உடனடிச்செய்திகள்

Sunday, March 31, 2019

மோடிக்கு முன்னோடி எதேச்சாதிகாரி இந்திரா காந்தி! தோழர் பெ. மணியரசன்

மோடிக்கு முன்னோடி எதேச்சாதிகாரி இந்திரா காந்தி! தமிழத்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன்.
“தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” – மாத இதழில் (2019 ஏப்ரல்) வந்து கொண்டிருக்கும் “நிகரன் விடைகள்” பகுதியில் “மோடிக்கு முன்னோடி எதேச்சாதிகாரி இந்திரா காந்தி!” என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், இதழாசிரியருமான ஐயா பெ. மணியரசன் தெரிவித்துள்ளார். அதில் அவர் எழுதியிருப்பதாவது :

“மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் அதன் பிறகு இந்தியாவில் தேர்தலே நடக்காது என்றும், அந்த பாசிச அபாயத்தைத் தடுக்க இராகுல்காந்திக்கு வாக்களிக்க வேண்டும்; இந்த அபாய கட்டத்தில் ஈழத்தில் தமிழினப் படுகொலையில் பங்கு கொண்ட காங்கிரசு என்றெல்லாம் பார்க்கக் கூடாது என்று தமிழின உணர்வாளர்கள் சிலர் கூறுகிறார்கள்.

இராகுல் காந்தி வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் அவர் எதேச்சாதிகாரியாக மாற மாட்டார்; சனநாயகததைக் காப்பார்; முறையாகத் தேர்தல் நடத்துவார் என்பதற்கு என்ன உறுதி இருக்கிறது?

இராகுலின் பாட்டி இந்திரா காந்தி 1969இல் தலைமை அமைச்சராக இருந்தபோது, மொரார்சி தேசாய், எஸ்.கே. பாட்டீல், நிஜலிங்கப்பா, அதுல்யா கோஷ் போன்ற பிற்போக்காளர்களை எதிர்த்து முற்போக்குக் காங்கிரசு உருவாக்குகிறேன்; மன்னர் மானியம் ஒழிக்கிறேன்; வங்கிகளை அரசுடைமை ஆக்குகிறேன் என்று முழங்கி காங்கிரசைப் பிளந்து இந்திரா காங்கிரசை உருவாக்கினார். 1971 மக்களவைத் தேர்தலில் பெரு வெற்றி பெற்று தலைமை அமைச்சராகத் தொடர்ந்தார்.

அதே இந்திரா காந்திதான் 1975இல் எதேச்சாதி காரியாக மாறி அவசர நிலை பிறப்பித்து, சனநாயக உரிமைகளைப் பறித்தார். இலட்சக்கணக்கானோரை சிறைகளில் அடைத்தார். 1976இல் நடத்த வேண்டிய மக்களவைப் பொதுத் தேர்தலையும் நடத்தாமல் தள்ளி வைத்தார்.

அனைத்திந்திய அளவில் சி.பி.ஐ. கட்சியும், தமிழ் நாட்டளவில் அ.இ.அ.தி.மு.க.வும்தான் இந்திரா காந்தியின் எதேச்சாதிகாரத்தை ஆதரித்தன. அனைத்திந்திய அளவில் பெரும்பாலான எதிர்க்கட்சிகளும் மக்களும் இந்திரா காந்தியின் எதேச்சாதிகாரத்தை எதிர்த்துப் போராடினர். இதனால் உலக நாடுகளின் அழுத்தமும் இந்திரா காந்தியின் எதேச்சாதிகாரத்திற்கு எதிராக வந்தது.

வென்று விடுவோம் என்ற நப்பாசையில் 1977இல் மக்களவைப் பொதுத்தேர்தல் நடத்தினார் இந்திரா காந்தி. அவருடைய கட்சியும் தோற்றது; அவரும் அவரின் அடாவடி மகன் சஞ்சய் காந்தியும் தோற்றனர். சனதாக் கட்சி என்ற கூட்டமைப்பு ஆட்சி அமைத்தது.

பாட்டியைப் போல் இராகுல் மாற மாட்டார் என்பதற்பு என்ன உறுதி? மோடியிடமிருந்தும், இராகுலிடமிருந்தும் வேறு யாரிடமிருந்தும் சனநாயகத்தைக் காப்பது கட்சிகள் மற்றும் மக்களின் கடமை ஆகும்!

அடுத்து, முகாமையான ஒரு கருத்து; எதிரி முன் வைக்கும் இரண்டு வாய்ப்புகளில் ஒன்றைத் தேர்வு செய்யும் நிலையில் இருப்பது சமூகப் பொறுப்பும் இல்லை; இலட்சிய அரசியலும் அன்று!

எதிரி முன்வைக்கும் இரு வாய்ப்புகளில் ஒன்றைத் தேர்வு செய்வது இருக்கின்ற சமூக நிலை (Status Quo) நீடிக்கவே பயன்படும். இப்படியான “தேர்வுக்கு” முடிவும் இருக்காது.

இலட்சியவாதிகள் தங்களின் தீர்வை நோக்கிச் செல்ல வேண்டும். போதிய மக்கள் ஆதரவில்லையெனில் பொறுமையாக மாற்றுக் கருத்துகளை விதைக்க வேண்டும். மக்களை ஈர்க்கப் புரிய வைக்கப் புதிய உத்திகளையும் போராட்டங்களையும் வகுக்க வேண்டும். மக்கள் மீது நம்பிக்கை இழக்கக் கூடாது! ”.

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் எழுதியுள்ளார்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Saturday, March 30, 2019

தேர்தல் ஆணையமும் உச்ச நீதிமன்றமும் நடுநிலை தவறக் கூடாது! தோழர் பெ. மணியரசன்.

தேர்தல் ஆணையமும் உச்ச நீதிமன்றமும் நடுநிலை தவறக் கூடாது! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன்.
“தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” – மாத இதழில் (2019 ஏப்ரல்) வந்து கொண்டிருக்கும் “நிகரன் விடைகள்” பகுதியில் சின்னங்கள் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் பாகுபாட்டுடன் செயல்படுவது குறித்து தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், இதழாசிரியருமான ஐயா பெ. மணியரசன் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில் அவர் எழுதியிருப்பதாவது :

“நாம் தமிழர் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவற்றிற்குத் தேர்தல் சின்னம் ஒதுக்கியதில் தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்பட்டதாகத்தெரியவில்லை!

இந்திய ஆட்சியாளர்களின் தலையீடு தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் இருப்பது மோடி ஆட்சியில் அதிகரித்து விட்டது. காங்கிரசு ஆட்சியிலும் இந்தத்தலையீடு இருந்தது.

அரசமைப்புச் சட்டப்படி தன்னாட்சி பெற்றுள்ள நிறுவனங்களான உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஆகியவற்றில் பொறுப்பு வகிப்போர்க்கு தற்சார்பும் தன்மான உணர்வும் கூடுதலாக இருக்க வேண்டும். அவர்கள் தங்கள் விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு நடுநிலையுடன் செயல்படும் ஆளுமையைப் பெற வேண்டும்.

நாம் தமிழர் கட்சிக்கும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கும் அக்கட்சிகள் ஏற்கெனவே போட்டியிட்ட சின்னங்களை ஒதுக்குவதில் என்ன சிக்கல் உள்ளது? ஏன் இந்த இழுத்தடிப்பு?”.

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் எழுதியுள்ளார்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Friday, March 29, 2019

பாரத மாதா கட்சிகளுக்கு – இந்தி, திராவிட மாதாக் கட்சிகளுக்கு – ஆங்கிலம். தோழர் பெ. மணியரசன்.

பாரத மாதா கட்சிகளுக்கு – இந்தி, திராவிட மாதாக் கட்சிகளுக்கு – ஆங்கிலம். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன்.
“தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” – மாத இதழில் (2019 ஏப்ரல்) வந்து கொண்டிருக்கும் “நிகரன் விடைகள்” பகுதியில் “தமிழ் ஆட்சி மொழி” குறித்த கேள்விக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், இதழாசிரியருமான ஐயா பெ. மணியரசன் விடை அளித்துள்ளார். அவ்வினாவும் விடையும் வருமாறு :

கேள்வி : தமிழை ஆட்சி மொழியாக்குவதாகப் பல அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கைகள் வெளியிட்டார்கள். பல்வேறு இயக்கங்கள் அதற்காகப் பல போராட்டங்கள்நடத்தின. இதுவரை ஒன்றும் நடக்கவில்லை. இனியாவது நடக்குமா? அல்லது இந்தியாவுக்குள் இருக்கும் வரை நடக்காதா? (காரைக்குடி கண்ணன்).

விடை : “ஆட்சி மொழி என்பதில் கல்வி மொழி, நீதிமன்ற மொழி அனைத்தும் அடக்கம்.

தமிழ்நாட்டில் நாம் எட்டுக் கோடிப் பேர் வாழ்கிறோம். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேல் தமிழர் தாயக மாகத் தமிழ்நாடு இருந்து வருகிறது. நம் தமிழ்மொழி உலகின் மூத்தசெம்மொழி. தனி அரசு கொண்டு வாழ்ந்த இனம் தமிழினம்; தனித் தேசமாக வாழ எல்லாத் தகுதியும் உள்ள இனம் தமிழினம்.

நாம் ஆங்கிலேயர்க்கு அடிமைப்பட்டிருந்ததால் ஆங்கிலம் இன்றும் நம்மை ஆள்கிறது. ஆங்கிலேயர்களுக்குப் பிறகு நாம் இந்தியாவிற்கு அடிமைப்பட்டு வாழ்வதால் இந்திநம்மை ஆள்கிறது.

ஆங்கில ஆதிக்கம் இந்தி ஆதிக்கம் இரண்டையும் நீக்கி, தமிழைத் தமிழ்நாட்டின் முழுமையான ஆட்சி மொழி ஆக்க வேண்டுமானால், தமிழ்நாடு முழு இறையாண்மை பெறவேண்டும். அதற்கு முன் நிபந்தனையாகத் தமிழ்த்தேசிய அரசியலைத் தமிழ்நாட்டு மக்கள் ஏற்க வேண்டும்; அதைத் தத்துவமாய் ஏந்த வேண்டும்.

செர்மனியில், டென்மார்க்சில், நார்வேயில், கொரியாவில் பன்னாட்டு நிறுவனங்கள் இருக்கின்றன. அங்கெல் லாம் அவற்றில் அந்தந்த நாட்டுத் தாய்மொழிதான் அலுவல்மொழி! ஆனால் தமிழ்நாட்டில் அவற்றில் ஆங்கிலம்தான் அலுவல் மொழி! தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களில் இந்தி அலுவல் மொழியாக உள்ளது. தமிழ்அலுவல் மொழியாக இல்லை!

திராவிடக் கட்சிகள் ஆங்கிலத்தை முதன்மைப்படுத்துகின்றன. காங்கிரசு, பா.ச.க., கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள் ஆகிய இந்தியத் தேசியக் கட்சிகள் இந்தியை முதன்மைப் படுத்துகின்றன.

தமிழ்நாட்டு மக்களில் பெரும்பான்மையோர் தமிழ்த்தேசியத் தத்துவத்தை ஏந்தும்போது, தமிழ்மொழி இங்கு முழுமையான ஆட்சிமொழியாகும்!”.


இவ்வாறு தோழர் பெ. மணியரசன் எழுதியுள்ளார்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

பெண்ணுரிமை பேசுவோர் தேர்தலில் ஆணுரிமை பேசுகிறார்களா? தோழர் பெ. மணியரசன்.

பெண்ணுரிமை பேசுவோர் தேர்தலில் ஆணுரிமை பேசுகிறார்களா? தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன். 
நாம் தமிழர் கட்சி பெண் வேட்பாளர்களைக் கொச்சைப்படுத்தி வரும் பெண்ணுரிமைவாதிகள் குறித்த கேள்விக்கு பதில் அளிக்கும்போது, “பெண்ணுரிமை பேசுவோர் தேர்தலில் ஆணுரிமை பேசுகிறார்களா?” என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் வினா எழுப்பியுள்ளார்.

“தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” – மாத இதழில் வந்து கொண்டிருக்கும் “நிகரன் விடைகள்” பகுதியில் இதுகுறித்த கேள்விக்கு ஐயா பெ. மணியரசன் அளித்துள்ள விடை இது :

“நாம் தமிழர் கட்சி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் புதுவையையும் சேர்த்துள்ள 40 தொகுதிகளில் 20 பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பெண்ணுரிமைக்கு இது முன்னெடுத்துக் காட்டாக உள்ளது. இதனைக் கொச்சைப்படுத்தி கவிஞர் சல்மா, மருத்துவர் சாலினி, ஊடகத்துறையினர் பனிமலர், திவ்வியபாரதி போன்றவர்கள் பதிவிட்டுள்ளார்கள்.

இந்தப் பெண்கள் வெறுப்பு அரசியல் என்ற கொள்ளிக் கட்டையால் தங்கள் தலையைச் சொறிந்து கொண்டது போல் தெரிகிறது.

இதே எண்ணிக்கையில் தி.மு.க. பெண்களுக்கு 50 விழுக்காடு தொகுதிகள் கொடுத்திருந்தால் வானத்துக்கும், மண்ணுக்குமாய் தாவித் தாவிப் புகழ்ந்து தள்ளுவார்கள்.திராவிடம் வளர்த்துள்ள பண்பு இது!

ஆண்களின் இனிப்புப் பேச்சில் பெண்கள் மயங்கக் கூடாது என்று மருத்துவர் சாலினி பதிவிட்டிருப்பது. பெண்களை இழிவுபடுத்துவதாக உள்ளது. இருபது பெண் வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி நிறுத்தியது வெறும் பகட்டு என்று கவிஞர் சல்மா நையாண்டி செய்திருக்கிறார். அவரது தி.மு.க.வில் இரண்டு பெண் வேட்பாளர்களை மட்டுமே நிறுத்தியுள்ளார்கள். அவர்களிலும் ஒருவர் பட்டத்து வாரிசு!

படைப்பாளிகளுக்கு மனச்சான்று பிளவுபடக்கூடாது. பெரும் பொறுப்புள்ளது!”.

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் எழுதியுள்ளார்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Saturday, March 23, 2019

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டம்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டம்!
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றங்களில் தொடர்புடைய அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தினர் மீது நடவடிக்கை கோரி தஞ்சையில் இன்று (23.03.2019) எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம்.

தஞ்சை தொடர்வண்டி நிலையம் அருகில் மாலை 6 மணியளவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மகளிர் ஆயம் நடுவண்குழு உறுப்பினர் தோழர் ம. லெட்சுமி அம்மா தலைமை தாங்கினார்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பெரியார் மையம் தோழர் கலா, மாணவிகள் அஞ்சுதம், இரா. வான்மதி, இரா. தேன்மொழி, மகளிர் ஆயத்தோழர்கள் சுவாமிமலை பி. இளவரசி, திருச்சி வெள்ளம்மாள், தஞ்சை வெற்றிச்செல்வி, பூதலூர் ஒன்றியப் பொறுப்பாளர் சி. இராசப்பிரியா, தஞ்சை நகரத் தோழர்கள் அமுதா, இராணி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

தஞ்சை மகளிர் ஆயம் தோழர் செம்மலர் சிறப்புரையாற்றினார். இறுதியாக மகளிர் ஆயப் பொறுப்பாளர் அ.சுந்தரி நன்றியுரையாற்றினார். திரளான பெண்களும் ஆண்களும் பங்கேற்றனர்.

செய்தித் தொடர்பகம், 
மகளிர் ஆயம்

தொடர்புக்கு: 
7373456737, 9486927540

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Friday, March 22, 2019

அன்பார்ந்த தமிழின உணர்வாளர்களே.. வணக்கம்! உங்களுடன் ஒரு கருத்துப் பரிமாற்றம்! தோழர் பெ. மணியரசன்.

அன்பார்ந்த தமிழின உணர்வாளர்களே.. வணக்கம்! உங்களுடன் ஒரு கருத்துப் பரிமாற்றம்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் மடல்!


தேர்தலில் பங்கெடுக்காத - தேர்தல் வழியாகக் கிடைக்கும் அரசு அதிகாரத்தைப் பெற முயலாத தமிழ்த்தேசியப் பேரியக்கத்தினால் தமிழர்களுக்கு என்ன பயன்? இப்பேரியக்கத்தால் தமிழ்நாட்டுச் சிக்கல்களுக்குத் தீர்வு காண முடியுமா என்று இன உணர்வாளர்களில் சிலர் கேட்கிறார்கள்.

அவர்களுக்கும் அனைத்துத் தமிழர்களுக்கும் தெரிவிப்பதற்காக இந்த சிறு விளக்கத்தை அளிக்கிறேன்.

அறிவு, வீரம், அறம் மூன்றையும் கொண்டு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பார் போற்ற வாழ்ந்த தமிழினம் இன்று வீழ்ந்து கிடப்பதேன்?

நாம் வீழ்த்தப்பட்டோம். வீழ்த்தியோர் வெற்றிக் களிப்பில் கொக்கரிக்கிறார்கள்.

ஆரியத்திற்கும் இந்திக்கும் சமற்கிருதத்திற்கும் அடிமைகளாய் காலம் கழிக்கிறோம். வீரஞ்செறிந்த தமிழீழ விடுதலைப் போரையும் இந்தியாவின் துணையுடன் சிங்களக் கும்பல் குருதி வெள்ளத்தில் மூழ்கடித்தது.

வடவர் தங்களின் ஆதிக்கத்தின் அடையாளமாய் நம் மீது இந்தியைத் திணிக்கின்றனர். பன்னாட்டுக் கொள்ளை நிறுவனங்களும் தமிழ்நாட்டு மேட்டுக் குடிகளும் ஆங்கிலத்தைத் திணிக்கின்றன.

தமிழர்களின் தாயகமாகத் தமிழ்நாடு நீடிக்கக் கூடாது; அதனைக் கலப்பின மண்டலமாக மாற்ற வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் இந்திய அரசு வடமாநிலத்தவர்களையும், இதர வெளி மாநிலத்தவர்களையும் தமிழ்நாட்டில் குவிக்கிறது. இங்குள்ள இந்திய அரசு தொழிற்சாலைகள், நிறுவனங்கள், அலுவலகங்கள் அனைத்தும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே 100க்கு 95 வீதம் வேலைக்குச் சேர்க்கின்றன.

ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் வடநாட்டு மற்றும் பன்னாட்டுப் பெருங்குழும நிறுவனங்களின் வேட்டைக்கு ஏலம் விடுகிறது இந்தியா! தமிழ்நாட்டிலோ சிற்றதிகாரக் கேடர்களின் கங்காணி அரசியல்! இவற்றில் சில மாநிலக் கட்சிகள்; மற்றும் சில அனைத்திந்தியக் கட்சிகள். அனைத்தும் தமிழினத்தின் உரிமைகளை அடமானம் வைத்துப் பதவி அரசியல் நடத்துகின்றன அல்லது பாரத மாதா அரசியல் நடத்துகின்றன; தமிழ்நாட்டு உரிமை மீட்பு அரசியல் நடத்தவில்லை!

சட்டமன்றம் - நாடாளுமன்றம் தீர்வு தருமா?

1952 தொடங்கி எத்தனையோ தேர்தல்கள் - எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்து விட்டன. வெள்ளைக்காரன் ஆட்சியில் இருந்த உரிமைகளையும் விடுதலை பெற்ற இந்தியாவில் இழந்தது தான் மிச்சம்! தேர்தலும் சனநாயக வழியில் இல்லை. பெரும் பணக்காரர்களும் கார்ப்பரேட் நிறுவனங்களும் மட்டுமே தேர்தல் களத்தில் போட்டியிடும் நிலையை உருவாக்கிவிட்டனர். அத்துடன், தேர்தலில் சாதி முகாமையான பங்காற்றுகிறது.

தேர்தல் வேண்டாம் என்று சொல்லவில்லை. அது ஒரு சனநாயக உரிமை! ஆனால் சட்டப் பேரவையில் உறுப்பினர்கள் ஆவது, தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பது, மக்களவைக்கு உறுப்பினர்களை அனுப்புவது ஆகியவற்றின் வழியாக நம் உரிமைகளை மீட்கவும் முடியாது; காக்கவும் முடியாது என்பதே நடைமுறை உண்மை!

சட்டப்பேரவைக்கு இறையாண்மையுள்ள அதிகாரம் கிடையாது. இருந்த கொஞ்ச நஞ்ச அதிகாரங்களையும் இந்திய ஆட்சியாளர்கள் பறித்து - தில்லியில் குவித்து விட்டனர். கல்வி, நிலம், வேளாண்மை, மருத்துவம், விற்பனை வரி வசூலித்தல் போன்றவற்றில் மாநிலத்திற்கிருந்த உரிமைகளை அரசமைப்புச் சட்டத்திருத்தம் செய்தும், புதிய சட்டங்கள் இயற்றியும் நடுவண் அரசு பறித்து விட்டது. ஜி.எஸ்.டி. - நீட் போன்றவை இவற்றின் விளைவுகளே!

மாநிலங்களுக்கு உள்ள சில உரிமைகளையும் தமிழ்நாட்டிற்கு அனுமதிக்க மாட்டோம் என்கிறது இந்திய அரசு! காவிரி வழக்கில் - ஏழு தமிழர் விடுதலையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் செயலுக்கு வராமல் இந்திய அரசு தடை போடுகிறது. ஒருவகை இன ஒதுக்கலுக்கு (Apartheid) தமிழர்கள் உள்ளாகி இருக்கிறோம்.

நாடாளுமன்ற மக்களவையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 543. தமிழ்நாடும் புதுவையும் சேர்ந்து 40 உறுப்பினர்கள். எட்டுக் கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட நாம் செயற்கையாக சிறுபான்மை ஆக்கப்பட்டுள்ளோம். பல இனங்களைப் பீரங்கி முனையில் பிடித்து ஒன்றாகக் கட்டி வைத்து இந்தியா என்றது ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி! வடநாட்டு வாக்குச் சீட்டுப் பெரும்பான்மையைக் காட்டி - சனநாயகப் போர்வையில் ஆதிக்கச் சட்டங்கள் இயற்றி ஆங்கிலேயர் செய்த பேராதிக்கத்தை வடவர் ஆதிக்கமாக இந்திய ஏகாதிபத்தியம் மாற்றிக் கொண்டது. இந்தியை ஆட்சி மொழியாகக் கொண்ட வடமாநிலங்கள் பத்தின் மக்களவை உறுப்பினர்கள் 225 பேர்!

இலட்சியத் தமிழ்த்தேசியம்

“நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்” என்றார் நம் பேராசான் திருவள்ளுவர்.

சல்லிக்கட்டு உரிமையை மீட்க சட்டப்பேரவையில் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., ஆட்சிகள் மசோதாக்கள் நிறைவேற்றின. ஆனால் இந்திய அரசு ஒப்புதல் அளித்து அவற்றைச் சட்டமாக்க மறுத்தது. சென்னை கடற்கரையிலும் தமிழ்நாட்டின் பல நகரங்களிலும் இலட்சக்கணக்கில் கூடி இரவு பகலாய் அறப்போர் நடத்திய மக்கள் எழுச்சியால் சல்லிக்கட்டு உரிமைச் சட்டம் தில்லியில் கையெழுத்தானது. சட்டமன்றம் மசோதா மன்றம் ஆனது; மக்கள் மன்றம் சட்டம் இயற்றச் செய்தது! இது ஓர் எடுத்துக்காட்டு; இப்படியே எல்லாம் நடந்து விடும் என்று கூறவில்லை. இதைவிடக் கடுமையாகப் போராடித்தான் மற்ற பல உரிமைகளை மீட்க வேண்டும்.

சல்லிக்கட்டு எழுச்சி தன்னெழுச்சி! தலைமை அற்றது; காட்டாற்று வெள்ளம் போல் வந்து ஓடி வற்றுவது! தன்னெழுச்சிகளை மட்டுமே சார்ந்து இருக்கக் கூடாது. அந்த சல்லிக்கட்டு எழுச்சி போல், இன்ன பிற உரிமைகளுக்கு மக்களை வீதிக்குக் கொண்டு வரும் இயக்கம் தேவை.

அடிமைப்பட்ட தேசத்தின், ஒடுக்கப்பட்ட இனத்தின் உரிமைகளை மீட்க தேவையானவை மூன்று. ஒன்று சரியான இலட்சியம், இரண்டு அதற்குரிய தகுதியான - தன்னலமற்ற தலைமை, மூன்று அந்த இயக்கத்தில் மக்களின் பங்கேற்பு! இந்த மூன்றும் இணைந்து செயல்படும் போது, உள்நாட்டு நெருக்கடிகளும் பன்னாட்டு ஆதரவுச் சூழலும் உருவாகும் நிலையில் இலட்சியம் வெற்றி பெறும்! உலகெங்கும் நடந்த உரிமைப் போராட்டங்கள் வெற்றி பெற்ற வரலாறு இதுதான்!

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

தமிழ்நாட்டிற்குத் தமிழ்த்தேசிய இலட்சிய இயக்கம் தேவை. அந்த இலட்சிய இயக்கம் தான் தமிழ்த்தேசியப் பேரியக்கம்! பதவி, பணம், விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாதவர்களின் பாசறையாக இந்த இலட்சிய இயக்கம் செயல்படுகிறது.

“இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல்” என்ற குறளை எண்ணிப் பாருங்கள்! இன உணர்வாளர்களே முடிவெடுங்கள்! எழுந்து வரும் தமிழ்த்தேசிய உணர்வு காலப்போக்கில் திசை திரும்பி வீணாகிவிடக் கூடாது.

உறுப்பினராவீர்!

தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒரு சனநாயக இயக்கம்! கூட்டுத் தலைமையில் நம்பிக்கை உள்ள இயக்கம்! நம் இயக்கம் எவ்வளவு பெரியது என்பதை விடவும் நாம் எவ்வளவு பெரிய இனத்தின் அடையாளமாய் விளங்க வேண்டும் என்ற அக்கறை எங்களுக்கு இருக்கிறது. தமிழ் இனத்தின் அனைத்து ஆற்றல்களின் கொள்கலனாய் தமிழ்த்தேசியப் பேரியக்கம் செயல்பட வேண்டும் என்பது எமது திட்டம்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தில் உறுப்பினராய்ச் சேர வாருங்கள்; ஆதரவாளர்களாய் அணி திரளுங்கள்! உங்கள் ஊர்களில் இலட்சியத் தமிழ்த்தேசியத்திற்கான தொடக்கமாக தமிழ்த் தேசியப் பேரியக்கக் கிளைகள் தொடங்குங்கள். போராட்டக் களத்திற்கு வருவோர் வரலாம்; முடியாதவர்கள் பின்னணியில் நின்று செயலாற்றலாம். எந்த அளவில் எந்த வடிவத்தில் இந்த இயக்கத்திற்குப் பங்களிக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதை நீங்களே முடிவு செய்து செயல்படுங்கள்!

இந்த இயக்கத்தின் கருத்தியல் மற்றும் செயல்பாடு இரண்டினாலும் ஈர்க்கப்பட்ட பலர் முழுநேரச் செயல்பாட்டாளர்களாகப் பணியாற்றுகிறார்கள். மாதச் சம்பள வேலையை விட்டு விலகி தமிழ்த்தேசியப் பணிக்கு வந்தோரும் உள்ளனர்! “தமிழர் கண்ணோட்டம்” என்ற இதழையும் நடத்துகிறோம்!

நிதி தாரீர்!

உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் தமிழின உணர்வாளர்களும் கொடுக்கும் நன்கொடையில்தான் தமிழ்த்தேசியப் பேரியக்கம் செயல்படுகிறது. மனித உடல் இயங்கக் குருதி ஓட்டம் சீராக இருக்க வேண்டும். மக்கள் இயக்கம் செயல்பட நிதி வருவாய் சரியாக இருக்க வேண்டும். வருவாய் என்பது நன்கொடை வருவாய் தான்! அதுவும் நேர்மையான வழியில்தான் வர வேண்டும்.

“செய்க பொருளை செறுநர் செருக்கறுக்கும் எஃகு அதனின் கூரியது இல்” என்றார் திருவள்ளுவர். பகையை வெல்வதற்கு கூர்மையான ஆயுதத்தைவிட நிதி வளம் கூடுதல் முகாமையனது என்கிறார் திருவள்ளுவர். இது அரசுக்குக் கூறியது என்று மட்டும் புரிந்து கொள்ளாமல், இன உரிமை மீட்பு இயக்கத்திற்கும் பொருந்தும் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்த்தேசியப் பேரியக்கம் தமிழ்நாட்டிற்குத் தேவை; அது வளர வேண்டும் என்று கருதுவோர் உங்களால் முடிந்த நிதியளியுங்கள்! அதை, என் பெயரில் சென்னை கே.கே. நகர் கிளை - சிண்டிகேட் வங்கியில் உள்ள வங்கிக் கணக்கில்..
----------------------------------------------------------------
சேமிப்பு கணக்கு எண் : 60032010087176, 
கணக்குப் பெயர் : P. MANIARASAN, 
IFSC CODE : SYNB0006029, 
MICR NO : 600025028 
----------------------------------------------------------------
செலுத்துங்கள்!

இந்த வங்கிக் கணக்கு முழுக்க முழுக்க தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்ந்தது. எனது தனிப்பட்ட கணக்கு அல்ல.

நாம் புதிய வரலாற்றைப்  படைக்கும் காலத்தில் வாழ்கிறோம் என்ற உண்மையை உணர்ந்து ஒவ்வொருவரும் செயல்படுங்கள்!

நன்றி வணக்கம்!
அன்புடன்,
பெ. மணியரசன்
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Tuesday, March 19, 2019

மாணவர் வழியாக தேர்தல் ஆணையம் கோரும் உறுதிமொழி சட்டத்திற்குப் புறம்பானது! தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!

மாணவர் வழியாக தேர்தல் ஆணையம் கோரும் உறுதிமொழி சட்டத்திற்குப் புறம்பானது! தமிழ்த்தேசியப் பேரியக்கம் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!
“தேர்தலில் வாக்களித்து, ஜனநாயகத்தில் பங்கு கொள்வீர்” என்ற உறுதிமொழி பத்திரம் (Sankalp Patra) தேர்தல் ஆணைய அதிகாரிகளால், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு, பெற்றோர்களிடம் கையெழுத்து பெற்று வருமாறு மாணவர்கள் வலியுறுத்தப்படுகிறார்கள்.

இந்த உறுதிமொழிப் பத்திரத்தில் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்றும், இதுவரை பதிவு செய்யப்படாதவர்களை பதிவு செய்து விடுவோம் என்றும், 2019 ஏப்ரல் 18 அன்று தமிழ்நாட்டில் நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்போம் என்றும் பெற்றோர்கள் உறுதிமொழி அளித்துக் கையொப்பம் இட வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது.

மாணவ, மாணவிகளின் தாய் மற்றும் தந்தை பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண், கைப்பேசி எண் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, இந்த உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திட்டு அளிக்க வேண்டும் என்றும், அவற்றை தமது பெற்றோர்களிடம் இருந்து மாணவ, மாணவிகள் பெற்று வந்து பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றும் பள்ளி நிர்வாகங்களுக்கு தேர்தல் ஆணையம் கட்டளை இட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை முற்றிலும் சட்டப் புறம்பானது ஆகும்.

அரசமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளின்படி, தேர்தலில் வாக்களிப்பதும், வாக்களிக்காமல் இருப்பதும் இந்தியக் குடிமக்களின் விருப்பம் சார்ந்தது. யாரையும் வாக்களிக்கும்படி கட்டாயப்படுத்த முடியாது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளும் இதனை உறுதி செய்திருக்கின்றன.

இந்த நிலையில், வாக்களிப்போம் என்று வாக்காளர்களை உறுதிப் பத்திரம் அளிக்குமாறு வலியுறுத்துவது தேர்தல் ஆணையமே செய்யும் சட்டமீறலாகும்!

வாக்களிக்கும் வயது 18 என்று சட்டம் கூறும் நிலையில், வாக்களிக்க வலியுறுத்தும் ஆவணத்தில் பெற்றோர் கையொப்பம் பெற்று வருமாறு, 18 வயதுக்குக் கீழுள்ள பிள்ளைகளை ஈடுபடுத்துவது அப்பட்டமான சட்டமீறலாகும்.

இன்றைக்கு இந்த சட்டமீறல் அனுமதிக்கப்படுமானால், நாளைக்கு ஆளுங்கட்சிக்கு வாக்களிக்குமாறு, மறைமுகமாக வலியுறுத்துவதற்கு வழி ஏற்படும். இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

எனவே தேர்தல் ஆணையம் சட்டத்திற்குப் புறம்பான இந்த உறுதிமொழி பத்திர சுற்றறிக்கையைத் திரும்ப பெற வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு தலையிட்டு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள உறுதிமொழிப் பத்திரத்தைத் திரும்பப் பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Monday, March 18, 2019

பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி கோரி திருப்பூரில் ஐயா க.இரா. முத்துச்சாமி ஓராண்டாகப் பேசா நோன்பு ! அமைச்சர் பாண்டியராசன் தலையிட வேண்டும்! தோழர் பெ. மணியரசன் வேண்டுகோள்!

பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி கோரி திருப்பூரில் ஐயா க.இரா. முத்துச்சாமி ஓராண்டாகப் பேசா நோன்பு ! அமைச்சர் பாண்டியராசன் தலையிட வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் வேண்டுகோள்!
திருப்பூர் ஐயா க.இரா. முத்துச்சாமி அவர்கள் பேசி ஓராண்டு ஆகப் போகிறது. கடந்த 24.03.2018 அன்று திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டி அணைப்புதூர் அழகாபுரி நகரில் உள்ள திருமுருகநாத சுவாமி திருமடத்தில் பனை மரத்தின் முன்னிலையில் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழைப் பயிற்று மொழி ஆக்கும் வரை பேசா நோன்பு (மௌன விரதம்) இருக்கப் போவதாக உறுதிமொழி ஏற்றார் திருப்பூர் இயற்கை வாழ்கம் க.இரா. முத்துச்சாமி அவர்கள்! அவர்களின் எண்பதாம் அகவையின் தொடக்கம் அப்போது!

எத்தனையோ அமைப்புகள், தலைவர்கள், கலை இலக்கியப் படைப்பாளிகள், தமிழினப் போராளிகள், தாய் மொழிப் பற்றாளர்கள், ஊடகத்தார் ஐயா அவர்களைச் சந்தித்துப் பாராட்டி வருகின்றனர். அவர்களில் பலர் பேசா நோன்பைக் கைவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொண்டனர். ஆனால், ஐயா அவர்கள் கோரிக்கை நிறைவேறாமல் பேசா நோன்பைக் கைவிட மறுத்து விட்டார்.

நான் கடந்த 23.12.2018 அன்று, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் வெ. இளங்கோவன், தோழர்கள் குமார், சிவக்குமார் ஆகி யோருடன் ஐயா முத்துச்சாமி அவர்களையும், ஐயாவின் அன்புத் துணைவியார் அம்மா சுப்புலட்சுமி அவர்களையும் திருப்பூரில் அவர்கள் இல்லத்தில் சந்தித்து நலம் கேட்டறிந்தேன்.

ஐயா அவர்கள் பேசா நோன்பைக் கைவிட்டு, இயன்றளவு வழக்கம் போல் தமிழ் உரிமைப் போராட்டங்களில் கலந்து கொள்ளுங்கள் என்று நான் அன்புடன் கேட்டுக் கொண்டேன்.

ஐயா அவர்கள் ஒரு தாளில் எழுதி எனக்கு விடையளித்தார். “நான் ஏற்கெனவே கால வரம்பற்ற உண்ணாப்போராட்டம் தொடங்கினேன். நீங்கள் உண்ணாப்போராட்டத்தைக் கைவிட வலியுறுத்தினீர்கள். அதனால் நான் அதைக் கைவிட்டேன். இப்போதும் அப்படி வலியுறுத்தாதீர்கள். கோரிக்கை நிறைவேறாமல் பேசா நோன்பைக் கைவிட மாட்டேன்” என்று அதில் எழுதியிருந்தது. அதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை!

பெரியவர் முத்துச்சாமி உள்ளாடை உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளராக இருந்தவர். வசதி வாய்ப்புகள் உள்ளவர். அந்தத் தொழில் நிறுவனத்தை மகளிடம் ஒப்படைத்துவிட்டு, முழுநேரமும் தமிழ்ச் சமூகப் பணிக்குத் தம்மை ஒப்படைத்துக் கொண்டார். இளைஞரைப் போல் தமிழ்நாட்டின் பல போராட்டங்களிலும் கலந்து கொள்வார். ஓராண்டாக வீட்டில் தமிழுக்காகத் தவமிருப்பது போல் பேசா நோன்பிருக்கிறார். பேசாமல் ஓராண்டு தொடர்வது எளிய செயல் அல்ல. பெருந்துன்பம்!

தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் ஐயா அவர்களைச் சந்தித்து தமிழ்வழிக் கல்விக்கு உறுதி அளிக்க வேண்டும். குறிப்பாக, குறைகளைச் செவி கொடுத்துக் கேட்டு இயன்றதைச் செய்து வரும் தமிழ் மொழி அமைச்சர் திரு. மஃபா. பாண்டியராசன் அவர்கள் க.இரா.மு. ஐயா அவர்களைச் சந்தித்து உறுதி அளித்து அவரது பேசா நோன்பை முடித்து வைத்தால் சிறப்பாக இருக்கும்!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Thursday, March 14, 2019

ஐ.நா. அவையில் இலங்கைக்கு மீண்டும் கால நீட்டிப்பு வழங்காதே! சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட தோழர்கள் கைது!

ஐ.நா. அவையில் இலங்கைக்கு மீண்டும் கால நீட்டிப்பு வழங்காதே! சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட தோழர்கள் கைது!
தமிழீழத்தில் இலட்சக்கணக்கான தமிழீழ மக்களை இனப்படுகொலை செய்து கொன்றொழித்த சிங்கள அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முற்படாமல், அவ்வரசுக்கு மீண்டுமொருமுறை வாய்ப்பு வழங்கும் நிகழ்வு ஐ.நா. மனித உரிமையில் நடைபெறவிருக்கிறது.
தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை அவைக் கூட்டத்தில், கடந்த 2015ஆம் ஆண்டு வட அமெரிக்காவின் முன்முயற்சியால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின்படி, சிங்கள அரசு தன்னைத் தானே விசாரித்துக் கொள்ளும் பன்னாட்டு நீதிபதிகள் பங்கேற்புடனான கலப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டுமெனக் கோரியது. 2017ஆம் ஆண்டு வரை அது அமைக்கப்படவில்லை! எனவே, இரண்டாண்டு கால அவகாசம் வழங்கப்பட்டது! இப்போதும் அது அமைக்கப்படவில்லை! இப்போது, மீண்டும் இரண்டாண்டுகள் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படவுள்ளது.
இந்திய அரசின் செல்வாக்கில் நடைபெற்று வரும் இந்தக் கால நீட்டிப்புகள், தமிழீழத்தில் நடைபெற்று வரும் கட்டமைப்பு இன அழிப்புக்கு துணை செய்யும் நடவடிக்கையாகும்! இதற்கெதிராக தமிழ்நாட்டு மக்களை அணிதிரட்டும் வகையில், *“ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு”* சார்பில், இன்று (14.03.2019) - வியாழன் காலை சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
சிறீலங்காவிற்கு கால நீட்டிப்பு வழங்கப்படக் கூடாது, சிறீலங்கா அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அல்லது போர்க்குற்றப் புலன் விசாரணைக்கென்று சிறீலங்காவுக்காக அமைக்கப்படும் சிறப்புப் பன்னாட்டுக் குற்றத் தீர்ப்பாயத்தின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும், போரினால் பாதிப்புற்றவர்களின் துயரம் குறித்தும், ஏனைய பன்னாட்டு மனிதவுரிமை, மனிதநேயச் சிக்கல்கள் குறித்தும் கண்காணித்து ஆறு மாதத்துக்கொரு முறை அறிக்கையளிக்கும் பொறுப்பில் சிறீலங்காவுக்கான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் ஒருவர் அமர்த்தப்பட வேண்டும், இன அழிப்புச் சான்றுகளை அழியவிடாமல் காக்க ஒரு நடுநிலையான பன்னாட்டுப் பொறிமுறை அமைக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்ற இப்போராட்டத்தில் இலங்கை தூதரகத்தை நோக்கிப் பேரணியாக சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு அமைப்புத் தோழர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
கூட்டமைப்பின் தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ. மணி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் முனைவர் தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி துணை பொதுச் செயலாளர் திரு. வேணுகோபால், திராவிடர் விடுதலை கழகத் தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசி குமரன், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத் தலைமைக் குழு தோழர் தியாகு, த.பெ.தி.க. சென்னை மாவட்ட செயலாளர் தோழர் குமரன், தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.தா. பாண்டியன், 'இளந்தமிழகம்' செந்தில் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் பங்கேற்றனர்.
தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தலைமை செயற்குழு தோழர் க. அருணபாரதி, பொதுக்குழு தோழர்கள் பழ.நல். ஆறுமுகம், வெற்றித்தமிழன், முழுநிலவன், இளங்குமரன், வி. கோவேந்தன், தோழர்கள் மணி, தமிழரசன், கண்ணன், வடிவேலன், சந்தோஷ், புலவர் இரத்தினவேலவன் உள்ளிட்ட திரளான பேரியக்கத்தின் தோழர்கள் பங்கேற்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள தோழர்கள் தற்போது சூளைமேடு தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப் பட்டுள்ளனர்.

ஐ.நா. அவையே! இலங்கைக்கு மீண்டும் கால நீட்டிப்பு வழங்காதே! இனப்படுகொலை குற்றவாளிகளை கூண்டிலேற்று! தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பை நடத்து!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Wednesday, March 13, 2019

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளின் அரசியல் – அதிகார வர்க்கப் பின்னணியை அறிந்து கைது செய்ய வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளின் அரசியல் – அதிகார வர்க்கப் பின்னணியை அறிந்து கைது செய்ய வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், நேற்று (13.03.2019) காலை முதல் மாலை வரை குடந்தையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர்கள் பழ. இராசேந்திரன், நா. வைகறை, க. அருணபாரதி, கோ. மாரிமுத்து, இரெ. இராசு, க. முருகன், க. விடுதலைச்சுடர், ம. இலட்சுமி அம்மாள், தை. செயபால் ஆகியோர் பங்கேற்றனர்.

முன்னதாக, மறைந்த நாட்டுப்புறப் பாவலர் திரு. வையம்பட்டி முத்துச்சாமி அவர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஒரு நிமிடம் அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது. கூட்டத்தில், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் 1 -  ஐட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடுக!

தமிழ்நாட்டின் கடலோரத்திலுள்ள மரக்காணம் தொடங்கி வைத்தீசுவரன் கோயில் வரையிலும், குறிஞ்சிப்பாடி தொடங்கி வேளாங்கண்ணி அருகிலுள்ள புஷ்பவனம் வரையிலும் – 1,794 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கடலோரக் கிராமங்களையொட்டிய ஆழமற்ற கடற்பரப்பை வேதாந்தா நிறுவனத்திற்கும், வேளாண் விளைநிலங்கள் அமைந்துள்ள பகுதிகளை 700 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கும் ஐட்ரோகார்பன் எடுத்துக் கொள்ள இந்திய அரசு ஏலம் விட்டுள்ளது.

காவிரிப்படுகையையும், கடலோரத்தையும் ஒட்டுமொத்தமாக நாசாமாக்கும் இத்திட்டத்திற்கு எதிராக, திருக்காரவாசல் கிராமத்தில் அங்குள்ள மக்கள் ஒன்று திரண்டு தொடர் காத்திருப்புப் போராட்டத்தை முன்னெடுத்து அறவழியில் குரல் கொடுத்து வருகின்றனர்.

நாகை மாவட்டத்தில் ஐட்ரோ கார்பன் எடுக்க யாருக்கும் அனுமதி கொடுக்கக் கூடாது என வலியுறுத்தியும், காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் – கரியாப்பட்டிணம் கிராமத்தில் கடந்த 03.03.2019 முதல், அக்கிராம மக்களும், செட்டிபுலம், மருதூர், வேதாரணியம், வாய்மேடு, தானிக்கோட்டகம், குரவப்புலம், தென்னம்புலம், கருப்பம்புலம், தகட்டூர் உள்ளிட்ட 10 கிராமங்களின் மக்களும் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், கடந்த 09.03.2019 நள்ளிரவில் காவல்துறையினர் அடாவடியாகப் புகுந்து போராட்டப் பந்தல்களை சிதைத்ததுடன், போலி வழக்குகள் புனைந்து, அறவழிப் போராட்ட முன்னிலையாளர்கள் 7 பேரை அவர்கள் வீடுகளுக்குச் சென்று கதவைத் தட்டி எழுப்பிக் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்துள்ளனர். ஐநூறுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரி, அங்குள்ள பெண்கள் கழனியப்ப அய்யனார் கோவிலிலும், சந்தன மாரியம்மன் கோவிலிலும் காத்திருப்புப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். அப்போராட்டத்தைத் தடுக்கும் வகையில் சந்தன மாரியம்மன் கோயிலை காவல்துறை அடாவடியாக இழுத்து மூடியுள்ளது.

ஒருபக்கம், தனது அமைச்சர்களை அனுப்பி - மக்கள் எதிர்க்கும் திட்டங்களைக் கொண்டு வர மாட்டோம் எனப் பேசி வரும் தமிழ்நாடு அரசு, இன்னொருபுறத்தில் காவல்துறையை அனுப்பி போராடும் மக்களை ஒடுக்குகிறது. ஏன் இந்த இரட்டை வேடம்?

தமிழ்நாடு அரசு போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைவரையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அமைதியாக தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் மக்கள் உரிமையை அனுமதிக்க வேண்டும். ஐட்ரோ கார்பன் திட்டத்தை எக்காரணம் கொண்டும் தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என கொள்கை முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்.

நில வளத்தையும், நீர் வளத்தையும் காப்பாற்றிட – காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, இப்பகுதியில் எண்ணெய் – எரிவளி – நிலக்கரி எடுக்கும் பணிகளை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என இத்தலைமைச் செயற்குழு தமிழ்நாடு அரசை கோருகிறது!

தீர்மானம் 2 - ஏழு தமிழர்களை உடனடியாக விடுதலை செய்க!

பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், செயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர்களின் விடுதலைக்கு தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் இயற்றி அனுப்பி ஆறு மாதங்கள் கடந்த பிறகும் ஆளுநர் அதில் கையெழுத்திடாமல் காலம் கடத்துவது இந்திய அரசின் தமிழினப் பகைப் போக்கின் விளைவே ஆகும்!

காந்தியடிகள் கொல்லப்பட்ட வழக்கில் சிறையிலடைக்கப்பட்ட கோபால் கோட்சேவை 14 ஆண்டுகளில் மகாராட்டிர காங்கிரசு அரசு விடுதலை செய்தது. 257 பேர் கொல்லப்பட்ட மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிறைபட்ட இந்தி நடிகர் சஞ்சய் தத் வெறும் ஆறு ஆண்டுகளே சிறையிலிருந்த நிலையில் நன்னடத்தை காரணமாக விடுதலை செய்யப்பட்டார்.

இராசீவ் கொலை வழக்கை விசாரித்துத் தீர்ப்பு சொன்ன உச்ச நீதிமன்ற அமர்வின் தலைமை நீதிபதி கே.டி. தாமஸ், இந்த வழக்கில் பல்வேறு குளறுபடிகள் இருக்கின்றன, அவற்றையெல்லாம் கவனிக்காமல்தான் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது, எனவே அனைவரையும் விடுதலை செய்ய வேண்டுமென அறிவித்துள்ளார். பேரறிவாளனின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த காவல்துறை கண்காணிப்பாளர் தியாகராசன், பேரறிவாளன் கூறிய அசல் வாக்கு மூலத்தைப் பதிவு செய்யாமல், தன் விருப்பத்திற்கேற்ப வாக்கு மூலத்தைப் பதிவு செய்து தவறு செய்து விட்டதாக ஊடகத்தாரிடம் கூறினார். அத்துடன், உச்ச நீதிமன்றத்திற்கும் இது தொடர்பாக மனு அனுப்பியுள்ளார். அவர் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்திய இராணுவ உளவுப்பிரிவு அறிக்கை, இராசீவ் காந்தி கொலைத் திட்டம் குறித்து இவர்கள் யாருக்கும் எதுவும் தெரியாது என கூறியுள்ளது.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 161இன் கீழ் குற்ற வழக்கில் தண்டனை பெற்ற சிறையாளிகளின் தண்டனையைக் குறைக்கவோ அல்லது அவர்களை விடுதலை செய்யவோ மாநில அரசுக்கு தங்குதடையற்ற அதிகாரம் இருக்கிறது என்றும், இராசீவ் காந்தி கொலை வழக்கில் தமிழ்நாடு அரசு விரும்பினால் அப்பிரிவைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயமும், மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வும் தெளிவாகத் தீர்ப்பு வழங்கியுள்ளன.

இருபத்தெட்டு ஆண்டுகள் சிறையிலிருந்த பின்னும் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய மறுப்பது இந்திய ஆட்சியாளர்களின் வன்நெஞ்சத்தையும் பழிவாங்கும் உணர்ச்சியையும்தான் காட்டுகிறது. அவர்கள் சட்டத்தின் ஆட்சியைக் கடைபிடிக்கவில்லை என்பது வெளிக் காட்டுகிறது.

தமிழ்நாடு அமைச்சரவை ஓரு மனதாக ஏழு தமிழரை விடுதலை செய்ய வேண்டுமென தீர்மானம் இயற்றி ஆறு மாதங்கள் ஆன பிறகும், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதில் கையெழுத்திடாமல் இருப்பது, தமிழ்நாடு அரசின் அதிகாரத்தைப் பறிக்கின்ற செயலாகவும், சட்டத்திற்குப் புறம்பாக தமிழர்களை வஞ்சிக்கும் உள்நோக்கம் கொண்டதாகவும் அமைந்துள்ளது.

சட்டப்படி அமைந்துள்ள மாநில அமைச்சரவை முடிவை ஆதரித்துக் கையொப்பமிட ஆளுநருக்கு கால வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை என்ற விதியை, கெட்ட உள்நோக்கத்தோடு – பழிவாங்கும் நோக்கில் ஆளுநர் பயன்படுத்தக் கூடாது!

தமிழ்நாடு ஆளுநர் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளுக்கும், சட்டத்தின் ஆட்சிக்கும் மதிப்பளித்து, தமிழ்நாடு அமைச்சரவையின் தீர்மானத்தில் கையெழுத்திட்டு, ஏழு தமிழர்களை இனியும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது!

தீர்மானம் 3- பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளின் அரசியல் - அதிகார வர்க்கப் பின்னணியை அறிந்து கைது செய்ய வேண்டும்!

பொள்ளாச்சியில் இளம்பெண்களை ஏமாற்றி, அவர்களை பாலியல் பணயக் கைதிகளாக வைத்திருந்து சீரழித்த கயவர்கள் குறித்து வரும் செய்திகள், நெஞ்சைப் பதற வைக்கின்றன. பிடிபட்டுள்ள நான்கு கயவர்களையும் தமிழ்நாடு அரசும், காவல்துறையும் காப்பாற்ற முயல்வதாக வரும் செய்திகள் கடும் அதிர்ச்சி அளிக்கிறது.

இருநூறுக்கும் மேற்பட்ட பெண்களைக் கடந்த ஏழு ஆண்டுகளாகச் சீரழித்து வந்துள்ள இந்த கயவர் கூட்டம் குறித்து, காவல்துறைக்கும், உளவுத்துறைக்கும் ஒன்றுமே தெரியாது என்பது நம்பும்படியாக இல்லை. மக்களுக்காகப் போராடும் இயக்கங்களையும், தலைவர்களையும் சீருடை அணியாத காவலர்களை விட்டு ஒவ்வொரு நிமிடமும் கண்காணித்து வரும் தமிழ்நாடு உளவுத்துறைக்கு, இந்த கயவர் கூட்டத்தை உளவறிந்து சொல்வதில் ஏன் பின்னடைவு?

பிடிபட்ட நான்கு பேரையும் உடனடியாகக் காவலில் எடுத்து விசாரித்து, அவர்களின் பின்னுள்ள அரசியல் புள்ளிகள் மற்றும் அதிகாரிகள் யாரெனக் கண்டறிய வேண்டியதில் முனைப்பு காட்டாத காவல்துறை, “பிடிபட்டவர்களுக்கு அரசியல் பின்னணியே இல்லை” என அறிவிப்பது வேடிக்கையாக உள்ளது. பொள்ளாட்சி புறநர் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனின் இந்த அறிவிப்பே, இவ்வழக்கில் அரசியல் பின்னணி உள்ளதென பலரையும் ஐயப்பட வைத்துள்ளது.

முழுமையாக விசாரிக்கப்பட வேண்டிய நால்வரையும் உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்வது, அவர்களை யாரும் விசாரிக்க முடியாதபடி பாதுகாத்து ஆறு மாதங்கள் கழித்து விடுதலை செய்யும் நடவடிக்கையாகத் தெரிகிறதே தவிர, உண்மைகளை வெளிக் கொணரும் முயற்சியாகத் தெரியவில்லை.

பிடிபட்ட நான்கு பேர் மட்டுமே ஏழாண்டுகளாக இக்குற்றச் செயல்களை நடத்தினார்கள் என்ற காவல்துறையின் கூற்றும் நம்பும்படியாக இல்லை. இக்குற்றம் குறித்து புகார் அளித்த பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்கள் குறித்து இரகசியம் காக்க வேண்டிய காவல்துறையினர், அதை வெளிப்படையாக்கியதும், புகார் அளித்த பெண்ணின் சகோதாரனைத் தாக்கிய அ.தி.மு.க. பிரமுகரை அடுத்த நாளே பிணையில் செல்ல அனுமதித்ததும் நம் ஐயங்களை உறுதிப்படுத்துகின்றன.

ஆளுங்கட்சி பிரமுகர்களைக் காப்பாற்றி, புகார் அளிக்க முன்வரும் பாதிக்கப்பட்ட பெண்களை அச்சுறுத்தும் காவல்துறையினரின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது!

ஆளுங்கட்சி – எதிர்கட்சி எனப் பெரும் அரசியல் புள்ளிகள் இக்குற்றக் கும்பலின் பின்னுள்ள நிலையில், நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை(சி.பி.ஐ.)க்கு இவ்வழக்கு மாற்றப்பட்டுள்ள போதிலும், இதில் உண்மைகள் கண்டறியப்படுமா என்பதும் ஐயமாக உள்ளது.

எனவே, சிலைக் கடத்தல் வழக்கு விசாரணை நடைபெறுவது போல், நீதிமன்றத்தின் நேரடி பார்வையின் கீழ் நேர்மையான அதிகாரிகள் தலைமையில் சுதந்திரமான விசாரணைக் குழு அமைத்து, இவ்வழக்கிலுள்ள உண்மைகளை வெளிக் கொணர வேண்டும்! பிடிபடும் கயவர்கள் மீது காலதாமதமின்றி, உடனடியாகக் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தீர்மானம் 4 - தமிழ்நாடு தொடர்வண்டித் துறை தொழிலகங்களில் வடமாநிலத்தவரை சேர்க்கக் கூடாது! பொன்மலையில் நடந்த நேர்காணலை இரத்து செய்ய வேண்டும்!

தமிழ்நாடெங்கும் உள்ள இந்திய அரசின் தொடர்வண்டித் துறை தொழிற்சாலைகளில் பணிபுரிவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 1,765 தொழில் பழகுநர்களில் 1,600 பேர் வடமாநிலத்தவர் என்ற செய்தி தமிழ்நாட்டு மக்களைக் கடும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. வெறும் 9 விழுக்காட்டு இடங்களே தமிழர்களுக்குக் கிடைத்துள்ளது. இதற்கான நேர்காணல் திருச்சி பொன்மலை இரயில்வே பணிமனையில் நடந்து முடிந்துள்ளது.

இதேபோல், கடந்த வாரம் (04.03.2019) வெளியான இந்திய அரசின் குரூப் - டி தேர்வில், சென்னை மண்டலத்தில் அதிகமான அளவில் வடமாநிலத்தவர்களே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு குறித்த பல கேள்விகள் கேட்கப்படும் அத்தேர்வில் வடமாநிலத்தவரே அதிகமாகத் தேர்ச்சி பெற்றிருப்பது, அத்தேர்வில் முறைகேடு நடந்திருப்பதையே காட்டுகிறது!

முறைகேடான வழிகளில் தமிழ்நாட்டில் இந்திக்காரர்களைக் குடியமர்த்தும் இந்திய அரசின் இச்சதிச் செயல் கடும் கண்டனத்திற்குரியதாகும்! உடனடியாக இவ்விரு தேர்வுகளையும் முழுவதுமாக இரத்து செய்து, இந்திய அரசுத் தொழிலகங்களிலும் அலுவலகங்களிலும் 90 விழுக்காட்டு இடங்களுக்கு மண்ணின் மக்களாகிய தமிழர்களையே தேர்வு செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு, இவற்றை வேடிக்கைப் பார்க்காமல், இந்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்!

தீர்மானம் 5 - சூழலியல் மற்றும் மண்ணுரிமைப் போராளி முகிலனை உடனடியாகக் காவல்துறை கண்டுபிடிக்க வேண்டும்!

கூடங்குளம் அணு உலையைத் தடை செய்ய வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும், தாது மணல் - ஆற்று மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என்பன போன்ற சிக்கல்களில் உடனுக்குடன் எதிர்வினையாற்றி போராடி வந்த சமூகச் செயல்பாட்டாளர் தோழர் முகிலன் காணாமல் போய், 25 நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையிலும், தமிழ்நாடு காவல்துறை அவரை தேடிக் கண்டுபிடிக்காமல் அலட்சியம் காட்டுவது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.

கருவிலிருந்து கல்லறை வரை ஒருவரின் உயிருக்கும் வாழ்வுரிமைக்கும் பொறுப்பேற்க வேண்டியது அரசின் சட்டக்கடமையாகும்.

உயிர்க்கொல்லி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி வலியுறுத்தி கடந்த 2018 மே 22 அன்று, அறவழிப் போராட்டம் நடத்திய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை காவல்துறை சுட்டுக் கொன்றது. காவல்துறையின் இச்செயல் தற்காப்புக்கானதும் இல்லை - தற்செயல் நிகழ்ச்சியும் இல்லை – நபர்களைக் குறிவைத்து திட்டமிட்டு சுட்டுக் கொல்வதாகும் என்று அம்பலப்படுத்தும் வகையில் ஒளிப்பட சான்றுகளுடன் ஆவணப்படம் தயாரித்து அதனை கடந்த 15.02.2019 அன்று சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்தில் ஊடகத்தார் முன்னிலையில் வெளியிட்டார். அன்றிரவே, அவர் காணாமல் போயிருப்பது பல்வேறு ஐயங்களை எழுப்புகிறது.

தமிழ்நாடு அரசும், காவல்துறையும் அக்கறையோடு செயல்பட்டிருந்தால் முகிலனின் நிலை குறித்து, இந்நேரம் உண்மை நிலையை வெளிப்படுத்தியிருக்கலாம். உயர் நீதிமன்றமும், என்றி தீபேன் அவர்கள் தொடுத்த ஆட்கொணர்வு மனுவில் தீவிரம் காட்டாமல் நீண்ட இடைவெளி கொடுத்து வாய்தா போட்டுக் கொண்டே உள்ளது. உடனடியாக காணாமல் போன முகிலனை மீட்பதிலும், அவருடைய உண்மை நிலையை அறிவிப்பதிலும் தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி மக்களுக்கு உண்மையை நிலைநாட்ட வேண்டும்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Monday, March 11, 2019

ஐ.நா.வை ஏமாற்றி நீதியின் பிடியிலிருந்து தப்ப முயலும் இனக்கொலை இலங்கை அரசின் தூதரக முற்றுகைப் போராட்டம்!

ஐ.நா.வை ஏமாற்றி நீதியின் பிடியிலிருந்து தப்ப முயலும் இனக்கொலை இலங்கை அரசின் தூதரக முற்றுகைப் போராட்டம்!
 

தமிழீழத்தில் இலட்சக்கணக்கான தமிழீழ மக்களை இனப்படுகொலை செய்து கொன்றொழித்த சிங்கள அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முற்படாமல், அவ்வரசுக்கு மீண்டுமொருமுறை வாய்ப்பு வழங்கும் நிகழ்வு ஐ.நா. மனித உரிமையில் நடைபெறவிருக்கிறது.

தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை அவைக் கூட்டத்தில், கடந்த 2015ஆம் ஆண்டு வட அமெரிக்காவின் முன்முயற்சியால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின்படி, சிங்கள அரசு தன்னைத் தானே விசாரித்துக் கொள்ளும் பன்னாட்டு நீதிபதிகள் பங்கேற்புடனான கலப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டுமெனக் கோரியது. 2017ஆம் ஆண்டு வரை அது அமைக்கப்படவில்லை! எனவே, இரண்டாண்டு கால அவகாசம் வழங்கப்பட்டது! இப்போதும் அது அமைக்கப்படவில்லை! இப்போது, மீண்டும் இரண்டாண்டுகள் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படவுள்ளது.

இந்திய அரசின் செல்வாக்கில் நடைபெற்று வரும் இந்தக் கால நீட்டிப்புகள், தமிழீழத்தில் நடைபெற்று வரும் கட்டமைப்பு இன அழிப்புக்கு துணை செய்யும் நடவடிக்கையாகும்! இதற்கெதிராக தமிழ்நாட்டு மக்களை அணிதிரட்டும் வகையில், “ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு” சார்பில், வரும் 14.03.2019 - வியாழன் அன்று காலை 10.30 மணிக்கு, சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் ஒருங்கிணைக்கப்படுகிறது.

சிறீலங்காவிற்கு கால நீட்டிப்பு வழங்கப்படக் கூடாது, சிறீலங்கா அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அல்லது போர்க்குற்றப் புலன் விசாரணைக்கென்று சிறீலங்காவுக்காக அமைக்கப்படும் சிறப்புப் பன்னாட்டுக் குற்றத் தீர்ப்பாயத்தின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும், போரினால் பாதிப்புற்றவர்களின் துயரம் குறித்தும், ஏனைய பன்னாட்டு மனிதவுரிமை, மனிதநேயச் சிக்கல்கள் குறித்தும் கண்காணித்து ஆறு மாதத்துக்கொரு முறை அறிக்கையளிக்கும் பொறுப்பில் சிறீலங்காவுக்கான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் ஒருவர் அமர்த்தப்பட வேண்டும், இன அழிப்புச் சான்றுகளை அழியவிடாமல் காக்க ஒரு நடுநிலையான பன்னாட்டுப் பொறிமுறை அமைக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறும் இப்போராட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்கள் தலைமையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் பங்கெடுக்கிறது!

தமிழின உணர்வாளர்களும், தமிழ் மக்களும் இப்போராட்டத்தில் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கிறது!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Saturday, March 9, 2019

ஏழு தமிழர் விடுதலைக்காக எழுச்சி பெற்ற தமிழ்நாடு..!


ஏழு தமிழர் விடுதலைக்காக எழுச்சி பெற்ற தமிழ்நாடு..!

பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், செயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர்களின் விடுதலைக்கு தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் இயற்றி அனுப்பி ஆறு மாதங்கள் கடந்த பிறகும் ஆளுநர் அதில் கையெழுத்திடாமல் காலம் கடத்துவது இந்திய அரசின் தமிழினப் பகைப் போக்கின் விளைவே ஆகும்!

இந்நிலையில், ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் பல்வேறு ஊர்களில் மக்கள்சந்திப்பு இயக்கத்தை நடத்தினார்.அதில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தோழர்களும் பங்கேற்றனர்.

அதில் தீர்மானித்தபடி, இன்று (மார்ச் 9, 2019) மாலை சென்னை, கோவை, மதுரை,திருச்சி, திருநெல்வேலி, சேலம், புதுவை ஆகிய நகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.

திருச்சி
திருச்சியில் தொடர்வண்டி சந்திப்பு நிலையம் அருகில் உள்ள ஆர்.சி. பள்ளி சாலையில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமையில் பல்வேறு அமைப்பினரும் தோழர்களும் மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்றனர்.
தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழுத் தோழர்கள் நா. வைகறை, செயபால், லெட்சுமி அம்மாள், திருச்சி மாநகரச் செயலாளர் வே.க. இலக்குவன், தஞ்சை மாநகரச் செயலாளர் இலெ. இராமசாமி, பூதலூர் ஒன்றியப் செயலாளர் பி. தென்னவன், திருவெறும்பூர் செயலாளர் தியாகராசன், விராலிமலை செயலாளர் வே.பூ. இராமராசு, பொதுக்குழு தோழர்கள் மூ.த. கவித்துவன், இராசாரகுநாதன், இனியன், குடந்தை தீந்தமிழன், வெள்ளம்மாள் உள்ளிட்ட திரளான பேரியக்கத் தோழர்கள் திரளாக பங்கேற்றனர்.

சென்னை

சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடைபெற்ற மனித சங்கிலிப் போராட்டத்தில் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தோழர் தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தோழர் தி. வேல்முருகன், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி இராமதாசு, மே 17 இயக்கப் பொறுப்பாளர் பிரவின், தமிழ்த்தேச மக்கள் கட்சி தலைவர் வழக்கறிஞர் புகழேந்தி, தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குனர் மு. களஞ்சியம், தமிழ்ப்பேரரசுக் கட்சித் தலைவர் இயக்குனர் வ. கௌதமன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், நாம் தமிழர் கட்சி, நடிகர் சத்தியராஜ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தோழர்கள் பங்கேற்றனர்.
தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், பேரியக்கப் பொதுக்குழு தோழர்கள் பழ. நல். ஆறுமுகம், வி. கோவேந்தன், வெற்றித்தமிழன், முழுநிலவன், இளங்குமரன், வடசென்னை செயலாளர் செந்தில், தென்சென்னை செயலாளர் கவியரசன் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள் திரளாக பங்கேற்றனர்.

புதுச்சேரி
புதுச்சேரி அண்ணாசிலை அருகில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் அய்யப்பன், மக்கள் உரிமை கூட்டமைப்பு தோழர் சுகுமாறன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.
தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க. அருணபாரதி, புதுச்சேரிச் செயலாளர் தோழர் இரா. வேல்சாமி, தோழர்கள் பட்டாபி, சத்தியமூர்த்தி உள்ளிட்ட பேரியக்க தோழர்கள் பங்கேற்றனர்.

மதுரை
 மதுரையில் மாவட்ட நீதிமன்றம் முன்பு நடைபெற்ற மனித சங்கிலிப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி, புரட்சிகர இளைஞர் முன்னணி, அம்மா மக்கள்முன்னேற்றக் கழகம், இயக்குநர் அமீர், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தோழர்கள் பங்கேற்றனர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், பொருளாளர் ஆனந்தன், மதுரை மாநகர்செயலாளர் தோழர் இராசு, பொதுக் குழுஉறுப்பினர் கதிர் நிலவன், தோழர்கள் புருசோத்தமன், கருப்பையா, கரிகாலன்,அழகர்சாமி, வழக்கறிஞர் அருணாசலம், தி.கருப்பையா, ஓசுர் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை செம்பரிதி, மகளிர்ஆயம் ஒருங்கிணைப்பாளர் அருணா, செரபினா, மேரி, சந்திரா, இளமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நெல்லை
நெல்லையில் வ. உ. சி. திடல் அருகில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் 'வான்முகில்' வழக்கறிஞர் ம. பிரிட்டோ, நாம் தமிழர் கட்சி வழக்குரைஞர் ராம்குமார், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொறுப்பாளர் கல்லூர் வேலாயுதம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.

தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் பொதுக்குழு உறுப்பினர் மு. தமிழ்மணி, புளியங்குடி செயலாளர் க. பாண்டியன், தோழர்கள் சிவா, விஜயநாராயணன் உள்ளிட்ட பேரியக்க தோழர்கள் பங்கேற்றனர்.

கோவை
கோவையில் தமிழ்நாடு ஹோட்டல் எதிரில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடக் கழகத் தலைவர் கோவை கு. இராமகிருட்டிணன், கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தோழர் உ. தனியரசு உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர். தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் இராசேசு, திருவள்ளுவன் உள்ளிட்டத் தோழர்கள் பங்கேற்றனர்.

சேலம்

சேலத்தில் அண்ணா சிலை அருகில் பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற போராட்டத்தில் பேரறிவாளன் தந்தையார் திரு. குயில்தாசன், திராவிடர் விடுதலை கழக பொறுப்பாளர் டேவிட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர் காஜா மைதீன், நாம் தமிழர் கட்சி தங்கதுரை உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.

பேரியக்கத் தோழர்கள் பிந்துசாரன், பொதுக்குழு உறுப்பினர் வெ. இளங்கோவன், தோழர்கள் வெண்ணந்தூர் சேகர், ஈரோடு சரவணன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

#28YearsEnoughGovernor
#அநீதியே28ஆண்டுகள்போதாதா

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Monday, March 4, 2019

மார்ச் 9 - தமிழ்நாடெங்கும் ஏழு தமிழர் விடுதலைக்காக மனித சங்கிலி பெருந்திரள் மக்கள் பங்கேற்க வேண்டும்! தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!

மார்ச் 9 - தமிழ்நாடெங்கும் ஏழு தமிழர் விடுதலைக்காக மனித சங்கிலி பெருந்திரள் மக்கள் பங்கேற்க வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!
பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், செயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர்களின் விடுதலைக்கு தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் இயற்றி அனுப்பி மூன்று மாதங்கள் கடந்த பிறகும் ஆளுநர் அதில் கையெழுத்திடாமல் காலம் கடத்துவது இந்திய அரசின் தமிழினப் பகைப் போக்கின் விளைவே ஆகும்!

இந்நிலையில், ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் பல்வேறு ஊர்களில் மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்தி வருகிறார். அதில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களும் பங்கேற்று வருகிறார்கள்.

அதில் தீர்மானித்தபடி, வரும் 2019 மார்ச் - 9 காரி (சனி) அன்று மாலை 4 மணி முதல் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், புதுவை ஆகிய நகரங்களில் அனைத்துக் கட்சியினர் - இயக்கத்தினர் பங்கேற்கும் மனித சங்கிலிப் போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஏழு தமிழர் விடுதலை கோரி இந்த மனித சங்கிலிப் போராட்டத்தில் ஆங்காங்கே தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும்.

சென்னை - காஞ்சி மாவட்டத் தோழர்கள் சென்னையிலும், புதுச்சேரி - கடலூர் - விழுப்புரம் மாவட்டத் தோழர்கள் புதுச்சேரியிலும், நாகை - திருவாரூர் - தஞ்சை - திருச்சி - புதுக் கோட்டை - பெரம்பலூர் - அரியலூர் மாவட்டத் தோழர்கள் திருச்சியிலும், மதுரை - தேனி மாவட்டத் தோழர்கள் மதுரையிலும், நெல்லை - தூத்துக்குடி மாவட்டத் தோழர்கள் நெல்லையிலும், ஈரோடு - கோவை மாவட்டத் தோழர்கள் கோவையிலும், சேலம் - நாமக்கல் - தருமபுரி - கிருட்டிணகிரி மாவட்டத் தோழர்கள் சேலத்திலும் இந்த மனித சங்கிலியில் பங்கேற்க வேண்டும். தோழமை அமைப்புகளோடு கலந்து கொண்டு ஒருங்கிணைப்பாக ஈடுபட வேண்டும். தமிழ் மக்களை இப்பேரணியில் பெருந்திரளாகப் பங்கேற்கச் செய்ய வேண்டும்!

மார்ச் 9 - மனித சங்கிலிப் போராட்ட நாளன்று பேரியக்கத் தோழர்களும், தமிழ் மக்களும் அவரவரது சுட்டுரை (Twitter), முகநூல் (Facebook) உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் #28YearsEnoughGovernor என்ற குறிச்சொற்றொடர் (Hashtag) பயன்படுத்தி பதிவுகள் இட வேண்டும் என்றும் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT