Showing posts with label சாதி ஒழிப்பு. Show all posts
Showing posts with label சாதி ஒழிப்பு. Show all posts
Saturday, July 4, 2020
Saturday, January 19, 2019
சமூகநீதியைத் தகர்க்க சதி மோடி - இராகுல் சூழ்ச்சி! தோழர் பெ. மணியரசன்.
சமூகநீதியைத் தகர்க்க சதி மோடி - இராகுல் சூழ்ச்சி! தோழர் பெ. மணியரசன், தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
முன்னேறிய வகுப்பில் பிறந்து, பொருளியல் வகையில் பின்தங்கியுள்ளோருக்கு இந்திய அரசு மற்றும் மாநில அரசின் கல்வி - வேலை வாய்ப்புகளில் தனியே 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நரேந்திர மோடி அரசு அவசர அவசரமாக இராகுல் காங்கிரசின் ஆதரவோடு நிறைவேற்றியுள்ளது. சமூகநீதிக்கு மிகப்பெரிய ஆபத்து விளைவிக்கும் நுட்பமான சதிவேலையே இந்தச் சட்டம்!
தற்போது, முன்னேறிய வகுப்பினரின் மக்கள் தொகை விகிதத்திற்கு ஏற்ப, அவர்களுக்குக் கல்வி - வேலை வாய்ப்புகளில் பிரதிநிதித்துவம் இல்லை என்று மோடி அரசுக்கு யார் சொன்னது? அவர்களுக்கு இப்போது இட ஒதுக்கீடு வழங்கியாக வேண்டிய அளவுக்கு, அப்படி என்ன அவசரமும், அவசியமும் ஏற்பட்டது?
ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - பழங்குடியின மக்கள், அவர்களது மக்கள் தொகை விழுக்காட்டிற்கு ஏற்ப கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இடம் பெறவில்லை என்பதை ஆராய்ந்து, அதற்குரிய கணக்கீடு களின்படியே அப்பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. முன்னேறிய வகுப்பினரின் இட ஒதுக்கீட்டுக்கு அப்படி ஏதேனும் ஆணையம் அமைத்து ஆய்வு செய்யப் பட்டதா? இல்லை!
ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - பழங்குடியின மக்கள் ஏன் பின்தங்கிப் போனார்கள்?
ஆரிய வைதீக வர்ணாசிரம தர்மம் பிறப்பிலேயே உயர்வு தாழ்வு கற்பித்து, மக்களிடையே சாதிப் பிளவு களை உண்டாக்கியது. உழைக்கும் மக்களை சூத்திரர்கள் - பஞ்சமர்கள் என ஒதுக்கி வைத்தது. அவர்களது தொழில் நுட்ப அறிவையும், உழைப்பையும் சுரண்டியது. எனவேதான் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் அவர் களது மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் இல்லாமல் போனது.
ஏன் வந்தது இடஒதுக்கீடு?
முன்னேறிய வகுப்பினரே கல்வி - வேலை வாய்ப்புகளில் நிறைந்திருந்தனர். இதன் காரணமாகவே, மற்ற வகுப்பினர் முன்னேறி வருவதற்கான ஏற்பாடாக இட ஒதுக்கீட்டு முறை கொண்டு வரப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 15 - 16களில் இதற்கான திருத்தங்கள் செய்யப்பட்டு, சமூக வகையிலும், கல்வியிலும் பின் தங்கியவர்களை கை தூக்கி விடுவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இப்போது, தமிழ்நாட்டில் முன்னேறிய வகுப்பாக பிராமணர்கள்தான் கோலோச்சுகின்றனர். தமிழ்நாட்டில் முன்னேறியோர் பட்டியலில் பிராமணர் அல்லாதவர் எண்ணிக்கை மிகவும் குறைவு. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரும்பாலோர் இட ஒதுக்கீட்டுப் பட்டியலுக்குள் வந்துவிடுகின்றனர். மக்கள் தொகையில் பிராமணர்கள் 3 விழுக்காட்டினராக உள்ளனர். அவர் களில் பொருளியல் வகையில் பின்தங்கியவர்களுக்கு, 10 விழுக்காடு இட ஒதுக்கீடு என சட்டம் இயற்றியுள்ளது எந்த வகையில் ஞாயம்? அவர்கள் மக்கள் தொகை விகிதத்திற்கு ஏற்ப கல்வியும், வேலை வாய்ப்பும் பெறவில்லை என்று இந்திய அரசு எதன் அடிப்படையில் கணக்கிட்டது?
இன்றைக்கு பிராமணரல்லாத உயர் வகுப்பினர்கூட பிராமணர்களின் அளவுக்கு பிரதிநிதித்துவம் பெறவில்லை. இந்த முன்னேறிய வகுப்பினர், எந்தக் காலத்திலாவது பிறப்பு அடிப்படையில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார்களா? கல்வி - வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டார்களா? பின்னர், இவர்களுக்கு ஏன் இந்த சிறப்புரிமை? இதன் பெயர்தான் இந்தியத்தேசியம் - இந்துத்துவா - பிராமணத்துவா!
பா.ச.க. அரசு கொண்டு வந்துள்ள இச்சட்டத்தை காங்கிரசுக் கட்சி ஆதரித்து வாக்களித்தது. சி.பி.எம். - சி.பி.ஐ. கட்சிகளும் ஆதரித்துள்ளன. தேர்தலை மனத்தில் வைத்து பா.ச.க. இச்சட்டத்தைக் கொண்டு வருவதையும், அவசர அவசரமாகக் கொண்டு வருவதையும்தான் இந்தக் கட்சிகள் எதிர்க்கின்றனவே தவிர, இந்தச் சட்டத்தை எதிர்க்கவில்லை!
“பிராமணத்துவா” கட்சிகள்
காங்கிரசுக் கட்சி கடந்த 2014 மக்களவைத் தேர்தலின் போது, முன்னேறிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கொண்டு வருவோம் எனத் தேர்தல் வாக்குறுதியே அளித்திருந்தது. அண்மையில் இராகுல்காந்தி, தன் பூணூலைக் காட்டி தான் தத்தாத்ரிய கோத்திர பிராமணன் என்று கூறி தன்னை உலகுக்கு அடையாளப் படுத்திக் கொண்டார் என்பதும் கவனிக்கத்தக்கது.
கடந்த 08.01.2019 அன்று அறிக்கை வெளியிட்ட சி.பி.எம். கட்சியின் அரசியல் தலைமைக் குழு இந்தச் சட்டம் சமூகநீதிக்கு எதிரானது என்றெல்லாம் குரல் எழுப்பவில்லை. தங்கள் கட்சி முன்னேறிய வகுப்பாருக்கு பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கு வதை ஆதரிக்கிறது என்றும் அவ்வறிக்கை கூறுகிறது. அவசரமாக ஏன் கொண்டு வருகிறீர்கள் என்று மட்டும் கேட்கிறது.
நாடாளுமன்றத்தில் பேசிய சி.பி.எம். கட்சி உறுப்பினர் டி.கே. ரங்கராசன், சி.பி.ஐ. கட்சி உறுப்பினர் டி. ராஜா ஆகியோர், மாற்றுத் திட்டம் என்ற பெயரில், வெளித் தோற்றத்துக்கு எதிர்ப்பு என்பதுபோல் காட்டிக் கொள்வதற்காக தனியார் துறையிலும் இதே இட ஒதுக்கீடு வேண்டுமென பேசியுள்ளனர். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் “நான் முன்னேறிய வகுப்பாருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை ஆதரித்து வாக்களித்தேன்” என்று டி.கே. ரங்கராசன் கூறினார்.
இவ்வாறு, பிராமணர்களுக்காக ஒரே அணிவகுப்பில் நின்று இக்கட்சிகள் குரல் கொடுப்பதன் பெயர்தான் இந்தியத்தேசியம் - அதன் இன்னெரு பெயர்தான் இந்துத்துவா - அதன் அசல் பெயர்தான் பிராமணத்துவா!
இச்சிக்கலில் மட்டுமின்றி, இந்தியத்தேசியத்திற்கு முன்னுரிமை தரும் கம்யூனிஸ்ட்டு கட்சிகள் பல்வேறு அடிப்படைச் சிக்கல்களில் காங்கிரசு - பா.ச.க. நிலை பாட்டையே கொண்டுள்ளன. பல எடுத்துக் காட்டுகள் இருக்கின்றன. சான்றுக்கு ஒன்றே ஒன்று, இந்தியாவின் ஆட்சிமொழி இந்திதான் என்று சி.பி.எம்., சி.பி.ஐ. கட்சிகளின் கொள்கை அறிக்கை கூறுகிறது.
முன்னேறிய வகுப்பில் பிறந்து பொருளியல் வகையில் பின்தங்கியவர்களைக் கணக்கிட, ‘ஆண்டுக்கு 8 இலட்சம் ரூபாய் வருமானம் பெறுபவர்கள்’ என மோடி பிறப்பித்த இச்சட்டம் தெரிவிக்கிறது. ஆண்டுக்கு 8 இலட்சம் ரூபாய் என்றால், அவர்களது மாத ஊதியம் 66 ஆயிரம் ரூபாய்! ஒரு நாள் ஊதியம் 2,191 ரூபாய்! இந்த வருமானம் பெறுபவர்கள் பின்தங்கியவர்களா? அவர்களுக்கு ஏன் தனி இட ஒதுக்கீடு?
சாதிவாரிக் கணக்கெடுப்பை ஏன் வெளியிடவில்லை?
இச்சட்டம் செயலுக்கு வந்த பின், தமிழ்நாட்டில் நடைமுறையிலிருக்கும் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டில், ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட வகுப்புகளில் பிறந்தவர்கள் மதிப்பெண் அடிப்படையில் போட்டியிட்டு வெற்றி பெற வாய்ப்பளித்த 31 விழுக்காட்டுப் பொதுப் பட்டியல் 21 விழுக்காடாக சுருங்கிவிட்டது!
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அவர்களின் மொத்த மக்கள் தொகை விகிதத்திற்குச் சமமாக இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டில் சற்றொப்ப 70 விழுக்காடு வரை உள்ள பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காடுதான் இட ஒதுக்கீடு உள்ளது.
இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மக்கள் தொகை 56 விழுக்காடு என மண்டல் குழு கணக்கிட் டுள்ளது. அந்த 56 விழுக்காட்டினருக்கு இந்திய அரசுப் பணிகளில் 27.5 விழுக்காடுதான் ஒதுக்கீடு வழங்கப் படுகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இப்போது அளிக்கப் பட்டுள்ள 10 விழுக்காட்டை, வெறும் 3 விழுக்காடு மக்கள் தொகைக் கொண்ட பிராமணர்கள் தான் மிகப்பெரும்பான்மையாக எடுத்துக் கொள்வார்கள். அதே பிராமணர்கள், மதிப்பெண் அடிப்படையில் பெறுவதற்கு 21 விழுக்காடு பொதுப்பட்டியலும் இருக்கிறது.
கடந்த 2011ஆம் ஆண்டு, காங்கிரசு ஆட்சியில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோது சாதி வாரியாகக் கணக்கிட்டார்கள். இப்போது வரை, அந்த சாதிவாரி மக்கள் தொகைப் பட்டியல் வெளியிடப்படவில்லை! காங்கிரசு ஆட்சியும் வெளியிடவில்லை; பின்னர் வந்த பா.ச.க. ஆட்சியும் அதை வெளியிட வில்லை. வெளியிட்டுவிட்டால், மக்கள் தொகையில் மிகவும் குறைவாக உள்ள பிராமணர்களின் எண்ணிக்கையும் - முன்னேறிய வகுப்பார் எண்ணிக்கையும் தெரிந்துவிடும், அதேபோல் மக்கள் தொகையில் மிகப்பெரும் பான்மையான வகுப்பினர், ஒடுக்கப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் தொகை ஆகியோர் எண்ணிக்கை யும் தெரிந்துவிடும் என்று இக்கட்சிகள் அஞ்சுகின்றன. எனவே, இந்த இரட்டையர்களின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியத்தேசியம் அளிக்கும் சமூகநீதி பழைய “மனுநீதி”தான்!
திராவிடக் கட்சிகளின் நாடகங்கள்
தங்களை “சமூகநீதிக் காவலர்கள்” என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தி.மு.க. - அ.தி.மு.க. கட்சிகள், சாதிவாரி மக்கள் தொகைப் பட்டியலை வெளியிடச் சொல்லி ஏன் போராடவில்லை?
தி.மு.க., அதிமுக. கட்சிகள் இச்சட்டத்தை எதிர்த்துக் குரல் கொடுத்துள்ளன. வரவேற்கிறோம்! ஆனால், வெறும் குரல் எழுப்பிவிட்டு அவர்கள் யாரோடு இருக் கின்றனர்? அச்சட்டத்தை வெளிப்படையாக ஆதரித்துள்ள காங்கிரசுடன் தி.மு.க. இருக்கிறது. இச் சட்டம் நிறைவேற பா.ச.க.வுக்கு உதவும் வகையில் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல், தந்திரமாக அ.தி.மு.க. வெளிநடப்பு செய்து பா.ச.க.வுடன் நிற்கிறது.
தமிழ்நாட்டின் கல்வி உரிமையைப் பறிக்கும் “நீட்” தேர்வு, வரி வசூல் உரிமையைப் பறிக்கும் ஜி.எஸ்.டி., உயிர்க்கொல்லி ஸ்டெர்லைட் ஆலையைக் கொண்டு வருவது, எட்டுவழிச் சாலை அமைப்பது, காவிரிப் படுகையை நாசமாக்கி வேதி மண்டலமாக்க பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிப்பது, ஏழு தமிழர் விடு தலையை எதிர்ப்பது முதலியவற்றில் எல்லா வகையிலும் எதிராக நிற்கும் காங்கிரசுடன் தி.மு.க. எதற்காக கூட்டணி சேர்ந்து நிற்கிறது? பதவிக்காக! பதவிக்காக தமிழரைக் காட்டிக் கொடுத்து, இனத்துரோகம் செய்ய இவர் களுக்குத் தயக்கமில்லை! காங்கிரசுக் கட்சியை வெளிப்படையாகக் கண்டித்து, தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட வேண்டும். இல்லையேல் காங்கிரசுடனான உறவை முறித்துக் கொள்ள வேண்டும்! செய்வார்களா?
அ.தி.மு.க.வோ, பா.ச.க.வின் எடுபிடியாக அவர்களது திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டுள்ளது. ஆனால், நாடாளுமன்றத்தில் எதிர்ப்பதுபோல் நாடகமாடிக் கொண்டுள்ளது.
ஆக, இக்கட்சிகள் வெறும் கணக்குக் காட்டத்தான் அடையாள எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. திராவிட இயக்கத்தின் உயிர்க்கொள்கை சமூகநீதி எனக் கூறிக் கொள்ளும் இக்கட்சிகள், இந்தச் சட்டத்தின் வழியே சமூகநீதிக் கோட்பாட்டையே காலி செய்துள்ள இந்தியத் தேசியக் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து குலாவிக் கொண்டுள்ளன.
இவற்றையெல்லாம் எதிர்க்க ஒரு மாற்று சிந்தனை - புதிய சிந்தனை தேவை! சிந்திக்கும் ஆற்றல், உண்மை களைக் கண்டறியக் கூடிய உளப்பாங்கு ஆகியவற்றோடு தமிழ் மக்கள் இதனை எதிர் கொள்ள வேண்டும். அதற்கான தத்துவமே “தமிழ்த்தேசியம்”! பிற்போக்குச் சட்டங்களை தூக்கி எரியும் ஆற்றல் நமக்கிருக்கிறது!
இந்திய அரசே! சமூகநீதியை குழிதோண்டிப் புதைக்கும் இச்சட்டத் திருத்தத்தைக் கைவிடு! திரும்பப் பெறு என்று முழங்குவோம்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Monday, January 7, 2019
புனேவில் பெண்ணாடம் இளைஞர் ஆணவக்கொலையா? தமிழ்நாடு அரசு முழுமையான விசாரணைக்கு ஆணையிட வேண்டும்! தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!
புனேவில் பெண்ணாடம் இளைஞர் ஆணவக்கொலையா? தமிழ்நாடு அரசு முழுமையான விசாரணைக்கு ஆணையிட வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!
கடலூர் மாவட்டம் - திட்டக்குடியை அடுத்துள்ள இறையூரைச் சேர்ந்த சபாபதி என்பவரின் மகன் - ஒடுக்கப்பட்ட வகுப்பு இளைஞர் பரந்தாமன், தான் பணியாற்றி வந்த மகாராட்டிரா மாநிலம் - புனேயிலுள்ள விடுதி அறையில் கடந்த 04.01.2018 அன்று மர்மமான முறையில் இறந்துள்ளார். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த, கந்துவட்டித் தொழில் செய்து வரும் குடும்பத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பு இளம்பெண் சிவானி என்பவரை காதல் திருமணம் செய்ததால் ஏற்பட்ட பிரச்சினையில்தான் அவர் ஆணவக்கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து முழுமையாக விசாரிக்க வேண்டுமெனக் கூறி, சற்று நேரத்திற்கு முன்பு (07.01.2018) இறையூரில், சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்கள் மீது பெண்ணாடம் காவல்துறையினர் கடுமையாகத் தாக்குதல் நடத்தி இளைஞர்களையும் அரசியல் இயக்கப் பொறுப்பாளர்களையும் கைது செய்துள்ளனர்.
தமிழ்த்தேசியப் பேசியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. முருகன், சி.பி.எம். வட்டச்செயலாளர் தோழர் காமராஜ், ஒடுக்கப்பட்டோர் பாதுகாப்பு இயக்கம் திரு. பத்மநாபன், “சே” தோழர்கள் திரு. சத்தியசீலன், நாம் தமிழர் கட்சி தொகுதிச் செயலாளர் வேலாயுதம் உள்ளிட்டோரும், 30க்கும் மேற்பட்ட இளைஞர்களும் தற்போது கைது செய்யப்பட்டு பெண்ணாடம் காவல் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பத்மநாபனும், சிவானியும் கடந்த 2018 ஏப்ரல் மாதம், ஊத்துக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் முறையான வயது ஆவணங்களை அளித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், சிவானிக்கு 18 அகவை முடியவில்லை எனக் கூறி, பரந்தாமன் மீது அவரது உறவினர்கள் 17.04.2018 அன்று மதுரை – சிந்துப்பட்டி காவல் நிலையத்தில் கடத்தல் புகார் அளித்தனர். இதனையடுத்து, பரந்தாமன், அவரது தந்தை சபாபதி மற்றும் நண்பர்களை பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டமான போஸ்கோவில் வழக்குப் பதிவு செய்து 21.04.2018 அன்று மதுரை நடுவண் சிறையில் காவல்துறையினர் அடைத்தனர். காப்பகத்திலிருந்த சிவானி பெற்றோரிடம் செல்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டார்.
இந்நிலையில், இவ்வழக்கு விசாரணை நடைபெற்ற போது சிறையிலிருந்து நீதிமன்றத்தில் நேர்நிற்க வந்த பத்பநாபனை சிந்துப்பட்டி காவல் நிலையக் காவலர்கள் முன்பாகவே, சிவானியின் உறவினர்கள் அடித்து இழுத்துச் சென்றுள்ளனர். அதன்பிறகு, இவ்வழக்கிலிருந்து கடந்த 25.12.2018 அன்று நிபந்தனைப் பிணையில் விடுதலையான பரந்தாமன் சிந்துப்பட்டி காவல் நிலையத்திற்கு தினமும் சென்று கையெழுத்திட்டுள்ளார். அப்போதும், பத்மநாபனுக்கு சிவானியின் உறவினர்கள் கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். “எங்கள் வீட்டுப் பெண்ணைக் காதலித்துவிட்டு, எங்கள் ஊருக்கு வந்துவிட்டு உயிரோடு போக விட்டுவிடுவோமா? 15 நாளில் உன்னை காலி செய்து விடுவோம்” என்று கூறியுள்ளனர்.
கடைசியாக, கடந்த 03.01.2018 அன்று மாலை இவற்றையெல்லாம் தனது தந்தை சபாபதிக்கு கைப்பேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்த பரந்தாமன், சிந்துப்பட்டி காவல் நிலையத்தில் தன் மீது மேலும் வழக்குகள் போடவுள்ளதாகவும் கூறியுள்ளார். தன்னை அவர்கள் வாழ விடமாட்டார்கள் என்றும் பேசியுள்ளார். அதற்கு அடுத்தநாள் (04.01.2018) சபாபதி தன் மகனை தொடர்பு கொண்ட போது, பரந்தாமனின் கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அன்று (04.01.2018) பகல் 1 மணியளவில், தனது மகனின் கைப்பேசியிலிருந்து அழைத்து இந்தியில் பேசிய ஒருவர், தான் புனே காவல் துறையிலிருந்து பேசுவதாகவும், தனது மகன் பரந்தாமன் அங்குள்ள ஒரு விடுதியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, கடந்த 05.01.2018 அன்று, இறையூரில் பரந்தாமனின் உறவினர்களும், பொது மக்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் அதில் பங்கேற்றனர்.
தொடர்வண்டியிலோ, பேருந்திலோ புனேவுக்கு செல்ல இரண்டு நாட்களுக்கு மேல் ஆகும் நிலையில், ஒரே இரவில் பரந்தாமன் புனேவுக்குச் சென்றது எப்படி? காவல் நிலையத்தில் நாள்தோறும் கையெழுத்திட வேண்டிய நிலையில், அவர் திடீரென புனே சென்றது ஏன்? பரந்தாமன் விடுதியில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் நிலையில், அங்கு எடுத்தப் புகைப்படங்களில் அவரது கால் தரையில் உள்ளது எப்படி? என அடுக்கடுக்காகப் பல வினாக்கள் எழுந்துள்ளன.
இவ்வினாக்களை தெளிவுபடுத்த, இவ்வழக்கை நடுவண் குற்றப் புலனாய்வுக் குழுவினர் விசாரிக்க வேண்டும், தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும், உயிரிழந்த பரந்தாமன் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும், பரந்தாமன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்துதான் இறையூரில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து அச்சாலை மறியல் கைவிடப்பட்ட நிலையில், நேற்று (07.01.2018) மாலை, திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் கண்ணன் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, இக்கோரிக்கைகளை நிறைவேற்ற அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்படவில்லை.
இதனையடுத்து, இன்று (07.01.2019) காலை, அரசியல் இயக்கத்தினரும், பொது மக்களும் இறையூரில் சாலை மறியல் போராட்டம் நடத்திய நிலையில், அவர்களை நெய்வேலியிலிருந்து வந்த அதிவிரைவுக் காவல்துறையினர் கடுமையாக அடித்துக் கைது செய்துள்ளனர்.
இளைஞர் பரந்தாமன் கொலையில் உள்ள மர்மங்களைக் களைந்து, அக்குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்க வேண்டிய தமிழ்நாடு அரசு, அவர்களை அடித்து விரட்ட நினைப்பது எவ்வகையில் ஞாயம்? எனவே, தமிழ்நாடு அரசு இவ்வழக்கு குறித்த முழுமையான விசாரணைக்கு ஆணையிட வேண்டும்! இளைஞர் பரந்தாமன் உடலை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து, அவரது பெற்றோர் விரும்பும் மருத்துவக் குழு முன்னிலையில் முழுமையாக உடல் கூராய்வு செய்து உண்மைகளை வெளிக் கொணர வேண்டும், தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Friday, June 1, 2018
சிவகங்கை சாதிவெறிப் படுகொலை வன்கொடுமைத் தடுப்பில் கைது செய்ய வேண்டும்! தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!
சிவகங்கை சாதிவெறிப் படுகொலை வன்கொடுமைத் தடுப்பில் கைது செய்ய வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!
இந்திய – தமிழ்நாடு அரசுகளின் துணையோடு கொண்டு வரப்பட்ட ஆபத்தான திட்டங்களை எதிர்த்து சாதி – மதங்களைக் கடந்து தமிழ்நாட்டு மக்கள் ஒன்று சேர்ந்து போராடிவரும் நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்டுள்ள சாதி ஆதிக்கவாதிகளின் கொடுஞ்செயல்கள், நம்மை அதிர்ச்சி கொள்ள வைக்கின்றன.
சிவகங்கை மாவட்டம் – திருப்பாச்சேத்தி அருகிலுள்ள கச்சநத்தம் கிராமத்தில், கடந்த மே 25-ஆம் நாள், பட்டியல் வகுப்பு மக்கள் கருப்பணசாமி கோயில் திருவிழாவை நடத்தியுள்ளனர். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சந்திரகுமார் என்பவர் வந்தபோது, ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தோர் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்ததாகவும், தங்கள் முன் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் கால் மேல் கால் போட்டு அமர்வதா என சந்திரகுமாரின் மகன்கள் அதைத் தட்டிக் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, சந்திரகுமார் மீது திருப்பாச்சேத்தி காவல் நிலையத்தில் கச்சநத்தம் ஆறுமுகம், சண்முகநாதன் உள்ளிட்டோர் புகார் அளித்தனர். சந்திரகுமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஏற்கெனவே, சந்திரகுமார் மகன் சுமன் கஞ்சா விற்பதாக குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், இந்த புதிய வழக்கு அவர்களை மேலும் ஆத்திரப்படுத்தலாம் என உணர்ந்த கச்சநத்தம் ஒடுக்கப்பட்ட மக்கள் பழையனூர் காவல் நிலையத்தில் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், காவல் துறையோ மெத்தனமாக இருந்துள்ளது.
இந்நிலையில், கச்சநத்தம் மக்கள் அச்சப்பட்டதைப் போலவே சந்திரகுமாரின் மகன்கள் சுமன், அருண் ஆகியோர் ஆவரங்காட்டைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோரை ஒன்றுதிரட்டிக் கொண்டு, கடந்த 27.05.2018 அன்றிரவு, ஒடுக்கப்பட்ட மக்கள் குடியிருப்புக்குள் கத்தி – அரிவாள் உள்ளிட்ட கொடூரக் கருவிகளுடன் நுழைந்தனர்.
இக்கொடூர நிகழ்வில் அரிவாளால் வெட்டப்பட்டு எட்டு பேர் அங்கேயே படுகாயமடைந்தனர். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட வழியில் ஆறுமுகம் (அகவை 65), மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அறிவழகன் மகன் சண்முகநாதன் (அகவை 31), சந்திரசேகர் (அகவை 35) ஆகியோர் உயிரிழந்தனர். கண்ணில் பட்ட பொருட்களையெல்லாம் அடித்து நொறுக்கியுள்ளனர். தாக்குவதற்கு முன்பாக அவர்கள் அப்பகுதியின் மின் இணைப்பையும் துண்டித்துள்ளனர்.
சந்திரகுமார் மீது புகார் அளித்தோர் அவ்விடத்தில் இல்லாத நிலையில்கூட, கண்மூடித்தனமாக எல்லோர் மீதும் சாதி ஆதிக்க வெறியுடன் இத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ள செயல், தமிழ்ச்சமூகத்தின் இளையோரில் ஒரு பிரிவினரிடம் எந்தளவிற்கு சாதிய நச்சு விதைக்கப்பட்டுள்ளது என்பதையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
மறுநாள் (28.05.2018) மதுரை குற்றவியல் நீதிமன்றம் 4-இல், கச்சநத்தத்தைச் சேர்ந்த சுமன், அருண், ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த இராசேசுவரன், அக்னிராஜ், அஜய்தேவன் ஆகிய ஐந்து பேர் இவ்வழக்கில் சரணடைந்தபோது, இது திட்டமிடப்பட்ட தாக்குதல் என வெளிப்பட்டது.
இப்பகுதியில் இவ்விரு சமூகங்களிடையே கடந்த மூன்றாண்டுகளாகவே மோதல்கள் நடந்து வந்துள்ளன. இந்நிலையில், உரிய நேரத்தில் செயல்பட்டு – கொலைகளைத் தடுக்கத் தவறிய காவல்துறையினர் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். கச்சநத்தம் தாக்குதலில் ஈடுபட்டோர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சரணடைந்துள்ள சுமன் மீது ஏற்கெனவே பல கொலை வழக்குகள் உள்ள நிலையில், அவருக்கும் பிறருக்கும் பிணை வழங்காமல் இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றி விசாரிக்க வேண்டும். கொலையுண்டோர் குடும்பங்களுக்கு 25 இலட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.
மாவட்ட நிர்வாகம் குற்றவாளிகள் மீது பக்கச்சாய்வு இல்லாமல் நடவடிக்கை எடுப்பதோடு, இரு தரப்புக்குமிடையே பதட்டத்தைத் தணித்து, இணக்கச் சூழலை ஏற்படுத்த உடனடியாக செயல்பட வேண்டும்.
ஒட்டுமொத்தத் தமிழ்நாடே ஓரணியில் நின்று தற்காப்புப் போராட்டம் நடத்த வேண்டிய சூழலில், இந்தத் தமிழின ஓர்மையை வீழ்த்த ஆரிய ஆதிக்கவாதிகள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, அவர்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்பது ஒரு பக்கம். இன்னொருபக்கம், சாதிவெறி நஞ்சை நம் மனத்திலிருந்து அப்புறப்படுத்தி, மனத்தூய்மை பெற வேண்டும். தமிழர்கள் நாம் ஒரு தாய் மக்கள் என்ற உறவுக்கு இருதரப்பு இளையோரும் முன் முயற்சி மேற்கொள்ள வேண்டும். அதேவேளை சாதிவெறிக் கொலையில் ஈடுபட்டோர், அதற்குத் தூண்டியோர், துணை நின்றோர் அனைவரையும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com
Thursday, January 4, 2018
பட்டுக்கோட்டையில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்புகளை சேதப்படுத்திய அனைவரையும் உடனே கைது செய்ய வேண்டும்! அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்! தோழர் நா. வைகறை கோரிக்கை!
பட்டுக்கோட்டையில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்புகளை சேதப்படுத்திய அனைவரையும் உடனே கைது செய்ய வேண்டும்! அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை கோரிக்கை!
பட்டுக்கோட்டை அருகில் ஆம்பலாப்பட்டு தெற்கு குடிக்காடு பகுதியில், ஒடுக்கப்பட்ட மக்கள் வசித்து வரும் வீதியில், 60 வீடுகள் உள்ளன. கடந்த 2017 திசம்பர் 31 இரவு ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் வகையில், பகுதி இளைஞர்கள் ஒலிபெருக்கி வைத்து கொண்டாடியுள்ளனர்.
தெற்கு குடிகாடு பகுதியிலிருந்து சற்றொப்ப மூன்று கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள வடக்கு ஆம்பலாப்பட்டு பகுதியில் வசித்து வரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு இளைஞர்கள் சிலர், ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்கு இரு சக்கர ஊர்திகளில் வந்துள்ளனர். அங்கு கட்டப்பட்டிருந்த பலூன்களை உடைத்துவிட்டு, சாதிப் பெயரை சொல்லி “உங்களுக்கு ஏண்டா புத்தாண்டு?” என்று, அங்கிருந்த தாழ்த்தப்பட்ட வகுப்பு இளைஞர்களுடன் வாக்குவாதம் செய்துள்ளனர். கைகலப்பும் ஏற்பட்டது.
உடனே, அங்கிருந்து சென்ற வடக்கு ஆம்பலாப்பட்டு இளைஞர்கள் சிறிது நேரத்தில் ஊர்திகளில் நூற்றுக்கணக்கானவர்கள் கையில் இரும்புக் குழாய், உருட்டுக் கட்டைகள் எடுத்துக் கொண்டு, தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் தெருவுக்கு வந்துள்ளனர். அவர்கள் தெரு விளக்கின் சுவிட்ச் பலகையை அடித்து நொறுக்கியதால், தெருவிலே இருட்டாகிவிட்டது. தெருவின், இரண்டு புறமும் உள்ள சற்றொப்ப 30 வீடுகளில் கண்ணாடி சன்னல்களை, ஒடுகளை, தொலைக்காட்சிப் பெட்டிகளை, நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர ஊர்திகள் முதலியவற்றை வெறி கொண்டு தாக்கியுள்ளனர்.
உயிருக்கு பயந்து கையில் குழந்தைகளுடன் இருட்டில் பெண்கள் ஓடி, பின்பக்கம் தோப்பில் ஒளிந்துள்ளனர். பூட்டிய வீடுகளின் முன்பு நின்று கொண்டு வந்தவர்கள் கூறிய ஆபாச வார்த்தைகள், கொலை வெறித் தாக்குதல்கள் – ஒடுக்கப்பட்ட மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
புத்தாண்டு நாளுக்காக கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கி, நாற்காலிகள் ஆகியவற்றை அடித்து நொறுக்கியுள்ளனர். சற்றொப்ப 15 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமாகியுள்ளன.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், தஞ்சை மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தோழர் மா. இராமதாசு ஆகிய நாங்கள் குழுவாகச் சென்று, இன்று (04.01.2017) காலை, ஒடுக்கப்பட்ட மக்கள் வீடுகளில் ஏற்பட்ட சேதங்களைப் பார்வையிட்டோம். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினோம்.
பாதிக்கப்பட்ட மக்களிடையே, குறிப்பாக பெண்களிடத்தில் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்க வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் முதன்மையான பணி!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், தஞ்சை மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தோழர் மா. இராமதாசு ஆகிய நாங்கள் குழுவாகச் சென்று, இன்று (04.01.2017) காலை, ஒடுக்கப்பட்ட மக்கள் வீடுகளில் ஏற்பட்ட சேதங்களைப் பார்வையிட்டோம். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினோம்.
பாதிக்கப்பட்ட மக்களிடையே, குறிப்பாக பெண்களிடத்தில் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்க வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் முதன்மையான பணி!
எனவே, வீடுகளைத் தாக்கிய அனைவர் மீதும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, உடனடியாக அவர்களைக் கைது செய்ய வேண்டும்.
தாழ்த்தப்பட்ட வகுப்பு இளைஞர்கள் மீது எந்தவித பொய் வழக்கும் போடக்கூடாது. அனைத்து சாதி மக்களையும் இணக்கப்படுத்தக் கூடிய நடவடிக்கைகளை, தஞ்சை மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ள வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இன்னணம்,
நா. வைகறை
தஞ்சை மாவட்டச் செயலாளர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
நா. வைகறை
தஞ்சை மாவட்டச் செயலாளர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com
Sunday, September 17, 2017
தமிழ்த்தேசியர்கள் பெரியாரை விமர்சித்ததுதான் சாதிப் படுகொலைகளுக்குக் காரணம் என்பது உண்மையா? வழக்கறிஞர் அருள்மொழிக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கேள்வி!
தமிழ்த்தேசியர்கள் பெரியாரை விமர்சித்ததுதான் சாதிப் படுகொலைகளுக்குக் காரணம் என்பது உண்மையா? வழக்கறிஞர் அருள்மொழிக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கேள்வி!
அண்மையில் மாணவி அனிதாவுக்கு இரங்கல் தெரிவித்த கூட்டத்தில் இயக்குநர் அமீர், வடநாட்டு ஊடகங்கள் அனிதாவை “தலித்” என்று உள்நோக்கத்தோடு பிரித்துப் பேசுகின்றன, அவர் தமிழ்ப்பெண், அவருடைய மரணம் – தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட பேரிழப்பு என்று குறிப்பிட்டார். அப்போது கூட்டத்திலிருந்து பாய்ந்து மேடைக்கு வந்த இயக்குநர் ரஞ்சித், அமீரிடமிருந்து ஒலிவாங்கியைப் பிடுங்கிக் கொண்டு, “தமிழ், தமிழன் என்று சொல்லாதீர்கள், தமிழன் என்று சொல்லிக் கொண்டு சாதிக் கொடுமைகள் நடக்கின்றன, நாங்கள் தலித்துகள்” என்று ஆத்திரத்தோடு பேசினார். திரும்பத் திரும்ப மைக்கைப் பிடுங்கிக் கொண்டு, அமீரைப் பேசவிடாமல் தடுத்துவிட்டார். இதற்கு எதிர்வினையாக, தமிழ்த்தேசியர்கள் இயக்குநர் ரஞ்சித் கருத்துக்கு மறுப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்து ஆங்கில நாளேடு இதுபற்றி இன்று (17.09.2017), ஒரு செய்தித் தொகுப்பு வெளியிட்டிருக்கிறது. அதில், கருத்துக் கூறிய திராவிடர் கழகப் பொறுப்பாளர்களில் ஒருவரான வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள், “மேல்சாதி பெண்களை திருமணம் செய்து கொண்டதற்காக தலித் இளைஞர்கள் கொல்லப்படுவது, இன்றைக்கு நடப்பதைப்போல் 1990களில் நடக்கவில்லை. இப்பொழுது படுகொலைகள் நடப்பதற்கானக் காரணம், தலித்தியர்களும், தமிழ்த்தேசியர்களும் பெரியாரை விமர்சித்ததுதான்! இதன் விளைவுதான் தருமபுரி நாயக்கன்கொட்டாய் தீ வைப்புச் சம்பவம் (2012)” என்று கூறியுள்ளார்.
திராவிடர் கழகத்தில் பன்முகப் பார்வையும், பண்பான விவாதமும் செய்யக்கூடியவர் வழக்கறிஞர் அருள்மொழி. ஆனால், மேற்கண்ட அவரது விமர்சனம் தன்நோக்குவாதம் (Subjectivism) சார்ந்ததாக உள்ளது. அவருக்கு சில கேள்விகள்!
1968இல் (25.12.1968), அண்ணா முதல்வராக இருக்கும்போது - பெரியார் தெம்பாகப் பரப்புரை செய்து கொண்டிருந்த காலத்தில், கீழவெண்மணியில் குழந்தைகள் உட்பட ஒடுக்கப்பட்ட வகுப்பினர் 44 பேர் – ஒரு குடிசையில் வைத்து, மேல்சாதியினரால் எரித்துக் கொல்லப்பட்டார்களே!
திராவிட ஆட்சியில் - பெரியாரின் பகுத்தறிவுப் பரப்புரை நடந்த காலத்தில் இது நடந்தது ஏன்? வெண்மணிப் படுகொலைக்கு உரியவாறு உடனடியாக ஒரு கண்டன அறிக்கைகூட பெரியார் அப்போது தரவில்லை என்பதும், அந்த கொடுமை நடந்த இடத்தை பெரியார் போய் பார்த்து – மக்களுக்கு ஆறுதல் கூறவில்லை என்பதும் கூடுதல் செய்தி!
அதேகாலத்தில் 1968 நவம்பர் 17 அன்று, நாகப்பட்டினம் சிக்கல் கடைத்தெருவில், ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பக்கிரிசாமி என்ற கம்யூனிஸ்ட் தோழர் பட்டப்பகலில் ஆதிக்கசக்திகளால் வெட்டிக் கொல்லப்பட்டார். அதுபோன்று ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குக் குரல் கொடுத்த பலர் அக்காலத்திலும் – அதாவது பெரியார் வாழ்ந்த காலத்திலும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
பெரியார் ஆதரித்த காமராசர் ஆட்சி நடந்த காலத்தில், 1950களில் இராமநாதபுரம் மாவட்டத்தில் தீண்டாமைக் கொடுமை தலைவிரித்தாடியபோது, அதை எதிர்த்த இமானுவேல் சேகரனார் 11.09.1957 அன்று கொலை செய்யப்பட்டதும், பெரும் கலவரம் மூண்டதும் – ஏன் நடந்தது?
பெரியார் காங்கிரசு ஆட்சியை ஆதரித்துக் கொண்டிருந்த போதும், பிறகு தி.மு.க. ஆட்சியை ஆதரித்துக் கொண்டிருந்தபோதும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தேநீர் கடைகளில் தனிக்குவளையில் தேநீர் கொடுத்த முறை – தமிழ்நாடெங்கும் பரவலாக - மிக அதிகமாக இருந்தது. அண்மைக்காலமாக ஒடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தினாலும், பிற்படுத்தப்பட்ட மற்றும் முன்னேறிய வகுப்பிலுள்ள சனநாயக ஆற்றல்களின் பரப்புரையாலும் போராட்டத்தாலும் இரட்டைக் குவளை முறை பெருமளவு குறைந்துவிட்டது. இதுபற்றி வழக்கறிஞர் அருள்மொழி என்ன விடை சொல்கிறார்?
அண்மைக்காலங்களில் தலித் ஆண்கள் மேல்சாதிப் பெண்களை திருமணம் செய்து கொண்டதால், சில இடங்களில் அந்த ஆண்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இது பெரும் கொடுமை! தமிழினத்திற்கே அவமானம்! ஆனால், வழக்கறிஞர் அருள்மொழி கூறுகின்ற 1990கள் – அல்லது அதற்கு முந்தைய காலத்தைவிட, ஒடுக்கப்பட்ட வகுப்பு ஆண்கள் மேல்சாதிப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு இல்லறம் நடத்தக்கூடிய நிகழ்வுகள் இப்பொழுது அதிகரித்துள்ளன என்ற உண்மையை மறுக்கிறாரா?
1980களுக்குப் பிறகு, தலித்திய – தமிழ்த்தேசியப் பரப்புரைகள் இல்லாத காலத்தில், தி.மு.க.வினர் தங்களுடைய குடும்பத் திருமண அழைப்புகளில் சாதிப் பட்டம் போட்டுக் கொள்ளத் தொடங்கினார்கள். சாதிச் சங்கங்களில் பொறுப்பேற்றார்கள். இதற்கெல்லாம் யார் காரணம்?
திராவிட முன்னேற்றக் கழகம், தனது கட்சியின் ஒன்றியச் செயலாளர் – மாவட்டச் செயலாளர் போன்ற பொறுப்புகளையும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் வாய்ப்புகளையும் சாதி பார்த்துதான் ஒவ்வொரு பகுதியிலும் வழங்கியது. இப்போக்கு 1970களிலிருந்து மிகவும் தீவிரமடைந்தது. பொதுத் தொகுதிகளில் ஒடுக்கப்பட்ட வகுப்பினரை வேட்பாளராக தி.மு.க. நிறுத்துவதில்லை. ஆசிரியர் வீரமணியால் “சமூகநீதி காத்த வீராங்கனை” பட்டம் வழங்கிப் பாராட்டப்பட்ட செயலலிதாவின் அ.தி.மு.க.வும் இதையேதான் செய்தது. திராவிடக் கட்சிகளின் இந்த சாதியப் போக்கு தமிழ்த்தேசியம் தோன்றி பெரியாரை விமர்சிப்பதற்கு முன்பாகவே ஏற்பட்டுவிட்டது. இதற்கு யார் காரணம்?
வழக்கறிஞர் அருள்மொழி, தலித்தியர்களும் தமிழ்த்தேசியர்களும் பெரியாரை விமர்சித்ததால்தான் சாதிக் கொடுமைகள் அதிகரித்துவிட்டன என்று கூறுவது, பெரியாரிய சிந்தனையை ஏற்றுக் கொண்ட திராவிடக் கட்சிகளைவிட தலித்திய அமைப்புகளும் தமிழ்த்தேசிய அமைப்புகளும் சமூகச் செல்வாக்கோடு பெரும் அமைப்புகளாக வளர்ந்துள்ளனவா? அல்லது வழக்கறிஞர் கூறுவதுபோல், தலித்திய – தமிழ்த்தேசிய அமைப்புகள் பெரியாருக்கு எதிராக செய்யும் விமர்சனத்தை பின்னுக்குத் தள்ளக்கூடிய ஆற்றல் திராவிட இயக்கங்களுக்கு இல்லையா என்ற கேள்வியை எழுப்புகிறது.
சாதிய சங்கங்களும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான வன்கொடுமைகளும் அதிகரித்ததற்கான காரணங்கள் என்று நாங்கள் பின் வருபவற்றை கருதுகிறோம்.
1960களில் தி.மு.க. குடும்பத்தினரின் திருமண அழைப்புகளில் மணமக்கள் பெற்றோர் பெயர்களில் பெரும்பாலும் சாதிப்பட்டம் இருக்காது. இப்பொழுது, தி.மு.க.வினர் சிறுவர்களாக உள்ள பேரக் குழந்தைகளின் பெயர்களில் கூட சாதிப்பட்டம் போட்டு திருமண அழைப்பிதழ்கள் அச்சடிக்கிறார்கள். இதுபோல் அவர்கள் எல்லா நிலைகளிலும் சாதியை முன்னிறுத்தும் போக்கு வளர்ந்திருக்கிறது.
அதைப்போலவே, திருமண அழைப்பிதழ்களில் கம்யூனிஸ்ட்டு கட்சியினரும் சாதி போடும் பழக்கம் இப்போது உருவாகியிருக்கிறது. இதற்கான காரணங்கள் :
1. 1960களில் தி.மு.க, இன விடுதலை – நாட்டு விடுதலை என்ற இலட்சியத்தை முன்வைத்து இயங்கியது. நாட்டு விடுதலையைக் கைவிட்டு, ஆட்சிக்கு வந்த பின் அதிகாரம் – ஊழல் என்ற நிலையில், தி.மு.க. சீரழிந்தது. இலட்சியமில்லாத அமைப்பின் பொறுப்பிலும், உறுப்பிலும் இருப்பவர்களிடையே சமூகச் சீரழிவுகள் தோன்றுவதும், அது தொற்றுநோய் போல் சமூகம் முழுவதும் பரவுவதும் இயல்பே!
அதைப்போல், இரசியப்புரட்சி – சீனப்புரட்சி போல் இங்கேயும் புரட்சி நடக்கப் போகிறது என்ற இலட்சியத்தை முன்வைத்து இயங்கிய கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள், அந்த இலட்சியத்தைக் கைவிட்டபிறகு, அதற்கு மாற்றாக வேறொரு புதிய இலட்சியத்தை முன்வைக்காத நிலையில் - அதன் உறுப்பினர்களிடையே சீரழிவு ஏற்பட்டது.
திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை, எல்லா ஆளும் கட்சியையும் ஆதரித்து வந்திருக்கிறது. அரசியல் முடிவுகளில் மிகவும் பிற்போக்காக, சீரழிவு சக்திகளுடன் கூட்டு சேர்ந்து கொண்டு, தனிப்பட்ட பரப்புரையில் மட்டும் கடவுள் மறுப்பு – பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு என்று பேசுவதென்பது ஒரு தன் முரண்பாடு! அந்த தன் முரண்பாட்டுப் பரப்புரை, பெரிய பயன் தராது.
அத்துடன், பெரியார் காலத்திலும் சரி, அவருக்குப் பிந்தைய காலத்திலும் சரி, பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பையே முதன்மைப்படுத்தி – பார்ப்பனரல்லாதோரிடம் உள்ள சாதி ஒடுக்குமுறையை – பார்ப்பன எதிர்ப்பு அளவுக்கு இல்லாவிட்டாலும் உரிய அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து திராவிடர் கழகம் பரப்புரை செய்யவில்லை!
இவையும், இன்னும் சிலவும் தமிழ்நாட்டுக்குள் உள்ள காரணங்கள்!
2. இதற்கு மேல், இந்தியத்தேசியம் என்பது ஆரியவாதம் மற்றும் பார்ப்பனிய வாதம்தான்! காங்கிரசு ஆட்சியிலும் பா.ச.க. ஆட்சியிலும் இந்த ஆரியப் பார்ப்பனியவாதம்தான், அரசு அதிகாரத்தோடு செயல்படுகிறது. மீண்டும் மீண்டும் வெவ்வேறு வழிகளில் வர்ணசாதி வலியுறுத்தப்படுகின்றன!
இந்த இந்திய ஆரியக் கட்டமைப்புக்குள் இருந்து வெளியேறுவதற்கு, திராவிடர் கழகம் எதுவும் செய்யவில்லை! பெரியார் காலத்திலும், அதற்குப் பிறகும் இந்தியத்தேசியவாதிகளை தொடர்ந்து ஆதரித்தே வந்திருக்கிறது. இன்றும், காங்கிரசோடு கூட்டணி போல் தி.க. செயல்படுகிறது.
வர்ணசாதிப் பிளவுகளிலும், அவை தொடர்வதிலும், சாதி ஒடுக்குமுறைகளிலும் இந்தியத்தேசிய ஆளும் வர்க்க சக்திகள் மூலகாரணமாக விளங்குகின்றன. இவற்றின்பால், திராவிடர் கழகத்தின் அணுகுமுறை என்ன?
தமிழ்த்தேசியம் – இந்தியத்தேசியத்தை மறுக்கிறது. தமிழ்த்தேசியம் முன்வைக்கும் தமிழர் அறம், “மனிதர்கள் அனைவரும் சமம், தமிழர்கள் அனைவரும் சமம்” என்கிறது. சாதி மதம் கடந்த சமத்துவம் மட்டுமல்ல, ஆண் – பெண் சமத்துவமும் தமிழர் அறத்தில் உள்ளது என்பதை தமிழ்த்தேசியவாதிகளாகிய நாங்கள் பரப்புரை செய்கிறோம். மக்களிடம் கொண்டு சேர்க்கிறோம்.
ஒடுக்கப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - முன்னேறிய வகுப்புகளின் தமிழர்கள் அனைவரும் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாக வரலாற்றில் வாழ்ந்து வருகிறோம். நம் முன்னோர்கள் அனைவரும் ஓர் இனத்தின் மூலவர்கள்! தமிழ்ச் சாதி அனைத்திற்கும் – தாய்மொழி தமிழ்! திருவள்ளுவப்பேராசான், கணியன் பூங்குன்றன், கரிகால்சோழன், சேரன் செங்குட்டுவன், பாண்டியன் நெடுஞ்செழியன் போன்றோர், இன்று ஒடுக்கப்பட்ட மக்களாக உள்ள தமிழர்கள் உள்ளிட்ட அனைத்துத் தமிழ் மக்களுக்கும் பொதுவானவர்கள்; நம்முடைய மூலவர்கள்!
ஆரியத்தின் வர்ணாசிரமம் கற்பித்த – பிறப்பால் உயர்வு தாழ்வு என்ற சாதிக் கொடுமைகள் பிற்காலத்தில் புகுந்து, நம்மைச் சீரழித்துவிட்டன. நம் இனம் தோன்றி வளர்ந்திருந்த அந்த காலத்து சமத்துவத்தை மீட்போம் என்ற இனவழிப்பட்ட இயற்கையான உறவு உணர்ச்சியை நாங்கள் தமிழர்களிடம் எடுத்துக் கூறி, ஒற்றுமைக்கான எல்லா முயற்சிகளையும் செய்து வருகிறோம். அதேவேளையில், சாதி ஒடுக்குமுறைக்கும் தீண்டாமைக்கும் எதிராக பரப்புரை மட்டுமின்றி, அங்கங்கே போராட்டங்களும் செய்து வருகிறோம்.
தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றும், தமிழைப் படிக்காதே ஆங்கிலத்தையே படி என்றும் கூறியதோடு, தமிழினம் என்று சொல்வது குறைபாடுடையது – திராவிட இனம் என்பதே சரி என்று இல்லாத திராவிட இனத்தை – தமிழ்நாட்டுத் தமிழர்கள் மீது திணித்தது போன்ற பெரியாரின் பிழைகளை தமிழ்த்தேசியவாதிகள் விமர்சிப்பது குற்றமா? பெரியாரின் கருத்துகளைத்தான் பெரும்பாலான தமிழ்த்தேசியவாதிகள் விமர்சிக்கின்றனர். அவர் தமிழர் அல்லாதவர் என்பதை முதன்மைப்படுத்துவதில்லை! தமிழ் இனத்தில் பிறக்கவில்லை என்பதை அவருக்கான தகுதிக் குறைவாக தமிழ்த்தேசியப் பேரியக்கம் கருதவில்லை.
எங்களுடைய தமிழ்த்தேசியம் வளர்ச்சி பெற்று, முழு வீச்சில் மக்களிடையே செல்வாக்கு பெறும்போது, சாதி அடையாளங்கள் பின்னுக்குத் தள்ளப்படும். தமிழர்களிடையே ஒற்றுமை பெருமளவு ஏற்படும் என்பதை உறுதியாக நம்பலாம்!
இதற்கான முன்னோட்டம்தான், ஜல்லிக்கட்டு உரிமைப் போராட்டத்தில் சாதி கடந்து குமரி முனை முதல் கும்மிடிப்பூண்டி வரை தமிழர் என்ற உணர்ச்சியில் ஒன்று திரண்டது. இப்பொழுது, அனிதா உயிரிழப்புக்கு தமிழ்நாடு முழுக்க இரங்கல் தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதும், நீட் தேர்வை எதிர்த்துப் போராடுவதும் தமிழ் இன உணர்ச்சியோடுதான் நடைபெறுகிறது என்பதை கவனிக்க வேண்டும்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: tamizhthesiyam.com
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: tamizhthesiyam.com
Thursday, September 14, 2017
இயக்குநர் ரஞ்சித்துக்கு.. தோழர் பெ. மணியரசன்.
இயக்குநர் ரஞ்சித்துக்கு..பெ. மணியரசன், தலைவர் - தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
''எங்களை இந்தியன் என்று சொல்லாதீர்கள் 'தலித்' என்று சொல்லுங்கள் என காங்கிரஸாரிடமோ அல்லது பி.ஜே.பி-யினரிடமோ ரஞ்சித் கேட்பாரா?
'திராவிடன்' என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, வெண்மணிப்படுகொலை நடக்கிறது, தெருவுக்கு நடுவே சுவர் கட்டப்படுகிறது... அப்போதெல்லாம், 'எங்களைப் பார்த்து திராவிடன் என்று சொல்லாதீர்கள்' என்று தி.மு.க-வினரைப் பார்த்துக் கேட்டிருக்கிறாரா?
தமிழன் என்றால் மட்டும் ஏன் எதிர்க்கிறார்?
ரஞ்சித்தினுடைய தாய்மொழியும் என்னுடைய தாய்மொழியும் தமிழ்தான்! சாதி என்பது தமிழர்களிடையே பிற்காலத்தில் வந்த ஒரு சீர்குலைவு. ஆரிய உபநிடதங்களும் வேதங்களும்தான் இந்த வர்ணாசிரம பாகுபாபாடுகளுக்கெல்லாம் அடிப்படைக் காரணம். பாமர மக்களை ஏமாற்றுவதற்காகத்தான் அவர்கள் இப்போது 'இந்து' என்ற ஒற்றைச் சொல்லில் ஒருசேரச் சொல்லி ஏமாற்றிவருகிறார்கள். அது இந்துத்துவா அல்ல... ஆரியத்துவா என்று நாங்கள்தான் மக்களிடையே எடுத்துச் சொல்லிவருகிறோம்.
பெரியார் பெயரைச் சொல்லி தமிழ்நாட்டில் கட்சி வளர்த்தவர்கள்தான் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர், வட்ட செயலாளர் என்று எல்லா பதவிகளையும் சாதி பார்த்தே கொடுக்கிறார்கள்.
நாமெல்லாம் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள்தான். உனக்கும் எனக்கும் மூல பேராசான் திருவள்ளுவர்தான். நமது தாய் மண் தமிழகம் என்பதையெல்லாம் நாங்கள்தான் எடுத்துச்சொல்லி வருகிறோம். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று நாமெல்லோரும் ஒன்றாக இருந்ததற்கான சான்றுகள் தமிழ் இலக்கியத்தில் இருக்கின்றன.
மனதில் அழுக்கில்லாமல் இருத்தல், மனிதர்கள் அனைவரும் சமம், தமிழர்கள் அனைவரும் சமம் என்ற மூன்று தமிழர் அறத்தைத்தான் நாங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மனிதர்கள் அனைவரும் சமம் என்று சொல்வதில், ஆண் - பெண்ணும் சமம் என்ற அர்த்தம் உள்ளடங்கியிருக்கிறது. அதனால்தான் சங்க இலக்கியத்திலேயே தலைவன் - தலைவி என்று வர்ணித்தார்கள். குடும்ப நலத்தைக்கூட 'இல்லறம்' என்று அறத்தோடு சேர்த்து வலியுறுத்திய இலக்கியம் தமிழைத் தவிர வேறு உலக மொழிகள் எவற்றிலாவது உண்டா?
ஆக, இப்படியெல்லாம் சமமாக உரிமையோடு வாழ்ந்தவர்களின் வழித்தோன்றல்கள்தான் நாம் எல்லோரும். அந்த சமநிலையை மறுபடியும் மீட்டெடுக்கவேண்டுமானால், இடையில் ஏற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவர் என்ற வேறுபாட்டையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு நாமெல்லோரும் "தமிழராய்" ஒன்றுபட வேண்டியது அவசியம் என்பதைத்தான் நாங்கள் தெளிவாக வலியுறுத்திவருகிறோம். எத்தனை சாதிக் கிளைகளாக இன்று நாம் பிளவுப்பட்டுக் கிடந்தாலும் அடிமரத்து வேர் என்பது நமக்கு தமிழ்தான். இதுதான் நம்மை உளவியல் ரீதியாக ஒன்றிணைக்கும்.
தொழிற்சாலைகளை எல்லாம் அரசுடைமையாக்கிவிட்டால், முதலாளித்துவத்தை ஒழித்துவிடலாம். நிலத்தையெல்லாம் கையகப்படுத்தி கூட்டுப் பண்ணைகளை உருவாக்கிவிட்டால், நிலப் பிரபுத்துவத்தை ஒழித்துவிடலாம்.
ஆனால், "எதை எடுத்து சாதியை ஒழிப்பீர்கள்?"
அதற்கு மனதளவில் அல்லவா மெள்ள மெள்ள மாற்றம் வரவேண்டும்; வாழ்வுரிமையில் சமத்துவம் வரவேண்டும். இப்படி ஒவ்வொன்றாக உதிர்ந்துபோகக்கூடியதுதான் சாதி என்றக் கட்டமைப்பு. மற்றபடி உடனடியாக, நம்மிடையே இருக்கும் சாதி அழுக்கை ஒரே நாளில், தேதி குறித்து களைந்துவிட முடியாது. எனவே, சாதி ஒழிப்புக்கான பண்பாட்டு மாற்றங்கள், போராட்டங்களை எங்களது தமிழ்த் தேசியம்தான் செய்துகொண்டிருக்கிறது'' என்றார் உறுதியான குரலில்.
பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: tamizhthesiyam.com
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: tamizhthesiyam.com
Subscribe to:
Posts (Atom)



















