உடனடிச்செய்திகள்
Showing posts with label மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம்!. Show all posts
Showing posts with label மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம்!. Show all posts

Friday, January 25, 2019

தமிழகமெங்கும் மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்க நிகழ்வுகள்!

தமிழகமெங்கும் மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்க நிகழ்வுகள்!
1938இலும் - 1965இலும் நடைபெற்ற மாபெரும் இந்தி எதிர்ப்புப் போரில் உயிரீகம் செய்த ஈகியரின் நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் சனவரி 25 அன்று கடைபிடிக்கப்படுகின்றது. அந்நாளை, மொழி – இனம் காக்க சூளுரைக்கும் நாளாக தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூர்கிறது.

திருச்சி








திருச்சி மாவட்டம், தென்னூர் – உய்யக்கொண்டான் ஆற்றங்கரையில் அமைந்துள்ள மொழிப்போர் ஈகியர்கள் கீழப்பழூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் ஆகியோரது நினைவிடங்களில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார். நிகழ்வுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் மூ.த. கவித்துவன் தலைமை ஏற்க முனைவர் கு. திருமாறன், “தென்மொழி” ஈகவரசன், ஆசிரியர் சவரிமுத்து, இதழாளர் தி.மா. சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருவரம்பூர் த.தே.பே. கிளைச்செயலாளர் தோழர் இலட்சுமணன், விராலிமலை செயலாளர் தோழர் வே.பூ. இராமராசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து கரூர் புறவழிச்சாலையில் கம்பரசம்பேட்டை அருகே காவிரி கரையில் அமைந்துள்ள கீழப்பழுவூர் சின்னச்சாமி சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐயா பெ. மணியரசன், நரேந்திர மோடி தலைமையிலான பா.ச.க. அரசு, காங்கிரசின் இந்தித் திணிப்பு கொள்கையை தீவிரமாக நடைமுறைபடுத்தி வருவதையும், அவர்களை எதிர் கொள்ளும் அளவிற்கு தமிழகத்தில் அரசியல் இல்லை என்றும் ஆதங்கம் தெரிவித்தார். தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளை மிஞ்சும் அளவிற்கு நடுவண் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ) பள்ளிகள் பெருத்து விட்டதாகவும், தமிழர்கள் ஆங்கில மோகத்தில் தங்களை இழிவுபடுத்திக் கொள்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை 
சென்னை வள்ளலார் நகர் – மூலக்கொத்தளம் இடுகாட்டில் அமைந்துள்ள மொழிப் போர் ஈகிகள் தாளமுத்து, நடராசன், தருமாம்பாள் ஆகியோரது நினைவிடங்களில், வீரவணக்கம் செலுத்தும் வகையில், வள்ளலார் நகர் பேருந்து நிலையம் அருகிலிருந்து, மூலக்கொத்தளம் இடுகாடு வரை “தமிழுரிமைக் கூட்டமைப்பு” சார்பில் வீரவணக்கப் பேரணி நடைபெற்றது. பேரணிக்கு, கூட்டமைப்பின் தலைவர் புலவர் இரத்தினவேலவன் தலைமை தாங்கினார். செயலாளர் தோழர் காஞ்சி அமுதன் நிகழ்வை ஒருங்கிணைத்தார். தமிழ்த்தேச மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் தமிழ்நேயன், இயக்குநர் வ. கௌதமன், தமிழக மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் பொழிலன், ம.பெ.பொ.க. தோழர் வாலாசா வல்லவன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.





தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, பொதுக்குழு தோழர்கள் பழ.நல். ஆறுமுகம், வெற்றித்தமிழன், வி. கோவேந்தன், பாவலர் முழுநிலவன், வடசென்னை த.தே.பே. செயலாளர் தோழர் செந்தில், தோழர்கள் மு. வடிவேலன், ஆவடி செழியன், பிரசாந்த், மு. பொன்மணிகண்டன், செந்தாமரை, வ. பிரபாகரன் உள்ளிட்ட திரளான தோழர்கள் பங்கேற்றனர்.

தஞ்சை





தஞ்சையில் மொழிப்போர் நாளையொட்டி, சனவரி 25 அன்று மாலை கீழவாசலில் நடைபெற்ற வீரவணக்க சிறப்புக் கூட்டத்திற்கு பேரியக்க மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை மொழிப் போர் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தி முழக்கங்களை எழுப்பினார். தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்கள் சிறப்புரையாற்றினார். பேரியக்கத் தலைமைச் செயற்குழு தோழர்கள் பழ. இராசேந்திரன், க. விடுதலைச்சுடர், ம. இலட்சுமி அம்மாள், மகளிர் ஆயம் தோழர் செம்மலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மதுரை

மதுரை செல்லூர் தாகூர் நகரில் தமிழ்த்தேசியப் பேரியக்க மாநகரச் செயலாளர் தோழர் இரெ. இராசு தலைமையில், சார்பில் மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மற்றும் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் மேரி பேரியக்கக் கொடியை ஏற்றி வைத்தார். த.தே.பே. கிளைச்செயலாளர் தோழர் விடியல் சிவா, பொதுக்குழு உறுப்பினர் தோழர் கதிர்நிலவன், வீரத்தமிழர் முன்னணி கிழக்குத் தொகுதி இணைச் செயலாளர் வழக்கறிஞர் பாண்டியராசன், தோழர் இளவேனில் ஆகியோர் கலந்து கொண்டனர். த.தே.பே. மூத்த தோழர் கருப்பையா, தோழர்கள் கரிகாலன், புருசோத்தமன், தி. கருப்பையா, தியாகலிங்கம், அழகர்சாமி, தமிழ்மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சிதம்பரம்
சிதம்பரத்தில், அண்ணாமலை நகரில் உள்ள மாணவ ஈகி இராசேந்திரன் சிலைக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் மாலை அணிவித்தார். த.தே.பே. சிதம்பரம் செயலாளர் தோழர் எல்லாளன், த.இ.மு. துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ. குபேரன், தோழர்கள் பா. பிரபாகரன், வேந்தன் சுரேசு, உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, தமிழர் தற்காப்புப் பயிற்சிப் பள்ளி மாணவர் அஜித்குமார் தமிழரின் வீரக்கலையான சுருள் சுழற்றலை நிகழ்த்திக் காட்டினார்.

செங்கிப்பட்டி

தஞ்சை மாவட்டம் - பூதலூர் ஒன்றியம் - செங்கிப்பட்டி (சாணூரப்பட்டி) முதன்மைச் சாலையில் மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பேரியக்க ஒன்றியச் செயலாளர் தோழர் பி. தென்னவன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் ரெ. கருணாநிதி, தோழர்கள் ஆ. தேவதாசு, மாணிக்கம், இளையராஜா, பாபுசா (எ) சண்முகம், இராமு, ச. செந்தமிழன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தருமபுரி

தருமபுரியில், இந்திய அரசுத் தொலைத்தொடர்பு அலுவலகம் அருகில் நடைபெற்ற மொழிப் போர் ஈகியர் வீரவணக்க நிகழ்வுக்கு த.தே.பே. பொதுக்குழு உறுப்பினர் தோழர் க. விசயன் தலைமை தாங்கினார். ம.தி.மு.க. மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் தோழர் சுப்பிரமணியன், நாம் தமிழர் கட்சி ஒன்றியச் செயலாளர் தோழர் சத்தியநாதன், தோழர்கள் ஜெ. முருகேசன், முனி. ஆறுமுகம், திருமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முருகன்குடி

கடலூர் மாவட்டம் - திட்டக்குடி வட்டம் - முருகன்குடியில் பேருந்து நிலையம் அருகில் தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் சி. பிரகாசு தலைமையில் நடைபெற்ற மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நிகழ்வில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. முருகன், பொதுக்குழு உறுப்பினர் அரா. கனகசபை, த.மா.மு. தோழர் மணிமாறன், மகளிர் ஆயம் தோழர்கள் வித்தியா, இந்துமதி, கனிமொழி, நாம் தமிழர் கட்சி திரு. கார்த்திகேயன், செந்தமிழ் மரபுவழி வேளாண் நடுவம் ஒருங்கிணைப்பாளர் தோழர் கண்ணதாசன், செல்வமணி, வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Saturday, January 13, 2018

சிதம்பரம் மேம்பாலத்திற்கு மொழிப்போர் தியாகி இராசேந்திரன் பெயர் தமிழ்நாடு அரசுக்கு த.தே.பே. பாராட்டு!

சிதம்பரம் மேம்பாலத்திற்கு மொழிப்போர் தியாகி இராசேந்திரன் பெயர் தமிழ்நாடு அரசுக்கு த.தே.பே. பாராட்டு! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!
சிதம்பரம் தொடர்வண்டி மேம்பாலத்திற்கு மொழிப்போர் ஈகி (தியாகி) இராசேந்திரன் பெயர் சூட்ட வேண்டும் என கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக தமிழ்த்தேசியப் பேரியக்கமும், சிதம்பரம் தமிழ்க் காப்பணியும் இன்னும் பல தமிழ் உணர்வாளர்களும் வலியுறுத்தி வந்தோம்.
 
இந்திய அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்து 1965இல் நடைபெற்ற தமிழ் மொழிக் காப்புப் போராட்டத்தில், இப்போது மேம்பாலம் அமைந்துள்ள பகுதிக்கு அருகில்தான் மாணவர் தியாகி இராசேந்திரன், 1965 சனவரி 27 அன்று துப்பாக்கிச் சூட்டில் உயிரீகம் செய்தார்.
 
எனவே, அந்த இடத்தில் அமைந்துள்ள தொடர்வண்டி மேம்பாலத்திற்கும், இதையொட்டியுள்ள சிவபுரிச் சாலைக்கும் மொழிப்போர் ஈகி இராசேந்திரன் பெயர் சூட்ட வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கமும், பிற தமிழ் இன மொழி உணர்வாளர்களும் தொடர் போராட்டங்களும், இயக்கங்களும் நடத்தி வந்தோம்.
 
இந்நிலையில், காட்டுமன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு. முருகுமாறன் நேற்று (12.01.2018) தமிழ்நாடு சட்டமன்றத்தில் தொடர்வண்டி மேம்பாலத்திற்கு மொழிப்போர் ஈகி இராசேந்திரன் பெயர் சூட்ட வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். இந்த வேண்டுகோளை உடனடியாக ஏற்று, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சிதம்பரம் தொடர்வண்டி மேம்பாலத்திற்கு மொழிப்போர் ஈகி இராசேந்திரன் பெயர் சூட்ட ஒத்துக்கொண்டார்.
 
இதற்கான முயற்சியை மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் முருகுமாறனுக்கும், ஏற்றுக் கொண்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கும் எனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறென்.
 
வரும் மொழிப்போர் வீரவணக்க நாளுக்கு முன்னதாக இம்மேம்பாலத்திற்கு மொழிப்போர் ஈகி இராசேந்திரன் பெயர் வைக்க அனைத்து நடவடிக்கைகளையும், மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
 
இதுமட்டுமின்றி, வரலாற்றுச் சிறப்புமிக்க 1938 மற்றும் 1965 மொழிப் போராட்டங்களின் வரலாற்றை பள்ளி - கல்லூரி பாடப் புத்தகங்களில் இடம்பெறச் செய்ய வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT