சாணூரப்பட்டி) கடைவீதி - 28.09.2018 அன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறுகின்றது.
 
இப்போராட்டத்தில், ஊர் பொது மக்களும், தமிழின உணர்வாளர்களும் திரளாகப் பங்கேற்க வருமாறு அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Thursday, January 25, 2018

போராடும் மக்களை மதித்து தமிழ்நாடு அரசு பேருந்து கட்டண உயர்வை பெருமளவு குறைக்க வேண்டும்! தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!

போராடும் மக்களை மதித்து தமிழ்நாடு அரசு பேருந்து கட்டண உயர்வை பெருமளவு குறைக்க வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!
பேருந்துக் கட்டணங்களைத் தமிழ்நாடு அரசு, தாறுமாறாக உயர்த்தியதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாணவர்களும், பொது மக்களும் தன்னெழுச்சியாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
 
ஏற்கெனவே, வழக்கமாக அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்லும் பேருந்துகளைக்கூட விரைவு வண்டி, இடைநில்லா பேருந்து, வரம்புக்குட்பட்ட நிறுத்தப் பேருந்து, தாழ்தளப் பேருந்து, சொகுசுப் பேருந்து என பல பெயர்கள் மாற்றி வெளிப்படையாக அறிவிக்காத கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு செயல்படுத்தியே வருகிறது.
 
வேறு மாநிலங்களை ஒப்பிட தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் செல்லக் கூடியதாக, அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்ற போதிலும், படிகள் உடைந்த பேருந்து, சிறிய மழைக்கும் ஒழுகும் பேருந்து, பழுதாகி அங்கங்கே நிற்கும் பேருந்து, ஓட்டை வழியாகக் குழந்தையே விழும் அளவிற்கான பேருந்து போன்றவற்றை கண்ணை மூடிக் கொண்டு, அரசுப் பேருந்தாகத்தான் இருக்கும் என சொல்லிவிட முடியும்! அந்தளவிற்கு படுமோசமான நிர்வாகச் சீரழிவில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன.
 
இந்த நிலையில், 19.01.2018 அன்று தமிழ்நாடு அரசு அனைத்துப் பேருந்துகளின் கட்டணங்களையும் சராசரியாக 66 விழுக்காடு வரை உயர்த்தி, அன்று நள்ளிரவு முதலே உடனடியாக செயலுக்கு வரும் என்று அறிவித்ததை அறிந்த மக்கள் அனைவரும் அதிர்ந்து போனார்கள். குறிப்பாக, மாணவர்கள், அன்றாட ஊதியக்காரர்கள், குறு வணிகர்கள் போன்றவர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற மாநகரங்களில் எளிய மக்கள், தங்கள் செலவில் 58 விழுக்காடு வரை போக்குவரத்திற்கு செலவு செய்வதாக அரசின் புள்ளி விளக்கங்களே கூறுகின்றன.
 
அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தொடர் இழப்பில் இயங்குவதால் ஏழாண்டு கழித்து இந்த கட்டண உயர்வை அறிவித்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஞாயம் பேசுகிறார். மேலே சுட்டிக்காட்டியவாறு, அறிவிக்கப்படாத கட்டண உயர்வுக்கு மேலாக இக்கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏழாண்டாக கட்டணமே உயர்த்தப்படவில்லை என முதலமைச்சர் கூறுவது முழு உண்மையல்ல!
 
தொழிற்சங்கங்களும், பல்வேறு தரப்பு வல்லுநர்களும் போக்குவரத்துக் கழக இழப்பை சரி செய்வதற்கான வழிகளை பலமுறை எடுத்துக் கூறியிருக்கிறார்கள். அவற்றில் எதையும் கருதிப் பார்க்காமல், மக்கள் மீது கட்டண உயர்வை சுமத்துவது மட்டுமே ஒரே வழி என அரசு கூறுவது ஏற்பதற்கில்லை!
 
உண்மையில், போக்குவரத்துக் கழகங்களை இழப்பிலிருந்து பாதுகாப்பதைவிட தனியார் பேருந்துகளின் கட்டணக் கொள்ளைக்காக, இந்த தாறுமாறான உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது என ஐயப்பட அடிப்படை உண்டு! இதற்காக முதலமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட ஆட்சியாளர்களுக்கு, பல கோடி கையூட்டு கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கசிந்து வரும் செய்திகளை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
 
ஆளுங்கட்சி – எதிர்க்கட்சி அரசியல் புள்ளிகளின் குடும்பத்தினர் பல பேருந்து நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள் என்பது ஊரறிந்த உண்மை! இந்நிலையில், தனியாருக்காகவும் இந்த பேருந்துக் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது என ஐயப்படுவதில் தவறில்லை!
 
பேருந்துகள் கட்டுவது, வெளியிலிருந்து வாங்குவது, உதிரி உறுப்புகள் கொள்முதல் உள்ளிட்ட அனைத்திலும் ஊழல் கொடிகட்டிப் பறப்பது போக்குவரத்துக் கழகங்களில் எல்லோரும் அறிய பல ஆண்டுகளாக நடந்து வருவதுதான். இன்னொருபக்கம், கடுமையான டீசல் விலை உயர்வு!
 
2014 திசம்பரில், பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 105 டாலர் இருந்தது. (ஒரு பேரல் என்பது 159 லிட்டரைக் குறிக்கும்). அதாவது 6,615 ரூபாய்! அப்போது ஒரு லிட்டர் டீசல் விலை 53 ரூபாய் 78 காசுகள். அதன்பிறகு, கடந்த நான்காண்டுகளாக உலகச்சந்தையில் எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. 2018 சனவரியில், இந்த விலை 61 டாலர்! அதாவது 159 லிட்டர் கச்சா எண்ணெய் விலை ரூபாய் 3,876.58. தூய்மைப்படுத்திய பிறகு ஒரு லிட்டர் டீசலின் அடிப்படை விலை 35.05 ரூபாய். ஆனால், இப்போது ஒரு லிட்டர் டீசல் விலை 67 ரூபாய்!
 
கச்சா எண்ணெய் விலை மிகப்பெரும் அளவுக்குக் குறைந்த பிறகும், டீசல் விலை ஏறிக் கொண்டிருப்பதற்கு அடிப்படைக் காரணம் இந்திய அரசு மற்றும் மாநில அரசு விதிக்கும் வரிகள்தான்! 2014இல் இந்திய அரசின் டீசல் வரி ரூபாய் 3.46 ஆக இருந்தது. இப்போது, அது ரூபாய் 15.33 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தற்போது விதிக்கும் டீசல் மீதான வரி லிட்டருக்கு 8 ரூபாய் 76 காசுகள்.
 
இவ்வாறு வரி வழியில் ஏறத்தாழ 50 விழுக்காடு விலை உயர்வு நேர்கிறது! தனியார் மற்றும் அரசு எண்ணெய் நிறுவனங்களின் இலாபமாக ஏறத்தாழ 40 விழுக்காடு செல்கிறது. வணிகர்கள் ஈவுத் தொகை உள்ளிட்ட பிற வகையில் 10 விழுக்காடு செல்கிறது. ஆக, கச்சா எண்ணெயிலிருந்து தூய்மைப்படுத்தி கிடைக்கும் ஒரு லிட்டர் டீசலின் விலை 35 ரூபாய் 5 காசாக இருப்பது, இவ்வாறு 67 ரூபாயாக மாறுகிறது.
 
இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் தங்களது வரி விகிதத்தை உயர்த்தாமல் இருந்தாலே, உலகச்சந்தையில் விலை குறைவு நுகர்வோருக்கு கிடைக்க வாய்ப்புண்டு! போக்குவரத்துக் கழகங்களுக்கு மிகப்பெரும் அளவுக்கு செலவு குறையும்.
 
இந்திய அரசின் இசைவோடு தனியார் நிறுவனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் வசூலிக்கும் சுங்கக் கட்டணம், காலவரையற்ற பெருங்கொள்ளையாக இருக்கிறது. போக்குவரத்துக் கழகங்களுக்கு, சுங்கக்கட்டணங்களின் வழியாக ஆண்டுக்கு 900 கோடி ரூபாய் செலவு ஏற்படுகிறது.
 
கழகங்களின் எண்ணிக்கை தேவையற்ற வகையில் அதிகமாக இருப்பது மிகப்பெரும் அளவுக்கு அதிகாரிகள் பட்டாளத்தை உருவாக்குகிறது. இது, பெரும் தொகையை விழுங்குகிறது. இதுதவிர, ஆளுங்கட்சி மற்றும் “செல்லப்பிள்ளை” சங்கப் பொறுப்பாளர்கள் என்ற வகையில் ஒவ்வொரு பணிமனையிலும் பல தொழிலாளிகள் கோயில் காளை போல், சுற்றித் திரிந்து வேலை செய்யாமல் சம்பளம் பெறுகிறார்கள். அவ்வப்போது, கருங்காலி வேலைக்கு பயன்படும் நிரந்தரப் படையாக இவர்கள் இருக்கிறார்கள்.
 
உதிரி உறுப்புகள் உள்ளிட்டு அனைத்துக் கொள்முதலிலும் தாறுமாறான கையூட்டுகள் நடைபெறுகின்றன.
 
இவையெல்லாம் சேர்ந்துதான், போக்குவரத்துக் கழகங்களுக்கு தொடர் இழப்புகளை ஏற்படுத்துகின்றன. இதன் விளைவாக எட்டாண்டுகளில் நிறுத்தப்பட வேண்டிய பேருந்துகள், ஓட்டை உடைசலாக மாறிய பின்னும் 16 ஆண்டுகள் வரை ஓட்டப்படுகின்றன. இது பயணிகளுக்கு பெரும் இடையூறுகளையும், விபத்துகளையும் ஏற்படுத்துகின்றது.
 
டீசல் மீதான இந்திய – தமிழக அரசுகளின் வரிக் குறைப்பு, சுங்கச்சாவடிக் கட்டணங்களிலிருந்து விதிவிலக்கு, அதிகாரிகள் எண்ணிக்கையைக் குறைத்து பராமரிப்புத் தொழிலாளர்களை போதுமான அளவுக்கு நியமித்தல், ஊழல் தவிர்ப்பு ஆகியவற்றை மேற்கொண்டால், மிகக் குறைந்த கட்டண உயர்வை மூன்றாண்டுக்கு ஒருமுறை அறிவித்தாலே, போக்குவரத்துக் கழகங்களை இலாபத்தில் இயக்க முடியும்!
 
எந்தக் காலத்திலும் கட்டண உயர்வே இருக்கக் கூடாது என்பது நமது வாதமல்ல! மக்கள் தாங்கக் கூடிய, ஞாயமான கட்டண உயர்வை அறிவித்தே போக்குவரத்துக் கழகங்களை இலாபமாக இயக்க முடியும் என்பதே நமது கருத்து!
 
எனவே, மேற்கண்ட சீர்திருத்தங்களை உடனடியாக மேற்கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கட்டண உயர்வை பெருமளவுக் குறைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இன்னணம்,
கி. வெங்கட்ராமன்,
பொதுச் செயலாளர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Tuesday, January 9, 2018

"நீதிபதி இந்திரா பானர்சி வாயிலிருந்து நல்ல சொற்களே வராதா?" தோழர் பெ. மணியரசன்

"நீதிபதி இந்திரா பானர்சி வாயிலிருந்து நல்ல சொற்களே வராதா?" தோழர் பெ. மணியரசன், தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் தொழிலாளர்கள் தங்களுக்கு 2016 செப்டம்பரிலிருந்து தர வேண்டிய ஊதிய உயர்வைத் தர வலியுறுத்தியும், தங்களது வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட பணப்பலன்களில் 7 ஆயிரம் கோடி வரைத் தமிழ்நாடு அரசு எடுத்துக் கொண்டு, தொழிலாளர்களுக்குத் தர மறுப்பதைத் தந்திட வலியுறுத்தியும், பணி ஓய்வு பெற்றோர்க்கு ஓய்வூதியம் மற்றும் வைப்பு நிதி போன்றவற்றை தர வலியுறுத்தியும் வேலை நிறுத்தம் செய்து போராடி வருகிறார்கள்.

இப்போராட்டம் தொடர்பான வழக்கில் – சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்சி – நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அமர்வு 05.01.2018 அன்று “சம்பளம் போதவில்லை என்றால் வேறு வேலைக்கு செல்லுங்கள்” என்று கூறியதுடன், தொழிலாளிகள் வேலை நிறுத்தத்தை உடனடியாகத் திரும்பப் பெற்றுக் கொண்டு வேலைக்குப் போக வேண்டும். வேலைக்குத் திரும்பவில்லை எனில் வேலை நீக்கம் செய்வோம் என்று ஆணையிட்டது.

நேற்று (08.01.2018) இவ்வழக்கு மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வந்தபோது, இந்திரா – பானர்சி, “தமிழ்நாடு அரசினால் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களைத் தர முடியவில்லை என்றால் போக்குவரத்தைத் தனியார் மயமாக்க வேண்டியதுதானே” என்று கூறினார்.

தலைமை நீதிபதி இந்திரா பானர்சி கூற்றின்படி, போக்குவரத்துத் துறை தனியார் மயமானால் 80 ஆயிரம் போக்குவரத்துத் தொழிலாளர் குடும்பங்கள் சந்தியில் நிற்க வேண்டியதுதான்! தனியாரின் கட்டணக் கொள்ளையால் தமிழ்நாட்டு மக்கள் அல்லாட வேண்டியது தான்!

இந்திரா பானர்சி வாயில் நல்ல சொற்களே வராதா?

மக்கள் வழக்கில் ஒரு பழமொழித் தொடர் ஒன்று இருக்கிறது : “நாக்கில் சனி!”.
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Saturday, January 6, 2018

போக்குவரத்துத் தொழிலாளர் வேலை நிறுத்தம் : ஆணவம் பிடித்த நிர்வாக அதிகாரி போல் உயர் நீதிமன்ற நீதிபதிகள் பேசக்கூடாது! தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

போக்குவரத்துத் தொழிலாளர் வேலை நிறுத்தம் : ஆணவம் பிடித்த நிர்வாக அதிகாரி போல் உயர் நீதிமன்ற நீதிபதிகள் பேசக்கூடாது! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
மூன்று நாட்களாகத் தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்துவரும் போக்குவரத்துத் தொழிலாளர்களுடன் அவர்களின் தொழிற்சங்கங்கள் வழியாகப் பேச்சு நடத்தி இணக்கமான முடிவை உண்டாக்கத் தமிழ்நாடு அரசு தவறிவிட்டது.

ஊதிய உயர்வு குறித்து பேச்சு வார்த்தையில் இரு தரப்புக்கும் இடையே குறைவான வேறுபாடே உள்ளது. ஆனால், தொழிலாளர்களிடமிருந்து அவர்களின் ஊதியத்தில் பிடித்த ஏழாயிரம் கோடி ரூபாயை வருங்கால வைப்பு நிதி, அஞ்சல் ஈட்டுறுதி நிதி (PLI), வாழ்நாள் ஈட்டுறுதி நிதி (LIC) முதலியவற்றிற்குக் கட்டாமல், தமிழ்நாடு அரசு தானே செலவழித்துவிட்டது. கடந்த 16 மாதங்களில் 21 தடவை நடந்த பேச்சில் இந்த ஏழாயிரம் கோடி ரூபாயைத் திருப்பித் தர தமிழ்நாடு அரசு உருப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை! கொடுத்த வாக்குறுதிகளையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டது.

தமிழ்நாடு அரசின் நிதித்துறை திவாலாகிவிட்டது. ஆனால் எம்ஜியார் நூற்றாண்டு விழா என்ற பெயரில் உருப்படியற்ற வாண வேடிக்கைச் செலவுகளை பல நூறு கோடி ரூபாய்க்குச் செய்துள்ளது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அரசு!

போக்குவரத்துத் தொழிலாளர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் நம்பகத் தன்மையை இழந்துவிட்டது தமிழ்நாடு அரசு!

இந்நிலையில், 04.01.2018 அன்று பிற்பகல் பேச்சு வார்த்தை முறிந்த நிலையில், போக்குவரத்துத் தொழிலாளர்கள் திடீரென்று வேலை நிறுத்தம் தொடங்கினர். வேலை நிறுத்தம் குறித்து ஏற்கெனவே கொடுத்த அறிவிக்கை போதும் என்கின்றன தொழிற்சங்கங்கள். இது சட்டப்படியான வேலை நிறுத்தம் என்கின்றன.

ஆனால், தொழிலாளிகள் – பயணிகளை நடுவழியில் அங்கங்கே இறக்கிவிட்டு, அல்லோகலப்படுத்தி வேலை நிறுத்தம் தொடங்கிய முறை சரியன்று! முக்கியமான பேருந்து நிலையங்களில் பயணிகளை இறக்கி விட்ட பின்தான் வேலை நிறுத்தம் தொடங்கியிருக்க வேண்டும். மக்களிடம் இப்பொழுது இதுபற்றி ஏற்பட்டுள்ள கெட்ட பெயரைப் போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் படிப்பினையாக் கொள்ள வேண்டும்.

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்சி மற்றும் நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு இந்த வேலை நிறுத்தம் சட்ட விரோதமானது என்று அறிவித்ததுடன், உடனடியாக வேலைக்குத் திரும்பவில்லையென்றால் தொழிலாளிகள் பணி நீக்கம் செய்யப்படுவர்; அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் போடப்படும் என்றும் மிரட்டியுள்ளது.

சம்பளம் போதவில்லை என்றால் வேறு வேலைக்குப் போங்கள் என்று தொழிலாளர்களைப் பார்த்து சொல்வதற்கு, இந்திரா பானர்ஜிக்கு அதிகாரம் தந்தது யார்? இப்பேச்சு அதிகார மமதையின் உச்சம்!

நீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் அப்துல் குத்தூஸ் இருவரும் நீதித்துறை அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்கள். அவர்கள் தொழிற்சங்கங்களிடம் இதுகுறித்து விளக்கம் கேட்கும் முன் கடுஞ்சொற்களை உதிர்த்துள்ளார்கள்.

போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு மட்டுமின்றி, தமிழ்நாடு அரசு சட்டத்திற்குப் புறம்பாகப் பயன்படுத்தியுள்ள தங்களது ஊதியப்பணம் ஏழாயிரம் கோடி ரூபாயைத் திருப்பித் தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து 16 மாதங்களாக – குரலெழுப்பி வருகிறார்கள். பணி ஓய்வு பெற்றவர்களுக்கு அவர்களுக்குச் சேர வேண்டிய பணத்தைத் தரவில்லை; இன்றியமையாத் தேவைகளுக்குத் தங்கள் வைப்பு நிதியிலிருந்து கடன் வாங்கும் உரிமையைப் பயன்படுத்த முடியவில்லை.

தொழிலாளர்களின் இந்தப் பாதிப்புகளைப் பற்றி கவலைப்படாத நீதிபதிகள், பயணிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பைக் கண்டு மனம் வருந்தும் சாக்கில் நீதித்துறை அதிகாரத்தை நிர்வாகத்துறை அதிகாரமாக மாற்றிக் கொண்டுள்ளார்கள். தங்களின் இந்த நிலைபாட்டை உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பாக நீதிபதி இந்திரா பானர்சி மறு ஆய்வு செய்ய வேண்டும்; மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஏற்கெனவே ஆசிரியர்கள் மற்றும் செவிலியர்கள் நடத்திய வேலை நிறுத்தத்தின்போதும் ஆணவம் கொண்ட நிர்வாக அதிகாரிகள் போல்தான் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கட்டளைகள் பிறப்பித்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் நேரடியாகத் தலையிட்டு, தொழிற்சங்கத் தலைவர்களுடன் பேசி உடனடியாகப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, இயல்பு நிலையைக் கொண்டு வந்து மக்களின் துன்பங்களையும் நீக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். அதைவிட்டுவிட்டு, போராட்டத்தை மடைமாற்ற, மாற்று ஓட்டுநர்களைக் கொண்டு பேருந்துகளை இயக்குகிறோம் என மக்களின் உயிருடன் விளையாடக் கூடாது என்றும் எச்சரிக்கிறேன்.
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT