உடனடிச்செய்திகள்

Friday, October 31, 2014

அப்பாவித் தமிழக மீனவர்களைத் தூக்கிலிடத் துடிக்கும் சிங்கள இனவெறி அரசின் சென்னைத் தூதரகத்தை மூடவேண்டும் - தோழர் பெ.மணியரசன் கோரிக்கை!



அப்பாவித் தமிழக மீனவர்களைத் தூக்கிலிடத் துடிக்கும்
சிங்கள இனவெறி அரசின் சென்னைத் தூதரகத்தை மூடவேண்டும்!

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர்

தோழர் பெ.மணியரசன் கோரிக்கை!

“அப்பாவித் தமிழக மீனவர்களைத் தூக்கிலிடத் துடிக்கும் சிங்கள இனவெறி அரசின் சென்னைத் தூதரகத்தை மூடவேண்டும்” என தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 


தமிழகத்திற்குரிய கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தங்கச்சி மடம் மீனவர்களான எமர்சன், வில்சன், அகஸ்டன், லாங்லெட், பிரசாந்த் ஆகிய ஐந்து பேரையும் 2011ஆம் ஆண்டு சிங்களக் கடற்படையினர் சட்டவிரோதமாக கடத்திக் கொண்டு போய் அந்த ஐந்து தமிழர் மீது போதைப் பொருள் கடத்தியதாக பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்து வைத்திருந்தனர். இப்பொழுது அவர்களது உயர் நீதிமன்றம் இந்த ஐந்து பேருக்கும் தூக்கு தண்டனை விதித்திருக்கிறது.

சிங்கள இனவெறி அரசு ஈழத்தமிழர்களை மட்டுமின்றி தமிழகத் தமிழர்களையும் இனப்பகையோடுதான் பார்க்கிறது. சிங்கள அரசின் தமிழின அழிப்பு என்பது ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் பொதுவானது என்பதையே தமிழக மீனவர்களை இதுவரை சுட்டும் அடித்தும் கொன்ற நிகழ்வுகளும் இப்போது தூக்கிலிட்டுக் கொல்ல முயலும் நடவடிக்கையும் உறுதி செய்கின்றன.

தமிழினத்தை அழித்ததற்காக இராஜபட்சேயை இந்திய அரசு வரவழைத்து பாராட்டியது. அண்மையில் சிங்கள கப்பற்படைத் தளபதியை தில்லிக்கு வரவழைத்து படை அணிவகுப்பு மரியாதை செய்து பாராட்டியது தொடர்ந்து சிங்கள படையினருக்கு இந்தியா பயிற்சி தந்து வருகிறது. இராஜபட்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென்று பா.ச.க.வின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி கோரிக்கை வைத்துள்ளார். இந்திய அரசின் இப்படிப்பட்ட தமிழினப்பகை நடவடிக்கைகளால் ஊக்கம் பெற்ற சிங்கள இனவெறி அரசு இன வெறிக்கு பலியாகியுள்ள இலங்கை நீதித்துறை மூலம் ஐந்து தமிழகத் தமிழர்களை தூக்கிலிடத் துடிக்கிறது.

இந்திய அரசு ஏழரைக் கோடி தமிழர்கள் இந்தியாவின் குடிமக்கள் என்று கருதினால் இலங்கையோடு உள்ள தூதரக உறவை முறிக்க வேண்டும். இந்திய அரசு அவ்வாறு செய்யவில்லையெனில் தமிழ் மக்கள் அறச்சீற்றம் கொண்டு எழுச்சிப் பெற்று சென்னையில் உள்ள சிங்களத் தூதரகத்தை மூடவேண்டும்.

இவ்வாறு தோழர் பெ.மணியரசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Saturday, October 18, 2014

வெளி மாநிலத்தவர் கர்நாடகா, அரியானாவில் தாக்கப்பட்டது போல் தொடராமல் தடுக்க மாற்றுத் திட்டங்களை தமிழ்த் தேசியப் பேரியக்கம் முன்வைக்கிறது!


“வெளி மாநிலத்தவர் கர்நாடகா, அரியானாவில் தாக்கப்பட்டது போல் தொடராமல் தடுக்க மாற்றுத் திட்டங்களை தமிழ்த் தேசியப் பேரியக்கம் முன்வைக்கிறது!”

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை!

அரியானா மாநிலம் சிக்கந்தப்பூரில் நாகாலாந்தைச் சேர்ந்த இரு இளைஞர்களை, அரியானாவைச் சேர்ந்த 10 – 15 பேர், நேற்றைக்கு முதல் நாள் நள்ளிரவு 1 மணி அளவில், கடுமையாகத் தாக்கி இருக்கிறார்கள். இனிமேல் அரியானாவுக்கு வேலைக்கு வரக்கூடாது, உடனடியாக அரியானாவைவிட்டு ஓடிப் போய் விடுங்கள் என்று சொல்லி, அந்த இருவரையும் ஒரு வீட்டுக்குள் அடைத்து கடுமையாக அடித்திருக்கிறார்கள்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, கர்நாடகத் தலைநகர் பெங்களுருவில் ஓர் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த, மணிப்பூரைச் சேர்ந்த மாணவர்கள் இருவரை சிலர் சூழ்ந்து கொண்டு, கன்னடம் பேசத் தெரியுமா என்று கேட்டிருக்கிறார்கள். பேசத் தெரியாது என்று அவர்கள் சொன்னவுடன் அவர்களைத் தாக்கி, கன்னட மொழித் தெரியாதவர்களுக்கு கர்நாடகத்தில் வேலையில்லை என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
மேற்கண்ட இந்த நிகழ்வுகளும் வழக்குகளாக காவல்துறையில் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். இந்த இரு வன்முறை நிகழ்வுகளும் கண்டிக்கத்தக்கவை. ஆனால், இவ்வாறான நிகழ்வுகளுக்குக் காரணம் என்னவென்பதை சமூக அறிவியல் கண்கொண்டு ஆய்வு செய்ய வேண்டும்.
பல தேசங்களாக விளங்க வேண்டிய தேசிய இனங்கள், “இந்தியா“ என்ற ஒரே நாடாக வெள்ளை ஏகாதிபத்தியத்தால் பிணைக்கப்பட்டு, இந்திய விடுதலைக்குப் பிறகும் அது அப்படியே நீடிக்கிறது. இந்தியாவின் இந்தத் தனித்தன்மையை ஏற்றுக் கொண்டு, ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் கிட்டத்தட்ட அவை தனியாக இருந்தால் என்ன உரிமைகளை அனுபவிக்குமோ, அதற்குச் சமமாக இந்தியாவுக்குள் அவற்றுக்கு உரிமை வழங்க வேண்டியது அவசியம்.
நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம், மொழிவழித் தாயகங்களாக இந்திய மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. மிகையாக பிற மொழி பேசுவோர், இன்னொரு மொழி பேசும் மக்களின் தாயகத்தில் குடியேறுவதும் தொழில் வணிகம் செய்வதும் அந்த மண்ணுக்குரிய தேசிய இன மக்களின் உரிமைகளை பறிப்பதாக அமைகிறது. அந்த மண்ணுக்குரிய மக்களின் தொழில், வணிகம், வேலை வாய்ப்பு ஆகியவற்றில் அயல் இனத்து மக்கள் ஆக்கிரமிப்பு செய்வதாக இது அமைகிறது.
இந்தச் சிக்கலைத் தீர்க்க இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் பல்வேறு சட்ட திட்டங்களை இயற்றியுள்ளன. மிசோரம், நாகாலாந்து, அருணாச்சலப்பிரதேசம் ஆகியவை பிற மாநிலத்தவருக்கு உள் எல்லை அனுமதிச் சீட்டு (Inner line permit) என்ற முறையை வைத்து, வெளி மாநிலத்தவரின் மிகை நுழைவைக் கட்டுப்படுத்துகின்றன. காசுமீரில் வெளி மாநிலத்தவர் சொத்து வாங்க முடியாத வகையில் தடைச் சட்டம் உள்ளது. கர்நாடகத்தில், சரோஜினி மகிசி குழு பரிந்துரையை ஏற்று, ஊழியர் நிலையில் 100க்கு 90 விழுக்காடு கன்னடர்களுக்கே வேலை வழங்க வேண்டுமென்றும், அதிகாரிகள் மட்டத்தில் 100க்கு 60 விழுக்காடு கன்னடர்களுக்கு வேலை வழங்க வேண்டுமென்றும் ஆணைகள் போட்டுள்ளார்கள். அதைச் செயல்படுத்த உறுதியளிப்பதாக அண்மையில்தான் காங்கிரசு முதலமைச்சர் சித்தராமையா கூறினார்.
நடந்து முடிந்த அரியானா சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அம்மாநில காங்கிரசு முதலமைச்சர் பூபீந்தர் சிங் ஹூடா வெளியிட்டத் தேர்தல் அறிக்கையில், எமது கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரியானாவின் தனியார் துறையில் அரியானாவின் மண்ணின் மக்களுக்கு 50 விழுக்காடு வேலை ஒதுக்கீடு செய்யப்படும் என்று உறுதி கூறியிருந்தார்.
ஏற்கெனவே, வெளியாரை வெளியேற்றும் போராட்டம் அசாமில் நடந்த போது அப்போதைய பிரதமர் இராசீவ் காந்தி, வெளிநாட்டவர் மற்றும் வெளி மாநிலத்தவர் உள்ளிட்ட வெளியாரை ஒரு குறிப்பிட்ட ஆண்டு கணக்கு வைத்து, அதன்பிறகு வந்தவர்களை வெளியேற்றுவது என்று போராட்டக்காரர்களுடன் உடன்படிக்கை செய்தார்.
இப்பொழுதும் கர்நாடகத்தில் வெளி மாநிலத்தவர் விளைநிலங்களை வாங்குவதற்கு தடைச் சட்டம் உள்ளது. மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் முறையே காங்கிரசு முதலமைச்சரும், பா.ச.க. முதலமைச்சரும் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பே, தங்கள் மாநிலத்திற்கு உ.பி. மற்றும் பீகாரிலிருந்து வேலைக்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்கள்.
இவ்வாறெல்லாம், பல்வேறு வடிவங்களில் பல்வேறு மாநிலங்களில் வெளியார் நுழைவுக்கு எதிராக சட்டங்களும் நடைமுறைகளும் இருக்கின்றன.
எனவே தான், தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்நாட்டிலும் வெளி மாநிலத்தவர் வரைமுறையின்றி குடியேறுவதையும், வேலையில் சேருவதையும் சொத்து வாங்குவதையும் கட்டுப்படுத்த 6 வகையானத் தீர்வுகளை முன்வைத்துப் போராடி வருகிறது.
• அதன்படி, தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில் 80 விழுக்காடு வேலை தமிழர்களுக்கே வழங்க வேண்டும், 20 விழுக்காட்டிற்கு மேல் வேலை பார்க்கும் நிறுவனங்களில் மிகையாக உள்ளவர்களை வெளியேற்ற வேண்டும்.
• தமிழ்நாட்டின் தனியார் துறையில் 90 விழுக்காடு வேலை, தமிழர்களுக்கே வழங்க வேண்டும்.
• வரைமுறையின்றி வந்து அன்றாடம் வெள்ளம் போல் வந்து குவிகின்ற வெளி மாநிலத்தவர்களுக்கு குடும்ப அட்டை – வாக்காளர் அட்டை வழங்கக்கூடாது.
• வெளிமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் சொத்து வாங்கத் தடை விதிக்க வேண்டும்.
• வெளி மாநிலத்தவர்களை தமிழ்நாட்டில் அனுமதிக்க வடகிழக்கு மாநிலங்களில் இருப்பதைப் போல், உள் அனுமதிச் சீட்டு (Inner line permit) வழங்கும் உரிமை தமிழக அரசுக்கு வேண்டும்.
• மின்சாரம் உள்ளிட்டவைகளுக்கு மானியம் வழங்குவதைப் போல, ஆள் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் தமிழக சிறு - நடுத்தரத் தொழில் முனைவோருக்கு தமிழக அரசு, ‘உழைப்பாளர் மானியம்’ வழங்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை தமிழக அரசு சட்டமாக இயற்ற வேண்டும். இவ்வாறான சட்ட வழிமுறைகளை உருவாக்கிக் கொண்டால், ஒரு மாநில மக்களின் தாயக வாழ்வுரிமையை தகர்க்கும் வகையில், பிற மாநிலத்தவர் மிகையாக நுழைவது தடுக்கப்பட்டு, ஒரு மாநில மக்களுக்கு எதிராக இன்னொரு மாநில மக்கள் வன்முறையைக் கையாள்வது தவிர்க்கப்படும். இதைப் பற்றிதான் அனைவரும் சிந்திக்க வேண்டும். இவ்வாறு சரியான மாற்றுத் தீர்வுகளை முன்வைக்கும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தை தமிழ்நாட்டின் சிவசேனா என்றும், அவ்வியக்கத்தின் தலைமைப் பொறுப்பிலுள்ளவர்களை தமிழ்நாட்டின் பால் தாக்கரேக்கள் என்றும் கொச்சைப்படுத்தவதன் மூலம் இந்த சிக்கலுகளுக்குத் தீர்வு காண முடியாது.
தமிழ்த் தேசியப் பேரியக்கம் முன்வைக்கும் ஆக்கவழிப்பட்ட மேற்கண்டத் தீர்வுகளை, சட்ட விதிகளாக உருவாக்கிட தமிழக அரசு, இந்திய அரசு ஆகியவை முன் வர வேண்டும். தமிழ் மக்கள், இக்கோரிக்கைகளை அரசுகளிடம் வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தோழர் பெ.மணியரசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

Saturday, October 11, 2014

இந்திய அரசு நிறுவனங்களில் வேலை பார்க்கும் வெளியாரை வெளியேற்று! திசம்பர் 12 - சென்னை நடுவண் (சென்ட்ரல்) நிலையத்தில், தொடர்வண்டி மறியல் போராட்டம் - தமிழ்த் தேசியப் பேரியக்கம் அறிவிப்பு!


தமிழகத்தில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களில்
வேலை பார்க்கும் வெளியாரை வெளியேற்று!
தமிழர்களுக்கு 80 விழுக்காடு வேலை வழங்கு!

2014 திசம்பர் 12 - சென்னை நடுவண் (சென்ட்ரல்) நிலையத்தில்,
தொடர்வண்டி மறியல் போராட்டம்!


தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு!

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் ஏழாவது பொதுக்குழுவின் முதல் கூட்டம், சென்னை க.க. நகரிலுள்ள அமைப்பின் தலைமை அலுவலகத்தில், இன்று (11.10.2014) காலை முதல் மாலை வரை நடைபெற்றது. கூட்டத்திற்கு, இயக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையேற்றார். பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். தமிழகமெங்கிலுமிருந்து வந்திருந்த அமைப்பின் தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தமிழகத்தின் இன்றைய அரசியல் சூழல் குறித்த அரசியல் அறிக்கையை, பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் முன்வைத்தார். அமைப்புப் பணிகள் குறித்த வேலை அறிக்கையை தலைவர் தோழர் பெ.மணியரசன் முன்வைத்துப் பேசினார். விவாதங்களுக்குப் பின், அவை நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தின் நிறைவில், “தமிழகத்திலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ள வெளியாரை வெளியேற்று! இந்திய அரசு நிறுவனங்களில் 80 விழுக்காட்டுப் பணிகளை தமிழர்களுக்கே வழங்கு” என்ற கோரிக்கையை முன்வைத்து, வரும் திசம்பர் 12ஆம் நாள், தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், சென்னை நடுவண் தொடர்வண்டி நிலையத்தில் (சென்ட்ரல்) தொடர்வண்டிகள் மறியல் போராட்டம் நடத்துவதென ஒருமானதாகத் தீர்மானிக்கப்பட்டது. இப்போராட்டத்தில், பெருந்திரளான தமிழின உணர்வாளர்களையும், பொது மக்களையும் பங்கேற்கச் செய்வதற்கானப் பணிகளில் உடனடியாக ஈடுபடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. 

Wednesday, October 8, 2014

நோக்கியாவில் வேலையிழக்கும் தொழிலாளர்களுக்கு இந்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் - தோழர் கி.வெங்கட்ராமன் அறிக்கை



நோக்கியாவில் வேலையிழக்கும் தொழிலாளர்களுக்கு
இந்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்

தோழர் கி.வெங்கட்ராமன் அறிக்கை

நோக்கியா நிறுவனத்துடன் மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்து கொண்ட ஒப்பந்தம் நவம்பர் 1, 2014 உடன் முடிவடைவதால் திருபெரும்புத்தூரில் உள்ள அந்த ஆலை முற்றிலும் மூடப்பட்டு பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வீதியில் வீசப்படும் ஆபத்து சூழ்ந்துள்ளது.


பின்லாந்து நாட்டைச் சேர்ந்த நோக்கியா கைபேசி தயாரிப்பு நிறுவனம் கடந்த 2006 முதல் திருப்பெரும்புத்தூர் சிப்காட் வளாகத்தில் சிறப்பு பொருளியல் மண்டலத்தில் கைப்பேசித் தொழிற்சாலையை நடத்திவந்தது.

இந்நிறுவனத்திற்கு இந்திய அரசும், தமிழக அரசும் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளை வாரி வழங்கின.

620 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட நோக்கியா நிறுவனம் கடந்த 8 ஆண்டுகளில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு வரிச்சலுகைப் பெற்றுள்ளது. ஏறத்தாழ 25,000 கோடி ரூபாய் இலாபத்தொகையாக பின்லாந்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.

ஆனால் இந்நிறுவனத்தில் பணியாற்றக்கூடிய பெரும்பாலான தொழிலாளர்களுக்கு ரூபாய் பத்தாயிரத்தினை தாண்டி மாத ஊதியம் கிடையாது. இந்த மண்ணைச் சுரண்டி இந்த மண்ணின் உழைப்பாளர்களைச் சுரண்டி கொழுத்தது போதாதென்று 25,000 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்து சிக்கியுள்ளது.

நோக்கியா நிறுவனத்தை வாங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த வரி ஏய்ப்பு வழக்கு காரணமாகவே திருப்பெரும்பந்தூர் தொழிலகத்தை கையகப்படுத்தாமல் விட்டு விட்டது. ஒப்பந்தத்திற்கு கைபேசி தயாரிக்கும் தொழிலகமாக நோக்கியாவை வைத்திருந்தது. அந்த ஒப்பந்தமும் நவம்பர் 1ஆம் தேதியுடன் முடிவடைவதால். நோக்கியா ஆலை மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே 5,000க்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் விருப்ப ஓய்வில் வெளியேற்றப்பட்டு விட்டார்கள். மீதி உள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலம் என்னவென்பது மிகப்பெரியக் கேள்விக்குறியாக மாறிவிட்டது.

“இந்தியாவில் தயாரியுங்கள் (Make In India)” என்று கூவிக்கூவி அழைக்கும் நரேந்திர மோடி அரசு கண்முன்னால் நடக்கும் இந்த ஆலை மூடலை கண்டும் காணாமல் இருக்கிறது. தமிழக அரசும் கவலைக் கொள்ளாமல் இருக்கிறது.

இந்த அலட்சியப் போக்கு இனியும் தொடரக்கூடாது. நோக்கியா ஆலையில் வேலை இழக்கும் தொழிலாளர்களின் எதிர்காலத்திற்கு இந்திய, தமிழக அரசுகள் பொறுப்பேற்க வேண்டும்.

நவம்பர் 1, 2014இலிருந்து குறைந்தது ஓராண்டிற்கு அத்தொழிலாளர்களுக்கு தொடர்ந்து ஊதியம் வழங்கி மாற்று வேலைக்கு அவர்களை அமர்த்தும் பொறுப்பை இந்திய அரசு ஏற்கவேண்டும். அதற்கான தொகை முழுவதையும் நோக்கியா நிறுவனத்திடமிருந்து பெறுவதற்கான ஆணையை இந்திய அரசு பிறப்பிக்க வேண்டும். அவ்வாறு நோக்கியா நிறுவனம் பொறுப்பேற்று நிதி தர தவறினால் நோக்கியா நிறுவனத்தின் முதன்மை உரிமையாளர்களை தேடப்படும் பொருளாதார குற்றவாளிகளாக அறிவித்து இந்திய அரசு மேல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தோழர் கி.வெங்கட்ராமன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

Thursday, October 2, 2014

செயலலிதா வழக்கில்... கன்னடர் – தமிழர் முரண்பாட்டின்படி தீர்ப்பு வழங்கப்படவில்லை - தலைவர் பெ.மணியரசன் அறிக்கை!


”செயலலிதா வழக்கில் கன்னடர் – தமிழர் முரண்பாட்டின்படி தீர்ப்பு வழங்கப்படவில்லை” என தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தமிழக முதல்வர் செயலலிதா அவர்கள் வருமானத்திற்கு பொருத்தமில்லாத வகையில் சொத்துச் சேர்த்தவழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தண்டனை வழங்கியதை கன்னடர் – தமிழர் முண்பாட்டின் வெளிப்பாடு என்று அ.இ.அ.தி.மு.க.வினர் சித்தரிப்பது உண்மைக்கு மாறானது.


இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஜான் மைக்கில் டி குன்கா நேர்மையாளர் என்றும், யாருக்கும் அஞ்சாதவர் என்றும் ஏற்கெனவே பெயர் பெற்றவர்.

செயலலிதா உள்ளிட்ட நால்வர்க்கும் சட்டவிதிகள் அனுமதித்த எல்லா வாய்ப்புகளையும் வழங்கி, இதனால் இவ்வழக்கு விசாரணை 18 ஆண்டுகள் நீடித்து அதன் பிறகு நேர்மையான முறையில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இத்தீர்ப்பை தள்ளுபடி செய்து நிவாரணம் பெற சட்ட வழிகளைப் பின்பற்றி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் மேல் முறையீடு செய்வதே சரியான நெறிமுறையாகும். அதை விடுத்து, தொடர்ந்து தமிழ்நாட்டில் அன்றாட மக்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் வகையில் அ.இ.அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்துவது சரியல்ல.

அத்துடன் இத்தீர்ப்பையும் செயலலிதா பெங்களூரு சிறையில் கைக்கப்பட்டிருப்பதையும் தமிழர்களுக்கெதிரான கன்னடர்களின் சதி என்றும், இது இனமுரண்பாடு என்றும் அ.இ.அ.தி.மு.க.வினர் காட்ட முயல்வது முற்றிலும் தவறான செயல். இவ்வழக்கில் கன்னடர் – தமிழர் முரண்பாடு எதுவும் வெளிப்பட்டதாக தெரியவில்லை.

1991 நவம்பர் – டிசம்பரில் கன்னடர்கள் கர்நாடகத் தமிழர்களின் வீடுகளை, வணிக நிருவனங்களை சூறையாடினார்கள் – எரித்தார்கள், தமிழர்கள் பலரை கொலை செய்தார்கள். இரண்டு இலட்சம் கர்நாடகத் தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு அகதிகளாக ஓடிவந்தார்கள். அப்போது முதலமைச்சராக இருந்தவர் செயலலிதாதான், அப்போது அ.இ.அ.தி.மு.க.வினர் கன்னடர் இனவெறிக்கு எதிராக தமிழ்நாட்டில் எந்தப் போராட்டமும் நடத்தவில்லை.
காவிரி தீர்ப்பாயம், உச்ச நீதிமன்றம் ஆகியவை தமிழகத்திற்குள்ள காவிரி நீர் உரிமைக் குறித்து தீர்ப்பளித்த போதெல்லாம் அதைச் செயல்படுத்த கர்நாடக அரசு மறுத்து வந்துள்ளது. அப்போதெல்லாம் அ.இ.அ.தி.மு.க.வினர் கர்நாடக அரசின் சட்ட விரோத போக்கை கண்டித்து காவிரி நீர் பெற ஆர்ப்பாட்டம் நடத்தியதில்லை.

இப்போது இவ்வழக்கில் கன்னடர்கள், தமிழர் எதிர்ப்பு இனவெறியோடு நடந்து கொள்வதாக கூறி அ.இ.அ.தி.மு.கவினர் போராட்டம் நடத்துவது தன்னல அரசியல் தவிர வேறல்ல. இது நீதித்துறையின் தற்சார்பு தன்மையை சீர்குலைக்கும் உள்நோக்கம் கொண்டதாகும். இப்போக்கை அ.இ.அ.தி.மு.கவினர் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தமது அறிக்கையில் தோழர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார். 


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT