உடனடிச்செய்திகள்

Sunday, April 30, 2017

செங்கிப்பட்டியில் நாளை (01.05.2017) மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்!

செங்கிப்பட்டியில் நாளை (01.05.2017) மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்!
அனைத்துலகத் தொழிலாளர் நாளான மே 1 - அன்று, (01.05.2017), தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தமிழ்நாடெங்கும் கொடியேற்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

இந்த ஆண்டு, மே 1 – தொழிலாளர் நாளை - தமிழ்த்தேசியத் தொழிலாளர்களின் – காவிரி நீர் மறுப்பால் வாழ்விழந்து நிற்கும் உழவுத் தொழிலாளர்களின் வாழ்வுரிமையை மீட்பதற்கான நாளாக கடைபிடிக்கின்றோம்.

அதன் ஒரு பகுதியாக, தஞ்சை மாவட்டம் - பூதலூர் ஒன்றியம் - செங்கிப்பட்டியில், சாணூரப்பட்டி கடை வீதியில் மாலை 5.30 மணியளவில் கொடியேற்றம் மற்றும் எழுச்சிப் பொதுக்கூட்டம் நடைபெறுகின்றது.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் நிகழ்வில் பங்கேற்று எழுச்சியுரையாற்றுகிறார். பேரியக்க பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் ஆ. தேவதாசு நிகழ்வைத் தலைமை தாங்கி நடத்துகிறார்.

பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ச. அருள்தாசு, ரெ. கருணாநிதி, க. காமராசு, தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் பி. தெட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர்.

நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், பொது மக்களும் திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: tamizhdesiyam.com 

Saturday, April 29, 2017

இந்திப் பிரசார சபை முன்பாக ... இந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம்! அழைக்கிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம்!

இந்திப் பிரசார சபை முன்பாக ... இந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம்! அழைக்கிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம்!

இடம்:              இந்திப் பிரச்சார சபை, தியாகராயர் நகர், சென்னை.
காலம்:            தி.பி. 2048 - சித்திரை 25 (08.05.2017) திங்கள் காலை 10 மணி
தலைமை : தோழர் கி. வெங்கட்ராமன் பொதுச் செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். 

இந்தி மொழியைத் தமிழ்நாட்டின் கல்வி மொழியாக, பேச்சு மொழியாகத் திணித்திட பா.ச.க. அரசு சுனாமி வேகத்தில் செயல்படுகிறது. அதே வேகத்தில் தமிழைப் புறந்தள்ளி தீர்த்துக் கட்டவும் முயல்கிறது.

அண்மையில் பா.ச.க. அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தில், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் முதல் கட்டமாக நடுவண் பள்ளிக் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ.) பள்ளிகளிலும், கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளிலும் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாய மொழிப் பாடமாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மாநில அரசுப் பள்ளிகளிலும் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை இந்தியைக் கட்டாயமாக்கிட, மாநில அரசுகளிடம் பேச்சு நடத்தப்படும் என்றும் நடுவண் அரசு கூறுகிறது.

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர், தலைமை அமைச்சர், அமைச்சர்கள் இந்தி தெரிந்தால், இந்தியில் மட்டுமே பேச வேண்டும் என்றும் புதிய சட்டம் கூறுகிறது. அத்துடன் அவர்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே இந்தியாவில் எங்கு பேசினாலும் இந்தி தெரிந்தோர் இந்தியில் மட்டுமே பொது நிகழ்வுகளில் பேச வேண்டும் என்றும் கூறுகிறது.

மேற்கண்ட புதிய ஆணைகள், கடந்த 2011ஆம் ஆண்டு (02.06.2011), நடுவண் அரசில் காங்கிரசு - தி.மு.க. கூட்டணி ஆட்சி நடந்த போது, உள்துறை அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் தலைமையில் இயங்கிய “அலுவல் மொழிக்கான நிலைக்குழு”வின் (Committee of Parliament on Official Language) பரிந்துரைகளே ஆகும். அப்பரிந்துரைகளை ஆறாண்டுகள் கழித்து இப்போதுள்ள பா.ச.க. அரசு ஏற்றுச் சட்டமாக்கியுள்ளது.

இந்திய அரசில் காங்கிரசு இருந்தாலும், பா.ச.க. இருந்தாலும், அது இந்தித் திணிப்பை தொடரும் என்பதற்கு இதுவே தக்க சான்றாகும்.

அசாம் தலைநகர் கவுகாத்தியில் 18.04.2017 அன்று நடந்த இந்தி பரப்பலுக்கான கூட்டுக் குழுக் கூட்டத்தில் பேசிய நடுவண் அமைச்சர் வெங்கையா நாயுடு, இந்தி பேசாத மாநிலங்களில் மக்கள் தங்களுக்கிடையே உரையாடும் பொழுதும் இந்தி மொழியில் பேசுமாறு வலியுறுத்தினார்.

இந்தித் திணிப்பு என்பது மொழி ஆதிக்கம் மட்டுமன்று; அது ஆரிய ஆதிக்கத்தின் இன்னொரு கூறு! தமிழினத்தை ஆரியம் எப்போதுமே பகையினமாகக் கருதும்!

தமிழ்நாட்டில் இந்தி கல்வி மொழியாகிவிட்டால், வடநாட்டவர்கள் இங்கு போட்டித் தேர்வுகள் எழுதி தமிழ்நாட்டின் அதிகார வர்க்கத்திலும், வேலை வாய்ப்பிலும் பேராதிக்கம் செலுத்துவார்கள். மண்ணின் மக்கள் வேலையற்ற அகதிகளாக வெளியே தள்ளப்படுவார்கள்!

இந்தி படித்தால் வடநாட்டில் வேலை கிடைக்கும் என்று பம்மாத்து செய்தார்கள்; இப்போதே வடநாட்டவர்கள் வந்துதான் தமிழ்நாட்ட்டின் வேலை வாய்ப்புகளைப் பறித்துக் கொண்டுள்ளார்கள். தமிழ்நாட்டில் இந்தி கல்வி மொழியாகிவிட்டால், தமிழர்களின் கதி என்னவாகும்?

தமிழ் மொழி காக்க - தமிழர் உரிமை காக்க - ஆதிக்க இந்தியை அடித்து விரட்ட வேண்டியது கட்டாயக் கடமையாகும். எனவேதான், ஆதிக்க இந்தியைத் தடுக்க இந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது!

கோரிக்கைகள்

1. மக்களவை மாநிலங்களவையில் முன் அனுமதி கேட்காமல், அமைச்சர்களும் உறுப்பினர்களும் தமிழில் பேசுவதற்கான உரிமையும் வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும்.

2. நடுவண் பள்ளிக் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ.) மற்றும் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் இந்தியைக் கட்டாயமாக்குவதைக் கைவிட்டு, தமிழ்நாட்டில் அவற்றில் தமிழைக் கட்டாய மொழிப்பாடமாக்க வேண்டும்.

தமிழைக் கட்டாய மொழிப்பாடமாக ஏற்றுக் கொள்ளாத நடுவண் வாரிய மற்றும் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கக் கூடாது. அவற்றைக் மூடச் செய்ய வேண்டும்.

இந்திய அரசின் இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டின் எதிர்ப்புக் குரலை வலுப்படுத்தும் வகையில் தமிழ் மக்களும், இளைஞர்களும், இன உணர்வாளர்களும் இப்போராட்டத்தில் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com 

Sunday, April 23, 2017

சென்னை இந்திப் பிரசார சபை முன்பாக இந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம்!

சென்னை இந்திப் பிரசார சபை முன்பாக இந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு தீர்மானம்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், சென்னையில் நேற்று (22.04.2017) காலை முதல் மாலை வரை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் குழ. பால்ராசு, பழ. இராசேந்திரன், நா. வைகறை, கோ. மாரிமுத்து, இரெ. இராசு, க. விடுதலைச்சுடர், க. முருகன், க. அருணபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனமாக நிறைவேற்றப்பட்டன :

தீர்மானம் : 1 

இந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம்சென்னை இந்திப் பிரசார சபை முன்பாக!

இந்தியக் குடியரசுத் தலைவர், தலைமை அமைச்சர், நடுவண் அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்களும், மற்றவர்களும் அவர்களுக்கு இந்தியில் பேசவும், எழுதவும் தெரிந்தால், இனி அவர்கள் நாடாளுமன்றத்திலும், வெளியில் பொது நிகழ்வுகளிலும் இந்தியில் மட்டுமே பேச வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் எழுத்து வடிவில் அளிக்கும் விடைகளை, இந்தியில் மட்டுமே அளிக்க வேண்டும் என்றும் இந்திய அரசு ஆணையிட்டுள்ளது. இந்தியக் குடியரசுத் தலைவர் இதற்கான ஆணையில் கையெழுத்திட்டுள்ளார்.
மேலும், இந்தியா முழுவதும் அனைத்துவகைப் பள்ளிக் கல்வியிலும் (மாநில அரசுப் பாடத்திட்டக் கல்வி உட்பட), ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை இந்தி ஒரு கட்டாயப் பாட மொழியாக இருக்க வேண்டும், முதல் கட்டமாக நடுவண் பள்ளிக் கல்வி வாரியப் (சி.பி.எஸ்.இ.) பள்ளிகளிலும் கேந்திரியா வித்தியாலயாப் பள்ளிகளிலும் இது கட்டாயமாக்கப்படும், அடுத்து மாநில அரசுப் பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு வரை இந்தி மொழியைக் கட்டாயமாக்குவது பற்றி நடுவண் அரசு எல்லா மாநில அரசுகளுடனும் விவாதிக்க வேண்டும் என்றும் இந்திய அரசு அறிவித்துள்ளது. 

அசாம் தலைநகர் கவுகாத்தியில் 18.04.2017 அன்று, நடுவண் அரசின் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு, “மக்கள் தங்களுக்குள் தாய்மொழியில் உரையாடிக் கொள்வதைப் போலவே, இந்தி மொழியிலும் உரையாடிக் கொள்ள வேண்டும்” என அங்கு நடைபெற்ற “கூட்டு இந்தி அறிவுரைக் குழு”க் (Joint Advisory Committee for Hindi), கூட்டத்தில் கூறியுள்ளார்.

மேற்கண்ட புதிய ஆணைகள், கடந்த 2011ஆம் ஆண்டு (02.06.2011), நடுவண் அரசில் காங்கிரசு – தி.மு.க. கூட்டணி ஆட்சி நடந்த போது, நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரம் தலைமையில் இயங்கிய “அலுவல் மொழிக்கான நிலைக்குழு”வின் (Committee of Parliament on Official Language) பரிந்துரைகளே என்பதும் தெரிய வந்துள்ளது. அப்பரிந்துரைகளை ஆறாண்டுகள் கழித்து இப்போதுள்ள பா.ச.க. அரசு ஏற்றுச் சட்டமாக்கியுள்ளது. ப. சிதம்பரம் அமைச்சராக இருந்த அதே காங்கிரசு அமைச்சரவையில் அமைச்சராக அன்றிருந்த இன்றைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்சி இப்பரிந்துரைகள் சட்டமாகும் வகையில் கையொப்பமிட்டுள்ளார்.

இந்திய அரசில் காங்கிரசு இருந்தாலும், பா.ச.க. இருந்தாலும், அது இந்தித் திணிப்பை தொடரும் என்பதற்கு இதுவே தக்க சான்றாகும்.

இந்திய அரசின் இந்த இந்தித் திணிப்பை எதிர்த்து, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் தலைமையில், வரும் மே 8 அன்று, சென்னை தியாகராயர் நகரிலுள்ள இந்திப் பிரச்சார சபை முன்பு குடியரசுத் தலைவர் கையொப்பமிட்ட இந்தித் திணிப்பு ஆணையின் நகலை எரிக்கும் போராட்டத்தை தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுக்கவுள்ளது. இந்திய அரசின் இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டின் எதிர்ப்புக் குரலை வலுப்படுத்தும் வகையில் தமிழ் மக்களும், இளைஞர்களும், இன உணர்வாளர்களும் இப்போராட்டத்தில் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுமென வேண்டுகிறோம்.

கோரிக்கைகள்

1. மக்களவை மாநிலங்களவையில் முன் அனுமதி தேவைப்படாத நிலையில், அமைச்சர்களும் உறுப்பினர்களும் தமிழில் பேசுவதற்கான உரிமையும் வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும்.

2. நடுவண் பள்ளிக் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ.) மற்றும் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் இந்தியைக் கட்டாயமாக்குவதைக் கைவிட்டு, தமிழ்நாட்டில் அவற்றில் தமிழைக் கட்டாய மொழிப்பாடமாக்க வேண்டும்.

தமிழை கட்டாய மொழிப்பாடமாக ஏற்றுக் கொள்ளாத நடுவண் வாரிய மற்றும் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கக் கூடாது. அவற்றைக் மூடச் செய்ய வேண்டும்

தீர்மானம் : 2

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏழு நாட்கள் தொடர்வண்டி மறியல் போராட்டம்!

காவிரித் தீர்ப்பாயத்தைக் கலைக்க ஆணையிடும் வகையில் இந்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து – நிலுவையில் வைத்துள்ள, ஒற்றைத் தீர்ப்பாயத்திற்கான சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும், மேக்கேத்தாட்டில் கர்நாடக அரசு காவிரியைத் தடுத்து அணை கட்ட இந்திய அரசு அனுமதிக்கக் கூடாது, தமிழக உழவர்களுக்கு முழுமையான வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த மார்ச்சு 28 முதல் ஏப்ரல் 15 வரை தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு, காவிரி உரிமை மீட்புக் குழுவினர் இரவு பகலாக நடத்திய தொடர் அறப்போராட்டத்தின் அடுத்த கட்டமாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் வரும் மே 15 முதல் ஒரு வார கால தொடர்வண்டி மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது.

இப்போராட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் பெருந்திரளாகப் பங்கேற்பது என்றும், காவிரி டெல்டா மாவட்டங்களில் இதற்காக விரிவான அளவில் பரப்புரைகள் மேற்கொள்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் : 3

மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு தொடர்ந்து 50% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்!

கடந்த 30 ஆண்டுகளாக, தமிழ்நாட்டில் மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 விழுக்காட்டு இட ஒதுக்கீட்டை, இந்திய மருத்துவக் கவுன்சில் வகுத்துள்ள விதிகளைக் காரணம் காட்டி, கடந்த 17.4.2017 அன்று சென்னை உயர் நீதிமன்றம் நீக்கித் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதன் காரணமாக, தமிழ்நாட்டின் மருத்துவக் கல்லூரிகளில் பல்வேறு பிரிவுகளில் மருத்துவ மேற்படிப்பிற்கான 1,225 இடங்களில் சேருவதற்கான வாய்ப்பு கிராமப்புறங்களிலும், மலை கிராமங்களிலும், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு கிடைக்காமல் போகும் ஆபத்து உருவாகியுள்ளது. இதற்கெதிராக, அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு, உடனடியாக இதில் தலையிட்டு, தமிழ்நாட்டின் மருத்துவ மேற்படிப்பில் நடப்பிலுள்ள 50 விழுக்காட்டு இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் அவசரச் சட்டம் இயற்ற வேண்டும். அதற்கு, இந்திய அரசின் ஒப்புதலைப் பெற அரசியல் நடவடிக்கையிலும் இறங்க வேண்டும்.

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு தேவையில்லை என தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள சட்ட முன்வடிவுக்கு, குடியரசுத் தலைவர் ஏற்பிசைவு வழங்க வேண்டும்.

தீர்மானம் : 4

கீழடி ஆய்வாளர் அமர்நாத் குழுவினரை அசாமிற்கு இடமாற்றம் செய்வதை இந்திய அரசு கைவிட வேண்டும்!

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் நாகரிகத்தின் வரலாற்றுச் சான்றாக கிடைத்திருப்பது சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வு. இதற்கு முன் தமிழர்களின் பண்டைய நாகரிகத்தை எடுத்துக் காட்டுவதற்கு குடியிருப்புகள், இடுகாட்டுத் தாழிகள் போன்றவை கிடைத்தன. ஆனால் கீழடியில்தான் பண்டைய தமிழர்களின் தொழிற்கூடங்கள் கிடைத்துள்ளன.

இந்த அகழாய்வைத் தொடர்வதற்குத் தொடர்ந்து இந்திய அரசு முட்டுக்கட்டைகள் போட்டுக் கொண்டே வந்தது. முதல் கட்ட அகழாய்வு 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இரண்டாம் கட்ட அகழாய்வு 2016 ஆம் ஆண்டு தொடர்ந்தது. ஆனால் அது முடிந்த பின் மூன்றாம் கட்ட அகழாய்வை இயல்பாகத் தொடங்காமல் இந்தியத் தொல்லியல் துறை தடுத்து வைத்திருந்தது. பல்வேறு தமிழ் அறிஞர்களும், தமிழின அமைப்புகளும் குரல் கொடுத்தபின் மூன்று மாதம் தாமதித்து மூன்றாம் கட்ட அகழ்வாய்வைத் தொடங்கியுள்ளது. அதற்கு இன்னும் நிதி ஒதுக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிட வேண்டிய ஒரு செய்தி!

இந்நிலையில் கீழடி அகழாய்வுக்கு இன்னொரு சிக்கல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அகழாய்வில் தொடர்ச்சியாக தமிழ் ஆர்வத்துடன் ஆய்வுப்பணி செய்து வந்தவர் திரு. அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்கள். அவர் கீழடி அகழாய்வுப் பிரிவுத் தலைவராகவும், இந்தியத் தொல்லியல் துறையின் பெங்களுர் மையக் கண்காணிப்பாளராகவும் செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு மிகத் தாமதமாக இந்திய அரசு அனுமதி வழங்கிய நிலையில், கடந்த மார்ச் மாத இறுதியில், திடீரென்று இந்தியத் தொல்லியல் துறையால் அமர்நாத் அசாமுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து நடுவண் நிர்வாகத் தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தார் அமர்நாத். தீர்ப்பாயமும், அமர்நாத் ராமகிருஷ்ணாவை கீழடியிலேயே பணியாற்ற அனுமதிக்கக் கோரி இந்தியத் தொல்லியல் துறைக்கு பரிந்துரை செய்திருந்தது.

இந்நிலையில் 21.04.2017 அன்று, இந்தியப் பண்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நடுவண் தொல்லியல்துறை, சென்னைக்கு பணியிட மாறுதல் கோரியிருந்த அவரது வேண்டுகோளையும் நிராகரித்து அமர்நாத் இராமகிருஷ்ணாவை அசாம் மாநிலம் கவுகாத்திக்கு பணியிட மாறுதல் செய்ததை உறுதி செய்து கடிதம் வழங்கியுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை வெளிப்படுத்தும் கீழடி ஆய்வுக்குத் தடை ஏற்படுத்தும் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை இது!
இந்திய அரசு, உடனடியாக திரு. அமர்நாத் அவர்களின் பணியிடமாற்றத்தைத் திரும்பப் பெற்று, அவரையும் அவரது குழுவினரையும் தொடர்ந்து கீழடியிலேயே ஆய்வு செய்ய ஆணையிட வேண்டும்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: tamizhdesiyam.com 

Saturday, April 22, 2017

பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது! பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!

பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!
தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்.

என்றார் தமிழினப் பேராசான் திருவள்ளுவர். ஒருவர் வாழுங்காலத்தில் தகுதிகள் மிகுந்தவராக வாழ்ந்தாரா இல்லையா என்பது அவர் மறைவிற்குப் பின் எஞ்சி வாழும் அவரின் செயல்களால், கருத்து களால் அளக்கப்படும் என்றார். இக்குறளுக்கு ஒருவரின் பிள்ளைகளால் அவரின் தகுதி அறியப்படும் என்று பொருள் கூறுவாரும் உளர்.

அண்மையில் காலமான செயலலிதாவின் “தகுதியும் புகழும்” எத்தன்மையானவை என்பது அ.இ.அ.தி.மு.க. வினரின் இன்றையச் செயல்களால் அளக்கப்பட வேண்டும்.

செயலலிதாவுக்கே ஊழல் வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபாய் தண்டத் தொகையும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. அவர் இறந்து விட்டதால் அவர் தண்டனை படிக்கப்பட வில்லை. காரணம் அத்தண்டனையை அனுபவிக்க ஆள் இல்லை என்பதால்!

கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்ட சசிகலா தரப்பு சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு ஒரு நபருக்கு மூன்று கோடி ரூபாயும் மூன்று கிலோ தங்கமும் கையூட்டாக வழங்கப்பட்டது என்கிறார்கள். சட்டப் பேரவை உறுப்பினர் ஒருவர் தனக்குப் பெண் பிள்ளை கள் இல்லாததால் மூன்று கிலோ தங்கம் வேண்டாம் அதற்கு ஈடாகப் பணம் கொடுத்து விடுங்கள் என்றாராம்!

நடிகர் சரத்குமாரை இழுக்க அவருக்கு ஏழு கோடி ரூபாய் தரப்பட்டதாம். அவர் வீட்டில் நடுவண் வருமானவரித்துறை சோதனை! நலத்துறை அமைச்சர் விசயபாஸ்கர் வீடுகளிலும் அவரின் உறவினர்கள் மற்றும் கையாட்களின் வீடுகளிலும் சோதனைகள். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அ.தி.மு.க.-வின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் உள் ளிட்ட அனைவரின் பணப் பதுக்கல் - ஊழல் அந்த ரங்கம் பலவற்றை வருவானவரி அதிகாரிகளிடம் விசய பாஸ்கர் உளறிக் கொட்டிவிட்டார் என்கிறார்கள்.

இரட்டை இலைச் சின்னத்தை மீட்க தில்லித் தரகர் ஒருவர்க்கு தினகரன் கையூட்டுக் கொடுத்ததை அத்தரகரே ஒப்புக்கொண்டுள்ளார். அவர் தளைப் படுத்தப்பட்டார். அடுத்த கைது தினகரன் என் கிறார்கள்.

புரட்சித்தலைவியின் வாரிசாக விளம்பரப்படுத்தப் பட்ட “சின்னம்மா” என்கிற சசிகலா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூர்ச் சிறையில் உள்ளார்.

ஏற்கனவே, செயலலிதாவின் ஆட்சியின் தலைமைச் செயலாளராக இருந்த இராம மோகனராவ் வீடும் கோட்டை அலுவலகமும் சோதனை இடப்பட்டன.

இன்னும் இன்னும் எத்தனையோ ஊழல்கள், வெளிவரப்போகின்றன. புரட்சித் தலைவியின் போர்ப்படைத் தளபதிகள் பம்மிப் பதுங்கிக் கிடக் கிறார்கள்.

தக்க தலைமையின்றி, கூட்டுத் தலைமையுமின்றி சிதறிக்கிடக்கிறது அ.தி.மு.க.!

ஒற்றைச் சர்வாதிகாரத் தலைவியாய் தன்னை உருவாக்கிக் கொண்ட செயலலிதா - தந்திரங்களையும் சர்வாதிகாரத்தையும் மட்டுமே நம்பினார். இரண்டாம் நிலைத் தலைவர்கள், மூன்றாம், நான்காம் நிலைத் தலைவர்கள்கூட உருவாகாமல் தடுத்தார். செயலலிதா வீற்றிருக்கும் காரின் சக்கரத்தைப் பார்த்துக் கும்பிடும் கொத்தடிமைகளாக அவரின் அமைச்சர்கள் நடத்தப் பட்டார்கள். கொள்ளை விகிதம் போதும் என்று அமைச்சர்களும் அடங்கிக் கிடந்தார்கள்.

தமது ஆட்சியின் வழியாக அன்றாட நிர்வாக ஏற்பாடாகக் கிடைத்த ஊழல் பணத்தை மற்ற அமைச்சர்களுடன் அவரவர் தகுதிக்கேற்ப பகிர்ந்து கொண்டார். ஆனால் ஆட்சி மற்றும் கட்சியின் அதிகாரத்தைத் தகுதியான மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவில்லை. ஒற்றைச் சர்வாதிகாரியாக விளங்கினார்.

அதனால், செயலலிதா மறைவுக்குப்பின் அந்தக் கட்சி, தலைமை இன்றி சின்னாபின்னமாய்க் கிடக் கிறது. அரசியலில் ஆனா, ஆவன்னா தொடர்பு கூட இல்லாத “தீபா” என்ற ஒரு பெண் - _ செயலலிதா வின் இரத்தத் தொடர்பு என்று கூறிக் கொண்டு தலைவி வேடம் போட்டுத் திரிகிறார். தீபாவின் கணவர் என்ற ஒரு நபர் தான்தான் தலைவர் என்று திரிகிறார். இந்த இருவரைச் சுற்றித் திரிய அ.தி.மு.க. முகவர்கள், தொண்டர்கள் பலர்.

“தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்”.

சசிகலாவின் குடும்ப உறுப்பினர் ஒருவர்கூட அ.தி.மு.க. பொறுப்பில் - ஆட்சிப் பொறுப்பில் இருக்கக் கூடாது, சசிகலா துதிபாடிகளாக இருந்தவர்களே இப்போது புது முடிவுக்கு வந்துள்ளார்கள். சீரழிவு மற்றும் குழப்பங்களுக்கிடையே இவ்வாறான மாற்றங்களும் நடக்கின்றன.

இந்தக் குழப்பங்களில் ஆதாயம் பெற - ஆக்கிமிப்பில் இறங்க பா.ச.க. பதுங்கி இருக்கிறது என்பது மட்டுமல்ல, குழப்பங்களை பா.ச.க.வே உருவாக்கும்.

நடுவண் வருமானவரித்துறையால் சோதனை இடப்படவுள்ள அமைச்சர்கள் மற்றும் அ.இ.அ.தி.மு.க.வின் முக்கியப் புள்ளிகளின் பட்டியலை நடுவண் அரசு கையில் வைத்துக் கொண்டு, அ.தி.மு.க.வினரை மிரட்டியதாகச் சொல்கிறார்கள். இது உண்மையாக இருக்கலாம். ஏனெனில், இதைச் சொல்பவர் ஆர்.எஸ்.எஸ். குருமூர்த்தி!

அடுத்து, மோடி அரசின் அமைச்சரவையில் அ.தி.மு.க.வும் சேர வேண்டுமென்ற கருத்து அ.தி.மு.க. வின் அணிகளில் ஒன்றிலிருந்து வருகிறது. இதுவும் பா.ச.க. திரைமறைவு வேலையை அம்பலப்படுத்தும் செய்திதான்!

தமிழினத்தைக் கருவறுக்கக் காத்துக் கிடக்கும் ஆரிய பா.ச.க., அண்ணா திமுக மந்தையை அப்படியே வளைத்துக் கொள்ள வலைவீசவில்லை! தடியைத் தூக்கி உள்ளது. அரசியல் ஒழுக்கம், ஆன்மிக ஒழுக்கம் இரண்டுமே இல்லாத ஆரிய மேலாதிக்கவாத பா.ச.க. வின் அதிகாரத்தின் முன் குலை நடுங்கிக் கிடக்கின் றனர் அம்மாவின் அடிமைகள்!

தமிழினத்தின் மானம் சந்தி சிரிக்கிறது. தமிழர்களை எவர் மதிப்பார்?

பா.ச.க. ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்காக அ.தி.மு.க. அணி ஒன்றை ஆதரிப்பதோ, தி.மு.க.வை ஆதரிப்பதோ தன்மானமற்ற, தற்சாற்பற்ற செயலாகும். காட்டிக் கொடுக்கும் கங்காணி அரசியலைக் காப்பதாகவே அமையும்.

ஒருவேளை அ.தி.மு.க. மந்தையை வளைத்துப் போட்டு, பா.ச.க. தமிழ்நாட்டு அரசியலில் தலை யெடுத்தால், அது தற்காலிக வீக்கமாகவே பா.ச.க.வுக்கு அமையும். எனவே இளைஞர்கள், தன்மானமுள்ள தமிழர்கள் பதற்றப்பட வேண்டாம்! தமிழ் மண் ஆரிய பா.ச.க.வை ஏற்காது!

கங்காணி அரசியல் நடத்தும் அ.தி.மு.க. - தி.மு.க. கட்சிகளின் சிதைவில் தான் தன்மானமுள்ள தற்சார்புள்ள தமிழர் உரிமை அரசியல் கிளர்ந்தெழும்! அதற்குச் சில ஆண்டுகள் தேவைப்படலாம்.

இந்துத்துவா அபாயத்தைத் தடுக்க தி.மு.க.வை ஆதரிப்போம் என்று இடதுசாரிகளும் இன்னபிற சின்ன தி.மு.க.க்களும் தோள்தட்டி நிற்கக்கூடும். அது பற்றிக் கவலைப்பட வேண்டாம். அவற்றிற்குத் தமிழர்களுக்குத் தேவைப்படும் தனித்த இலட்சியமோ, வேலைத்திட்டமோ கிடையாது. அவ்வப்போது அடையாள எதிர்வினை ஆற்றி, தங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளவே பெரும்பாடு படுகின்றன. அவற்றால் மாற்று அரசியலை உருவாக்க முடியாது.

பா.ச.க. என்ற பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது.

எதிர்ப்பு அரசியல் இலட்சிய அரசியல் ஆகிவிடாது. தி.மு.க., அ.தி.மு.க.-வின் சீரழிவு அரசியலில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். தி.மு.க., அ.தி.மு.க. பாணி வெற்றுவேட்டு அரசியலை அருவருக்கும் பண்பு வளர வேண்டும்.

தமிழ்த்தேசிய இலட்சியம், தமிழர் அறம் ஆகிய வற்றை அடித்தளமாக்கி, சரியான புதிய அரசியலை முன்னெடுத்தால் ஆரியவாத பா.ச.க. அரசியலைத் தமிழ்நாட்டில் ஓரங்கட்ட முடியும்.

(இக்கட்டுரை, தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம், ஏப்பிரல் 16-30 இதழில் வெளியானது. கட்டுரையாளர் பெ. மணியரசன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர், தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழாசிரியர்).

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: tamizhdesiyam.com 

Friday, April 21, 2017

நடிகர் சத்தியராஜ் அவர்களின் பொறுப்புணர்ச்சிக்கும் - தமிழ் இன உணர்ச்சிக்கும் பாராட்டுகள்! பெ. மணியரசன் அறிக்கை!

நடிகர் சத்தியராஜ் அவர்களின் பொறுப்புணர்ச்சிக்கும் - தமிழ் இன உணர்ச்சிக்கும் பாராட்டுகள்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
நடிகர் சத்தியராஜ் அவர்கள் பொறுப்புள்ள தமிழ்ச்சான்றோர் என்பதை நிலைநாட்டியுள்ளார். 

ஏராளமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட “பாகுபலி–2” திரைப்படத்தின், தயாரிப்பாளர், இயக்குநர், கலைஞர்கள், தொழில்நுட்பப் பிரிவினர் என அனைவரின் உழைப்பு, நிதிச்சுமை உள்ளிட்ட அனைத்தையும் உணர்ந்து திரு. சத்தியராஜ் அவர்கள் கன்னட மக்களிடம் தன் “வருத்தத்தை”த் தெரிவித்துள்ளார். 

அத்துடன் “தொடர்ந்து தமிழர் உரிமையின் பக்கம் நிற்பேன்” என்றும், திரு. சத்தியராஜ் உறுதிபடத் தெரிவித்துள்ளார். 

நம் அன்பு உடன்பிறப்பு சத்தியராஜ் அவர்களுக்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள்!

கன்னட இனவெறி காவிரி நீரை மட்டும் தடுக்கவில்லை, தமிழர்களின் பல்வேறு வாழ்வுரிமைகளையும் தடுக்கிறது என்பதைத் தமிழர்கள் புரிந்து கொண்டு செயல்படுவோம்!

இன்னணம், 
பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: tamizhdesiyam.com 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT