உடனடிச்செய்திகள்
Showing posts with label பெ. மணியரசன் சாதி ஒழிப்பு! ஆரியத்துவா எதிர்ப்பு!. Show all posts
Showing posts with label பெ. மணியரசன் சாதி ஒழிப்பு! ஆரியத்துவா எதிர்ப்பு!. Show all posts

Monday, August 26, 2019

தமிழர்களை சூத்திரர்கள் - பஞ்சமர்கள் என்று இழிவுபடுத்தியவர்கள் சாதி வேண்டும் என்கிறார்கள்! பெ. மணியரசன்


தமிழர்களை சூத்திரர்கள் - பஞ்சமர்கள்
என்று இழிவுபடுத்தியவர்கள்
சாதி வேண்டும் என்கிறார்கள்!


தோழர் பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

கேரளத்தின் கொச்சியில் 2019 சூலை 19 - 21 வரை நடந்த “உலகத் தமிழ் பிராமணர்கள்” மாநாட்டில் கேரள உயர் நீதிமன்ற நீதிபதி சிதம்பரேஷ் என்பவர், “பிராமணர்கள் இரு பிறப்பாளர்கள்; அவர்கள் தலைமைப் பொறுப்பில்தான் இருக்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.

இதுதான் வர்ணாசிரம தர்ம நீதி!

பிராமணர்களில் மிகப்பெரும்பாலோர் சமூக சமத்துவத்தை ஏற்க மாட்டார்கள். அதை அவர்கள் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ள மாட்டார்கள். எது எதை எங்கெங்கு, எவ்வெப்போது செய்ய வேண்டுமோ - அவ்வாறு செய்து, தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வார்கள். அதற்காக கடவுள், கட்சி, இந்து மதம், இந்தியத்தேசியம் எல்லா வற்றையும் பயன் படுத்திக் கொள்வார்கள். இடதுசாரிக் கொள்கை, வலதுசாரிக் கொள்கை எல்லாவற்றையும் பயன்படுத்திக் கொள்வார்கள்.

நீதித்துறையை எந்த அளவு பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். அண்மையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், “கிறித்துவக் கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை” என நீதிமன்றத்திலேயே ஆர்.எஸ்.எஸ். குரலை வெளிப்படுத்தினார். இதற்குக் கடும் கண்டனங்கள் எழுந்த பின் அக்கருத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.

இந்தியத் தலைமையில் வர்ணாசிரமவாத பா.ச.க.வின் அதிரடி ஆட்சி! தமிழ்நாட்டில் தில்லிக்குக் கங்காணி வேலை பார்த்து பதவி - பண அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் தி.மு.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகள்! பம்மிக் கொண்டு, மறைமுகச் செயல்பாடுகள் மூலம் பிராமணிய வர்ணாசிரம வேலைகளை செய்து வந்த பலர் இப்போது துணிச்சல் பெற்று வெளிப்படையாக தங்களின் “சாதி ஆதிக்க உரிமையைப்” பேசுகிறார்கள்.

பதுங்கியவர்கள் பாய்கிறார்கள்
------------------------------------------------ 
அதே கொச்சி பிராமணர்கள் மாநாட்டில் பேசிய தமிழ்நாட்டு வல்லம் சாஸ்திரா பல்கலைக்கழகப் பேராசிரியர் எம்.ஏ. வெங்கடகிருட்டிணன் எல்லா உயிரினத்திலும் சாதி உண்டு, உயர்வு தாழ்வு உண்டு, மனிதர்களிலும் பிறப்பால் உயர்வு தாழ்வு உண்டு, பிராமணர்களுக்கு மட்டுமே தலைமை தாங்கும் தகுதி உண்டென்றார். மனிதர்கள் பிறப்பு அடிப் படையில் உயர்ந்த சாதி - தாழ்ந்த சாதி என்று பிரிக்கப்பட வேண்டும் என்றார்.

வெங்கடகிருட்டிணன் பேச்சை அப்படியே ஆதரித்து ஒய்.ஜி. மகேந்திரன் மகள் மதுவந்தி, “நக்கீரன்” இணையத் தொலைக்காட்சியில் பேசினார்.
முற்போக்காளர்கள் போல் காட்டிக் கொண்ட மாலன், பத்ரி போன்றோர் இப்போது தங்கள் உண்மை முகம் காட்டத் துணிந்து விட்டார்கள். காசுமீர் உரிமைப் பறிப்பை மாலன் ஆதரித்து தொலைக்காட்சி விவாதத்தில் பேசுகிறார். ஆரிய பிராமணிய தத்துவ சாரத்தை உள்ளடக்கிய கத்தூரிரங்கனின் புதிய கல்விக் கொள்கை வரைவை ஆதரித்து பத்ரி முழங்குகிறார்!

புதிய புதிய எச். இராசாக்கள் இப்போது தலைநீட்டுகிறார்கள்!

பிராமணரல்லாதார் தலைமையின் கீழ் பிராமணர்கள் 
----------------------------------------------------------------------------------- 
மனிதர்கள் அனைவரும் சமம்; தமிழர்கள் அனைவரும் சமம்; ஆணும் பெண்ணும் சமம் என்பதே தமிழர் அறம்! தமிழர் மரபு சமத்துவ மரபு!

பிராமணர்களால் மிலேச்சர்கள் என்று வசை பாடப்பட்ட ஐரோப்பியர்கள் இந்தியப் பிராமணர்களின் அறிவாற்றலை விட அதிக அறிவாற்றல் பெற்றிருப்பதால் புதிய புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கினார்கள்; சனநாயகக் கோட்பாடுகளையும் நிறுவனங்களையும் நிறுவினார்கள். அவர்களிடம் போய் இந்தியப் பிராமணர்கள் வேலை பார்த்துக் கொண்டுள்ளார்கள்.
தமிழ் இனத்தில் பிறந்த திருவள்ளுவப் பேராசான் யாத்துத்தந்த திருக்குறளுக்கு நிகரான நூல் ஆரிய சமற்கிருதத்தில் இல்லை!
அல்லாடி கிருஷ்ணசாமி ஐயரும், என். கோபாலசாமி ஐயங்காரும் உறுப்பு வகித்த இந்திய அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவிற்கு ஒடுக்கப்பட்ட வகுப்பில் பிறந்த அம்பேத்கர்தாம் தலைமை தாங்கினார்.
மனிதர்கள் – விலங்குகள் வேறுபாடு
--------------------------------------------------------- 
மனிதர்கள் உழைத்து உற்பத்தி செய்து உண்டு, உடுத்தி, உறைந்து வாழ்பவர்கள். மற்ற உயிரினங்கள் இருப்பவற்றை உண்டு வாழ்பவை! மனிதர்கள் சிந்திக்கும் ஆற்றல் பெற்றவர்கள். எனவே, சிந்திக்காத - சிந்தனை வளர்ச்சிக்கு வாய்ப்பில்லாத மற்ற உயிரினங்களைப் போல் மனிதர்கள் தலைமுறை தலைமுறையாக ஒரே மாதிரியில் இருப்பதில்லை.

மனிதர்களை அஃறிணையோடு ஒப்பிடும்போதே வெங்கடகிருட்டிணன் “அறிவாற்றலின் ஆழம்” வெட்ட வெளிச்சமாகி விட்டது! ஆரியத்துவாவின் “அறம்” புரிந்து விட்டது!

விலங்குகளின் பாலுறவுக்கு தாய், மகள், அக்காள், தங்கை - தந்தை, அண்ணன், தம்பி என்ற வேறுபாடுகள் கிடையாது. மனிதர்களும் இன்று அவ்வாறு இருக்க வேண்டுமென்று வெங்கடகிருட்டிணன் அறிவுரை வழங்குவாரா?

மற்ற மதங்களில் சாதி இருக்கிறதா?
---------------------------------------------------------
இந்து மதத்தைத் தவிர மற்ற மதங்களில் பிறப்பு அடிப்படையில் சாதி இருக்கிறதா? இல்லை! ஆரிய பிராமண சூழ்ச்சிக்காரர்கள்தாம் இந்தியத் துணைக் கண்டத்தில் மனிதர்களிடையே வர்ணாசிரம சாதிப் பிளவை பிறப்பு அடிப்படையில் உருவாக்கி, நிலைநாட்டி, ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். 
பிறப்பைக் காரணம் சொல்லி, சம்பூகனைக் கொன்றவர்கள் - ஏகலைவன் கட்டை விரலை வெட்டியவர்கள் - நந்தனை எரித்தவர்கள் ஆரிய - பிராமண வர்ணாசிரமவாதிகளே!

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் உருவாக்கிய வர்ணசாதி அநீதியை - இவர்களின் ஆதிக்கத்தை 21ஆம் நூற்றாண்டிலும் நிலைநாட்ட ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க. ஆட்சி பாதை போட்டிருக்கிறது என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒட்டுமொத்தத் தமிழர்களையும் சூத்திரர்கள் மற்றும் பஞ்சமர்கள் என்று அடையாளப்படுத்தியவர்கள்தாம் பிராமணர்கள் என்பதை இளம் தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும்!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : 
www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : 
www.kannottam.com
இணையம் : 
www.tamizhdesiyam.com
சுட்டுரை : 
www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : 
youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT