உடனடிச்செய்திகள்

Thursday, January 30, 2014

தழல் ஈகி முத்துக்குமாருக்கு தமிழகமெங்கும் வீரவணக்க நிகழ்வுகள்!

தழல் ஈகி முத்துக்குமாருக்கு தமிழகமெங்கும் வீரவணக்க நிகழ்வுகள்! 2008-2009ஆம் ஆண்டுகளில் தமிழீழ மக்களுக்கெதிரான, சிங்கள – இந்தியக் கூட்டரசுகள் நடத்திய இனவழிப்புப் போரை நிறுத்தக் கோரி, சனவரி 29 – 2009 அன்று காலை, சென்னை நுங்கம்பாக்கம் இந்திய அரசு வருமானவரி அலுவலகம் முன்பு தன்னையே எரித்துத் தீக்கிரையாக்கிய தழல் ஈகி முத்துக்குமார் தொடங்கி, தமிழீழ விடுதலைக்காக உயிர் ஈந்த ஈகியருக்கு தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் வீரவணக்க நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. 

  சென்னை



சென்னையில், தழல் ஈகி முத்துக்குமார் உடல் வைக்கப்பட்டிருந்தே அதே இடத்தில் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுக்குழு சார்பில், முத்துக்குமார் உள்ளிட்ட 26 ஈகியர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் 26 அடி நினைவுத் தூண் எழுப்பப்பட்டிருந்தது. இயக்குநர் த.புகழேந்தி, புலவர் புலமைப்பித்தன் உள்ளிட்டோரும், மாணவர்களும் இணைந்து இவ் ஏற்பாட்டைச் செய்திருந்தனர். அத்தூணுக்கு பல்வேறு அமைப்பினரும் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையிலான தோழர்கள், இந்திய சிங்கள கூட்டுச் சதியை அம்பலப்படுத்திய ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தி முழக்கங்கள் எழுப்பியவாறு முத்துக்குமார் நினைவுத் தூணை வந்தடைந்தனர். அங்கு தோழர் பெ.மணியரசன் ஈகியர் தூணுக்கு மலர் தூவி வீரவணக்கம் செய்தார். நிகழ்வில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் உதயன், த.இ.மு. பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 தஞ்சை


தஞ்சை மாவட்டம் – செங்கிப்பட்டியில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் நிறுவப்பட்டுள்ள தழல் ஈகி முத்துக்குமார் சிலைக்கு பல்வேறு அமைப்பினரும் வீரவணக்கம் செலுத்தினர். காலை 11 மணியளவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு தலைமையிலான த.தே.பொ.க. – த.இ.மு. தோழர்கள் முத்துக்குமார் சிலைக்கு மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செய்தனர். புலவர் இரத்தினவேலவர், த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் பழ.இராசேந்திரன், தோழர் நா.வைகறை, செங்கிப்பட்டி த.தே.பொ.க. செயலாளர் தோழர் ந.கருப்பசாமி, ஒன்றியச் செயலாளர் தோழர் க.காமராசு, தமிழக இளைஞர் முன்னணி ஒன்றியத் தலைவர் தோழர் அ.தேவதாசு, நடுவண் குழு உறுப்பினர்கள் தோழர் புதுக்குடி காமராசு, தோழர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட திரளான தோழர்கள் இதில் கலந்து கொண்டனர். ம.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் திரு. நந்தகுமார், விடுதலை சிறுத்தைகள் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் திரு. விடுதலைவேந்தன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் திரு. குடந்தை அரசன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் திருஞானம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் முத்துக்குமார் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர். தழல் ஈகி முத்துக்குமார் சிலை அமைக்க, தனது நிலத்தைக் கொடையாக அளித்த புலவர் இரத்தினவேலவர் சார்பில், வீரவணக்கம் செலுத்த வந்தோருக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சுவாமிமலை

சுவாமிமலை கடை வீதியில், இன்று மாலை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தழல் ஈகி முத்துக்குமார் உள்ளிட்ட ஈகியருக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெறுகிறது. நிகழ்வுக்கு, த.தே.பொ.க. தோழர் தீந்தமிழன் தலைமையேற்கிறார். நகரச் செயலாளர் தோழர் விடுதலைச்சுடர், சுவாமிமலை கிளைச் செயலாளர் தோழர் முரளி, தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் ச.செந்தமிழன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். 

ஓசூர் 

ஓசூர் இராம் நகரில், இன்று மாலை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தழல் ஈகி முத்துக்குமார் உள்ளிட்ட ஈகியருக்கு வீரவணக்கத் தெருமுனைக் கூட்டம் நடைபெறுகின்றது. கூட்டத்திற்கு, நகரச் செயலாளர் தோழர் செம்பரிதி தலைமையேற்கிறார். தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் வழக்கறிஞர் மாரிமுத்து நினைவேந்தல் உரை நிகழ்த்துகிறார். தோழர் சுப்பிரமணியன்(த.தே.பொ.க.) நன்றி நவில்கிறார். இதே போல், தமிழகமெங்கும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் ஈகி முத்துக்குமார் உள்ளிட்ட ஈகியருக்கு வீரவணக்க நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன.

 (செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

Tuesday, January 28, 2014

காவிரி வழக்கில் காலம் தாழ்த்திய உச்சநீதிமன்றத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் 150க்கும் மேற்பட்டோர் தஞ்சையில் கைது!

காவிரி வழக்கில் காலம் தாழ்த்திய உச்சநீதிமன்றத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதாக

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவரும்
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான 
தோழர் பெ.மணியரசன் உள்ளிட்ட
150க்கும் மேற்பட்டோர் தஞ்சையில் கைது!

 




காவிரி வழக்கில் காலம் தாழ்த்தி தமிழகத்திற்கு ஓர வஞ்சனையாக நடந்து கொண்டு கன்னட வெறியர்களுக்குத் துணை போகும் உச்சநீதிமன்றத்தைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க உத்தரவிடக் கோரியும், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் இன்று (27.01.2014), தஞ்சை மாவட்ட நீதிமன்றம் முன்று ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டது. ஆனால், நீதிமன்றத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்த அனுமதி கிடையாது எனக்கூறி மாவட்டக் காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்தனர்.

இந்நிலையில், தஞ்சை மாவட்ட நீதிமன்றச் சாலை அருகில், நீதிமன்றத்திற்கு முன்பு காவல்துறையினரின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய காவிரி உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான தோழர் பெ.மணியரசன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டவாகளைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவ் ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் திரு. த.மணிமொழியன் தலைமையேற்றார். தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் திரு. அய்யனாவரம் சி.முருகேசன், விடுதலைத் தமிழ்ப் புலிகள் நிறுவனர் திரு குடந்தை அரசன், பாரம்பரிய நெல் பாதுகாப்பு சங்கத் தலைவர் திரு. செயராமன், தமிழக உழவர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் காசிநாதன், கடலூர் மாவட்டச் செயலாளர் தோழர் சி.ஆறுமுகம், திராவிடர் விடுதலைக் கழக மாவட்டச் செயலாளர் தோழர் காளிதாசன், தமிழக மனித புரட்சிக் கழகத் தலைவர் திரு. அரங்க குணசேகரன், காவிரி பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் திரு. காவிரி தனபாலன், பேரழிவுக்கு எதிரான பேரியக்க ஒருங்கிணைப்பாளர் திரு. கே.கே.ஆர்.லெனின், மீத்தேன் திட்ட எதிர்ப்புக்குழு மயிலாடுதுறை ஒருங்கிணைப்பாளர் முனைவர் த.செயராமன், தாளாண்மை உழவர் இயக்கப் பொறுப்பாளர் திரு. கோ.திருநாவுக்கரசு, கொள்ளிடம் பாசன விவசாயிகள் சங்கம் திரு. சிவப்பிரகாசம், மயிலாடுதுறை விவசாயிகள் சங்கம் திரு. திருவரசமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களும், தோழர்களும் என மொத்தமாக 150 பேரை காவல்துறையினர் கைது செய்து வாகனங்களில் ஏற்றினர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் பழ.இராசேந்திரன், தோழர் நா.வைகறை, நகரச் செயலாளர் தோழர் இரா.சு.முனியாண்டி, பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் விடுதலைச்சுடர், தோழர் பட்டுக்கோட்டை இராசேந்திரன், தோழர் சி.ஆரோக்கியசாமி, த.தே.பொ.க. பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் காமராஜ், தமிழக இளைஞர் முன்னணி பூதலூர் ஒன்றியத் தலைவர் தோழர் ஆ.தேவதாசு, த.இ.மு. துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன் உள்ளிட்ட திரளான த.தே.பொ.க. தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சை வடக்கு வீதியிலுள்ள திருமண மண்டபத்தில்  அடைத்து வைக்கப்பட்டு மாலை 06.00 மணியளவில் விடுதலை செய்தனர்.





Saturday, January 25, 2014

“தமிழ்நாடு விடுதலையடையாமல் தமிழ்மொழியைக் காக்க முடியாது” மொழிப்போர் ஈகியர் நினைவிடத்தில் - தோழர் பெ.மணியரசன் உரை!

“தமிழ்நாடு விடுதலையடையாமல் தமிழ்மொழியைக் காக்க முடியாது”
மொழிப்போர் ஈகியர் நினைவிடத்தில்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் உரை!

“தமிழ்நாடு விடுதலையடையாமல் தமிழ் மொழியை - இனத்தைக் காக்க முடியாது” என, சென்னை மொழிப் போர் ஈகியர் நினைவிடத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் பேசினார்.   

1938 – 1965ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தித் திணிப்பை எதிர்த்து நஞ்சுண்டும், தீக்குளித்தும் மடிந்த ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தும் மொழிப்போர் ஈகியர் நாளான இன்று(25.01.2014), தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்க நிகழ்வுகள் தமிழகமெங்கும் நடைபெற்றன.

சென்னை



தமிழகத் தலைநகர் சென்னை வள்ளலார் நகர் – மூலக்கொத்தளம் இடுகாட்டில் உள்ள மொழிப்போர் ஈகியர்கள் நடராசன் – தாளமுத்து – பேராசிரியர் தர்மாம்பாள் ஆகியோரது நினைவிடங்களில், காலை 10.30 மணியளவில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் த.தே.பொ.க., தமிழக இளைஞர் முன்னணித் தோழர்கள் பேசின் பாலம் அருகிலிருந்து பேரணியாகச் சென்று வீரவணக்கம் செலுத்தினர்.

அங்கு, தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் ஆற்றிய வீரவணக்கவுரையின் எழுத்து வடிவம்:

“ஆண்டுதோறும் மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்துகிற முறையில் இங்கு நடராசன் – தாளமுத்து ஆகியோரது நினைவிடத்தில் நாம் வீரவணக்கம் செலுத்தக் குழுமியிருக்கிறோம். 1965இல் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட முந்நூறுக்கும் மேற்பட்ட ஈகியருக்கும், 1964இல் முதன்முதலாக தீக்குளிப்பைத் தொடங்கி வைத்த கீழப்பழுர் சின்னச்சாமி, மயிலாடுதுறை சாரங்கபாணி வரை தீக்குளித்தும் நஞ்சுண்டும் மடிந்த ஈகியருக்கும் நாம் வீரவணக்கம் செலுத்துகிறோம்.

இங்கு நாம் வீரவணக்கம் செலுத்துவதைப் போலவே, திருச்சியில் விராலிமலை சண்முகம் – கீழப்பழுர் சின்னச்சாமி ஆகியோரது நினைவிடங்ளில் இன உணர்வாளர்களும், பல்வேறு அமைப்பினரும் வீரவணக்கம் செலுத்துகின்றனர். மயிலாடுதுறையில் ஈகி சாரங்கபாணிக்கு நினைவுத்தூண் எழுப்பப்பட்டுள்ளது. திருப்பூரில் மொழிப் போர் ஈகியருக்கு  நினைவுத் தூண் எழுப்பட்டுள்ளது. அங்கெல்லாம் இன்று பல்வேறு அமைப்பினர் வீரவணக்கம் செலுத்துகின்றனர். பல்வேறு இடங்களில் த.தே.பொ.க. தோழர்கள் மொழிப் போர் ஈகியரின் படங்களை வைத்து வீரவணக்கம் செலுத்துகின்றனர்.  

கடந்த சில ஆண்டுகளாகத்தான் தமிழகம் முழுவதும் இன உணர்வாளர்கள், மொழிப் போர் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வுகளை பெரிய அளவில் நடத்துகின்றனர். இது இன உணர்வு எழுச்சிக் காலம்! அனைத்துத் தளங்களிலும் தமிழ்த் தேசிய உணர்வு பீறிட்டு எழுந்து வருகின்றக் காலம்.

தமிழர்களைப் போல் மொழிக்காக, இனத்திற்காக உயர்த்தியாகம் செய்தவர்கள், உலகின் எந்த நாட்டிலும் இல்லை. 1965 - மொழிப் போரின் போது,  நான் 11ஆம் வகுப்பு பள்ளி மாணவனாக, சனவரி 25 அன்று தஞ்சை சரபோஜி கல்லூரியில் நடைபெற்ற மாணவர் பேரணியில் கலந்து கொண்டேன். பெரும் எழுச்சியாக அது இருந்தது.

காங்கிரசுக்காரர்களின் அரம்பத்தனத்தாலும், காவல்துறையினரின் துப்பாக்கிச் சூடுகளிலும் பல்வேறு இடங்களில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சனவரி 27 அன்று சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவ ஈகி இராசேந்திரன் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி, தமிழகமெங்கும் பெரும் கிளர்ச்சியை உண்டாக்கியது. போராட்டங்கள் பெருமளவில் பரவியது.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ஆம் நாளை தாய்மொழி நாளாகக் கடைபிடிக்க வேண்டுமென ஐ.நா. மன்றம் அறிவித்துள்ளது. அது, முந்நூறுக்கும் மேற்பட்டத் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நாள் அல்ல. பத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் தமிழ் மொழி காக்க, தீக்குளித்தும் நஞ்சுண்டும்  மடிந்த நாள் அல்ல.

கிழக்குப் பாகிஸ்தானும் மேற்கு பாகிஸ்தானும் ஒரே நாடாக இருந்த போது, மேற்கு பாகிஸ்தானில் உருது மொழித் திணிப்பை எதிர்த்துப் போராட்டம் நடைபெற்று, அதில் சிலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்தப் போராட்டத்தை நாம் மதிக்கிறோம். அந்த நாளையே, உலகெங்குமுள்ள மக்களின் தாய்மொழி நாளாக ஐ.நா. அறிவித்தள்ளது. அதை நாமும் கடைபிடிக்கிறோம்.

1938லிருந்து மொழிப்போர் நடத்தியவர்கள் நாம். மொழிக்காக நடராசன் – தாளமுத்து ஆகியோரை இழந்தவர்கள் நாம். 1965இல் 300க்கும் மேற்பட்டவர்களை துப்பாக்கிச் சூட்டுக்கு பலிகொடுத்தவர்கள் நாம். 1965இல் தாய்மொழிக் காப்பிற்காக, முதன் முதலாக ஒரு தமிழன் கிழப்பழுர் சின்னச்சாமி தொடங்கி 10க்கும் மேற்பட்டவர்கள் தீக்குளித்து ஈகம் செய்தனர்.

அதன்பிறகு, தழல்ஈகி முத்துக்குமார் தொடங்கி எவ்வளவு பேர் இனத்திற்காக தம் உயிரை அர்ப்பணித்துள்ளனர். இவ்வளவு ஈகங்களை மொழிக்காக, இனத்திற்காக நடத்தியவர்கள் நாமாக இருப்பினும், ஏன் இந்த ஈகங்கள் செய்யப்பட்ட நாள் உலகத் தாய்மொழி நாளாக இல்லை என்று நாம் சிந்திக்க வேண்டாமா?

கிழக்குப் பாகிஸ்தானில் மொழி உரிமைக்கானப் போராட்டத்தை, இனவிடுதலையோடு இணைத்தார்கள். மொழியையும் இனத்தையும் அவர்கள் ஒன்றாகப் பார்த்ததார்கள். இனம் உடல் என்றால், மொழி அதன் உயிர். ஆனால், இங்கே மொழி வேறு இனம் வேறு எனப் பிரிக்கப்பட்டது. இரண்டும் இணைக்கப்படவில்லை. இங்கிருந்த தலைவர்கள் குளறுபடிகள் செய்தார்கள். இல்லாத இந்தியன் என்று இனத்தை நம் மீது திணித்தார்கள். இந்நியன் என்று இனமும் கிடையாது. இந்தியன் என்று மொழியும் கிடையாது. அதற்கு மாற்றாக திராவிடன் என  இன்னொன்றை சொன்னார்கள். திராவிடம் என்று மொழியுமில்லை, இனமுமில்லை. நாமெல்லாம் 5000 ஆண்டுகளாகத் தமிழர்களாகத் தான் இருந்து வருகிறோம். நம்முடைய இனப்பெயரே கூட இங்கு சரியாகச் சொல்லப்படவில்லை. குழப்பப்பட்டது.

இந்தி மொழியை எதிர்த்த நம் போராட்டத்தை வெறும் மொழிப் பிரச்சினையாகவே இங்கு பார்த்தார்கள். வடக்கத்தியரின் இந்தி மொழித் திணிப்பு, வெறும் மொழிப் பிரச்சினையல்ல. இந்தி இன ஆதிக்கத் திணிப்பு அது. அதை வெறும் மொழி எதிர்ப்பாக மட்டுமே புரிந்து கொண்ட தலைவர்கள், கோளாறாக “இந்தி வேண்டாம், இந்திக்கு பதிலாக ஆங்கிலம் இருக்கட்டும்” என, “Never Hindi Ever English” என்றொரு முழக்கத்தை வைத்தார்கள்.

இதன் பொருள், இந்திக்கு பதிலாக ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்தட்டும் என்பது தானே? இதற்காகவா செத்தார்கள் நடராசனும், தாளமுத்துவும்? இதற்காகவா குண்டடபட்டு முந்நூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் மடிந்தார்கள்? இந்தி வந்தால் தமிழ் மொழி அழிந்துவிடும் என்பதற்காகத்தான் நாம் போராடினோமே தவிர, இந்திக்கு பதிலாக ஆங்கிலம் வேண்டும் என்பதற்காக அல்ல!

1965இல் ‘அம்மா’ “அம்மா”வாக இருந்தார். ‘அப்பா’ “அப்பா”வாக இருந்தார். இன்று, ‘அம்மா’ “மம்மி”யாகவும், ‘அப்பா’ “டாடி”யாகவும் மாறிப்போனார்களே எப்படி? ஒரு தவறான மொழிக் கொள்கையை, அன்றைய தலைவர்கள் முன்வைத்ததால் வந்த கோளாறு இது! தமிழ் மொழிக்காக உயிரீந்த ஈகியரின் ஈகம் தமிழைப் பாதுகாப்பதற்காத்தான் நடைபெற்றது. இதிலிருந்து நாம் படிப்பிணை பெற வேண்டும்.

தமிழ்நாடு விடுதலையடைவது தான் உண்மையான மொழிக் காப்காப இருக்க முடியுமே தவிர, இந்தியாவுக்கு அடிமை மாநிலமாக இருந்து கொண்டு நம் இனத்தையும் பாதுகாக்க முடியாது; மொழியையும் பாதுகாக்க முடியாது. தமிழினம் ஆளும் இனமாக இருக்க வேண்டும். அப்பொழுது தான், தமிழ் ஆட்சி மொழியாக, கல்வி மொழியாக, நீதி மொழியாக தங்குதடையின்றி நீடிக்கும். வெறும் 50 - 60 இலட்சம் பேர் பேசுகின்ற மொழியின் அடிப்படையிலான நாடுகள் ஐ.நா.வில்  அங்கம் வகிக்கின்றன. ஆனால், நாமோ 7 கோடி பேர் இருந்தும் இந்தியாவில் அடிமையாக இருக்கின்றோம்.

எனவே, தமிழ்நாடு விடுதலையடைவது தான் தமிழ் மொழி அனைத்து மட்டங்களிலும் நிலைக்கவும், நீடிப்பதற்குமான பாதுகாப்பு என்பதை நாம் உணர வேண்டும். அப்பொழுது தான், தமிழன் வாழ்வு பெறுவான். தன்மான உணர்வு பெறுவான்.

இன்றைய நாளில், இன - மொழி விடுதலைக்கான அப்போராட்டத்தில் நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்வதற்காக உறுதியேற்போம்!   

மொழிப்போர் ஈகியர் புகழ் ஓங்குக!

மும்மொழிக் கொள்கை மோசடிக் கொள்கை!
இருமொழிக் கொள்கை ஏமாற்றுக் கொள்கை!
உரிமைக் கொள்கையே உரிமைக் கொள்கை!

தமிழே இங்கே ஆட்சி மொழி
தமிழே இங்கே கல்வி மொழி
தமிழே இங்கே நீதி மொழி!
இதுவே எங்கள் ஒருமொழிக் கொள்கை!

ஒருமொழிக் கொள்கை வேண்டுமெனில்
தமிழ்த் தேசக் குடியரசு அமையவேண்டும்!
மொழிப் போர் ஈகியருக்கு வீரவணக்கம்!”

இவ்வாறு தோழர் பெ.மணியரசன் பேசினார்.

நிகழ்வில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன், தமிழ்க் கலை இலக்கியப் பேரவைத் தலைவர் தோழர் உதயன், த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம், தமிழக இளைஞர் முன்னணிப் பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி, புலவர் இரத்தினவேலவர் உள்ளிட்டோரும், சென்னை – தாம்பரம் த.தே.பொ.க, த.இ.மு. தோழர்களும் பொறுப்பாளர்களும் இதில் கலந்து கொண்டனர்.

சிதம்பரம்

கடலூர் மாவட்டம் - சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள மொழிப் போர் மாணவ ஈகி இராசேந்திரன் சிலைக்கு தமிழக மாணவர் முன்னணி சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வுக்கு தமிழக மாணவர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் .யவனராணி தலைமையேற்றார். இந்திய அரசின் இந்தித் திணிப்பை கண்டித்தும், தமிழக அரசின் ஆங்கில திணிப்பைக் கண்டித்தும் விண்ணதிர எழுப்பப்பட்ட முழக்கங்களுக்கிடையில், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் வே.சுப்பிரமணிய சிவா மொழிப்போர் ஈகி இராசேந்திரன் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்தார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சிதம்பரம் நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம், மொழிப் போராட்ட வரலாற்றை தமிழக மாணவர்கள் இளையோர்கள் அறிவதற்கு தமிழக அரசு உறுதியான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும், இப்போராட்ட வரலாற்றை தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரிப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றும் கோரி உரையாற்றினார். நிகழ்வில், த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் மா.கோ.தேவராசன், ..மு துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன், தமிழக மாணவர் முன்னணி நகர அமைப்பாளர் தோழர் தனராஜ், தமிழக உழவர் முன்னணித் தோழர் மு.முருகவேள் உள்ளிட்ட பலரும்  பங்கேற்றனர்.

திருச்சி
திருச்சியில், காலை 9.30 மணியளவில் தென்னூர் உழவர் சந்தையிலிருந்து ‘இலக்கிய விமர்சகர்’ திரு. வீ.ந.சோமசுந்தரம் அவர்களது தலைமையில் பேரணியாகப் புறப்பட்ட தமிழின உணர்வாளர்கள், மொழிப் போர் ஈகியர் கீழப்பழுர் சின்னச்சாமி மற்றும் விராலிமலை சண்முகம் ஆகியோரது நினைவிடங்களில் மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மாநகரச் செயலாளர் தோழர் கவித்துவன், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை மாநகரச் செயலாளர் தோழர் இராசாஇரகுநாதன், த.இ.மு. அமைப்பாளர் தோழர் தியாகராஜன், தோழர் ஆத்மநாதன் (த.தே.பொ.க.), திரு. கி.ஆ.பெ. கதிரேசன், புலவர் தமிழகன் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தஞ்சை
தஞ்சையில் பழைய பேருந்து நிலையம் அருகில், காலை 10 மணியளவில் மொழிப் போர் ஈகியருக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வுக்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நகரச் செயலாளர் தோழர் இரா.சு.முனியாண்டி தலைமையேற்றார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் பழ.இராசேந்திரன், நா.வைகறை, மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் அய்யனாபுரம் சி.முருகேசன் ஆகியோர் கருத்துரை நிகழ்த்தினர். நிறைவில், முனைவர் இளமுருகன் சிறப்புரை நிகழ்த்தினார்.

குடந்தை

குடந்தை தியாகி இராமசாமி தெருவிலுள்ள தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அலுவலகம் அருகில், மாலை 5 மணியளவில், மொழிப் போர் ஈகியருக்கு வீரவணக்க நிகழ்வு, நகரச் செயலாளர் தோழர் விடுதலைச்சுடர் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில், த.தே.பொ.க. தோழர்களும் உணர்வாளர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

சுவாமிமலை

சுவாமிமலை கடை வீதியில் மாலை 6 மணியளவில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிக் கிளைச் செயலாளர் தோழர் முரளி தலைமையில், மொழிப் போர் ஈகியர் படங்களுக்கு மாலை அணிவித்து முழக்கம் எழுப்பி, வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில், கட்சித் தோழர்கள் மட்டுமல்லாது பொது மக்களும் தானே முன்வந்து ஈகியருக்கு விளக்குகள் ஏற்றி வீரவணக்கம் செலுத்தினர்.

தலைமைச் செயலகம்,

சென்னை-78.

Monday, January 6, 2014

சிதம்பரம் நடராசர் ஆலயத்தை அரசே நடத்த. தனிச்சட்டம் கொண்டு வருக. - தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்.

உச்சநீதி மன்றத் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது.
சிதம்பரம் நடராசர் ஆலயத்தை அரசே நடத்த.
தனிச்சட்டம் கொண்டு வருக.
தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி
பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்.


   சிதம்பரம் நடராசர் ஆலய நிர்வாகத்தைத் தமிழக அரசு ஏற்றது செல்லாது என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் அளித்த அறிக்கை வருமாறு.

தில்லை நடராசர் ஆலயத்தின் நிர்வாகத்தை தமிழக அரசு ஏற்றுநடத்தியது செல்லாது என உச்சநீதி மன்றம் இன்று (06.01.2014) அளித்துள்ள தீர்ப்பு முற்றிலும் எதிர்பாராத ஒன்று அல்ல என்ற போதிலும். தமிழர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் தீர்ப்பாகும்.

கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழக அரசு சிதம்பரம் நடராசர் ஆலயத்தை தனது இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து அதற்கான நிர்வாக அலுவரையும் நியமித்தது. இதனை எதிர்த்து சிதம்பரம் தீட்சிதர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்து தமிழக அரசின் நிர்வாகம் தொடர ஆணையிட்டது.

இத்தீர்ப்பை எதிர்த்து தீட்சிதர்களும் சுப்ரமணியம் சாமியும் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். தமிழக அரசு இதனை உரிய முறையில் கையாள அக்கறைக் காட்டவில்லை மூத்த வழக்கறிஞர்கள் யாரையும் நியமித்து வாதாட முன்வரவில்லை. ஏனோதானோ என்று நடத்தி வேண்டும் என்றே இந்த வழக்கை குழப்பியதோ என்று ஐயப்பட அடிப்படைகள் உண்டு.

இந்நிலையில் உச்சநீதி மன்ற நீதிபதிகள் பி.எஸ்.சவுக்கான், எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் தமிழக அரசின் ஆணையைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளனர். கோயிலில் முறைகேடுகள் நடந்திருந்தால். அது குறித்து தமிழக அரசு விசாரிக்கலாமே தவிர நிர்வாக அலுவலரை நிரந்தரமாக நியமிக்க முடியாது. என்று நீதிபதிகள் கூறியிருப்பது இந்த வழக்கின் அடிப்படையையே அணுகாத தீர்ப்பாக உள்ளது.

வரலாற்று ஆவணங்களின் அடிப்படையில் தீட்சிதர்கள் தனிவகையறாவினர் (Denomination) அல்லர் என்பதையோ, இக்கோயில் கட்டப்பட்டதிலிருந்து பல கட்டங்களில் விரிவாக்கப்பட்டது வரை அரசுகளின் பணியாக இருந்தனவே தவிர இவற்றில் தில்லை தீட்சிதர்களின் பங்கு பணி எதுவும் இல்லை என்ற உண்மையையோ உச்ச நீதி மன்றம் கருத்தில் கொள்ளவில்லை.

அந்த அடிப்படையில் உச்ச நீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பு வழக்கின் முதன்மை சிக்கலை கருதிப்பார்க்காத ஒன்றாக அமைந்துள்ளது. இந்த உண்மையை முன்வைத்து தமிழக அரசு வலுவாக வாதாடாமல் போனது. இந்நிலை வருவதற்கு ஓர் முக்கிய காரணமாக அமைந்து விட்டது.

இத்தீர்ப்பை சட்ட முறையில் எதிர்கொள்ளும் வகையில் தமிழக அரசு சிதம்பரம் நடராசர் ஆலயத்தை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொணர்வதற்கு தனிச்சட்டம் வரைந்து சட்டமன்றத்தில் நிறைவேற்றுவதே ஒரே வழி.

எனவே தமிழக அரசு தில்லை நடராசர் ஆலய நிர்வாகத்தை ஏற்று நடத்தும் வகையில் உடனடியாக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்றும் சட்டமன்ற கூட்டத்தொடருக்கு காலதாமதம் ஆகுமானால் உடனடியாக அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்றுத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

கி.வெங்கட்ராமன்)
பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.
 இடம் : சென்னை












போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT