உடனடிச்செய்திகள்
Showing posts with label அறிக்கை. Show all posts
Showing posts with label அறிக்கை. Show all posts

Sunday, September 26, 2021

மோடி அரசுக்கு எதிராக நாளை நடைபெறும் அனைந்திந்திய முழு அடைப்பில் பங்கேற்போம்! ஐயா பெ. மணியரசன் அறிக்கை!



மோடி அரசுக்கு எதிராக நாளை நடைபெறும்  அனைந்திந்திய முழு அடைப்பில் பங்கேற்போம்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
பெ. மணியரசன் அறிக்கை!


உழவர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த மக்களுக்கும் பெரும் தீங்கிழைக்கும் வேளாண் சட்டங்களை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டுமெனக் கோரி, கடந்த 2020 ஆகத்து மாதம் தொடங்கி ஓராண்டைக் கடந்த நிலையிலும், புதுதில்லியில் பஞ்சாப் – அரியானா உழவர்கள் பெருந்திரளாக முற்றுகைப் போராட்டத்தை தற்போது வரை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். கடும் பனி – வெயில் – மழை எனப் பொருட்படுத்தாமல் தற்காலிகக் கூடாரங்களை அமைத்து, இரவு பகலாக அங்கேயே தங்கி உழவர்கள் நடத்திவரும் போராட்டத்தை உலகமே உற்று நோக்கி வருகின்றது. 

இந்நிலையில், மோடி அரசு புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், உழவர்களுக்கான இலவச மின்சாரத்தை பறிக்கும் மின்சார திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், 44 தொழிலாளர் நலச் சட்டங்களை 4 தொழிலாளர் சட்டத் தொகுப்பாக மாற்றித் தொழிலாளர் உரிமைப் பறிக்கும் சட்டங்களை இரத்து செய்ய வேண்டும், தனியார்மயம் – தாராளமயம் என்ற பெயரில் மக்களின் பொதுச் சொத்துகளை – இயற்கை வளங்களை பெருங்குழும நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கக் கூடாது, பெட்ரோல் டீசல் மற்றும் எரிவளி உருளை விலை ஏற்றத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, நாளை (27.09.2021) அனைத்திந்திய அளவில் முழு அடைப்புப் போராட்டத்தை நடத்த “அனைத்திந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு” அழைப்பு விடுத்துள்ளது. 

காங்கிரசு, தி.மு.க., கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள், ஆம் ஆத்மி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் இப்போராட்டத்தில் பங்கெடுக்கின்றன. தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், ஆந்திரா போன்ற மாநில அரசுகளும் இப்போராட்டத்தை ஆதரிக்கின்றன.  

தமிழ்த்தேசியப் பேரியக்கம் தொடர்ந்து காவிரி உரிமை மீட்புக் குழுவில் இணைந்து வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி வருகின்றது. அத்துடன் எதிர்க்கட்சிகளின் மேற்கண்ட கோரிக்கைகள் அனைத்தும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் கோரிக்கைகளும் ஆகும். எனவே,  நாளை (27.09.2021) நடைபெறும் முழு அடைப்பில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் பங்கெடுக்கிறது! தமிழ்த்தேசியர்களும், தமிழின உணர்வாளர்களும் இதில் பங்கெடுக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறது! 


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Wednesday, September 15, 2021

இந்திய அரசு நீட்டை நீக்கும் வரை தமிழ்நாடு ஒத்துழையாமை நடத்த வேண்டும்! ஐயா பெ.மணியரசன் அறிக்கை!



இந்திய அரசு நீட்டை நீக்கும் வரை
தமிழ்நாடு ஒத்துழையாமை நடத்த வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
 ஐயா பெ.மணியரசன் அறிக்கை!

தமிழ்நாட்டின் இளம் பிஞ்சுகளை, காவி அரசு காவு வாங்கிக் கொண்டுள்ளது. பிரஞ்சு நாட்டில் லூயி மன்னர்கள் கில்லட்டின் கொலைக் கருவியால் மக்கள் கழுத்தைக் கத்தரித்துக் கொலை செய்தார்கள். தமிழ்நாட்டிலோ நீட் தேர்வே கில்லட்டின் கொலைக் கருவி ஆகிவிட்டது.

சில நாட்களுக்கு முன் மேட்டூர் அருகே கூழையூரைச் சேர்ந்த மாணவர் தனுஷ், நேற்று (14.9.2021) அரியலூர் மாவட்டம் சாத்தாம்பாடியைச் சேர்ந்த  மாணவி கனிமொழி, இன்று (15.9.2021) காட்பாடி அருகே தலையாரம்பட்டு என்ற ஊரைச்  சேர்ந்த மாணவி செளந்தர்யா என்று வரிசையாக நம் தமிழ்ப் பிஞ்சுகளை நீட் பூதம் விழுங்குகிறது. நரேந்திர மோடியிலிருந்து தமிழ்நாட்டு அண்ணாமலை வரை உள்ள ஆரியத்துவா வாதிகளுக்கு இவ்வுயிர்ப் பறிப்புகள் அதிர்ச்சியை அளிக்காது. அவர்கள் பாரதமாதாவுக்குக் கொடுத்த இரத்தப்பலி என்று உள்ளூர உவப்பார்கள். ஆனால் நாம் அனிதா தொடங்கி அடுத்தடுத்து இதுவரை 16 பிள்ளைகளை நீட் பூதத்தின் வாயில் கொடுத்து விட்டு அன்றாடம் துடிக்கிறோம்! இந்த நீட் கொலைகள் தொடர அனுமதிக்கலாமா?

தமிழ்நாடு அரசு 13.9.2021 அன்று, தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வை நடத்தாமல் விலக்கு அளித்து, சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவை நிறைவேற்றியுள்ளது. பா.ச.க. தவிர மற்ற எல்லாக் கட்சிகளையும் சேர்ந்தோர் ஆதரித்து, இந்த முன்வடிவு நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் கடந்த காலங்களில் இதுபோல் சல்லிக்கட்டு உரிமைக்காகவும், நீட் தேர்வு விலக்குக்காகவும் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுகளின் கதி என்ன? தில்லிக் காலனி ஆதிக்க அரசின் குப்பைத் தொட்டிக்குத்தான் அவை போயின.

இந்த சட்ட முன்வடிவைத் தமிழ்நாடு ஆளுநருக்குத்தான் தமிழ்நாடு அரசு அனுப்ப வேண்டும். ஆளுநர், குடியரசுத் தலைவர்க்கு அனுப்பி வைப்பாராம், குடியரசுத் தலைவர் ஒன்றிய அமைச்சரவை ஆய்வுக்கு அனுப்பி வைப்பாராம். மோடி – அமித்சா வகையறா முடிவு செய்வார்களாம்.

ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியில் கூட இந்தக் கொடுமை இல்லை. அப்போது மாநில சட்டமன்றத்தின் வசம் கல்வி அதிகாரம் இருந்தது. “குடியரசு” என்று சொல்லிக் கொள்ளும் ஆரியக் குடிகளின் அரசில் கல்வி, மாநில சட்டப் பேரவை அதிகாரத்தில் இல்லை.

புதிய ஆளுநராக ஆர்.என்.இரவி 18.9.2021 அன்று தமிழ்நாட்டில் பதவி ஏற்கவுள்ளார். இந்தியக் காவல் துறையில் உளவுப் பிரிவு அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆர்.என்.இரவி. ஏற்கெனவே நாகாலாந்து ஆளுநராக இருந்து, அம்மாநில மக்களிடம் கெட்ட பெயர் வாங்கித் தமிழ்நாட்டுக்கு இடமாற்றம் பெற்று வருகிறார்.
 
கடந்த காலப் பட்டறிவுகளிலிருந்து தமிழ்நாட்டு ஆளுங்கட்சியும், நீட்டை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளும் புதிய உத்திகளை வகுத்து நீட் தேர்வு விலக்கு முன்வடிவுக்கு இந்திய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

புதிய ஆளுநர் பதவி ஏற்ற பின் இரண்டு நாள் அவகாசம் கொடுங்கள். ஒன்று அவர் கையொப்பம் இட்டு சட்டமாக அறிவிக்க வேண்டும். அல்லது கையொப்பமிட்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும்.

குடியரசுத் தலைவர் தமிழ்நாட்டு நீட் விலக்கு சட்ட முன்வடிவு தமக்கு வந்த மூன்று நாளில் கையொப்பமிட்டு சட்டமாக்க வேண்டும். 2017-இல் சல்லிக் கட்டு சட்ட முன்வடிவைச் சட்டமாக்கிடக் கோரி தமிழர்கள் மெரினாவிலும் மாவட்டங்களிலும் இலட்சம் இலட்சமாய்- இரவு பகலாய்த் தொடர் போராட்டம் நடத்திய போது அவசரம் அவரமாகக் குடியரசுத் தலைவர் கையொப்பம் வாங்கி, சட்டமாக்கினார்கள்.

மேற்கண்ட முறையில் தமிழ்நாடு ஆளுநரும் இந்திய ஆட்சியாளர்களும் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு வேண்டியதில்லை என்று விலக்களிக்கும் சட்ட முன்வடிவைச் சட்டமாக்கவில்லை என்றால் முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சிகள் கூடி, இந்திய அரசுக்கு எதிராக, சனநாயக வடிவில் ஒத்துழையாமைப் போராட்டம் நடத்த முடிவு செய்து நூற்றுக்கு நூறு செயல்படுத்த வேண்டும். அவ்வாறில்லாமல், சட்டமன்றத்தில் முன்வடிவு நிறைவேற்றியதோடு, தன் கடமை முடிந்து விட்டது என்று தி.மு.க. ஆட்சி ஒதுங்கிக் கொள்ளக் கூடாது. இதில், தி.மு.க.வைக் குறை கூறி மோடி ஆட்சிக்கு சேவை செய்யும் பணியில் அ.இ.அ.தி.மு.க. இறங்கக் கூடாது.

தமிழ்நாடு முதலமைச்சர், மற்ற மாநில முதல்வர்கள் மற்றும் கட்சிகள் ஆதரவை நீட்டுக்கு எதிராக ஒருங்கு திரட்ட முயல வேண்டும். தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகள், அனைத்து இயக்கங்கள், அமைப்புகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, நீட் விலக்கு சட்ட முன் வடிவுக்கு இந்திய அரசு ஒப்பம் அளிக்கும் வரையில், இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமைப் போராட்டம் நடத்த முடிவு செய்து செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Friday, August 6, 2021

உச்ச நீதிமன்ற புதிய தீர்ப்பின் அடிப்படையில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்! - ஐயா கி.வெங்கட்ராமன் வேண்டுகோள்!



உச்ச நீதிமன்ற புதிய தீர்ப்பின் அடிப்படையில்
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை 
விடுதலை செய்ய வேண்டும்! 

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் 
ஐயா கி.வெங்கட்ராமன் வேண்டுகோள்!


உச்ச நீதிமன்ற புதிய தீர்ப்பின் அடிப்படையில் எழுந்துள்ள புதிய வாய்ப்பை பயன்படுத்தி தமிழ்நாடு அரசு பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட்பயஸ், ரவிச்சந்திரன், செயக்குமார் ஆகிய ஏழு தமிழர்களை விடுதலை செய்ய புதிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

கடந்த 03.08.2021 அன்று உச்ச நீதிமன்றம் அரியான மாநில அரசு – எதிர் – இராசுகுமார் என்ற வழக்கில் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கிருக்கிறது.

“அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 கீழ் மாநில அரசு தண்டனைக் குறைப்பு வழங்க முழு அதிகாரம் கொண்டிருக்கிறது. ஆளுநரின் தனிப்பட்ட விருப்பு இங்கு செயல்பட முடியாது. தொடர்புடைய மாநில அரசின் பரிந்துரை ஆளுநரை கட்டுப்படுத்தும் அதிகாரம் படைத்தது. தண்டனைக் குறைப்பு குறித்து மாநில அமைச்சரவை பரிந்துரை அளிக்கும் போது ஆளுநர் அதற்கு கட்டுப்பட்டு கையெழுத்திட வேண்டும்” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏமந்த் குப்தா மற்றும் ஏ.எஸ்.கோபண்ணா ஆகியோர் வழங்கிய தீர்ப்பு உறுதிப்பட கூறுகிறது. 

இதற்கு முன்னர் மாருராம் – எதிர் – இந்திய ஒன்றிய அரசு என்ற வழக்கில் (1981, 1, SCC, 107) உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயம் “ஆளுநர் என்பவர் மாநில அரசின் சுருக்கெழுத்து வடிவம். அவர் மாநில அரசின் முடிவுக்கு கட்டுப்பட்டவர் ஆவார். ஒரு மாநில அரசு தண்டனைக் குறைப்பு ஆணையை ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் கூட நேரடியாக அறிவித்துவிடலாம் ஆயினும் பணி விதிகள் மற்றும் அரசமைப்புச் சட்ட இங்கிதம் காரணமாக அமைச்சரவையின் முடிவு ஆளுநரின் வழியாக செயலுக்கு வரவேண்டிருக்கிறது” என்று அரசமைப்பு ஆயம் கூறியிருப்பதை தங்களது முடிவுக்கு அடிப்படையாக நீதிபதிகள் ஏமந்த் குப்தாவும், ஏ.எஸ். கோபண்ணதாவும் மேற்கோள் காட்டுகிறார்கள்

அதுமட்டுமின்றி இந்திய ஒன்றிய அரசு – எதிர் – சிறிகரன் என்ற முருகன் எனும் ஏழு தமிழர் வழக்கில் (2016, 7, SCC, 1) உச்ச நீதிமன்றம் இதே போன்று கூறியிருப்பதையும் மேற்கோள் காட்டிய நீதிபதிகள் ஆளுநர் அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டு முன் விடுதலை வழங்குவது அவரது நீங்கா கடமை எனத் தெளிவுப்படுத்துகிறார்கள்.

இந்த புதிய சூழ்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக அமைச்சரவையை கூட்டி பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய முடிவு செய்து புதிய பரிந்துரையாக ஆளுநருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மாருராம் வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் முன் விடுதலை மற்றும் மன்னிப்பு வழங்கும் செயலில் உறுப்பு 72ன் படியான குடியரசுத் தலைவரின் அதிகாரமும் உறுப்பு 161ன் படியான ஆளுநரின் அதிகாரமும் ஒத்தவலு உள்ளவை, ஒரே நேரத்தில் செயல்பட கூடியவை என்று தெளிவுபட கூறியிருக்கின்றன. 

எனவே இச்சிக்கல் குறித்து தமிழ்நாடு அரசு குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருப்பதை ஒரு தடையாக கருதாமல் புதிய பரிந்துரையை உருவாக்கி அதனை ஆளுநருக்கு அனுப்பலாம். எந்த சட்டைத் தடையும் இல்லை.

எனவே தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக அமைச்சரவையை கூட்டி பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட்பயஸ், ரவிச்சந்திரன், செயக்குமார் ஆகிய ஏழு தமிழர்களை விடுதலை செய்வதற்கு உரிய பரிந்துரையை ஆளுநருக்கு உடனடியாக அனுப்பி ஏழு தமிழர் விடுதலைக்கு வலுவாக முயலவேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுகொள்கிறேன். 


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Sunday, August 1, 2021

மேக்கேதாட்டை எதிர்க்கும் பா.ச.க. - ஒப்புதல் வழங்கிய நீராற்றல் துறையை எதிர்க்குமா? - பெ. மணியரசன் கேள்வி!



மேக்கேதாட்டை எதிர்க்கும் பா.ச.க. - ஒப்புதல் வழங்கிய நீராற்றல் துறையை எதிர்க்குமா?

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கேள்வி!


“கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்; ஒரு செங்கல் வைக்கக் கூட விட மாட்டோம்; அங்கு அணை கட்டுவதை எதிர்த்துத் தஞ்சாவூரில் பா.ச.க. 05.08.2021 அன்று 10 ஆயிரம் பேருடன் உண்ணாப் போராட்டம் நடத்தும்” என்று பா.ச.க.வின் தமிழ்நாடு தலைவர் கே. அண்ணாமலை அறிவித்துள்ளார். 

மேக்கேதாட்டு அணை கட்டுவதில் கர்நாடக ஆளும் பா.ச.க.வும், தமிழ்நாட்டு பா.ச.க.வும் எதிர் எதிரான நிலை எடுத்திருப்பதன் மூலம், இந்தியா முழுமைக்கும் ஒரே இந்துத்துவா, ஒரே பண்பாடு, ஒரே அரசியல் கொள்கை, ஒரே மொழி என்று பேசி வந்த அதன் ஏகத்துவ நிலைபாடு தவறானது என்று அக்கட்சியே வெளிப்படுத்தி விட்டது. 

அடுத்து, தமிழ்நாடு பா.ச.க. உண்மையாகவே மேக்கேதாட்டு அணையை எதிர்க்கிறதா அல்லது தமிழ்நாட்டு உரிமைக்காக நிற்பது போல் நடிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. 

அண்ணாமலை உண்மையாகவே, மேக்கேதாட்டு அணையை எதிர்க்கிறார் என்றால், அவர் முதலில் எதிர்க்க வேண்டியது இந்திய அரசின் நீராற்றல் துறையைத்தான்! ஏனெனில், பா.ச.க. ஒன்றிய அரசின் நீராற்றல் துறை (ஜல்சக்தித் துறை)தான், கர்நாடக அரசிடம் மேக்கேதாட்டு அணையின் விரிவான திட்ட அறிக்கை (DPR – Detailed Project Report) தயாரித்து அனுப்புமாறு 24.10.2018 அன்று கர்நாடகத்திற்கு அனுமதி அளித்தது. அந்த விரிவான திட்ட அறிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் முன்வைத்து அதற்கு ஒப்புதல் பெறுமாறு அறிவுறுத்தி, அதனை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு 20.01.2019 அன்று அனுப்பியும் வைத்தது. 

இந்த உண்மைகளை ஒன்றிய நீராற்றல் துறை அமைச்சர் கசேந்திர சிங் செகாவாத் பா.ம.க.வின் இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாசு அவர்கள், நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பிய வினாவுக்கு 26.07.2021 அன்று அளித்த விடையில் கூறியுள்ளார். 

தமிழ்நாடு அரசு மேக்கேதாட்டு அணைத் திட்டத்திற்குத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ள நிலையில், தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் பல தடவை ஒருமித்து, அந்த அணைத் திட்டத்தை எதிர்த்துத் தீர்மானம் போட்டுள்ள நிலையில் – இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்தறை அந்த அணைக்கு அனுமதி தராத நிலையில் – பா.ச.க. ஒன்றிய அரசின் நீராற்றல் துறை அந்த அணைக்கான அனுமதியை மேற்கண்டவாறு வழங்கியுள்ளது. 

தமிழ்நாடு பா.ச.க.வும் அதன் தலைவர் அண்ணாமலையும் மேக்கேதாட்டு அணையை அரசியல் நாடகமாக அல்லாமல் உண்மையாக எதிர்க்கிறார்கள் என்றால், அந்த அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு நீராற்றல் துறை கொடுத்த அனுமதியை இரத்துச் செய்து, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அது அனுப்பி வைத்த அறிக்கையை திரும்பப் பெற்று, அதைக் கர்நாடக அரசுக்குத் திருப்பி அனுப்பிவிட வேண்டும். இக்கோரிக்கையை இந்திய நீராற்றல் துறைக்கு பா.ச.க. தலைவர் கே. அண்ணாமலை முன்வைக்க வேண்டும். 

கர்நாடக அரசைக் கண்டிப்பதுடன், ஒன்றிய நீராற்றல் துறையையும் கண்டித்து கே. அ்ண்ணாமலை உண்ணாப் போராட்டம் நடத்தினால் அதுவே உண்மையான போராட்டமாகும். கர்நாடக அரசை மட்டும் கண்டித்து உண்ணாப் போராட்டம் நடத்தினால் கட்சி வளர்ப்பதற்காக தமிழ்நாடு பா.ச.க. நடத்தும் நாடகம் என்றே தமிழ் மக்கள் புரிந்து கொள்வார்கள். 


செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
பேச: 98419 49462, 94432 74002

Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com

Wednesday, July 28, 2021

மேக்கேதாட்டு அணைகட்ட மோடி அரசின் முன்னெடுப்புகள்! ஒன்றிய அமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலம்! பெ. மணியரசன் அறிக்கை!



மேக்கேதாட்டு அணைகட்ட மோடி அரசின் முன்னெடுப்புகள்! ஒன்றிய அமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலம்!

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்
பெ. மணியரசன் அறிக்கை!


கர்நாடகம் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணைகட்டுவதற்குரிய முன் ஒப்புதல்களை இந்திய அரசு கொடுத்து விட்டது என்ற உண்மை 26.07.2021 அன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒன்றிய அரசின் நீராற்றல் துறை அமைச்சர் கசேந்திர சிங் செகாவாத் கூறியதிலிருந்து தெரிய வருகிறது. பா.ம.க.வின் இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் மேக்கேத்தாட்டு அணை குறித்து கேட்ட வினாவுக்கு விடை அளித்த ஒன்றிய அமைச்சர் செகாவாத் கூறிய செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

இதோ அமைச்சரின் கூற்று:

“மேக்கேத்தாட்டில் அணைகட்டுவதற்கு கர்நாடக அரசு அனுமதி கோரியதை அடுத்து இந்திய அரசின் நீராற்றல் ஆணையத்தின் (CWC) ஆய்வுக்குழு (Screening Committee) 24.10.2018 அன்று அணைக்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரித்து அனுப்புமாறு அனுமதி அளித்தது. அதற்கான சில நிபந்தனைகளையும் ஆய்வுக்குழு விதித்தது. கர்நாடக அரசு 20.01.2019 அன்று விரிவான திட்ட அறிக்கையை (DPR) நடுவண் நீராற்றல் ஆணையத்திடம் அளித்தது. அந்த விரிவான திட்ட அறிக்கையை உடனடியாக நடுவண் நீராற்றல் துறை காவிரி ஆற்று நீர் மேலாண்மை ஆணையத்திற்கு (CWMA) அனுப்பி தொடர்புடைய மாநிலங்களின் ஒப்புதலைப் பெறுமாறு கோரியது”. தமிழ்நாட்டின் தொடர் எதிர்ப்பைச் சட்டை செய்யாமல் மேக்கேத்தாட்டிற்கு அனுமதி அளிக்கும் வேலைகளை இந்திய அரசு பார்த்து வந்துள்ளது என்பதற்கு இது சான்று!

மேக்கேதாட்டில் கர்நாடகம் அணை கட்டினால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்குக் கர்நாடகத்திலிருந்து திறக்க வேண்டிய தண்ணீரை மட்டுமின்றி அம்மாநில அணைகளிலிருந்து மிகையாக வெளியேறும் காவிரி வெள்ள நீரையும் தேக்கிக் கொள்வார்கள் என்று கூறி தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டுக் கட்சிகளும் அத்திட்டத்தைத் தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளன.

மேக்கேத்தாட்டு அணைத்திட்டத்தைத் தடுக்குமாறு இந்திய அரசை வலியுறுத்தி 05.12.2014, 27.03.2015 ஆகிய நாட்களில் தமிழ்நாடு சட்டப் பேரவை ஒரு மனதாகத் தீர்மானங்கள் நிறைவேற்றி இந்தியத் தலைமை அமைச்சருக்கு அனுப்பியுள்ளது. உழவர் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் மேக்கேத்தாட்டு அணையை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்தியுள்ளன.

2018 செப்டம்பர் 4 ஆம் நாள் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமை அமைச்சர் மோடிக்கு கடிதம் எழுதி மேக்கேதாட்டு அணைத்திட்டம் உச்ச நீதிமன்றம் 16.02.2018 அன்று வழங்கிய காவிரித் தீர்ப்புக்கு எதிரானது என்று சுட்டிக் காட்டியுள்ளார். அந்த மடலில், கர்நாடக அரசு தயாரித்துள்ள மேக்கேதாட்டு அணைக்கான சாத்தியக் கூறு அறிக்கையை (Feasibility Report) நடுவண் நீராற்றல் துறை ஏற்கக் கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி கோரியுள்ளார்.

தமிழ்நாட்டின் இத்தனை எதிர்ப்புகளையும் இடது கையால் புறந்தள்ளி விட்டு, முதல் கட்ட சாத்தியக்கூறு அறிக்கையை ஏற்றுக் கொண்டு, அடுத்த கட்டமாக விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரித்து அனுப்புமாறு கோரிப் பெற்றுள்ளது ஒன்றிய அரசின் நீர் ஆற்றல் துறை!

அதுமட்டுமின்றி, அந்த விரிவான திட்ட அறிக்கையைச் செயல்படுத்தும் வழிமுறையாக உடனடியாக, அதனை 20.01.2019 அன்று காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பி தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்களின் ஒப்புதலைப் பெறக் கோரியுள்ளது.

இவை அனைத்திற்குமான ஒப்புதல் வாக்குமூலத்தை மாநிலங்களவையில் அளித்துள்ளார் மோடி அரசின் நீராற்றல் துறை அமைச்சர் கசேந்திர சிங் செகாவாத்! மோடி – அமித்சா ஒப்புதல் இல்லாமல் இவை அனைத்தும் நடந்திருக்காது. 

இதே கசேந்திர சிங் செகாவாத்தை அண்மையில் புதுதில்லியில் 06.07.2021 அன்று தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் சந்தித்து மேக்கேதாட்டு அணையை அனுமதிக்கக் கூடாது என்று மனுக் கொடுத்தார். வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசியத் துரைமுருகன் “நீராற்றல் துறை அமைச்சர் கொடுத்த உறுதிமொழி திருப்தி அளிக்கிறது வெற்றி” என்று கூறினார். அதே இடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ அவர்கள் “பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்பது போல் ஒன்றிய அமைச்சர் பேச்சு இருக்கிறது” என்றார்.

துரைமுருகன் தலைமையிலான் குழு புதுதில்லியில் மனுக் கொடுப்பதற்கு முன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 18.06.2021 அன்று புதுதில்லியில் தலைமை அமைச்சர் மோடியைச் சந்தித்து மேக்கேதாட்டுக்கு அனுமதிக் கொடுக்கக் கூடாது என்று மனு கொடுத்தார்.

இத்தனைக்கும் பின் எல்லாவற்றையும் ஒன்றுமில்லை என்று போட்டு உடைத்து விட்டார் கசேந்திர சிங் செகாவாத். கர்நாடகத்திற்கு மேக்கேதாட்டு அணைகட்ட அனுமதி கொடுக்கும் வழிமுறைகளைக் கையாண்டு வருகிறோம் என்று கூறிவிட்டார்.

கடந்த காலங்களில் காங்கிரசு ஒன்றிய அரசு, கர்நாடகம் சட்ட விரோதமாக ஏமாவதி, ஏரங்கி, கபினி, சுவர்ணவதி அணைகள் கட்ட அனுமதித்தது. அதே ஓரவஞ்சனையில் இப்போது மேக்கேத்தாட்டு அணையைக் கட்டி முடிக்கக் கர்நாடகத்திற்கு பா.ச.க. அரசு துணை செய்கிறது.

கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் ஏமாவதி, ஏரங்கி, கபினி, சுவர்ணவதி சட்டவிரோத அணைகள் கட்டப்பட்டன. அதே பாணியில் இப்போதும் தமிழ்நாட்டை தி.மு.க. அரசு ஏமாற்றக் கூடாது. தமிழ்நாட்டு மக்களும் ஏமாறக் கூடாது. 

மேற்கண்டவாறு மோடி அரசு மேக்கேதாட்டு அணைகட்ட ஒவ்வொரு கட்டத்திலும் முன்னெடுப்புச் செய்த போதெல்லாம் எடப்பாடி அரசு அதை எதிர்க்கவில்லை என்பதையும் தமிழ்நாட்டு மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், மேக்கேதாட்டு அணைகட்ட அனுமதி கொடுக்காத நிலையில் அதே அரசின் இன்னொரு பிரிவான நீராற்றல் துறை இவ்வளவு வேகமாக அந்த அணைக்கு அனுமதி கொடுத்து செயல்படுவது எப்படி?

காவிரி நீர் வரவில்லை என்றால் 22 மாவட்டங்களுக்கு தமிழ்நாட்டில் குடிநீர் இல்லை; 15 மாவட்டங்களில் பாசனம் இல்லை என வெகுண்டெழுந்து வெகுமக்கள் போராடி மேக்கேத்தாட்டு அணையைத் தடுக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு, அனைத்துக் கட்சிகள் மற்றும் உழவர் அமைப்புகளின் கூட்டத்தைக் கூட்டி காவிரிக் காப்பு போராட்ட நாள் என ஒரு நாளை வரையறுத்து ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் பேரணிகள் - ஆர்ப்பாட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். உடனடித் தடை ஆணை பெற உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.       


செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
பேச: 98419 49462, 94432 74002

Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com

Tuesday, June 8, 2021

முதல்வர் மு.க. ஸ்டாலின் மடலில் ஒன்றியமும் தேசமும் - பெ. மணியரசன்



முதல்வர் மு.க. ஸ்டாலின் 
மடலில் ஒன்றியமும் தேசமும்

பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், பெருந்தொற்று இரண்டாவது அலையின் பாதிப்பு அதிகமாக இருப்பதால், சிறு – குறு – நடுத்தரத் தொழில் முனைவோரும், சிறு கடனாளர்களும் தங்கள் தொழில் வளர்ச்சிக்கு வாங்கிய ஐந்து கோடி ரூபாய் வரை பாக்கியுள்ள கடன் தவணைகளில் நடப்பு நிதியாண்டில் (2021 – 2022) முதல் இரு காலாண்டுகளில் செலுத்த வேண்டிய தொகைகளைச் செலுத்தாமல் தள்ளி வைக்க இந்திய அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார். 

இதே கோரிக்கையை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதலமைச்சர்களும் இந்திய அரசுக்கு அனுப்புமாறு கேட்டு, ஆந்திரப்பிரதேசம், பீகார், சத்தீசுகட், டெல்லி, ஜார்கண்ட், கேரளம், மகாராட்டிரம், ஒடிசா, பஞ்சாப், இராசஸ்தான், தெலங்கானா, மேற்கு வங்காளம் ஆகிய 12 மாநில முதலமைச்சர்களுக்கும் தமிழ்நாடு முதல்வர் வேண்டுகோள் மடல் எழுதியுள்ளார். 

இம்மடலில் மு.க. ஸ்டாலின் இந்திய அரசு, ஒன்றிய அரசு என்ற சரியான சொற்களைப் பயன்படுத்தியுள்ளார். நடுவண் அரசு (மத்திய அரசு) என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை!

ஆனால், இச்செய்தியை 09.06.2021 அன்று வெளியிட்ட ஆங்கில மற்றும் தமிழ் நாளேடுகள் மத்திய அரசு என்ற சொல்லையே பெரும்பாலும் பயன்படுத்தின. 

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ளபடி ஒன்றிய அரசு என்றோ, அல்லது இந்திய அரசு என்றோ பயன்படுத்துவது சட்டப்படியான வடிவமாக இருந்தாலும் அவற்றைத் தவிர்த்து, ஒற்றையாட்சிக்குரிய “மத்திய அரசு” என்ற சொல்லைப் பயன்படுத்தியது  சரியன்று.  

காட்சி ஊடகங்களும், ஏடுகளும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பயன்படுத்திய ஒன்றிய அரசு, இந்திய அரசு என்ற சொற்களைப் பயன்படுத்தாமல் தவிர்ப்பது இதழியல் அறமாகாது! 

முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கட்கு ஓரு வேண்டுகோள்

நீங்கள் 12 முதலமைச்சர்களுக்கு எழுதிய மடலில் ஒன்றிய அரசு – இந்திய அரசு என்று பயன்படுத்திய சிறப்பிற்குப் பாராட்டுகள். அதேவேளை, அதே மடலில் “அனைத்திந்திய முடக்கம்” (All India Lockdown) என்று சொல்ல வந்த இடத்தில் “தேசம் தழுவிய முடக்கம்” (Nationwide Lockdown) என்று குறிப்பிட்டுள்ளீர்கள். நீண்டகாலப் பழக்கத்தின் காரணமாக இக்குறைபாடு வந்திருக்கலாம். 

இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியாவைத் தேசம் (Nation) என்று குறிப்பிடவில்லை. இதுபோன்ற “தேசந்தழுவிய” (Nationwide) என்ற சொற்களைப் பயன்படுத்தாமலும் தவிர்க்க வேண்டுமாய்க் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன். 

அடுத்து, தங்களின் இம்மடலை வெளியிட்ட தமிழ்நாடு அரசின் செய்தித் தொடர்புத் துறையினர் ஆங்கிலத்தில் தங்கள் கடிதத்தை அப்படியே போட்டுள்ளனர். ஆனால் தமிழில், கடித விவரங்களைச் சுருக்கமாக அவர்கள் நடையில் எழுதி வெளியிட்டுள்ளனர். தமிழிலும் அசல் மடலை அப்படியே வெளியிடுவதே, தமிழை ஆட்சிமொழியாக ஏற்றுக் கொண்ட அரசின் கட்டாயக் கடமை என்பதையும் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். 


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Sunday, June 6, 2021

+2 தேர்வு கைவிடப்பட்டிருப்பது தவறான முடிவு! - தோழர் கி. வெங்கட்ராமன் கருத்து!



+2 தேர்வு கைவிடப்பட்டிருப்பது
 தவறான முடிவு!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் 
செயலாளர் கி. வெங்கட்ராமன் கருத்து


மேல்நிலை வகுப்பு – (+2) இறுதித் தேர்வு இந்த ஆண்டுக்கு கைவிடபட்டிருப்பது தவறான முடிவாகும். 

கொரோனா தொற்று இரண்டாம் அலை கடுமையாக இருக்கும் சூழலில் +2 தேர்வு உடனடியாக நடத்தமுடியாது என்ற முடிவு சரியே. ஆனால் இரண்டு, மூன்று மாதங்கள் கழித்து வினாக்களை எளிமையாகவும் குறைவான எண்ணிக்கையிலும் அமைத்து 1.30 மணி நேரத் தேர்வாக நடத்த முடிவெடுத்திருக்க வேண்டும்.

இறுதித் தேர்வு கைவிடப்பட்ட நிலையில் எவ்வாறு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து முடிவு செய்ய வல்லுநர் குழு அமைப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

இணைய வழி வகுப்புகளும், இணைய வழி இடைத் தேர்வுகளும்  அரை குறையாக – குழப்பமாக நடந்துள்ள சூழலில் அதை அடிப்படையாக வைத்து மாணவர்களின் இறுதி மதிப்பெண் முடிவு செய்யப்படுமானால் அது கிராமப்புற மாணவர்களையும், பிற்படுத்தபட்ட, தாழ்த்தப்பட்ட சமூத்தைச் சார்ந்த மாணவர்களையும் கடுமையாக பாதிக்கும்.

இன்னொரு புறம் இந்திய அரசு மருத்துவம் உள்ளிட்ட உயர் நிலை கல்விக்கு நீட் தேர்வு நடத்துவதில் பிடிவாதமாக இருக்கிறது. ஏற்கெனவே நீட் தேர்வுக்கு அமர்ந்தவர்களில் கணிசமானவர்கள் இரண்டு ஆண்டுகளும் அதற்கு மேலாகவும் நீட் தேர்வு பயிற்சி மையங்களில் பயிற்சி எடுத்து கொண்ட பழைய மாணவர்களாகும்.

இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியத் தலைமை அமைச்சர்க்கு விடுத்துள்ள வேண்டுகோளில் இந்த ஆண்டு நீட் தேர்வு நடத்த வேண்டாம் என கேட்டுகொண்டிருப்பது. எந்த அளவிற்கு பயன்விளைக்கும் என்பது கேள்விக்குறியே.

இது போதாதென்று கல்லூரி கல்விக்கும், அனைத்திந்திய நுழைவு தேர்வுகள் அச்சுறுத்தி கொண்டிருக்கிறன. இவ்வாறான நிலைமைகளையெல்லாம் கருத்தில் கொண்டால்  இரண்டு மூன்று மாதங்கள் கழித்து +2 தேர்வை எளிமையான முறையில் நடத்துவதே சரி என்ற முடிவுக்கு வர முடியும்.

எனவே தமிழ்நாடு அரசு தமது முடிவை மறு ஆய்வு செய்து மூன்று மாதங்கள் கழித்து +2 இறுதித் தேர்வை உரிய பாதுகாப்புடன் நடத்த முன்வரவேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Thursday, June 3, 2021

கல்விக் கட்டண பாக்கிக்காகத் தனியார் பொறியியல் கல்லூரிகள் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைப்பதை முதலமைச்சர் தடுக்க வேண்டும்! - பெ. மணியரசன் வேண்டுகோள்!



கல்விக் கட்டண பாக்கிக்காகத் தனியார் பொறியியல் கல்லூரிகள் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைப்பதை முதலமைச்சர் தடுக்க வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
 பெ. மணியரசன் வேண்டுகோள்!

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகள், கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களின் தேர்வு முடிவுகளை அறிவிக்காமல் நிறுத்திவைத்துள்ளன. அதே வேளை கட்டணம் செலுத்திய மாணவர்களின் தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளன. அத்துடன் உங்கள் பெற்றோர்களிடம் சொல்லி உடனே கட்டணம் செலுத்துங்கள் என்று அக்கல்லூரி நிர்வாகங்கள் அறிவுறுத்தல்கள் அனுப்பியுள்ளன.

தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் இவ்வாறு  கல்விக் கட்டண பாக்கிக்காக தேர்வு முடிவுகளை தெரிவிக்காமல் நிறுத்திவைத்தது, அனைத்திந்திய தொழில் நுட்பக் கல்வி குழு (AICTE)-வின் வழிகாட்டலுக்கு எதிரான செயல் ஆகும். கொரோனா பெருந்தொற்று முடக்கக் காலத்தில் பொறியியல் கல்லூரிகள் கல்விக் கட்டணம் செலுத்த மாணவர்களை கட்டாயப்படுத்த கூடாது என்றும், கட்டணம் செலுத்த வில்லை என்பதற்காக அவர்களைப் பழிவாங்கக் கூடாது என்றும் அனைதிந்திய தொழில் நுட்பக் கல்விக் குழு ஏற்கெனவே எச்சரித்துள்ளது. 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் இது குறித்து புகார் அனுப்பி தங்கள் பிள்ளைகளின் தேர்வு முடிவுகளை வெளியிட ஏற்படு செய்யுமாறு கோரியுள்ளனர். 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் தலையிட்டு தேர்வு முடிவு நிறுத்திவைக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு அம்முடிவுகள் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும். கிராமப்புற மற்றும் நகர்புறங்களைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் சொத்து, வருமானம் போன்ற எவ்வகை நிபந்தனையும் இல்லாமல் இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் வங்கிகள் மூலம் கல்விக் கடன் கிடைக்க முதலமைச்சர் அவர்கள் ஏற்பாடு செய்தால், அதைக்கொண்டு மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்த வாய்ப்பு ஏற்படும்.  மேலும் வழக்கமான கல்விக் கட்டணத்தில் பெருமளவு குறைத்துக்கொண்டு பொறியியல் கல்லூரிகள் வசூலிக்கும் ஏற்பாட்டையும் முதலமைச்சர் அவர்கள் செய்து தர வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியகத்தின் சார்பில் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன். 


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


உழவர் முன்னணி பொதுச்செயலாளர் தூருவாசனைக் கொள்ளைநோய் கொண்டு சென்றுவிட்டது! - தோழர் கி. வெங்கட்ராமன் இரங்கல்!



உழவர் முன்னணி பொதுச்செயலாளர் தூருவாசனைக் கொள்ளைநோய் கொண்டு சென்றுவிட்டது!

தமிழ்த்தேசியப் பேரியக்கப்  பொதுச்செயலாளர்
 தோழர் கி. வெங்கட்ராமன் இரங்கல்!


துயரம், பெருந்துயரம்! தமிழக உழவர் முன்னணியின் பொதுச்செயலாளர் – தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் தூருவாசனை கொரோனா கொள்ளை நோய் கொண்டுபோய்விட்டது! 

கோவிட் – 19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட தோழர் தூருவாசன், முதலில் கிருஷ்ணகிரியில் ஒரு தனியார் மருத்துவமனையிலும், பின்னர் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைப் பெற்றார். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக, பெருந் தொற்றோடு போராடினார். கடைசியில் இன்று (03.06.2021) காலை அந்தக் கொள்ளை நோய் அவரை மாய்த்துவிட்டது! 

தோழர் தூருவாசனுக்கு அகவை 39. அவருக்கு வள்ளியம்மாள் என்ற மனைவியும், பிரவீன் – கீதா என்ற இரண்டு பிள்ளைகளும் இருக்கிறார்கள். 

கிருஷ்ணகிரி மாவட்டம் – இராயக்கோட்டை வட்டம் பிள்ளாரி அக்ரகாரம் என்ற சிற்றூரைச் சேர்ந்த தோழர் தூருவாசன், பழகுவதற்கு இனிமையான தோழர். அதேநேரம், அநீதிக்கு எதிராக வெகுண்டெழுந்து போராடும் போர்க்குணத்தை இயல்பிலேயே பெற்றவர். அழுத்தமான அமைப்பாளர். இவரைப்போல், பன்முக ஆற்றல் பெற்ற மக்கள் செயல்பாட்டாளர் கிடைப்பது அரிது! 

தமிழக உழவர் முன்னணியை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வலுவாக அமைத்து, தருமபுரி மாவட்டத்திலும் அதை விரிவாக்கியதில் முதன்மைப் பங்காற்றியவர் தோழர் தூருவாசன். அம்மாவட்டங்களில் முக்கியச் சிக்கலான கெயில் குழாய்ப் பதிப்பை எதிர்த்து, பெருந்திரள் உழவர்களைத் திரட்டி பலமுறை போராட்டங்களுக்குத் தலைமை தாங்கி நடத்தியவர். களத்திற்கு நேரடியாகச் சென்று எந்தக் கிராமத்தில் கெயில் குழாய் விளைநிலத்தில் பதிக்க முன்வந்தாலோ – முயன்றாலோ அதை அங்கேயே தடுத்து நிறுத்தி, வரும் அதிகாரிகளை முற்றுகையிட்டு உழவர்களின் நிலத்தைப் பாதுகாத்துத் தருவதில் முக்கியமான வழிகாட்டியாகத் திகழ்ந்தார். 

அவ்வாறான போராட்டக் களங்களில்கூட உயர் அதிகாரிகளிடம் வாதாடும்போது அமைதியான – ஆழமான ஞாயங்களை முன்வைத்து உழவர்களின் வாழ்வுரிமையின் அடிப்படைத் தேவையை அவர்களே உணருமாறுச் செய்தவர். 
பல நூறு ஏக்கர் நிலத்திற்குப் பாசன வசதியையும், பல கிராமங்களுக்குக் குடி தண்ணீர் தேவையையும் நிறைவு செய்யும் தென்பெண்ணைக் கிளைவாய்க்கால் திட்டத்தை வலியுறுத்தி கிராமம் கிராமமாக உழவர்களைத் திரட்டி, இடைவிடாத போராட்டங்களை தமிழக உழவர் முன்னணி நடத்தியது. அப்போராட்டங்கள் அனைத்திலும் முதன்மைத் தளபதியாக தூருவாசன் திகழ்ந்தார். அந்த உழவர் போராட்டத்தின் அழுத்தம் காரணமாக முந்தைய அண்ணா தி.மு.க. அரசு, வேறு வழியின்றி தென்பெண்ணைக் கிளைவாய்க்கால் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து, அத்திட்டச் செயல்பாடுகள் தொடங்கிவிட்டன. 

கார்நாடக அரசின் மேக்கேத்தாட்டு அணைத் திட்டத்தை எதிர்த்து காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் 2015இல் தேன்கனிக்கோட்டையில் நடைபெற்ற பெருந்திரள் முற்றுகைப் போராட்டத்தில், களப்பணிகளை ஒருங்கிணைத்து நடத்தியதில் தூருவாசன் முகாமையானப் பணியாற்றினார். கிருஷ்ணகிரி மாவட்ட தமிழக உழவர் முன்னணி சார்பில் வந்திருந்த உழவர்கள் அனைவரையும் வரவேற்று உபசரித்ததில் ஓசூர் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களோடு இணைந்து சிறப்பான பணியாற்றினார். 

தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தழுவிய போராட்டங்கள் அனைத்திலும் தோழர் தூருவாசனின் பங்களிப்பு சிறப்பானது! இராயக்கோட்டை பகுதியிலிருந்து கடும் பொருளியல் நெருக்கடிகளுக்கிடையில் உழவர்களையும், மக்களையும் திரட்டி, அவர்களிடத்திலேயே நிதியையும் திரட்டி பெரும் எண்ணிக்கையில் ஊர்திகளில் அழைத்து வந்து, அப்போராட்டங்களில் தனது பங்களிப்பைச் செய்ய தூருவாசன் தவறியதில்லை! 

“பிரவீன் கீதா” என்ற தனது முகநூல் பக்கத்தின் வழியாக, உழவர் சிக்கல்கள் குறித்து கருத்துத் தெரிவிப்பதிலும், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் கொள்கைப் பரப்புரையை முன்னெடுத்துச் செல்வதிலும் சிறப்பான பங்காற்றினார் தோழர் தூருவாசன். 

இயற்கையில் சிறுசிறு மாறுபாடுகள் கூட மலர் சாகுபடி செய்பவர்களுக்கு மிகப்பெரிய சேதத்தை உண்டாக்கிவிடும். மலர் சாகுபடி உழவரான தோழர் தூருவாசன், இந்த சிக்கலான நிலைமையில் கூட தன்னலம் துறந்து மக்கள் பணியாற்றியது பெரிய – அரிய செயலாகும்! அவரது இறப்பு – தமிழ்த்தேசியப் பேரியக்கத்திற்கும், தமிழக உழவர் இயக்கத்திற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்! 

மறைந்த தோழர் தூருவாசனுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பிலும், தமிழக உழவர் முன்னணி சார்பிலும் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  

அவரை இழந்து வாடும் அவரது மனைவி வள்ளியம்மாள், குழந்தைகள் பிரவீன் மற்றும் கீதா உள்ளிட்ட அவர்தம் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்ல சொற்களே இல்லை! அவர்கள் குடும்பத்தாருக்கு நமது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். 


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Friday, February 5, 2021

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலையில் தமிழ்நாடு முதலமைச்சர் உண்மையை உரைக்க வேண்டும்! ஐயா கி. வெங்கட்ராமன்


பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலையில் தமிழ்நாடு முதலமைச்சர் உண்மையை உரைக்க வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் 
ஐயா கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்!


தனது சட்டக் கடமையை முற்றிலும் மீறி ஏழு தமிழர் விடுதலை குறித்து தான் முடிவெடுக்க முடியாது என்றும், குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க முடியும் என்றும் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

உச்ச நீதிமன்றத்தில் தனது முன்விடுதலை கோரி பேரறிவாளன் தொடுத்த வழக்கில், நீதிபதி நாகேசுவரராவ் தலைமையிலான அமர்வு, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் முன்விடுதலை தொடர்பாக தமிழ்நாடு அமைச்சரவை அளித்த பரிந்துரையின் மீது இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பது அதிருப்தி அளிப்பதாக தனது கண்டனத்தை வெளிப்படையாகப் பதிவு செய்தது.

இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசு வழக்குரைஞர், ஆளுநர் மூன்று நாட்களில் இதுகுறித்து முடிவெடுப்பார் என்று முதலிலும், அடுத்த நாள் ஒருவாரத்தில் முடிவெடுப்பார் என்றும் பதிலுரை தாக்கல் செய்தது.

இந்நிலையில், 2021 சனவரி 25ஆம் நாளிட்ட தனது கடிதத்தின் வழியாக ஆளுநர் “இதுகுறித்து, தான் முடிவெடுக்க முடியாது. தொடர்புடைய அதிகாரமுள்ளவர் குடியரசுத் தலைவர்தான்” என்று தெரிவித்துவிட்டதாக நேற்று (04.02.2021) உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசு வழக்குரைஞர் பதிலுரை அளித்திருக்கிறார்.

அரசமைப்புச் சட்ட உறுப்பு 163-இன்படி, ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்பட்டவர் ஆவார். அவருக்கு எந்தத் தனிப்பட்ட விருப்பு அதிகாரமும் கிடையாது. இந்த நிலையில், ஆளுநர் புரோக்கித்தின் இந்த முடிவு முற்றிலும் சட்டத்திற்குப் புறம்பான செயலாகும்! தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆளுநர் பதவியில் இருப்பதற்கே உள்ள தகுதியை இழந்துவிட்டார்.

ஏழு தமிழர் விடுதலை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியபோது, சட்டமன்றத்தில் பதிலுரைத்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தான் கடந்த 2021 சனவரி 29 அன்று ஆளுநரை சந்தித்து ஏழு தமிழர் விடுதலை குறித்து வலியுறுத்தியதாகவும், இதுகுறித்து ஆளுநர் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் என்றும் தேவையில்லாமல் எதிர்க்கட்சியினர் பிரச்சினை செய்கிறார்கள் என்றும் கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநரை சந்தித்தது சனவரி 29ஆம் நாள். ஆனால், ஆளுநரோ சனவரி 25ஆம் நாளே ஏழு தமிழர் விடுதலையை மறுத்து, தனது பதிலுரையை அளித்திருக்கிறார். நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணமும் அதை உறுதி செய்கிறது.

அப்படியானால், சனவரி 29 அன்று தன்னை சந்தித்த முதலமைச்சரிடம் ஆளுநர் இந்த உண்மையை மறைத்திருக்கிறாரா? அல்லது ஆளுநர் இந்த உண்மையைச் சொன்ன பிறகும் சட்டமன்றத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பொய் சொல்லியிருக்கிறாரா என்பது நாட்டு மக்களுக்குத் தெரிய வேண்டும்!

இச்சிக்கலில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரட்டை வேடம் போடுகிறார் என்பதை தொடர்ந்து கூறிவருகிறோம். பேரறிவாளன் தொடர்பான பரோல் வழக்கிலேகூட, அவரை சிறை விடுப்பில் விடக்கூடாது என்று தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் கடுமையாக வாதிட்டது. அதனைப் புறக்கணித்து, உயர் நீதிமன்றம் பேரறிவாளனுக்கு சிறைவிடுப்பு வழங்கியது. எடப்பாடி பழனிச்சாமி அரசின் அணுகுமுறைக்கு இது சான்று கூறுகிறது!

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் இதுகுறித்து இப்போதாவது உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டும்.

ஆளுநரின் அப்பட்டமான இந்த சட்டமீறல் அவரது தமிழினப் பகைப் போக்கை வெளிப்படுத்துகிறது.

இந்நிலையில், ஏற்கெனவே அன்றைய தலைமை நீதிபதி தத்து தலைமையிலான உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயம் 2015ஆம் ஆண்டு திசம்பரில் உறுப்பு 161இன்படி, மாநில அமைச்சரவை பரிந்துரை பெற்று ஆளுநர் இராசீவ்காந்தி வழக்கில் சிறையிலுள்ள ஏழு தமிழர்களை விடுதலை செய்ய எந்தத் தடையும் இல்லை என உறுதிப்படுத்தியுள்ள சூழலில், உச்ச நீதிமன்றம் அரசமைப்பு உறுப்பு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும், மற்ற ஆறு பேரையும் விடுதலை செய்ய வழி ஏற்படுத்த வேண்டும்.

இந்திய அரசு தனது தமிழினப் பகை நோக்கை செயல்படுத்துவதற்காக எந்தளவுக்கு சட்ட மீறலில் ஈடுபடும் என்பதையும், தமிழ்நாடு அரசு பா.ச.க. அரசோடு தனக்குள்ள கீழ்நிலை உறவுக்காக தமிழர் உரிமையை மட்டுமின்றி, தனது அமைச்சரவைக்கு உள்ள சட்ட உரிமையை பலியிடும் என்பதையும் தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இச்சிக்கலில் நடந்த உண்மை என்ன என்பது பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விளக்க வேண்டுமென்றும், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலைக்கு உண்மையாக செயல்பட வேண்டுமென்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்துகிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 


Wednesday, February 3, 2021

என்.எல்.சி. நிறுவனம் - தமிழர்களைப் புறக்கணிக்கும் பட்டதாரிப் பொறியாளர் நேர்முகத் தேர்வை இரத்து செய்ய வேண்டும்! ஐயா கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்!



என்.எல்.சி. நிறுவனம் - தமிழர்களைப் புறக்கணிக்கும் பட்டதாரிப் பொறியாளர் நேர்முகத் தேர்வை இரத்து செய்ய வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
ஐயா கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்! 


தமிழ்நாட்டில் இயங்கும் நெய்வேலி நிலக்கரிப் பழுப்பு நிறுவனம் பட்டதாரிப் பொறியாளர்கள் மற்றும் பல்வேறு பட்டயக் கணக்காளர்கள், மனித வளப் பட்டதாரிகள் உள்ளிட்டோருக்கு மின்துறை, சுரங்கத்துறை, கணினி, நிதி, மனித வளம் போன்ற துறைகளுக்கான 259 நிரந்தரப் பணிகளுக்கு கடந்த 13.03.2020 அன்று (விளம்பர எண் : 2 / 2021), விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு கொடுத்திருந்தது. 

கொரோனா தொற்று காரணமாக இதற்கான நேர்முகத் தேர்வு மூன்றுமுறை நாள் குறிப்பிடப்பட்டு தள்ளி வைக்கப்பட்டு, இறுதியில் கடந்த 2021 நவம்பரில் நடத்தப்பட்டது. 

இத்தேர்வுகளை உத்திரப்பிரதேசத்தின் நொய்டா நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் “எஜூகேசன் கன்சல்டேசன் இந்தியா லிமிடெட்“ (Ed.C.I.L.) என்ற வடநாட்டு அரசுத்துறை நிறுவனம் நடத்தியது. 2 இலட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்ற இத்தேர்வின் முடிவில் நேர்முகத் தேர்வுக்கான முன்னுரிமைப் பட்டியலை இந்நிறுவனம் அளித்து, அதனை 30.01.2021 அன்று என்.எல்.சி. தனது இணையதளத்தில் வெளியிட்டது.  

259 காலியிடங்களுக்கான 1582 பேர் அடங்கிய இந்தப் பெயர் பட்டியலில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் வெறும் 8 பேர் தான்! நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்களிலேயே 8 பேர்தான் தமிழர்கள் என்றால், ஒருவரைக்கூட நேர்முகத் தேர்வில் பணிக்குத் தேர்வு செய்வார்களா என்பது ஐயம்!

தமிழ்நாட்டில் தமிழ் மக்கள் வழங்கிய நிலத்தில் இயங்கும் என்.எல்.சி. நிறுவனம் நிலம் கொடுத்தவர்களையோ, அந்நிறுவனப் பணியிலிருந்து இறந்தோரின் வாரிசுகளையோ, பழகுநர் பயிற்சி முடித்தவர்களையோ முற்றிலும் புறக்கணித்துவிட்டு, இந்திக்காரர்களையும் வடநாட்டுக்காரர்களையும் தொடக்க ஊதியமே 60,000 ரூபாயுள்ள இந்த நிரந்தரப் பணிகளில் சேர்ப்பது தற்செயலானது அல்ல – திட்டமிட்ட தமிழின ஒதுக்கல் கொள்கை ஆகும்! இது கடும் கண்டனத்திற்குரியது! 

எனவே, என்.எல்.சி. நிறுவனம் இந்த நேர்முகத் தேர்வை இரத்து செய்துவிட்டு, புதிதாக விளம்பரம் வெளியிட்டு இப்பணிகளுக்கு 90 விழுக்காடு தமிழ்நாட்டு மக்களையே சேர்க்கும் வகையில் ஒதுக்கீடு வழங்கி, பணியமர்த்தும் நடவடிக்கையை மீண்டும் தொடங்குமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 


 

Wednesday, January 27, 2021

அடுத்தடுத்து வடமாநிலத்தவரால் நடைபெறும் கொலை – கொள்ளை நிகழ்வுகள் : உள்அனுமதிச் சீட்டு முறை (Inner Line Permit) வேண்டும்! - ஐயா கி. வெங்கட்ராமன் கோரிக்கை!



அடுத்தடுத்து வடமாநிலத்தவரால் நடைபெறும்
கொலை – கொள்ளை நிகழ்வுகள் :
உள்அனுமதிச் சீட்டு முறை (Inner Line Permit) வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் 
ஐயா கி. வெங்கட்ராமன் கோரிக்கை!


தமிழ்நாட்டில் வடமாநிலக் கொள்ளையர்கள் அடுத்தடுத்து நடத்திவரும் கொலை மற்றும் கொள்ளை நிகழ்வுகள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. 

சீர்காழியில், வடநாட்டு நகை அடகு வியாபாரி வீட்டில் புகுந்த வடமாநில கொள்ளையர்கள், அவரது மனைவி மற்றும் மகளை கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, 16 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பியுள்ளனர். நகை வியாபாரி மற்றும் மருமகள்  படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வழக்கில் தொடர்புள்ள வடமாநிலக் கொள்ளையர்களை காவல்துறையினர் பிடிக்க முயன்றபோது, ஒருவர் காவல்துறையினரைத் தாக்கியதாகவும், அதனால் அவரைக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றதாகவும் கூறப்படுகிறது. மீதமுள்ளவர்கள் நகைகளுடன் பிடிபட்டுள்ளனர். 

கடந்த வாரம், கிருட்டிணகிரி மாவட்டம் - ஓசூரில் இயங்கி வரும் மலையாள முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் 25 கிலோ தங்க நகைகள் உள்பட 12 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்ற வடமாநிலக் கொள்ளையர்களை தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்திற்குத் துரத்திச் சென்று தமிழகக் காவல்துறையினர் பிடித்து வந்துள்ளனர். 

இதேபோல், சென்னையில் இயங்கிவரும் பிரபல நகைக்கடையான லலிதா ஜூவல்லரியில் இருந்து 5 கிலோ தங்க நகைகளை திருடிச் சென்ற வடமாநிலக் கொள்ளையர்களை காவல்துறையினர் தற்போது தேடி வருகின்றனர். 

இவ்வாறு, அடுத்தடுத்து நடைபெற்று வரும் வடமாநிலக் கொள்ளையர்களின் கொள்ளை மற்றும் கொலைக் குற்றங்கள் பெரும் அச்சமூட்டுகின்றன. தமிழ்நாட்டில் குடியேறும் வடமாநிலத்தவருக்கு எவ்வித பதிவு முறையும் இல்லாததால், ஏற்கெனவே குற்றச்செயல்களில் ஈடுபட்ட பல கொள்ளையர்கள் தமிழ்நாட்டில் குடியேறி குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். இவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டும் உள்ளது. 

எந்த விதப் பதிவும் இல்லாததானால் தமிழ்நாடு காவல்துறையினர் பல வழக்குகளில் கொள்ளையர்களை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றனர். தமிழ் மக்கள் தங்கள் சொந்த தாயகத்திலேயே வெளி மாநிலத்தவரால் தமக்கு பாதிப்பு ஏற்படுமென அச்சத்துடன் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

எனவே, தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் குடியேற்றத்திற்கு தமிழ்நாடு அரசு உடனடியாகத்  தடை விதிக்க வேண்டும். ஏற்கெனவே குடியேறியுள்ள வெளி மாநிலத்தவரை படிப்படியாக வெளியேற்ற வேண்டும். 

மிசோரம், அருணாச்சலப்பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் வெளி மாநிலத்தவர் உள்ளே நுழைய “உள் அனுமதிச்சீட்டு முறை” (Inner Line Permit) இந்திய அரசால் செயல்படுத்தப்படுவதைப் போல், தமிழ்நாட்டிற்குள்ளும் பிற மாநிலத்தவருக்கு உள் அனுமதிச்சீட்டு முறை வேண்டும். இதை வலியுறுத்தி, தமிழ்த்தேசியப் பேரியக்கம் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறது. 
 
தற்போது, வெளி மாநிலத்தவரால் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கே சீர்குலைந்து மக்கள் அச்சப்படும் சூழல் நிலவுகின்ற நிலையில், தமிழ்நாடு அரசு “உள் அனுமதிச்சீட்டு முறை”யைக் கொண்டு வர வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.         


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

 


Friday, December 25, 2020

தமிழறிஞர் தொ.பரமசிவன் மறைவுக்குப் பின்னும் அவர் நூல்கள் தமிழர்களுக்கு வழிகாட்டும்! - ஐயா பெ.மணியரசன் இரங்கல் செய்தி!


தமிழறிஞர் தொ.பரமசிவன் மறைவுக்குப் பின்னும் அவர் நூல்கள் தமிழர்களுக்கு வழிகாட்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
 ஐயா பெ.மணியரசன் இரங்கல் செய்தி!

தமிழறிஞர் முனைவர் தொ.பரமசிவன் அவர்கள் 24.12.2020 அன்று பிற்பகல் திருநெல்வேலி மருத்துவமனையில் காலமான செய்தி மிகவும் துயரம் அளிக்கிறது. சமகாலத் தமிழ்ச் சமூக ஆய்வில் தமிழர் பண்பாட்டில் நிலவும் பல்வேறு கூறுகளைத் துல்லியப்படுத்தி அவற்றின் சிறப்புகளையும் தேவைகளையும் விளக்கியவர் ஐயா தொ.ப. அவர்கள். வட்டாரத் தெய்வ வழிபாடுகளில் உள்ள தனித்தன்மை, அவற்றின் ஆரிய ஆன்மிக எதிர்ப்பு, தமிழர் வீரம், தமிழர் பெருமிதம் ஆகியவற்றை நன்கு ஆய்வு செய்து நூல்கள் எழுதியுள்ளார். 

தமிழ்த்தேசியச் சிந்தனைகளைத் பல்வேறு நூல்களில் எடுத்துரைத்தார். தமிழ்வழிக் கல்விக்கான போராட்டங்களில் பங்கேற்று வந்தார்.

தமிழீழத்தில் சிங்களப் பேரினவாத வெறியர்கள் நடத்திய இனப்படுகொலைகளைத் தொடர்ந்து கண்டித்து வந்ததுடன், ஈழ விடுதலைப் போராட்டத்தையும் ஆதரித்தார். அதற்காகத் தமிழ்நாட்டில் நடந்த சனநாயக இயக்கங்களில் பங்கு கொண்டார்.

மிகச் சிறந்த ஆய்வாளராகவும், பேராசிரியராகவும் விளங்கிய தொ.ப. அவர்கள் மிகச் சாதாரணமான மனிதர்களோடும், இளைஞர்களிடமும் அன்புடனும் சமத்துவ மனநிலையுடனும் பழகி வந்த பண்பாளர். தொ.ப அவர்கள் கடந்த சில நாட்களாகவே நலக்குறைவால் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் திடீரென இயற்கை எய்தியது பேரதிர்ச்சியைத் தருகிறது. 

அவர் மறைந்துவிட்டாலும் அவர் தந்திருக்கும் ஆய்வு நூல்கள் தமிழர்களுக்குத் தொடர்ந்து வெளிச்சம் தரும், ஊக்கம் தரும்.  தொ.ப. அவர்களின் மறைவிற்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஆழ்ந்த துயரத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Friday, December 4, 2020

எல்லா கோயிலிலும் தமிழ் அர்ச்சனை இடம் பெற வேண்டும் ! கரூர் பசுபதீசுவரர் குடமுழுக்கு வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் ஆணை! - ஐயா பெ.மணியரசன்


எல்லா கோயிலிலும் தமிழ் அர்ச்சனை இடம் பெற வேண்டும் !
கரூர் பசுபதீசுவரர் குடமுழுக்கு வழக்கில்  
மதுரை உயர்நீதிமன்றம் ஆணை!

-பெ.மணியரசன், தலைவர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

கரூர் பசுபதீசுவரர் கோயில் திருக்குடமுழுக்கு நாளை (04.12.2020) நடைபெறவுள்ள நிலையில் இன்று பிற்பகல் சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அமர்வு கருவறை, வேள்விச் (யாக) சாலை, கோபுரக் குடமுழுக்கு ஆகிய இடங்களில் தமிழ் மந்திரங்கள் ஓதி பூசை செய்ய ஆணை இட்டிருப்பது தமிழ்கூறும் நல்லுலகின் பேருவகைக்கும் பெருமிதத்திற்கும் பெரு நன்றிக்கும் உரியதாகும்.

கொரோனா கால முடக்கம் உள்ள நிலையில் மிகக் குறுகிய அவகாசம் வைத்து, பசுபதீசுவரர் கோயில் திருக்குடமுழுக்கு அறிவிக்கப்பட்டது. அக்கோயில் வளாகத்திற்குள்தான் கருவூரார் நல்அடக்கக் கோயில் உள்ளது.
 
கரூர் வழக்கறிஞர் தமிழ்இராசேந்திரன் அவர்கள்  மூலம் ஒரு கலந்தாய்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அவருடைய நிறுவனத்தில் அந்த சந்திப்பு நடந்தது. அக்கூட்டம் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தலைமையில் நடந்தது. இந்து வேதமத மறுமலர்ச்சி இயக்கத்தின் சித்தர் மரபுப் பெரியவர் ஐயா மூங்கிலடியார் என்கின்ற பொன்னுச்சாமி அடிகளார், சித்தர் மரபு சத்தியபாமா அறக்கட்டளைத் தலைவர் சத்தியபாமா அம்மையார், நாம் தமிழர் கட்சியின் கரூர் வடக்கு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் நன்மாறன் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொருளாளர் அ.ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் க.அருணபாரதி, கோ.மாரிமுத்து, வழக்கறிஞர் தமிழ்இராசேந்திரன், சிவனடியார் நாகேந்திர கிருஷ்ணன், வழக்கறிஞர் கு.பச்சையப்பன், தமிழின உணர்வாளர் சாமியப்பன் முதலியோரும், நாம்தமிழர் கட்சி, தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆகியவற்றின் தோழர்களும் கலந்து கொண்டனர்.

கூட்ட முடிவுக்குப் பின், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர், பசுபதீசுவரர் கோயில் செயல் அலுவலர் ஆகியோர் அலுவலகங்களுக்குச் சென்று, திருக்குடமுழுக்கைத் தமிழ் வழியில் நடத்துமாறு கேட்டுக் கொள்ளும் மனுக்கள் கொடுத்தோம்.

கோயில் கருவறை, வேள்விக் கூடம் (யாகசாலை), கோயில் கோபுரம் ஆகிய மூன்று இடங்களிலும் தமிழ்மந்திரம் ஓதி பூசையும் சடங்குகளும் செய்ய வேண்டும் என்றும், கோபுரக் கலசத்தில் நீராட்டு செய்து தமிழ்மந்திரம் ஓதுவார் ஓதிட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தோம். அத்துடன் தமிழ்வழிக் குடமுழுக்கு கோரி 2.12.2020 அன்று உண்ணாப் போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்தோம்.

அதன் பின்னர் கோபுர வாசலில் செய்தியாளர் சந்திப்பு நடத்தி மேற்படிக் கோரிக்கையை வலியுறுத்தினோம்.

நாம் தமிழர் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் திரு.செல்வ.நன்மாறன் தலைமையில் 2.12.2020 காலை 9.00 மணியளவில் பசுபதீசுவரர் கோயில் வாயிலுக்கு எதிரே உண்ணா நோன்பிருக்க வந்த உணர்வாளர்களைத் தடுத்து காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். தோழர்கள் கோரிக்கை முழக்கங்கள் எழுப்பினர். வழக்கறிஞர் நன்மாறன், சத்தியபாமா அம்மையார், தமிழ்த்தேசியப் பேரியக்கச் செயற்குழு உறுப்பினர் அருணபாரதி, நாம்தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி மாவட்டச் செயலாளர் இரமேசு இளஞ்செழியன் மற்றும் நாம்தமிழர் கட்சித் தோழர்களும் சத்தியபாமா அறக்கட்டளை மகளிரும், த.தே.பே தோழர்களும், இன உணர்வாளர்களும் சற்றொப்ப 35 பேர் தளைப்படுத்தப்பட்டு, மண்டப்பத்தில் வைக்கப்பட்டனர்.

மண்டபத்தில் அவர்கள் அனைவரும் உண்ணாப் போராட்டம் தொடர்ந்தனர். உணவு உண்ண மறுத்தனர்.

மாலை 5.00 மணியளவில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், வீரத்தமிழர் முன்னணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.செந்தில்நாதன் சேகுவேரா, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பி.தென்னவன், தோழர்கள் குடந்தை தமிழ்த்தேசியன், திருச்சி இனியன் (த.தே.பே பொதுக்குழு உறுப்பினர்) ஆகியோர் மண்டபத்தில் இருந்த உணர்வாளர்களைச் சந்தித்துப் பாராட்டினர். அவர்களின் உண்ணாப் போராட்டத்தை முடித்து வைத்து பிஸ்கட், தேநீர் வழங்கினர்.
 =========================
உயர்நீதி மன்றத் தீர்ப்பு!
==========================
வீரத்தமிழர் முன்னணியின் கரூர் மாவட்ட செயலாளர் தோழர் இரமேசு இளஞ்செழியன் கரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கைத் தமிழ்வழியில் நடைபெற ஆணைஇடக் கேட்டுக் கொண்டு மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். வழக்கறிஞர் ரூபஸ் இவ்வழக்கைத் தாக்கல் செய்தார்.
அடுத்து, கரூர் வழக்கறிஞர் தமிழ்இராசேந்திரன் முயற்சியில் கருவூரார் வழிச் சித்தர் பீடத் தலைவர் மூங்கிலடியார் என்னும் பொன்னுசாமி அடிகளார், கரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கு தமிழ்வழியில் நடக்க ஆணை இடக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுச் செய்தார். இவ்வழக்கை வழக்கறிஞர் அருணாச்சலம் தாக்கல் செய்தார்.

இன்று (03.12.2020) பிற்பகல் இவ்வழக்குகள் நீதிபதி கிருபாகரன்-நீதிபதி புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தன. மிகச் சிறப்பான தீர்ப்பு வழங்கினார்கள். தீர்ப்பை நீதிபதி கிருபாகரன் வெளியிட்டார். தீர்ப்பு விவரம்:

கரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கில் எல்லா இடத்திலும் தமிழ் அர்ச்சனை இடம் பெறவேண்டும். சமற்கிருதத்தில் மந்திரம் சொன்னாலும் தமிழ் கட்டாயம் இடம்பெற வேண்டும்.

ஏற்கெனவே தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு தமிழில் நடைபெற வேண்டும் என்று இதே நீதிமன்றம் ஆணை இட்டு அது செயல்படுத்தப்பட்டபின், மீண்டும் தமிழுக்காக, இவர்கள் இங்கு வரவேண்டிய நிலை ஏன் வந்தது? இந்து சமய அறநிலைத்துறையை எச்சரிக்கிறேன்!

இனிமேல் தமிழ்நாட்டில் வேறு எந்த இந்து சமய அறநிலையக் கோயிலிலும் தமிழில் குடமுழுக்கு மற்றும் அர்ச்சனை செய்ய அனுமதி கோரி யாரும் உயர்நீதிமன்றத்திற்கு வர முடியாத நிலையை இந்து சமய அறநிலையத்துறை உண்டாக்க வேண்டும். அப்படி எந்தக் கோயிலிலாவது தமிழ் மந்திர அர்ச்சனை மறுக்கப்பட்டு, அனுமதி கோரி யாரேனும் உயர்நீதி மன்றம் வந்தால், அந்த வழக்குக்காக  இந்து சமய அறநிலையத் துறையிடம் 10 இலட்சம் ரூபாய் செலவு தொகை வசூலிக்கப்படும்.

தமிழ் மொழியானது தெய்வத் தமிழ் என்று போற்றப்படுகிறது. தமிழ் வளர்க்க சங்கம் அமைத்த மதுரையில் இந்நீதிமன்றம் அமைந்துள்ளது. தமிழை யாரும் புறக்கணிக்கக்கூடாது.

இவ்வாறு முத்து முத்தான கருத்துகளை நீதிபதி கிருபாகரன் தமது தீரப்புரையில் கூறினார். விரிவான எழுத்துவடிவிலான தீரப்பை இரண்டு நாட்களில் அளிப்பதாகக் கூறினார்.

தொலைகாட்சியில் இத்தீர்ப்பை அறிந்த தமிழ் ஆன்மிகர்களும் தமிழர்களும் பெருமகிழ்வு கொண்டு, ஒருவருக்கொருவர் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

மதுரைத் தீரப்பைத் தமிழ்நாடெங்கும் செயல்படுத்த தமிழ் ஆன்மிகச் சான்றோர்களும் தமிழ் இன உணர்வாளர்களும் தமிழ்த்தேசியர்களும் விழிப்புடன் செயல்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். 

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

 


Friday, October 18, 2019

ஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!


ஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!

இராசீவ்காந்தி கொலை வழக்கில் வாழ்நாள் சிறையாளிகளாக 28 ஆண்டுகளைக் கடந்தும் சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், செயக்குமார், அருப்புக்கோட்டை இரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டுமென்ற தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஏற்க மறுப்பதாக செய்திகள் வருகின்றன.

எழுத்து வடிவில் இல்லையென்றாலும், வாய் மொழியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் புரோகித் தன்னுடைய இந்த முடிவைத் தெரிவித்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

ஆளுநர் புரோகித்தின் இந்த முடிவு, அப்பட்டமான சட்டக்கவிழ்ப்பு மட்டுமின்றி ஆரியத்துவ இந்தியாவில் தமிழர்களுக்கு சட்டத்தின் ஆட்சி மறுக்கப்படுகிறது என்பதையே காட்டுகிறது.

உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயம் கடந்த 2015 திசம்பர் 2 அன்று, அளித்த தீர்ப்பில் தமிழ்நாடு அரசு தண்டனைக் குறைப்பு குறித்து முடிவு செய்வதற்கும், அதனை ஆளுநர் வழியாக செயல்படுத்துவதற்கும் எந்த சட்டத்தடையும் இல்லை என அறிவித்தது. அதனடிப் படையிலேயே, தமிழ்நாடு அமைச்சரவை ஏழு தமிழருக்கும் தண்டனைக் குறைப்பு வழங்கி விடுதலை செய்வதற்கு அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன் கீழ் முடிவு செய்தது.

அரசமைப்பு சட்ட உறுப்பு 161-இன் கீழ் கூறப்படும் தண்டனைக் குறைப்பு அதிகாரம், ஆளுநரின் விருப்பார்ந்த அதிகாரம் அல்ல - மாநில அமைச்சரவைக்கு உள்ள அதிகாரம், அந்த முடிவுக்குக் கட்டுப்பட்டவர் ஆளுநர்.

அரசமைப்பு உறுப்பு 163 (1) – ஆளுநருக்கு துணை செய்யவும், ஆலோசனை வழங்கவும் மாநிலத்தில் ஒரு அமைச்சரவை இருக்கும் என்று கூறுகிறது. இதன் பொருள் என்ன என்பது குறித்து சிக்கல்கள் எழுந்தபோது, ஆளுநரின் அதிகார வரம்பு குறித்து உச்ச நீதிமன்றம் பலமுறை தெளிவுபடக் கூறியிருக்கிறது.

குறிப்பாக, ஷாம்சர் சிங் – எதிர் - பஞ்சாப் மாநில அரசு (Shamsher Singh vs State Of Punjab) என்ற வழக்கில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.என்.ரே தலைமையில் அமைந்த ஏழு நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு ஆயம், பல கோணங்களில் ஆய்வு செய்து தெளிவுபடக் கூறியிருக்கிறது (1974 AIR 2192).

அரசமைப்புச் சட்டம் சார்ந்த விவாதங்களில் மீண்டும் மீண்டும் எடுத்துக் காட்டப்படும் இத்தீர்ப்பு, “இந்திய அரசமைப்புச் சட்டமானது மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவை யும், இந்திய அரசால் அமர்த்தப்படும் ஆளுநரும் இணை அதிகார மையங்களாக செயல்பட அனுமதிக்கவில்லை. பிரித்தானிய அரசமைப்பில் மகாராணிக்கு வழங்கப்பட்டுள்ள கௌரவ தகுநிலைதான் ஒன்றிய அரசைப் பொறுத்தவரை குடியரசுத் தலைவருக்கும், மாநில அரசாங்கத்தைப் பொறுத்த அளவில் ஆளுநருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. மாநில அரசாங்கம் என்பது சாரத்தில் மாநில அமைச்சரவையைத்தான் குறிக்கும். ஆளுநர் என்பவர் அமைச்சரவை யின் சுருக்கெழுத்து வடிவம். மாநில அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர். குறிப்பாக, நிர்வாகம் தொடர்பான செய்திகளில் குடியரசுத் தலைவருக்கோ அல்லது ஆளுநருக்கோ தனிப்பட்ட விருப்பார்ந்த அதிகாரம் எதுவுமில்லை” என்று உறுதிபடக் கூறுகிறது.

அரசமைப்புச் சட்ட உறுப்பு 163 (1) – ஆளுநருக்கு ஆலோசனை வழங்க ஓர் அமைச்சரவை இருக்கும் என்று கூறும்போது, (வரைவு அரசமைப்பில் 143) வரைவுக்குழுத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் இதைத் தெளிவுபடக் கூறுகிறார். “ஆளுநரின் விருப்பார்ந்த அதிகாரம் (Discretionary power) என்பது தனிநபர் என்ற வகையில் ஆளுநரின் அதிகாரத்தைக் குறிப்பதல்ல. மாறாக, மாநில அமைச்சரவையின் முடிவைக் குறிப்பது ஆகும்” என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்.

யு.என். ராவ் – எதிர் - இந்திரா காந்தி என்ற வழக்கிலும், இந்த நிலை உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இதற்கு முன்னால், சஞ்சீவி நாயுடு - எதிர் – சென்னை மாநில அரசு என்ற வழக்கிலும் “ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்பட்டவர்” என்ற நிலை உறுதியாகத் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

நளினியின் கருணை மனுவை 1999இல் தமிழ்நாடு ஆளுநராக இருந்த பாத்திமா பீவி, தமிழ்நாடு அமைச்சரவையின் கருத்துக் கேட்காமல் தன்னிச்சையாக நிராகரித்தபோது நளினி சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார். அவ்வழக்கில் 25.11.1999 அன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், “அரசமைப்புச் சட்ட உறுப்பு 163 (1)-இன்படி மாநில ஆளுநர் மாநில அமைச்சரவையின் படியே செயல்பட வேண்டும். தன்னிச்சையாக செயல்படுவதற்கு அவருக்கு அதிகாரமில்லை” என்று தெளிவுற விளக்கமளித்து, “ஆளுநருக்கு தனிப்பட்ட விருப்பதிகாரம் ஏதுமில்லை” எனத் தீர்ப்புரைத்தது.

இவ்வாறான சட்ட நிலைமைகள் தெளிவாக இருக்கும்போது, ஆளுநர் புரோகித் 2018 செப்டம்பர் 9 நாளிட்ட தமிழ்நாடு அமைச்சரவை முடிவை ஏற்க மறுத்து, ஏழு தமிழர்களை விடுதலை செய்யும் ஆணையில் கையொப்பமிட முடியாது என்று கூறுவது பச்சையான சட்டப் படுகொலையாகும்.

காவிரி, முல்லைப்பெரியாறு, மீனவர் வாழ்வுரிமை ஆகிய எந்தச் சிக்கலாக இருந்தாலும் இந்தியாவின் பிற பகுதிகளில் செயல்படும் சட்டம் தமிழ்நாட்டுக்கு மட்டும் செயல்படுவதில்லை என்ற இன ஒதுக்கலை தொடர்ந்து சந்தித்து வருகிறோம். ஏழு தமிழர் விடுதலை தொடர்பாகவும் தமிழர்களுக்கு எதிரான இந்த இன ஒதுக்கல் செயல்படுகிறது என்பதையே ஆளுநர் புரோகித்தின் நடவடிக்கை எடுத்துக் காட்டுகிறது.

தமிழ்நாடு அரசு ஆளுநரின் இந்த அடாவடிச் செயல், தமிழர்களின் அடிப்படை உரிமைக்கும் - தங்கள் அமைச்சரவையின் தன்மானத்திற்கும் விடப்பட்ட சவால் என்று புரிந்து கொண்டு, உரிய அரசியல் அழுத்தம் கொடுத்து பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், செயக்குமார், அருப்புக்கோட்டை இரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர் விடுதலையை விரைந்து செயல்படுத்த அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT