உடனடிச்செய்திகள்

Tuesday, October 31, 2017

“தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை வழங்கு!” காத்திருப்புப் போராட்டம் நடத்த முயன்ற தோழர்கள் கைது!

“தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை வழங்கு!” திருச்சி – சென்னையில் இந்திய அரசு நிறுவனங்கள் முன் காத்திருப்புப் போராட்டம் நடத்த முயன்ற தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் கைது!
 
 
 
 
 
 
 
 
 
 
 
தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு – தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 90% வேலை வழங்கக் கோரியும், 10% மேலுள்ள வெளி மாநிலத்தவரை வெளியேற்றக் கோரியும், அரசுத்துறையில் 100% தமிழர்களுக்கு வழங்கக் கோரியும், திருச்சி பெல் தொழிற்சாலை முன்பும், சென்னை வருமான வரி அலுவலகம் முன்பும், இன்று (31.10.2017) காலை - வேலை கேட்டு காத்திருப்புப் போராட்டம் நடத்த முயன்ற, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
 
திருச்சி

பொறியியல் படித்த தமிழ் மாணவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் துப்புரவுப் பணிக்காக விண்ணப்பிக்கும் அவலம் நிலவும் தமிழ்நாட்டில், தொடர்ந்து வெளி மாநிலங்களைச் சேர்ந்த பொறியாளர்கள் திருச்சி திருவெறும்பூரிலுள்ள இந்திய அரசின் பெல் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பெல் நிறுவனத்தில் தமிழர்களுக்கு வேலை கேட்டு, இன்று காலை திருவெறும்பூர் பெல் நிறுவன வாயிலில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா. வைகறை தலைமையில் பேரியக்கத் தோழர்கள் திரண்டனர். பெல் நிறுவனத்தின் நுழைவு வாயிலில் காவல்துறையினர் நூற்றுக்கணக்கில் குவிக்கப்பட்டிருந்தனர்.
 
நுழைவு வாயிலை நோக்கிச் சென்ற தோழர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்திட, அங்கேயே விரிப்புகளை விரித்து அமர தோழர்கள் முயன்றனர். காவல்துறையினர் ஓடி வந்து, விரிப்புகளைப் பிடுங்கிக் கிழித்தெறிந்த நிலையில், அங்கு வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதனையடுத்து, தோழர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து, தாங்கள் கொண்டு வந்த வாகனங்களில் ஏற்றினர்.
 
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு தோழர்கள் குழ. பால்ராசு, குடந்தை விடுதலைச்சுடர், மதுரை இரெ. இராசு, திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் மூ.த. கவித்துவன், மகளிர் ஆயம் தமிழக ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா, பேரியக்கப் பொதுக்குழு தோழர்கள் நா. இராசாரகுநாதன், திருச்செந்தூர் மு. தமிழ்மணி, புளியங்குடி க. பாண்டியன், கதிர்நிலவன், ப. சிவவடிவேலு, சாமிமலை க. தீந்தமிழன், பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் தென்னவன், தஞ்சை மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி, திருத்துறைப்பூண்டி ஒன்றியச் செயலாளர் தோழர் செந்தில்குமார், பாபநாசம் செயலாளர் தோழர் புண்ணியமூர்த்தி உள்ளிட்ட பேரியக்கப் பொறுப்பாளர்களும் தோழர்களுமாக 130 பேர் கைது செய்யப்பட்டனர்.
 
சென்னை

சென்னையில், வடமாநிலத்தவர் அதிகளவில் பணியமர்த்தப்பட்டுள்ள நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகம் முன்பு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி தலைமையில், காத்திருப்புப் போராட்டம் நடத்த முயன்ற பேரியக்கத தோழர்கள் 45 பேர் கைது செய்யப்பட்டனர்.
 
வருமான வரித்துறை அலுவலகம அருகில் கூடி நின்ற தோழர்கள், “தமிழ்நாட்டில் தமிழருக்கு வேலை கொடு! வேலை கொடு!”, “வெளியேற்று வெளியேற்று! வெளி மாநிலத்தவரை வெளியேற்று!” என்பன உள்ளிட்ட ஆவேச முழக்கங்களோடு வருமான வரி அலுவலகம் நோக்கிச் சென்ற தோழர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.
 
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. முருகன், தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, புதுச்சேரி செயலாளர் தோழர் இரா. வேல்சாமி, ஈரோடு செயலாளர் தோழர் வெ. இளங்கோவன், பொதுக்குழு தோழர்கள் பழ.நல். ஆறுமுகம், வெற்றித்தமிழன், அ.ரா. கனகசபை, ஓசூர் செம்பரிதி, த.இ.மு. துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ. குபேரன், தென்சென்னை செயலாளர் தோழர் மு. கவியரசன், வடசென்னை செயலாளர் தோழர் செந்தில்குமரன், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட திரளான பேரியக்கத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழ்த் தேச மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் தமிழ்நேயன் போராட்டத்தின் ஞாயத்தை விளக்கிப் பேசினார்.
 
தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
 
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam

ஊடகம்: www.kannotam.com 

இணையம்: www.tamizhthesiyam.com 

Monday, October 30, 2017

போர்க்குணம் மிக்க மக்கள் படைப்பாளி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி மறைவு. - பாவலர் கவிபாஸ்கர் இரங்கல்!

போர்க்குணம் மிக்க மக்கள் படைப்பாளி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி மறைவு. தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடுவண் குழு உறுப்பினர் பாவலர் கவிபாஸ்கர் இரங்கல்!
 
முற்போக்கு எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி உடல்நலக்குறைவால் 30.10. 2017 இன்று காலமானார் (வயது 67) என்ற செய்தி அறிந்ததும் பேரிடியாக இருந்தது.

உழைக்கும் மக்களின் வலியை தனது படைப்பின் வழியாக வெளிக்கொணர்ந்த மேலாண்மையாரின் சிறுகதைகள் ஏராளம். கரிசல் மண்ணின் வாழ்வியல் கூறு பொன்னுசாமியின் எழுத்தில் எதிரொலிக்கும். அவரது ஒவ்வொரு நாவல்களிலும் வாழ்க்கைக்கான தடமிருக்கும்; மண்ணின் மக்களின் பதிவிருக்கும். கதை இலக்கியத்தில் தனக்கென ஒரு உத்தியை, எளிய சொல்லாடல்கள் கையாள் வதில் சிறந்து விளங்கினார்.

விருதுநகர் மாவட்டம் மேலாண்மறைநாடு என்ற கிராமத்தில் பிறந்தவர் மேலாண்மை பொன்னுசாமி. 5ஆம் வகுப்பிற்கு மேல் பள்ளி படிப்புத்தொடராத மேலாண்மையார் படைப்புலகில் சிறந்த பட்டங்களை பெற்றார். ”படிக்க முடியவில்லையே என்ற மனக்காயமும் ஏக்கமும்தான் என்னைத் தீவிர வாசிப்புக்கு உள்ளாக்கியது. நூலகங்களே எனது கல்விச்சாலைகளாயின” என்பார் மேலாண்மையார்.

இடதுசாரி இலக்கிய அமைப்புகளுடன் இணைந்து எழுதத் தொடங்கினார். 1972இல் முதன்முதலில் செம்மலர் இதழில் பரிசு என்ற சிறுகதையை எழுதினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தில் மூன்று முறை தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். சிறுகதைகள், நாவல்கள் குறுநாவல்கள் என 36 நூல்களுக்குமேல் எழுதியுள்ளார்.

அன்னபாக்கியன், அன்னபாக்கியச்செல்வன், ஆமார்நாட்டான் என்ற புனைப் பெயர்களிலும் எழுதியுள்ளார். மேலாண்மை பொன்னுசாமி எழுதிய மின்சாரப்பூ என்ற சிறுகதைத் தொகுப்பு நூல் 2007 ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருதைப் பெற்றது.

பெண்ணுரிமை, சாதி மறுப்பு, சமத்துவம் என தனது படைப்பு வழியாக தமிழ்ச் சமூகத்திற்கு பெரும் பங்களிப்பு செய்தவர். ஆணும் பெண்ணும் தோழமையுடன் வாழும் நிலை வேண்டும். அதற்கான களமாக இச்சமூசமுகம் அமைய வேண்டும் என்பதையே தனது எழுத்துகளில் எப்போதும் எடுத்துரைப்பவர் மேலாண்மை பொன்னுசாமி.

இலக்கியத்தை வாழ்க்கைக்குறிய வருவாய் வழியாக நினைக்காமல் இலக்கியத்தின் ஊடாக எதற்கும் சமரசமாகி விடாமல், போர்க்குணம் மிக்கப் படைப்பாளியாக திகழ்ந்தார். தனது பொதுவுடமைக் கொள்கை - இலட்சியங்களில் உறுதிபாட்டுடன் தொடர்ந்து அப்பாதையிலேயே தன் எழுத்தோடு பயணித்தார்.

மேலாண்மை பொன்னுசாமியின் முற்போக்குப் படைப்புகள் ஒவ்வொன்றும் தமிழ்ச்சமூகத்திற்கான நிகரமையை, உரிமையை மீட்க உதவும் எழுத்துக் கருவிகள். அது இளைய தலைமுறையை முன் நகர்த்தும்.

தனது படைப்பு வழியாக மக்களுக்காக பரப்புரை செய்த மாபெரும் இலக்கியர் மேலாண்மை பொன்னுசாமியின் மறைவு ஈடுசெய்யமுடியாதது. அவருக்கு தமிழ்க்கலை இலக்கியப் பேரவை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
 
செய்தித் தொடர்பகம்,
தமிழ்க் கலை இலக்கியப் பேரவை.


பேச: 9841604017, 7667077075
முகநூல்: www.facebook.com/tha.ka.e.pe
இனையம்: www.kannotam.com

Thursday, October 26, 2017

ஸ்பாரோ இலக்கிய விருது 2017 அறிவிப்பு

ஸ்பாரோ இலக்கிய விருது 2017 அறிவிப்பு
இந்த ஆண்டின் தமிழ் மொழி விருதுகள் *லட்சுமி எனும் பயணி* எழுதிய மகளிர் ஆயம் நடுவன் குழு உறுப்பினர் தோழர் பெ. லெட்சுமி அம்மா அவர்களுக்கு விருது விழா டிசம்பரில் நடைபெறும்.

செய்தி தொடர்பகம்,
மகளிர் ஆயம்

Wednesday, October 25, 2017

தமிழ்நாடு, தமிழர் தாயகமா? அயலார் காலனியா? மண்ணின் மக்களுக்கே வேலை கொடு!

தமிழ்நாடு, தமிழர் தாயகமா? அயலார் காலனியா? மண்ணின் மக்களுக்கே வேலை கொடு!
 
அக்டோபர் 31 அன்று சென்னை - திருச்சியில் ... தமிழ்த்தேசியப் பேரியக்கம் காத்திருப்புப் போராட்டம்!
#தமிழர்களுக்கே90விழுக்காடுவேலை
#90PercentJobsforTamils

திரும்பிய திசையெல்லாம் தமிழ்நாட்டில் வேற்றினத்தார் முகங்கள்! கரையுடைத்த வெள்ளம் போல் கடை வீதிகளில், கட்டுமானப் பணி இடங்களில், உயர் ஊதியம் பெறும் இந்திய அரசுத் தொழிற்சாலைகளில் - இந்திய அரசு அலுவலகங்களில், உணவு விடுதிகளில், சிறு தொழில் பட்டறைகளில், பெருங்குழும நிறுவனங்களில், மென்பொருள் வளாகங்களில், வேளாண் பண்ணைகளில் என நோக்குமிடமெல்லாம் நீக்கமற நிரம்பி வழிகின்றனர் வெளி மாநிலத்தவர்!

ஏற்கெனவே, தொழில் மற்றும் வணிகத்தில் மார்வாடி - குசராத்தி சேட்டுகள், மலையாளிகள், ஆந்திரத் தெலுங்கர்கள் ஆதிக்கம்; அண்டி வாழும் நிலையில் தமிழர்கள்!

தமிழ்நாடு, தமிழர் தாயகமா? அயலார் காலனியா? இதற்காகத்தான் 1947-இல் வெள்ளையரை வெளியேற்றி “விடுதலை” பெற்றோமா? இதற்காகத்தான் 1956-இல் தமிழர் தாயகமாக மொழி அடிப்படையில் தமிழ்நாடு அமைக்கப்பட்டதா?
ஆங்கிலேய ஆட்சியாளர்கள் கூட ஒருமொழி பேசும் மக்கள் தாயகத்தில் அயல்மொழி பேசும் மக்கள் பெரும் எண்ணிக்கையில் குடியேறுவதை எதிர்த்துள்ளார்கள். இதோ, 1931 மக்கள் தொகைக் கணக்கெடுப்புக் கண்காணிப்பாளராக இருந்த ஆங்கிலேயர் சி.எஸ். முல்லான் கூறுவதைப் பாருங்கள்!

அசாமில் வங்காளிகள் மிகை எண்ணிக்கையில் குடியேறுவது அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் என்று அஞ்சுகிறார் அந்த ஆங்கிலேயர்!

“இந்த மாகாணத்தில் கடந்த 25 ஆண்டுகளில் நடந்துள்ள மிகமுகாமையான நிகழ்வு என்ன வென்றால் அசாமிற்குள் நிகழ்ந்த வங்காளிகளின் குடியேற்றம்தான் என்பதை அழுத்திக் கூற விரும்புகிறேன். இது அசாமின் ஒட்டுமொத்த எதிர்காலத்தை மாற்றிவிடும்; அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் என அஞ்சுகிறேன். கிழக்கு வங்காளத்தில் இருந்து எறும்புகளின் அணி வகுப்பு போல் வங்காளிகள் குறிப்பாக வங்காளி முஸ்லீம்கள் நிலப்பசியோடு கூட்டம் கூட்டமாகக் குடியேறி வருகிறார்கள். போடோக்களிடமிருந்தும், அசாமியர்களிடமிருந்தும் நிலங்களை இந்த வங்காளிகள் கைப்பற்றுகிறார்கள். அசாமியர்களின் பண்பாடு, நாகரிகம், வாழ்வுமுறை ஆகிய அனைத்திலும் இவர்களின் ஆக்கிரமிப்பு பெரும் குலைவை ஏற்படுத்திவிடும். கடந்த 25 ஆண்டுகளில் மட்டும் இவ்வாறு அசாம் பள்ளத்தாக்கில் குடியேறியுள்ள வங்காளிகளின் எண்ணிக்கை 5 இலட்சம் ஆகும். பள்ளத் தாக்கில் நிலவும் இனச் சமநிலைக்கு இது அச்சுறுத்தலாக அமைந்துவிடும்”.

அதிகாரி முல்லான் அச்சப்பட்ட தீங்கு உண்மையிலேயே நடந்துவிட்டது. பெரும் எண்ணிக்கையில் வங்காளிகள் உள்ளிட்ட வெளி மாநிலத்தவர்கள் அசாமில் குடியேறியதால் வேலை வாய்ப்பிழந்த, அரசியல் அதிகாரம் இழந்த அசாம் மக்கள் வெளியாரை வெளியேற்றும் போராட்டத்தை 1970களின் பிற்பகுதியில் தொடங்கினர். அது மாபெரும் மாணவர் தொடர் போராட்டமாக நடந்தது.

வெளியாரை வெளியேற்றுவது தொடர்பாக அசாம் மாணவர் தலைவர்களுடன் அன்றையத் தலைமை அமைச்சர் இராசீவ் காந்தி, 15.08.1985 அன்று உடன்படிக்கை செய்து கொண்டார். அதன் பிறகே அப்போராட்டம் ஓய்ந்தது. ஆனால் இன்றைக்கும் அசாம் முதலமைச்சராக வங்காளிகளே வரும் வாய்ப்புள்ளது.

திரிபுராவிலும் இதே அவலம்தான்! இன்றைய முதல்வர் மாணிக் சர்க்கார் வங்காளியாவார்!

அண்டை மாநிலங்களைச் சேர்ந்த தெலுங்கர்களும் மலையாளிகளும் தமிழ்நாட்டில் ஏராளமான நிலங்களை வாங்கி வைத்துள்ளார்கள். மலையாளிகள் குடியேற்றம் தமிழ்நாட்டில் மிகமிக அதிகமாகிவிட்டது.

இந்திய அரசு திட்டமிட்டு தமிழ்நாட்டில் உள்ள தனது தொழிற்சாலைகளில், அலுவலகங்களில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களையும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களையும் வேலைக்குச் சேர்க்கிறது.

தொடர்வண்டித்துறையில் ஓடும் வண்டியிலும் அது நிற்கும் நிலையங்களிலும் பெரும்பாலும் வெளி மாநிலத்தவர்களே வேலை பார்க்கிறார்கள். புதிதாக தொடர்வண்டித்துறைக்கு ஆள் எடுத்தால், 90 விழுக்காடு அளவிற்கு வெளி மாநிலத்தவர்களை எடுக்கிறார்கள். ஆவடி, திருச்சி, அரவங்காடு படைத்துறைத் தொழிற்சாலைகள், பி.எச்.இ.எல்., நெய்வேலி அனல் மின் நிலையம், துறைமுகம், வானூர் நிலையங்கள், வங்கிகள், வருமானவரி - உற்பத்தி வரி - சுங்க வரி அலுவலகங்கள் என அனைத்திலும் 90 விழுக்காடு வேலை வாய்ப்பு வெளி மாநிலத்தவர்களுக்கே கொடுக்கப்படுகிறது.

அவ்வேலைகளுக்கான அனைத்திந்தியத் தேர்வுகள் பெரும் மோசடி! அண்மையில் அரியானாக்காரர்கள் தமிழ்நாட்டு அஞ்சலக வேலைக்கான தேர்வில் தமிழ்ப் பாடத்தில் 25க்கு 25 மதிப்பெண் பெற்ற விந்தை நடந்தது. எதிர்த்த பின் அச்சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டது. அம்பலமாகாத மோசடிகள் ஏராளம்! ஏராளம்!

இந்தியாவில் பல மாநிலங்களில் அந்தந்த மாநில மக்களுக்கு வேலை வாய்ப்பில் விழுக்காட்டு கணக்கில் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் 1986இல் அமைக்கப்பட்ட சரோஜினி மகிசி அறிக்கையின்படி மாநில அரசு மற்றும் தனியார் துறையில் 100 விழுக்காடு வேலை கர்நாடக மக்களுக்கு வழங்க வேண்டும். இந்திய அரசு அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் ஊழியர் சேர்க்கையில் 90 விழுக்காடும், அதிகாரிகளில் 80 மற்றும் 70 விழுக்காடு அளவிலும் கர்நாடகத்தவர்க்கு வேலை வழங்க வேண்டும். அதற்கான சட்ட ஏற்பாடு கர்நாடகத்தில் உள்ளது.

குசராத்தில் 1995ஆம் ஆண்டு குசராத் மாநிலத்தில் போட்ட ஆணைப்படி நடுவண் அரசு அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் 85 விழுக்காடு வேலை குசராத்திகளுக்கு வழங்க வேண்டும்.அண்மையில் (2017 மே), இந்தியன் எண்ணெய்க் கழகம் (ஐ.ஓ.சி.எல்.) 116 பணியாளர்களை வேலைக்கு சேர்த்தபோது, 15 பேர் மட்டுமே குசராத்திகள்! இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட மண்ணின் மக்கள் குசராத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். அவர்களுக்கு ஆதரவாக குசராத் அரசு தானே முன்வந்து அவ்வழக்கில் இணைந்து கொண்டது.

மராட்டியம், சட்தீசுகட், ஜார்கண்ட் முதலிய மாநிலங்களில் மாநில மக்களுக்கான ஒதுக்கீடு உள்ளது. உ.பி., பீகார், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், அரியானா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் மண்ணின் மக்களுக்கு 90 விழுக்காடு, 80 விழுக்காடு வேலைகளை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரசு, பா.ச.க., இராட்டிரிய சனதா தளம் போன்ற கட்சிகளால் முன்வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் என்ன நிலைமை? தன்மானம், இனமானம், மாநில சுயாட்சி என்று ஒலிபெருக்கி உடையும் அளவிற்கு ஓசையிட்ட திராவிடக் கட்சிகளின் ஆட்சி 1967லிருந்து சற்றொப்ப ஐம்பது ஆண்டுகளாக நடந்து வருகிறது. இத்திசையில் இக்கட்சிகளும் சிந்திக்கவில்லை; இவற்றின் ஆட்சிகளும் சிந்திக்கவில்லை!

ஓட்டுக்குக் கொடுக்கும் பணத்தை உயர்த்துவது எப்படி, மாட்டிக் கொள்ளாமல் அதைக் கொடுப்பது எப்படி என்ற வித்தைகளைத்தான் தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகள் சாதித்துள்ளன. மக்கள் கேட்காத இலவசங்களை மக்கள் வரிப்பணத்தில் கொடுத்து, அவர்களிடம் அண்டிப் பிழைக்கும் பயனாளி உளவியலை உருவாக்கி வாக்கு வேட்டையாடுவது இக்கட்சிகளுக்குக் கைவந்த கலை!

தமிழர்களின் எல்லா உரிமைகள் குறித்தும் முன்கூட்டியே சிந்தித்து, முன்மொழிவுகளாக வழங்கி வரும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் (அப்போது த.தே.பொ.க.) 1990களின் தொடக்கத்தில் நடுவண் அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கு 80, 90 விழுக்காடு வேலை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தது. தொடர்ந்து அதற்கான பெருந்திரள் போராட்டங்களை சென்னை, திருச்சி ஆகிய இடங்களில் நடத்தியது.

இப்போது இந்திய அரசு நிறுவனங்களில் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கு வழங்க வேண்டும்; 10 விழுக்காட்டிற்கு மேல் உள்ள வெளி மாநிலத்தவரை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, 2017 அக்டோபர் மாதம் பரப்புரை செய்து வருகிறது.

31.10.2017 அன்று சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரி அலுவலகத்தின் முன்பும், திருச்சி தொடர்வண்டிச் சந்திப்பின் முன்பும் காத்திருப்புப் போராட்டம் நடத்துகிறது.

தமிழ்நாட்டு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலை இல்லாமல் இருப்போர் 90 இலட்சம் பேர். உயர்கல்வி கற்றும் வேலையில்லாமல் துன்புறுவோர் பல இலட்சம் பேர்! சென்னை ஐ.சி.எப்.பில் பயிற்சிப் பணி முடித்துப் பல ஆண்டுகளாகக் காத்திருந்து, வறுமையில் இதுவரை 27 இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

பொறியியல் பட்டம் பெற்றும் தொழில்நுட்பக் கல்விப் பட்டங்கள் பெற்றும் உரிய வேலை இல்லாமல் தமிழ் இளைஞர்கள் தவிக்கிறார்கள். முதுகலை, முனைவர் பட்டங்கள் பெற்றும் உரிய பணி இல்லாமல் வறுமையில் உழல்வோர் பல இலட்சம் பேர்!

தமிழ்நாடு தமிழர் தாயகமா? வெளியார் வேட்டைக்காடா? இந்த அநீதியை இனியும் சகித்து, வாழ்க்கையை இழக்கக்கூடாது!

இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் தமிழ்நாட்டில் இந்திய அரசு நிறுவனங்களில் 90 விழுக்காடு வேலையும், தனியார் துறையில் 90 விழுக்காடு வேலையும் தமிழ்நாடு அரசில் 100 விழுக்காடு வேலையும் தமிழர்களுக்கு வழங்க வேண்டும்.!

ஒவ்வொரு தமிழ் ஆணும், பெண்ணும் இந்த கோரிக்கையை எழுப்ப வேண்டும்!

பெரும்பாலோர் குரலெழுப்பினால், இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் இதற்கான சட்ட ஏற்பாடுகளைச் செய்தே ஆக வேண்டும்.!

அடையாளப் போராட்டத்துடன் நிற்காமல் தமிழர் அறப்போராட்டம் தொடரட்டும்!

#தமிழர்களுக்கே90விழுக்காடுவேலை
#90PercentJobsforTamils
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Tuesday, October 24, 2017

தமிழ்நாடு தமிழர்களுக்கா? வெளி மாநிலத்தவர் வேட்டைக்கா?

தமிழ்நாடு தமிழர்களுக்கா? வெளி மாநிலத்தவர் வேட்டைக்கா?
இந்திய அரசு நிறுவனங்களில் 
90% வேலை தமிழர்களுக்கு ஒதுக்கு!
10%க்கு மேல் உள்ள வெளியாரை வெளியேற்று!
வேலை தரும் வரை வாழ்வூதியம் வழங்கு!

தமிழ்த்தேசியப் பேரியக்கம் 

பரப்புரை மற்றும் காத்திருப்புப் போராட்டம் 
2017 அக்டோபர் 25 முதல் 31 வரை





வேலை இல்லாத் திண்டாட்ட வெங்கொடுமை ஒவ்வொரு தமிழ் இளைஞர் நெஞ்சத்திலும் தீயாய் எரிகிறது. உரிய கல்வியும் உயர் தொழில்நுட்பப் படிப்பும் இருந்தும் தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலை மறுக்கப்படுகிறது.
உயர்கல்வி கற்றும் அதற்குரிய வேலை கிடைக்காமல் அடிமாட்டு சம்பளத்திற்கு அகப்பட்ட வேலை பார்ப்போர் ஏராளம்!
வெள்ளப் பெருக்கு போல் வெளி மாநிலத்தவர் புகுந்து தமிழ்நாட்டு வேலைகளை வேட்டையாடிக் கொள்கிறார்கள்! இந்திய அரசு நிறுவனங்கள் - தனியார் துறை நிறுவனங்கள் அனைத்திலும் வெளி மாநிலத்தவர் 70லிருந்து 90 விழுக்காடு வரை வேலைகளை ஆக்கிரமித்துள்ளார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களான தொடர்வண்டி(இரயில்வே)த் துறை, பி.எச்.இ.எல்., நெய்வேலி அனல்மின் நிலையம், ஆவடி - திருச்சி - அரவங்காடு படைத்துறைத் தொழிற்சாலைகள், அஞ்சல்துறை அலுவலகங்கள், எண்ணூர் - நரிமணம் - பனங்குடி பெட்ரோலிய ஆலைகள், துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள், வங்கிகள், வருமான வரி - உற்பத்தி வரி - சுங்க வரி அலுவலகங்கள், தொழிற் பாதுகாப்புப் படை, சென்னை சாஸ்திரி பவன் - இராசாசி பவன் என அனைத்திலும் பெரும் எண்ணிக்கையில் வெளி மாநிலத்தவர்களே வேலை பார்க்கிறார்கள்.
பணி நியமனத்திற்காக நடைபெறும் அனைத்திந்தியத் தேர்வுகளில் ஏராளமான மோசடிகள்! இந்தியில் தேர்வெழுதுவோர்க்குச் சாதகமான பாகுபாடுகள்! கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டு அஞ்சல் அலுவலகங்களின் பணிக்காக நடந்த அனைத்திந்தியத் தேர்வில் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தோர் தமிழ்ப்பாடத்தில் 25க்கு 25 மதிப்பெண் பெற்றனர். இந்த மோசடிக்கு எதிராகக் குரல் கொடுத்த பின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
2016 ஏப்ரலில் தமிழ்நாட்டு ஸ்டேட் பாங்கின் (SBI) 1,420 பணிகளுக்காக நடந்த தேர்வில் தமிழ்த்தேர்வு எழுதத் தேவை இல்லை என்று இந்திய அரசு அறிவித்தது. 2017 செப்டம்பரில் தமிழ்நாட்டில் 1,217 வங்கிப் பணியிடங்களுக்காக நடந்த தேர்வின்போது, பணியில் அமர்ந்த பின் 6 மாதங்களுக்குள் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்று இருந்த நிபந்தனையை இந்திய அரசு நீக்கியது.
2017 ஆகத்தில் தமிழ்நாட்டில் வருமான வரித்துறைக்குத் தேர்வான 208 பேரில் 10 பேர் மட்டுமே தமிழர்கள்! அதேகாலத்தில் வருமான வரி ஆய்வாளர் பணிக்குத் தேர்வான 86 பேரில் ஒருவர் மட்டுமே தமிழர்!
பெரம்பூர் இரயில்வே இணைப்புப் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) பயிற்சி முடித்த 7,000 தமிழ் இளைஞர்கள் இரயில்வேயில் பல்லாண்டுகளாக பணி மறுக்கப்பட்டு வறுமையில் வாடுகிறார்கள். அவர்களில் 23 பேர் தற்கொலை செய்து கொண்டார்கள். ஆனால் தமிழ்நாட்டின் இரயில்வே தொழிற்சாலைகளிலும், இரயில் நிலையங்களிலும் இந்திக்காரர்களும் இன்னபிற வெளியாரும் பணி நியமனங்களில் 90 விழுக்காடு அளவுக்குச் சேர்க்கப்படுகிறார்கள்!
வெளி மாநிலங்களில் தமிழர்களுக்கு இப்படி வேலை கிடைக்கிறதா? இல்லை! தமிழர்களின் வாழ்வுரிமையைப் பறிப்பதுதான் இந்தியத்தேசியத்தின் வேலைத் திட்டமா? தமிழர்களின் தாயகமாகத் தமிழ்நாடு அமைக்கப்பட்ட நோக்கமே சிதைக்கப்பட்டு விட்டது.

மண்ணின் மக்களுக்கே வேலை
வெளியாரை வெளியேற்று


இந்திய அரசே,

1. தமிழ்நாட்டில் இந்திய அரசு நிறுவனங்களில் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கே வழங்கு! அவற்றில் பத்து விழுக்காட்டிற்கு மேல் உள்ள வெளி மாநிலத்தவரை உடனே வெளியேற்று!

2. பணி நியமனத்திற்கு அனைத்திந்தியத் தேர்வு நடத்தாதே! அந்தந்த மாநில வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் வேலைக்குத் தேர்வு செய்!
தமிழ்நாடு அரசே,

3. கர்நாடகத்தில் மண்ணின் மக்களுக்கு வேலை கொடுக்க சரோஜினி மகிசி அறிக்கைத் திட்டம் இருப்பதுபோல், தமிழ்நாட்டில் இந்திய அரசு - தனியார் துறை பணிகளில் மண்ணின் மக்களுக்கு 90 விழுக்காடு வேலை வழங்க சட்டம் கொண்டு வா!

4. வெளி மாநிலத்தவர்களுக்குக் குடும்ப அட்டை வழங்காதே! வெளி மாநிலத்தவர் போலியாகத் தமிழ்நாட்டில் இருப்பிடச்சான்று பெற அனுமதிக்காதே!
5. வேலை வாய்ப்பு கிடைக்கப் பெறாத தமிழ் இளைஞர்களுக்கு அவரவர் கல்வித் தகுதிக்கேற்ப ரூபாய் இரண்டாயிரத்திலிருந்து ஐயாயிரம் ரூபாய் வரை மாத வாழ்வூதியம் வழங்கு!
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்த்தேசியப் பேரியக்கம் 2017 அக்டோபர் 25 முதல் 31 வரை நடத்தும் பரப்புரைகளிலும், நடுவண் அரசு நிறுவனங்களின் முன் நடத்தும் காத்திருப்புப் போராட்டங்களிலும் கலந்து கொள்ள வாருங்கள் தமிழர்களே!
#தமிழர்களுக்கே90விழுக்காடுவேலை
#90PercentJobsforTamils


தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Sunday, October 22, 2017

பன்னாட்டு நிறுவனங்களுக்காக வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம்! தோழர் பெ. மணியரசன் எச்சரிக்கை!

பன்னாட்டு நிறுவனங்களுக்காக வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் எச்சரிக்கை!
இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடியின் நேரடிப் பொறுப்பிலுள்ள “நிதி ஆயோக்” என்ற இந்திய மறுசீரமைப்பு ஆணையத்தின் முழுநேர உறுப்பினர் இரமேஷ் சந்த், வேளாண்மையை மாநில அதிகாரப் பட்டியலிலிருந்து நடுவண் அதிகாரப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
 
அவ்வாறு மாற்றுவதன் மூலம் அனைத்திந்திய அளவில் பல மாநிலங்களுக்கிடையே வேளாண் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு கிடைக்கும், வேளாண் பொருட்களின் விலையை சீராக வைத்திருக்கலாம், கூடுதல் விலை கிடைக்க வாய்ப்பு உருவாகும், பன்னாட்டுத் தொழில் நுட்பங்களை நடுவண் அரசின் மூலம் வேளாண்மையில் பயன்படுத்தலாம், வேளாண்மையை நவீனப்படுத்தலாம் என்றெல்லாம் அவர் கூறியுள்ளார்.
 
இப்பொழுதுள்ள சட்டப்படி, இந்தியா முழுவதும் ஒரே உணவு மண்டலம்! வேளாண் விளை பொருட்களை இந்தியா முழுவதும் விற்பதற்கு தடைச் சட்டம் எதுவுமில்லை. எனவே, இந்தியா முழுவதும் வேளாண் விளை பொருட்களை சந்தைப்படுத்துவதற்காக நடுவணரசிடம் வேளாண்மையைக் கொண்டு செல்ல புதிய தேவை எழவில்லை!
 
வேளாண் உற்பத்திப் பொருட்கள் அனைத்தையும், இந்திய அரசு இலாப விலைக்குக் கொள்முதல் செய்யும் திட்டம் எதையும் இரமேஷ் சந்த் கூறவில்லை. நடுவணரசிடம் வேளாண்மை போனால், வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு இப்பொழுதுள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையைவிடக் கூடுதல் விலை கிடைக்கும் என்று இரமேஷ் சந்த் கூறுகிறாரே தவிர, அதற்கான வழிவகைகள் எதையும் அவர் கூறவில்லை!
 
வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம் ஏற்கெனவே இந்திய அரசின் கையில்தான் இருக்கிறது. இந்திய அரசு அடிமாட்டு விலைக்கு வேளாண் விளை பொட்களுக்கு விலை நிர்ணயிக்கிறது. இதனால்தான், உழவர்கள் கடனாளியாகி இந்தியா முழுவதும் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
 
இப்பொழுது விலை உயர்வுக்குப் பரிந்து பேசுவதைப்போல் பாசாங்கு செய்கிறார் நடுவண் அரசு அதிகாரி! நடுவண் அரசு வேளாண் விளை பொருட்களுக்கு இலாப விலை நிர்ணயிக்க மாநில அரசுகள் தடுத்தனவா? அனைத்திந்திய சந்தையில் விலை கூடுதலாகக் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைக் காட்டுகிறார் - அறுக்கப் போகும் ஆட்டிற்குத் தழையைக் கொடுத்து அழைத்துச் செல்வதைப் போல!
 
முதலில், வேளாண்மையை தில்லி அதிகாரத்திற்குக் கொண்டு போக வேண்டும். அடுத்ததாக, விளை நிலங்களை தில்லி அதிகாரத்தின்கீழ் கொண்டு போக வேண்டும். தனிநபர் நிலம் விற்று வாங்குவதையும் தில்லி அதிகாரத்தின்கீழ் கொண்டு செல்ல வேண்டும். அதன்பிறகு, வேளாண் உற்பத்தியில் வணிகக் கொள்ளைக்காக பன்னாட்டு நிறுவனங்கள் உருவாக்கும் மரபீனி மாற்று விதை, மறுபடியும் முளைக்காத விதை போன்ற பல்வேறு விதைகளையும், பூச்சி மருந்துகளையும், நவீன சாகுபடி முறைகளையும் தாராளமாகத் திணிக்க வேண்டும்.
 
அடுத்த கட்டமாக, விளை நிலங்களை பெருங்குழும நிறுவனங்கள் வாங்குவதற்கும் ஓ.என்.ஜி.சி. போன்ற இந்திய அரசு நிறுவனங்கள் தங்குதடையின்றி வேட்டையாடுவதற்கும் தாராளமாகக் கதவு திறந்துவிடும் வகையில் – நிலத்தின் மீதான அதிகாரத்தையும் நடுவணரசுக்குக் கொண்டு போக வேண்டும். இதுதான் இந்திய அரசு மறைத்து வைத்துள்ளத் திட்டம்!

இப்பொழுது நடுவண் அரசு திணிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் மரபீனி மாற்று விதைகளை, சில மாநில அரசுகள் தடுத்து வைத்துள்ளன. அதேபோல், பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலம் கையகப்படுத்தித் தருவதிலும் சில மாநில அரசுகள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. இவற்றையெல்லாம் முறியடித்து, ஒற்றை அதிகாரத்தை தில்லியில் வைத்துக் கொண்டு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலங்களையும், சாகுபடியையும் திறந்துவிட மோடி அரசு கடும் முயற்சி செய்கிறது.
 
வெளிநாட்டு நிறுவனங்களும் இந்திய நாட்டு நிறுவனங்களும் தங்கள் தொழிலுக்காக விளை நிலங்களை வாங்குவதற்கு நிலம் கையகப்படுத்தித் தரும் பொறுப்பு அரசிடமிருக்க வேண்டியதில்லை, அந்தந்த நிறுவனங்களே உழவர்களிடம் நேரடியாக விலை பேசி வாங்கிக் கொள்ளலாம் என்ற திட்டத்தை அண்மையில் வெளியிட்டார்கள்.
 
இதன் தொடர்ச்சியாகத்தான் வேளாண்மையை நடுவணரசு அதிகாரத்திற்குக் கொண்டு போகும் ஆலோசனையை, நரேந்திர மோடியின் குரலாக செயலாற்றி வரும் இரமேஷ் சந்த் கூறியுள்ளார். இப்பொழுது இரமேஷ் சந்த் கூறியுள்ள ஆலோசனை சட்டமானால், இந்தியா முழுவதுமுள்ள வேளாண்மையும் உழவர்களும் காலப்போக்கில் பன்னாட்டு நிறுவனங்களிடம் தங்கள் நிலங்களை ஒப்படைத்துவிட்டு, ஊரைவிட்டு வெளியேறி நகரங்களில் கூலி வேலை தேடும் அவலம்தான் மிஞ்சும்!

எனவே, வேளாண்மையை நடுவணரசு அதிகாரத்திற்குக் கொண்டு செல்லும் ஆலோசனையை கருத்தளவில் இருக்கும்போதே தடுக்க வேண்டிய பொறுப்பு, உழவர்களுக்கு மட்டுமல்ல, உணவு உண்ணும் அனைத்து மக்களுக்கும் தாயக மண்ணை நேசிக்கும் அனைவருக்கும் இருக்கிறது!
 
இந்தத் திட்டம் செயலுக்கு வந்தால், இந்தியா முழுவதும் உழவர் போராட்டங்களை மோடி அரசு எதிர் கொள்ள வேண்டியிருக்கும். ஏற்கெனவே பணமதிப்புமாற்றம், ஜி.எஸ்.டி. போன்றவற்றால் ஓட்டாண்டியாகியுள்ள அனைத்துப் பகுதி மக்களும், உழவர்களும் ஒன்றுசேர்ந்து மோடி அரசுக்கு எதிரான உரிமைப் போரை நடத்துவார்கள் என்பதை புரிந்து கொண்டு, மோடி அரசு இந்த ஆலோசனையை ஏற்கக் கூடாது என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

சற்று நேரத்திற்கு முன்...

சற்று நேரத்திற்கு முன்...
மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் இலட்சுமி அம்மா அவர்களுக்கு கைப்பேசியில் பேசிய சென்னை நுங்கம்பாக்கம் காவல்துறை உதவி ஆணையர் அவர்கள்..
 
பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்ய அனுமதிக்க மாட்டோம், எனவே போராட்டம் நடத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்!
செய்தித் தொடர்பகம்,
மகளிர் ஆயம்.
 
தொடர்புக்கு:
7373456737, 9486927540
 
 

Saturday, October 21, 2017

பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி விவாதத்துக்கு மகளிர் ஆயம் கண்டனம்! தோழர் அருணா அறிக்கை!

பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி விவாதத்துக்கு மகளிர் ஆயம் கண்டனம்! மகளிர் ஆயம் தமிழக ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா அறிக்கை!
விஜய் தொலைக்காட்சியில் “நீயா? நானா?” நிகழ்ச்சியில் “தமிழ்ப் பெண்கள் அழகா? கேரளப் பெண்கள் அழகா?” என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்ப உள்ளார்கள்.

தமிழகப் பெண்கள் இன்றைய அரசியல் சூழலில் பல்வேறு சிக்கல்களில் சிக்கித் தவிக்கின்றனர். மதுக்கடை சீரழிவு, இந்திய அரசு - பன்னாட்டு நிறுவனங்களின் பொருளியல் அழிவுத் திட்டங்கள், வேலையில்லாத் திண்டாட்டம், உழைப்புச் சுரண்டல் ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு வாடுகின்றனர். “நீட்” போன்ற கல்வி உரிமைப் பறிப்புத் திட்டங்களை இந்திய அரசு செயல்படுத்தி, கல்வியில் முன்னணியில் நிற்கும் தமிழ்நாட்டு மகளிருக்கு மிகப்பெரும் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசின் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில், அண்மைக்காலமாக வெளி மாநிலத்தவர்கள் மிகை எண்ணிக்கையில் நிரப்பப்பட்டு, தமிழர்களின் வேலை வாய்ப்பும் பறிக்கப்படுகிறது. தமிழ்நாட்டுப் பெண் பட்டதாரிகளின் பொருளியல் தற்சார்பு பின்னோக்கித் தள்ளப்பட்டுக் கொண்டுள்ளது.

தமிழ்நாட்டுப் பெண்கள் இப்படிப் பல சிக்கல்களில் அவதியுறும் நிலையில், அதற்கெதிராக தன்னம்பிக்கையுடன் போராட வேண்டிய சூழலில், தேவைற்ற தலைப்புடன் – பெண்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படுத்தும் வகையிலும், பெண்களை காட்சிப் பொருளாகவே வைத்திருக்கும் நோக்குடனும் விஜய் தொலைக்காட்சி இந்நிகழ்ச்சியை ஒளிபரப்ப இருப்பது கண்டிக்கத்தக்கது!

இந்நிகழ்ச்சியில், கேரளப் பெண்களே அழகு என்று விவாதிப்பதன் மூலம் தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்துவது, தமிழ் இனத்தை தாழ்வுபடுத்துவது நடக்கும். மாறாக, தமிழ்ப் பெண்களே அழகு என்று இன்னொரு தரப்பு பேசினால், மலையாளப் பெண்களை இனவகையில் இழிவு படுத்துவதாக அமையும். தமிழர்களுக்கும், மலையாளிகளுக்கும் தேவையற்ற ஒரு விவாதத்தின் மூலம் மோதலை ஏற்படுத்துவதும், இன வகையில் தாழ்வு மனப்பான்மையைத் திணிப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

அழகு என்பது ஒவ்வொருவரின் தனித்த விருப்பம் சார்ந்தது. அதனை சில உடல் உறுப்பு அளவுகளிலும், நிறத்திலும் குறுக்கிச் சொல்வது இழிவானப் பண்பாகும்! மறுபுறம், அழகுணர்ச்சி என்பது அனைவருக்கும் பொதுவானது. அதனை பெண்களிடம் மட்டும் மையப்படுத்துவது பெண்களை உளவியல் வகையில் ஊனப்படுத்தும். தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும்! பன்னாட்டு நிறுவனங்களின் அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தும்படி அவர்களை மறைமுகமாக ஊக்குவித்து, அவர்களுக்கு இலாபம் ஏற்படுத்திக் கொடுக்கவே இது போன்ற நிகழ்வுகள் தொடர்ச்சியாக ஒளிபரப்பாகின்றன.

பெண்களின் மென்மையான உணர்வுகளைப் பாதிக்கும் சூட்சுமம் அறிந்து, அவர்களைப் சிக்கல்களிலிருந்து மடைமாற்றம் செய்ய விஜய் தொலைக்காட்சி நடத்தும் இந்நிகழ்ச்சியை “மகளிர் ஆயம்” வன்மையாகக் கண்டிப்பதுடன், இந்நிகழ்வை ஒளிபரப்பக் கூடாதெனக் கோருகிறது!
 
இன்னணம்,
அருணா,
ஒருங்கிணைப்பாளர்,
மகளிர் ஆயம்.
 
செய்தித் தொடர்பகம்,
மகளிர் ஆயம்.
 
தொடர்புக்கு:
7373456737, 9486927540

கர்நாடகத்தில் தமிழர்கள் மீது நடந்த தாக்குதலைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியோர் கைது!

கர்நாடகத்தில் தமிழர்கள் மீது நடந்த தாக்குதலைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியோர் கைது!
 
கர்நாடகத்தின் பெங்களூரு, மைசூரில் நகரங்களில் தமிழ்த் திரைப்பட நடிகர் விஜய் நடித்து வெளியான மெர்சல் தமிழ்த் திரைப்படத்தின் பதாகைகளைக் கிழித்தெறிந்து, தமிழர்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய கன்னட அமைப்புகள், கர்நாடகத்தில் தமிழ்த் திரைப்படங்கள் திரையிடக் கூடாது, தமிழர்கள் அடக்கத்துடன் நடக்காவிடில், 1991-இல் பெங்களூரில் நிகழ்ந்த காவிரி கலவரத்தை போல் மீண்டும் தமிழர்கள் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ள செய்தி, இன்று ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
 
தமிழர்களைத் தாக்கிய கன்னட இனவெறியர்களைக் கண்டித்தும், அவர்களைக் கைது செய்யக் கோரியும், தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒருங்கிணைப்பில், நேற்று (20.10.2017) மாலை சென்னை நுங்கமபாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய தலைவர்களும், தோழர்களும் தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
 
ஆர்ப்பாட்டத்தில், “கண்டிக்கின்றோம்! கண்டிக்கின்றோம்!, கன்னடவெறியர்களைக் கண்டிக்கின்றோம்”, “ஒருமைப்பாட்டு உபதேசம் புரியும் இந்திய அரசே! தமிழர்கள் தாக்கப்படுவதை வேடிக்கைப் பார்க்காதே!”, “கன்னடன் உனக்கு பங்காளி! தமிழன் உனக்குப் பகையாளியா?” என்பன உள்ளிட்ட ஆவேச முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதனையடுத்து, தோழர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து, தாங்கள் கொண்டு வந்திருந்த வாகனத்தில் ஏற்றினர்.
 

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் தியாகு, தமிழ்த் தேச மக்கள் கட்சித் தலைவர் வழக்கறிஞர் பா. புகழேந்தி, நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் தோழர் அன்புத் தென்னரசு, தமிழ்த் திரைப்பட இயக்குநர் வ. கவுதமன், தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் சோழன் மு. களஞ்சியம், காவிரி உரிமை மீட்புக் குழு திரு. பழனிராசன், தமிழர் விடுதலைக் கழக ஒருங்கிணைப்பாளர் தோழர் சௌ. சுந்தரமூர்த்தி, புலவர் இரத்தினவேலவன், இளந்தமிழகம் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் இராசன் காந்தி, மே பதினேழு இயக்கத் தோழர் பன்னீர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும், தோழர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
 
தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, தென்சென்னை செயலாளர் தோழர் மு. கவியரசன், வடசென்னை செயலாளர் தோழர் செந்தில், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை பாவலர் முழுநிலவன் உள்ளிட்ட திரளான பேரியக்கத் தோழர்கள் பங்கேற்று கைதாகினர்.
 
கர்நாடக அரசே! தமிழர்களைத் தாக்கியக் கன்னட இனவெறியர்களைக் கைது செய்து சிறையிலடை!
 
தமிழ்நாடு அரசே! தமிழர்கள் தாக்கப்படுவதை வேடிக்கைப் பார்க்காதே! உடனே கண்டனக் குரல் எழுப்பி, கர்நாடக அரசுக்கு நெருக்குதல் கொடு!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: WWW.tamizhthesiyam.com

Friday, October 20, 2017

கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் சென்னையில் இன்று (20.10.2017) மாலை கர்நாடகத் தமிழர் காப்பு ஆர்ப்பாட்டம்..!

கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் சென்னையில் இன்று (20.10.2017) மாலை கர்நாடகத் தமிழர் காப்பு ஆர்ப்பாட்டம்..!

கர்நாடகத்தின் பெங்களூரு, மைசூரில் நகரங்களில் தமிழ்த் திரைப்பட நடிகர் விஜய் நடித்து வெளியான மெர்சல் தமிழ்த் திரைப்படத்தின் பதாகைகளைக் கிழித்தெறிந்து, தமிழர்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய கன்னட அமைப்புகள், கர்நாடகத்தில் தமிழ்த் திரைப்படங்கள் திரையிடக் கூடாது, தமிழர்கள் அடக்கத்துடன் நடக்காவிடில், 1991-இல் பெங்களூரில் நிகழ்ந்த காவிரி கலவரத்தை போல் மீண்டும் தமிழர்கள் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ள செய்தி, இன்று ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
 
தமிழர்களைத் தாக்கிய கன்னட இனவெறியர்களைக் கண்டித்து, இன்று (20.10.2017) மாலை 5 மணிக்கு சென்னை நுங்கமபாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது. தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும், தோழர்களும் இதில் பங்கேற்கின்றனர். 
 
தமிழின உணர்வாளர்களும், ஆர்வலர்களும் இதில் பங்கேற்க வருமாறு அன்புரிமையுடன் அழைக்கின்றோம்! 
வாருங்கள் தமிழர்களே! 
 
தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhthesiyam.com 

Wednesday, October 18, 2017

மயக்கும் மாநில சுயாட்சியும் தோற்றுப்போன கூட்டாட்சிக் கோட்பாடும்! தோழர் பெ. மணியரசன்.

மயக்கும் மாநில சுயாட்சியும் தோற்றுப்போன கூட்டாட்சிக் கோட்பாடும்! தோழர் பெ. மணியரசன். தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
தமிழ்நாட்டில் “மாநில சுயாட்சிப்” பருவம் மறுபடியும் தொடங்கியுள்ளது. திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் மாநில சுயாட்சி பற்றிப் பேசி வருகிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மாநில சுயாட்சி மாநாடு போட்டார். அந்த மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரசுத் தலைவர் திருநாவுக்கரசரும் மாநில சுயாட்சியை ஆதரித்துப் பேசினார். சிபிஎம், சிபிஐ கட்சிகளின் தமிழ்நாட்டுத் தலைவர்களான ஜி. இராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோரும் மாநில சுயாட்சியை வலியுறுத்திப் பேசிவருகின்றனர்.

தமிழ் இன உணர்ச்சியும் தமிழ்த்தேசியக் கருத்தியலும் இளைஞர்களை ஈர்த்து வரும் இக்காலத்திற்கேற்ற இன்னொரு இடைக்கால முழக்கமாக மாநிலத் தன்னாட்சி இவர்களுக்கு வாய்த்திருக்கிறது. 1970களில் திமுக மாநில சுயாட்சி மாநாடு போட்டு தமிழ்நாட்டிற்கென தனிக் கொடி ஏற்றியது. சிபிஎம் கட்சி, பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி, திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கேட்டுக் கமுக்கக் கூட்டங்கள் (conclave) பலவற்றில் கலந்து கொண்டது. அதன்பிறகு மாநிலத் தன்னாட்சி, மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் என்ற முழக்கங்களை “அம்போ” என்று விட்டுவிட்டு அடுத்தடுத்து வாக்குச் சந்தைக்கு வாய்ப்பான வெவ்வேறு முழக்கங்களை மேற்கண்ட எல்லோரும் முழங்கினர்.

மாநில அதிகாரங்களைத் தொடர்ந்து பறித்து வந்த காங்கிரசு, பாசக கட்சிகளின் தலைமையில் கூட்டணி சேர்ந்து நடுவண் அரசில் அமைச்சர்களைப் பெற்றது திமுக. தமிழினத்திற்கு அதிகாரம் கேட்டவர்கள் தங்களுக்கான கங்காணி அதிகாரம் பெற்றனர். அதிகாரத்தில் பங்கு பெறாமல் காங்கிரசின் ஆட்சியைப் பாதுகாக்கும் கூட்டணியில் சிபிஎம், சிபிஐ கட்சிகள் இடையில் சேர்ந்திருந்தன. இப்போது ஒளிவு மறைவற்ற கூட்டணியைக் காங்கிரசுடன் ஏற்படுத்திக் கொள்ள சிபிஎம் ஆராய்ந்து வருகிறது.
பாரதமாதா பக்தியில் பாசக, காங்கிரசுக் கட்சிகளுடன் போட்டி போடும் அளவிற்கு இந்தியத் தேசியவாதிகளாய் உள்ளனர் சிபிஎம், சிபிஐ தலைவர்கள்! பாரதமாதாவுக்கோ, எந்நேரமும் அடங்காத அதிகாரப்பசி! அந்த அதிகாரப் பசிக்கான உணவு மாநில உரிமைகள்!

இன்றைக்கும் மாநில அதிகாரப் பறிப்புக் கட்சியான காங்கிரசுடன் திமுக கூட்டணி அமைத்துள்ளது. நாளைக்குப் பாசக கூப்பிட்டால் அதன்பக்கம் தாவவும் திமுக அணியம்தான்!

இதுதான் திமுக கூட்டணியின் மாநிலத் தன்னாட்சி மகத்துவம்!
 
மாநில சுயாட்சியா? தேசியத் தன்னாட்சியா?
 
இது ஒரு பக்கம் இருக்க, மாநிலத் தன்னாட்சி என்ற சொற்கோவையே, இந்திய ஏகாதிபத்தியத்திற்கு மண்டியிடும் இவர்களின் மனப்பான்மையைத்தான் வெளிப்படுத்துகிறது. தேசிய இனத் தாயகத்திற்கான தன்னாட்சிதான் கோர வேண்டும். நமது தேசிய இனத்தாயகம் தமிழ்நாடு! தமிழ்நாட்டுத் தன்னாட்சி என்று கூறாமல், மாநிலத் தன்னாட்சி என்று கூறுவதன் பொருள் என்ன?

இந்தியாதான் தேசம், இந்தியர்தான் தேசிய இனம், இந்தியத் தேசியம்தான் ஒரே தேசியம், தமிழ்நாடு இந்தியாவில் ஒரு மண்டலம், அல்லது ஒரு பிராந்தியம். அந்தப் பிராந்தியப் பெயர் மாநிலம். மாநில சுயாட்சி என்று நாங்கள் கோருவதுகூட பிராந்திய சுயாட்சிதான்! தமிழ்த் தேசிய இனத்தின் தன்னாட்சியோ, தமிழ்த் தேசியத்தின் தாயகமான தமிழ்நாட்டின் தன்னாட்சியோ அல்ல என்று தில்லி எசமானர்களுக்கு இங்கிதமாக இவர்கள் தெரிவித்துக் கொள்கிறார்கள். அதனால்தான் இவர்கள் தமிழ்நாட்டுத் தன்னாட்சி என்று முழக்கம் வைக்காமல் உள்நோக்கத்துடன் “மாநில சுயாட்சி” என்று கூறுகின்றனர். அனைத்திந்தியாவிற்கும் கேட்பதெனில், தேசிய இனங்களின் தன்னாட்சி என்று கேட்க வேண்டும்.

இந்திய அரசை ஒரு கூட்டாட்சி (Federal State) அரசாக மாற்ற வேண்டும். அதன் காரணமாக மொழிவழி மாநிலங்களாக அமைக்கப்பட்டுள்ள தேசிய இனத் தாயகங்களுக்குத் தன்னாட்சி (Autonomy for Nationality Homelands) வழங்க வேண்டும். படைத்துறை, வெளியுறவுத்துறை, பண அச்சடிப்பு, தகவல்தொடர்பு போன்ற சிலவற்றைத் தவிர மற்ற எல்லா அதிகாரங்களும் தேசிய இனத் தாயகத்திற்கு வரவேண்டும்.

மாநில சுயாட்சி பேசுவோர் இப்படித் தெளிவாக தங்களின் முழக்கத்திற்கு வரையறை தரவில்லை. மாநில சுயாட்சி மாநாடு நடத்திய திருமாவளவன்கூட இவ்வாறு வரையறை செய்து தீர்மானம் நிறைவேற்றவில்லை.

“இந்திய தேசம் வலிமையாக இருக்க வேண்டும், இந்தியத் தேசம் வலிமையாக இருந்தால்தான் தலித்துகளுக்கும் விளிம்புநிலை மக்களுக்கும் பாதுகாப்பு” என்று திருமாவளவன் அம்மாநாட்டில் பேசினார். அதே மாநாட்டில் பேசிய மு.க. ஸ்டாலின், இந்திய அரசு வலிமையாக இருக்க வேண்டும் என்பதில் எங்களுக்கும் மாற்றுக் கருத்தில்லை என்று பேசினார்.

இவர்கள் மாநில சுயாட்சி என்ற முழக்கத்தை நடுவண் அரசிடமிருந்து சில அதிகாரங்களையாவது கூடுதலாகப் பெறுவது என்ற உண்மையான நோக்கத்தில் முன்வைத்துப் போராடினால், தமிழ்த்தேசிய இறையாண்மை இலக்கை அடைவதற்கான ஒருபடி முன்னேற்றம் என்ற அளவில் அதை வரவேற்கலாம். ஆனால் அதிலும் அவர்களுக்கு உண்மையான அக்கறை இல்லை என்பதைத்தான் அவர்களின் கடந்தகால வரலாறும், இப்போதையப் பேச்சுகளும் வெளிப்படுத்துகின்றன.

இன்றையப் பருவத்திற்கேற்ப இடைக்கால முழக்கமாகப் போலி மாநில சுயாட்சி பேசுவோரைப் பற்றி இதுவரை பார்த்தோம்.

இனி உண்மையான கூட்டாட்சி பற்றியும் தேசிய இன அடிப்படையில் தன்னாட்சி பெற்ற இனங்கள் நடைமுறையில் உண்மையான சமத்துவம் பெற்றிருந்தனவா என்பது பற்றியும் பார்க்க வேண்டியது மிகமிக முக்கியம்.

உலகநாடுகளின் தன்னாட்சியும் – கூட்டாட்சியும்
 
உலகத்தில் தேசிய இனத் தன்னாட்சி கொண்ட கூட்டாட்சி அரசுகள் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்குச் சமத்துவம் வழங்காமல் தோற்றுவிட்டன. தேசிய இனங்களின் கூட்டாட்சிக் கோட்பாடு தோற்றுவிட்டதுதான் நடைமுறை உண்மை.

சனநாயக உருவாக்கத்திலும் அதன் வளர்ச்சியிலும் முகாமையான பங்கு வகித்த நாடுகள் பிரித்தானியாவும் பிரான்சும்! இந்த ஆங்கிலேயரும் பிரஞ்சியரும் சேர்ந்து கூட்டாட்சி அமைத்த நாடு கனடா! பழம்பெரும் கூட்டாட்சி அது! கனடாவில் பிரஞ்சு மக்கள் தாயகம் கியுபெக்! இதர மாநிலங்களில் எல்லாம் ஆங்கிலேயர் மிகப் பெரும்பான்மையோர். கனடாவில் ஆங்கிலேயர் மக்கள் தொகை 56.9% பிரஞ்சியர் மக்கள் தொகை 21.3%

ஆங்கிலேயர், ஆங்கில ஆதிக்கம் கனடாவில் மேலோங்கி பிரஞ்சுக்காரர்கள் இரண்டாந்தரக் குடிமக்கள் ஆக்கப்பட்டனர். பிரஞ்சு கியுபெக் தனிநாடு கேட்டுப் போராடுகிறது. ஒரு முறை கியுபெக்கில் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. கியுபெக் பிரிவினைக்கு ஆதரவான வாக்குகள் ஒற்றுமைக்கான வாக்குகளை விட சிறிதளவு குறைந்து விட்டது. எனவே கியுபெக் தேசம் அமைவது தள்ளிப் போய்விட்டது. மீண்டும் ஒரு கருத்து வாக்கெடுப்புக்காக காத்திருக்கிறது கியுபெக். பிரஞ்சு மக்கள் நிம்மது இழந்து தவிக்கிறார்கள்.

பிரித்தானியாவில் ஆங்கிலேயர் பெரும்பான்மையினர். அடுத்த நிலையில் ஸ்காட்லாந்தியர், ஐரிஷ், வேல்ஸ் தேசிய இனங்கள்! வடக்கு அயர்லாந்து (ஐரிஷ்) விடுதலை கோரி நீண்டகாலமாகப் போராடி வருகிறது. ஐரிஷ் விடுதலை இயக்கமும் மக்களும் மிகக் கடுமையான அடக்குமுறைகளைச் சந்தித்தனர். அந்த ஐரிஷ் மக்களுக்கு மாநில அரசு, நாடாளுமன்றம், அதற்கான சில அதிகாரங்கள் ஆகியவற்றை ஆங்கிலப் பெரும்பான்மை அரசு வழங்கியுள்ளது. ஆனாலும் விடுதலைக் கோரிக்கையை வடக்கு அயர்லாந்து கைவிடவில்லை.

கடந்த பத்தாண்டுகளில் ஸ்காட்லாந்து விடுதலைக் கோரிக்கை வேகம் எடுத்தது. அதன்பிறகு ஸ்காட்லாந்து மக்களுக்கான மாநில அரசு, நாடாளுமன்றம் அமைக்கப்பட்டன. ஆனாலும் தாங்கள் கோரும் சமத்துவம் கிடைக்கவில்லை என்றும் விடுதலை வேண்டும் என்றும் ஸ்காட்லாந்தியர்கள் போராடி வருகிறார்கள். அதற்காகக் கடந்த ஆண்டு ஸ்காட்லாந்தில் விடுதலை குறித்துக் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. குறைவான வாக்கு வேறுபாட்டில் ஸ்காட்லாந்து விடுதலைக்கோரிக்கை வெற்றிவாய்ப்பை இழந்தது. மற்றுமொரு கருத்து வாக்கெடுப்பை நோக்கி ஸ்காட்லாந்து காத்திருக்கிறது.
கியுபெக், ஸ்காட்லாந்து இரண்டும் குறைந்த வாக்கு வேறுபாட்டில் தோற்றதற்குக் காரணம் அவ்விரு மாநிலங்களிலும் ஆங்கிலேயர்கள் அதிகமாகக் குடியேறியது என்கிறார்கள்.

ஐரோப்பாவின் இன்னொரு வளர்ச்சியடைந்த நாடான ஸ்பெயினிலிருந்து பிரிந்து செல்ல கட்டலோனியத் தேசிய இனமும் பாஸ்க் தேசிய இனமும் விடுதலை கேட்கின்றன. ஸ்பெயின் நாடு கட்டலோனியாவுக்கு 1932 ஆம் ஆண்டே தன்னாட்சி வழங்கிவிட்டது. கட்டலோனியாவில் வலுவான மாநில அரசு இருக்கிறது. அது பிரிந்து போவதற்கான கருத்து வாக்கெடுப்பை அண்மையில் (1.10.2017) நடத்தியது. அக்கருத்து வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என்று அறிவித்த ஸ்பெயின் நடுவண் அரசு, கட்டலோனியாவில் கடும் அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டது.

வாக்குப்பெட்டிகளைப் பறித்துச் செல்வது, வாக்களிக்க வரிசையில் நின்ற மக்களை அடித்துக் கலைப்பது, பெண்களை காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குவது, என வன்முறைகளை ஏவியது ஸ்பெயின் நடுவண் அரசு. அப்படி இருந்தும் வாக்களிக்க வாய்ப்பு கிடைத்த 43 விழுக்காடு கட்டலோனியர்களில் 92 விழுக்காட்டினர் கட்டலோனியாவின் விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள்.

இராக்கில் அமெரிக்க உதவியுடன் மாநிலத் தன்னாட்சி பெற்ற குர்தீசு அரசு இருக்கிறது. அது கடந்த செப்டம்பர் 25இல் நடத்திய கருத்து வாக்கெடுப்பில் குர்தீசு மக்கள் தனிநாட்டுக்கு ஆதரவாகப் பெருவாரியான வாக்குகள் அளித்தனர்.

இவையெல்லாம் முதலாளிய நாடுகள். இவற்றில் இன ஒடுக்குமுறை, இனப் புறக்கணிப்பு இருக்கும். கம்யூனிச நாட்டில் எல்லா வகைச் சமத்துவமும் உண்டு, பாட்டாளி வர்க்க சர்வதேசியச் சமத்துவம் அதன் உயிர்நாடி என்பர் மார்க்சியர்கள்.

கம்யூனிஸ்ட் சோவியத் ஒன்றியம் 1990களில் பதினைந்து நாடுகளாகப் பிரிந்தது ஏன்? அதன்பிறகு கம்யூனிஸ்ட் செக்கஸ்லோவியா இரு நாடுகளாகவும் யுகோஸ்லோவியா ஆறு நாடுகளாகவும் பிரிந்தது ஏன்?

சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் என்பது நாட்டின் பெயர். எந்த இன அடையாளமும் அதில் இல்லை. மாநிலம் என்று இல்லாமல் ஒவ்வொரு தேசிய இனமும் ஒரு குடியரசு என்று அந்நாட்டின் அரசமைப்புச் சட்டம் கூறியது. ஒற்றை ஆட்சி மொழி கிடையாது. பதினைந்து மொழிகளும் ஆட்சி மொழி என்றது அதன் அரசமைப்புச் சட்டம். பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை (சுயநிர்ணய உரிமை) ஒவ்வொரு குடியரசுக்கும் உண்டு என்று அந்த அரசமைப்புச் சட்டம் கூறியது. முதலாளிகள், நிலக்கிழார்கள் என்று யாருமில்லை அங்கு!

பிரிந்துபோன லித்துவேனியா, லாட்வியா, எஸ்த்தோனியா, அஜர்பைஜான், ஜார்ஜியா, உக்ரைன், பைலோரசியா, கிர்க்கிஸ்தான், கஜக்கஸ்தான் போன்ற தேசிய இனங்கள் என்ன கூறின, “எங்கள் மீது ரசியமொழி திணிக்கப்பட்டது, இரசிய இனமே மேலாதிக்கம் செலுத்தியது, இரசிய இனம் எங்களைச் சுரண்டியது என்பதுதான் அவர்களின் முதன்மைக் குற்றச்சாட்டு!

இவ்வாறு குற்றஞ்சாட்டியவர்களும் கம்யூனிஸ்ட்டுகள்! ஒரே ஒரு சான்று மட்டும் காட்டுவோம். கனடாவின் டொரண்டோ பல்கலைக் கழகத்தில் உக்ரைன் ஆய்வு இருக்கையின் ஆய்வாளராக உள்ள ஸ்டீபன் வெளிச்சென்கோ எழுதியுள்ள “உக்ரேனிய மார்க்சியரும் இரசிய ஏகாதிபத்தியமும் 1918-1923 : நிகழ்காலக் கிழக்கு ஐரோப்பாவின் அயர்லாந்திற்கான முகவுரை (Ukrainian Marxists and Russian Imperialism 1918-1923 : Prelude to the Present in Eastern Europe’s Ireland) (http://www.irishleftreview.org – 23 /05 /2014.

உலகத்தில் கூட்டாட்சி சிறப்பாக நடைபெறவே இல்லையா? சிலநாடுகளில் சிறப்பாக நடைபெறுகின்றன. அமெரிக்க ஐக்கிய நாடுகள் (USA) செர்மன் கூட்டாட்சிக் குடியரசு போன்றவற்றைச் சொல்லலாம். அவ்விரு நாடுகளும் பல்தேசிய இன நாடுகள் அல்ல. ஓர் இனப் பெரும்பான்மையும் ஒற்றை ஆட்சி மொழியும் கொண்டவை. அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்ற வட அமெரிக்காவில் மிகப் பெரும்பான்மையோர் ஆங்கிலேயர், ஆங்கிலம் பேசுவோர்! ஆங்கிலம் மட்டுமே அங்கு ஆட்சி மொழி! செர்மனியில் செர்மானியத் தேசிய இனமே மிகப் பெரும்பான்மையினர். அது அவர்களின் தாயகம். செர்மன் (டொயிச்) மொழி அங்கு ஒரே ஆட்சிமொழி.

வடஅமெரிக்கா, செர்மனி ஆகிய நாடுகளில் வரலாற்று அடிப்படையில் தனித்தனியே பல சிற்றரசுகள் இருந்தன. ஆனால் அவை அனைத்திலும் ஒரே மொழி, ஒரே இனம்! அவற்றை ஒருங்கிணைத்து அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்றும் செர்மனி என்றும் நாடுகள் உருவாக்கப்பட்டபோது அந்தந்த நாட்டுக்குள் ஒரு கூட்டாட்சி தேவைப்பட்டது. அதாவது ஒரே இனத்திற்கான நாட்டிற்குள் உள்கூட்டாட்சி!

வட அமெரிக்காவில் எற்கெனவே மாநிலங்களுக்கு உள்ள உரிமைகள் மைய அரசால் மெல்ல மெல்ல பறிக்கப்படுகின்றன என்ற குறைபாடுகள் எழுந்துள்ளன என்பதும் கவனிக்கத்தக்கது,
சுவிட்சர்லாந்தில் கூட்டாட்சி சிறப்பாகச் செயல்படவில்லையா என்று சிலர் கேட்கக் கூடும். அது மிகச் சிறிய நாடு. செர்மன், பிரான்சு, இத்தாலி நாடுகளின் எல்லையோரங்களில் பிரிந்திருந்த அம்மொழி பேசும் மக்கள் உருவாக்கிக் கொண்ட ஒரு புது நாடு. அது சராசரிக் கூட்டாட்சிக்கு எடுத்துக்காட்டாக அமைய முடியாது.

கனடா, பிரித்தானியா, ஸ்பெயின் இராக் முதலிய நாடுகளில் இருப்பவை வெவ்வேறு தேசிய இனங்கள் – வெவ்வேறு தேசிய மொழிகள்! அவற்றை விட அதிக எண்ணிக்கையில் இந்தியாவில் வெவ்வேறு தேசிய இனங்களும் தேசிய மொழிகளும் இருக்கின்றன. கனடா, பிரித்தானியா, ஸ்பெயின் நாடுகளில் இருப்பதைவிட மிகக் கொடிய முறையில் ஆரியச் சார்பில்லாத இனங்களும் மொழிகளும் ஒடுக்கப்படுகின்றன.

இந்தியாவில் மாநில அரசுகளிடம் இருந்த கொஞ்சநஞ்ச உரிமைகளும் அதிகாரங்களும் அன்றாடம் பறிக்கப்படுகின்றன. மொகாலயப் பேரரசில்கூட தில்லி ஆட்சியில் இவ்வளவு அதிகாரங்கள் குவிக்கப்பட்டதில்லை. ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியில் தில்லியில் குவிக்கப்பட்டிருந்த அதிகாரங்கள் மீண்டும் இப்போது குவிக்கப்பட்டுவிட்டன.

இந்தியா என்ற நாட்டை ஆங்கிலேயக் கிழக்கிந்திய வணிகக் கம்பெனி 1773 இல்தான் பீரங்கி முனையில் உருவாக்கி முடித்தது. ஆங்கிலேயரின் வேட்டையாடலுக்கு முன் இந்தியாவில் இன்றுள்ள தேசிய இனங்கள் தங்களுக்கான சொந்த நாடுகளையும் அரசுகளையும் பெற்றிருந்தன. ஆங்கிலேய வணிக நிறுவனம் உருவாக்கிய இந்தியாவில் அதிகப் பலன் பெற்றது ஆரிய இனத்தவர்கள்!

இன்று ஆரிய இந்தியாவின் அரசியல் பெயர் பாரதம்!
 
ஏன் கூட்டாட்சி தோற்றது ?
 
கூட்டாட்சியிலுள்ள பெரும்பான்மை தேசிய இனம் தனது மொழியையும் மேலாதிக்கத்தையும் தனது தனித்த அடையாளத்தையும் திணிக்காமல் – முன்னிலைப்படுத்தாமல் எந்தக் கூட்டரசும் செயல்பட்டதில்லை. ஒரு தேசம் அல்லது நாடு என்றிருந்தால் அதற்கு ஒரு ஒற்றை வரலாற்றுப் பின்னணியும் அதற்குரிய வரலாற்றுத் தத்துவமும்தான் எல்லா இடத்திலும் முன்வைக்கப்படுகின்றன. கூட்டாட்சியிலுள்ள எல்லா தேசிய இனங்களின் அதிகாரமும், மொழியும், அடையாளமும் சமமாக எந்த நாட்டிலும் வைக்கப்பட்டதில்லை. இந்தியா எனில் ஆரிய வரலாறு, ஆரியத் தத்துவமான வேத இதிகாசக் கொள்கைகள், ஆரிய மொழிகளான சமற்கிருதம், இந்தி, ஆரியவர்த்தமான மத்திய இந்தி மாநிலங்கள் ஆகியவைதான் மேலாதிக்கத்திலும் முன்னிலையிலும் வைக்கப்படுகின்றன. இது போல்தான் இரசிய, ஆங்கில, ஸ்பானிஷ் மேலாதிக்கங்கள் அந்தந்தக் கூட்டாட்சியில் நிலவின. இந்த மேலாதிக்கங்களுக்கு முதலாளியம், கம்யூனிசம் என்ற வேறுபாடு இல்லை.
 
தமிழ்த் தேசிய இறையாண்மை
 
இந்தியாவில் ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் இறையாண்மை வேண்டும். மாநில சுயாட்சி அல்ல. தமிழ்நாட்டிற்குத் தமிழ்த் தேசிய இறையாண்மை வேண்டும்.

தமிழ் மொழி, தமிழ் இன உணர்ச்சி இரண்டையும் பதவி அரசியலுக்கும் பண வேட்டை அரசியலுக்கும் பயன்படுத்திக் கொண்ட திமுக இப்போது எழுந்துவரும் தமிழ் இன உணர்ச்சியை மீண்டும் தனது தன்னல அரசியல் பக்கம் திருப்பிவிட மாநில சுயாட்சி பேசுகிறது. ஒட்டு மொத்தத் தமிழர்களுக்குரிய இலட்சியமில்லாத இந்தியத் தேசிய வாதக் கம்யூனிஸ்ட்டுகளும் மற்றவர்களும் கரைசேர இடைக்கால உத்தியாக மாநில சுயாட்சியைக் கையிலெடுக்கின்றன. இந்திய ஏகாதிபத்தியம் தமிழ்நாட்டில் தனது கடைசிப் பாசறைகளாக திராவிடக் கட்சிகளையும் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளையும்தான் நம்பி இருக்கின்றது.

தமிழர்களின் உரிமை முழக்கம் தமிழ்த் தேசிய இறையாண்மை!
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT