உடனடிச்செய்திகள்
Showing posts with label கேள்வி. Show all posts
Showing posts with label கேள்வி. Show all posts

Thursday, April 4, 2019

விதிகளுக்கு முரணாக மேட்டூர் தண்ணீரை தமிழ்நாடு அரசு விரையமாக்குவது ஏன்? தோழர் பெ. மணியரசன் கேள்வி!

விதிகளுக்கு முரணாக மேட்டூர் தண்ணீரை தமிழ்நாடு அரசு விரையமாக்குவது ஏன்? காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் கேள்வி!
மேட்டூர் அணையிலிருந்து கடந்த 31.03.2019 முதல் “குடிநீருக்காக” என்று சொல்லி 8,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதற்கு முன்னர் “குடிநீருக்காக” 8,000 கன அடி தண்ணீர் திறந்துவிட்டதில்லை. கடந்த காலத்தில் குடிநீர் பற்றாக்குறைக்காக அதிகபட்சமாக 2,000 கன அடி திறந்துவிட்டிருக்கிறார்கள்.

இந்த 8,000 கன அடி தண்ணீர் - காவிரிப் பாசன வரம்பிற்கு உட்படாத சாகுபடி நிலங்களுக்கு இந்தக் கோடை காலத்தில் திருப்பி விடப்படுகிறதோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. மேட்டூரில் இருக்கின்ற சேமிப்புத் தண்ணீரை விதிமுறைகளுக்குப் புறம்பாக திறந்துவிட்டு காலி செய்து விட்டால், குறுவை சாகுபடிக்கு நீர் சேமிப்பு இருக்காது!

வழக்கமாக, பருவமழை காலத்தில் மேட்டூரில் தேங்கியுள்ள மிச்ச நீரை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான், கர்நாடகத்திலிருந்து வர வேண்டிய தண்ணீரில் ஓரளவைப் பெற்று குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணைத் திறக்கப்பட்டு வந்தது. கடந்த பருவமழை அதிகமாக இருந்ததால், மேட்டூர் அணையில் மார்ச்சு இறுதி வாக்கில் 64 அடி உயரத்திற்குத் தண்ணீர் இருந்தது.

அந்த சேமிப்பைக் காலி செய்கின்ற வகையில், 8,000 கன அடி திறந்துவிட்டதைக் கண்டித்து, கடந்த 02.04.2019 அன்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தஞ்சையில் தொலைக்காட்சி ஊடகத்தினரை சந்தித்து நானும், காவிரி உரிமை மீட்புக் குழு பொறுப்பாளர்களான ஐயனாபுரம் முருகேசன் அவர்களும், மணிமொழியன் அவர்களும் 8,000 கன அடி திறப்பதை நிறுத்த வேண்டும், 2,000 கன அடி திறந்துவிட்டாலே குடிநீருக்குப் போதும் என அறிக்கை கொடுத்தோம்.

அதன்பிறகு, 03.04.2019 முதல் மேட்டூரில் திறந்துவிடப்படும் அளவு 6,000 கன அடியாகக் குறைக்கப்பட்டாலும், இதுவும் அதிகமான வெளியேற்றம்தான். குறைக்கப்பட்ட அளவு போதாது! கிடுகிடுவென்று மேட்டூர் நீர் மட்டம் குறைந்து வருகிறது. இந்த விகிதத்தில் மேட்டூர் அணை நீர் மட்டம் குறைந்துவந்தால், குறுவை சாகுபடிக்கு தண்ணீர் இருக்குமா என்பது மட்டுமல்ல, கடும் கோடைக்காலத்தில் குடிநீருக்குக்கூட தண்ணீர் இல்லாத நிலை உருவாகும்.

கடந்த 2018 திசம்பரிலிருந்து மாதந்தோறும் திறந்துவிட வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிடவில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி திசம்பர் மாதம் 7.3 டி.எம்.சி., சனவரி மாதம் – 3 டி.எம்.சி., பிப்ரவரி மாதம் - 2.3 டி.எம்.சி., மார்ச்சு மாதம் – 2.3 டி.எம்.சி. – ஆக மொத்தம் 14.9 டி.எம்.சி. தண்ணீர் வந்திருக்க வேண்டும். இந்தத் தண்ணீரைத் திறந்துவிடும்படி காவிரி மேலாண்மை ஆணையத்தைத் தமிழ்நாடு அரசு ஏன் வலியுறுத்தவில்லை?

இதில் கடமை தவறிய தமிழ்நாடு அரசு, குறைந்தளவு இருக்கின்ற மேட்டூர் நீரையும் விதிகளுக்கு முரணாகத் திறந்து விரையமாக்குவது வன்மையான கண்டனத்திற்குரியது. எனவே, வெளியேற்றும் நீரின் அளவை 2,000 கன அடிக்குள் வைக்குமாறும், மாத வாரியாக கர்நாடகத்திலிருந்து பெற வேண்டிய காவிரி நீரைத் திறந்துவிட மேலாண்மை ஆணையத்தைத் வலியுறுத்திப் பெறுமாறும் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Monday, April 1, 2019

அ.இ.அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் காவிரி உரிமையைக் கைவிட்டது ஏன்? தோழர் பெ. மணியரசன் கேள்வி!

அ.இ.அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் காவிரி உரிமையைக் கைவிட்டது ஏன்? காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் கேள்வி!
கடந்த 30.03.2019 அன்று நாகப்பட்டினம் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் பரப்புரை செய்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், “காவிரித் தண்ணீரைக் கொண்டு வருவதற்காக சட்டப் போராட்டம் நடத்திக் களைத்துப் போய் விட்டோம். எனவே, மாற்று ஏற்பாடுகளின் மூலம் பாசன நீர் கிடைக்கச் செய்ய முயன்று வருகிறோம். அந்த மாற்று ஏற்பாடுகளில் ஒன்று கோதாவரித் தண்ணீரைக் கொண்டு வருவது. இன்னொன்று, தமிழ்நாட்டில் அங்கங்கே தடுப்பணைகள் கட்டுவது” என்று கூறியிருக்கிறார்.

ஒருபக்கம், காவிரி உரிமையை மீட்டது அண்ணா தி.மு.க. ஆளுங்கட்சிதான் என்று மார்தட்டிக் கொள்ளும் முதலமைச்சர், காவிரியை நம்பிப் பயனில்லை என்று இப்படி பேசியிருக்கிறார். ஒரு முதலமைச்சர் இப்படி பேசுவது, சட்டப்படியான தமிழ்நாட்டு உரிமையைக் காவு கொடுப்பதாக உள்ளது.

அடுத்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி கிடைக்க வேண்டிய காவிரி நீரைக் கொண்டு வர முடியாத முதலமைச்சர் ஆந்திரப்பிரதேசத்திலிருந்து கோதாவரித் தண்ணீரை மட்டும் எப்படிக் கொண்டு வருவார்? ஆந்திரப்பிரதேச மாநிலம், கோதாவரித் தண்ணீரைத் தமிழ்நாட்டிற்கு அளிக்க ஒப்புதல் அளித்துள்ளதா? அதற்கான ஒப்புதலை நடுவண் நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பெற்றிருக்கிறாரா? அல்லது முதலமைச்சர் எடப்பாடி பெற்றிருக்கிறாரா? ஆந்திரப்பிரதேச மாநிலம், ஒருபோதும் கோதாவரித் தண்ணீரை தமிழ்நாட்டிற்குத் தர அனுமதிக்காது!

காவிரி உரிமை மீட்பிலிருந்து தமிழர்களின் கவனத்தைத் திசைத் திருப்புவதற்காக இந்திய ஆட்சியாளர்களும், தமிழ்நாட்டிலுள்ள துரோகிகளும் திட்டமிட்டு கங்கை நீரைக் கொண்டு வரப் போகிறோம் என்று நாற்பது ஆண்டுகளாக நாடகமாடினார்கள். அந்த நாடகம் மோசடி என்று அம்பலமான பிறகு, கோதாவரி நீரைக் கொண்டு வரப்போவதாக பா.ச.க. ஆட்சியாளர்களும், அண்ணா தி.மு.க. ஆட்சியாளர்களும் கூட்டுச் சேர்ந்து புதிய நாடகத்தை தயாரித்திருக்கிறார்கள்.

அண்ணா தி.மு.க. மற்றும் தி.மு.க. தேர்தல் அறிக்கைகளில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரித் தண்ணீரை கர்நாடகத்திடமிருந்து பெறுவோம் என்று வாக்குறுதி கொடுக்கப்பட வில்லை. அதுமட்டுமின்றி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி முழுநேரப் பணி உள்ளவர்களைக் கொண்ட அமைப்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்திருக்க வேண்டும். அவ்வாறில்லாமல், திட்டமிட்ட கெட்ட நோக்கத்தோடு பா.ச.க. நடுவண் அரசு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் புறம்பாக வேறு பணிகளில் முழுநேர அலுவலர்களாக உள்ளவர்களைக் கொண்டு, ஒப்புக்குக் காவிரி ஆணையம் அமைத்திருக்கிறது. அந்தக் காவிரி ஆணையம் செயல்படவே இல்லை!

2018 திசம்பரிலிருந்து மாதந்தோறும் திறந்துவிட வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிடவில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி திசம்பர் மாதம் 7.3 டி.எம்.சி., சனவரி மாதம் – 3 டி.எம்.சி., பிப்ரவரி மாதம் - 2.3 டி.எம்.சி., மார்ச்சு மாதம் – 2.3 டி.எம்.சி., ஏப்ரல் மாதம் – 2.3 டி.எம்.சி. – ஆக மொத்தம் 14.9 டி.எம்.சி. தண்ணீர் வந்திருக்க வேண்டும். இந்தத் தண்ணீர் தமிழ்நாட்டிற்கு வருவதற்குக் காவிரி மேலாண்மை ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை! செயல்படாத அந்த காவிரி ஆணையத்தை செயல்பட வைத்திட அ.இ.அ.தி.மு.க. அரசு ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை!

அ.இ.அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் இந்தத் தேர்தல் பரப்புரையில் காவிரி நீர் பெற்றுத் தருவதை முக்கியப் பரப்புரையாக செய்யவே இல்லை! கர்நாடகத்தின் பொல்லாப்பு வேண்டாம் என்று உள்நோக்கத்தோடு அ.இ.அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தலைவர்கள் காவிரிச் சிக்கலைப் பேசாமல் ஒதுங்கிக் கொண்டதாகவே தெரிகிறது.

எனவே, தமிழர்கள் இந்தத் “தேர்தல் திருவிழா”வில் குழந்தையைப் பறிகொடுத்த தாயைப் போல் இல்லாமல், காவிரி உரிமை குறித்து இந்தக் கட்சிகள் பேசாததைக் கண்டிக்க வேண்டும்; போராட முன் வர வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Friday, March 29, 2019

பெண்ணுரிமை பேசுவோர் தேர்தலில் ஆணுரிமை பேசுகிறார்களா? தோழர் பெ. மணியரசன்.

பெண்ணுரிமை பேசுவோர் தேர்தலில் ஆணுரிமை பேசுகிறார்களா? தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன். 
நாம் தமிழர் கட்சி பெண் வேட்பாளர்களைக் கொச்சைப்படுத்தி வரும் பெண்ணுரிமைவாதிகள் குறித்த கேள்விக்கு பதில் அளிக்கும்போது, “பெண்ணுரிமை பேசுவோர் தேர்தலில் ஆணுரிமை பேசுகிறார்களா?” என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் வினா எழுப்பியுள்ளார்.

“தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” – மாத இதழில் வந்து கொண்டிருக்கும் “நிகரன் விடைகள்” பகுதியில் இதுகுறித்த கேள்விக்கு ஐயா பெ. மணியரசன் அளித்துள்ள விடை இது :

“நாம் தமிழர் கட்சி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் புதுவையையும் சேர்த்துள்ள 40 தொகுதிகளில் 20 பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பெண்ணுரிமைக்கு இது முன்னெடுத்துக் காட்டாக உள்ளது. இதனைக் கொச்சைப்படுத்தி கவிஞர் சல்மா, மருத்துவர் சாலினி, ஊடகத்துறையினர் பனிமலர், திவ்வியபாரதி போன்றவர்கள் பதிவிட்டுள்ளார்கள்.

இந்தப் பெண்கள் வெறுப்பு அரசியல் என்ற கொள்ளிக் கட்டையால் தங்கள் தலையைச் சொறிந்து கொண்டது போல் தெரிகிறது.

இதே எண்ணிக்கையில் தி.மு.க. பெண்களுக்கு 50 விழுக்காடு தொகுதிகள் கொடுத்திருந்தால் வானத்துக்கும், மண்ணுக்குமாய் தாவித் தாவிப் புகழ்ந்து தள்ளுவார்கள்.திராவிடம் வளர்த்துள்ள பண்பு இது!

ஆண்களின் இனிப்புப் பேச்சில் பெண்கள் மயங்கக் கூடாது என்று மருத்துவர் சாலினி பதிவிட்டிருப்பது. பெண்களை இழிவுபடுத்துவதாக உள்ளது. இருபது பெண் வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி நிறுத்தியது வெறும் பகட்டு என்று கவிஞர் சல்மா நையாண்டி செய்திருக்கிறார். அவரது தி.மு.க.வில் இரண்டு பெண் வேட்பாளர்களை மட்டுமே நிறுத்தியுள்ளார்கள். அவர்களிலும் ஒருவர் பட்டத்து வாரிசு!

படைப்பாளிகளுக்கு மனச்சான்று பிளவுபடக்கூடாது. பெரும் பொறுப்புள்ளது!”.

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் எழுதியுள்ளார்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Saturday, December 29, 2018

“புயல் துயர் துடைப்புக்கு நிதி வழங்காத நரேந்திர மோடிக்கு முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரும் ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை?” தோழர் பெ. மணியரசன் கேள்வி!

“புயல் துயர் துடைப்புக்கு நிதி வழங்காத நரேந்திர மோடிக்கு முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரும் ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை?” நாகை தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி!
“கசா” புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான துயர் துடைப்புப் பணியில் உடனடியாக ஈடுபடாத இந்திய – தமிழ்நாடு அரசுகளைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி – தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில், இன்று (29.12.2018) காலை முதல் மாலை வரை, நாகையில் தொடர் முழுக்கக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகை அவுரித் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் தலைமை தாங்கினார். நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. செந்தமிழன் சீமான் சிறப்புரையாற்றினார். நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திரு. “தமிழ் முழக்கம்” சாகுல் அமீது, திரு. அன்புத் தென்னரசன் உள்ளிட்ட நா.த.க. பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.

தமிழக மக்கள் சனநாயகக் கட்சித் தலைவர் திரு. கே.எம். செரீப், தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு. களஞ்சியம், ஆதித்தமிழர் விடுதலை இயக்கத் தலைவர் திரு. வினோத், தமிழர் தேசிய விடுதலைக் கழகத் தலைவர் திரு. ஆ.கி. ஜோசப் கென்னடி, காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் திரு. காவிரி தனபாலன், வேதாரண்யம் வட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. டி..வி. இராசன், செயலாளர் திரு. தா. ஒளிச்சந்திரன், நடிகர் மன்சூர் அலிகான், மருது மக்கள் இயக்கத் தலைவர் தோழர் முத்துப்பாண்டியன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும், நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்களும் பங்கேற்று உரையாற்றினர்.

தலைமையுரை ஆற்றிய ஐயா பெ. மணியரசன் அவர்கள் பேசியதன் எழுத்து வடிவம்:

“கசா புயல் துயர் துடைப்பில் உடனடியாக ஈடுபடாத இந்திய - தமிழ்நாடு அரசுகளைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் முன்னெடுப்பில் நடைபெற்று வரும் இந்தத் தொடர் முழக்கக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்திருக்கும் அன்பிற்குரிய தமிழ்ச் சொந்தங்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கம்!

மிக எழுச்சியோடு - ஒரு மாநாடு போல் நடந்து கொண்டிருக்கும் இந்தப் போராட்டம், “கசா” புயல் ஏற்படுத்திய பேரழிவின் போது சரிவரி துயர் துடைப்புப் பணிகளில் ஈடுபடாத இந்திய அரசையும், தமிழ்நாடு அரசையும் கண்டித்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இனியாவது அவர்கள் துயர் துடைப்புப் பணிகளில் சரியாக செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நடக்கிறது.

புயல் வருவதற்கு முன்பாக தமிழ்நாடு அரசு, முன்கூட்டியே மின் இணைப்பைத் துண்டித்து சரியாகவே செயல்பட்டார்கள். ஆனால், அதன்பிறகு, நடந்த புயல் துயர் துடைப்புப் பணிகள் – செப்பனிடும் பணிகள் மிக மிக மோசமாக உள்ளன.

சில இடங்களில் இன்னும்கூட மரங்கள் வீழ்ந்து கிடக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்துவதற்கு, வீடுகளின் மீதுள்ள கூரைகளில் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றுவதற்கு அரசு சார்பில் என்ன ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள்? தனியாக சில நண்பர்கள் தன்னார்வ முயற்சியில் அதற்குரிய கருவிகளைக் கொண்டு வந்து இறக்கினார்கள். ஒரு தோப்பே வீழ்ந்து கிடக்கும்போது, அந்த நில உரிமையாளர் தனியாக அவற்றை அகற்றிட முடியுமா? இவற்றையெல்லாம் கணக்கிலெடுக்காமல் தமிழ்நாடு அரசு என்ன துயர் துடைப்புப் பணிகள் மேற்கொள்கிறது?

புயல் நடந்த போது, நான் வட அமெரிக்காவில் இருந்தேன். தொலைக்காட்சி வழியாக அதன் பாதிப்புகளைப் பார்த்தேன். நாம் தமிழர் கட்சியினர் பல்வேறு இடங்களில் துயர் துடைப்புப் பணிகளில் இறங்கியதைப் பார்த்தேன். நான் சார்ந்துள்ள தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பிலும் பல பகுதிகளில் துயர் துடைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இந்திய – தமிழ்நாடு அரசுகள் என்ன செய்தன?

எந்த அரசியலுக்கும் அப்பாற்பட்டவர்கள் பெருமளவில் உதவிகளைச் செய்தார்கள். தமிழ்ச்சமூகம் இன்றைக்கு முன்பைவிட அதிகளவில் விழிப்புணர்ச்சி பெற்று வளர்ந்துள்ளது. எனவேதான், அரசை நம்பாமல் - அரசை சார்ந்திருக்காமல், தாங்களாகவே உதவ வேண்டும் என்ற எண்ணத்தோடு தமிழ்ச்சமூகத்தின் இளைஞர்கள் களத்தில் இறங்கி அக்கறையுடன் பணி செய்தார்கள்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலக நாடுகளில் வாழும் தமிழர்களெல்லாம் நம்மைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறாகள். வடஅமெரிக்காவில் நான் இருந்தபோது, அங்கிருந்த தமிழ் இளைஞர்கள், நாம் தமிழர் இயக்கத் தோழர்கள் துடிப்போடு செயல்பட்டு, துயர் துடைப்புப் பணிகளுக்காக நிதி சேகரித்து அனுப்பி வைத்தார்கள். நம் தமிழ்ச்சமூகம் சர்வதேசமயமாகி வருவதன் வெளிப்பாடு இது! நம் சமூகம் புதிய மாறுதலுக்கு உள்ளாகி இருப்பதன் அடையாளம் இது!

அயல் நாடுகளில் பணிபுரியச் சென்றுள்ள நம் தமிழ்ச் சொந்தங்கள், அந்தந்த நாடுகளில் அந்தந்த இனத்தின் பெருமைகளை – சாதனைகளைப் பேசுவதைக் கேட்கிறார்கள். அவற்றையெல்லாம் பார்க்கும் நம் சொந்தங்களுக்கு, தமிழ் இனத்தில் பெருமைகளும், சாதனைகளும், சிறப்புகளும் நெஞ்சில் தைக்கிறது! எனவே, அதிக ஆர்வத்தோடு தமிழ்நாட்டை உற்று நோக்குகிறார்கள்.

பழைய காலம் போல் இன்றைக்கு பெயர் பெற்ற தலைவர்கள் - பூதந்தாங்கி பட்டங்களைச் சுமந்த அரசியல் தலைவர்கள் சொன்னால்தான் - வழிகாட்டினால்தான் நடக்கும் என்ற நிலைமை இப்போது இல்லை! ஏதோ தேர்தலின்போது, அவர்களுக்கு வாக்குப் போடுவதோடு இருக்கிறார்கள். அந்த நிலையிலும் மாற்றம் வரும்; வர வேண்டும்!

துயர் துடைப்புப் பணிகளில் உதவியதோடு மட்டுமல்ல, தன்னெழுச்சி நம் மக்கள் போராட்டங்களிலும் ஈடுபடுகிறார்கள். நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டங்கள் அதைத்தான் காட்டுகிறது. இதோ, இப்போது வேளாண் விளை நிலங்கள் வழியாக மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதை எதிர்த்து, கொங்கு மண்டலத்தில் உழவர் பெருமக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். எட்டுவழிச் சாலைக்கு எதிராக தமிழ் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

பெயர் பெற்ற அரசியல் கட்சிகளுக்குக் காத்திராமல், தாங்களே களம் காணும் புதிய அத்தியாயத்தை தமிழ் மக்கள் திறந்துவிட்டுள்ளார்கள்!

இந்த நிலையிலும்கூட ஆடாமல் அசையாமல் சரியாகப் பணி செய்யாமல் இருக்கிறது ஆளும் அ.தி.மு.க. அரசு!

நரேந்திர மோடி அரசு, தமிழ் மக்களின் துயரத்தைப் பகிர்ந்து கொள்ள ஒரு அறிக்கைக் கூட விடவில்லை! ஏன்? தமிழர்கள் மீது – தமிழ் மக்கள் மீது அவர்களுக்குக் காழ்ப்புணர்ச்சி - பாகுபாட்டு உணர்ச்சி இருக்கிறது. அதுதான், அவ்வப்போது இவ்வாறு வெளிப்படுகிறது!

இந்த புயல் துயரத்தை நரேந்திர மோடி ஏன் வந்து நேரில் பார்க்கவில்லை? நமக்கும் சேர்த்துதான் அவர் தலைமை அமைச்சராக இருக்கிறார் என்று நாம் நம்புகிறோம். ஆனால் மோடியின் அடிமனம் தமிழர்களை அவர்களில் ஒருவராக ஏற்கவில்லை. எனவே, அலட்சியப்படுத்துகிறார்கள்!

நரேந்திர மோடியிடம் புயல் பாதிப்புகளுக்காக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் 15,000 கோடி ரூபாய் கேட்டார். ஆனால், இப்போது வரை வெறும் 353 கோடி ரூபாயைத்தான் கொடுத்திருக்கிறார்கள். நடுவண் வேளாண் அமைச்சகம் 173 கோடி ஒதுக்கியுள்ளது. “ஏன் எங்களை வஞ்சிக்கிறீர்கள்? ஏன் எங்களுக்கு நிதி வழங்க மறுக்கிறீர்கள்” என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி அவர்களே, நீங்கள் ஏன் கேட்கவில்லை?

மோடியைக் கேட்டால், அவரது முகம் உரிந்துவிடுமோ என்று அச்சப்படுகிறார் எடப்பாடி! எட்டுக் கோடி மக்களுக்கு முதல்வராக நீடிக்க உங்களுக்குத் தகுதி இருக்கிறதா?

கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டபோது, அதன் முதலமைச்சர் மோடியை விடாப்பிடியாக தொடர்பு கொண்டு, நிதி பெற்றாரே.. அவரை வெள்ளச் சேதங்களைப் பார்வையிட அழைத்து வந்தாரே.. எடப்பாடி அவர்கள், இதுபோல் முயற்சி எடுத்தாரா?

இப்போது, “கசா” புயலால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு சாதாரணமானது அல்ல! நாங்கள் புயல் பாதிப்புகளைப் பார்வையிடச் சென்றபோது, அங்கிருந்த பெரியவர்களிடம் கேட்டோம். 1957க்குப் பிறகு, இப்போது ஏற்பட்டுள்ள புயல்தான் மிக மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியதாக அவர்கள் சொன்னார்கள். இதைவிடப் பெரிய அழிவு வேறென்ன வேண்டும்? இது பேரிடர் அல்ல பேரழிவு என்கிறோம்!

இந்த புயல் பாதிப்பை, ஏன் “தேசியப் பேரிடராக” இந்திய அரசு அறிவிக்கவில்லை? உங்கள் இந்தியத்தேசியத்தில் தமிழ்நாடு வராதா?

நரேந்திர மோடியை இப்படி வஞ்சிக்கிறார். இன்னொருபுறத்தில், அடுத்த தலைமையமைச்சர் என காங்கிரசுத் தலைவர் இராகுலை அழைக்கின்றார்களே! அவர் தமிழ்நாட்டிற்கு வந்து புயல் பாதிப்புகளைப் பார்வையிட்டாரா? அகில இந்திய காங்கிரசுத் தலைவர்கள் யாராவது வந்தார்களா? ஏன் வரவில்லை?

இந்த இலட்சணத்தில், தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின், அவரது தந்தை கலைஞர் கருணாநிதி இந்திரா காந்தி அம்மையாரை “இந்தியாவின் திருமகளே வருக! நல்லாட்சி தருக!” என்றாரே, அதைப்போல் இப்போது “இராகுலே வருக! நல்லாட்சித் தருக!” என அழைக்கின்றார். தமிழ்நாட்டுக்குக் காங்கிரசும், அதன் தலைவர்களும் என்ன செய்தார்கள்? இவர்கள்தான் மாற்று என்பது ஏமாற்றில்லையா?

தி.மு.க. வேண்டுமானால் கசா புயல் பாதிப்புக்காக சில உதவிகளை – நிதியை அளித்திருக்கலாம். ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் 15,000 கோடி ரூபாய் கேட்டு மோடியிடம் கோரிக்கை வைத்தாரே! அந்தத் தொகையைத் தாருங்கள் என்று இந்திய அரசுக்கு – நரேந்திர மோடிக்கு தி.மு.க. செயல் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் என்ன அழுத்தம் கொடுத்தார்? என்ன போராட்டம் நடத்தினார்? என்ன குரல் கொடுத்தார்?

எனவே, நீங்கள் இருவரும் ஒன்றாகவே இருக்கின்றீர்கள்! செல்லா நாணயத்தின் இருபக்கங்களாக தி.மு.க.வும் – அ.தி.மு.க.வும் இருக்கின்றன! நீங்கள் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக் கொண்டு, தில்லியை தப்பிக்க விடுகின்றீர்கள்!

காங்கிரசும் பா.ச.க.வும் ஒன்றே! காங்கிரசுக்கு இன்னொரு பெயர்தான் - பா.ச.க.! இந்தியத்தேசியத்தின் இன்னொரு பெயர்தான் இந்துத்துவம்! அதுபோல், தில்லியின் கங்காணிதான் திராவிடம்!

இம்மூவரும் நம்மை – தமிழ் மக்களைக் கைவிட்டுவிட்டார்கள். எனவேதான், நாம் களத்தில் இறங்கிச் செயல்பட வேண்டியுள்ளது. நாங்கள் தமிழ் மக்களைக் கைவிட மாட்டோம்!

எனக்கு முன்னால் பேசிய அன்புத்தோழர் சீமான், புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் வீடுகள் கட்டிக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டபோது, சிலரது வீடுகளில் உதயசூரியன் சின்னம் வரையப்பட்டிருப்பதை அவர்களது தோழர்கள் சுட்டிக்காட்டியதைச் சென்னார். “அதனால் என்ன தம்பி? அவர்களும் நம் தமிழர்கள்தானே!” என்றார். இவ்வாறு நாம் தமிழர்களைக் கட்சி கடந்து நேசிக்கிறோம் அல்லவா? இதுதான் இங்கு தேவை!

இவ்வளவு பெரிய பேரிடர் தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் நிலையில், ஏன் இந்திய அரசு உடனடியாக மீட்புப் பணிகளுக்கு இந்திய இராணுவத்தை இறக்கவில்லை? இராணுவம் வந்திருந்தால், ஒரு வாரத்தில் மின் கம்பங்களை மீட்டு, மின் விநியோகத்தை சீரமைத்திருக்கலாம் அல்லவா? ஏன் செய்யவில்லை?

இன்னும்கூட, பல பகுதிகளில் பம்பு செட்டுகளுக்கு மின்சாரம் இல்லை! வயல் காடுகளில் பயிர்களுக்கு தண்ணீர்ப் பாய்ச்ச, ஆழ்குழாய் கிணறுகளுக்கு மின்சார இணைப்பு கொடுக்கப்படவில்லை.

ஒட்டு மொத்தத் தமிழ்நாட்டையும் இராணுவ மண்டலமாக்கி, தொழிற்சாலைகளை ஆங்காங்கு வைத்து, தமிழர்களைக் கண்காணிப்பில் வைக்கத் திட்டமிடுகின்ற இந்திய அரசு, மீட்புப் பணிகளுக்கு இந்திய இராணுவத்தை இறக்க சிந்திக்கவில்லையே ஏன்? தமிழ்நாடு முதலமைச்சர் ஏன் அவ்வாறு கோரிக்கை வைக்கவில்லை? மீட்புப் பணிகளுக்கு இராணுவத்தைக் கேட்டு கோரிக்கை வைத்தால், தன் வீட்டிற்கு ரெய்டு வரும், வழக்கு வரும், சிறைக்குச் செல்லவும் நேரிடலாம் என்று எடப்பாடியார் அச்சப்படுகிறாரா?

இவ்வளவு நடந்தபிறகும், இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் துயர் துடைப்புத் தொகையும் முழுமையானதாக இல்லை. நெற்பயிர் சேதத்துக்கு ஒரு ஏக்கருக்கு 25,000 ரூபாய் வழங்க வேண்டும். எட்டுவழிச் சாலையைக் கொண்டு வரும்போது, ஒரு தென்னை மரத்திற்கு 40,000 முதல் 50,000 ரூபாய் வரை விலை பேசினீர்களே! இப்போது, வெறும் 1,100 ரூபாயைக் கொடுத்தால் என்ன ஞாயம்? தென்னையை வெட்டி எடுக்கவே 1000 ரூபாய் வரைத் தேவைப்படுகிறது. எனவே, ஒரு தென்னை மரத்திற்கு குறைந்தபட்சம் 15,000 ரூபாயாவது வழங்க வேண்டும்.

உழவர்களின் பயிர்க்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். கடந்த ஆண்டு, கடன் தள்ளுபடியின் போது தமிழ்நாடு அரசு ஐந்து ஏக்கர் வரம்பு விதித்தது. அதை மதுரை உயர் நீதிமன்றத்தில் நீக்கியபோது, அதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று வாதாடி, ஐந்து ஏக்கர் வரம்பை உறுதிப்படுத்தியது தமிழ்நாடு அரசு! அவ்வாறெல்லாம் இல்லாமல், இப்போது அனைவருக்கும் வரம்பின்றி கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். பெரிய நிலம் வைத்திருப்பவர்களுக்கு அதற்கேற்ப பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பாரபட்சம் காட்டாமல் அனைவருக்கும் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

பன்னாட்டு நிறுவனங்களுக்கும், வடநாட்டு பெருமுதலாளிகளுக்கும் வாராக் கடன் என்ற பெயரில் பல இலட்சம் கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்கின்றீர்களே, ஏன் உழவர்களுக்கு இந்த துயரமான நேரத்தில் கடன் தள்ளுபடி செய்யக்கூடாது?

உழவர்களுக்கு அளிக்கப்படும் கடன் தள்ளுபடி என்பது சலுகையோ, பிச்சையோ அல்ல! தங்களது நெல்லுக்கும், பருத்திக்கும், சர்க்கரைக்கும் வழங்கப்பட வேண்டிய உண்மையான விலையைக் குறைத்து, அவர்களது அடிவயிற்றில் அடித்து குறைந்த விலைக்கு வாங்குகிறீர்களே! அதனுடன் கொடுக்கப்படாத விலையின் ஒருபகுதியைத்தான் (Deffered Price) அவர்கள் கடன் தள்ளுபடியாகக் கேட்கிறார்கள். எனவே, உழவர்களுக்குக் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.

உழவுத் தொழிலாளின் வீடுகள் பெரும் சேதமடைந்துள்ளன. அவர்களுக்கு இப்போது உழவு வேலையும் இல்லை. எனவே, அவர்களது குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் 15,000 ரூபாயாவது இழப்புத் தொகை அளிக்க வேண்டும்.

இதையெல்லாம் செய்யாமல் என்ன துயர் துடைப்புப் பணி இருக்கிறது? எனவே, தமிழ்நாடு அரசு இவற்றையெல்லாம் செய்ய வேண்டும்! இந்திய அரசிடம் அதற்குரிய நிதியைக் கேட்க வேண்டும்!”

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் பேசினார்.
தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை, தலைமைச் செயற்குழு தோழர்கள் க. விடுதலைச்சுடர், தை. செயபால், பழ. இராசேந்திரன், தஞ்சை மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி, திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் மூ.த. கவித்துவன், பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோர் பி. தென்னவன், மகளிர் ஆயம் தோழர் செம்மலர், தஞ்சை மாவட்டச் செயற்குழு” தோழர்கள் இரெ. கருணாநிதி, க. காமராசு, இரா.சு. முனியாண்டி உள்ளிட்ட திரளான பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர். திரளான தமிழின உணர்வாளர்களும், பொது மக்களும் பங்கேற்றனர்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Thursday, July 12, 2018

காவிரி ஆணையமும் ஒழுங்காற்றுக் குழுவும் செயலற்றுப் போனது ஏன்? காவிரி உரிமை மீட்புக் குழு கேள்வி!

காவிரி ஆணையமும் ஒழுங்காற்றுக் குழுவும் செயலற்றுப் போனது ஏன்? காவிரி உரிமை மீட்புக் குழு கேள்வி!
காவிரி உரிமை மீட்புக் குழுக் கூட்டம் இன்று (12.07.2018) காலை தஞ்சையில் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தலைமையில் நடந்தது. தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. அய்யனாபுரம் சி. முருகேசன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் திரு. த. மணிமொழியன், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், இந்திய சனநாயகக் கட்சி மாவட்டத் தலைவர் திரு. ச. சிமியோன் சேவியர்ராசு, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி உழவர் அமைப்புத் தலைவர் திரு. தங்கராசு, மீத்தேன் எதிர்ப்பு முன்னனித் தலைவர் பொறியாளர் கோ. திருநாவுக்கரசு, சமவெளி விவசாயிகள் சங்கத் தலைவர் பொறியாளர் சு. பழனிராசன், தமிழ்த் தேசியப் பாதுகாப்புக் கழகத் தலைவர் வழக்கறிஞர் த.சு. கார்த்திகேயன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், தமிழ்த்தேச மக்கள் முன்னணி மாவட்டச் செயலாளர் தோழர் அருண்சோரி, தமிழர் தேசிய முன்னணி திருவாரூர் மாவட்டச் செயலாளர் திரு. கலைச்செல்வம், மனிதநேய சனநாயகக் கட்சி மாவட்டச் செயலாளர் திரு. அகமது கபீர், காவிரி உரிமை மீட்புக் குழு தோழர் தனசேகர், தமிழக விவசாய சங்க மாவட்டச் செயலாளர் திரு. செகதீசன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கலந்தாய்வுக்குப் பிறகு பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த 02.07.2018 அன்று கூடிய காவிரி மேலாண்மை ஆணையமும், 05.07.2018 அன்று கூடிய காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் இதுவரை செயலற்ற அமைப்புகளாக உள்ளன. உச்ச நீதிமன்றம் இறுதி செய்து அளித்த தீர்ப்பின்படி கர்நாடகத்தின் 4 அணைகள், தமிழ்நாட்டின் 3 அணைகள், கேரளாவின் ஓர் அணை ஆகியவற்றில் தண்ணீரைத் திறந்து மூட ஆணையிடும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவுக்கும்தான் இருக்கிறது. ஆனால் கடந்த சூன் 1ஆம் நாள் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் இதுவரை அந்தப் பணியைச் செய்யவில்லை!

சாகுபடிக்குத் தண்ணீர் திறந்து விட வேண்டிய சூன், சூலை மாதங்களில் இந்த எட்டு அணைகளையும் ஆணையமும் ஒழுங்காற்றுக் குழுவும் எட்டிக்கூட பார்க்கவில்லை. பெங்களூரில் தலைமையகம் வைத்து அங்கேயே தங்கிப் பணியாற்ற வேண்டிய காவிரி ஒழுங்காற்றுக் குழுத் தலைவரும், அதன் முழுநேர உறுப்பினர்களும் பெங்களூரில் தங்கவில்லை.

இவ்வாண்டு கர்நாடக அணைகளில் சூன் மாதம் முதல் தண்ணீர் அதிகமாக இருக்கிறது. சூன், சூலை மாதங்களுக்குரிய தண்ணீரை உரிய கால வரையறைப்படி ஆணையமும் ஒழுங்காற்றுக் குழுவும் திறந்து விட்டிருந்தால் தமிழ்நாட்டில் குறுவை சாகுபடி தொடங்கியிருக்க முடியும். 

கடந்த 05.07.2018 அன்று ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் நவீன்குமாரிடம், சூலை மாதத்திற்குத் திறந்துவிட வேண்டிய 31.25 ஆ.மி.க. தண்ணீரை கர்நாடகம் திறந்து விடுமா என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, “பருவமழை நன்கு பெய்கிறது” என்று மட்டும் கூறிவிட்டு எழுந்து சென்று விட்டார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி அமர்த்த வேண்டிய முழு நேரப்பணி அதிகாரிகளை நியமிக்காமல் வேறொரு வேலையில் முழுநேரமாக உள்ளவர்களை கூடுதல் பணி செய்வோராக ஆணையத்திற்கும் ஒழுங்காற்றுக் குழுவிற்கும் இந்திய அரசு அமர்த்தியுள்ளது. நரேந்திர மோடி அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பதற்காக இவ்விரு அமைப்புகளையும் முடக்கி வைத்திருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. 

மோடி அரசின் இந்த இனப்பாகுபாட்டு அணுகுமுறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்துமாறு வலியுறுத்த வேண்டிய எடப்பாடி அரசு, காவிரி உரிமையை மீட்டு விட்டதாகப் போலி வெற்றி விழாக்களை நடத்தித் தமிழர்களை ஏமாற்றுகிறது; இனத்துரோகம் செய்கிறது. 

வழக்கத்தைவிட அதிகமாகப் பருவமழை பெய்து, கர்நாடக அணைகள் உடைந்து விடும் அபாயம் ஏற்பட்டதால் அந்த மிகை வெள்ள நீரைத் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட்டுள்ளது கர்நாடக அரசு. வெள்ள அபாய காலத்தில் அணைகளை நேரடியாகப் பார்வையிட்டு மிகை நீரைத் திறந்துவிட ஆணை இட வேண்டிய ஆணையமும் ஒழுங்காற்றுக் குழுவும் கர்நாடகம் வராதது ஏன்? ஆணையமும் ஒழுங்காற்றுக் குழுவும் கர்நாடக அரசிடம் தனது அதிகாரத்தைத் தாரை வார்த்து விட்டனவா?

கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் ஆவியாகப் போகும் நீரின் அளவு, நீர் இருப்பு, வருத்து, வெளியேற்றம் உள்ளிட்ட எல்லா புள்ளி விவரங்களையும் திரட்டித் தருமாறு, இந்த மாநிலங்களைக் கேட்டுக் கொண்டு 05.07.2018 அன்று கூட்டத்தில் படிவம் கொடுத்துள்ளது ஒழுங்காற்றுக் குழு. நிரப்பப்பட்ட படிவங்களை 16.07.2018க்குள் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. 

உண்மையில் இந்த விவரங்களை காவிரி ஒழுங்காற்றுக் குழுதான் தனது நேரடி ஆய்வில் திரட்ட வேண்டும். அதைச் செய்யாமல், ஒன்றுக்கொன்று முரண்பாடுள்ள மாநிலங்களை இந்த விவரங்களைத் தரச் சொன்னது சரியா? நீதியா? இதில் உண்மை விவரங்கள் வரும் என்பதற்கு என்ன உறுதி இருக்கிறது? 

அரசிதழில் வெளியிடப்பட்ட 1991 இடைக்காலத் தீர்ப்பு, 2007 இறுதித் தீர்ப்பு, அவ்வப்போது வந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் எதையும் இந்திய அரசு செயல்படுத்தியதில்லை. கர்நாடக அரசின் சட்டவிரோதச் செயல்களுக்கே தொடர்ந்து இந்திய ஆட்சியாளர்கள் துணை நின்றார்கள். 

இப்போது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் மூன்று நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற ஆயம், 18.05.2018 அன்று வழங்கிய காவிரி இறுதித் தீர்ப்பையும் இந்திய அரசும், கர்நாடக அரசும் செயல்படுத்தப் போவதில்லை என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. 

மிகை வெள்ளம் வரும் இந்தப் பருவத்தில் செயல்படாத மேலாண்மை ஆணையமும், ஒழுங்காற்றுக் குழுவும் பருவமழை குறையும் காலத்தில் செயல்படுமா என்ற வினா எழுகிறது. தமிழ்நாடு அரசு இப்போதுகூட செயல்படவில்லை என்றால் எப்போது செயல்படும்?

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery

Friday, July 6, 2018

காவிரி ஒழுங்காற்றுக் குழு சூலை மாதத் தண்ணீரைத் திறக்காதது ஏன்? தோழர் பெ. மணியரசன் கேள்வி!

காவிரி ஒழுங்காற்றுக் குழு சூலை மாதத் தண்ணீரைத் திறக்காதது ஏன்? காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் கேள்வி!
புதுதில்லியில் நேற்று (05.07.2018) கூடிய காவிரி ஒழுங்காற்றுக் குழு, சூலை மாதத்திற்குக் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டிய 31.25 ஆ.மி.க. (டி.எம்.சி.) தண்ணீரைத் திறந்து விட ஏற்பாடு எதுவும் செய்யாமல், புள்ளி விவரங்கள் தொடர்பாக நான்கு மாநிலங்களும் படிவம் நிரப்பச் சொல்லிவிட்டுக் கலைந்துள்ளது. இது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது!

கடந்த 02.07.2018 அன்று புதுதில்லியில் கூடிய காவிரி மேலாண்மை ஆணையம் சூலை மாதத்திற்குரிய 31.25 ஆ.மி.க. தண்ணீரைக் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டும் என்று அறிவித்ததே, அது என்னாயிற்று? வழக்கம்போல் இதுவும் ஏட்டுச் சுரைக்காய் தானா?

கர்நாடகத்தில் வழக்கத்தைவிட அதிகமாகப் பருவமழை பெய்து, அம்மாநில அணைகளில் சராசரியாக 90 விழுக்காட்டிற்கு மேல் தண்ணீர் நிரம்பியுள்ள நிலையில்கூட, சூலை மாதத்திற்குரிய தண்ணீரைத் தமிழ்நாட்டிற்குத் திறக்காவிட்டால், காவிரி ஆணையம் – ஒழுங்காற்றுக் குழு என்பவையெல்லாம் பொம்மை அமைப்புகளா என்ற கேள்வி எழுகிறது.

நேற்று நடந்த ஒழுங்காற்றுக் குழுவில் நீர்த் தேக்கங்களில் தண்ணீர் ஆவியாகப் போவது பற்றியும், நீர் இருப்பு, வருகின்ற தண்ணீர், மழைப்பொழிவு போன்றவை பற்றியும் புள்ளி விவரங்களை நான்கு மாநிலங்களும் நிரப்பித் தருவதற்கான படிவங்களை கொடுத்ததுதான் அக்கூட்டத்தின் ஒரே பணியாகத் தெரிகிறது.

இப்படிவங்களை சூலை 16க்குள் நான்கு மாநிலங்களும் ஒழுங்காற்றுக் குழுவுக்குத் தர வேண்டும் என்றும், அதன் அடுத்த கூட்டம் சூலை 19இல் நடக்கும் என்றும் அதன் தலைவர் நவீன் குமார் தெரிவித்துள்ளார். அவரிடம் செய்தியாளர் ஒருவர் சூலை மாதத்திற்குரிய தண்ணீர் திறந்து விடுவது பற்றி என்ன ஆணை பிறப்பித்துள்ளீர்கள் எனக் கேட்டதற்கு, “பருவமழை நன்கு பெய்து கொண்டிருக்கிறது” என்று மட்டும் விடையாகக் கூறினார்.

சூலை மாதத்திற்குரிய தண்ணீரைக் கர்நாடகம் திறந்துவிட்டால் இவ்வாண்டு குறுவை சாகுபடி செய்ய முடியும்!

காவிரியை மீட்டு விட்டதாக “வெற்றி” விழா கொண்டாடி வரும் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த ஆணைப்படி கூடக் கர்நாடகத்திலிருந்து தண்ணீர் பெற அக்கறை காட்டவில்லை என்பது வேதனை அளிக்கிறது.

காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு மற்றும் அவ்வப்போது வெளியிட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் ஆகியவற்றைச் செயல்படுத்த மறுத்ததுபோல்தான் மூன்று நீதிபதிகள் ஆயம் வழங்கிய காவிரி இறுதித் தீர்ப்பையும், அதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் 02.07.2018 அன்று வெளியிட்ட ஆணையையும் செயல்படுத்த இந்திய அரசு மறுக்கிறதா என்ற ஐயம் வலுவாக எழுகிறது.

நேற்று (06.07.2018) கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, கர்நாடக சட்டப்பேரவையில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் காவிரியின் குறுக்கே மேக்கேத்தாட்டில் அணை கட்டுவோம் என்று உறுதியளித்துள்ளார். அத்துடன், கன்னட அமைப்புகள் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட்டால், முழு அடைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துவோம் என அறிவித்துள்ளன. இவை அனைத்தும் கர்நாடகத்திற்கு இந்திய அரசு கொடுக்கும் துணிச்சலில்தான் உருவாகின்றன.

தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆணைப்படி உடனடியாக சூலை மாதத்திற்குரிய தண்ணீரைக் கர்நாடகத்திடமிருந்து பெற்றுத் தர வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery

Sunday, December 17, 2017

தமிழ்நாட்டில் தமிழில்லா தெலுங்குப் பள்ளிகள் நடத்த தெலுங்கு மாநாட்டில் கோரிக்கை : தமிழ்நாட்டில் மீண்டும் விசயநகர ஆட்சி நடத்தும் திட்டமா? தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

தமிழ்நாட்டில் தமிழில்லா தெலுங்குப் பள்ளிகள் நடத்த தெலுங்கு மாநாட்டில் கோரிக்கை : தமிழ்நாட்டில் மீண்டும் விசயநகர ஆட்சி நடத்தும் திட்டமா? தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் நடந்து வரும் ஐந்து நாள், “உலகத் தெலுங்கு மாநாட்டில்” பேசியவர்கள், தமிழ்நாட்டில் தெலுங்கைப் பாட மொழியாகவும் பயிற்று மொழியாகவும் பள்ளிக் கல்வியில் வைக்க வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறார்கள் என்ற செய்தி ஆங்கில நாளேடுகளில் வந்துள்ளது.

உலகத் தெலுங்கு மாநாடு, 15.12.2017லிருந்து 19.12.2017 வரை ஐந்து நாள் நடக்கிறது. அம்மாநாட்டை 15.12.2017 அன்று இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்துள்ளார். இந்தியக் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் 19.12.2017 அன்று நிறைவு விழாவில் கலந்து கொள்கிறார். இம்மாநாட்டை, தெலங்கானா அரசு நடத்துகிறது.

இம்மாநாட்டில் பேசியவர்களில் பலர் தமிழ்நாட்டில், தமிழ்நாடு அரசு தெலுங்கை அழித்து தமிழை வளர்க்க நடவடிக்கை எடுத்துள்ளது, சட்டம் போட்டுள்ளது, அந்த சட்டத்தைக் கைவிட வேண்டும், தெலுங்கைப் பாட மொழியாகவும், பயிற்று மொழியாகவும் தமிழ்நாட்டுப் பள்ளிகளில் வைக்க வேண்டும் என்றெல்லாம் பேசியுள்ளார்கள்.

ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் பல இலட்சம் தமிழர்கள் மரபு வழிப்பட்ட குடிமக்களாக நீண்டகாலமாக வாழ்ந்து வருகிறார்கள். மொழிவழி மாநிலப் பிரிவினையின்போது, ஏராளமான தமிழர் நகரங்களும் கிராமங்களும் சூழ்ச்சியாக ஆந்திரப்பிரதேசத்தில் இணைக்கப்பட்டன. இன்றைக்கும் அங்கு தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் சிறுபான்மை தேசிய இனமாக உள்ள தமிழர்கள் பயில தமிழைப் பாட மொழியாகவும், பயிற்று மொழியாகவும் வைத்திருக்கிறார்களா? இல்லை! தெலுங்கு மாநாட்டில் பேசியவர்கள் தங்களுடைய தாயகமான ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் தமிழர்கள் தமிழ் படிக்க வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்காமல், தமிழ்நாட்டில் தெலுங்கைப் பயிற்று மொழியாகவும், பாட மொழியாகவும் தொடர வேண்டும் என்று ஆவேசத்தோடு பேசுவதன் பொருள் என்ன?

தமிழ்நாடு தமிழர்களின் தாயகமாக மட்டும் இல்லை, தெலுங்கர்களின் தாயகமாகவும் இருக்கிறது என்று கருதுகிறார்கள். இது ஒரு சனநாயக மனப்பாங்கு என்று கருதினால், ஆந்திரா மற்றும் தெலங்கானாவை தெலுங்கர்களுக்கும், தமிழர்களுக்கும் உரிய மாநிலங்களாகக் கருத வேண்டும்.

மேற்படி தெலுங்கு மாநாட்டில் பேசியவர்கள் மட்டுமல்ல, ஆந்திர – தெலங்கானா அரசுகளும் தெலுங்கைப் பயிற்று மொழியாகவும், பாட மொழியாகவும் தமிழ்நாட்டில் வைக்க வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன என்பதையும் அம்மாநாட்டில் எடுத்துக் காட்டிப் பேசியுள்ளார்கள். தெலங்கானா அமைச்சர்களும் பேசியுள்ளார்கள்.

ஆந்திராவிலும் தெலங்கானாவிலும் உள்ள தமிழர்கள் தமிழ் வழியில் படிக்க வசதியளிக்குமாறு, அம்மாநில அரசுகளை தமிழ்நாடு அரசு வலியுறுத்தி இருக்கிறதா? நமக்குத் தெரிந்த வரை அவ்வாறான செய்தியில்லை!

தெலுங்கு வழியில் படித்திட போதிய மாணவர்கள் சேரவில்லை என்று போலிக் காரணம் கூறி, நூற்றுக்கணக்கான தெலுங்குப் பள்ளிகளை தமிழ்நாடு அரசு மூடிவிட்டதாக அம்மாநாட்டில் பேசியோர் குற்றம்சாட்டியுள்ளார்கள். தமிழ்நாட்டில் தமிழ்வழிப் பள்ளிக் கூடங்கள் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கில் மூடப்பட்டு வருகின்றன. காரணம் போதிய மாணவர் எண்ணிக்கை இல்லை என்பதுதான்! பெற்றோர்கள் எதிர்கால வேலை வாய்ப்பு கருதி, தனியார் நடத்தும் ஆங்கில வழிப் பள்ளிக் கூடங்களுக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அப்பள்ளிகள் மூடப்படுவதற்கு இதுதான் உண்மையான காரணம்!

ஆனால், தெலுங்கு மொழிப் பள்ளிக் கூடங்களை மூடி, தமிழ்வழிப் பள்ளிகளுக்குத் தெலுங்கு மாணவர்களை தமிழ்நாடு அரசு விரட்டுகிறது என்று பொய்க் குற்றச்சாட்டை தெலுங்கு மாநாட்டில் பேசுவது, அறிஞர்களுக்கு அழகா?

ஏற்கெனவே வெங்கையா நாயுடு தொடங்கி வைத்த தெலுங்கு மாநாடுகள் சென்னையில் நடந்துள்ளன. அவற்றில் தமிழ்நாட்டில் தெலுங்கைத் துணை ஆட்சி மொழியாக, கல்வி மொழியாகச் செயல்படுத்த வேண்டுமென்று தொடர்ந்து தீர்மானம் போட்டார்கள். பதவிக்காக, இனத்துரோகம் செய்யும் தமிழிசை சௌந்திரராசன், பொன். இராதாகிருட்டிணன் போன்றவர்கள் அம்மாநாடுகளில் பங்கேற்றார்கள். இப்பொழுது, தெலுங்கை வளர்ப்பதற்காக தெலங்கானாவில் மாநாடு போட்டவர்கள், தமிழ்நாட்டில் தமிழை அழிப்பதற்கான திட்டங்களைத் தீட்டுகிறார்கள்.

இந்தத் துணிச்சல் அவர்களுக்கு எப்படி வந்தது? ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இல்லாத திராவிட அரசியல், தமிழ்நாட்டில் கோலோச்சுவதால் வந்த துணிச்சல் இது! திராவிடம் என்பதே ஒன்று தமிழின மறுப்பாக இருக்கும், அல்லது தமிழின மறைப்பாக இருக்கும். தெலுங்கு ஆண்டு பிறப்பிற்கு தமிழ்நாட்டில் விடுமுறை உண்டு! ஆந்திராவிலோ, தெலங்கானாவிலோ தமிழ் ஆண்டு பிறப்பிற்கு விடுமுறை கிடையாது!

தமிழ்நாடு முதலமைச்சர்கள் அண்ணா, எம்ஜிஆர் ஆகியோர் இறந்தபோது, ஆந்திரப்பிரதேசத்தில் விடுமுறை விடவில்லை! ஆனால், ஆந்திரப்பிரதேச முதல்வர் இராஜசேகர ரெட்டி இறந்தபோது, கலைஞர் கருணாநிதி தலைமையிலிருந்து தமிழ்நாடு அரசு விடுமுறை விட்டது. இவ்வாறெல்லாம் தமிழ்நாட்டு அரசியல் ஆந்திரப்பிரதேச தெலுங்கர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வந்ததால், இன்றைக்குத் தமிழ்நாட்டில் தமிழை ஒரு பாடமொழியாக (Language) பத்தாம் வகுப்பு வரை படிக்க வேண்டுமென்ற தமிழ்நாடு அரசின் சட்டத்தைத் தெலுங்கு அழிப்பு சட்டமாக தெலுங்கு மாநாட்டில் சித்தரிக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் எல்லையோரங்களில் உள்ள தெலுங்கு, கன்னட, மலையாள சிறுபான்மை மக்கள் தங்கள் தாய் மொழியைக் கற்க உறுதியளிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை! அவர்கள் அதை ஒரு மொழிப்பாடமாகக் கற்கட்டும்! ஆனால், அவர்கள் தமிழ்நாட்டின் ஆட்சிமொழியாக, தமிழ்நாட்டின் கல்விமொழியாக உள்ள தமிழை மொழிப்பாடமாகவும், பயிற்று மொழியாகவும் கற்க வேண்டும்.

நமது இந்த சனநாயக மொழித் திட்டத்தை ஆந்திர, கர்நாடக, கேரள அரசுகள் முறைப்படி செயல்படுத்துவதில்லை. அதைச் செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு ஆட்சியாளர்கள் கோருவதுமில்லை. தமிழ்நாட்டில் திராவிட ஆட்சியில், தமிழினம் அரசியல் பாதுகாப்பற்ற அனாதை இனமாகத்தான் இருக்கிறது!

நமது இந்த “அனாதை”த்தன்மையை அண்டை இனங்கள் பயன்படுத்தி, தமிழ் – தமிழர் என்ற அடையாளங்களை - மொழிவழித் தாயகத்தை சீர்குலைக்க தொடர்ந்து முயல்கின்றன. தமிழ்நாட்டில் மீண்டும் விசயநகர நாயக்க மன்னர்களின் ஆட்சியைக் கொண்டு வர, ஆந்திரப்பிரதேச – தெலங்கானா தெலுங்கர்கள் விடா முயற்சி செய்கிறார்கள் என்பதைத்தான் தெலுங்கு மாநாட்டில் பேசியோரின் தமிழ் எதிர்ப்புக் கருத்துகள் தெரிவிக்கின்றன.

எனவே, தமிழர்கள் மிகவும் சனநாயகத்தன்மையுள்ள, அதேவேளை தமிழ் – தமிழர் தற்காப்பு கவசமாக உள்ள தமிழ்த்தேசியத்தை உயர்த்திப்பிடித்து, தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டின் தமிழ் மொழியை முழு ஆட்சி மொழியாகவும், கல்வி மொழியாகவும் செயல்படுத்த வலியுறுத்த வேண்டும். அதேவேளை, தமிழர்கள் சிறுபான்மைத் தேசிய இனங்களாக காலங்காலமாக வாழ்ந்து வரும் ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் தமிழை மொழிப் பாடமாகப் படிக்க முழு உறுதி பெறும் வகையில் தமிழ்நாடு அரசு செயல்படவும் வலியுறுத்த வேண்டும்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Thursday, December 7, 2017

"குமரிப் புயலில் வரலாறு காணாத பேரழிவு ஏற்பட்டும் முதலமைச்சர் அங்கு போகாதது ஏன்?" தோழர் பெ. மணியரசன் கேள்வி!

"குமரிப் புயலில் வரலாறு காணாத பேரழிவு ஏற்பட்டும் முதலமைச்சர் அங்கு போகாதது ஏன்?" தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி!
குமரி மாவட்டத்தைத் தாக்கிய ஒக்கிப் புயலால் உயிரிழந்த மீனவர்களின் எண்ணிக்கையையும், இதுவரை மீட்கப்படாமல் காணாமல் போனோர் என்று அறிவிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கையையும் பார்த்தால் எதிரிப்படை ஒன்று, தமிழர்களை இனப்படுகொலை செய்ததுபோல் ஏற்பட்ட அழிவாகக் கருத வேண்டியுள்ளது! இந்த உயிரிழப்பு மற்றும் பொருளிழப்பு உள்ளிட்ட பேரழிவுகளுக்கு ஆளான மக்கள், குமரி மாவட்டத்தை மீண்டும் கேரளத்துடன் சேருங்கள் என்று குரலெழுப்பும் துயரமும் நடந்து கொண்டுள்ளது. 

கடலோர மீனவர்களுக்கு இந்த இழப்பு என்றால், வேளாண் நிலங்களுக்குப் பேரழிவு ஏற்பட்டுள்ளது. பலன் தரும் இலட்சக்கணக்கான மரங்கள் விழுந்துவிட்டன. குமரி மாவட்டமே எதிரிகளால் சூறையாடப்பட்ட நாடுபோல் காட்சியளிக்கிறது. ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேரழிவுக்கு உள்ளாகி, உறவுகளையும் உடைமைகளையும் இழந்து கதறிக் கொண்டிருக்கும் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல ஏழு நாட்களாகியும் அங்கு வரவில்லை!

கேரளத்திலும் கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் உயிரிழப்பு ஏராளமாக நடந்திருக்கிறது. அங்கும் கடலுக்குப் போன மீனவர்கள் திரும்பாத நிலை உள்ளது. மரங்களும், வீடுகளும் புயலால் தாக்கப்பட்டு வீழ்ந்துள்ளன. அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள், அந்த மக்களோடு நேரில் நின்று துயர் துடைப்புப் பணிகளை கவனித்து வருகிறார். இறந்த மீனவர் குடும்பத்திற்கு 20 இலட்சம் ரூபாய் உதவித் தொகை என்று ஏற்கெனவே அறிவித்து விட்டார். “இது ஒரு பேரிடர்” என்றும் அவர் அறிவித்திருக்கிறார். 

இன்று (07.12.2017) பாதிக்கப்பட்ட கடலோர மக்கள் பல்லாயிரக்கணக்கானோர், 12 கிலோ மீட்டர் பேரணியாக நடந்து சென்று குழித்துறை தொடர்வண்டி நிலையத்தை முற்றுகையிட்டு, தண்டவாளத்தில் பட்டினியோடு இந்த இரவிலும் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களின் முதன்மையானக் கோரிக்கைகள் - தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் வந்து பார்வையிட வேண்டும், கேரளத்தில் கடலில் சிக்கிய மீனவர்களை மீட்பதற்கு எடுக்கப்பட்ட விரைவான பல்வகை மீட்புப் பணிகளைப் போல் கன்னியாகுமரி மீனவர்களை மீட்கவும் நடைபெற வேண்டும், கேரளத்தில் இறந்த மீனவர் குடும்பத்திற்கு 20 இலட்சம் தருவதைப்போல் தமிழ்நாட்டிலும் தர வேண்டும் என்பன போன்றவையாகும். 

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய அரசு அமைச்சர் பொன். இராதாகிருட்டிணன் வெளிநாட்டு நிகழ்ச்சிகளுக்குப் போய்விட்டு, இன்றுதான் வந்திருக்கிறார் என்றும், வந்தவர் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்ப்பதற்கு மாறாக நாகர்கோவிலில் ஒரு வணிக நிலையத் திறப்புவிழாவில் கலந்து கொள்வதில் அதிக அக்கறை காட்டினார் என்றும் அம்மக்கள் விமர்சிக்கிறார்கள். நடுவண் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், இரண்டு இடங்களுக்கு வந்து பேசிவிட்டு திரும்பிவிட்டார். கன்னியாகுமரி பேரிழப்பை “தேசியப் பேரிடர்” என்று நடுவண் அரசை ஏற்கச் செய்ய அவர் முயலவில்லை என்றும் குமரி மாவட்ட மக்கள் கூறுகின்றனர். 

புயல் பாதிப்பைப் பார்க்க வந்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள், பாதிக்கப்பட்ட கடற்கரை கிராமங்களுக்குப் போகாமல் நகரத்தில் அதிகாரிகளோடும், மீனவப் பிரதிநிதிகளோடும் பேசிவிட்டுத் திரும்பிவிட்டார் என்றும் அம்மக்கள் துயரத்தோடு கூறுகிறார்கள். 

புயல் பேரழிவு நடந்து ஏழாம் நாள் பல்லாயிரக்கணக்கான மக்கள் குழித்துறை தொடர்வண்டி தண்டவாளத்தில் உட்கார்ந்து போராடிக் கொண்டிருக்கும் நிலையில், இன்று (07.12.2017) இரவு, இறந்துபோன மீனவர்களுக்கு 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மிகவும் காலம் தாழ்த்தியும், மக்கள் போராடிய பின்னும் அறிவித்த இந்த இழப்பீட்டுத் தொகை, கேரள அரசு வழங்கியதில் பாதித் தொகைதான் என்பது மிகவும் வருத்தத்திற்குரியது! 

இதுவரை சந்திக்காத பெரும் துயரை – பேரழிவை கன்னியாகுமரி மாவட்ட மக்கள் சந்தித்துள்ளார்கள். எனவே, இந்திய அரசு இதை தேசியப் பேரிடராக அறிவித்து, தேவையான நிதியை வழங்கிட நடுவண் அரசை தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும். கேரளாவில் அறிவிக்கப்பட்டுள்ளதைப்போல், தமிழ்நாட்டிலும் உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு 20 இலட்ச ரூபாய் இழப்பீடு அறிவிக்க வேண்டும். 

கடுமையான புயல் வரப்போகிறது என்று 36 மணி நேரத்திற்கு முன்பே கணிக்கக்கூடிய நவீன அறிவியல் தொழில் நுட்பங்கள் வளர்ந்துள்ள இக்காலத்தில், நவம்பர் 30 காலை தாக்கியப் புயல் பற்றி, அதற்கு முதல் நாள் (29.11.2017) மாலைதான் அறிவிக்கப்பட்டது என்பது மிகவும் எச்சரிக்கையற்ற – அக்கறையற்ற செயலாகும்! இதனால்தான், புயல் வரப்போகும் செய்தி தெரியாமல், பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் கடலில் சென்று சிக்கிக் கொண்டார்கள். 

புயல் எச்சரிக்கை அறிவிப்பில் ஏற்பட்ட சகிக்க முடியாத இந்தக் காலதாமதம், துயர் துடைப்புப் பணியிலும் தொடர்வது கொடுமையாகும்! மக்கள் மீது அக்கறையற்ற அலட்சியப் போக்காகும்! 

பல தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் இந்த வேளையில், தமிழ்நாடு முதலமைச்சர் இனிமேலாவது விரைந்து செயல்பட வேண்டும். முதலமைச்சர் வருகைக்காக குழித்துறை தொடர்வண்டி நிலையத்தில் காத்திருக்கும் மீனவர்களை உடனடியாக நேரில் சென்று சந்திக்க வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Sunday, September 17, 2017

தமிழ்த்தேசியர்கள் பெரியாரை விமர்சித்ததுதான் சாதிப் படுகொலைகளுக்குக் காரணம் என்பது உண்மையா? வழக்கறிஞர் அருள்மொழிக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கேள்வி!

தமிழ்த்தேசியர்கள் பெரியாரை விமர்சித்ததுதான் சாதிப் படுகொலைகளுக்குக் காரணம் என்பது உண்மையா? வழக்கறிஞர் அருள்மொழிக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கேள்வி!
 
அண்மையில் மாணவி அனிதாவுக்கு இரங்கல் தெரிவித்த கூட்டத்தில் இயக்குநர் அமீர், வடநாட்டு ஊடகங்கள் அனிதாவை “தலித்” என்று உள்நோக்கத்தோடு பிரித்துப் பேசுகின்றன, அவர் தமிழ்ப்பெண், அவருடைய மரணம் – தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட பேரிழப்பு என்று குறிப்பிட்டார். அப்போது கூட்டத்திலிருந்து பாய்ந்து மேடைக்கு வந்த இயக்குநர் ரஞ்சித், அமீரிடமிருந்து ஒலிவாங்கியைப் பிடுங்கிக் கொண்டு, “தமிழ், தமிழன் என்று சொல்லாதீர்கள், தமிழன் என்று சொல்லிக் கொண்டு சாதிக் கொடுமைகள் நடக்கின்றன, நாங்கள் தலித்துகள்” என்று ஆத்திரத்தோடு பேசினார். திரும்பத் திரும்ப மைக்கைப் பிடுங்கிக் கொண்டு, அமீரைப் பேசவிடாமல் தடுத்துவிட்டார். இதற்கு எதிர்வினையாக, தமிழ்த்தேசியர்கள் இயக்குநர் ரஞ்சித் கருத்துக்கு மறுப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்து ஆங்கில நாளேடு இதுபற்றி இன்று (17.09.2017), ஒரு செய்தித் தொகுப்பு வெளியிட்டிருக்கிறது. அதில், கருத்துக் கூறிய திராவிடர் கழகப் பொறுப்பாளர்களில் ஒருவரான வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள், “மேல்சாதி பெண்களை திருமணம் செய்து கொண்டதற்காக தலித் இளைஞர்கள் கொல்லப்படுவது, இன்றைக்கு நடப்பதைப்போல் 1990களில் நடக்கவில்லை. இப்பொழுது படுகொலைகள் நடப்பதற்கானக் காரணம், தலித்தியர்களும், தமிழ்த்தேசியர்களும் பெரியாரை விமர்சித்ததுதான்! இதன் விளைவுதான் தருமபுரி நாயக்கன்கொட்டாய் தீ வைப்புச் சம்பவம் (2012)” என்று கூறியுள்ளார்.

திராவிடர் கழகத்தில் பன்முகப் பார்வையும், பண்பான விவாதமும் செய்யக்கூடியவர் வழக்கறிஞர் அருள்மொழி. ஆனால், மேற்கண்ட அவரது விமர்சனம் தன்நோக்குவாதம் (Subjectivism) சார்ந்ததாக உள்ளது. அவருக்கு சில கேள்விகள்!

1968இல் (25.12.1968), அண்ணா முதல்வராக இருக்கும்போது - பெரியார் தெம்பாகப் பரப்புரை செய்து கொண்டிருந்த காலத்தில், கீழவெண்மணியில் குழந்தைகள் உட்பட ஒடுக்கப்பட்ட வகுப்பினர் 44 பேர் – ஒரு குடிசையில் வைத்து, மேல்சாதியினரால் எரித்துக் கொல்லப்பட்டார்களே!

திராவிட ஆட்சியில் - பெரியாரின் பகுத்தறிவுப் பரப்புரை நடந்த காலத்தில் இது நடந்தது ஏன்? வெண்மணிப் படுகொலைக்கு உரியவாறு உடனடியாக ஒரு கண்டன அறிக்கைகூட பெரியார் அப்போது தரவில்லை என்பதும், அந்த கொடுமை நடந்த இடத்தை பெரியார் போய் பார்த்து – மக்களுக்கு ஆறுதல் கூறவில்லை என்பதும் கூடுதல் செய்தி!

அதேகாலத்தில் 1968 நவம்பர் 17 அன்று, நாகப்பட்டினம் சிக்கல் கடைத்தெருவில், ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பக்கிரிசாமி என்ற கம்யூனிஸ்ட் தோழர் பட்டப்பகலில் ஆதிக்கசக்திகளால் வெட்டிக் கொல்லப்பட்டார். அதுபோன்று ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குக் குரல் கொடுத்த பலர் அக்காலத்திலும் – அதாவது பெரியார் வாழ்ந்த காலத்திலும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

பெரியார் ஆதரித்த காமராசர் ஆட்சி நடந்த காலத்தில், 1950களில் இராமநாதபுரம் மாவட்டத்தில் தீண்டாமைக் கொடுமை தலைவிரித்தாடியபோது, அதை எதிர்த்த இமானுவேல் சேகரனார் 11.09.1957 அன்று கொலை செய்யப்பட்டதும், பெரும் கலவரம் மூண்டதும் – ஏன் நடந்தது?
பெரியார் காங்கிரசு ஆட்சியை ஆதரித்துக் கொண்டிருந்த போதும், பிறகு தி.மு.க. ஆட்சியை ஆதரித்துக் கொண்டிருந்தபோதும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தேநீர் கடைகளில் தனிக்குவளையில் தேநீர் கொடுத்த முறை – தமிழ்நாடெங்கும் பரவலாக - மிக அதிகமாக இருந்தது. அண்மைக்காலமாக ஒடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தினாலும், பிற்படுத்தப்பட்ட மற்றும் முன்னேறிய வகுப்பிலுள்ள சனநாயக ஆற்றல்களின் பரப்புரையாலும் போராட்டத்தாலும் இரட்டைக் குவளை முறை பெருமளவு குறைந்துவிட்டது. இதுபற்றி வழக்கறிஞர் அருள்மொழி என்ன விடை சொல்கிறார்?

அண்மைக்காலங்களில் தலித் ஆண்கள் மேல்சாதிப் பெண்களை திருமணம் செய்து கொண்டதால், சில இடங்களில் அந்த ஆண்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இது பெரும் கொடுமை! தமிழினத்திற்கே அவமானம்! ஆனால், வழக்கறிஞர் அருள்மொழி கூறுகின்ற 1990கள் – அல்லது அதற்கு முந்தைய காலத்தைவிட, ஒடுக்கப்பட்ட வகுப்பு ஆண்கள் மேல்சாதிப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு இல்லறம் நடத்தக்கூடிய நிகழ்வுகள் இப்பொழுது அதிகரித்துள்ளன என்ற உண்மையை மறுக்கிறாரா?

1980களுக்குப் பிறகு, தலித்திய – தமிழ்த்தேசியப் பரப்புரைகள் இல்லாத காலத்தில், தி.மு.க.வினர் தங்களுடைய குடும்பத் திருமண அழைப்புகளில் சாதிப் பட்டம் போட்டுக் கொள்ளத் தொடங்கினார்கள். சாதிச் சங்கங்களில் பொறுப்பேற்றார்கள். இதற்கெல்லாம் யார் காரணம்?

திராவிட முன்னேற்றக் கழகம், தனது கட்சியின் ஒன்றியச் செயலாளர் – மாவட்டச் செயலாளர் போன்ற பொறுப்புகளையும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் வாய்ப்புகளையும் சாதி பார்த்துதான் ஒவ்வொரு பகுதியிலும் வழங்கியது. இப்போக்கு 1970களிலிருந்து மிகவும் தீவிரமடைந்தது. பொதுத் தொகுதிகளில் ஒடுக்கப்பட்ட வகுப்பினரை வேட்பாளராக தி.மு.க. நிறுத்துவதில்லை. ஆசிரியர் வீரமணியால் “சமூகநீதி காத்த வீராங்கனை” பட்டம் வழங்கிப் பாராட்டப்பட்ட செயலலிதாவின் அ.தி.மு.க.வும் இதையேதான் செய்தது. திராவிடக் கட்சிகளின் இந்த சாதியப் போக்கு தமிழ்த்தேசியம் தோன்றி பெரியாரை விமர்சிப்பதற்கு முன்பாகவே ஏற்பட்டுவிட்டது. இதற்கு யார் காரணம்?

வழக்கறிஞர் அருள்மொழி, தலித்தியர்களும் தமிழ்த்தேசியர்களும் பெரியாரை விமர்சித்ததால்தான் சாதிக் கொடுமைகள் அதிகரித்துவிட்டன என்று கூறுவது, பெரியாரிய சிந்தனையை ஏற்றுக் கொண்ட திராவிடக் கட்சிகளைவிட தலித்திய அமைப்புகளும் தமிழ்த்தேசிய அமைப்புகளும் சமூகச் செல்வாக்கோடு பெரும் அமைப்புகளாக வளர்ந்துள்ளனவா? அல்லது வழக்கறிஞர் கூறுவதுபோல், தலித்திய – தமிழ்த்தேசிய அமைப்புகள் பெரியாருக்கு எதிராக செய்யும் விமர்சனத்தை பின்னுக்குத் தள்ளக்கூடிய ஆற்றல் திராவிட இயக்கங்களுக்கு இல்லையா என்ற கேள்வியை எழுப்புகிறது.

சாதிய சங்கங்களும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான வன்கொடுமைகளும் அதிகரித்ததற்கான காரணங்கள் என்று நாங்கள் பின் வருபவற்றை கருதுகிறோம்.

1960களில் தி.மு.க. குடும்பத்தினரின் திருமண அழைப்புகளில் மணமக்கள் பெற்றோர் பெயர்களில் பெரும்பாலும் சாதிப்பட்டம் இருக்காது. இப்பொழுது, தி.மு.க.வினர் சிறுவர்களாக உள்ள பேரக் குழந்தைகளின் பெயர்களில் கூட சாதிப்பட்டம் போட்டு திருமண அழைப்பிதழ்கள் அச்சடிக்கிறார்கள். இதுபோல் அவர்கள் எல்லா நிலைகளிலும் சாதியை முன்னிறுத்தும் போக்கு வளர்ந்திருக்கிறது.

அதைப்போலவே, திருமண அழைப்பிதழ்களில் கம்யூனிஸ்ட்டு கட்சியினரும் சாதி போடும் பழக்கம் இப்போது உருவாகியிருக்கிறது. இதற்கான காரணங்கள் :

1. 1960களில் தி.மு.க, இன விடுதலை – நாட்டு விடுதலை என்ற இலட்சியத்தை முன்வைத்து இயங்கியது. நாட்டு விடுதலையைக் கைவிட்டு, ஆட்சிக்கு வந்த பின் அதிகாரம் – ஊழல் என்ற நிலையில், தி.மு.க. சீரழிந்தது. இலட்சியமில்லாத அமைப்பின் பொறுப்பிலும், உறுப்பிலும் இருப்பவர்களிடையே சமூகச் சீரழிவுகள் தோன்றுவதும், அது தொற்றுநோய் போல் சமூகம் முழுவதும் பரவுவதும் இயல்பே!

அதைப்போல், இரசியப்புரட்சி – சீனப்புரட்சி போல் இங்கேயும் புரட்சி நடக்கப் போகிறது என்ற இலட்சியத்தை முன்வைத்து இயங்கிய கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள், அந்த இலட்சியத்தைக் கைவிட்டபிறகு, அதற்கு மாற்றாக வேறொரு புதிய இலட்சியத்தை முன்வைக்காத நிலையில் - அதன் உறுப்பினர்களிடையே சீரழிவு ஏற்பட்டது.

திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை, எல்லா ஆளும் கட்சியையும் ஆதரித்து வந்திருக்கிறது. அரசியல் முடிவுகளில் மிகவும் பிற்போக்காக, சீரழிவு சக்திகளுடன் கூட்டு சேர்ந்து கொண்டு, தனிப்பட்ட பரப்புரையில் மட்டும் கடவுள் மறுப்பு – பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு என்று பேசுவதென்பது ஒரு தன் முரண்பாடு! அந்த தன் முரண்பாட்டுப் பரப்புரை, பெரிய பயன் தராது.

அத்துடன், பெரியார் காலத்திலும் சரி, அவருக்குப் பிந்தைய காலத்திலும் சரி, பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பையே முதன்மைப்படுத்தி – பார்ப்பனரல்லாதோரிடம் உள்ள சாதி ஒடுக்குமுறையை – பார்ப்பன எதிர்ப்பு அளவுக்கு இல்லாவிட்டாலும் உரிய அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து திராவிடர் கழகம் பரப்புரை செய்யவில்லை!

இவையும், இன்னும் சிலவும் தமிழ்நாட்டுக்குள் உள்ள காரணங்கள்!

2. இதற்கு மேல், இந்தியத்தேசியம் என்பது ஆரியவாதம் மற்றும் பார்ப்பனிய வாதம்தான்! காங்கிரசு ஆட்சியிலும் பா.ச.க. ஆட்சியிலும் இந்த ஆரியப் பார்ப்பனியவாதம்தான், அரசு அதிகாரத்தோடு செயல்படுகிறது. மீண்டும் மீண்டும் வெவ்வேறு வழிகளில் வர்ணசாதி வலியுறுத்தப்படுகின்றன!

இந்த இந்திய ஆரியக் கட்டமைப்புக்குள் இருந்து வெளியேறுவதற்கு, திராவிடர் கழகம் எதுவும் செய்யவில்லை! பெரியார் காலத்திலும், அதற்குப் பிறகும் இந்தியத்தேசியவாதிகளை தொடர்ந்து ஆதரித்தே வந்திருக்கிறது. இன்றும், காங்கிரசோடு கூட்டணி போல் தி.க. செயல்படுகிறது.

வர்ணசாதிப் பிளவுகளிலும், அவை தொடர்வதிலும், சாதி ஒடுக்குமுறைகளிலும் இந்தியத்தேசிய ஆளும் வர்க்க சக்திகள் மூலகாரணமாக விளங்குகின்றன. இவற்றின்பால், திராவிடர் கழகத்தின் அணுகுமுறை என்ன?

தமிழ்த்தேசியம் – இந்தியத்தேசியத்தை மறுக்கிறது. தமிழ்த்தேசியம் முன்வைக்கும் தமிழர் அறம், “மனிதர்கள் அனைவரும் சமம், தமிழர்கள் அனைவரும் சமம்” என்கிறது. சாதி மதம் கடந்த சமத்துவம் மட்டுமல்ல, ஆண் – பெண் சமத்துவமும் தமிழர் அறத்தில் உள்ளது என்பதை தமிழ்த்தேசியவாதிகளாகிய நாங்கள் பரப்புரை செய்கிறோம். மக்களிடம் கொண்டு சேர்க்கிறோம்.

ஒடுக்கப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - முன்னேறிய வகுப்புகளின் தமிழர்கள் அனைவரும் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாக வரலாற்றில் வாழ்ந்து வருகிறோம். நம் முன்னோர்கள் அனைவரும் ஓர் இனத்தின் மூலவர்கள்! தமிழ்ச் சாதி அனைத்திற்கும் – தாய்மொழி தமிழ்! திருவள்ளுவப்பேராசான், கணியன் பூங்குன்றன், கரிகால்சோழன், சேரன் செங்குட்டுவன், பாண்டியன் நெடுஞ்செழியன் போன்றோர், இன்று ஒடுக்கப்பட்ட மக்களாக உள்ள தமிழர்கள் உள்ளிட்ட அனைத்துத் தமிழ் மக்களுக்கும் பொதுவானவர்கள்; நம்முடைய மூலவர்கள்!

ஆரியத்தின் வர்ணாசிரமம் கற்பித்த – பிறப்பால் உயர்வு தாழ்வு என்ற சாதிக் கொடுமைகள் பிற்காலத்தில் புகுந்து, நம்மைச் சீரழித்துவிட்டன. நம் இனம் தோன்றி வளர்ந்திருந்த அந்த காலத்து சமத்துவத்தை மீட்போம் என்ற இனவழிப்பட்ட இயற்கையான உறவு உணர்ச்சியை நாங்கள் தமிழர்களிடம் எடுத்துக் கூறி, ஒற்றுமைக்கான எல்லா முயற்சிகளையும் செய்து வருகிறோம். அதேவேளையில், சாதி ஒடுக்குமுறைக்கும் தீண்டாமைக்கும் எதிராக பரப்புரை மட்டுமின்றி, அங்கங்கே போராட்டங்களும் செய்து வருகிறோம்.

தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றும், தமிழைப் படிக்காதே ஆங்கிலத்தையே படி என்றும் கூறியதோடு, தமிழினம் என்று சொல்வது குறைபாடுடையது – திராவிட இனம் என்பதே சரி என்று இல்லாத திராவிட இனத்தை – தமிழ்நாட்டுத் தமிழர்கள் மீது திணித்தது போன்ற பெரியாரின் பிழைகளை தமிழ்த்தேசியவாதிகள் விமர்சிப்பது குற்றமா? பெரியாரின் கருத்துகளைத்தான் பெரும்பாலான தமிழ்த்தேசியவாதிகள் விமர்சிக்கின்றனர். அவர் தமிழர் அல்லாதவர் என்பதை முதன்மைப்படுத்துவதில்லை! தமிழ் இனத்தில் பிறக்கவில்லை என்பதை அவருக்கான தகுதிக் குறைவாக தமிழ்த்தேசியப் பேரியக்கம் கருதவில்லை.

எங்களுடைய தமிழ்த்தேசியம் வளர்ச்சி பெற்று, முழு வீச்சில் மக்களிடையே செல்வாக்கு பெறும்போது, சாதி அடையாளங்கள் பின்னுக்குத் தள்ளப்படும். தமிழர்களிடையே ஒற்றுமை பெருமளவு ஏற்படும் என்பதை உறுதியாக நம்பலாம்!

இதற்கான முன்னோட்டம்தான், ஜல்லிக்கட்டு உரிமைப் போராட்டத்தில் சாதி கடந்து குமரி முனை முதல் கும்மிடிப்பூண்டி வரை தமிழர் என்ற உணர்ச்சியில் ஒன்று திரண்டது. இப்பொழுது, அனிதா உயிரிழப்புக்கு தமிழ்நாடு முழுக்க இரங்கல் தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதும், நீட் தேர்வை எதிர்த்துப் போராடுவதும் தமிழ் இன உணர்ச்சியோடுதான் நடைபெறுகிறது என்பதை கவனிக்க வேண்டும்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: tamizhthesiyam.com

Thursday, September 14, 2017

இயக்குநர் ரஞ்சித்துக்கு.. தோழர் பெ. மணியரசன்.

இயக்குநர் ரஞ்சித்துக்கு..பெ. மணியரசன், தலைவர் - தமிழ்த் தேசியப் பேரியக்கம்.


 
''எங்களை இந்தியன் என்று சொல்லாதீர்கள் 'தலித்' என்று சொல்லுங்கள் என காங்கிரஸாரிடமோ அல்லது பி.ஜே.பி-யினரிடமோ ரஞ்சித் கேட்பாரா?
 
'திராவிடன்' என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, வெண்மணிப்படுகொலை நடக்கிறது, தெருவுக்கு நடுவே சுவர் கட்டப்படுகிறது... அப்போதெல்லாம், 'எங்களைப் பார்த்து திராவிடன் என்று சொல்லாதீர்கள்' என்று தி.மு.க-வினரைப் பார்த்துக் கேட்டிருக்கிறாரா?
 
தமிழன் என்றால் மட்டும் ஏன் எதிர்க்கிறார்?
 
ரஞ்சித்தினுடைய தாய்மொழியும் என்னுடைய தாய்மொழியும் தமிழ்தான்! சாதி என்பது தமிழர்களிடையே பிற்காலத்தில் வந்த ஒரு சீர்குலைவு. ஆரிய உபநிடதங்களும் வேதங்களும்தான் இந்த வர்ணாசிரம பாகுபாபாடுகளுக்கெல்லாம் அடிப்படைக் காரணம். பாமர மக்களை ஏமாற்றுவதற்காகத்தான் அவர்கள் இப்போது 'இந்து' என்ற ஒற்றைச் சொல்லில் ஒருசேரச் சொல்லி ஏமாற்றிவருகிறார்கள். அது இந்துத்துவா அல்ல... ஆரியத்துவா என்று நாங்கள்தான் மக்களிடையே எடுத்துச் சொல்லிவருகிறோம்.
 
பெரியார் பெயரைச் சொல்லி தமிழ்நாட்டில் கட்சி வளர்த்தவர்கள்தான் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர், வட்ட செயலாளர் என்று எல்லா பதவிகளையும் சாதி பார்த்தே கொடுக்கிறார்கள்.
 
நாமெல்லாம் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள்தான். உனக்கும் எனக்கும் மூல பேராசான் திருவள்ளுவர்தான். நமது தாய் மண் தமிழகம் என்பதையெல்லாம் நாங்கள்தான் எடுத்துச்சொல்லி வருகிறோம். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று நாமெல்லோரும் ஒன்றாக இருந்ததற்கான சான்றுகள் தமிழ் இலக்கியத்தில் இருக்கின்றன.
 
மனதில் அழுக்கில்லாமல் இருத்தல், மனிதர்கள் அனைவரும் சமம், தமிழர்கள் அனைவரும் சமம் என்ற மூன்று தமிழர் அறத்தைத்தான் நாங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மனிதர்கள் அனைவரும் சமம் என்று சொல்வதில், ஆண் - பெண்ணும் சமம் என்ற அர்த்தம் உள்ளடங்கியிருக்கிறது. அதனால்தான் சங்க இலக்கியத்திலேயே தலைவன் - தலைவி என்று வர்ணித்தார்கள். குடும்ப நலத்தைக்கூட 'இல்லறம்' என்று அறத்தோடு சேர்த்து வலியுறுத்திய இலக்கியம் தமிழைத் தவிர வேறு உலக மொழிகள் எவற்றிலாவது உண்டா?
 
ஆக, இப்படியெல்லாம் சமமாக உரிமையோடு வாழ்ந்தவர்களின் வழித்தோன்றல்கள்தான் நாம் எல்லோரும். அந்த சமநிலையை மறுபடியும் மீட்டெடுக்கவேண்டுமானால், இடையில் ஏற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவர் என்ற வேறுபாட்டையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு நாமெல்லோரும் "தமிழராய்" ஒன்றுபட வேண்டியது அவசியம் என்பதைத்தான் நாங்கள் தெளிவாக வலியுறுத்திவருகிறோம். எத்தனை சாதிக் கிளைகளாக இன்று நாம் பிளவுப்பட்டுக் கிடந்தாலும் அடிமரத்து வேர் என்பது நமக்கு தமிழ்தான். இதுதான் நம்மை உளவியல் ரீதியாக ஒன்றிணைக்கும்.

தொழிற்சாலைகளை எல்லாம் அரசுடைமையாக்கிவிட்டால், முதலாளித்துவத்தை ஒழித்துவிடலாம். நிலத்தையெல்லாம் கையகப்படுத்தி கூட்டுப் பண்ணைகளை உருவாக்கிவிட்டால், நிலப் பிரபுத்துவத்தை ஒழித்துவிடலாம்.
 
ஆனால், "எதை எடுத்து சாதியை ஒழிப்பீர்கள்?"
 
அதற்கு மனதளவில் அல்லவா மெள்ள மெள்ள மாற்றம் வரவேண்டும்; வாழ்வுரிமையில் சமத்துவம் வரவேண்டும். இப்படி ஒவ்வொன்றாக உதிர்ந்துபோகக்கூடியதுதான் சாதி என்றக் கட்டமைப்பு. மற்றபடி உடனடியாக, நம்மிடையே இருக்கும் சாதி அழுக்கை ஒரே நாளில், தேதி குறித்து களைந்துவிட முடியாது. எனவே, சாதி ஒழிப்புக்கான பண்பாட்டு மாற்றங்கள், போராட்டங்களை எங்களது தமிழ்த் தேசியம்தான் செய்துகொண்டிருக்கிறது'' என்றார் உறுதியான குரலில்.
 
 
பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
 
 

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: tamizhthesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT