உடனடிச்செய்திகள்

Thursday, May 31, 2018

தமிழர்களே இரசினிகாந்தின் காலா திரைப்படத்தை அனுமதிக்காதீர்கள்! தோழர் பெ. மணியரசன்.

தமிழர்களே இரசினிகாந்தின் காலா திரைப்படத்தை அனுமதிக்காதீர்கள்! தோழர் பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
#BoycottKaala

உயிர்கொல்லி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலி யுறுத்தி தங்கள் வாழ்வுரிமைக்குப் போராடிய தூத்துக்குடி மக்கள் மீது அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப் பட்டு, 13 பேரை சுட்டுக் கொன்றார்கள்; அறுபதுக்கும் மேற் பட்டோரை சுட்டுப் படுகாயப்படுத்தினார்கள்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும் ஆறுதல் கூறவும் 30.05.2018 அன்று தூத்துக்குடி சென்ற நடிகர் இரசினிகாந்து, இந்தப் போராட்டத்தை சமூக விரோதிகள் வழி நடத்தினார்கள் என்றும், இவ்வாறு போராட்டம் - போராட்டம் என்று நடத்திக் கொண் டிருந்தால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும் என்றும் கூறினார்.

அரசின் கணக்குப்படி 20 ஆயிரம் மக்கள் பங்கெடுத்த போராட்டம் - உண்மையில் இதைப்போல் இரண்டு மடங்கு கூடுதலான எண்ணிக்கையில்தான் மக்கள் போராட்டத்தில் பங்கெடுத்தனர். இந்த மக்கள் போராட் டத்தை சமூக விரோதிகள் வழி நடத்திய போராட்டம் என்று கொச்சைப்படுத்தியதன் மூலம் இரசினிகாந்து தன்னை மக்கள் விரோதி என்று அடையாளம் காட்டிக் கொண்டார்.

இதுபோன்ற போராட்டங்கள் தொடர்ந்தால் தமிழ் நாடு சுடுகாடு ஆகிவிடும் என்று இரசினிகாந்து கூறியதில் ஓர் உட்பொருள் உள்ளது. இப்போது 13 பேரைத்தான் சுடுகாட்டிற்கு அனுப்பியுள்ளோம். இனி போராட்டங்கள் தொடர்ந்தால் அங்கெல்லாம் துப்பாக்கிச் சூடு நடத்திதூத்துக்குடியில் செத்ததைவிட அதிக மக்களை சுடுகாட்டிற்கு அனுப்பு வோம் என்ற உட்பொருளில் தான் இரசினிகாந்து அவ்வாறு கூறியுள்ளார்!

காமராசர் முதலமைச்சராக இருந்த காலத்திலிருந்து செயலலிதா முதலமைச்சராக இருந்த காலம் வரை தமிழர்கள் நடத்திய போராட்டங்கள்தான் தொழில் வளர்ச்சியையும் கொண்டு வந்தது; மக்கள் உரிமைகளில் முன்னேற்றங்களையும் கொண்டு வந்தது. உரிமைப் போராட்டங்களே இல்லாத சுடுகாட்டு அமைதியை இரசினிகாந்து விரும்புகிறார்.

நிலம், நீர், காற்று மூன்றையும் நஞ்சாக்கி மக்களின் வாழ்வுரிமையை அழிக்கும் எந்தத் தொழிற்சாலையையும் - தொழிலையும் மூடச் சொல்லிப் போராடுவதுதான் மக்களைப் பாதுகாக்கும்; அப்போராட்டங்கள் இல்லை யென்றால், மக்கள் உயிரைப் பற்றியும் வாழ்வைப் பற்றியும் கவலைப்படாத தொழில் துறை வேட்டை ஓநாய்களின் கொள்ளைகள் மட்டுமே மிஞ்சும்!

கடைசியாக ஒன்று..

இரசினிகாந்து மக்கள் விரோதி - தமிழர் விரோதி என்பதைப் புரிந்து கொண்டோம்! திரைப்படக் கொள்ளை வசூல் மட்டுமே அவரின் இலட்சியம் என்று தெரிகிறது. அத்துடன் ஆர்.எஸ்.எஸ். - மோடி குரலைத் தான் வெளிப்படையாக தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இதற்கு எதிர்வினையாக இரசினிகாந்தின் காலா திரைப்படத்தை வெளியிட மாட்டோம் என்று தமிழ் நாட்டுத் திரையரங்கு உரிமையாளர்கள் அறிவிக்க வேண் டும். காலா படத்தைப் பார்க்க மாட்டோம் எனத் தமி ழர்கள் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.

கர்நாடகத்தைப் பாருங்கள்! காவிரிச் சிக்கலில் ஒப்புக்கு அரைகுறையாகத் தமிழ்நாட்டு உரிமை பற்றி இரசினிகாந்த் பேசினார். அதற்காகக் கர்நாடகத்தில் காலா படம் திரையிட அனுமதியில்லை என்று ஒட்டு மொத்தக் கன்னடர்களும் அரசும் முடிவெடுத்துள் ளார்கள்.

தமிழர்களே ஏமாந்தது போதும்; விழித்துக் கொள்வீர்!

கன்னட நாட்டு இரசினிகாந்தின் காலா படத்தை தமிழ்நாட்டில் அனுமதிக்காதீர்கள்!

“கருப்பு” என்பதை இந்தியில் “காலா” என்று பெயர் வைத்துள்ளார். தமிழ்த் திரைப்படத்திற்கு இந்திப் பெயரா? சிந்தியுங்கள்; செயல்படுங்கள்!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com 

“சாதி ஒழிப்புப் போராளி” தமிழ்த் தேசியப் பேரியக்க மூத்த உறுப்பினர் தோழர் தெற்குமாங்குடி சௌந்தரராசன் அவர்களுக்கு வீரவணக்கம்!

“சாதி ஒழிப்புப் போராளி” தமிழ்த் தேசியப் பேரியக்க மூத்த உறுப்பினர் தோழர் தெற்குமாங்குடி சௌந்தரராசன் அவர்களுக்கு வீரவணக்கம்!
1980-களின் பிற்பகுதியில் சிதம்பரம் பகுதியில் தலைத்தூக்கியிருந்த தீண்டாமை கொடுமைகளை ஒழிக்க நடந்த களப்போராட்டங்களில் முன்னின்றவரும், தமிழ்த்தேசியப் பேரியக்க மூத்த உறுப்பினருமான தோழர் பெ. சௌந்தரராசன் அவர்கள் 29.05.2018 அன்று காலமானார். அவருக்கு அகவை 70.
 
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தீவிர செயல்பாட்டாளாராகவும், தமிழக உழவர் முன்னணி அமைப்பின் ஆதரவாகவும் விளங்கிய தோழர் பெ. சௌந்தர்ராசன் இல்லாத போராட்டங்களும் கூட்டங்களும் இல்லை என்றுச் சொல்லிவிடும் அளவிற்கு ஈடுபாடு மிகுந்தவர்.
 
கடலூர் மாவட்டம் - தெற்கு மாங்குடியில் இவர் முன்னெடுத்த இரட்டைக் குவளை முறை ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு போராட்டங்களின் உச்சக் கட்டத்தில், இவரது வீடு சாதி ஆதிக்கவாதிகளால் கொளுத்தப்பட்டது. கடை சூறையாடப்பட்டது. இவரது மனைவி குமாரி மற்றும் மகள் ஜெயந்தி இரவு முழுவதும் முள்காட்டு புதரில் மறைந்திருந்து தப்பிப் பிழைத்தனர். தொடர் சாதித் தீண்டாமை ஒழிப்பு பணிகளால் ஏற்பட்ட கலவரம், துப்பாக்கிச் சூடு வரை சென்றது.
 
அச்சுறுத்தல்கள் தாக்குதல்கள் இருந்த போதும் சாதி ஒழிப்பு களத்தில் சளைக்காமல் முன் நின்றவர் தோழர் பெ. சௌந்தரராசன்.
 
1991 சூலை மாதம் 17ஆம் நாள், நெய்வேலியிலிருந்து கர்நாடகம் செல்லும் மின்சாரத்தை நிறுத்தும் போராட்டத்தை தோழர் கி. வெங்கட்ராமன் தலைமையில், தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுத்தபோது, அவருடன் தோழர் பெ. சௌந்தரராசன் அவர்களும் கைதாகி கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
 
சிறந்த பாடகராகவும் விளங்கிய தோழர் பெ. சௌந்தர்ராசன், கீழ்வெண்மணிப் சாதியப் படுகொலை, மார்வாடி ஆதிக்க எதிர்ப்பு, தேர்தல் சந்தர்ப்பவாதங்கள், வீராணம் உழவர் உரிமை, காவிரி உரிமை போன்ற பல பொருள்கள் குறித்தும், திரையில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் எழுதி வெளியிட்ட பாடல்களையும் தமிழ்த் தேசிய பேரியக்க (த.தே.பொ.க) மேடைகளில் நெஞ்சுருகப் பாடியவர்.
 
தோழர் சௌந்தர்ராசன் இருக்கும் இடம், எப்போதும் அரசியல் உரையாடல்களும் சிரிப்பும் கலகலப்பும் நிறைந்ததாகவே இருக்கும்.
 
உடல்நலக் குறைவு, குடும்பச் சூழல் காரணமாக அமைப்பு பணிகளிலிருந்து ஓய்வு பெற்ற தோழர் சௌந்தர்ராசன், “தமிழர்களுக்கே வேலைகொடு” என வலியுறுத்தி, 2016இல் தமிழ்த்தேசியப் பேரியக்கம் திருச்சியில் நடத்திய தென்னக மறியல் போராட்டத்தில் பங்கேற்று கைதானார்.
 
சுவரொட்டி ஒட்டுதல், பதாகை கட்டுதல் உள்ளிட்டு கைது - சிறை வரை சளைக்காமல் இருபது ஆண்டுகளுக்கு மேல் பொது வாழ்வில் தம்மை அர்பணித்துக் கொண்ட தமிழ்த்தேசியப் போராளி தோழர் பெ. சௌந்தர்ராசன் அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் வீரவணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறது! அவரை இழந்து வாடும் உறவினர்க்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது!
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Monday, May 28, 2018

ஒடுக்குமுறை அரசே! வேல்முருகன் உள்ளிட்டோரை விடுதலை செய்! சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம்!

ஒடுக்குமுறை அரசே! வேல்முருகன் உள்ளிட்டோரை விடுதலை செய்! சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம்!
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி. வேல்முருகன் அவர்களை, கைது செய்த முறையும் காவல்துறையினர் அவரை நடத்திய விதமும் கடுங்கண்டனத்திற்குரியவை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர்க்கு ஆறுதல் சொல்லவும், காயம்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரிக்கவும் வந்தவரை 24.05.2018 அன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் கைது செய்து, இரவோடிரவாக விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் கொண்டு சென்று 26.05.2018 அன்று நீதிமன்றத்தில் நிறுத்தி, அங்கிருந்து சென்னை புழல் சிறையில் கொண்டுபோய் அடைத்துள்ளார்கள்.

திரு. வேல்முருகன் கைதைக் கண்டித்து, நாளை (29.05.2018) மாலை 3 மணிக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. அதில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் உள்ளிட்ட பல்வேறு கட்சி - இயக்கத் தலைவர்களும், தோழர்களும் பங்கேற்கின்றனர்.

இந்நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், சனநாயக ஆற்றல்களும் திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!
வாருங்கள் தமிழர்களே!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

ஒடுக்குமுறை அரசே! வேல்முருகன் உள்ளிட்டோரை விடுதலை செய்! தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

ஒடுக்குமுறை அரசே! வேல்முருகன் உள்ளிட்டோரை விடுதலை செய்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி. வேல்முருகன் அவர்களை, கைது செய்த முறையும் காவல்துறையினர் அவரை நடத்திய விதமும் கடுங்கண்டனத்திற்குரியவை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர்க்கு ஆறுதல் சொல்லவும், காயம்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரிக்கவும் வந்தவரை 24.05.2018 அன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் கைது செய்து, இரவோடிரவாக விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் கொண்டு சென்று 26.05.2018 அன்று நீதிமன்றத்தில் நிறுத்தி, அங்கிருந்து சென்னை புழல் சிறையில் கொண்டுபோய் அடைத்துள்ளார்கள்.

தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உளுந்தூர்பேட்டை கட்டண வசூல் சாவடியைத் தாக்கியதாக 01.04.2018 அன்று திரு. வேல்முருகன் உள்ளிட்ட 11 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் 24.05.2018 அன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து கைது செய்ததன் மர்மம் என்ன? 01.04.2018லிருந்தே வேல்முருகன் தலைமறைவாக இருந்தாரா? இவ்வழக்கில் ஏற்கெனவே வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்தவர்கள் பத்து பேர் பலநாள் சிறையிலடைக்கப்பட்டு பிணையில் வந்துள்ளார்கள்.

அவர் கட்சியின் பெயருக்கேற்ப எத்தனையோ வாழ்வுரிமைப் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்திக் கொண்டும், அவற்றில் பங்கேற்றுக் கொண்டும்தான் இருந்தார். அடுத்தடுத்து மக்களுக்கான சனநாயகப் போராட்டங்களை அவர் நடத்தியதுதான் தமிழ்நாடு அரசின் பார்வையில் குற்றமா?

உளுந்தூர்பேட்டை வழக்கிற்காகக் காவல்துறை கைது செய்ய விரும்பியிருந்தால் எப்போதோ அவரைக் கைது செய்திருக்கலாம். தூத்துக்குடியில் வைத்துக் கைது செய்ததில் ஓர் உள்நோக்கம் இருக்கிறது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் சிலரை சுட்டுக்கொல்ல வேண்டும், பலரைப் படுகாயப்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட மனித அழிப்பும் மனித வதையும்தான் தூத்துக்குடித் துப்பாக்கிச் சூடு! அந்த மனித அழிப்புக்குள்ளாகி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவிப்போர் “கதி இதுதான்” என்று காட்டி மக்களையும், மக்கள் போராளிகளையும் அச்சுறுத்துவதுதான் தமிழ்நாடு அரசின் நோக்கம் என்று புரிகிறது.

அண்மைக்காலமாக இவ்வாறான தேர்ந்தெடுக்கப்பட்ட அடக்குமுறையை எடப்பாடி பழனிச்சாமி – ஓ. பன்னீர்ச்செல்வம் அரசு கட்டவிழ்த்துவிட்டிருப்பதைத் தமிழினப் போராளிகளும், தமிழ் மக்களும் கவனித்துக் கொண்டு வருகிறார்கள். நான் ஏற்கெனவே ஒரு கருத்தை எடப்பாடி – ஓ.பி.எஸ். அரசு பற்றி சொல்லி வருகிறேன். இந்த அரசு பார்வைக்கு வலுவற்றதாகவும், உறுதியற்றதாகவும் தோற்றம் தருகிறது. உண்மையில் இது ஒரு தற்காலிக அரசுதான்! ஆனால் ஒடுக்குமுறையில் ஒரு எதேச்சாதிகார அரசைப் போலவே செயல்படுகிறது என்பதே அது!

காவிரிப் போராட்டச் சூழலில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை தவிர்க்க வலியுறுத்தி நடந்த மறியல் போராட்டத்தில் கண்ணாடி இழைத் தடியால் தாக்கிப் பலரைப் படுகாயப்படுத்தியது இதே அரசுதான்! அதில் ஒரு காவலர் தாக்கப்பட்டதை சாக்காக வைத்து, நாம் தமிழர் கட்சியினரை வீடு வீடாகத் தேடி, கைது செய்து காவல்துறை அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டதும் இவர்கள்தான்!

அடுத்து, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து சனநாயக வழியில் போராட்டம் நடத்திய இயக்குநர் வ. கௌதமன் அவர்களையும் தோழர்களையும் புழல் சிறையில் அடைத்தார்கள். இப்போது, வேல்முருகன் அவர்கள் மீது ஒடுக்குமுறையை ஏவி உள்ளார்கள். மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி போன்ற பல்வேறு அமைப்புத் தோழர்களையும் ஆங்காங்கு கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.
தமிழ் மக்கள் உரிமைகளுக்காகப் போராடும் இயக்கங்கள், இந்த அடக்குமுறைகளைக் கண்டு அஞ்சப் போவதில்லை. எசமானர்களின் கையாட்கள் போல் செயல்படும் எடப்பாடி – ஓ.பி.எஸ். அணியினர் தாம் மக்களிடமிருந்து மேலும் மேலும் அந்நியப்படுவார்கள்.

தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் தங்களின் தமிழினத் துரோக அரசியலையும், அடக்குமுறையையும் கைவிட வேண்டும் என்றும், திரு. வேல்முருகன் அவர்களையும், ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகளையும் உடனே விடுதலை செய்ய வேண்டுமென்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

திரு. வேல்முருகன் கைதைக் கண்டித்து, நாளை (29.05.2018) மாலை 3 மணிக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், நானும், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களும் பங்கேற்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னணம்,
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Friday, May 25, 2018

ஸ்டெர்லைட் படுகொலைகளுக்குப் பொறுப்பேற்று எடப்பாடியே பதவி விலகு! தலைமைச் செயலக முற்றுகைப்போர்!

ஸ்டெர்லைட் படுகொலைகளுக்குப்  பொறுப்பேற்று எடப்பாடியே பதவி விலகு! தலைமைச் செயலக முற்றுகைப்போர்!

#Bansterlite
#NoInvestToVedanta
#ThoothukudiGunFire

தமிழ்நாட்டின் “ஜாலியன் வாலாபாக்” ஆகிவிட்ட தூத்துக்குடிக்கு, தமிழ்நாடு காவல்துறை மனித வேட்டையைக் கண்டித்தும், முதல்வர் எடப்பாடி பதவி விலக வலியுறுத்தியும், தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் நேற்று (25.05.2018) மாலை தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.




தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளருமான திரு. தி. வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், பல்வேறு கட்சி - இயக்கத் தலைவர்களும் தோழர்களும் பெருந்திரளாகப் பங்கேற்றனர். சென்னை அண்ணா சிலை அருகிலிருந்து திரண்ட தோழர்களை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை - பறக்கும் தொடர்வண்டி பாலம் அருகில் காவல்துறையினர் வழிமறித்துத் கைது செய்தனர்.





தமிழர் தேசிய முன்னணித் தலைவர் திரு. பழ. நெடுமாறன், திரு. ஆளூர் சானவாஸ் (விடுதலைச் சிறுத்தைகள்), திரு. பெ. ஜான்பாண்டியன் (தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்), தோழர் பிரவீன் (மே பதினேழு இயக்கம்), வழக்கறிஞர் இரசினிகாந்த் (மக்கள் அரசுக் கட்சி), முனைவர் சுப. உதயகுமார் (பச்சைத் தமிழகம்), திரு. பி.ஆர். பாண்டியன் (அனைத்து விவசாயிகள் சங்கம்), தோழர் கொளத்தூர் மணி (திராவிடர் விடுதலைக் கழகம்), தோழர் மகேசு (காஞ்சி மக்கள் மன்றம்), தோழர் செந்தமிழ்க்குமரன் (தமிழ்த்தேச மக்கள் கட்சி), தோழர் பொழிலன் (தமிழக மக்கள் முன்னணி), வழக்கறிஞர் செயப்பிரகாசு நாராயணன் (தமிழர் முன்னணி) உள்ளிட்ட பல்வேறு கட்சி - இயக்கப் பொறுப்பாளர்களும் தோழர்களும் போராட்டத்தில் கைது செய்யப்பட்டனர். தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை இயக்குநர்கள் வெ. சேகர், அமீர், இராம், கோபி நயினார் உள்ளிட்ட திரைத்துறையினர் பங்கேற்றனர்.








கட்சிக் கொடி அடையாளங்களின்றி இப்போராட்டத்தில் தமிழ்தேசியப் பேரியக்கம் பங்கேற்றது. பேரியக்கம் சார்பில் பங்கேற்ற, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம், தோழர்கள் மா.வே. சுகுமார், மணி, முத்துக்குமார் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.





தமிழ்நாடு அரசே!

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடு!

கொலைகாரக் காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்!

எடப்பாடியே பதவி விலகு!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com 
இணையம்: www.tamizhdesiyam.com 

தூத்துக்குடியில் அமைதி திரும்ப உடனடியாகச் செய்ய வேண்டியவை என்ன? நேரில் சென்று வந்த . . . தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

தூத்துக்குடியில் அமைதி திரும்ப உடனடியாகச் செய்ய வேண்டியவை என்ன? நேரில் சென்று வந்த . . . தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
#Bansterlite
#NoInvestToVedanta
#ThoothukudiGunFire

தமிழ்நாட்டின் “ஜாலியன் வாலாபாக்” ஆகிவிட்ட தூத்துக்குடிக்கு, தமிழ்நாடு காவல்துறை மனித வேட்டை நடத்திய மறுநாளே 23.05.2018 அன்று சென்றோம். தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு தோழர்கள் இரெ. இராசு, ம. இலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் குரும்பூர் மு. தமிழ்மணி, மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் மதுரை பே. மேரி, தோழர்கள் செரபினா, மனித உரிமை மற்றும் தமிழ் உரிமைப் போராளி வழக்கறிஞர் பகத்சிங் மற்றும் குரும்பூர் பகுதித் தோழர்கள் முதலியோரும் என்னுடன் வந்தார்கள்.

ஆள் நடமாட்டமில்லாத வீதிகள் – மூடிக்கிடக்கும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் – முழு சோகத்தில் தூத்துக்குடி! இந்தியா – பாக்கித்தான் எல்லையோர நகரம் போர்க்காலத்தில் இறுக மூடிக் கிடக்கும் காட்சிபோல் இருந்தது.

எந்நேரமும் பாய்வதற்கு ஆயத்தமாய் ஆயுதங்களுடன் சுற்றிவரும் காவல் படைகள் ஒருபக்கம்; மறுபக்கம் தடையை மீறி ஊர்வலம் வந்ததாகத் தங்கள் மக்களை சுட்டு வீழ்த்திய காவல்துறையினர்க்கும் ஆட்சியாளர்களுக்கும் எதிராகக் குமுறும் நெஞ்சங்களுடன் மண்ணின் மக்கள்!

தூத்துக்குடி சின்ன சகாயபுரம் (மினி சகாயபுரம்) 17 அகவை மாணவி ஸ்நோலின் 22.05.2018 துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். அவர் வீட்டுக்குச் சென்றோம். ஸ்னோலின் தாயார், பெரியம்மா, சின்னம்மா, உறவினர் என அனைவரின் கதறலைப் பார்த்து நெஞ்சம் பதைத்தோம்! என்ன சொல்லி ஆறுதல் கூற முடியும்? அவர்களின் கதறல் ஓயவில்லை.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமுற்றவர்களைப் பார்த்தோம். தூத்துக்குடி மறை மாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தை செயசீலன் (அகவை 68) வயிற்றில் பாய்ந்த துப்பாக்கிக் குண்டுகள் முதுகு வழியாக வெளியேறியுள்ளன. அவர் தூத்துக்குடி அமெரிக்கன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரைப் பார்த்தோம். அவரிடம் பேச முடியாத நிலை!

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இரண்டு பெரிய வார்டுகளில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிலும், இரும்புத்தடித் தாக்குதலிலும் படுகாயமுற்றவர்கள் சற்றொப்ப 65 பேர் இருந்தார்கள்; பெண்கள் வார்டில் துப்பாக்கிச் சூட்டில் தாக்குண்ட பெண்கள் இருந்தார்கள்.

ஒவ்வொருவரிடமும் விசாரித்து ஆறுதல் கூறினோம். அவர்கள் எல்லாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்னால் அமர்ந்து கோரிக்கை முழக்கம் எழுப்பி மாலை வரை போராட்டம் நடத்தப் போகிறோம் என்ற எண்ணத்தில் வந்திருக்கிறார்கள். குடும்பம் குடும்பமாக வந்திருக்கிறார்கள். பகல் உணவும், குடிநீர் பாட்டிலும் கையோடு எடுத்து வந்திருக்கிறார்கள்.

ஆனால் ஆட்சியாளர்கள் முன் கூட்டியே வேறு வகையாகத் திட்டம் தீட்டியிருக்கிறார்கள். சுட்டுக் கொல்லும் தனிப்பிரிவு காவல்படையினரை வரவழைத்துத் திட்டம் தீட்டியிருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியருடன் அந்தத் தனிப்பிரிவினர் மஞ்சள் சீருடையுடன் முன்கூட்டியே எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது. சட்டம் ஒழுங்குச் சிக்கல் எழுந்தால், துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டி வந்தால் – என்ன வகை துப்பாக்கியைப் பயன்படுத்த வேண்டும் என்று கட்டுப்பாடு இருக்கிறது. அவ்வாறு தடை செய்யப்பட்டுள்ள - தொலைவில் குறி பார்த்து சுடும் எஸ்.எல்.ஆர். துப்பாக்கிகளைக் காவல் துறையினர் பயன்படுத்தி சுட்டிருக்கிறார்கள்.

துப்பாக்கிச் சூடு இருவகையாக நடத்தப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட நபரை சாகடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் குறிபார்த்து இடுப்புக்குமேல் சுட்டத்தில்தான் தலை, முகம், மார்பு, வயிறு பாகங்களில் சுடப்பட்ட குண்டு பாய்ந்து அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார்கள். அடுத்த வகையாக கூட்டத்தைக் கலைப்பதற்காக இடுப்பிற்குக் கீழே பலரைச் சுட்டிருக்கிறார்கள். அவர்கள் ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிகிச்சை பெற்றவர்களில் ஒருவர் நேற்று (24.05.2018) இறந்துவிட்டார்.

நாங்கள் மருத்துவமனைக்குப் போகும்முன், நடுப்பகல் நேரத்தில் மருத்துவமனை முன் கூடியிருந்தோர் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 அகவை இளைஞர் காளியப்பன் அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதுவரை மொத்தம் 13 பேரைத் துப்பாக்கிகள் விழுங்கியுள்ள செய்தி தெரிந்துள்ளது.

1965இல் இந்தித் திணிப்பை எதிர்த்து நடந்த மொழிப்போரில் 300க்கும் மேற்பட்டோரை காங்கிரசு ஆட்சி சுட்டுக் கொன்றது. அப்போதுகூட பெண்கள் சுட்டுக் கொல்லப்படவில்லை. ஆனால், அ.தி.மு.க. ஆட்சியில் தூத்துக்குடியில் பெண்கள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்கள். மேலும் சில பெண்கள் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமுற்று மருத்துவமனையில் இருக்கிறார்கள்.

பெண் காவலர்கள் மூர்க்கத்தனமாகத் தாக்கியதைக் காயம்பட்டவர்கள் சொன்னார்கள். தாக்குதலில் கீழே விழுந்து கிடந்த ஒருவர் மார்பில், ஒரு பெண் காவலர் பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டதை பாதிக்கப்பட்டவரே எங்களிடம் சொன்னார். ஒரு காவலர் துப்பாக்கிக் கட்டையைத் திருப்பி, ஓர் இளம்பெண் வயிற்றில் ஓங்கி அடித்ததில் இரத்தப்போக்குடன் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

மக்களிடம் நாங்கள் விசாரித்த இடங்களில் எல்லாம், “திட்டமிட்டு சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்” என்ற கருத்து ஒரே குரலில் வந்தது. அடுத்து, “தூத்துக்குடியை விட்டு காவல்துறையை வெளியேறச் சொல்லுங்கள், நாங்கள் அமைதைியை நிலைநாட்டுகிறோம்” என்று கூறினார்கள்.

இன்று வரை (25.05.2018) தூத்துக்குடியில் நான்கு நாட்களாக இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. கடைகள் மூடிக் கிடப்பதால், குழந்தைகளுக்குப் பால் வாங்கக்கூட வழியில்லை. உணவு உள்ளிட்ட மற்ற தேவைகளின் நிலை பற்றி கற்பனை செய்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் கடந்த அறுபதாண்டுகளில் - வரலாற்றில் இல்லாத அளவிற்கு, மக்கள் வெள்ளம் 22.05.2018 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைக்கு இலட்சக்கணக்கில் பல்வேறு முனைகளில் இருந்து அணி அணியாக ஆண்கள், பெண்கள், மாணவர்கள் எனத் திரண்டு வந்தார்கள். அவர்களை அமைதியாக முற்றுகையிட அனுமதித்து, முழக்கமிட அனுமதித்து, முதலமைச்சர் சார்பில் ஓர் அமைச்சர் அங்கு வந்து, “ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும்” என்று எழுத்து வடிவிலான அறிக்கையை – எந்த இரு பொருளும் இல்லாமல் திட்டவட்டமாக அறிவித்து, மக்களை வெற்றி முழக்கத்துடன் கலையச் செய்திருக்கலாம்.

ஆனால், ஆட்சியாளர்களின் திட்டம் வேறாக இருந்ததுபோல் தெரிகிறது.

காவிரிச் சமவெளியில் ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்றிட – கனிம வேட்டையைத் தடுத்திட – நியூட்ரினோ ஆய்வகத்தைத் தடுத்திட - பல்வேறு இடங்களில் மணல் கொள்ளையைத் தடுத்திட – கோவை பகுதியில் விளை நிலங்களில் கெயில் குழாய்கள் பதிப்பதைத் தடுத்திட - இன்னும் பல்வேறு வாழ்வுரிமைகளுக்காகத் தன்னெழுச்சியாக மக்கள் நடத்திடும் போராட்டங்களைத் தடுத்திட இராணுவத்தை இறக்கிட – மோடி அரசும், எடப்பாடி அரசும் திட்டமிட்டு வருகின்றன. அதற்காக 29.04.2018 அன்று கும்பகோணத்திற்கு அதிவிரைவு இராணுவப்பிரிவு அதிகாரிகளையும், படையாட்களையும் அனுப்பி மாவட்டக் காவல்துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்ய வைத்தனர்.

தூத்துக்குடியில் சனநாயக வழியில் போராடும் மக்களை சகட்டுமேனிக்கு சுட்டுக் கொல்வதைப் பார்த்து, தமிழ்நாட்டில் எல்லாப் பகுதி மக்களும் பீதி அடைந்து, கோழைகளாகிவிட வேண்டும் என்று ஆட்சியாளர்கள் திட்டமிட்டார்கள். ஆனால் தூத்துக்குடியில் இத்தனை துப்பாக்கிக் கொலைகளுக்குப் பின்னர் மக்கள் மேலும் ஆவேசத்துடன் வீரத்துடன் போராடும் உணர்ச்சி பெற்றுள்ளார்கள் என்பதை அனைவரும் பார்க்கிறோம். ஆட்சியாளர்களுக்கும் தெரியும்!

இனியாவது, தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் தங்கள் அணுகுமுறையை மாற்ற வேண்டும்; மக்கள் மீது போர் தொடுக்கும் தங்கள் திட்டத்தைக் கைவிட வேண்டும்.

உடனடியாகச் செய்ய வேண்டியவை

1. தூத்துக்குடியில் சமயம், சமூகம் சார்ந்த தலைவர்கள், வணிகர் சங்கத் தலைவர்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டக் குழுத் தலைவர்கள் – கல்வித்துறை சேர்ந்தவர்கள் – மாணவப் பிரதிநிதிகள் ஆகியோரைக் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கொண்டு அமைதிப் பேச்சு நடத்த வேண்டும். அரசு சார்பில் ஓர் அமைச்சரும் அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும்.

அக்கூட்டத்தில், “ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிவிட்டோம்; சட்டச்சிக்கல்கள் வந்தால் சட்டரீதியாக முறியடித்து ஆலையைத் திறக்க விடமாட்டோம்” என்று முதலமைச்சர் கையொப்பமுடன் உள்ள உறுதிமொழியை எழுத்து வடிவில் மக்களுக்குத் தர வேண்டும்.

2. தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட காவல்துறையினரைத் தவிர வெளியிலிருந்து வர வழைக்கப்பட்ட காவல்துறையினர் அனைவரையும் திருப்பி அனுப்பிவிட வேண்டும்.

3. இதுவரை கைது செய்துள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். விசாரணைக்கென்று பொதுமக்களை அழைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இவற்றைச் செய்தால் தூத்துக்குடி உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் பதற்றம் தணியும்!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com 
இணையம்: www.tamizhdesiyam.com 

Thursday, May 24, 2018

“வரி கொடுப்பதில் முதலிடம்..நிவாரணத்தில் வஞ்சிகப்படும் தமிழகம்!” ஜூனியர் விகடன் வார ஏட்டில்...அம்பலப்படுத்தும் தமிழ்த்தேசியப் பேரியக்கம்!

“வரி கொடுப்பதில் முதலிடம்..நிவாரணத்தில் வஞ்சிகப்படும் தமிழகம்!” ஜூனியர் விகடன் வார ஏட்டில்...அம்பலப்படுத்தும் தமிழ்த்தேசியப் பேரியக்கம்!


தமிழ்நாட்டிலிருந்து இந்திய அரசு சுரண்டிச் செல்லும் வரி வருமானம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டங்களின்படி தமிழ்த்தேசியப் பேரியக்கம் திரட்டிய தகவல்கள், 27.05.2018 நாளிட்ட “ஜூனியர் விகடன்” ஏட்டில் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து, அச்செய்திக்கட்டுரையில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அருணபாரதி கூறியுள்ளதாவது :

“ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டில் பேரிடர் ஏற்படும்போது, நாம் கேட்கும் நிவாரணத் தொகையை மத்திய அரசு ஒதுக்குவதே கிடையாது. ஆனால், நம்மிடமிருந்து அதிக அளவிலான வரிப்பணத்தைப் பெற்றுக் கொள்கின்றனர். உற்பத்தி வரி, சுங்க வரி (ஏற்றுமதி), சுங்க வரி (இறக்குமதி), சேவை வரி, நிறுவன வரி, தனிநபர் வருமான வரி இவற்றின் மூலம் ஆண்டுக்கு 1.5 இலட்சம் கோடி மத்திய அரசுக்குப் போகிறது. இது மட்டுமல்லாமல் என்.எல்.சி., தென்னக இரயில்வே, சேலம் உருக்காலை, துறைமுகங்கள், விமான நிலையங்கள், தபால் நிலையச் சேவைகள் போன்றவற்றின் மூலமாகவும் வரி போகிறது.

ஆனால், இயற்கைப் பேரிடர்க் காலங்களில் நமக்கு மத்திய அரசு கைகொடுப்பதில்லை. 2013 ஆம் ஆண்டு உத்தரகாண்டில் வெள்ளம் ஏற்பட்டபோது அம்மாநிலம் கேட்பதற்கு முன்பே ரூபாய் 1,000 கோடியை உடனடி நிவாரணத் தொகையாக வழங்கியது மத்திய அரசு! உத்தரப்பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது நம்மைவிட பல மடங்கு பாதிப்பு குறைவு. ஆனால் மத்திய அரசு கொடுத்த உடனடி நிவாரணத் தொகை ரூபாய் 2,875 கோடி. இதேபொல மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் நிவாரணத் தொகையை மத்திய அரசு வாரி வாரித் தருகிறது.

ஆனால், நாம் மொத்த பணத்தையும் மத்திய அரசுக்குக் கொடுத்துவிட்டு நமது உரிமைக்காகவும் உதவிக்காகவும் மத்திய அரசிடம் கையேந்தி நிற்கிறோம்”.

இவ்வாறு தோழர் அருணபாரதி கூறியுள்ளார்.

முழுவதுமாகப் படிக்க :
https://www.vikatan.com/…/141165-tamil-nadu-is-deceived-in-…

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com 
இணையம்: www.tamizhdesiyam.com

Tuesday, May 22, 2018

போராடும் தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக சென்னை - வள்ளுவர் கோட்டத்தில் ஒன்று திரள்வோம்!

போராடும் தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக சென்னை - வள்ளுவர் கோட்டத்தில் ஒன்று திரள்வோம்! 

#BanSterlite

உயிர்க்கொல்லி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி - தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்த பல்லாயிரக்கணக்கான மக்களை காவல்துறை வழிமறித்துத் தாக்கியதுடன், ஒரு பெண் உட்பட 13 பேரை இதுவரை துப்பாக்கிச் சூட்டில் காவல்துறையினர் கொன்றிருக்கிறார்கள்.

தமிழ்நாடு அரசின் இந்த வன்முறைத் தாண்டவத்தைக் கண்டித்தும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் நாளை (23.05.2018) மாலை 4 மணிக்கு, சென்னை – வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது. 

தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒருங்கிணைப்பில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு தோழமை அமைப்புகளும், உழவர் இயக்கங்களும் பங்கேற்கின்றனர்.

அவசரமாக நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ் மக்களும், தமிழின உணர்வாளர்களும் திரளாகக் கலந்து கொண்டு, போராடும் தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாகக் குரலெழுப்ப வருமாறு அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

#BanSterlite

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Monday, May 21, 2018

கர்நாடகத் தேர்தல் : பா.ச.க.வின் தில்லு முல்லும் தமிழர்கள் கற்க வேண்டிய பாடமும் - தோழர் பெ. மணியரசன்.

கர்நாடகத் தேர்தல் : பா.ச.க.வின் தில்லு முல்லும் தமிழர்கள் கற்க வேண்டிய பாடமும் - தோழர் பெ. மணியரசன் - தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
வாக்குரிமை தான் மக்களாட்சியின் உயிர்த்துடிப்பு என்று ஒரு காலத்தில் கருதப்பட்டு வந்தது. காலப்போக்கில் வாக்களிப்பது என்பது கவர்ச்சி காட்டி மக்களின் கவனத்தைத் திசை திருப்பி வாக்குகளைக் களவாடிக் கொள்வது என்பதாகச் சீரழிந்தது. அதன்பிறகு, பணம் கொடுத்து விலைக்கு வாங்கப்படுவதாக “வாக்குரிமை” மாற்றப்பட்டது. அத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைப் பணம், பதவி ஆசை காட்டி கடத்திக் கொண்டு போவது, கட்சி மாறச் செய்து பலனடைவது என்ற அரம்பத்தனமாக (ரவுடித்தனமாக) “சனநாயகம்” மாறியது.

இந்தச் சின்னத்தனங்கள் அனைத்தும் இப்போது கர்நாடக பதவி வேட்டையில் அரங்கேறின; ஆட்டம் போடுகின்றன. இந்த ஆட்டத்தில் முறை தவறி – முதல்வர் பதவியைப் பெற்ற பா.ச.க.வின் எடியூரப்பா மூன்று நாளில் அதை இழந்தார். அறம், ஒழுக்கம், சட்டம் நீதி என்பவற்றைப் பற்றி கவலைப்படாத பா.ச.க. கட்சியைச் சேர்ந்த கர்நாடக ஆளுநர் வச்சுபாய் வாலா, சட்டப்பேரவை உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு பெற்ற குமாரசாமியைப் புறக்கணித்துவிட்டு, அறுதிப்பெரும்பான்மை பெறாத பா.ச.க.வைச் சேர்ந்த எடியூரப்பாவை முதலமைச்சராக்கி தன்னல நோக்கில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினார். 

கடந்த 12.05.2018 அன்று நடந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ச.க. – 104, காங்கிரசு – 78, மதச்சார்பற்ற சனதா தளம் – 37 இடங்களைக் கைப்பற்றின. தற்சார்பாளர்கள் (சுயேச்சைகள்) – 2 பேர். முதலமைச்சர் பதவி ஏற்க 112 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால் 104 உறுப்பினர்களைக் கொண்ட பா.ச.க.வின் எடியூரப்பாவுக்கு முதலமைச்சர் பதவியேற்பு உறுதிமொழி செய்து வைத்தார், ஆளுநர் வச்சுபாய் வாலா!

ஒரு சட்டப்பேரவை உறுப்பினரை விலைக்கு வாங்கப் பல கோடி ரூபாய் தருவதற்கு தூது விட்டுப் பார்த்தது பா.ச.க.! அத்துடன் சாதி மற்றும் அமைச்சர் பதவி ஆகியவற்றைப் பயன்படுத்திப் பார்த்தது. ஆனாலும், காங்கிரசும், மதசார்பற்ற சனதா தளமும் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களை வளைத்து, கடத்தி, பதுக்கி வைத்துக் கொண்டார்கள். பா.ச.க. அரசியல் “ரிஷி”களின் பாச்சா பலிக்கவில்லை! 

அதேவேளை தேர்தலில் தனித்தனியாகப் போட்டியிட்ட காங்கிரசும், சனதா தளமும் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க முடிவு செய்து, ம.ஜ.த. தலைவர் குமாரசாமியை முதலமைச்சராகிட ஒப்புக் கொண்டுள்ளன. முப்பத்தேழு உறுப்பினர்களை மட்டும் கொண்ட குமாரசாமி முதலமைச்சர்; 78 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரசுக் கட்சிக்கு முதலமைச்சர் பதவி இல்லை! 

தேவகௌடா – குமாரசாமி குடும்பத்தாரின் பதவி வெறிக்கு, முதலமைச்சர் என்ற தீனி போட்டாலொழிய பாரதிய சனதாக் கட்சி ஆட்சிக்கு வருவதைத் தடுக்க முடியாது என்று கருதிய காங்கிரசு, இப்போதைக்கு குமாரசாமி தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளது. குமாரசாமியோ ஐந்தாண்டுகளும் நான்தான் முதல்வர் என்று இப்போதே சொல்லத் தொடங்கிவிட்டார். காலம் செல்லச் செல்ல காங்கிரசு – ம.ஜ.த. கூட்டணியில் பதவிச் சண்டை வருவதற்கு வாய்ப்புண்டு! ஏனெனில், இரண்டு கட்சித் தலைமைகளும் “இலட்சிய செம்மல்”கள் இல்லை! பதவி வெறி வந்திட – பத்தையும் இழக்கத் துணிந்த கட்டைகள்! 

வரும் 23.05.2018 அன்று காங்கிரசு – ம.ஜ.த. கூட்டணியின் முதல்வராக குமாரசாமி பதவியேற்க இருக்கிறார். நீண்டகாலமாகக் கங்காணி அதிகாரப் பசியில் துடித்துக் கிடந்த குமாரசாமி, இப்போது கோயில் கோயிலாகச் சென்று கும்பிட்டு பதவிப் பூசை நடத்தி வருகிறார். 

சட்டமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதா என்பதை அவர்கள் கையளிக்கும் உறுப்பினர் பட்டியலிலிருந்து கணக்கிட்டு முடிவு செய்து, பெரும்பான்மை ஆதரவு உள்ள ஒருவரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும். உறுதியான பெரும்பான்மை இருக்கிறதா என்ற ஐயம் எழுமானால், சட்டமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை மெய்ப்பிக்க கெடு விதித்திருக்க வேண்டும். 

பா.ச.க.வுக்கு பெரும்பான்மை ஆதரவு இல்லாவிட்டாலும், ஆளுநர் பதவியைப் பயன்படுத்தி மேகாலயா, மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில், கட்சித்தாவல் மூலம் சிறுபான்மை பா.ச.க. ஆட்சியை பெரும்பான்மை ஆட்சியாக்கும் “சாகசத்தை” – ஆன்மிகம் பேசும் பா.ச.க. ஆளுநர்கள் செய்தார்கள். அந்த தில்லுமுல்லு காங்கிரசு – மதச்சார்பற்ற சனதா தள “சாகசங்களால்” முறியடிக்கப்பட்டது! 

இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியும் பா.ச.க. தலைவர் அமித்சாவும் எந்தத் தில்லுமுல்லும் செய்யத் தயங்காதவர்கள் என்பதற்கு, அவர்களின் கர்நாடகப் பித்தலாட்டம் மற்றுமொரு எடுத்துக்காட்டு! 

ஓர் ஆறுதல்; உச்ச நீதிமன்றம் சட்டப்பேரவையில் எடியூரப்பா மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஒரு நாள் அவகாசம் வைத்து ஆணையிட்டது. அந்தநிலையில்தான், பெரும்பான்மை பெற முடியாத எடியூரப்பா பதவி விலகினார். 

ஆர்.எஸ்.எஸ்., பா.ச.க. ஆகிய இரண்டும் ஆன்மிக ஒழுக்கம் இல்லாதவை மட்டுமல்ல, அரசியல் ஒழுக்கமும் இல்லாதவை. சனநாயகம் என்றால் அவற்றிற்கு ஒவ்வாமை! தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றம், திட்டக்குழு போன்ற சனநாயகத்தை உறுதி செய்யும் நிறுவனங்களை ஒவ்வொன்றாகக் காலி செய்து வருகின்றன பா.ச.க.வும், ஆர்.எஸ்.எஸூம்!

அதேவேளை, மதச்சார்பற்ற சனதா தளமும், காங்கிரசும் பொது இலட்சியமோ – பொது வேலைத்திட்டமோ எதுவுமின்றி அதிகார வேட்டைக்காகக் கூட்டணி சேர்ந்துள்ளன. 

தமிழ்நாட்டில் துணை முதல்வர் ஒ. பன்னீர்ச்செல்வம், “பா.ச.க.வின் தென்னக நுழைவுக்கான மணியோசை ஒலித்துவிட்டது” என்று வாழ்த்துக் கூறி, பா.ச.க.வின் சனநாயக விரோத – சட்ட விரோதச் செயல்களை வரவேற்றுள்ளார். 

செயலலிதா அம்மையார் இறந்தவுடன், தமிழ்நாட்டில் அதிகார வேட்டைக்காக சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கடத்திப் பதுக்கி வைத்த “சாகசங்கள்” தமிழ்நாட்டிலும் நடந்தன. கர்நாடகத்தில் நடந்த விகாரமான அதிகார வேட்டை அரசியல், தமிழ்நாட்டில் நடக்காது என்பதற்கு எந்த உறுதியும் இல்லை! 

தேர்தல் அரசியல் மிகமிக மோசமாகச் சீரழிந்துவிட்டது. தமிழ்நாடு இந்தச் சீரழிவிற்கு விதி விலக்கன்று! தேர்தல் கட்சிகளுக்கு வெளியே, மக்கள் தன்னெழுச்சியாக தங்கள் வாழ்வுரிமைகளைப் பாதுகாத்திடப் போராடுவது தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. அதேபோல், சனநாயக உரிமைகள் பலவற்றைப் பாதுகாப்பதற்கான போராட்டங்களையும் தேர்தல் கட்சிகளுக்கு வெளியே தன்னெழுச்சியாக ஆற்றல் மிகு இளையோரும், அனுபவமிக்கப் பெரியோரும் இணைந்து நடத்த வேண்டும். இல்லையேல், எந்த இலட்சியமும் இன்றி எந்தப் பொது நல அக்கறையுமின்றி – தாயகப் பற்றும் தமிழினப் பற்றும் இன்றி, அதிகார வேட்டைக்கு அடித்துக் கொள்ளும் அரசியல் பெருச்சாளிகளின் பின்னால், மக்கள் அணிவகுத்து தங்கள் வாழ்வை அழித்துக் கொள்வதுதான் மிஞ்சும்! பழைய பெருச்சாளிகள் போதாதென்று, இரசினிகாந்து – கமலகாசன் போன்ற புதிய பெருச்சாளிகளும் அதிகார வேட்டை அரசியலுக்குள் அரிதாரம் பூசிவரும் அவலம் தொடரும்! 

தமிழ்நாட்டு உரிமைகள் இந்திய அரசாலும் அண்டை மாநிலங்களாலும் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் மேலிருந்து கீழ் வரை சமூகக் கட்டமைப்பு ஊழலால் உலுத்துப்போய் நிற்கிறது! வேலையின்மை, விலை உயர்வு, வாழ்க்கைப் பாதுகாப்பின்மை, வறுமை ஆகியவற்றால் மக்கள் ஒவ்வொரு நொடியும் குமுறுகின்றனர். 

தேர்தல் ஆதாயக் கட்சிகளால் தமிழ்நாட்டு உரிமைகளைக் காக்க முடியவில்லை. தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையை செழுமைப்படுத்த முடியவில்லை! இவ்வேளையில், தேர்தல் ஆதாயக் கட்சிகளுக்கு அப்பால் நடந்து வரும் தமிழர் போராட்டங்கள் மேலும் மேலும் வலுப்பட வேண்டும்; மேலும் மேலும் வரிவடைய வேண்டும் என்ற உணர்வையும் உறுதியையும் தமிழர்கள் பெற வேண்டும்!

காமவெறியைவிட கொடியது அதிகாரவெறி – பதவிவெறி – பணவெறி என்ற நடைமுறை உண்மைகளை நாம் தமிழ்நாட்டிலேயே பார்த்திருக்கிறோம். எனவே, தமிழர் தன்னெழுச்சித் தற்காப்புப் போராட்டங்களை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்! 

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

கதிராமங்கலம் போராட்டம் - புதிய வழக்கு!

கதிராமங்கலம் போராட்டம் - புதிய வழக்கு!
கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராகக் கடந்த 19.05.2018 அன்று நடைபெற்ற 365ஆவது நாள் போராட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய தலைவர்கள் மீது, தமிழகக் காவல்துறையினர் புதிதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தமிழர் தேசிய முன்னணித் தலைவர் திரு. பழ. நெடுமாறன், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. செயராமன், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் சீமான், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி. வேல்முருகன் உள்ளிட்ட 26 பேர் மீது பந்தநல்லூர் காவல்நிலையத்தில், அனுமதியின்றி கூட்டம் நடத்தியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதன் தொடர்ச்சியாக, நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்கள் பலரை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். பலரைத் தேடி வருகின்றனர். 

ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக தன்னெழுச்சியுடன் போராடி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து அறவழியில் கூட்டம் நடத்திய தலைவர்கள் மீதும், களப்போராளிகள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள செயல், வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! 

தமிழ்நாடு அரசு! அறப்போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது அடக்குமுறையை ஏவாதே! 

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery

Sunday, May 20, 2018

“காவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள்” தோழர் பெ. மணியரசன்.

“காவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள்” தோழர் பெ. மணியரசன் - காவிரி உரிமை மீட்புக்குழு, ஒருங்கிணைப்பாளர்.
உச்ச நீதிமன்றம் 18.5.2018 அன்று இறுதி செய்த காவிரி மேலாண்மை ஆணையத்தில் இருபெரும் ஊனங்கள் இருக்கின்றன.

ஒன்று, கர்நாடக அணைகளின் மதகுகளைத் திறந்து மூடும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு மட்டுமே உண்டு என்று நேரடியாகக் கூறப்படாதது.

கர்நாடக அணைகளின் மதகுகளைத் திறந்து விடும்படி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகப் பாசனத்துறையினர்க்கு ஆணை இட்டுத்தான் செயல் படுத்த முடியும் என்ற நிலை இருந்தால், கர்நாடக அரசு அவ்வாறு தன் அதிகாரிகளும் ஊழியர்களுக்கும் திறக்கக் கூடாது என்று ஆணை இட்டால், நிலைமை என்னவாகும்?

ஏனெனில் ஏற்கெனவே பலமுறை தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விடும்படி உச்சநீதிமன்றம் ஆணை இட்டும் அதைச் செயல்படுத்த முடியாது என்று வெளிப்படையாகக் கர்நாடக அரசு மறுத்து வந்துள்ளது.
கடந்த 2016 இல் 10,000 கன அடி, 6,000 கன அடி, 2000 கன அடி தண்ணீர் திறந்து விடுமாறு பலமுறை உச்சநீதிமன்றத் தீபக் மிஸ்ரா ஆயம் கட்டளை இட்டும் தண்ணீர் திறந்து விட மறுத்துவிட்டது கர்நாடக அரசு. அது மட்டுமின்றி, கர்நாடக சட்டப்பேரவையைக் கூட்டி தண்ணீர் திறந்து விட முடியாது என்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது கர்நாடக அரசு.

உச்சநீதிமன்றக் கட்டளையை மீறியதற்காக கர்நாடக அரசின் மீது உச்சநீதி மன்றமோ அல்லது இந்திய அரசோ ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாடு பாதிக்கப்பட்டதுதான் மிச்சம்!

இரண்டாவது ஊனம், ஏதாவதொரு மாநிலம் மாற்றுக் கருத்து கூறினால் காவிரி மேலாண்மை ஆணையத்தில் வாக்களிக்கும் உரிமையுள்ள ஒன்பது உறுப்பினர்களின் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துப்படி முடிவெடுக்க வேண்டும் என்று இருப்பதாகும். ஆணையத்தின் தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்கள் – ஆக மொத்தம் ஐந்து பேர் நடுவண் அரசின் அதிகாரிகள்; நடுவண் அரசால் அமர்த்தப்படுவோர் ஆவர். தமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களுக்கும் தலா ஒருவர் வீதம் நான்கு பேர்.

இதில் கர்நாடக உறுப்பினர் மாற்றுக் கருத்து தெரிவித்து, தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விடமறுத்தால், நடுவண் அரசின் ஐந்து உறுப்பினர்கள் நடுவண் அரசின் வழிகாட்டுதல் படி நடந்து கொள்வார்கள். காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பு 1991 – இல் வழங்கப்பட்டதிலிருந்து, இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு செயல்படுத்துமாறு 2013 – இல் உச்சநீதிமன்றம் ஆணையிட்டதிலிருந்து இதுவரை எந்தத் தீர்ப்பையும் செயல்படுத்த மறுத்து வருகிறது இந்திய அரசு. காங்கிரசு அரசாக இருந்தாலும் பாசக அரசாக இருந்தாலும் நடுவண் அரசின் நிலைபாடு எப்போதும் தமிழ்நாட்டிற்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதுதான். இனி அந்தப் பாகுபாடு தொடராது என்பதற்கு என்ன உறுதி? கர்நாடக உறுப்பினர்களின் எதிர்ப்புக்கு சாதகமாக இந்திய அரசு அதிகாரிகள் நடந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது.

இந்த இருபெரும் ஊனங்கள் புதிய காவிரி மேலாண்மை ஆணையத்தில் இருக்கின்றன. இவற்றைச் சரி செய்வது எப்படி? இந்த ஊனங்களால் பாதிப்பு வராது என்று நேரடியாக தெளிவாக உறுதி கூற நரேந்திரமோடி அரசு தயாரா? உச்சநீதிமன்றம் அப்போது தலையிட்டு சரிசெய்யுமா? கடந்த கால அனுபவங்கள், “இல்லை” என்ற விடையைத்தான் தருகின்றன.

இவற்றிக்கப்பால், 16.2.2018 அன்று தீபக் மிஸ்ரா ஆயம் அறிவித்த காவிரித் தீர்ப்பு, இந்திய அரசமைப்புச் சட்டவிதிகளுக்கு முரணானது. 1956 ஆம் ஆண்டின் தண்ணீர்த் தகராறு சட்டத்திற்கு எதிரானது. அத்துடன் அத்தீர்ப்பு மரபுவழித் தண்ணீர் உரிமை (Riparian Right) என்ற அடிப்படை உரிமையைத் தகர்த்து விட்டது. தேவைக் கேற்ற தண்ணீர் பகிர்வு (Equitable Share) கோட்பாட்டைத் திணித்துள்ளது. வேளாண்மைக்கு நிகராகத் தொழில்துறைக்கு தண்ணீர் அளிக்கும் கோட்பாட்டைப் புகுத்தியுள்ளது.

இந்த அநியாயங்களின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரை மிக மோசமாகக் குறைத்துவிட்டது உச்சநீதிமன்றம்.

எனவே இதைச் சரி செய்ய காவிரி வழக்கிற்கு உச்சநீதிமன்றத்தில் ஏழு நீதிபதிகளைக் கொண்ட அரசமைப்பு ஆயம் அமைக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான வழக்கைத் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுக்க வேண்டும் என்றும் காவிரி உரிமை மீட்புக் குழு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. முல்லைப்பெரியாறு வழக்கு, உச்சநீதிமன்ற மூன்று நீதிபதிகளால் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கும் நிலையில் அரசமைப்பு ஆயத்திற்கு மாற்றப்பட்ட முன் எடுத்துக்காட்டையும் சுட்டிக் காட்டி வருகிறது.

மேற்கண்ட எச்சரிக்கைகளுடன் - விழிப்புணர்வுடன் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது பற்றி தமிழர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery

Friday, May 18, 2018

"முள்ளிவாய்க்கால் ஈகியருக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை!" தோழர் கி. வெங்கட்ராமன் சிறப்புக் கட்டுரை!

"முள்ளிவாய்க்கால் ஈகியருக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை!" தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் சிறப்புக் கட்டுரை!
ஆரிய இந்திய வல்லாதிக்க அரசின் ஒருங்கிணைப்பில் உலக வல்லரசுகளின் உதவியோடு, முள்ளிவாய்க்காலில் சிங்களப் பேரினவாத அரசு ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த ஆற்றொணாத்துயரம் நடந்து முடிந்து, ஒன்பது ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. 

தமிழ்நாடு உள்ளிட்டு உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்கள் அனைவரின் நெஞ்சங்களிலும் ஆறாத காயமாக முள்ளிவாய்க்கால் படுகொலை தங்கி இருக்கிறது. 

மண்ணையும், மானத்தையும் காக்கும் தமிழீழ விடுதலைப் போரில் உயிரீகம் செய்த தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் வீரவணக்கத்தை மீண்டும் உரித்தாக்குகிறோம்! 

இந்த இன அழிப்பு, பன்னாட்டுச் சமூகத்தின் உறுதியான கேள்விக்கு உட்படாமல் சிங்களப் பேரினவாதம் உலா வருவது அடுத்தப் பெரும் துயரமாகும்! 

நடந்தது இனப்படுகொலைதான் என்பதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்கள் வந்த பின்னும், பன்னாட்டுச் சமூகம் வெளிப்படையான இந்த உண்மையை இன்றுவரை ஏற்க மறுத்து வருகிறது. அதனடிப்படையில், தமிழீழத் தனியரசு தொடர்பான கருத்து வாக்கெடுப்பு நடத்த மறுத்தும் வருகிறது. 

அதைவிட, ஐ.நா. மனித உரிமை மன்றத்தில், கடந்த 2015 அக்டோபரில் சிங்கள அரசு முன்மொழிந்து - ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இலங்கை அரசு ஏற்றுக் கொண்ட நடவடிக்கைகள்கூட இன்றுவரை நடைபெறவில்லை!

தமிழீழ மண்ணில் சிங்களக் குடியேற்றம் குறைவதற்கு மாறாக, தீவிரம் பெற்றுள்ளது. கிழக்கு மாகாணம் தமிழீழத் தாயகம் என்ற தகுநிலையை கிட்டத்தட்ட இழந்து விட்டது! வரம்பற்ற சிங்களக் குடியேற்றம் நடந்து முடிந்துவிட்டது. 

இப்போது, அது வடக்கு மாகாணத்திலும் விரைவாக நடந்து வருகிறது. தமிழீழக் கடற்பரப்பில் மீன் பிடிக்கும் உரிமம் மேலும் மேலும் சிங்களர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தமிழீழ மீனவர்கள் மீன்பிடித் தொழிலிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வருகிறார்கள். 

தமிழர்களின் கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டிடங்கள் மிக வேகமாக புத்த விகாரைகளாகவும், புத்த பிக்குகளின் தங்குமிடமாகவும் மாற்றப்பட்டு வருகின்றன. 

இன்றும் தமிழீழ மண்ணில் சிங்களப் படைக் குவிப்பு பெருமளவு குறையவில்லை. “பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழித்த ஒரே நாடு சிறீலங்காதான்” என்று மார்தட்டும் இலங்கையின் தலைமைத் தளபதி மகேஷ் சேனநாயகா, “படைக்குறைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று இப்போதும் கொக்கரிக்கிறார் (The Hindu, 16.05.2018). 

ஏறத்தாழ 60,000 ஏக்கர் தமிழர் நிலம் சிங்களப் படையினர் வசம் உள்ளது. அதில், சில நூறு ஏக்கர் தனியார் நிலங்களைத் தவிர பிற எதுவும் மீள வழங்கப்படவில்லை! பண்ணைகள், அரசுக் கட்டடங்கள், பல்வேறு சமூகப் பயன்பாட்டு நிலையங்கள், காடுகள் ஆகியன சிங்களப் படைகளின் பிடியில் இருக்கின்றன. 

ஏ-9 நெடுஞ்சாலையில் வணிக நிறுவனங்கள் சிங்களப் படையணிகளாலேயே நடத்தப்படுகின்றன. உணவகங்கள், சுற்றுலா விடுதிகள், விழா நடத்தும் மண்டபங்கள், கேளிக்கை விடுதிகள். தோட்டங்கள், பண்ணைகள், குழிப்பந்தாட்ட (கோல்ஃப்) நிலையங்கள் போன்ற பலவும் இராணுவத்தினராலேயே நடத்தப்படுகின்றன. இந்த வகையில், சிங்கள இராணுவமே ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல தமிழீழ மண்ணில் செயல்படுகிறது. 

2016இல் இந்தக் குழுமங்களின் வணிக நடவடிக்கைகளால் ஐம்பது இலட்சம் டாலர் தொகை அளவுக்கு சிங்கள இராணுவம் இலாபம் ஈட்டியுள்ளது. இவற்றில் கடைநிலைப் பணிகளில் சற்றுக் கூடுதல் ஊதியத்திற்குத் தமிழர்கள் அமர்த்தப்பட்டு, சிங்களப் படைக்கு இசைவானவர்களாக அவர்களில் கணிசமானவர்களை மாற்றும் முயற்சியும் நடந்து வருகிறது. 

கல்வி நிறுவனங்கள், வருவாய் அலுவலகங்கள் உள்ளிட்ட பொது மக்கள் சேவைத் துறைகளில் 95 விழுக்காடு தமிழீழப் பகுதியில் இன்னும் சிங்களப் படையாலேயே நடத்தப்படுகின்றன. 

ஐ.நா. தீர்மானத்தில், தானே ஒத்துக் கொண்டபடி பயங்கரவாதத் தடைச் சட்டத்தை சிங்கள அரசு கைவிடவில்லை. 

காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பாக படையினர் மீதோ, சிங்களக் காடையர்கள் மீதோ இதுவரை எந்தக் குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக, சரணடைந்த புலிகள் பலரது கதி என்ன என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை! 

முள்ளிவாய்க்கால் நினைவு நாளைக் கடைபிடிக்கும் இயல்பான நிகழ்வுகள்கூட மிகப்பெரும் அடக்குமுறைகளையும் கெடுபிடிகளையும் சந்தித்து வருவது தொடர்கிறது. 

வெளித் தோற்றத்தில் அமைதி திரும்பி வருவதாகவும், சனநாயகம் மீண்டு வருவதாகவும் காட்டப்பட்டாலும், உண்மையில் நிறுவனமயமாக்கப்பட்ட உரிமைப் பறிப்புகள் - சனநாயகக் குலைப்புகள் தீவிரம் பெற்றுள்ளன. 

இதுகுறித்து, பன்னாட்டு அரங்கில் சிங்களப் பேரினவாத அரசுக்கு எதிராக எந்தக் கேள்வியும் எழுந்துவிடாதவாறு மிகக் கவனமாக இந்திய அரசு பார்த்துக் கொள்கிறது. 

ஐ.நா. உறுப்பு அமைப்புகளில் இதுகுறித்து குரல் எழுப்புவோர் வெளிப்படையாக அச்சுறுத்தப்படுகிறார்கள். 2017 செப்டம்பரில் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் பேசிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சிங்கள இனவெறியர்களால் மிரட்டப்பட்டது இதற்கொரு சான்று! 

இந்நிலையில், தமிழீழ விடுதலைக்கான நீண்ட நெடிய போராட்டம் பல கட்டங்களைத் தாண்டி, பொறுமையாகவும் விடாப்பிடியாகவும் பல அரங்குகளில் நடத்தப்பட வேண்டிய போராட்டமாக மாறியுள்ளது. இவை அனைத்திற்கும் முதன்மைத் தளமாக தமிழீழ மண்ணின் அம்மக்கள் நடத்தும் போராட்டமே அமையும்! 

காணாமல் ஆக்கப்பட்டோர் மீட்பு, சிங்களக் குடியேற்றம் நிறுத்தப்படுதல், சிங்களப் படைகள் வெளியேற்றப்படுதல், மனித உரிமை மீட்பு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, தமிழீழ மண்ணில் அம்மக்கள் இருக்கும் வாய்ப்புக்கிடையில் விடாப்பிடியாகப் போராடுவது முதன்மைத் தேவையாகும்! 

அதேபோல், தமிழ்நாட்டிலும், உலகின் பல நாடுகளிலும் சர்வதேச அரங்குகளின் கவனத்தை ஈர்க்கும் போராட்டங்கள் தமிழீழ மக்களுக்கு ஆதரவாக தொடர்ந்து நடைபெற வேண்டும். 

சிங்கள அரசு இயற்றும் புதிய அரசியல் யாப்பு என்ற மாய வலைக்குள் தமிழர்கள் வீழ்ந்துவிடக்கூடாது! இனப்படுகொலைக்கு எதிரான தற்சார்பான பன்னாட்டு விசாரணை, தமிழீழத்திற்கான கருத்து வாக்கெடுப்பு ஆகியவற்றில் தெளிவோடும் உறுதியோடும் நிற்க வேண்டும். 

ஈழத்தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழர்களும் சம்பந்தர் - சுமந்திரன் போன்ற இரண்டகர்களை அடையாளங்கண்டு அப்புறப்படுத்தி, தெளிவான திசைவழியில் தங்கள் போராட்டங்களை உறுதியாக முன்னெடுக்க வேண்டும். 

குறிப்பாக, தமிழ்நாட்டுத் தமிழர்கள் இந்திய அரசு பன்னாட்டு அரங்கில் ஈழத்தமிழர்களுக்கு ஒரு சிறிது நீதியும் கிடைக்காமல் தடுப்பதை எதிர்த்து, விழிப்போடு போராட வேண்டும்! 

அதுதான் முள்ளிவாய்க்கால் ஈகியருக்கு தமிழர்கள் செய்யும் கடமையாகவும் இருக்கும்! 

(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் – 2018 மே 16-31 இதழின் தலையங்கக் கட்டுரை இது).

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhthesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT