உடனடிச்செய்திகள்
Showing posts with label கி. வெங்கட்ராமன் சூழலியல்!. Show all posts
Showing posts with label கி. வெங்கட்ராமன் சூழலியல்!. Show all posts

Monday, May 4, 2020

சூழலியல் தாக்க விதிகள் – 2020 மேக்கேத்தாட்டை அனுமதிக்கும்! கி. வெங்கட்ராமன் அறிக்கை!



சூழலியல் தாக்க விதிகள் – 2020
மேக்கேத்தாட்டை அனுமதிக்கும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் *கி. வெங்கட்ராமன் அறிக்கை!


எட்டுவழிச் சாலைக்கும், மேக்கேதாட்டு அணைக்கும் இன்னும் சூழல் பேரழிவுத் திட்டங்கள் பலவற்றுக்கும் எளிதில் அனுமதி அளிக்கும் வகையில், “சூழலியல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை விதிகள் – 2020” என்ற புதிய அறிவிக்கை வரைவை இந்திய அரசு முன்வைத்திருக்கிறது.
நடப்பிலுள்ள 2006 – அறிவிக்கையில், இந்த இடைப்பட்ட காலத்தில் சில பிற்போக்கான திருத்தங்களையும், புதிய பல விதிகளையும் ஒன்றிணைத்து இந்த புதிய அறிவிக்கை வெளியிடப்படுகிறது.
முக்கியமாக, இதில் மூன்று சிக்கல்கள் இருக்கின்றன. ஒன்று, சூழலியல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை முன்வைக்காமலும், மக்கள் கருத்து கேட்காமலும் செய்யப்படும் புதிய திட்டங்கள் மற்றும் பழைய திட்டங்களின் விரிவாக்கங்கள் போன்றவற்றிற்கு குறிப்பிட்ட தண்டத் தொகையுடன் தொடர வழி ஏற்படுத்தப்படுகிறது.
இரண்டு, 70 மீட்டர் வரையிலும் சாலையை அகலப்படுத்தும் சாலை விரிவாக்கத் திட்டங்கள், நீராதார கட்டமைப்புகள், பொது தூய்மையாக்கல் நிலையங்கள், போன்ற 14 வகை சூழல் பகைத் திட்டங்கள் இனி சூழலியல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை முன்வைக்க வேண்டியதோ, சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் முன் அனுமதி பெற வேண்டியதோ இல்லை! இதுமட்டுமின்றி, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தொழில் திட்டங்கள் மற்றும் பாதுகாப்புக்கு முக்கியமான திட்டங்கள் என இந்திய அரசு அறிவிக்கும் எந்தக் கட்டமைப்புக்கும் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை முன்வைக்க வேண்டிய தில்லை. சூழல் அமைச்சகத்தின் முன் அனுமதிக்காகவும் காத்திருக்க வேண்டியதில்லை. அவற்றில் மக்கள் கருத்துக் கேட்பும் நடக்காது.
இவை போதாதென்று, சிறப்புப் பொருளியல் மண்டலங்கள், ஏற்றுமதி மண்டலங்கள், தோல் தொழில் மண்டலங்கள், கடலோரத் தொழில் மண்டலங்கள் போன்றவற்றில் மேற்கொள்ளப்படும் புதிய கட்டுமானங்களுக்கோ, பழைய கட்டுமானங்களின் விரிவாக்கத்திற்கோ சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்றும் இவ்விதி கூறுகிறது.
கட்டமைப்புகளை உருவாக்குகிறவர்கள் தாங்களே முன்வந்து, சூழலியல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை முன்வைப்பார்களாம். அதை அதற்குரிய ஆய்வுக்குழு ஆய்வு செய்யுமாம்! தொடர்புடைய பகுதி மக்களோ, மக்கள் சார்ந்த அறிவியலாளர்களோ, மக்கள் இயக்கங்களோ, தொண்டு நிறுவனங்களோ சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து, சூழலியல் பாதிப்பு தொடர்பான புகார்களை முதலில் அளிக்க முடியாது. இச்சட்டத்தின் கீழ் அமைக்கப்படும் விசாரணைக் குழு கருத்துக் கேட்டால் மட்டும்தான், மக்கள் தங்கள் கருத்துகளைச் சொல்ல முடியும்.
இந்த விதி மாற்ற அறிவிக்கை கொரோனா கெடுபிடிகளுக்கிடையில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இணையதளத்தில் மட்டும் வரைவாக முன்வைக்கப்பட்டு, 2020 மே 12ஆம் நாளுக்குள் மக்கள் கருத்துக் கூறுமாறு கேட்கப்பட்டிருக்கிறது. தொலைக்காட்சிகளிலோ, ஏடுகளிலோ இதுகுறித்த விளம்பரங்கள், இதன் சாரமான செய்திகள் என எதுவும் வெளியாக வில்லை!
ஓசையின்றி வெளியிடப்பட்டிருக்கும் இந்த அறிவிக்கை வரைவு சட்டமானால், சேலம் – சென்னை எட்டுவழிச் சாலை, காவிரியில் கர்நாடகத்தின் மேக்கேத்தாட்டு அணை, முல்லைப் பெரியாற்றில் கேரளம் திட்டமிடும் புதிய அணை, சாகர் மாலா துறைமுகங்கள் போன்ற பேரழிவுத் திட்டங்கள் அனைத்தும் தங்குதடையின்றி செயலுக்கு வந்துவிடும்.
இத்திட்டங்கள் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை அடிப்படையிலேயே இசைவு பெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிபந்தனை நீக்கப்பட்டுவிட்டால், இந்தப் பேரழிவுத் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறி தமிழ்நாட்டை உருக்குலைத்துவிடும். இந்தியாவின் பிற பகுதிகளிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிற பல பேரழிவுத் திட்டங்கள் செயல்பட்டு, பெருந் தொகையான மக்கள் சூழலியல் அகதிகளாக இடம்பெயர நேரிடும்.
உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்திக் கொண்டிருக்கிறது. இதைக் கருத்தில் கொள்ள வேண்டிய நரேந்திர மோடி அரசு, இதற்கு நேர் எதிர்த்திசையில் பயணிக்க விரும்புகிறது.
தமிழ்நாட்டிற்கும், ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் பேரழிவை உண்டாக்க வகை செய்யும் இந்த “சூழலியல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை விதிகள் – 2020”-ஐ வரைவு நிலையிலேயே இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Tuesday, October 1, 2019

சூழலியல் நெருக்கடி நிலை ! கி. வெங்கட்ராமன் கட்டுரை.

சூழலியல் நெருக்கடி நிலை !

தோழர் கி. வெங்கட்ராமன் பொதுச்செயலாளர்,
       தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

“மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்த இயற்கை அமைப்பே நிலைகுலைந்து வருகிறது. மாபெரும் உயிர்மப் பேரழிவின் தொடக்கத்தில் நாம் நிற்கிறோம். ஆனால், நீங்களெல்லாம் பணத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள். தடையில்லாத பொருளியல் வளர்ச்சி குறித்து கற்பனைக் கதைகளை அள்ளி விடுகிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம்?”

நியூயார்க்கில் கடந்த 2019 செப்டம்பர் 23 அன்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பருவநிலை செயல்பாட்டு உச்சி மாநாட்டில் ஸ்வீடன் நாட்டின் சிறுமி கிரேட்டா துன்பெர்க் ஆற்றிய அறச்சீற்ற சொற்கள் இவை!

2015 பாரீசு பருவநிலை ஒப்பந்தத்திற்குப் பிறகு அதன் மீதான செயல்பாடுகளை விரைவுபடுத்த நடைபெற்ற இந்த உலகநாட்டுத் தலைவர்களின் உச்சி மாநாட்டை ஒட்டி, வரலாறு காணாத அளவில் ஏறத்தாழ 150 நாடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகரங்களில் இலட்சக்கணக்கான இளையோர் கூடி, புவிவெப்பமாதலைத் தடுக்க நாட்டுத் தலைவர்களும், பெருங்குழுமங்களும் உடனடியாக செயல்பட வேண்டுமென வலியுறுத்தி பேரணிகள் நடைபெற்றன. மாநாடு நடைபெற்ற நியூயார்க்கில் வரலாறு காணாத பேரணியும் நடந்தது.

இவ்வளவு அழுத்தங்கள் இருந்தபோதும், பருவநிலை நெருக்கடியை எதிர்கொள்ள புயல் வேகத்தில் செயல்பட வேண்டிய நாடுகள் ஆமை வேகத்தில் நடந்து கொண்டிருப்பதையே உச்சி மாநாட்டின் நிகழ்வுகள் எடுத்துக் காட்டின.

பாரீசு பருவநிலை மாநாட்டில் 195 நாடுகள் பங்கேற்ற போதிலும், அதன் மீதான செயல்திட்டங்களை உறுதிப்படுத்தும் உச்சி மாநாட்டில் 70 நாடுகள் மட்டுமே பங்கேற்றன. புவிவெப்பமடைவதற்கு காரணமான கர்பன் டை ஆக்சைடு – மீத்தேன் ஆகியவற்றை வெளியிடுவதில் முதன்மைப் பங்கு வகிக்கும் அமெரிக்க வல்லரசு அதிலும் பங்கேற்கவில்லை. ஆனால், மாநாடு நடந்து கொண்டிருந்தபோது வட அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டொனால்டு டிரம்ப் பார்வைாளராக சிறிது நேரம் அமர்ந்திருந்தார்.

கரி உமிழும் முதல் வரிசை நாடுகளான சீனாவும், இந்தியாவும் இதில் பங்கேற்றாலும் கருதத்தக்க உறுதிப்பாடு எதையும் வெளிப்படுத்தவில்லை.

ஏற்கெனவே தாங்கள் உறுதி அளித்தவாறு பசுமை மாற்று எரிசக்திகளுக்கு கூடுதல் திட்டங்கள் வகுத்து வருவதாகக் கூறிய சீனா, தாங்கள் அதற்கு மேல் செயல்பட முடியாததற்கு பாரீசு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதை காரணமாகக் கூறியது.

இந்தியத் தலைமையமைச்சர் மோடி, கதிரவன் மின்சாரம் உள்ளிட்ட மாற்று எரி ஆற்றல் மின்சார உற்பத்தியை இப்போதுள்ள 175 ஜிகா வாட்டிலிருந்து 2022-க்குள் 450 ஜிகா வாட்டாக உயர்த்தப்போவதாக அறிவித்தார். ஆனால், நிலக்கரி, மீத்தேன் பெட்ரோலியப் பயன்பாடுகள் குறைப்பது பற்றி ஒரு சொல்கூட பேசவில்லை.

ஆயினும், 65 நாடுகள் மற்றும் கலிபோர்னியா போன்ற முக்கியமான மாகாண அரசுகள் 2050க்குள் பசுமைக்குடில் வளிகள் உமிழ்வதை முற்றிலும் நிறுத்துவதாக உறுதியளித்தன.

பிரான்சு குடியரசுத் தலைவர் மக்ரான் பாரீசு ஒப்பந்தத்திற்கு இசையாத நாடுகளுடன் பிரான்சு எந்த தொழில் – வர்த்தக ஒப்பந்தமும் இனி செய்யாது என்று அறிவித்தார். மற்றபடி தன்னுடைய நாடு என்ன செயல்பாட்டை மேற்கொள்ளப் போகிறது என்பது குறித்து, திட்டம் எதையும் முன்வைக்கவில்லை.

செர்மனி, இத்தாலி, போர்ச்சுகல் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பலவும் 2020-லிருந்து புதிய நிலக்கரிச் சுரங்கங்களை தங்கள் நாடுகளில் திறப்பதில்லை எனவும், இருப்பதையும் 2050-க்குள் மூடி விடுவதாகவும் அறிவித்தன.

பாரீசு பருவநிலை ஒப்பந்தத்தில், இதுவரை கையெழுத்திடாத இரசியா கையொப்பமிட இப்போது ஒப்புக் கொண்டது. சிறிய நாடுகளில் கரிம வளியை நிறுத்தும் நடவடிக்கைகளுக்கு கூடுதல் நிதியை வழங்குவதற்கு பிரிட்டன், செர்மனி, பிரான்சு, நார்வே ஆகிய நாடுகள் உறுதி கொடுத்தன.

ஆயினும் இதுவரை இல்லாத அளவுக்கு 100 பன்னாட்டுப் பெருங்குழுமங்கள் பாரீசு ஒப்பந்தத்திற்கு இசைய, தங்கள் உற்பத்தித் திட்டங்களை மாற்றியமைத்துக் கொள்வதாக உறுதி கூறின. இவற்றுள் 87 பெருங்குழுமங்கள் புவிவெப்பமலை 1.5 செல்சியசுக்கு மிகாமல் இருப்பதற்குத் தங்கள் பங்களிப்பை உறுதி கூறின.

அதுபோல், உலகின் பெரிய வங்கிகளாக அறியப்பட்ட 130 வங்கிகள் பாரீசு பருவநிலை ஒப்பந்தத்திற்கு முரணாகச் செயல்படும் திட்டங்களுக்கு நிதி வழங்குவதை 2030-க்குள் முற்றிலும் நிறுத்திக் கொள்வதாக அறிவித்தன.

மக்கள் போராட்டங்களின் அழுத்தங்கள் முற்றிலும் பயணற்றுப் போய் விடவில்லை. இந்த உச்ச மாநாடு தொடங்குவதற்கு முன்னால் 23 நாடுகள் மட்டுமே செயல்திட்டங்களுக்கு உறுதியளித்திருந்தன. ஆனால், இம்மாநாட்டு அரங்கில் 70 நாடுகள் பங்கேற்று, செயல் திட்டங்களுக்கு உறுதி கூறியிருக்கின்றன.

ஐ.நா. தலைமைச் செயலாளர் அந்தோனியோ குட்டிரஸ் தனது நிறைவுரையில் கூறியதுபோல, இந்த ஆண்டு இறுதியில் திசம்பரில் சில்லி நாட்டின் சான்டியோகோ நகரில் நடைபெறவுள்ள பருவநிலை மாநாட்டில் கருதத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என்று நம்பலாம்.

ஆயினும், “சந்தை சொல்மிக்க மந்திரமில்லை” என்ற கொள்கை வழியிலிருந்தும், “வளர்ச்சி” வாதத்திலிருந்தும் மீளாமல் பருவநிலை சிக்கலுக்கு முற்றிலும் விடை கண்டு விட முடியாது.

இருந்தபோதிலும், இருக்கின்ற அரசியல் – பொருளியல் கட்டமைப்பிற்குள்ளேயே மாற்றங்கள் கொண்டு வர தொடர் அழுத்தங்களால் முடியும்!

இத்தொடர் முயற்சியின் முதல் நடவடிக்கையாக கிரேட்டா துன்பெர்க்கும், இந்தியாவைச் சேர்ந்த ரீமா பாண்டே உள்ளிட்ட வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 17 வயதுக்குட்பட்ட 15 சிறார்களும் - “ஐ.நா. குழந்தைகள் பாதுகாப்பு மையத்தின் இந்த உச்சி மாநாட்டில் நடைபெற்றவை உலக நாடுகளின் குழந்தைகள் எதிர்காலத்தைப் பாதுகாக்க உதவாது. எனவே, ஐ.நா. தங்களது மனுவை குழந்தைகளுக்கு எதிரான வன்முறை என்ற புகாராக எடுத்துக் கொள்ள வேண்டும்” என வலியுறுத்தி ஒவ்வொரு நாட்டுக் குழந்தைகளும் புவிவெப்பமடைவதால் எந்தந்த வகையில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை விளக்கி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மனு அளித்திருக்கிறார்கள்.

வரும் திசம்பரிலும், அதற்கு முன்பும் “பருவநிலை நெருக்கடி” (Climate Emergency) அறிவிக்க வலியுறுத்தி, உலகெங்கிலும் தொடர் மக்கள் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டியது அவசியமாகும்!

பெருந்திரள் மக்கள் அழுத்தமில்லாமல், உலக நாடுகள் தாமே செயல்படாது!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT