உடனடிச்செய்திகள்
Showing posts with label க. அருணபாரதி. Show all posts
Showing posts with label க. அருணபாரதி. Show all posts

Wednesday, August 7, 2019

“பாலாற்றில் ஆந்திரத் தடுப்பணைகளால் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு நீர்கூட கிடைக்காது!” தோழர் க. அருணபாரதி செவ்வி!

“பாலாற்றில் ஆந்திரத் தடுப்பணைகளால் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு நீர்கூட கிடைக்காது!” புதிய தலைமுறை வார ஏட்டில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச்செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி செவ்வி!

“பாலாற்றில் ஆந்திரத் தடுப்பணைகளால் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு நீர்கூட கிடைக்காது!” என புதிய தலைமுறை வார ஏட்டுக்கு அளித்துள்ள செவ்வியில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச்செயற்குழு தோழர் க. அருணபாரதி தெரிவித்துள்ளார்.

பாலாற்றில் ஆந்திர அரசு தொடர்ந்து தடுப்பணைகள் கட்டி தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய தண்ணீரைத் தடுத்து வருவது குறித்து “தடுப்பணை உயரம் பாலாற்றுத் துயரம்!” என்ற தலைப்பில், 08.08.2019 நாளிட்ட “புதிய தலைமுறை” வார ஏடு செய்திக் கட்டுரை வரைந்துள்ளது. அதில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதியின் செவ்வி இடம் பெற்றுள்ளது. அதில் அவர் கூறுவதாவது :

“இதுபோல பல மாநிலங்கள் ஊடாக ஓடும் நதிகளில் தடுப்பணைகளின் உயரத்தை உயர்த்த மத்திய அரசிடம் அனுமதி வாங்க வேண்டும். மேலும், எப்போது ஒரு அணை அல்லது தடுப்பணைகளில் கட்டுமான பணிகளைச் செய்தாலும் அதன் கீழ்ப்பாசன மாநிலங்களின் அனுமதியைப் பெற வேண்டும் என்பதே விதி. ஆனால் இதையெல்லாம் ஆந்திரா மதிப்பதே இல்லை. மத்திய அரசிடம் அனுமதி பெறாமலேயே இப்போது ஆந்திரா அரசு இந்த பணிகளைச் செய்கிறது. மத்திய அரசும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.

ஏற்கெனவே இதுபோல ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே குப்பம் என்ற பகுதியில் ஆந்திரா அணைகட்ட முயன்றபோது அதனை நீதிமன்றம் மூலம் தடுத்து நிறுத்தினோம். அந்த வழக்கு இன்னும் நிலுவையில்தான் உள்ளது. இதையெல்லாம் துளியும் மதிக்காமல் தடுப்பணைகளைக் கட்டுகிறது ஆந்திரம். தமிழக அரசு வழக்கம்போல இந்த விசயத்திலும் மவுனம் காத்து வருகிறது. இதனால், பாலாற்றில் நமது உரிமையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னர் சீனிவாசபுரம் என்ற இடத்தில் அணையின் கட்டுமான பணிகளை ஆந்திரம் செய்தபோது மனமுடைந்த தமிழக விவசாயி ஒருவர் அந்த அணையில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். பாலாற்றில் உள்ள தடுப்பணைகளின் உயரத்தை உயர்த்தும் பட்சத்தில் தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட கிடைக்காது. இதன் காரணமாக வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் பாலைவனமாகும். இங்குள்ள விவசாயிகளின் நிலைமை இன்னும் மோசமாகும்”.

இவ்வாறு தோழர் க. அருணபாரதி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு, உடனடியாகத் தலையிட்டு ஆந்திர அரசு கட்டி வரும் தடுப்பணைகளுக்கு எதிராக சட்ட மற்றும் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!


தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

Thursday, December 21, 2017

“31 கிணறுகளைக் காணோம்! வணிக ரகசியம் சொல்லும் ஓ.என்.ஜி.சி.” அம்பலப்படுத்தும் தமிழ்த்தேசியப் பேரியக்கம்!

“31 கிணறுகளைக் காணோம்!  வணிக ரகசியம் சொல்லும் ஓ.என்.ஜி.சி.” அம்பலப்படுத்தும் தமிழ்த்தேசியப் பேரியக்கம்!


காவிரிப்படுகையில் எண்ணெய் - எரிவளி எடுத்து வரும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம், பல உண்மைகளை மறைத்து வருவதை, தகவல் அறியும் உரிமைச் சட்டம் வழியே தமிழ்த்தேசியப் பேரியக்கம் அம்பலப்படுத்தியுள்ளது குறித்து “சூனியர் விகடன்” Junior Vikatan (14.12.2017) ஏட்டில், செய்திக்கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் கூறியுள்ளதாவது :

“காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் எண்ணெய்க் கிணறுகளில், கைவிடப்பட்ட 31 கிணறுகள் குறித்து பதில் அளிக்க மறுத்துள்ள ஓ.என்.ஜி.சி., “அது வணிக ரகசியம்” என்று கூறியுள்ளது. மர்மமான இந்தப் பதில் தங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக மக்கள் கூறுகின்றனர்.

டெல்டா மாவட்டங்களில், மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஏராளமான கிணறுகளைத் தோண்டி கச்சா எண்ணெயும், இயற்கை எரிவாயுவும் எடுத்து வருகிறது. அதன் காரணமாக, தங்கள் பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனக் கழிவுகளால் விவசாயம் பாழ்படுவதாகவும் மக்கள் குமுறுகிறார்கள். இந்தக் குழாய்களில் அடிக்கடி ஏற்படும் வெடிப்புகளால், கச்சா எண்ணெய் வெடிப்புகளால், கச்சா எண்ணெய் பாய்ந்து விளைநிலங்கள் மலடாகும் அவலமும் உள்ளது.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் மறுத்து வருகிறார்கள். “எங்கள் செயல்பாடுகளால் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. எந்த இரகசியமும் இல்லாமல். வெளிப்படைத்தன்மையோடு செயல்படுகிறோம்” என்று சொல்கிறார்கள். டெல்லியில் உள்ள ஓ.என்.ஜி.சி. தலைமை அலுவலகத்துக்குத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் சில கேள்விகள் அனுபபினார், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் அருணபாரதி. அவற்றுக்கு ஓ.என்.ஜி.சி. அளித்துள்ள பதில்கள், சர்ச்சையைக் கிளப்பக்கூடியதாக உள்ளன.

இதுகுறித்து அருணபாரதியிடம் பேசினோம். “தமிழ்நாட்டில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எத்தனைக் கிணறுகளை அமைத்துள்ளது, அவற்றில் எத்தனை செயல்படுகின்றன, எத்தனைக் கிணறுகள் கைவிடப்பட்டுள்ளன என்ற விவரங்களைக் கேட்டிருந்தேன்.

அதற்கு “மொத்தக் கிணறுகள் 707. அவற்றில் 299 கிணறுகள் செயல்பாட்டில் உள்ளன. 377 கிணறுகள் கைவிடப்பட்டவை” என்று ஓ.என்.ஜி.சி. பதில் அளித்துள்ளது. 707 கிணறுகளில் 31 கிணறுகள் குறித்து எதுவும் சொல்லப்படவில்லை. அதன் மர்மம் என்னவென்று தெரியவில்லை.

“கச்சா எண்ணெயும் இயற்க எரிவாயுவும் எடுக்க, என்னென்ன வேதிப்பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன” என்று கேட்டிருந்தேன். “பென்டோனைட் மற்றும் நன்னீர் பயன்படுத்தப்படுகின்றன” என்று பதில் தந்தார்கள். இதற்காக அதிகளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது என்பது உறுதியாகிறது.

கதிராமங்கலம், நெடுவாசல் பகுதிகளில் ஓ.என்.ஜி.சி.யின் செயல்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தபோது, “எங்களது பணிகளுக்கு நிலத்தடி நீர் தேவையில்லை” என அதிகாரிகள் தெரிவித்தனர். ஓ.என்.ஜி.சி. கிணறுகள் செயல்படும் குத்தாலம், நரிமணம், கமலாபுரம் வெள்ளக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டதற்குத் தாங்கள் காரணமல்ல என்று சொல்லி வந்தார்கள். “அது உண்மையல்ல” என்பது அவர்களின் பதில் மூலமாகவே இப்போது உறுதியாகிவிட்டது.

“கைவிடப்பட்ட 377 கிணறுகள் எங்கெங்கு அமைந்துள்ளன” என்று கேட்டதற்கு, “அது வணிக இரகசியம்” என்று பதில் தந்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள ஓ.என்.ஜி.சி. கிணறுகள் வேலையிடப்பட்டு, பெயர் பலகையுடன் தான் அமைந்துள்ளன. பிறகு ஏன் ரகசியம் என அதை மூடி மறைக்கிறார்கள் என்று தெரியவில்லை. “தமிழ்நாட்டில் ஓ.என்.ஜி.சி. கிணறுகளின் கழிவுகள் எங்கு கொட்டப்படுகின்றன” என்று கேட்டிருந்தேன். அதற்கு, “கமலாபுரம், நரிமணம் ஆகிய இரண்டு இடங்களில் உள்ள கிணறுகளில் கொட்டப்படுகின்றன” என்று பதில் தந்துள்ளனர். அதைப் பார்த்து அதிர்ந்துபோனேன்.

299 கிணறுகளின் கழிவுகளும் இந்த இரண்டே இடங்களில் பூமிக்குள் செலுத்தப்பட்டால், மிகவும் மோசமான விளைவுகள் ஏற்படும். “கைவிடப்பட்ட கிணறுகள் அமைந்துள்ள நிலங்களைப் புதுப்பிக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்ற கேள்விக்கு, “நிலத்தைப் புதுப்பித்து உரிமையாளர்களிடம் வழங்கிவிடுவோம்” எனப் பதில் தந்துள்ளனர்.

நரிமணத்தில் புதிய கிணறுகள் அமைப்பதற்கான கருத்துக்கேட்புக் கூட்டம் 2014இல் நாகை மாவட்டத்தில் நடந்தது. அப்போது, கைவிடப்பட்ட கிணறுகள் அமைந்துள்ள நிலங்களின் விவசாயிகள், தங்களது நிலத்தைப் புதுப்பித்துத் தருமாறு கோரினர். அதற்குப் பதில் அளித்த ஓ.என்.ஜி.சி. பொதுமேலாளர், “இந்த நிலங்களைப் புதுப்பிக்க, மத்திய அரசு வகுத்துள்ள நடைமுறைகளை மூன்று ஆண்டுகளாகக் கடைபிடித்து வருகிறோம். நாகை மாவட்டத்தில் எட்டு கிணறுகளின் நிலங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன, மீதமுள்ள நிலங்கள் விரைவில் புதுப்பிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு கச்சா எண்ணெயும் இயற்கை எரிவாயுவும் எடுத்துவரும் ஓ.என்.ஜி.சி., கைவிடப்பட்ட நிலங்களைப் புதுப்பிக்க 2011-ஆம் ஆண்டுதான் நெறிமுறைகளை உருவாக்கியுள்ளது. இதுவும்கூட முழுமை பெறவில்லை. காவிரிப்படுகையில் பல இடங்களில் கைவிடப்பட்ட கிணறுகள் இருக்கும் நிலங்கள் இன்றுவரை புதுப்பிக்கப்படாமல் உள்ளன. ஓ.என்.ஜி.சி.யின் செயல்பாடுகளால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்பது இவர்களது பதில்கள் மூலமாகவே உறுதியாகிறது” என்கிறார் அருணபாரதி.

இவ்வாறு அச்செய்திக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhthesiyam.com 

Monday, March 6, 2017

தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் காழ்ப்புணர்ச்சி கக்குவது ஏன்? - சிறப்புக் கட்டுரை

தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் காழ்ப்புணர்ச்சி கக்குவது ஏன்? சிறப்புக் கட்டுரை 

இன்றைய (06.03.2017) தமிழ் இந்து நாளேட்டில், ஸ்டாலின் ராஜாங்கம் எழுதிய, “ஷிமோகா மேயரின் அடையாளம் ‘தமிழர்’ மட்டுமல்ல” என்ற பத்தியைப் படிக்க நேர்ந்தது.

கர்நாடக மாநிலம் ஷிமோகா மாநகராட்சிக்கு மேயராக தமிழரான திரு. ஏழுமலை அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை தமிழ்நாட்டுத் தமிழர்கள் அனைவரும் பாராட்டுகிறோம். அவர் தேர்வு செய்யப்பட்டதற்காகப் பெருமை கொள்கிறோம். ஆனால், இது பற்றி தமிழ் இந்துவில் கட்டுரை எழுதியுள்ள ஸ்டாலின் ராஜாங்கம் பின்வருமாறு தமிழ்த்தேசியத்தைச் சாடுகிறார்.

“சமூகத்தின் எல்லாப் பிரச்சினைகளும் ஒற்றைத் திசையில் தமிழ்த்தேசியவாதத்திற்கான கச்சாப்பொருளாக மாற்றப்பட்டுவிடும் காலத்தில் வாழ்கிறோம். ஆனால் ஒரு நூற்றாண்டுக்கு மேலாகத் தமிழ்த்தேசியம் தராத வாழ்வை நவீனத்தின் விதேச வாழ்வு மூலம் தலித்துகள் பெருமளவு பெற்றிருக்கிறார்கள் என்பதும் வரலாற்று உண்மையாக இருக்கிறது. அதன் தொடர்ச்சியில் ஏழுமலை வருகிறார். (ம.ஜ.க. – பா.ச.க. கூட்டணியை மதிப்பிட வேண்டியது தனியானது)”.

தமிழ்நாட்டில் பொதுத் தொகுதியில் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட வகுப்பினரை முக்கியக் கட்சிகள் வேட்பாளராக நிறுத்துவதில்லை என்ற குறையைத் தமிழ்த்தேசியராகிய நாங்களும் உணர்கிறோம். அக்குறையை நீக்கும் வகையில் கருத்துப் பரிமாற்றங்கள், திறனாய்வுகள் வர வேண்டியது மிகமிகத் தேவை.

ஆனால், ஸ்டாலின் ராஜாங்கம் “ஒரு நூற்றாண்டுக்கு மேலாகத் தமிழ்நாட்டில் தமிழ்த்தேசியம் தராத வாழ்வை கர்நாடகத்தில் நவீனத்தின் விதேச வாழ்வு  வழங்கியிருக்கிறது” என்று கூறுகிறார்.

தமிழ்நாட்டில் ஒரு நூற்றாண்டு காலமாகத் தமிழ்த்தேசியம் ஆட்சியில் இருந்ததா? இன்றுதான் அது ஆட்சியில் இருக்கிறதா? இல்லை!

இந்தியத்தேசியம் – திராவிடத்தேசியம் இரண்டும்தான் இந்திய விடுதலைக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்து வருகின்றன. அவற்றைத் திறனாய்வு செய்யாமல், ஆட்சியில் இல்லாத தமிழ்த்தேசியத்தை – அதுவும் இப்பொழுதுதான் குருத்து விட்டுக் கிளம்பும் தமிழ்த்தேசியத்தைக் குற்றம்சாட்ட மேற்படி தருணத்தை ஸ்டாலின் ராஜாங்கம் பயன்படுத்திக் கொண்டது ஏன்?

தமிழ் இனத்தின் மீது - தமிழ்த்தேசியத்தின் மீது அப்படிப்பட்ட காழ்ப்புணர்ச்சி ஸ்டாலின் ராஜாங்கத்திற்கு ஏற்படக் காரணம் என்ன?

ஒடுக்கப்பட்ட தமிழர்கள் உட்பட அனைத்துத் தமிழ் மக்களையும் உடன்பிறப்பாக – உறவு முறையாகக் கொண்டிருக்கிறது தமிழ்த்தேசியம்! தமிழினத்தில் பழங்காலத்தில் இல்லாத சாதி முறையும் – சாதி ஒடுக்குமுறையும் - தீண்டாமைக் குற்றச் செயல்களும் வளர்ந்திருப்பதை நீக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியம் போராடி வருகிறது. “மக்கள் அனைவரும் சமம் – தமிழர்கள் அனைவரும் சமம்” என்பதே தமிழ்த்தேசிய அறம்!

கர்நாடகத்தில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் மதச்சார்பற்ற சனதா தளத்தின் வேட்பாளராக திரு. ஏழுமலை அவர்கள் நின்று வெற்றி பெற்றுள்ளார். 1991 நவம்பர் - டிசம்பரில் கன்னடர்கள் நடத்திய காவிரிக் கலவரத்தில் கர்நாடகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட தமிழர்கள் – ஒடுக்கப்பட்ட வகுப்புத் தமிழர்களே! அதுவும் ஷிமோகாவில் மிக மோசமாக பாதிக்கப்பட்டு, உயிர் பிழைக்க அகதிகளாகத் தமிழ்நாட்டுக்கு வந்த தமிழர்களில் ஒடுக்கப்பட்ட வகுப்பு உடன்பிறப்புகளே கணிசமானோர்.

அந்த அச்சத்திலிருந்து அவர்கள் இன்னும் விடுபடாததால்தான், கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பரில், கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக கன்னட இனவெறியர்கள் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்ட போது, ஷிமோகாவில் வாழும் ஒடுக்கப்பட்ட தமிழர்கள் உள்ளிட்ட அனைத்துத் தமிழர்களும் – “தாய்த்தமிழ் சங்கத்தின்” சார்பில் பேரணியாகச் சென்று, அம்மாவட்ட ஆட்சியரிடம் தமிழர்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி மனு அளித்தனர். (தமிழ் இந்து, 15.09.2016). ஷிமேகாவில் தமிழர்களுக்கு – குறிப்பாக ஒடுக்கப்பட்ட தமிழர்களுக்கு கன்னடர்கள் உயர்வு தருவதுபோல், சித்திரம் தீட்டுகிறார் ஸ்டாலின் ராஜாங்கம். உண்மை என்ன? ஷிமோகாவில் கணிசமாகத் தமிழர்கள் வாழ்கிறார்கள். ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த திரு. ஏழுமலை அவர்களுக்கு அங்கு வாழும் அனைத்து சாதித் தமிழர்களும் இன உணர்ச்சி அடிப்படையில் வாக்களித்திருக்கிறார்கள். இதையும் ஸ்டாலின் ராஜாங்கம் கவனிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் எல்லாப் பிரச்சினைகளும் தமிழ்த்தேசியத்தின் கச்சாப்பொருளாக மாறுவதாக ஸ்டாலின் ராஜாங்கம் துயரப்படுகிறார். தீர்ப்பாயம் – உச்ச நீதிமன்றம் ஆகியவை தீர்ப்பு வழங்கிய பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இந்திய அரசு மறுப்பது, தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு எதிரான இனப்பாகுபாடு இல்லையா?

கச்சத்தீவு ஒருபோதும் இந்தியாவில் இருந்ததில்லை என்று உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் காங்கிரசு நடுவண் அரசும், பா.ச.க. நடுவண் அரசும் பதில் மனு போட்டிருப்பது தமிழர்களுக்கு எதிரான இனப்பாகுபாடு இல்லையா?

அறநூறுக்கும் மேற்பட்ட மீனவர்கள் சிங்களர்களால் கடலிலே சுட்டுக்கொல்லப்பட்ட போதும் - அன்றாடம் கடத்தப்படும் போதும் இந்தியக் கடலோரக் காவல்படை தலையிட்டு தடுத்து நிறுத்தாதது தமிழர்களுக்கு எதிரான இனப்பாகுபாடு இல்லையா?

காட்சிப்படுத்தத் தடை செய்யும் விலங்குகள் பட்டியலில் குதிரையைச் சேர்க்காமல், காளையை மட்டும் இந்திய அரசு சேர்த்தது தமிழர்களுக்கு எதிரான இனப்பாகுபாடு இல்லையா?

பாலாற்றிலும், பவானியிலும் சட்டவிரோதமாக அம்மாநில அரசுகள் தடுப்பணைகள் கட்டி தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் வராமல் தடுக்கும்போது, இந்திய அரசு தலையிட்டு நீதி வழங்காமல் இருப்பது, தமிழர்களுக்கு எதிரான இனப்பாகுபாடு இல்லையா?

கேரளத்திலிருந்து கர்நாடகம் செல்லும் இந்திய அரசின் (கெயில்) எரிவளிக் குழாய், கேரள மாநிலத்திலும் கர்நாடகத்திலும் சாலையோரங்களில் பதிக்கப்படும்போது, தமிழ்நாட்டில் மட்டும் விளை நிலங்களில் பதிக்கப்படுவது தமிழர்களுக்கு எதிரான இனப்பாகுபாடு இல்லையா?

வரலாறு காணாத வறட்சியால் வேளாண்மை பாதிக்கப்பட்டு, தமிழ் உழவர்கள் நஞ்சுண்டும் மாரடைப்பு நேர்ந்தும் 250 பேருக்கு மேல் உயிரிழந்த நிலையிலும், அவர்களின் குடும்பங்களுக்கு உதவித் தொகை வழங்க தமிழ்நாடு அரசுக்கு சிறப்பு நிதி வழங்காமல் இந்திய அரசு ஒதுங்கிக் கொண்டது, தமிழர்களுக்கு எதிரான இனப்பாகுபாடு இல்லையா?

வார்தா புயலின் பேரழிவை, வறட்சியின் கொடுமையை நடுவண் அரசு ஆய்வுக்குழுவினர் நேரில் பார்வையிட்டும் இன்றுவரை இந்திய அரசு நிவாரண நிதி தராமல் இருப்பது, இனப்பாகுபாடு இல்லையா? கர்நாடகத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே 1,700 கோடி ரூபாய் முதல் கட்ட உதவியாக வறட்சி நிவாரணம் இந்திய அரசு அளித்துவிட்டது. கர்நாடகத்தில் இருப்பது பா.ச.க.விற்கு எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரசின் ஆட்சி என்பதும்  கவனிக்கத்தக்கது.

இன்னும் இப்படி எத்தனையோ இனப்பாகுபாடுகளை தமிழர்களுக்கு எதிராக இந்திய அரசு செய்து வருகிறது. ஏற்கெனவே ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்களை இன அழிப்பு செய்த சிங்களர்களின் போருக்கு இந்திய அரசு துணை நின்றது.

தமிழர்களுக்கு ஏற்பட்டு வரும் இவ்வளவு இன்னல்களைப் பற்றியெல்லாம், தமிழர்களுக்கு எதிராக இந்திய அரசு காட்டும் இனப்பாகுபாட்டு வஞ்சகத்தைப் பற்றியெல்லாம் ஸ்டாலின் ராஜாங்கத்திற்கு அக்கறை இல்லை! தமிழ்நாட்டில் அரங்கேறும் தமிழின வஞ்சகங்களுக்கு எதிராகத் தமிழின உணர்ச்சி வளர்கிறதே என்பதுதான் அவருக்கான கவலையாக இருக்கிறது. அந்தக் கவலை அவரிடம் தமிழர்களுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சியை  உண்டாக்கிவிட்டது.


ஏற்கெனவே தமிழ் இந்து நடுப்பக்கத்தில் தமிழ்த்தேசியத்திற்கு எதிரான கருத்துகளை வன்மமாகவும், வஞ்சகமாகவும், சுற்றி வளைத்தும் வெளியிட்டுக் கொண்டிருக்கும் சமஸ் எழுதும் பக்கத்தில், ஸ்டாலின் ராஜாங்கத்தின் தமிழர்களுக்கு எதிரான அவருடைய காழ்ப்புணர்ச்சி விமர்சனமும் வந்திருக்கிறது என்பதையும் தமிழர்கள் புரிந்து கொள்வார்கள்.

( கட்டுரையாளர் - க. அருணபாரதி, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர்.

Monday, July 25, 2016

அனகாபுத்தூரில் எளிய மக்களை வெளியேற்றும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து மக்கள் போராட்டம்!



அனகாபுத்தூரில் எளிய மக்களை வெளியேற்றும்
தமிழ்நாடு அரசைக் கண்டித்து மக்கள் போராட்டம்!


கடந்த 2015ஆம் ஆண்டின் இறுதியில் சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது தமிழ்நாடு அரசு, செம்பரம்பாக்கம் ஏரியை இரவு நேரத்தில் முன்னறிவிப்பின்றி திறந்து விட்டது. இதன் காரணமாக, பெருமளவிலான வெள்ள நீர் சென்னை மாநகரக்குள் புகுந்து பெரும் அழிவை ஏற்படுத்தியது.
செம்பரபாக்கம் ஏரியிலிருந்து திறந்துவிடப்பட்ட நீரும், கனமழையால் வந்த மழை நீரும் அடையாறு ஆற்றில் வெள்ளமென வந்த நிலையில், நீரின் போக்கைத் தடுத்து சென்னை மாநகருக்குள் கட்டப்பட்டிருந்த பெரு நிறுவன ஆக்கிரமிப்புக் கட்டங்களின் காரணமாக வெள்ள நீர் ஊருக்குள் புகுந்தது.


செம்பரம்பாக்கம் ஏரியை இரவு நேரத்தில் திடீரென திறந்துவிட்டது குறித்து தமிழ்நாடு அரசின் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, விசாரணை நிலுவையிலுள்ளது.

இந்நிலையில், தனது நிர்வாகத்திறமையின்மை மற்றும் இரவு நேரத்தில் திடீரென செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிட்டதுதான் சென்னை மாநகரின் வெள்ளப் பெருக்கிற்கு முதன்மைக் காரணம் என்பதை மறைத்துவிட்டு, ஒட்டு மொத்த பாதிப்புகளுக்கும் எளிய மக்களின் குடியிருப்புகள் மட்டுமே காரணம் என்று கூறிக் கொண்டு, தமிழ்நாடு அரசு திசைதிருப்பும் பணிகளைச் செய்து வருகின்றது.

சென்னை மாநகருக்குள் அடையாறு மற்றும் கூவம் ஆற்றங்கரைகளிலும், மாநகருக்குள் உள்ள பல்வேறு ஏரிகளிலும் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் கட்டுமானங்கள் மீது கைவைக்க விரும்பாத தமிழ்நாடு அரசு, ஆற்றின் போக்கைத் தடுக்காமல் கரைகளில் வீடுகட்டி பல்லாண்டுகளாக வாழ்ந்து வரும் எளிய மக்களின் குடியிருப்புகளை இடித்து நொறுக்கத் திட்டமிட்டு வருகின்றது.

அடையாறு ஆறு சென்னை மாநகருக்குள் பயணிக்கத் தொடங்கும் நந்தம்பாக்கம் தொடங்கி, கடலோடு கலக்கும் பட்டினப்பாக்கம் வரையிலான 12 கிலோ மீட்டர் தொலைவில்தான் பெரும் கட்டுமானங்கள் ஆற்றின் போக்கைத் தடுக்கும் வகையில் எழுப்பப்பட்டுள்ளன என்று பல்வேறு வல்லுனர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

மிக முகாமையாக, சென்னை விமான நிலையத்தின் இரண்டாம் ஓடு தளமே, அடையாறு ஆற்றின் போக்கைத் தடுத்து உருவாக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியான செய்தி! மேலும், மணப்பாக்கம் மியாட் தனியார் மருத்துவமனை, நடுவண் அரசின் பறக்கும் தொடர்வண்டிக் கட்டுமானம் உட்பட பல கட்டிடங்களும் பல மென்பொருள் நிறுவனக் கட்டிடங்களும் வணிக வளாகங்களும் சென்னை மாநகருக்குள்தான் ஆற்றின் போக்கைத் தடுத்துக் கட்டப்பட்டுள்ளன.

அதிலும் முகாமையாக, அடையாறு ஆற்றின் நீர் கடலுக்குள் சேரும் பட்டினப்பாக்கம் பகுதியில் லீலா பேலஸ் நட்சத்திர விடுதி, செட்டிநாடு நிறுவனங்களின் கட்டடங்கள் காரணமாக, ஆற்றின் ஆழம் மிகவும் குறைந்து மேடாக இருப்பதும், பல்லாண்டுகளாக முகத்துவாரப் பகுதி தூர் வாரப்படாததும்தான், ஆற்று நீர் கடலுக்குள் போக முடியாமல் தண்ணீர் பல கிலோ மீட்டர் அளவிற்கு நகருக்குள் தேங்கி நிற்பதற்கு முதன்மைக் காரணம் என சுட்டிக் காட்டப்பட்டது.
ஆனால், தமிழ்நாடு அரசோ இந்த நிறுவனங்களின் கட்டுமானங்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடையாறு ஆறு பயணித்து வரும் பகுதிகளில் “ஆக்கிரமிப்பு” என்ற பெயரில், எளிய மக்களை வெளியேற்றும் செயலில் ஈடுபட்டுள்ளது.
2015 _- பெருவெள்ளத்தைக் காரணம் காட்டி, காஞ்சி மாவட்டம், அனகாபுத்தூரிலுள்ள சாந்தி நகர், மூகாம்பிகை நகர், ஸ்டாலின் நகர், டோபிகானா உள்ளிட்ட பகுதிகளை இடித்துத் தள்ள தற்போது தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகமும் முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
இதனைக் கண்டித்து, இப்பகுதிகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் 650-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இதற்கெதிரானப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
ஏற்கெனவே, சென்னை பெருவெள்ளம் ஏற்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே 2012ஆம் ஆண்டு, தி.மு.க. ஆட்சியின்போது, இதே பகுதி மக்களின் வீடுகளை இடித்துத் தள்ளிவிட்டு, அதன்மேல் அடுக்ககங்களில் வசிக்கும் பணம் படைத்தோர் நடைபயணம் செல்வதற்கு ஏதுவாக, ஆற்றோர நடைபாதை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டது. மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து அத்திட்டம் கைவிடப்பட்டது. ஆனால், தற்போது சென்னை பெருவெள்ளத்தை காரணமாகக் கூறிக் கொண்டு, இதே பகுதியை முற்றிலும் இடித்து நொறுக்க திட்டமிடப்படுகின்றது.
ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் இப்பகுதிக்கு நேர் எதிராக அடுத்த கரையில் அமைந்துள்ள மாதா பொறியியல் கல்லூரியின் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீது, ஒரு அடியைக்கூட மீட்கத் தயங்கும் தமிழ்நாடு அரசு, கரையின் இன்னொரு பகுதியில் மக்கள் அடர்த்தியாக வாழ்ந்து கொண்டுள்ள பகுதியை, இடித்து நொறுக்கத் திட்டமிடுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.
அனகாபுத்தூர் பகுதி மக்களை வெளியேற்றக் கூடாது என்று கோரி, 22.07.2016 அன்று காலை, அனகாபுத்தூர் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் அருகில், அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற பெருந்திரள் மக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட் டத்தை அப்பகுதி இளைஞர்கள் முன்னின்று ஒருங்கிணைத்தனர்.
பெண்களும் ஆண்களும் என நூற்றுக்கணக் கானோர் ஆர்ப்பாட்டத்தில் திரண்டு நின்று, அரசின் முடிவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
தே.மு.தி.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. அனகை முருகேசன், சி.பி.எம். பகுதிச் செயலாளர் தோழர் பாலன், புரட்சிகர இளைஞர் முன்னணி பொறுப்பாளர் தோழர் தமிழ்வாணன், புரட்சி பாரதம் மாநிலத் துணைச் செயலாளர் திரு. அன்பரசு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர் கண்டன உரையாற்றினர்.
தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி உரையாற்றினார். பேரியக்கத் தென்சென்னை செயலாளர் தோழர் கவியரசன் உள்ளிட்ட பல்வேறு கட்சிப் பொறுப்பாளர்களும், அப்பகுதி இளைஞர்கள் இராசேசு, மாரி, கோபி, குப்பன், வேல், நாகராசு, மாரியப்பன், குமார், ஞானவேல் உள்ளிட்ட திரளானப் பொது மக்களும் பங்கேற்றனர்.
அனகாபுத்தூர் மக்களை வெளியேற்றும் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு, உடனடியாகக் கைவிட வேண்டும். அடையாறு ஆற்றை ஆழப்படுத்தி, கரைகளை வலுப்படுத்தி, சென்னை மாநகருக்குள் உள்ள தனியார் நிறுவனக் கட்டுமானங்களை அகற்றினாலே அடையாறு ஆறு தடைபடாமல் ஓடும். எனவே, தமிழ்நாடு அரசு அதைச் செய்ய வேண்டும்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT