உடனடிச்செய்திகள்

Wednesday, December 30, 2015

தமிழுக்கான ஆராய்ச்சிப் போராளியாய், களப்போராளியாய் விளங்கிய தமிழண்ணல் அவர்களுக்கு வீரவணக்கம்! - தோழர் பெ.மணியரசன் இரங்கல் செய்தி!

தமிழுக்கான ஆராய்ச்சிப் போராளியாய், களப்போராளியாய் விளங்கிய தமிழண்ணல் அவர்களுக்கு வீரவணக்கம்! தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் இரங்கல் செய்தி!

மூத்த தமிழறிஞர் தமிழண்ணல் அவர்கள் 29.12.2015 அன்று இரவு மதுரையில் அவரது இல்லத்தில் காலமான செய்தி வேதனைக்குரியது. ஒட்டு மொத்தத் தமிழர்களுக்கும் இது ஒரு துன்பச் செய்தி.

மதுரைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவராக இருந்து பணி ஓய்வு பெற்ற தமிழண்ணல் அவர்கள், பல்வேறு விருதுகள் பெற்றவர். தமிழ் ஆய்வில் ஏராளமான நூல்கள் எழுதியவர். தொல்காப்பியம் குறித்த அவரது ஆய்வுரை சிறப்புமிக்கது.

ஓய்வு பெற்ற தொல்லியல் அறிஞர் நாகசாமி அவர்கள் தமிழ்மொழியை கீழ்மைப்படுத்தும் நோக்கத்தோடு, சங்க இலக்கியங்களும் சிலப்பதிகாரம் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களும், சமற்கிருத நூல்களைப் பார்த்து எழுதப்பட்டவை என்று ஆராய்ச்சி என்ற பெயரில் ஓர் அவதூறு நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டார். அதற்குத் தக்க சான்றுகளுடன் ஒவ்வொன்றையும் மறுத்து ஆழமான ஆய்வு நூலை அய்யா தமிழண்ணல் அவர்கள் எழுதி தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டார்.

பல்வேறு தமிழ் அமைப்புகளின் - தமிழ்த் தேசிய இயக்கங்களின் – தமிழறிஞர்களின் பொது அமைப்பாக விளங்கிய தமிழ்ச் சான்றோர் பேரவை, தமிழ்வழிக் கல்வியை சட்டமாக்கிட வலியுறுத்தி சாகும் வரையில் நூறு தமிழறிஞர்கள் மற்றும் தமிழுணர்வாளர்கள் சென்னையில் உண்ணாப் போராட்டம் நடத்த ஏற்பாடு செய்த போது, ஓர் இக்கட்டான நிலையில் அப்போராட்டத்திற்கு தலைமை தாங்க மன உறுதியோடு தமிழண்ணல் முன்வந்தார்; தலைமை தாங்கினார்.

ஒரு தமிழறிஞராய் - தமிழ் மொழிக்கு எதிரான கருத்துகளை முறியடிக்கும் ஆராய்ச்சிப் போராளியாய் – ஆட்சித்துறையிலும் கல்வித்துறையிலும் தமிழை அரங்கேற்றுவதற்கானக் களப் போராளியாய் செயல்பட்ட தமிழண்ணல் அவர்களின் மறைவுக்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வீரவணக்கத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாளை (31.12.2015) பிற்பகல் 3 மணிக்கு, மதுரையில் தமிழண்ணல் ஐயா அவர்களது இல்லத்தில் நடைபெறும் அவரது இறுதி வணக்க நிகழ்ச்சியிலும் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்களுடன் கலந்து கொள்கிறேன் என்ற செய்தியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னணம்,
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

Monday, December 7, 2015

வெள்ளப் பேரழிவு – துயர்நீக்கப் பணிகளுக்கு உடனடியாக மக்கள் குழுக்களை அமைக்க வேண்டும்! - தோழர் பெ.மணியரசன் வேண்டுகோள்!

வெள்ளப் பேரழிவு – துயர்நீக்கப் பணிகளுக்கு உடனடியாக மக்கள் குழுக்களை அமைக்க வேண்டும்! தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் வேண்டுகோள்!

நமது தலைமுறையும் இதற்கு முந்தியத் தலைமுறையும் கண்டிராத பெருமழையாலும், வெள்ளத்தாலும், சென்னையும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களும் கடலூர் மாவட்டமும் தாக்கப்பட்டு பேரழிவைச் சந்தித்துக் கொண்டுள்ளன. இந்த உண்மையை இந்திய மற்றும் தமிழ்நாடு அரசுகளும் உணர வேண்டும்; மக்களாகிய நாமும் உணர வேண்டும். அனைவரும் சேர்ந்து இந்தப் பேரழிவுகளை எதிர் கொண்டு மீள வேண்டும். இன்னும் தொடர்மழையும் வெள்ளப் பெருக்கும் விட்டபாடில்லை. வானிலை எச்சரிக்கைகள் அவ்வாறு இருக்கின்றன.

வழக்கமான வெள்ளச் சேதமல்ல இப்பொழுது ஏற்பட்டிருப்பது! இந்தப் பேரழிவில் துயர் துடைப்பு நடவடிக்கைகளில் மக்கள் அமைப்புகள், தன்னார்வு நிறுவனங்கள், கட்சிகள், தனி நபர்கள் ஆகியோரின் சமூக நடவடிக்கைகள் இதுவரை இல்லாத அளவுக்கு பெருமெடுப்பில் நடந்து வருவது நம்பிக்கை அளிக்கிறது.

தமிழ்நாடு அரசும் இந்திய அரசும் களத்தில் இறங்கிச் செயல்படுகின்றன.

தனித்தனியே, உதிரி உதிரியாகப் பிரம்மாண்டமான அளவில் துயர் நீக்கப் பணிகள் நடந்தாலும் அவற்றிடையே ஒருங்கிணைப்பு மிக மிகத் தேவை. தவித்துக் கொண்டிருக்கும் மக்கள் ஒருங்கிணைப்புக் குறைவின் காரணமாக பல இடங்களில் உதவிகள் கிடைக்காமல் இன்னும் துடிக்கின்றனர்.

வெள்ளந்தாக்கி ஏற்பட்டுள்ள பேரிழப்புகள் வகை வகையாகப் பல தன்மை கொண்டவை. மழை நின்ற பின் சில நாட்களில் முடிந்துவிடக் கூடிய வேலைகள் அல்ல அவை. பெருங்குளிர் மற்றும் சுகாதாரக் கேடுகளால் புதிய புதியத் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இந்த ஆபத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளும் தேவை.

மேற்கண்ட துயர்நீக்கப் பணிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து வகைப் பிரித்து செயல்படுத்தவும் கண்காணிக்கவும் அடுக்குமுறையில் கட்டமைப்புகள் தேவை. எனவே தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்துக் கட்சிகள் மற்றும் தன்னார்வு நிறுவனங்கள், ஊடகத் துறையினர், தகுதிமிக்கத் தனிநபர்கள் கொண்ட கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தி, மேலிருந்து கீழ்வரை மேற்கண்ட பிரிவினர் மற்றும் அதிகாரிகளைக் கொண்ட மக்கள் குழுக்களை அமைத்து செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு குழுவும் அந்தந்த மட்டத்தில் ஓர் அதிகாரியின் தலைமையில் இயங்க வேண்டும்.

இத்திசையில் தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்திய அரசின் உடனடிக் கடமைகள்

இந்திய அரசு, தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பேரழிவுகளை அனைத்திந்தியப் பெரும் பேரிடராக ஏற்று அதற்குரிய நிதி உதவி மற்றும் துயர் நீக்க உதவிகளை வழங்க வேண்டும்.

பேரழிவில் சிக்கித் தவிக்கும் இந்த நேரத்தில் இந்திய அரசின் செயல்பாடுகள் மீது குறைகள் காண நாம் விரும்பவில்லை. ஆனால் சிலவற்றை சுட்டிக் காட்ட வேண்டிய அவசர அவசியம் உள்ளது.

இந்திய அரசு முதல் கட்டமாக அறிவித்த ரூ 940 கோடி நிதி உதவியில் தமிழ்நாடு அரசு 
தரவேண்டிய பழைய நிலுவைத் தொகைகளைப் பிடித்தம் செய்து கொண்டதாக செய்தி வந்துள்ளது. அது உண்மையானால் – அது மனித நேயமற்ற செயல்.

2013 ஆம் ஆண்டு உத்தரகாண்டில் கங்கை ஆற்றுக் கரையோரமாக ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவிற்கு 8346 கோடி ரூபாய் அளித்தது இந்திய அரசு. அதைவிடப் பன்மடங்கு கூடுதலாகப் பல மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பேரழிவிற்கு, இதுவரை 1940 கோடி ரூபாய் தான் அறிவித்துள்ளது. குறைந்தது இருபதாயிரம் கோடி ரூபாயாவது தேவைப்படும் என்பதை இந்திய அரசு கவனத்தில் கொண்டு தொகையை உடன் அனுப்ப வேண்டும்.

நிலக்கரிக் கழகம், பி.எச்.இ.எல். போன்ற இந்திய அரசின் ஒன்பது (நவரத்னா) நிறுவனங்கள் உத்திர காண்ட் பேரழிவுக்கு நிதி உதவி செய்தன. நிலக்கரிக் கழகம் மட்டுமே 125 கோடி ரூபாய் நிதி அளித்தது. அந்நிறுவனங்கள் தமிழ்நாட்டு பேரழிவிற்கும் நிதி அளிக்க வேண்டும்.

தலைமுறை காணாத இந்த வெள்ளப் பேரழவில் துயர் நீக்கப் பணிகளில் எளிய இயக்கமாகிய தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றுப் பணியாற்றி வருகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வெள்ளப் பேரழிவில் உயிரிழந்தோர் அனைவருக்கும், தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னணம்,
பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

Thursday, December 3, 2015

ஏழுத்தமிழர் விடுதலையில் தமிழ்நாடு அரசுக்கு அதிகாரமில்லை என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அப்பட்டமான அரசமைப்புச் சட்டக் கவிழ்ப்பே! - கி. வெங்கட்ராமன் கண்டனம்!


ஏழுத்தமிழர் விடுதலையில் தமிழ்நாடு அரசுக்கு அதிகாரமில்லை என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு  அப்பட்டமான அரசமைப்புச் சட்டக் கவிழ்ப்பே! 

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!


பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட இராசீவ் காந்தி வழக்கு சிறையாளிகளுக்கு தமிழ்நாடு அரசு, விடுதலை வழங்கியது தொடர்பான வழக்கில், இன்று (திசம்பர் 2) தீர்ப்பு வழங்கிய அரசமைப்புச் சட்ட ஆயம், அரசமைப்புச் சட்டத்தையும் இந்தியக் கூட்டாட்சி முறைமையையும் ஒரே அடியில் கவிழ்த்துவிட்டது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் இப்ராஹிம் கலிபுல்லா, பி.சி.கோஸ், ஏ.பி.சாப்ரே, யு.யு.லலித் ஆகிளோர் அடங்கிய அரசமைப்புச் சட்ட ஆயம், பெரும்பான்மை அடிப்படையில் அளித்துள்ள தீர்ப்பு, தண்டனைக்குறைப்பு அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை, இந்திய அரசுக்கு மட்டுமே உண்டு எனக் கூறியிருப்பது, நீதிமன்றமே செய்யும் அரசமைப்புச் சட்டக் கவிழ்ப்பு ஆகும்.

இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியாவை அரசுகளின் ஒன்றியம் (Union of States) என்றுதான் கூறுகிறது. இங்கு அரசு என்று சொல்லப்பட்டிருப்பது, மாநிலத்தை அல்லது மாகாணத்தை(Province) குறிப்பது அல்ல.

இந்தியாவின் ஒட்டுமொத்த இறையாண்மை, இரண்டு தளங்களில் பகிரப்பட்டு அந்தந்த தளங்களில் அந்தந்த அரசு உறுப்புகள் செயல்படுகின்றன.

இதில், தண்டனைக்குறைப்பு அதிகாரம், மன்னிப்பு அதிகாரம் ஆகியவை அரசமைப்புச் சட்ட உறுப்பு 72-இன்படி இந்திய ஒன்றிய அரசுக்கும், உறுப்பு 161-இன்படி மாநில அரசுக்கும் உள்ளது.

மாரூராம் எதிர் இந்திய ஒன்றிய அரசு என்ற வழக்கில், நீதிபதி வீ.ஆர். கிருஷ்ணய்யர் தலைமையில் அமைக்கப்பட்ட 5 நீதிபதிகள் கொண்ட ஆயம், அரசமைப்புச் சட்ட உறுப்பு 72 மற்றும் 161 ஆகியவை சம அதிகாரம் கொண்டவை, ஒரே நேரத்தில் இணையாக செயல்படக் கூடியவை என்று தெளிவுபடுத்திவிட்டது.

அதாவது, மாநில அரசின் மன்னிப்பு அதிகாரமும் இந்திய ஒன்றிய அரசின் மன்னிப்பு அதிகாரமும் இணையானவை என்றும் சம அதிகாரம் உடையவை என்றும் ஒரே சமயத்தில் செயல்படக் கூடியவை என்றும் தெளிவாக்கப்பட்டுள்ளது.

அதற்குப் பிறகு, திரிவேணி பென் வழக்கிலும் அது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ஏனெனில், உயிர் வாழும் உரிமை குறித்த மிக அடிப்படையான மனித உரிமையில் கூட்டாட்சி முறைமை தங்கு தடையின்றி செயல்பட வேண்டும் என்பதே, அரசமைப்புச் சட்டத்தின் சாரமான நிலைப்பாடாகும்.

இந்த நிலையில், தண்டனைக் குறைப்பு மற்றும் மன்னிப்பு அதிகாரத்தில், விதி 161-இன்படி உள்ள அதிகாரத்தையும் சேர்த்து, இத்தீர்ப்பு இரத்து செய்து கூட்டாட்சி முறைமைக்கே வேட்டு வைக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது.

குற்றவியல் சட்ட விதி 435(1), இந்திய அரசாங்கத்தின் அதிகாரத்திற்குட்பட்ட புலனாய்வு அமைப்பு ஒரு வழக்கை விசாரித்திருந்தால், அது தொடர்பான தண்டனைக் குறைப்பு முடிவெடுப்பதற்கு முன் மாநில அரசு ஒன்றிய அரசுடன் “கலந்தாலோனை”(Consultation) செய்ய வேண்டுமெனக் கூறுகிறது.

இந்திய அரசின் அதிகாரத்திற்குட்பட்ட சட்டப்படி, தண்டனை விதிக்கப்பட்டிருந்தால் அவ்வழக்குகளில் ஒன்றிய அரசின், “ஒப்புதல்”(Consent or Concurrence) பெற வேண்டும் என்று விதி 435(2) கூறுகிறது.

குற்றவியல் சட்ட விதி 435(1)இல், “கலந்தாலோசனை” (Consultation) என்பதும் 435(2)இல் “ஒப்புதல்” (Consent or Concurrence) என்பதும் தெளிவாக வரையறுக்கப்பட்டு, வெவ்வேறு நிலைகளுக்குப் பொருந்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயம், இராசீவ் காந்தி கொலை வழக்கில், தமிழ்நாடு அரசு “கலந்தாலோசனை” (Consultation) செய்ய வேண்மெனக் கூறப்படுவது ஒப்புதல் (Concurrence) பெறுவது தான் என விளக்கம் அளிப்பது சட்ட வளைப்பாக இருக்கிறது.

435(1)இன்படி, கலந்தாலோசனை(Consultation) என்றாலும் ஒப்புதல்தான் (Consent or Concurrence); 435(2)இன்படி, ஒப்புதல் (Consent or Concurrence) என்றாலும் ஒப்புதல்தான் என விளக்கம் அளிப்பது, வினோதமான வேதனையாக இருக்கிறது.

அதேபோல், இத்தீர்ப்பு வாழ்நாள் தண்டனை என்றால் அச்சிறையாளியின் எஞ்சியுள்ள வாழ்நாள் முழுவதும் சிறையிலிருப்பதைத்தான் குறிக்கும் எனக் கூறுவது, குற்றவியல் சட்ட விதி 433(A) -வை தூக்கியெறிவதாக இருக்கிறது.

மரண தண்டனை விதிக்கப்படடு, அது கருணை மனுவின் வழியாக வாழ்நாள் தண்டனையாக குறைக்கப்பட்டவர்களுக்கு 14 ஆண்டுகள் கழித்தபிறகு, அரசமைப்பு உறுப்பு 161-இன்படி அல்லது, குற்றவியல் சட்ட விதி 435(2)இன்படி, மேலும் தண்டனைக் குறைப்பு வழங்கி விடுதலை செய்வது அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

இவை எல்லாவற்றையும் ஒரே அடியாக குப்பைக் கூடையில் வீசி, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பையும், அரைகுறையாவாவது நிலவும் கூட்டாட்சி முறைமையையும் குலைப்பதாக உள்ளது.

அந்தவகையில், ஐந்து நீதிபதிகள் கொண்ட இந்த ஆயத்தின் தீர்ப்பு இதற்கு முன் ஒன்பது நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற முழு ஆயம் கேசவானந்த பாரதி வழக்கில் அளித்தத் தீர்ப்புக்கு முரணாக, அதாவது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை தகர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

எனவே, இத்தீர்ப்பை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளாமல் - உச்சநீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட முழு ஆயம் வழியாக விசாரிப்பதற்கு சட்ட ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் அதுவரை இராசீவ் காந்தி வழக்கில் சிறையிலுள்ள வாழ்நாள் சிறையாளிகள் 7 பேரையும் நீண்டகால விடுப்பில் (Parole) இடைக்கால விடுதலை வழங்க வேண்டும் என்றும், தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இன்னணம்,
கி. வெங்கட்ராமன்
பொதுச் செயலாளர், 
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT