உடனடிச்செய்திகள்

Wednesday, February 11, 2015

மேக்கேத்தாட்டு முற்றுகைப் போராட்டத்திற்கு, தஞ்சையில் தொடங்கிய பரப்புரை இயக்கம்!








காவிரியின் குறுக்கே கர்நாடகம் சட்டவிரோத அணைகள் கட்டுவதைத் தடுக்க, மார்ச் 7 அன்று, தேன்கனிக்கோட்டையிலிருந்து ஆயிரக்கணக்கான உழவர்களுடன் மேக்கேத்தாட்டுவுக்குச் சென்று முற்றுகைப் போராட்டம் நடத்த, காவிரி உரிமை மீட்புக்குழு அழைப்பு விடுத்துள்ளது. இப்போராட்டத்திற்கு ஆதரவு திரட்டி, தமிழகமெங்கும் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் பரப்புரை இயக்கங்கள் நடைபெறுகின்றன. இதன் தொடக்க விழா, நேற்று (10.02.2015) மாலை தஞ்சையில் நடைபெற்றது. 

தஞ்சை பனகல் கட்டிடம் அருகில் நடைபெற்ற இத்தொடக்க விழாப் பொதுக்கூட்டத்திற்கு, தமிழக விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த.மணிமொழியன் தலைமையேற்றார். காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன் முன்னிலை வகித்தார். தமிழர் தேசிய முன்னணித் தலைவர் திரு. பழ.நெடுமாறன், பரப்புரை இயக்கத்தைத் தொடக்கி வைத்துப் பேசினார். தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை, எழுச்சி முழக்கங்களை எழுப்பினார். 

கூட்டத்தில், மனித நேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் திரு. தமிமுன் அன்சாரி, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் திரு. குடந்தை அரசன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அயனாவரம் திரு. சி.முருகேசன், தாளாண்மை உழவர் இயக்கம் பொறியாளர் கோ. திருநாவுக்கரசு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. எஸ்.எஸ். பாண்டியன், திரு. இறைநெறி இமையவன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் பங்கேற்றனர். நிறைவில், தமிழக விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டத் துணைத் தலைவர் திரு. ஜெகதீசன் நன்றியுரையாற்றினார். 

தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் பழ.இராசேந்திரன், தோழர் தோழர் அ.ஆனந்தன் உள்ளிட்ட திரளான த.தே.பே. தோழர்கள் கலந்து கொண்டனர். 

காவிரிச் சிக்கல் என்பது காவிரி டெல்டா மாவட்டங்களின் சிக்கல் மட்டுமல்ல, அது தமிழகம் தழுவிய சிக்கல். ஏனெனில், தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு, காவிரி நீர் தான் குடிநீராகப் பயன்படுகிறது. எனவே,காவிரியைக் காக்கும் மேக்கேத்தாட்டு முற்றுகைப் போராட்டத்தில் தமிழகம் தழுவிய அளவில் தமிழின உணர்வாளர்களும், பொது மக்களும் திரளாகப் பங்கேற்க வேண்டுமென காவிரி உரிமை மீட்புக் குழு வேண்டுகோள் விடுக்கிறது. 

Tuesday, February 10, 2015

தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்: மோடியின் சர்க்கஸ் அரசியலுக்குக் கிடைத்த சாட்டையடி! - தோழர் பெ.மணியரசன் அறிக்கை!


தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்:
மோடியின் சர்க்கஸ் அரசியலுக்குக் கிடைத்த சாட்டையடி!
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை!

தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள், மோடியின் சர்க்கஸ் அரசியலுக்குக் கிடைத்த சாட்டையடி என தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுவதாவது: 

தில்லி சட்டப்பேரவை முடிவுகள் நரேந்திர மோடி ஆதிக்கக் குழுவினர் நடத்தி வரும் சர்க்கஸ் அரசியலுக்கு கொடுக்கப்பட்ட சாட்டையடியாகும்.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ச.க. அணியின் நேரடித் தலைவராகக் களமிறங்கி சந்து பொந்துகளில் எல்லாம் பரப்புரை செய்தார் மோடி. நாட்டின் தலைமை அமைச்சர் என்பதையும் மறந்து அல்லது அந்த ஆர்ப்பரிப்பில் கெஜ்ரிவால்தான் தனது முதல் எதிரிபோல் கருதி, பரப்புரையை வடிவமைத்துக் கொண்டார் மோடி. எனவே, இத்தோல்வி பா.ச.க.வின் தோல்வியும், குறிப்பாக நரேந்திர மோடியின் தனிப்பட்டத் தோல்வியுமாகும்.

நாட்டின் சனநாயகத்தை மதிக்காதது மட்டுமின்றி, தன் கட்சியின் சனநாயகத்தையும் குழிதோண்டி புதைத்துவிட்டு, ஓரு சிலரை தன் குழுவில் வைத்துக் கொண்டு, எதேச்சாதிகார அரசியல் நடத்தி வருகிறார் நரேந்திர மோடி. இந்த எதேச்சாதிகார கும்பலின் சர்க்கஸ் அரசியலைப் பயன்படுத்தி, இந்துத்துவா ஆதிக்கக் கட்டமைப்பை நாடெங்கும் நிறுவிட ஆர்.எஸ்.எஸ். இயக்கம் முயன்று வருகிறது.

பா.ச.க.வின் படுதோல்விக்கான முகாமையானக் காரணங்களில் ஒன்று, ஒற்றைக்குழுவின் எதேச்சாதிகாரம். இரண்டு, இந்துத்துவா தீவிரவாதம். மூன்று, பன்னாட்டு நிறுவனங்களுக்கு நாட்டைக் காட்டிக் கொடுக்கும் அரசியல் துரோகம். நான்கு, பா.ச.க.வில் நடைபெறும் உள்கட்சி சண்டை காரணமாக ஆம் ஆத்மிக்கு விழுந்த பா.ச.க. வாக்குகள்.

இந்தியாவிலுள்ள தேசிய இனங்களின் பன்மைத்தன்மையை மறுத்து, இந்தியத் தேசிய வெறியையும் இந்தித் திணிப்பு வெறியையும் கொள்கையாகக் கொண்டதுதான் ஆம் ஆத்மிக் கட்சி என்ற போதிலும், இந்தி ஆதிக்க முகாம்களுக்குள் ஒன்றுக்கொன்று முரணான வலிவுள்ள பல்வேறு அமைப்புகள் உருவாவது நல்லதே.

மோடிக்கு எதிரி மோடியே என்றும், அற்பத்தன்மைகள் கொண்ட ஆரவாரப் பிரமுகரே மோடி என்றும் மோடியின் செயல்பாடுகளே மோடியை வீழ்த்தும் என்றும் ஓராண்டில் பா.ச.க.வின் உள்கட்சி போராட்டம் அம்பலத்திற்கு வெளிவரும் என்றும், ஏற்கெனவே தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தமிழர் கண்ணோட்டம் இதழில் நாம் எழுதியிருந்தோம்.


பா.ச.க.வின் அடிப்படை உறுப்பினராக கிரண் பேடியை சேர்த்த அன்றே, தில்லி முதலமைச்சர் வேட்பாளராகவும் ஆக்கினார் நரேந்திர மோடி. தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியில், பா.ச.க.வின் உள்கட்சித் தகராறு கணிசமான பங்கு வகித்திருக்கும். இன்னும் போகப் போக மோடி ஆதிக்கக் குழுவினரின் அரசியல் சர்க்கசுக்கு எதிரான அடிகள் விழும் என்று எதிர்பார்க்கலாம். 

இவ்வாறு தோழர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார். 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT